ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 174

கேள்வி: கலி முற்றி விட்டது என்பதற்கு என்ன அடையாளம்?

கலி என்றால் துன்பம் என்று ஒரு பொருள். அலுப்பிலும் சலிப்பிலும் விரக்தியிலும் ஒரு மனிதன் கூறுவது கலி முற்றிவிட்டது என்று. கலி காலம் என்பது தனியான ஒரு காலம் அல்ல. துவாபர யுகத்திலும் திரேதா யுகத்திலும் கலி இருந்தது. எல்லா காலத்திலும் உண்டு. பஞ்ச பாண்டவர்கள் எந்த காலம்? அங்கே பலர் அறிய ஒரு பெண்ணை துகில் (ஆடை) உரியவில்லையா? எனவே எல்லா காலத்திலும் மனிதரிடம் உள்ள தீய குணங்கள் வெளிப்பட்டு கொண்டு தானிருக்கும். அதற்கு ஆதாரவாகத்தான் அசுர சக்திகள் எப்போதும் செயல்பட்டுக் கொண்டே தான் இருக்கும். அதனால்தான் தவறான வழியில் செல்பவர்களுக்கு செல்வம் அதிகமாக சேர்வதற்கு அந்த தீய தேவதைகள் உதவி செய்கின்றன. நாங்கள் (சித்தர்கள்) அவ்வாறு செய்வதில்லை. அதனால்தான் நல்வழியில் செல்பவர்கள் குறைவாக இருக்கிறார்கள். உடனடி லாபம் ஆதாயம் பெற தீய வழியில் செல்லக்கூடாது என்று நாங்கள் பலமுறை கூறுகிறோம். எனவே இந்த நல்ல எண்ணங்களும் நல்ல செய்கைகளும் எத்தனை துன்பங்கள் இருந்தாலும் நன்மைகளை விட்டு விடாமல் நல்லவனாக வாழ வேண்டும் என்ற உறுதி ஒரு மனிதரிடம் இருக்க இருக்கத்தான் அந்த தீய சக்தியின் அட்டூழியங்கள் குறையும். இல்லை என்றால் கலி முற்றி விட்டது. கலி காலத்தில் இப்படி தான் வாழ வேண்டும் என்று இவனாகவே வேதாந்தம் பேசி தவறு மேல் தவறு செய்து கொண்டே போனால் முதலில் அது இன்பத்தை காட்டி முடிவில் முடிவில்லா துன்பத்தில் ஆழ்த்தி விடும். எனவே கலி முற்றி விட்டது என்பது எப்போதுமே பேசக்கூடிய ஒரு வழக்கு சொல்தான்.

கேள்வி : மற்ற சமயங்கள் பற்றி:

பிற ஜீவனுக்கு இம்சை செய்யாதே என்றால் நீ அந்த பிரிவில் இருந்து கொண்டுதான் அவ்வாறு இருக்க வேண்டுமா? எங்கிருந்து வேண்டுமானாலும் செய்யலாமே? அதற்கு எதற்கு ஒரு பிரிவு மதம்? மதம் என்பது என்ன? மனிதனை மிருகமாக்காமல் வாழும் போதனைகளை எல்லாம் பிற்காலத்திலே யாரெல்லாம் அதை பின்பற்றுகிறார்களோ அவர்களை எல்லாம் அடையாளப் படுத்த வேண்டும் என்பதற்காக கூறப்பட்டது. எனவே நீ எந்த மதம் என்று கூறுவது கூட தவறு. நீ எந்த பிரிவில் இருந்தாலும் இருந்து கொள். மனித நேயம் மனித அன்பை போதிப்பதற்காகத்தான் பெரிய ஞானிகள் பாடுபட்டார்கள். எனவே கட்டாயப்படுத்தி திணிக்கப்படுகின்ற எந்த விஷயமும் காலப்போக்கில் நிர்மூலமாக்கப்படும். இது நல்லவைக்கும் தீயவைக்கும் பொருந்தும். எனவே நல்ல விஷயத்தை கூட சர்வ சுதந்திரமாக அவனே உணர்ந்து செய்யும் போதுதான் அந்த பிரிவிலே தொடர்ந்து வாய்ப்புகள் இருக்கும். அதே போல் பொருளாதார தேவைக்காகவும் அச்சுறுத்தலுக்காகவும் பிரிவுக்கு பிரிவு தாவுகின்ற நிலைமை எல்லா காலத்திலும் உண்டு. இவையெல்லாம் காலப் போக்கிலே ஏற்றமும் இரக்கமும் கருத்து மாற்றத்தோடும் இருப்பது மனிதனின் குணாதியத்தை பொறுத்துதான். எனவே அதனால் அதிலுள்ள கோட்பாடுகளுக்கு அழிவு என்பது இல்லை.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 173

