ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 165

கேள்வி: திருப்பதி பயணம் எப்போது மேற்கொள்வது?

எதனையும் ஓரளவுக்கு மேல் திட்டமோ தீர்மானமோ செய்யாதே. இறைவா வேங்கடவா எங்களை அழைத்துச் செல் என்று கூறு. இன்று போனால் கூட்டம் இருக்குமே? நாளை போனால் கூட்டம் இருக்குமே? என்றெல்லாம் எண்ணாதே. கூட்டத்தில் இடிபட்டு வேதனைப்பட்டு தரிசனம் செய்வது கூட சில கர்மாக் கழிவுகள் காரணமாகத்தான். அந்த சந்நிதானத்தில் நீ என்று நிற்க வேண்டும் என்பதை அந்த வேங்கடவன் தீர்மானித்து விட்டான். தினத்தை நீங்கள் தீர்மானிக்க வேண்டாம்.

கேள்வி: ராவணனின் பத்தினி மண்டோதரியைப் பற்றி?

மண்டோதரி சிறப்பிலும் சிறப்பான நங்கை நல்லாள். இன்னொன்று தெரியுமா? ராவணனின் தவசக்தி அவனை காத்ததைவிட மண்டோதரியின் பிராத்தனை தான் அவனை கடைசி வரை காத்து நின்றது. மண்டோதரி ராவணனைப் பார்த்து கூறுகிறாள் ராவணனே அசுரனே பலகீனனே பலம் வாய்ந்தவனே இறையருள் பெற்றவனே வாலிப வயதிலே இளம் வயதிலே நீ எப்படி வாழ்ந்து இருந்தாலும் கூட அது இளமையின் வேகம் என்று அனைவரும் மன்னித்து இருப்பார்கள். ஆனால் இஷ்டம் போல் வாழ வேண்டிய வயதிலே மனதை அடக்கி கடுமையான தவம் செய்து இறையை கண்டு உணர்ந்தாய். ஓரளவு வரமும் பெற்றாய் தெளிந்தாய். ஆனால் எப்பொழுது கட்டுப்பாட்டுடன் வாழ வேண்டுமோ அப்பொழுது கட்டுப்பாடுடன் வாழாமல் வாங்கிய வரத்தை எல்லாம் இழந்து நிற்கிறாயே? என்று கூறினாள். எனவே மண்டோதரியின் பக்தி நெறியும் கற்பு நெறியும் உயர்ந்தது. அதே போல் தான் தாரையும் (வாலியின் மனைவி). இவர்களால்தான் அவர்கள் கைப்பிடித்த கணவன்மார்களுக்குப் பெருமை.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 164

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

அப்பனே வாழ்த்துக்கள் ஆசிகள். ஆயினும் மனிதர்களைப் பற்றி யாங்கள் (சித்தர்கள்) அறிவோம். ஒன்று கூடி அறம் (நீதி வழுவாத நல்ல ஒழுக்கப் பழக்க செயல்கள்) செய்யலாம் என்று ஆரம்பிக்கப்பட்ட எத்தனையோ அமைப்புகள் சீர் கெட்டுத்தான் உள்ளன என்பதால் இது நல்ல நோக்கம் உந்தனுக்கு என்றாலும் நலமில்லாதுதான் போகும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஏன் எனில் ஒவ்வொரு மனிதனும் மெய்யாக ஆன்ம சேவை அற சேவை செய்ய விரும்புங்கால் பாதகம் இல்லை. நவில்வோம் அதிலும் சுய விளம்பரத்தின் ஆதிக்கம் இருக்க வேண்டும் என விரும்புவான். நன்றில்லா பல குழப்பங்களை ஏற்படுத்துவான் என்பதால் தனி மனித ஈடுபாடு என்பது வேறு. பல மனிதர்களை ஒன்று திரட்டி ஒரு கருத்தை இயக்கச் செய்வது என்பது வேறு. இறையாலும் அது இயலாதப்பா. பல ஏளனங்கள் ஏச்சுக்கள் நீ ஏற்க வேண்டி வரும். தனத்தில் பல தடைகள் சிக்கல்கள் வரும் என்பதால் செய்வது எமக்கு மகிழ்ச்சிதான் என்றாலும் சில கழித்து நன்றாக நடக்கும் என்றாலும் ஆரம்ப நிலையில் நீ பல போராட்டங்களை சந்திக்க வேண்டி இருக்கும். எம் அருளாசி என்பது வேறு. காலம் அது உன் ஆத்மாவை கடைத்தேற்றும். உலகியலில் ஏற்படும் சில பல சிக்கல்களுக்கு எமது அருளாசி என்றால் அது நடைமுறை சாத்தியம் ஆகாது. நல்ல எண்ணம் நல்ல செயல் செய்வது எமக்கு திருப்தியே என்றாலும் மேல் கூறியதை கவனத்தில் வைத்து செயல்படு.

