ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 155

கேள்வி: பித்ருக்களுக்கு திலதர்ப்பணம் செய்யும் முறை பற்றி:

தெய்வ சமுத்திரக் கோட்டம் எனப்படும் இராமேஸ்வரம் சென்று அது ஏனோ தானோ என்று இருந்தாலும் ஒரு முறை செய்துவிட்டு பிறகு அங்கு முடிந்தவரை ஏழைகளுக்கு உதவி செய்துவிட்டு இறைவனுக்கு வழிபாடுகள் செய்து விட்டு தீபங்களும் ஏற்றி விட்டு பிறகு அமைதியாக அவரவர் இல்லத்திற்கு வந்து கூட பித்ரு சாப நிவர்த்தி பூஜையை செய்து கொள்ளலாம். தில தர்ப்பணம் என்றால் எள்தான் பயன்படுத்த வேண்டும் என்பது இல்லை. மற்ற யாகங்களைப் போல் சகல பொருள்களை பயன்படுத்தியும் செய்யலாம். முதலில் வழக்கம் போல் கணபதி யாகம் குல தெய்வ யாகம் செய்து விட்டு நவகிரக யாகம் நரசிம்மர் யாகம் சுதர்சனர் யாகம் சரபேஸ்வரர் யாகம் துர்கை யாகம் செய்து விட்டு நவகிரகங்களின் அதி தேவதைகளுக்கும் பூஜை செய்து பிறகு இறுதியாக எந்த இல்லத்திற்காக இது நடத்தப்படுகிறதோ அவர்களுக்குத் தெரிந்த முன்னோர்களின் பெயரை எல்லாம் கூறி (இதில் கூட எமக்கு முழுமையான உடன்பாடு இல்லை. ஏன் என்றால் பெயர் என்பது உடலுக்கு இடப்படுவது தான். என்றாலும் அப்போது வாழ்கின்ற மனிதர்கள் உணர வேண்டும் என்பதற்காகத் தான் நாமாவளி) மானசீகமாகவோ அல்லது வாய்விட்டோ எங்கள் குடும்பத்தில் இதற்கு முன்பு வாழ்ந்து மறைந்த முன்னோர்கள் இன்று எந்த நிலையில் இருந்தாலும் இன்று யாங்கள் செய்கின்ற யாகம் பூஜை மற்றும் தர்ம பலனால் இந்த பலனின் எதிரொலியால் இறைவனின் அருளால் பித்ரு தேவதைகள் இந்த பலனை எடுத்து அவர்களுக்கும் பயன்படுத்தி அதன் மூலம் அவர்களின் நிலை மாறி நற்கதியும் சற்கதியும் அடைவதற்கு இந்த பூஜையை பயன்படுத்தி கொள்ளுமாறு இறையிடமும் ஏனைய தேவதைகளிடமும் மனதார பிராத்தனை செய்து கொள்கிறோம் என்ற கருத்து வருமாறு வாசகங்களை அமைத்து கொள்ள வேண்டும்.

பித்ரு தோஷ நிவர்த்தி பூஜையில் அதாவது தில யாகத்திலே மிகச்சிறப்பே கோ (பசு) தானம் தான். தானங்கள் 32 க்கும் மேற்பட்டு உள்ளன. கோ தானம் சுவர்ண தானம் வெள்ளி தானம் அன்ன தானம் என்று விதவிதமான தானங்கள் உள்ளன. ஆனால் அனைவராலும் இவைகளை செய்ய முடியாது. வாய்ப்பு இருப்பவர்கள் செய்யலாம். வாய்ப்பு இல்லாதவர்கள் பசுவிற்கு ஒரு வேளை உணவாவது கொடுக்க வேண்டும். பிறகு ஆலயம் சென்று முடிந்த பூஜைகள் செய்து மோட்ச தீபம் ஏற்றி அந்த பரிகாரத்தை பூர்த்தி செய்து கொள்ளலாம். தில தர்ப்பணத்தை புண்ணிய நதிக்கரையிலோ புண்ணிய கடற்கரையிலோ செய்யும் பொழுது கூறுகின்ற மந்திரங்களின் சக்தி பல மடங்கு அதிகரிக்கும். அது மட்டும் அல்லாது எல்லோருடைய இல்லமும் புனிதமானதாக இராது. தோஷங்கள் நிறைந்ததாக இருக்கும். அப்படி தோஷமுள்ள வீடுகளில் பூஜை செய்தால் அதன் பலன் குறைவு. அதனால்தான் ஆத்ம பலம் தெய்வ பலம் உள்ள சேத்திரங்களை முன்னோர்கள் கூறி வைத்தார்கள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 154