கேள்வி: ஐந்து தலை நாகம் பற்றி:

ஐந்து தலை நாகம் இருப்பது உண்மைதான். ஸ்ரீ ராகவேந்திரருக்கு தஞ்சையிலே எந்த இடத்தில் ஸ்தலம் அமைக்க வேண்டும்? என்று யோசித்த ஒரு அரசனுக்கு குறிப்பு காட்டுவதற்காக ஐந்து தலை நாகம் வந்து ஒரு இடத்தை காட்டியது. மனிதனுக்கு புலப்படாததால் இவையெல்லாம் கற்பனை என்கிறான். பொதுவாகவே தாருகாவன முனிவர்கள் சிவன் மீது ஏவிய எதையுமே ஐயன் (சிவன்) தனக்குள்ளே வைத்துக் கொண்டார். எதிரும் புதிருமாகத்தான் உலகம் இருக்கும் என்பதை காட்டத்தான் ஐயன் (சிவன்) அனலையும் புனலையும் வைத்திருக்கிறார். மனிதர்கள் அஞ்சி நடுங்கும் நாகத்தையும் வைத்திருக்கிறார். எனவே ஐந்து தலை நாகம் படமெடுத்து காட்சி தரும் ஆலயங்களுக்கு சென்று ஐயனுக்கு (சிவனுக்கு) நாகலிங்க பூவைக் கொண்டு வழிபாடு செய்தால் நாக தோஷம் விலகும்.

கேள்வி: இறந்தவர்கள் உயிர் பெற்றது பற்றி:

இறந்தவர்கள் உயிர் பெற்றதாக ஆங்காங்கே சில கதைகள் உண்டு. பல நிஜங்களும் உண்டு. இறையின் அருளைக் கொண்டு சஞ்சீவினி மந்திரத்தை பிரயோகித்தால் மட்டுமே இறந்த உடலை (அதாவது உடலில் உயிர் இருக்கும் பொழுதே பரகாயப் பிரவேசம் செய்பவர்கள் உடலை விட்டு ஆன்மாவை வெளிக் கிளப்பி பல இடங்களுக்கும் சென்று வருவார்கள். அவ்வாறு செய்யும் பொழுது கண்ணுக்கு தெரியாத நூலிழை போன்ற ஒன்று உடலையும் ஆன்மாவையும் பிணைத்திருக்கும். மரணத்தின் போது அந்த இழை நிரந்தரமாக அறுந்து விடும். அந்த இழையை ஒன்று படுத்துவதுதான் சஞ்சீவினி மந்திரத்தின் வேலை உயிர்ப்பிக்க முடியும். இறையின் கருணையைக் கொண்டு எத்தனையோ முறை இவ்வாறு நடந்திருக்கிறது. ஞான சம்பந்தர் பூம்பாவையை எழுப்பி இருக்கிறார். திருநாவுக்கரசர் அரவு (பாம்பு) தீண்டி இறந்த பாலகனை எழுப்பி இருக்கிறார். ஆனால் இந்த இடத்திலும் ஒரு சூட்சுமம் இருக்கிறது. நிரந்தரமாக அந்த ஆன்மா பிரிந்திருக்காது. ஒரு ஆழ் மயக்க ஆழ் துயில் (தூக்கம்) நிலையில் இருந்தால் தான் அவ்வாறு எழுப்ப இயலும். உயிரானது நிரந்தரமாக உடலை விட்டுப் பிரிந்தால் அடுத்த கணம் அது புகை போல் கரைந்து விடும் என்பதால் அதை மீண்டும் உடலோடு ஒன்று சேர்க்க முடியாது. உடனேயே உறுப்புகள் செயலிழக்கும். குருதி (இரத்தம்) கெட்டிப் படத்துவங்கும். ஆன்மா உள்ளே நுழைந்தாலும் கூட அந்த உடல் சரிவர இயங்காது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 172