கேள்வி: திருப்பதி சென்று வர எனக்கும் ஒரு வாய்ப்பு தர வேண்டும்:

ஒன்றை புரிந்து கொள். சகலவித ஆதரவோடு மெய்யான மெய்ஞானத்தை நோக்கி வர முடியாதப்பா. எல்லோருக்கும் உலகியல் வாழ்க்கை வேண்டும். சித்தனை பார்த்தாயே நாடி பார்த்தாயே என்ன கிடைத்தது? இந்த ஆலயத்திற்கு சென்றால் பட்டம் பதவி உடல் ஆரோக்கியம் கிட்டுமா? என்றுதான் பார்க்கிறார்கள். எனவே சகல உறவுகளின் ஆதரவோடு எமது வழியில் யாரும் வர முடியாது. எதிர்ப்புகளில் தான் வாழ வேண்டும். எதை செய்தாலும் சுவையாக சுகமாக எமது வழியில் (சித்த மார்க்க வழியில்) செய்யலாம் என்று மட்டும் எண்ண வேண்டாம். பல போராட்டங்களும் உண்டு. அருமையான அற்புதமான சாலை அல்ல எமது சாலை. கற்களும் முற்களும் ஆணித் துண்டங்களும் நிறைந்தது எமது சாலை. பாதத்தில் ரணம் ஏற்படும். குருதி வழியும். வலிக்கும். அதோடுதான் வர வேண்டும். ஏனென்றால் எளிய மார்க்கம் (எளிய வழி) என்றால் அனைத்து மூர்க்கர்களும் இது வழியாக வருவார்கள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 163

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

எமது (அகத்திய மாமுனிவர்) வாக்கிலே ஒருவனை உயர்த்திக் கூறுவதால் மட்டும் ஒருவன் உயர் ஆத்மா ஆகி விட முடியாது. மனிதனிடம் பல நல்ல உயர்வான குணங்களும் உயர்வில்லாத குணங்களும் இருக்கிறது. எம் முன்னே அமரும் மனிதனுக்கு உயர்வில்லாத குணங்களை சுட்டிக்காட்டிக் கொண்டே இருந்தால் அவனுக்கு மனச்சோர்வு வந்து விடும். அவனை உற்சாகப்படுத்தி வேகத்தோடு பல நல்ல செயல்களை செய்யவே நாங்கள் அவ்வாறு கூறுகிறோம். மற்ற படி எல்லா மனிதர்களும் சராசரி குணங்கள் கொண்ட மனிதர்கள்தாம் இதில் உயர்வு தாழ்வு இல்லை. நாங்கள் கூறுகின்ற வழி முறைகளை எல்லாம் ஒரு மனிதன் எப்போது நூற்றுக்கு நூறு கடை பிடிக்கிறானோ அப்போதுதான் அவன் எம் சிஷ்யன் என்ற அன்புக்கு பாத்திரம் ஆவான். அதுவரை அவன் மனம் தளராத படிக்கு நாங்கள் சில வார்த்தைகளை கூறுகிறோமே தவிர எல்லா மனிதர்களிடமும் நல்ல குணமும் நல்லன அல்லாத குணமும் இருக்கிறது.

பூர்வீக தோஷத்தை குறைக்கவும் தன் முனைப்பில்லாமல் இறைவனை நோக்கி செல்லவும் எமை நாடும் மனிதர்கள் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும். யாங்கள் என்ன தான் உரைத்தாலும் அதை இந்த செவியிலே (காதிலே) வாங்கி அந்த செவியிலே விடுவதும் தேவையானால் எமது வாக்கை எடுத்துக் கொள்வதும் இல்லை என்றால் அதை தள்ளி விடுவதுமாகத்தான் எப்போதுமே மனிதர்கள் இருக்கிறார்கள். எனவே ஒரு மனிதனின் சேவையை மற்ற மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சில சமயம் நாங்கள் கோடிட்டுக் காட்டுகிறோமே தவிர அதற்காக அவன் மிகப் பெரிய மகான் என்றோ ஞானி என்றோ நாங்கள் யாரையும் கூறவில்லை. ஏன்? எமது வாக்கை ஓதுவதால் மட்டும் இந்த சுவடியை ஓதும் மூடனுக்கு மிகப் பெரிய தகுதியோ பராக்ரமோ ஞான நிலையோ வந்து விடவில்லை என்பதை தெரிந்து கொள். வெறும் வார்த்தைகளால் மட்டும் ஒருவனை உயர்த்துவது மட்டுமல்ல எமது நோக்கம். அப்படியாவது அவன் உற்சாகம் கொண்டு செயல் படட்டுமே நற்காரியம் செய்யட்டுமே என்பதுதான் எமது நோக்கம் ஆகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 162

ஒரு அன்பர் டிரைவர் தொழில் பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு அகத்திய மாமுனிவர் அறிவுரை:

சாரதி (ஓட்டுநர்) தொழில் என்பது கிருஷ்ண பரமாத்மாவின் தொழில் தானப்பா. இதில் தாழ்வு என்பது ஒரு போதும் கிடையாது. இந்தத் தொழிலின் நுணுக்கத்தை அறியாமல் சிலர் மேம்போக்காக கற்றுக் கொள்கிறார்கள். இதை ஒரு மருத்துவ படிப்பு பொறியியல் படிப்பு எப்படி சில ஆண்டுகள் சொல்லித் தரப்படுகிறதோ அவ்வாறு முழுமையாக மொழி அறிவு போக்குவரத்து விதிமுறை அறிவு வாகனத்தின் நுணுக்கத் தன்மை இயக்கத் தன்மை என்று பிரித்து சில ஆண்டுகள் பயிற்சி தந்தால் ஒழிய திறம்பட செயல்பட முடியாது. அனுபவத்தால் பெறுவது என்பது வேறு. முதலில் அறிவால் பல விஷயத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும். வாகனத்தின் உள்ளே இருக்கும் மனிதனுக்கு இவன் வாகனத்தை இயக்குகிறான் வேக நிலை மாற்றுகிறான். வலம் இடம் திரும்புகிறான். வாகனத்திலே பற்று பற்றா பாகத்தை இயக்குகிறான். வேக முடுக்கியை இயக்குகிறான் என்பதே தெரியக்கூடாது. அவை தெரியும் வண்ணம் எவன் ஒருவன் வாகனத்தை இயக்குகிறானோ அவன் நல்ல சாரதி (ஓட்டுநர்) அல்ல. வாகனம் நன்றாக இருக்கும் பட்சத்தில் இந்த கருத்து பொருந்தும்.

வாகனத்தை இயக்கும் போது இட வலமாக அலசல் இருந்தால் உடனடியாக சாரதியை (ஓட்டுநர்) நீக்கிவிட வேண்டும். நன்றாக பயிற்சி பெறு என்று கூற வேண்டும். சிந்தனையை வேறு பக்கம் செலுத்தி திடுப்பென்று (உடனடியாக) வேக தடுப்பானை (ஸ்பீடு பிரேக்) பயன்படுத்தினால் அந்த சாரதி (ஓட்டுநர்) ஏற்புடையவன் அல்ல. பயணிகளை ஏற்றி வைத்துக் கொண்டு எவன் ஒருவன் எரிபொருளை நிரப்புகிறானோ அவன் நல்ல சாரதி (ஓட்டுநர்) அல்ல. முன்னரே காற்று அழுத்தத்தையும் மின் கலனின் (பேட்டரி) திறனையும் எரிபொருளையும் சோதிக்கா விட்டால் அவன் கவனக் குறைவான சாரதி (ஓட்டுநர்) ஆகும். நெடுந்தூரம் எடுத்துச் செல்லும் முன்னர் அ முதல் ஃ வரை சோதித்து சிறு சிறு குறைகளை சரி செய்து கொள்ள வேண்டும். என்னென்ன பாகங்கள் நடுவழியில் கை கொடுக்காமல் விலகிவிடும் என்பதை முன்கூட்டியே யூகித்து சரியான மாற்று பாகத்தை வைத்திருக்க வேண்டும். வாகனத்தை பராமரிப்பதும் ஒரு சாரதிக்கு (ஓட்டுநர்) முக்கியம். வாகனத்தில் ஓடுகின்ற வாயு உருளைகள் எல்லாம் ஒரு பகுதியாகவே தேய்ந்து கொண்டு வரும் என்பதால்(சில சமயம் முறை மாற்றி ஓடுவதாக சூழல் இருக்கும்) அப்படி செய்யவில்லை என்றால் அந்த சாரதி (ஓட்டுநர்) கவனக்குறைவான சாரதி தான். எனவே சரியான வாகனம் சரியான சாரதி சரியான பயணிகள் சரியான பயணம் அப்பா.