கேள்வி: யாகத்தின் போது அபிஷேகம் செய்யும் முறை:

பொதுவாக யாகம் முடிந்த பிறகுதான் அந்தந்த முர்த்தங்களுக்கு அபிஷேகம் அலங்காரம் வழிபாடு செய்வது வம்சாவளியாக வரும் பழக்கம். எம்மை பொருத்தவரை யாகத்திற்கு முன்பும் சிவனுக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் போன்ற வழிபாடு செய்து யாகம் பூர்த்தி அடைந்த பிறகும் ஒரு அபிஷேகம் வழிபாடு செய்வதுதான் பரிபூரணமான ஒரு முறையாகும். அடுத்து யாகம் செய்விப்பவனும் கலந்து கொள்பவனும் மனதை பூப்போல் வைத்திருக்க வேண்டும். அங்கு எதிர்மறை வார்த்தைகளோ எரிச்சலூட்டும் வார்த்தைகளோ வெறுப்பை உமிழும் வார்த்தைகளோ பேசக்கூடாது. உடலையும் உள்ளத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஆடைகள் பழையதாக இருந்தாலும் துவைத்து சுத்தமாக இருக்க வேண்டும். அமரும் போது ஏதாவது ஒரு விரிப்பின் மீது அமர வேண்டும். யாகத்தில் கலந்து கொள்ளும் ஆண் பெண் இருவருமே எண்ணெய் ஸ்நானம் செய்துவிட்டு வர வேண்டும். நகத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் அல்லது அறவே நீக்கி விட வேண்டும். மறை ஓதுவோர்கள் மந்திரங்களை உச்சரிக்கும் போது வாயில் இருக்கும் எச்சில் யாகத்தீயிலோ வேறு எந்த யாகப் பொருள்களின் மீதோ விழக் கூடாது.

ஆண் பெண் இருபாலரும் கை கால்களில் மறுதோன்றியை (மருதாணி) இட்டுக் கொள்வது சிறப்பு. உடைகளில் பருத்தி ஆடைகள் ஏற்றது. ஆண்கள் மேல் ஆடை அணியாமல் இருப்பது சிறப்பு. மந்திரங்களை அவசர அவசரமாக மென்று விழுங்கி மென்று விழுங்கி ஏனோ தானோ என்று உச்சரிக்காமல் அட்சர சுத்தமாக ஸ்பஷ்டமாக ஆணித்தரமாக நிதானமாக சொல்வது நல்ல பலனைத் தரும். எந்த ஒரு யாகத்திற்கும் முன்பாக மூத்தோனுக்கு உரிய கணபதி யாகத்தை செய்து மற்றவற்றை பின் தொடரலாம். நெருப்பினால் சமைக்கப்பட்ட உணவைவிட இயற்கை கனிகள் அன்னைக்கு ஏற்றது. எல்லா வகை வாசமிக்க மலர்களையும் குறிப்பாக தாமரை மலர்களை தூய்மையான நெய்யிலே கலந்து கலந்து கலந்து இடுவது சிறப்பு. அதோடு ஒவ்வொரு பொருளையுமே நெய்யோடு கலந்து இடுவது மிகுந்த பலனைத் தரும். யாகப் பொருள்களை சிதற விடாமல் ஒழுங்காக வைப்பது சிறப்பு. ஆலயமாக இருந்தாலும் யாகக் கல்லை அடுக்குவதற்கு முன்னால் அந்த இடத்தை தூய நீரினால் சுத்தி செய்து பசும் கற்பூரம் மங்கலப் பொடி கலந்த நீரினாலும் சுத்தம் செய்து விட்டு யாகக் கல்லையும் சுத்தம் செய்ய வேண்டும். உள்ளே போடும் மணல் உமி போன்றவற்றை சலித்து தூய்மை செய்து பயன்படுத்துவது நல்ல பலனைத் தரும். எதையெல்லாம் நீரினால் சுத்தம் செய்ய முடியுமோ செய்ய வேண்டும். பல்வேறு மனக்குழப்பத்தில் இருக்கும் மனிதர்களை அதிக காலம் ஒரே இடத்தில் அமர வைக்க முடியாது. நீண்ட காலம் பூஜை செய்வது என்பது மனம் பக்குவப்பட்ட ஆத்மாக்களால் மட்டும்தான் முடியும். யாக மந்திரம் ஒலிக்கும் போது தேவையற்ற பேச்சிக்களும் தேவையற்ற குழப்பங்களும் இருக்கக் கூடாது. எனவே மந்திர ஒலி ஒலிக்கத் தொடங்கி விட்டால் அனைவரும் அமைதியாக கவனிக்க வேண்டும். யாகத்தை சிறப்பாகவும் அதே சமயம் சுருக்கமாகவும் செய்ய வேண்டும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 153

