ரங்மகால்

உத்திரபிரதேச மாநிலத்தில் மதுரா மாவட்டத்தில் பிருந்தாவனம் என்ற ஊர் உள்ளது. இந்த ஊருக்கு விருந்தாவன் என்ற வேறு பெயரும் உள்ளது. இந்த இடம் மகாபாரதத்தில் கிருஷ்ணர் தனது குழந்தை பருவத்தில் ஆடி பாடி விளையாடிய இடம் ஆகும். இந்த இடத்தில் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான கிருஷ்ணர் ராதை கோவில்கள் உள்ளன. இக்கோயில்களில் பங்கே பிகாரி கோயிலும் ரங் மகாலும் முக்கிய இடமாகும். புராண காலக் கோயிலான இக்கோயில் 1864 ஆம் ஆண்டில் மறுசீரமைத்து கட்டப்பட்டது. மூலவர் ராதா கிருஷ்ணன். கிருஷ்ணரால் உருவாக்கப்பட்ட லலிதா என்று அழைக்கப்படும் குளம் கோயிலில் உள்ளது.

துறவி ஹரிதாஸ் என்பவர் கிருஷ்ணர் கோபியர்களுடன் நடனமாடும் காட்சியை காண வேண்டும் என்று கடுமையான தவத்தை செய்தார். அவரது தவத்தின் பலனாக கிருஷ்ணர் ராதை கோபியர்களுடன் நடனமாடியபடி காட்சி கொடுத்தார். கிருஷ்ணரிடம் இங்கேயே இருந்து தங்களைக் காணவரும் அனைவருக்கும் இக்கட்சியை கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார் துறவி ஹரிதாஸ். அவரது வேண்டுகோலை ஏற்றுக் கொண்ட கிருஷ்ணர் ஆணவம் அகங்காரம் இல்லாமல் தன்னை காண வரும் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பேன் என்று அவருக்கு அருளினார். அதன்படி இன்னும் தகுதி உடையவர்களுக்கு காட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார். பின்னாளில் அவரை வழிபட வேண்டி பக்கதர்ளுக்காக கிருஷ்ணரின் சிலை உருவாக்கப்பட்டடு ஒரு தனி சன்னதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டு கோயில் உருவாக்கப்பட்டது. இக்கோயில் அரண்மனை போல் பிரம்மாண்டமாக உள்ளது.

இக்கோயில் உள்ள நிதிவன காட்டுப்பகுதி மிகவும் வறட்சியான பகுதியாகும். இந்த வனத்தில் நீரை பார்ப்பதே மிகவும் அரிதாகும். நீர் இல்லாத நிலையில் இங்குள்ள மரங்கள் அனைத்தும் எப்பொழுதும் செழிப்பாகவே காணப்படுகிறது. பங்கே பிகாரி என்றால் வளைந்து மகிழ்பவர் என்று பொருள். பெயருக்கு ஏற்றார்போல் இந்த காட்டில் இருக்கும் அனைத்து மரங்களும் நேராக வளராமல் கிருஷ்ணருக்கும் ராதைக்கும் மரியாதை செலுத்தும் விதமாக தரையை நோக்கியபடி வளைந்தே காணப்படுகிறது. இந்த காட்டை சுற்றி துளசி செடிகள் மிகுந்து காணப்படுகிறது. இந்த துளசி செடிகள் அனைத்தும் ஜோடி ஜோடியாகவே வளர்ந்து வருகிறது. இந்த துளசி செடிகள் அனைத்தும் உயரம் குறைவாகவே வளர்கிறது. இந்த துளசி செடிகள் அனைத்தும் கிருஷ்ணருடன் சிறுவயதில் வாழ்ந்த கோபியர்கள் என புராண வரலாறு சொல்கிறது. இந்த கோவிலில் சந்தன மரத்தால் செய்யப்பட்ட கட்டில் உள்ளது. கட்டிலுக்கு அருகில் இரவு உணவாக ஒரு கலசத்தில் நீரும் இனிப்பும் வைக்கப்படுகிறது. உணவிற்குப் பின் கிருஷ்ணர் போட்டுக் கொள்ள வெற்றிலை பாக்கும் ஒவ்வொரு இரவும் வைக்கப்படுகிறது. காலையில் எழுந்ததும் கிருஷ்ணர் பல் துலக்குவதற்காக வேப்பங்குச்சியும் வைக்கப்படுகிறது. அர்ச்சகர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்த பிறகு ரங் மஹால் மற்றும் நிதிவனின் பிரதான கதவுகள் வெளியில் இருந்து பூட்டப்பட்டு காலையில் மட்டுமே திறக்கப்படும். தினமும் காலையில் பார்க்கும் போது கட்டில் படுக்கையில் யாரோ தூங்கியது போல ஒழுங்கற்றதாக கலைந்து கிடக்கும். இனிப்புகள் மற்றும் வெற்றிலைகள் யாரோ ஓரளவு சாப்பிட்டது போலவும் வேப்ப மரக் குச்சிகள் பயன்படுத்தப்பட்டது போலவும் இருக்கும்.

கோயிலில் இரவு 7 மணி பூஜைக்கு பிறகு பக்தர்கள் பூஜை செய்பவர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த காட்டுப் பகுதியை விட்டு வெளியேறி விடுகின்றனர். இப்பகுதியில் ஏராளமான குரங்குகள் மற்றும் மயில்கள் வசிக்கின்றன. பகலில் இந்த காட்டுப் பகுதியில் காணப்படும் விலங்குகளும் பறவைகளும் கூட இரவு வேளையில் மட்டும் இந்த காட்டுப் பகுதியை விட்டு வெளியேறி விடுகிறது. ஒவ்வொரு நாளும் காலையில் இந்த கோயிலை திறந்து பார்க்கும் போது கட்டிலில் உள்ள துணிகள் கலைந்து காணப்படுகிறது. தண்ணீரும் உணவுகளும் உண்ணப்பட்டு காணப்படுவதும் இன்றுவரை நடந்து வருகிறது. இரவில் கிருஷ்ணரும் ராதையும் இந்த கோவிலுக்கு வருவதாகவும் அப்பொழுது இந்த கோவிலை சுற்றி வளர்ந்திருக்கும் துளசி செடிகள் கோபியர்களாக மாறி கிருஷ்ணருடன் ஆடி பாடுவதாகவும் கருதப்படுகிறது. பல காலங்களாக இந்த காட்டிற்குள் இரவு நேரங்களில் மக்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை.

இக்கோயிலுக்குள் இரவில் என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பதற்காக அத்துமீறி நுழைய முயற்சித்த பலருக்கு கண் பார்வை போயிருக்கிறது. பலர் மன நிலை பாதித்திருக்கிறார்கள். இக்கோயில் இருக்கும் காட்டின் எல்லையில் சில வீடுகள் உள்ளது. இவர்கள் இரவில் தங்கள் வீட்டில் உள்ள ஜன்னல்களை மூடி விடுகிறார்கள். பலர் வீடுகளுக்கு ஜன்னலே இல்லாமல் கட்டிருக்கிறார்கள். இக்காட்டில் எல்லையில் வசிப்பவர்கள் இக்காட்டில் இருந்து இரவு நேரத்தில் நடனமாடும் சத்தம் கேட்பதாக கூறுகிறார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.