வாகனத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் பிற விஷயங்களையும் கவனிக்க வேண்டும். இப்பொழுதெல்லாம் வெப்பம் தணிக்கும் கருவி(ஏசி) பொருத்தப்பட்ட வாகனங்கள் இருக்கின்றன. அதை நன்றாக அனுபவிக்க வேண்டும் என்பதற்காக சாளரங்களை (சன்னல்) எல்லாம் அடைத்து வைக்கிறார்கள். இது எதிர்பாராத விபத்தை அதிகப்படுத்தும் என்பதால் சிறிதளவு குளிர் வெளியே சென்றாலும் பாதகமில்லை என்று வெளிக்காற்றை உள்ளே வரும்படி செய்து கொள்ள வேண்டும். அதேப் போல் வலப்புறம் இடப்புறம் என்று எப்புறம் சென்றாலும் அப்புறம் (பின்) பார்த்துக் கொள்ளலாம் என்று செல்லாமல் நிதானமாக அதற்குரிய குறியீடுகளை (காட்டிகளை) அவசியம் பயன்படுத்த வேண்டும். அது மட்டுமல்லாது வாகனத்திலே உள்ள ஔிரும் பொருள்கள் (மின் விளக்குகள்) எல்லாம் சரியான சாய் கோணத்தில் இருக்க வேண்டும். ஔிரும் பொருள்களை ஔிர விடுவதும் அணைப்பதுமாக திடீரென்று செய்யாமல் முன்னரே தீர்மானித்து துவக்க வேண்டும். உள்ளே இருக்கும் பொருள்கள் எந்த அளவுக்குத் தாக்குப் பிடிக்கும் என்பதை அவன் கற்றுக் கொள்ள வேண்டும். வாகனத்திலே கொடுக்க வேண்டிய அழுத்தமானது எந்த அளவுக்கு எந்த கோணத்தில் பிரயோகிக்கப் (உபயோகிக்க) படவேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மேலே உள்ள ஆழி சீசா (கண்ணாடி) போன்ற வண்ணங்கள் எல்லாம் கீழே விழுந்து விட்டால் உடனுக்குடன் எடுத்து விட வேண்டும். இல்லையென்றால் நிறுத்துவான் என்ற பகுதிக்கு அடியிலே சென்று விட்டால் அது இயங்காமல் போய் விபத்தை ஏற்படுத்தும்.

வேக நிலை மாற்றத்தை (கியர்) இயக்குவதில் ஒரு மனிதன் கவனமாக இருக்க வேண்டும். நிலை ஒன்று நிலை இரண்டு நிலை மூன்று என்று அதன் கோணத்தில் சென்று அதனை சரி செய்வது மிகவும் சிறப்பாகும். வாகனத்தில் இருந்து வெளிவரும் நச்சுப்புகை இந்த அண்டத்திற்கும் உயிர்களுக்கும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதால் இந்த தொடர்புடையவர்கள் எல்லாம் நறுமணமிக்க புகையை ஆலயங்களில் அதிகம் இட்டு இட்டு இந்தக் குறைக்கான பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். இன்னும் இப்படி எத்தனை எத்தனையோ யாங்கள் (சித்தர்கள்) கூறலாம். இவற்றை மனதில் பதிய வைத்தால் நன்றாக இருக்கும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 161

கேள்வி: எனக்கு ஏன் சித்தர்களோடு தொடர்பு ஏற்பட்டது?

இறைவனின் கருணையைக் கொண்டு இந்த இன்னவன் ஒத்து பலரும் அறிய முயல்வது இத்தனை மனிதர்கள் இருக்க எனக்கு இவ்வாறு சித்தர்களோடு தொடர்பு ஏன் ஏற்பட்டது? அதிலும் குறிப்பிட்ட சித்தர்களோடு என்ன வகையான நிலையில் எனக்கு தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. யாம் யாது செய்ய வேண்டும்? என்றெல்லாம் கேட்கிறார்கள். நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பிட்ட ஒரு சித்தனோடு ஒரு பிறவியில் தொடர்பு ஏற்பட்டால் அதே சித்தன்தான் மறுபடியும் வழிகாட்டப் போகிறார் என்று பொருள் அல்ல. எந்த சித்தர்களும் பெயர் தான் மாறுமே தவிர உயர்ந்த நிலையை அடைந்த அனைவரும் ஒரே சமநிலையில்தான் இருக்கிறார்கள். எனவே இந்த எமது திருவடியைத் தொட்டு எம்மோடு தொடர்புடைய சில மாணாக்கன் பின்னால் ப்ருகுவிடமோ (ப்ருகு மகரிஷி) வசிஷ்டரிமோ காகபுஜண்டரிடமோ கூட செல்வதுண்டு.

