மலையடிப்பட்டி பள்ளிகொண்ட பெருமாள்

மலையடிப்பட்டி குகைக் கோயிலானது புதுக்கோட்டையிலிருந்து 33 கிலோ மீட்டர் தொலைவில் மலையடிப்பட்டி என்ற இடத்தில் இரு குகைக்கோயில்கள் உள்ளன. இவற்றில் ஒன்று சிவனுக்கு உரிய மலையாகவும் மற்றொன்று திருமாலுக்கு உரிய மலையாகவும் உள்ளது. சிவன் கோயிலானது வைசுவரமுடையார் கோயில் என அழைக்கப்படுகிறது. சிவன் குகைக்கு மேற்குப் பகுதியில் உள்ள விஷ்ணு குகையில் உள்ள கோவில் திருமாலுக்குரிய கோயில் ஆகும். இவர் பள்ளிகொண்ட பெருமாள் எனவும் கண்திறந்த பெருமாள் எனவும் அழைக்கப்படுகிறார். இக்கோயில்கள் இரண்டும் குடவரைக் கோயிலாகும்.

சயன நிலையில் உள்ள பெருமாளின் பெயர் பள்ளிகொண்ட பெருமாள் தாயார் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி. மலையைக் குடைந்து பாறையிலே பள்ளிகொண்ட பெருமாள் ஆதிசேஷ சயனப்படுக்கையில் இருப்பது போல செதுக்கப்பட்டுள்ளது. குகைக்குள் ஐந்து கோலங்களில் பெருமாளையும் எட்டுக் கோலங்களில் லட்சுமியையும் தரிசனம் செய்யலாம். நின்ற கோலத்தில் புருஷோத்தமனாகவும் அமர்ந்த கோலத்தில் ஹயக்ரீவர் நரசிம்மர் மற்றும் பரமபதனாத வடிவிலும் கிடந்த கோலத்தில் ரங்கநாதனாகவும் பெருமாள் காட்சி தருகிறார். ஆதிசேஷன் மேல் பள்ளிகொள்ளும் அரங்கனின் திருவடி அருகே பூதேவி நாபிக்கமலத்தில் பிரம்மா சுற்றிலும் அஸ்வினி தேவர்கள் கின்னரர் கிம்புருடர் அப்ஸரஸ்கள் சூழ இருக்கிறார். பெருமாளுக்கு அருகிலேயே திவாகர முனி அமர்ந்து அருளுகிறார். அரங்கர் திருமார்பில் ஒரு லட்சுமியும் புண்டரீகப் பெருமாள் மற்றும் வைகுண்ட நாதருக்கு அருகே ஸ்ரீதேவி பூதேவி என்னும் உபயதேவிகளாக இரண்டிரண்டு லட்சுமிகளும் லட்சுமி நாராயணர் மடியில் ஒரு லட்சுமியும் தனிக்கோயில் கமலவள்ளித் தாயாரும் தீப ஸ்தம்பத்துக்கு அருகில் ஒரு தீப லட்சுமியுமாக எட்டு லட்சுமிகள் ஒரே இடத்தில் தரிசனம் கொடுக்கிறார்கள்.

திவாகர முனிவருக்கு அரங்கன் திருக்கோலத்தின் மீது அபார அன்பு. நாளும் ஒரு அரங்கன் திருக்கோலத்தைத் தரிசிக்காமல் எந்த உணவையும் உண்ண மாட்டார். ஒரு நாள் கால் போன போக்கில் அரங்கனைத் தேடிப் போனார். பசி கண்ணை மறைக்கவே தள்ளாடித் தள்ளாடி நடந்தபோது ஒரு அழிஞ்சில் மரமும் அதன் அடியில் ஒரு மாடு மேய்க்கும் சிறுவனையும் கண்டார். அவனிடம் அருகில் இருக்கும் அரங்கன் கோயில் பற்றிய தகவல் கேட்டார். இதற்கு அந்த சிறுவன் பேர் தெரியாது சாமி அதோ அந்த மலைக்குக் கீழ ஒரு குகையில ஒரு சாமி படுத்துக் கெடக்குது. நாங்க அவரைப் போய் கும்புடுவோம். எங்க ஆடு மாடுகளைக் காப்பாத்தறதனால பட்டிசாமின்னு கும்புடுவோம். மலைக்குக் கீழ இருக்கறதனால மலையடிபட்டிசாமின்னு சொல்லுவோம். அதனால இந்த இடத்துக்கு மலையடிப்பட்டின்னு பேரு என்று வெகுளித்தனமாகச் சொல்லிவிட்டு ஆடு விரட்ட மலையைப் பார்த்து நகர்ந்தான்.