கேள்வி: ரமணர் சேஷாத்ரி சுவாமிகள் க்ரியா பாபாஜி பற்றி:

ஞானிகளின் சரித்திரம் ஒரு மனிதனுக்கு வெறும் கதை ஓட்டமாக இருந்து விடக்கூடாது. அவற்றில் உள்ள கருத்துக்களில் பத்தில் ஒன்றையாவது கடைபிடிக்க வேண்டும். அதற்காக ஒரு ஞானியையே முன்மாதிரியாக கொள்ள வேண்டும் என்று நாங்கள் கூறுவதில்லை. ஏனென்றால் எத்தனையோ நாயன்மார்கள் இறைவனை அடைந்தார்கள். ஆனால் ஒருவர் பாதை மற்றொருவருக்கு ஒத்து வரவில்லை. ஒரு நாயன்மார் பிள்ளையை கறி சமைத்தான் என்பதற்காக அதுதான் சிறந்த வழி என்று நாங்கள் உங்களுக்கு போதிக்க முடியுமா? எனவே துன்பங்களை ஞானிகள் எவ்வாறு எடுத்துக் கொண்டார்கள்? என்று தெரிந்து கொள்ள வேண்டுமே தவிர அவர்களின் ஆதி முதல் அந்தம் வரை அப்படியே பின்பற்ற முயற்சி செய்யக் கூடாது. ராமகிருஷ்ணரிடமிருந்து ஒரே நரேந்திரன் (விவேகானந்தர்) ஆதிசங்கரரிடம் இருந்து ஒரு பத்மபாதன் (ஆதிசங்கரரின் முதன்மை சீடர்) தானே தோன்றினார். மற்றவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்?. எனவே குருவானவர் அனைவரும் மேலேறி வரத்தான் போதனை செய்வார். உத்வேகம் மாணவனுக்குத்தான் இருக்க வேண்டும். அனைத்து ஞானியர்களுமே அற்புதங்களை செய்தார்கள். எதற்காக? மனிதர்கள் துன்பங்களில் சுழுலும் போது அதிலிருந்து விடுபட அவர்களுக்கும் மேலே ஒரு சக்தி இருக்கிறது என்று அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். தத்துவத்தாலும் வெறும் உதாரணத்தாலும் எளிய மக்களை திருப்திப்படுத்த முடியாது என்பதால் சில அற்புதங்களை நடத்தி அதன் மூலம் பக்தர்களை தன் பக்கம் இழுத்து பிறகு உபதேசம் செய்தார்கள். அந்த வகையிலே நீ குறிப்பிட்ட மூவருமே இறைவனிடம் சரணாகதி அடைந்தவர்கள்.

பலரின் கடுமையான பிணிகளை களைந்த ரமணர் தனக்கு ஏற்பட்ட அந்த கடுமையான பிணியை ஏன் களைந்து கொள்ளவில்லை? இத்தனை அதிசயங்களை நடத்திக் காட்டிய சேஷாத்ரி சுவாமிகள் அவருடைய வாழ்க்கையில் எத்தனை இடர்பட்டார் என்று உனக்கு தெரியுமா? காலம் காலமாக மகான்கள் பிறப்பதும் இறுதியில் இறையோடு கலப்பதும் இயல்பு. பெயர்தான் மாறுகிறதே தவிர ஒரு நிலையை அடைந்த பிறகு இவர்களில் இருந்து செயல்படுவது அந்த மூலப் பரம்பொருள் மட்டும்தான். இந்த மூவரும் இன்னும் கூட அவர்களது பக்தர்களுக்கு ஏதாவது ஒரு வடிவில் வந்து அருள்பாலித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 171

கேள்வி: மறுபிறவி எடுக்காமல் மோட்சத்துக்கும் செல்லாமல் இடையிலே பரிதவிக்கும் ஆன்மாக்கள் கடைத்தேற என்ன வழி?