காகபுஜண்டரிடம் தொடர்ந்து பல்வேறு விதமான வாக்குகளை நாடிகள் மூலமும் மானசீகமாகவும் அறிந்து கொண்டவர்கள் எம்மிடம் வருவதும் உண்டு. பொதுவாக சித்தர்களோடு மனிதர்களுக்கு தொடர்பு ஏற்படுவது என்றால் ஏதாவது ஒரு பிறவியிலே அவர்கள் ஒரு குறிப்பிட்ட அந்த தினத்திலே இந்த சித்தர்களுக்குப் பிரியமான வழிபாட்டை செய்வது ஒருபுறம். அடுத்தது வழிபாட்டோடு சேர்ந்து தர்ம காரியங்களை செய்வது ஒருபுறம். இவ்வாறு செய்வதால் தொடர்ந்து ஒரு ஆத்மாவை சித்தர்கள் வழிகாட்டுதல் மூலம் கடைத்தேற்ற வேண்டும் என்று இறைவன் முடிவு எடுத்த பிறகு அந்த ஆத்மா எத்தனை ஜென்மங்கள் கடந்து பிறவி எடுத்தாலும் ஏதாவது ஒரு சித்தனை அனுப்பி வழிகாட்ட கட்டளை இடுகிறார். இப்படி கூறும் பொழுது நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் சித்தர்கள் ரிஷிகள் முனிவர்கள் ஆகிய இவர்களின் வழிகாட்டுதல் இல்லாமலேயே பல்வேறு மனிதர்கள் அல்லது ஆத்மாக்கள் இறைவனடி சேர்ந்து இருக்கிறார்கள் என்பது வேறு நிலை. எல்லோருக்கும் நாங்கள் வழிகாட்டுவதில்லை. இறைவன் எந்தெந்த ஆத்மாக்களைத் தேர்ந்தெடுத்து எங்களிடம் ஒப்படைக்கிறாரோ அந்த ஆத்மாக்களுக்கு மட்டுமே நாங்கள் வழிகாட்ட ஆணையிடப்படுகிறோம். அவ்வாறு நாங்கள் வழிகாட்டிக் கொண்டிருக்கிறோம். இந்த நிலையிலே எவனொருவன் ஒரு பிறவியிலே அதிக அன்ன சேவை செய்திருக்கிறானோ அதிக அளவு பசுக்களை காக்கும் முயற்சியில் இருந்திருக்கிறானோ உயிர்க்கொலை புரிய மாட்டேன் என்று இருந்திருக்கிறானோ அவர்களுக்கெல்லாம் சித்தர்களின் கருணையும் கடாட்சமும் இறை அருளாலோ அல்லது யாமே விரும்பியோ செய்திடுவோம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 160

ஒரு அன்பர் மகாலட்சுமி யாகம் செய்துவிட்டு வந்தவுடன் அகத்தியர் பெருமானின் அருள்வாக்கு:

இக்கேள்விக்கு திரு என்ற ஒரு தமிழ் வார்த்தையை வைத்து பதில் சொல்லி தமிழின் சிறப்பையும் அழகையும் காட்டியிருக்கிறார் அகத்தியர்.

திரு என்றால் மகாலட்சுமி என்று பொருள். திருப்தியாய் திரு யாகம் (திரு = மகாலட்சுமி) அன்னை திரு யாகம் அது அக்னி அணையா திரு யாகம் சிறப்பாய் அமைந்தமைக்கு இறைவன் அருளால் யாம் அருளாசி கூறுகிறோம்.

இறையிடம் கேட்கா திரு

எதையும் எதிர்பாரா திரு

இறையிடம் ஒன்றும் வேண்டாம் என் றிரு

இறையிடம் என்றென்றும் அன்பாய் இரு

பஞ்ச புலனை (ஐந்து புலனை) அடக்கி இரு

மனம் அலையாமல் அதனை இறுக்கி இரு

ஒவ்வொரு நாளும் அன்னை திரு வை (மகாலட்சுமி) எண்ணுங்கால் அந்த மெய்ப்பொருளே உண்மை பொருள் என்பதை உணர்ந்தே இரு

கேட்கா திரு. ஆனால் யாருக்கும் தரா இரா என்ற நிலையிலே அள்ளித் தரும் நிலை வரும் வரை மனம் அதில் ஆழும் வரை இருக்க இரு.

அந்த அன்னை திரு அது அனைவரையும் அணைக்கும் திரு. கேட்பதை கொடுக்கும் திரு அந்த உயர் திரு மைந்தனை உயர்த்தும் திரு.

எதையும் எண்ணா திரு அதைத் தவிர வேறு எதையும் எண்ணா திரு.

அன்னை திரு வின் திரு வடியை எண்ணும் திரு இயம்பு திரு. உயர்வு திரு. இப்படி வரும் திரு.

சில சமயம் போகும் திரு. இருந்தாலும் வரும் திரு போகும் திரு. எண்ணா திரு. அதிலே உயர் திரு.

இத் திரு அத் திரு எத் திரு? என்று பாராமல் காத் திரு காத் திரு.

அன்னை திரு என்றும் அனைவரையும் ரட்சித் திரு.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 159

சில அன்பர்கள் ஒரு சிவன் ஆலயத்திற்கு சென்ற பொழுது இறை ரூபங்களின் மீது பூக்களை வைத்து வழிபட்டுவிட்டு வந்தனர். அதன் பிறகு அகத்திய மாமுனிவர் அருளிய வாக்கு:

கேள்வி: ஐயனே கோவிலுக்குச் சென்று தீபம் ஏற்றி வழிபட்டுவிட்டு வந்தோம். அதற்கு ஆசி வழங்க வேண்டும்.

