வழிவிடும் முருகன் திருக்கோயில் இராமநாதபுரத்தில் உள்ளது. இக்கோயில் முருகரை வழிபட்டு செல்லும் பக்தர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் வாழ்க்கை முழுவதும் துணை வருவதாலும் இந்த முருகருக்கு வழிவிடும் முருகர் என்று பெயர் வந்தது. இக்கோயில் தற்போது உள்ள இடத்தில் பல ஆண்டுகளுக்கு முன் அரசமரம் இருந்தது. மரத்தின் கீழ் ஒரு சிறிய வேல் நடப்பட்டு அதற்கு பூஜை செய்யப்பட்டு வந்தது. கோயிலின் அருகிலேயே நீதிமன்றம் இருந்தது. தங்களது வழக்குகளில் வெற்றி பெற வேண்டும் என்று சொத்து வழக்குகளில் சிக்கி வாழ வழியற்று நிற்பவர்கள் கிரிமினல் வழக்குகளில் சிக்கிய நிரபராதிகள் எல்லாம் இந்ந முருகனை வணங்கி வாழ வழிபெற்றனர்.
இக்கோயிலில் உள்ள ஒரு சன்னதியில் வினாயகரும் முருகரும் ஒரே சன்னதியில் இருந்து அருள்பாலிக்கிறார்கள். இத்தலத்தில் சனீஸ்வரனின் தாய் சாயாதேவி மரம் வடிவில் அருள்பாலிக்கிறாள். இந்த மரத்துக்கு சாயாமரம் என்ற பெயருண்டு. சனி பகவான் தனது தாயின் சொல்லுக்கு கட்டுப்பட்டு இத்தலத்திற்கு வந்து வழிபடுவோரின் துன்பங்களை போக்கி அருள் பாலிக்கிறார். இந்த மரம் இலங்கையிலுள்ள கதிர்காமம் முருகன் கோயிலிலும் உள்ளது.