மீண்டும் பிறந்து அவர்கள் அதற்கான விழிப்பை செய்ய வேண்டும். நூறு ஆயிரம் தேவ ஆண்டுகள் கூட பேய்களாக சுற்றும் ஆன்மாக்கள் உண்டு. இதற்கெல்லாம் கூட பூஜைகள் உண்டு. நல்ல அமைதியான கடற்கரை ஓரத்திலே அல்லது நதிக்கரை ஓரத்திலே ஒத்த கருத்துடைய மாந்தர்கள் ஒன்று கூடி பூரணமான தில யாகத்தை செய்து ஏழைகளுக்கும் உடல் ஊனமுற்றவர்களுக்கும் வயிறார உணவும் ஆடையும் தந்து ஐயனுக்கு பரிபூரண வழிபாட்டை செய்து நாள் முழுவதும் செய்த இந்த வழிபாட்டின் பலன் அனைத்தும் அந்த அலையும் ஆன்மாக்களுக்கு போகட்டும் என்று அர்ப்பணம் செய்தால் அவர்கள் மீண்டும் பிறவி எடுத்து எம்மை போன்ற மகான்களின் வாக்கை கேட்கக் கூடிய வாய்ப்பை இறைவன் தந்து அதன் பிறகு அவர்கள் மோட்சம் அடைவதற்கான வழி உண்டாகும். சிலருக்கு நேரடியாகவே அதிலிருந்து விடுபட்டு முக்தி அடைவதற்கும் இறை வாய்ப்பைத் தரும்.

கேள்வி: இறந்தவர் காதில் பஞ்சாக்ஷரம் (நமசிவய) ஓதலாமா?

சிறப்பு தானப்பா. பஞ்சமா பாதகங்களை ஆயிரமாயிரம் செய்துவிட்டு ஒருவன் இறந்து கிடக்கிறான். அவன் உடல் அருகே நீ நடராஜப் பெருமானையே கூட்டி வந்து அமர வைத்தாலும் என்ன பலன்? வாழும் போது ஒரு மனிதன் புண்ணியத்தை சேர்த்து வாழ வேண்டும். வேண்டுமானால் அவர்களுக்காக (இறந்தவர்களுக்காக) செய்யப்படும் தில தர்ப்பணம் மோட்ச தீபம் போன்றவை பலன் அளிக்கலாமே ஒழிய வாழும் போது புண்ணியத்தை சேர்த்து கொள்ளாததன் விளைவு அவன் இறந்த பிறகு அந்த ஆன்மா அலரும் பொழுது புரியும்.

கேள்வி: சுப சகுனம் பற்றி:

சில விலங்குகளை நேரில் பார்ப்பது நல்லது. பசு மயில் கருடன் போன்றவற்றை பார்ப்பது சுப சகுனம் நன்மை. ஆனால் மனிதனை இதில் சேர்த்து கொள்ளாதே. மனிதர்களை பார்த்தால் அவைகளுக்குத் தான் (பசு மயில் கருடன் போன்றவை) பாவம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 170

கேள்வி: உங்களுக்கு சிஷ்யன் யார்?

எம்மை பொருத்தவரை எங்கெல்லாம் தர்மம் நடக்கிறதோ யாருக்கெல்லாம் தர்மத்தின் மீது நம்பிக்கை இருக்கிறத யாருக்கெல்லாம் எத்தனை துன்பத்திலும் தர்மத்தை விடக்கூடாது என்ற எண்ணம் இருக்கிறதோ சத்தியத்தை விடக்கூடாது என்ற நம்பிக்கை இருக்கிறதோ அவனெல்லாம் எமது சிஷ்யர்களே அதனையும் தாண்டி எமது சேய்களே.

கேள்வி: சொற்றுணை வேதியன் என்னும் பதிகத்தில் சொல் அக விளக்கது என்பதன் பொருள் என்ன?

அதிலேதான் அர்த்தம் வெளிப்படையாக தெரிகிறதே அப்பா. சொல் அக விளக்கது சோதி உள்ளது. அகத்திலே ஜோதியை பார்க்க வேண்டும். சிவாய நம நம சிவாய நமோ நாராயணா எனப்படும் அந்த மந்திர சொற்கள் அகத்திலே இருந்து சொல்ல சொல்ல சொல்ல அகமே ஜோதி அகம் ஆகி ஜோதி விளக்கமாக எரியுமப்பா.

கேள்வி: கோவில்களில் சில சிலைகள் பின்னமாகி இருப்பது ஏன்?