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 153

கேள்வி: திருவண்ணாமலையில் அருணகிரிக்கு முருகன் காட்சி தந்தது பற்றி:

அந்த வாதம் எந்த நோக்கிலே துவங்கப்பட்டதோ அப்போது அருணகிரிநாதர் எதை ஆரம்பித்தாரோ அந்த பாடல் ஒரு நிலை பூர்த்தி அடைந்தவுடன் முருகன் காட்சி அளித்தார். அவற்றில் சில பாடல்கள் மனிதர்களின் கண்களுக்கு இன்னும் சிக்கவில்லை. அப்போது வல்லாள மகாராஜாவின் கண் பார்வை பறிபோனது உண்மை. பொதுவாக அதிரூப இறை காட்சிகளை மகான்களின் காட்சிகளை முழுமையாக அல்ல ஓரளவு பார்த்தாலே விழியிலே பார்வை குறையத்தான் செய்யும். அந்த அளவிலே அந்த நிகழ்வு உண்மைதான். ஆனால் அடுத்த ஒரு வினா எழும். அதி உன்னதமான இறைவனை பார்த்தால் கண்கள் பறி போய்விடும் என்றால் எப்படி இறைவனை பார்ப்பது? என்று. அதற்கு ஏற்ப மனித உடல் தேகம் பக்குவமடைய வேண்டும். இருந்தாலும் வல்லாள மகாராஜாவிற்கு மீண்டும் பார்வை வந்ததும் உண்மை.

கேள்வி: சப்த மாதர்கள் பற்றி:

பெண்களுக்கு ஏற்படும் துன்பங்களை பெண்களாக பிறந்து விட்டோமே? என்று கவலைப்படும் பெண்கள் சப்த மாதர்களை வழிபட்டால் குறைபாடு நீங்கும். பெண்களுக்கே உண்டான உடல் பிரச்சனைகள் தீர்வதற்கு இவர்கள் வழிபாடு உதவும். ஆண்கள் மனோ தைரியம் இல்லாமலிருப்பது ஒன்றை நினைத்து சதா சர்வ காலமும் கவலைப்படுவது தைரியம் இல்லாமலிருப்பது போன்ற துன்பங்களுக்கு அவரவர் ஜென்ம நட்சத்திரத்திலே உயர்வான அபிஷேகம் ஆராதனை செய்து வந்தால் நலம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 152

கேள்வி: யாகத்தை பற்றிய பொதுவாக்கு:

நல்விதமாய் பூஜைகள் நடத்திடத்தான் கால காலம் மூத்தோனை (விநாயகரை) வணங்கி செயல்பட நன்மை உண்டு. அனைத்திலும் உயர்தரம் பரிசுத்தம் உடலும் சுத்தம் உள்ளமும் சுத்தம் ஆடையும் சுத்தம் இடமும் சுத்தம் பொருளும் சுத்தம் உணவும் சுத்தம் என்று அனைத்திலும் சுத்தமாக இருப்பது இறை அருளை எளிதாக கூட்டுவிக்கும். தன் குறைகளையெல்லாம் ஒதுக்கி விட்டுவிட்டு எவனொருவன் இதிலே கலந்து கொள்கிறானோ அவனுக்கு இறைவனின் பரிபூரண அருள் உண்டு. இதிலே கலந்து கொண்டபிறகு கர்மாக்கள் குறைவதால் எதிர்காலத்திலே இறையின் தரிசனம் கிடைப்பதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது என்பதால் ஆத்மார்த்தமாக கலந்து கொள்வது நல்ல பலனைத் தரும். இந்த பூஜையை முடித்த அடுத்த பட்சத்திற்குள் (ஒரு பட்சம் என்பது பதினைந்து நாட்கள் ஏழைகளுக்கு அன்ன சேவையும் மருத்துவ உதவிகளையும் செய்வது இறைவனின் அருளை மேலும் கூட்டி வைக்கும். எந்த அளவிற்கு யாகத்திற்கு முக்கியத்துவமோ அந்த அளவிற்கு இத்தகைய அறப்பணிகளுக்கும் முக்கியத்துவம் அளிப்பது இறை அருளை விரைவாக கூட்டி வைக்கும்.

கேள்வி: யாகத்தில் எப்படி பங்கு கொள்ள வேண்டும்?

உடல் சுத்தம் உள்ள சுத்தம் வேண்டும். விரல் நகங்களை அகற்றிட வேண்டும் (முடியாத பட்சத்தில் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்). வெள்ளிக்கிழமைகளில் நகம் அகற்றாமல் இருப்பது நல்லது. அந்தி நேரம் (மாலை நேரம்) இரவு நேரங்களிலும் மற்றும் வீட்டின் நடுக்கூடத்திலும் நகம் வெட்டக்கூடாது). ஒவ்வொரு முறையும் வாய்ப்பு இருந்தால் எண்ணெய் ஸ்நானமே செய்ய வேண்டும். வாய்ப்பு இருப்போர் புதிய ஆடையையும் வாய்ப்பு இல்லாதோர் துவைத்த ஆடையையும் அணிவது நல்ல பலனைத் தரும். ஆண்கள் மேலாடை இல்லாமலோ அல்லது மேலே ஒரு வஸ்திரத்தை போர்த்திக் கொள்வது நல்ல பலனைத் தரும். பெண்கள் தூய்மையாக குளிப்பதோடு முன் தினமே மருதாணியை கை கால்களில் இட்டு கொள்வது நல்ல பலனை தரும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 151

கேள்வி: கந்தர் அலங்காரம் பற்றி:

பொதுவாக ஆரங்களாலும் அணிமணிகளாலும் இறைவனுக்கு அலங்காரம் செய்வதே பக்தனுக்கு வழக்கமாக உள்ளது. அதையே மொழியின் வார்த்தைகளாக செய்வது தான் இந்த அலங்காரம். இதன் உட்பொருள் மீண்டும் மெய்ஞானத்தைதான் குறிக்கிறது. ஆனாலும் கூட இதையும் இல் வாழ்க்கைக்கு எப்படி பயன்படுத்தலாம் என்றால் புற வாழ்க்கைக்கு மேனி அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடியவர்கள் அது தொடர்பான துறையிலே இருப்பவர்கள் உடல் வசீகரமாக இருக்க நினைப்பவர்கள் அனைவரும் இந்த கந்த அலங்காரத்தை ஓதி வரலாம்.

கேள்வி: கலசவிழா (கும்பாபிஷேகம்):

புறத்தே ஒன்றை வைத்து அகத்தே திசை திருப்ப செய்யப்பட்ட எத்தனையோ வழிபாடு முறைகளில் கலச நீராட்டு விழாவும் ஒன்று. அங்கனமாயின் ஒரு மனிதன் தன் தேகத்தை யோகாசனங்களால் வலுவாக்கி திடமாக்கி உள்ளத்தை உரமாக்கி உயர்வாக்கி கர்மங்களை எல்லாம் குறைத்து வட கிழக்கு திசை நோக்கி அமர்ந்து பத்மாசனமிட்டு தொடர்ந்து தவத்தில் ஈடுபட ஈடுபட தான் யார்? ஆத்மா யார்? அது எதற்காக வந்தது? என்பதை உணர்ந்து தனக்குள்ளே ஊறுகின்ற ஓர் அமுதத்தை தன் ஆத்மா முழுவதும் பரவ செய்வதுதான் உண்மையான அக கலச விழா. அதை குறிப்பது தான் இந்த புற கலச விழா.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 150