திவாகர முனிவர் சுட்டெரிக்கும் வெயிலில் அந்தக் குகைக்குச் சென்று உள்ளே பார்க்க அவருக்கு ஒன்றுமே புலப்படவில்லை. சிறிது சிறிதாக பாம்பணை மேல் அரங்கன் படுத்துக் கிடப்பதும் பூதேவி இருப்பதும் கின்னரர் கிம்புருடர் வானவர் வணங்குவதும் தெரியத் தொடங்கியது. ஆனந்தக் கூத்தாடி எதிர்ச் சுனையில் குளித்துவிட்டு வந்து காட்டுப் பூக்களைத் தொடுத்து மாலையாக்கி காய்கனிகளைப் பறித்து படைப்பதற்காக எடுத்து வந்தார். ஆனால் குகையில் சற்று முன் தான் கண்ட உருவங்கள் எதுவும் தெரியவில்லை. நீண்ட படுக்கைக் கல்லும் பாறையுமே தெரிந்தன. வெளியே இருந்த அந்த ஆடு மேய்க்கும் சிறுவனை அழைத்து இங்கே சாமியெல்லாம் இருந்துச்சே எங்கே என்றார்? இதுதான் நாங்க கும்படற சாமி என பாறையைக் காட்டினான் சிறுவன். பயந்து போய் அரங்கா இது என்ன சோதனை என அரற்றினார். எதிரில் நின்ற இடைச் சிறுவன் சிரித்தான். அவன் யார் என உணர்ந்த திவாகர முனிவர் மாலையையும் பழங்களையும் அவன் முன் சமர்ப்பித்து காலில் விழுந்தார். சிறுவனாக இருந்த பெருமாள் திவாகர முனிவரை எழுப்பி நின்ற கோலத்தில் புருஷோத்தமனாகவும் அமர்ந்த கோலத்தில் ஹயக்ரீவர் நரசிம்மர் மற்றும் பரமபதநாத கோலத்தையும் காட்டி கிடந்த கோலத்தில் ரங்கநாதனாகக் காட்சி தந்தார். பின்னர் பெரிய மலை உருவில் காட்சி தந்தார். பின்னர் திவாகர முனி வேண்டிக்கொண்டபடி அனைவர் கண்ணுக்கும் தொலைவில் இருந்தே தெரியும் வகையில் கண்ணிறைந்த பெருமாளாக மலை உருவில் காட்சி தரலானார்.

கோயிலின் முன்புறம் சற்று தள்ளி நின்று பார்க்கும் போதே பெருமாள் மலையாகப் படுத்து இருப்பது போன்ற தோற்றம் தெரியும். கோயிலில் உள்ள கல்வெட்டுகள் கூட கண்ணிறைந்த பெருமாள் என்றே குறிப்பிடுகின்றன. தொடக்கத்தில் மலையையே பெருமாளாக நினைத்து வணங்கிய நிலை மாறி மலையில் திவாகர முனிக்குக் காட்சி கொடுத்தது போலவே திருவுருவங்களும் அமைக்கப்பட்டு குடைவறைக் கோவிலாக்கப்பட்டு வழிபடப்பட்டுள்ளது. நுழைவாயிலருகே விநாயகர் மாடத்தில் உள்ளார். திருமங்கை ஆழ்வார் உடையவர் நாதமுனிகள் விஸ்வக்ஷேனர் ஆகியோர் தனி மண்டபத்தில் எழுந்தருளியுள்ளனர். இக்கோவில் கல்வெட்டுகள் மூலமாக கிபி 7 – 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது.

One thought on “மலையடிப்பட்டி பள்ளிகொண்ட பெருமாள்

  1. Ramesh N R Reply

    உரை நன்றாக உள்ளது. நன்றி.
    எங்களுக்கும் இந்த பெருமாளை சில வருடங்களுக்கு முன்பு தரிசனம் செய்யும் பாக்யம் கிடைத்தது. இந்த அரங்கன் திருவரங்கம் அரங்கனுக்கு முற்பட்டதாக உள்ளார் என்றும், அதனால் ஆதீரங்கன் என்றும் அழைக்க படுகிறர்.

Leave a Reply to Ramesh N RCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.