திதாக சிலா ரூபங்கள் வந்தாலும் முந்தைய சிலா ரூபங்களை அகற்றாமல் அதுவும் ஆலயத்தின் ஒரு புறத்தே வைக்கப்பட வேண்டும். முற்காலத்தில் ஆலயத்தின் மூலஸ்தானத்திலே குறிப்பாக அத்தனை மாடக் கோவில்களின் அடியினில் ரகசிய நிலவரை அமைக்கப்பட்டிருக்கும். புதிய சிலா ரூபங்களும் பின்னமான சிலா ரூபங்களும் வைக்கப்பட்டிருக்கும் என்றாலும் பின்னமான சிலா ரூபங்களுக்கும் பூஜைகள் செய்யப்பட வேண்டும்.

கேள்வி: இருப்பதில் கொடு கொடுப்பதில் எடு விளக்கம் என்ன?

இருப்பதில் கொடு இது சாதாரண நிலை. இருப்பதையே கொடு இது உயர்வு நிலை. கொடுப்பதில் எடு என்றால் என்ன பொருள்? ஒரு மனிதன் கொடுத்துக் கொண்டே இருந்தால் அதனால் புண்ணியம் சேருகிறது அல்லவா? அந்த புண்யத்தை அவனுக்கு ஆகாத விதி காலம் வரும் போது அதை எடுத்து அவனுக்கு பயன்படுத்துவோம் இதுதான் எங்கள் அர்த்தம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 15

கேள்வி: பிரம்மஹத்தி தோஷம் பற்றி

பிராமணன் என்றால் ஏதோ ஒரு இனத்தை குறிப்பதாக எண்ணிவிடக்கூடாது. எவனொருவன் பிரம்மத்தை உணர்கிறானோ அவன்தான் பிராமணன்.
இறையை உணர்ந்து கொண்டு சாத்வீகமாக அமைதியாக தன் வழியில் வாழ்ந்து கொண்டு தான் உண்டு தன் பணி உண்டு என்றிருப்பவன் பசுவிற்கு சமம். அந்த மனிதர்களுக்கு அசுரத்தன்மை கொண்ட மனிதர்கள் கெடுதி செய்வதும் அவனை வதைப்பதுமாக பல காலங்களில் இருந்திருக்கிறார்கள். இது தான் பிராம்மணனைக் கொல்வது.

ராவணனைக் கொன்றதற்காக ராமனுக்கு எதற்காக பிரம்மஹத்தி தோஷம் பீடிக்க வேண்டும்?

ஒருவன் நல்லவனோ கெட்டவனோ நியாயமோ நியாயமற்ற நிலையோ எதைக் கொன்றாலும் தோஷம் தான். கொலை என்று மட்டுமல்ல கொலைக்கு சமமான எத்தனையோ பாவங்கள் இருக்கிறது. நம்பிக்கை துரோகத்திற்கு ஈடான வேறு தோஷம் ஏதுமில்லை.

கேள்வி: மரங்களை கொல்வதால் வரும் பாவங்களில் இருந்து தப்பிக்க என்ன பரிகாரம்

ஒரு மரத்தை தவிர்க்க முடியாமல் அழிக்க நேரிட்டால் மிக மிக குறைந்தபடசம் ஒரு மனிதன் 1008 மரங்களையாவது நட வேண்டும். இதுதான் இதற்கு தகுந்த பரிகாரம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 168

கேள்வி: சோற்றுக் கற்றாழை பற்றி:

அதிக குளிர்ச்சியான பொருள் என்றால் அது சீதளம் என்ற ஒரு கருத்து இருக்கிறது. இதற்கு சரியான மருத்துவ ஆதாரம் இல்லையப்பா. இந்த சோற்றுக் கற்றாழை வயிற்றுப் புண் தொண்டைப் புண் ஆற்றும். இது ஒரு அற்புதமான மூலிகை. இதன் சாற்றை பருகுவதால் பக்க விளைவுகள் ஏதும் கிடையாது. எல்லா வயதினரும் குறைந்த அளவு இதைப் பருகலாம்.

கேள்வி: ஐயனே உங்களை தரிசிக்கும் ஆவல் அதிகமாக உள்ளது. விரைவில் தரிசனம் தர வேண்டும்?

இறைவனை உள்ளத்தில் தரி. யாம் ஒரு வேளை உனக்கு சிக்கலாம்.

கேள்வி: நீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லை?