அதெல்லாம் சரி. ஒன்று பூக்களை ஒரு மனிதன் மாலையாகப் போட்டுக் கொள்வான். அல்லது கலிகாலத்திலே அழகுற மேல் அங்கியிலே சொருகிக் கொள்கிறான். அதை விட்டுவிட்டு உதிரி பூக்களை அள்ளி தலையில் வைத்துக் கொண்டு ஒருவன் நடந்தால் அவனை என்னவென்று அழைப்பீர்கள்?

அன்பர்கள்: பைத்தியக்காரன் என்று அழைப்போம்

பின் ஏனடா நந்தியின் தலையிலே பூக்களை அப்படி அள்ளி வைக்கிறீர்கள்? தாமரையை மாலையாகக் கட்ட வேண்டும். தாமரையிலே இருக்கின்ற தேன் மிக உயர்ந்த தேன். தாமரை பூக்களின் தேனை மட்டும் அன்னை கலைவாணி (சரஸ்வதி தேவி) ரூபத்திற்கு அபிஷேகம் செய்தால் ஒருவனுக்கு முக்காலமும் உணரக்கூடிய ஞானம் பிற்காலத்திலே வரும். கல்வி கேள்வியில் வெற்றி கிடைக்கும்.
எனவே தாமரை பெரியதாக இருக்கிறது என்பதற்காக இதோ இந்த மூடன் அப்படி அப்படியே எடுத்து வைத்திருக்கிறான். தாமரை மாலை மிக மிகச் சிறப்பு. தனியாக வைப்பது தவறு என்று கூறவில்லை. அதை விட இது சிறப்பு என்றுதான் கூறுகிறோம்.

கேள்வி: சமீபத்தில் வாக்கு உரைப்பது தடைபட்டிருப்பதற்கான காரணத்தை குருநாதரிடம் வினவிய போது:

வாக்கு உரைக்கின்றோம் வாக்கு உரைப்பதில்லை.
வாக்கு உரைக்கின்றோம் வாக்கு உரைப்பதில்லை.
வாக்கு உரைக்கின்றோம் வாக்கு உரைப்பதில்லை.
வாக்கு உறைப்பதில்லை வாக்கு உரைக்கின்றோம்.

இந்த கேள்விக்கு பதில் கொடுக்கும் அகத்தியர் தழிழில் விளையாடி தமிழின் சிறப்பையும் அழகையும் காட்டியிருக்கிறார். அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பதிலை விளக்கத்துடன் கீழே கொடுத்திருக்கிறோம்.

வாக்கு உரைக்கின்றோம் (விளக்கம் சொல்லுகின்றோம்) வாக்கு உரைப்பதில்லை (அந்த விளக்கம் உங்களுக்கு புரியவில்லை)
வாக்கு உரைக்கின்றோம் (கேள்விக்கு பதில் அளிக்கின்றோம்) வாக்கு உரைப்பதில்லை (அந்த பதிலை நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை)!
வாக்கு உரைக்கின்றோம் (திருவாக்கு சொல்லுகின்றோம்) வாக்கு உரைப்பதில்லை (அதனை ஏற்றுக் கொண்டாலும் சொல்லுகின்ற வாக்கை உறுதியாக கடைபிடிப்பதில்லை)
வாக்கு உறைப்பதில்லை (சொல்லுகின்ற வாக்கு உங்கள் மனதில் பதியவில்லை) வாக்கு உரைக்கின்றோம் (ஆனாலும் சொல்லுகின்ற வாக்கை ஏற்றுக் கொள்பவர்களுக்கு சொல்லிக் கொண்டே இருக்கின்றோம்).

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 158

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 158

கேள்வி: ஐயனே தங்களை எங்களுக்குக் காட்டி அருள வேண்டும்:

எத்தனையோ தர்ம வழிகளை காட்டி அருளுகிறோம். எத்தனையோ நீதி வழிகளை காட்டி அருளுகிறோம். எத்தனையோ சத்திய வழிகளைக் காட்டி அருளுகிறோம். எத்தனையோ இறை வழிகளை காட்டி அருளுகிறோம். எனவே இறையே காட்டானை மீது அமர்ந்து வந்தாலும் தன்னைக் காட்டானை காட்டானை என்றுதான் இறையே இருக்கிறார். இந்த காட்டானையை நீ பிடித்து நன்றாக வழிபடு. காட்டானை உன் அருகில் இருக்க அதை தவிர வேறு காட்டானை எதற்கு? எனவே காட்டானை காட்டானை ஆக இருக்க நாங்கள் மட்டும் காட்டி அருளும் தன்மைக்கு ஏன் வர வேண்டும்? இருந்தாலும் காட்டிக் காட்டிக் காட்டி அருளுகிறோம். காட்டானை திருவடி வணங்கி நாங்கள் காட்டி அருளுகிறோம் காட்டானை. தன்னைக் காட்டாத காட்டானை நாங்கள் காட்டி அருளுகிறோம். அந்தக் காட்டானையின் திருவருளாலே எங்களைக் காட்டி அருளுகிறோம். எங்களைக் காட்டி அருளுமாறு அந்தக் காட்டானை அருள் புரிந்தால் நாங்கள் எங்களையும் காட்டி அருளுகிறோம். காட்டானை அருள வேண்டும் என்று தன்னைக் காட்டானை திருவடி வணங்கி வேண்டிக்கொள்.

இந்த கேள்வியில் காட்டி என்ற தமிழ் வார்த்தை வைத்து பதில் கொடுக்கும் அகத்தியர் தழிழில் விளையாடி தமிழின் சிறப்பையும் அழகையும் காட்டியிருக்கிறார். அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பதிலை கீழே விளக்கத்துடன் கொடுத்திருக்கிறோம்.

எத்தனையோ தர்ம வழிகளை காட்டி (தெரிவித்து) அருளுகிறோம். எத்தனையோ நீதி வழிகளை காட்டி (தெரிவித்து) அருளுகிறோம். எத்தனையோ சத்திய வழிகளைக் காட்டி (தெரிவித்து) அருளுகிறோம். எத்தனையோ இறை வழிகளை காட்டி (தெரிவித்து) அருளுகிறோம். எனவே இறையே காட்டானை (காட்டு யானையின் தோலை உரித்து அதன் மீது அமர்ந்திருக்கும் கஜசம்ஹார மூர்த்தி) மீது அமர்ந்து வந்தாலும் தன்னைக் காட்டானை (வெளிப்படுத்தாமல் இருப்பவனை) காட்டானை (வெளிப்படுத்தாமல் மறைந்து இருக்க வேண்டும்) என்றுதான் இறையே இருக்கிறார். இந்த காட்டானையை (கஜசம்ஹார மூர்த்தியாக அகங்காரத்தை அழித்து அதன் மேல் அமர்ந்து இருப்பவனை) நீ பிடித்து நன்றாக வழிபடு. காட்டானை (தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல்) உன் அருகில் இருக்க அதை தவிர வேறு காட்டானை (தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாத வேறு ஞானிகளோ சித்தர்களோ) எதற்கு? எனவே காட்டானை (தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாதவன்) காட்டானை (தன்னை மறைத்துக் கொண்டு இருக்க) ஆக இருக்க நாங்கள் மட்டும் காட்டி (வெளிப்படுத்திக் கொண்டு) அருளும் தன்மைக்கு ஏன் வர வேண்டும்? இருந்தாலும் காட்டிக் காட்டிக் காட்டி (பல வழியாகத் தெரிவித்து) அருளுகிறோம். காட்டானை (தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் இருப்பவனின்) திருவடி வணங்கி நாங்கள் காட்டி (தகுதியுள்ளவர்களுக்கு வெளிப்படுத்தி) அருளுகிறோம் காட்டானை (கஜசம்ஹார மூர்த்தியாக அகங்காரத்தை அழித்து அதன் மேல் அமர்ந்து இருப்பவனை). தன்னைக் காட்டாத (வெளிப்படுத்திக் கொள்ளாமல்) காட்டானை (மறைந்து இருப்பவனை) நாங்கள் காட்டி அருளுகிறோம். அந்தக் காட்டானையின் (கஜசம்ஹார மூர்த்தியாக அகங்காரத்தை அழித்து அதன் மேல் அமர்ந்து இருப்பவனின்) திருவருளாலே எங்களைக் காட்டி அருளுகிறோம். எங்களைக் காட்டி அருளுமாறு அந்தக் காட்டானை (கஜசம்ஹார மூர்த்தியாக அகங்காரத்தை அழித்து அதன் மேல் அமர்ந்து இருப்பவன்) அருள் புரிந்தால் நாங்கள் எங்களையும் காட்டி அருளுகிறோம். காட்டானை (கஜசம்ஹார மூர்த்தியாக அகங்காரத்தை அழித்து அதன் மேல் அமர்ந்து இருப்பவன்) அருள வேண்டும் என்று தன்னைக் காட்டானை (தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் இருப்பவனின்) திருவடி வணங்கி வேண்டிக்கொள்.

கேள்வி: சித்தர் காடு பற்றி

நாடி என்னும் நாமம் உடைய சித்தன் அங்கு அடங்கி இருப்பது உண்மை. குருவாரம் (வியாழக்கிழமை) முழு மதி தினங்களில்(பெளர்ணமி) அங்கு வழிபாடு செய்வது நன்மையைத் தரும். பித்த நிலை மனிதர்களுக்கு பித்தம் தெளியும்.

நாடி என்று அழைக்கப்படும் சிற்றம்பல நாடி சித்தரின் வரலாற்றை அறிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 157

கேள்வி: பார்வதி சுயம்வர யாகம் எப்போது நடத்தலாம்?