இறைவன் சிந்தனையை உள்ளத்தில் வைத்துக் கொள். தரி என்றால் என்ன? விபூதியை தரி என்றால் விபூதியை தரித்து கொள் என்று பொருள். ஆடையை தரி என்றால் ஆடையை அணிந்து கொள் என்று பொருள். இறையை தரி என்றால் இறை சிந்தனை மற்றும் இறைவனுக்கு பிடித்த செயல்களை செய் என்று பொருள். அதனால் இறைவனை உள்ளத்தில் தரி. அப்போது யாம் சிக்கலாம் தரி யாம் சிக்கலாம் தரிசிக்கலாம்.

கேள்வி: அருணகிரிநாதரின் அக்கா ஆதியை பற்றி:

உத்தமமான பெண்மணி. அவளுக்கு மோட்சம் அப்பொழுதே தரப்பட்டது. வெளியில் தெரிந்த புண்ணியவதிகளும் புண்ணியவான்களும் குறைவு. வெளியில் தெரியாத மகான்களும் ஞானிகளும் அதிகம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 169

கேள்வி: அஷ்டமா சித்து விளையாட்டுகள் பற்றி:

மெய்ஞானத்தை நோக்கி செல்கின்ற மனிதனுக்கு நீ கூறுகின்ற அஷ்டமா சித்துக்கள் சர்வ சாதாரணமாக கிட்டும். ஆனால் சித்துக்கள் கிட்டிய பிறகு அதிலே லயித்து மனிதன் ஞானத்தை விட்டு விடுகிறான். எனவே நீ ஞானத்தை நோக்கி செல். வேறு எண்ணங்கள் தேவையில்லை.

கானகம் (காடு) செல். நீரில் இரு. நெருப்பில் இரு. ஒற்றை பாதத்தில் நில். ஆகாயத்தில் தவம் செய் என்றா நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்? மனம் தளராத பிரார்த்தனையைத் தான் செய்யச் சொல்கிறோம். என்றாலும் இவை எல்லாவற்றையும் விட மிகக்கடினம் ஒன்று இருக்கிறது. மிகப்பெரிய நீரோட்டத்தின் உள்ளே சென்று மூச்சை விடாமல் தவம் செய்யும் முறையும் இருக்கிறது. இவை எல்லாவற்றையும் செய்தால்தான் முக்தி என்றால் யாராவது செய்வார்களா? இந்த கஷ்டங்கள் எல்லாம் லோகாய வாழ்க்கையிலேயே மனிதனுக்கு கழிந்து விடுகிறது என்பதை புரிந்து கொள்.

கேள்வி: காரைக்கால் அம்மையார் பற்றி:

எல்லா உயிரினங்களுக்கும் தாய் தந்தை என்றால் முக்கண்ணனை (சிவபெருமான்) காட்டுவார்கள். ஆனால் பாதத்தை வைக்க அஞ்சி சிரத்தை (தலையை) வைத்து நடந்து வந்த அவளைப் பார்த்து என் அம்மையே என்று பகர்ந்தார் இறைவன் என்றால் அவரின் பெருமையை யாம் என்னடா பகர்வது?

கேள்வி: திருநாவுக்கரசரின் அக்கா திலகவதியைப் பற்றி:

முன்னர் உரைத்த பெண்மணியையும் (அருணகிரிநாதரின் அக்கா ஆதியை உத்தமமான பெண்மணி என்றும் அவளுக்கு மோட்சம் அப்பொழுதே தரப்பட்டது என்றும் குருநாதர் கூறியிருந்தார்). இவளையும் நிலுவையில் (தராசில்) நிறுத்தினால் எடை ஒன்றாகவே இருக்கும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 167

கேள்வி: இறைவனின் கருவறையை புகைப்படம் எடுப்பது குற்றமா?

முழுக்க முழக்க தவறு என்று கூற முடியாது. புற செயல்கள் இறையை எதுவும் செய்ய முடியாது. ஆனால் சில வகையான கட்டுப்பாடுகள் இருப்பதால்தான் சில ஒழுங்குகள் ஆலயத்தில் பின்பற்றப்படுகிறது. பல்வேறு ஆலய நிர்வாகங்களே இவ்வாறு நிழற்படத்தை எடுத்து வியாபாரம் செய்கிறது. என்றாலும் நீதி மாறும் போதுதான் குழப்பம் ஏற்படுகிறது. எனவே அந்தந்த சூழலைப் பொறுத்து இதனை பின்பற்றிக் கொள்ளலாம். சித்தர்களைப் பொறுத்தவரை மனிதனின் கேவலமான எண்ணங்கள் குறுக்கு புத்தி சுயநலம் இவைதான் தோஷத்தையும் பாவத்தையும் உண்டாக்கக் கூடியவை. எனவே உள்நோக்கமும் தீய எண்ணங்களும் இல்லாத அனைத்து செயல்களும் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 166

கேள்வி: தமிழ் வருடப் பிறப்பு பற்றி?