பொதுவாக இறைவனை வணங்க காலம் திதி நாழிகை எதுவும் முக்கியமல்ல என்றாலும் சிறப்பாக கூறவேண்டும் என்றால் பொதுவாக திருமணம் என்பது யாருடைய பொறுப்பு? சுக்கிரன் பொறுப்பு. எனவே வெள்ளிக்கிழமையில் செய்வது விசேஷம். அதேசமயம் திருமணம் நிகழவேண்டும் என்றால் யார் பார்வை வேண்டும்? குரு அப்படியானால் வியாழக்கிழமையும் தேர்ந்தெடுக்கலாம். அதேசமயம் திருமணம் எனப்படுவது மங்கலம் எனவே மங்கலவாரமான செவ்வாய்க்கிழமையும் எடுத்துக் கொள்ளலாம். அதேசமயம் திருமணம் திருமணத்திற்குரிய எண்ணம் சிந்தனை போன்றவை சந்திரனுக்கு உட்பட்டது. எனவே திங்களையும் தேர்வு செய்யலாம். அடுத்து நட்சத்திரங்களை எடுத்துக் கொண்டால் பொதுவாக ஒரு நட்சத்திரத்தை நாங்கள் கூறுவதாகக் கொள்வோம். அதில் கலந்து கொள்பவர்களுக்கு அன்று சந்திராஷ்டமம் ஆகயிருந்தால் நீ என்ன செய்வாய்? எனவேதான் இதுபோன்ற பொது பூஜைகளுக்கு நாள் நட்சத்திரம் பார்ப்பதைவிட அனைவரும் கலந்து கொள்ளும்படியான ஒருநாளை தேர்வு செய்வதே சிறப்பு.

கேள்வி: ஒழுக மங்கலம் பைரவரைப் பற்றி:

ஒழுக மங்கலம் கோவில் உள்ள இடம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம்

கடுமையான தலைமுறை தோஷங்களையும் பித்ரு தோஷங்களையும் பிதுராதி வழி வருகின்ற சாபங்களையும் பிதுர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்யாமல் தவறிய தோஷங்களையும் பிரம்மஹத்தி தோஷங்களையும் நீக்க கூடிய ஸ்தலங்களில் இதுவும் ஒன்று. இந்த பைரவருக்கு அணையா தீபம் தொடர்ந்து ஏற்றுவது தில யாகம் செய்வதற்கு சமம்.

இக்கோவிலை இறைவனின் புகைப்படங்களை மேலும் பார்க்க கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்

பைரவர்

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 156

கேள்வி: பெரிய கருப்பூர் ஆலய முருகனுக்கு சேவல் கொடி வாங்கி அளிக்க:

திருச்சியிலிருந்து 14 கி.மீ உள்ள ஜீயபுரம் பகுதியில் அமைந்துள்ள பெரிய கருப்பூர் ஆலய முருகனுக்கு திருச்சி அன்பர்கள் சேவல் கொடி வாங்கி அளிக்க ஆசிகள் கேட்டபோது அகஸ்தியம் பெருமான் அருளிய வாக்கு.

கொடிய வினை போக

கொடிய பாவம் போக

கொடிய மாந்தனின் (மனிதனின்) வாழ்வு மாய

கொடிய உறவுகள் விலகிப் போக

கொடிய சம்பவங்கள் வாழ்வில் நடக்காமல் இருக்க

கொடியை வாங்கி திருத்தொண்டு செய்வது சிறப்பு.

கேள்வி: கூத்தைப் பார் அம்பாள் ஆனந்தவல்லி குறித்து:

கோவில் உள்ள இடம்: கூத்தப்பர் (திருச்சியிலிருந்து 15 கி.மீ திருவெறும்பூர் வட்டம்)

பெயரிலேயே இருக்கிறதப்பா ஆனந்தம் என்பது. மெய்யான அன்போடு பக்தியோடு அவனவன் பிறந்த நட்சத்திர நாளன்றும் பெளர்ணமி நாளன்றும் அன்னைக்கு முடிந்த வழிபாட்டை செய்தால் திருமண தோஷம் நீங்கும். கணவன் மனைவி கருத்து வேறுபாடு நீங்கும். பிள்ளைச் செல்வம் கிடைக்கும். பொருளாதார பிரச்சனை நீங்கும். அன்னை திரு வின் அதாவது அன்னை மகாலட்சுமியின் அருளும் கிடைக்கும். இந்த ஆலயத்திலே சத்ரு சம்ஹார யாகத்தையும் செய்யலாம். அனைத்தையும் விட சுவர் இருந்தால்தான் சித்திரம் என்பதைப் போல தேகம் நன்றாக இருப்பதற்கான ஆயுள் விருத்தி யாகத்தையும் இங்கு செய்யலாம். எனவே இந்த கூத்தைப் பார் ஆலயம் ஒரு சிறப்பை அல்ல பல சிறப்புகளை கொண்டது.