தமிழாகட்டும் இந்திய பாரத பாரம்பரியமாகட்டும். அனைத்துமே ஜோதிட இயலோடு தொடர்பு உடையது. சித்திரை மாதம் வெயில் தகிக்கிறது என்றால் மேஷத்திலே சூரியன் உச்சம் என்று பொருள். கடகத் திங்கள் (மாதம்) ஆடி ஆனியிலே படிப்படியாக குறைகின்ற வெயில் மீண்டும் ஆவணியிலே விஸ்வரூபம் எடுக்கும். அங்கே சிம்மத்திலே ஆட்சி பெறுகிறது. இப்படி வருகின்ற சூரியனானது துலாத்திலே வலு பெறுகிறது. ஐப்பசியில் சூரியன் வலுகுறைந்து நன்றாக மழை பெய்கிறது. இந்த அடிப்படையில்தான் தமிழிலே பெயர்கள் சூட்டப்பட்டிருக்கிறது. வருடங்களும் அவ்வாறுதான். தமிழ் வருடம் என்று கூறிக் கொண்டு பிற வட மொழிக்கலப்பு அதிகமாக இருக்கிறது. இருந்தாலும் கூட இதுவும் தமிழ் தான். ஏனென்றால் தமிழில் இருந்துதான் வடமொழிக்கு பல சொற்கள் போயிருக்கிறது. எனவே ஏனைய இலக்கணங்கள் வசதி சூழ்நிலைக்கேற்ப எப்படி பேசினால் எழுதினால் எளிதோ அதற்கேற்ப வடிவமைக்கப்பட்ட மொழி இலக்கணமாகும். ஆனால் தமிழ் மொழியிலே கூடுதலாக இறை சார்ந்த இறை அருள் இருக்கிறது. சரியான உச்சரிப்போடு தமிழைப் பேசினாலே அது சுவாசப் பயிற்சிக்கு சமம். தமிழ் இலக்கணத்தைப் பற்றிக் கூறினால் எத்தனையோ அதிசயங்கள் அற்புதங்கள் உள்ளது. இந்த உலகத்திலே பரபரப்பாக வாழும் மனிதனுக்கு தமிழாவது? மொழியாவது? சிறப்பாவது? யார் இவற்றை எல்லாம் கவனிப்பது? வயிற்றுப்பாட்டிற்கே போராடிக் கொண்டிருக்கிறோம். என்றெல்லாம் அளந்து கொண்டு இருக்கிறார்கள். அப்படியல்ல தமிழ் மொழியிலே காரண காரியங்கள் இல்லாமல் எதுவுமே அமைக்கப் படவில்லை. எனவேதான் உலகத்திலே எந்த மொழியிலும் ழ கரம் என்ற உச்சரிப்பு கிடையாது.

மூன்று இனமாக பிரிக்கப்பட்டு அதற்கு ஏற்ப எழுத்துக்கள் உள்ளது. ஒலிக்குறிப்பே அது எந்த இனம் என்று கூறிவிடலாம். மரபு இலக்கணப்படி ஒவ்வொரு பாடலும் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும்? என்றெல்லாம் உள்ளது. இதுதான் தமிழின் சிறப்பு. இவ்வாறு மனதிலே இலக்கணத்தை வைத்து யாரும் பாடல்களை புனையவில்லை. அவை தானாக வந்து அமைந்து விட்டன. உதாரணமாக ஒரு வெண்பா பாடலை மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் சாதாரணமாகத் தோன்றும். ஆனால் உள்ளே மிகப்பெரிய ஞானக் கருத்தெல்லாம் அடங்கியிருக்கும். சமையல் பாட்டுக்களாய் தோன்றுவதெல்லாம் மையல் பாட்டாகவும் இருக்கும். ஞானப்பாட்டாகவும் இருக்கும்.