கேள்வி: திருத்திய மலை பற்றி (திருச்சி அருகே):

ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் செய்கின்ற தவறுகள் அநேகம். ஒவ்வொரு ஸ்தலமும் அந்தந்த பகுதி மக்களுக்கு மட்டுமல்லாமல் தூர தூர பகுதியிலிருந்து வரும் மாந்தர்களுக்காக ஏற்பட்டது. அவற்றிலே ஒன்றுதான் இந்த பிழை திருத்தும் கிரி (மலை) யாகும். மனிதன் மீண்டும் பிழை செய்யாமல் உள்ளன்போடு மனம் வருந்தி மன்னிப்பை கேட்டு கொண்டால் இந்த இடத்திலே அவனுடைய விதி திருத்தப்படும். எனவே மனிதன் பிழையை மட்டுமல்ல அவன் தலை எழுத்தையே திருத்த கூடிய மலை ஆகும். அபிஷேகங்கள் தொடர்ந்து செய்ய பிதுர் தோஷங்களும் பிரம்ம ஹத்தி தோஷங்களும் குறைய வாய்ப்பு உண்டு.

கேள்வி: சரபேஸ்வரர் வழிபாடு பற்றி:

சரபேஸ்வரர் என்பது சிவனின் அம்சம். சிவ பெருமானின் எத்தனையோ தோற்றங்களில் சரபேஸ்வரரும் ஒன்று. எனவே சரபேஸ்வரரை வணங்கினாலும் சிவனை வணங்கினாலும் ஒன்றுதான். அது உக்ரமான தெய்வம். அவரை வணங்கினால் நமது கஷ்டங்கள் தீரும் என்ற நம்பிக்கை இருப்பதால் அந்த நம்பிக்கையை மனோரீதியாக தீர்க்க இந்த வழிபாடு உதவுகிறது.

கேள்வி: விஷ்வக்சேனர வழிபாடு பற்றி:

இது விஷ்ணு சார்ந்த வழிபாடு.

விஷ்வக்சேனர் பற்றி மேலும் அறிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்

திருத்தியமலை பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 149

கேள்வி: கோவில் வழிபாடு பற்றி?

முதலில் கோவில் கோபுரங்களை வணங்க வேண்டும் கோவில் படிக்கட்டுகளில் பெரும்பாலும் முனிவர்கள் தவம் செய்து கொண்டிருப்பார்கள் அவர்களிடம் மானசீகமாக நான் மனிதனாய் பிறந்துவிட்டேன் வேறு வழி இல்லாமல் உங்களை மிதித்துக் கொண்டு செல்கிறேன். மன்னித்து ஆசி கூறுங்கள் என்று வேண்டிக் கொள்ள வேண்டும். (வேறொரு வாக்கில் கோவில் படிக்கட்டுகளுக்கு பால் அபிசேகமே செய்யலாம் தெரியுமா என்று உரைத்திருந்தார்). கோவில் புண்ணிய தீர்த்தங்கள் இருந்தால் அவற்றில் நீராடி இயலவில்லை என்றால் அவற்றில் பாதம் நனைத்து அந்த தீர்த்தத்தை தெளித்துக் கொள்ளவேண்டும். கருவறை உள்ளே செல்லும் முன்னர் துவார பாலகர்களை வணங்கி விட்டு உள் செல்ல வேண்டும். நிறைய வாசனை மிக்க மலர்களை சாற்றி அந்த ஆலயத்தில் உள்ள நம்பிக்கையின்படி நிறைய நெய் தீபங்களை ஏற்றிட வேண்டும். ஆலய அர்ச்சகர் மற்றும் மிக முக்கியமாக கோவில் சுத்தம் செய்யும் பணிகளில் உள்ளவர்களுக்கு அவர்கள் வாழ்நாளில் இதுபோல் இன்னொரு முறை தர்மம் கிடைக்குமா என்று என்னும் அளவுக்கு நிறைய தர்மம் செய்து விட வேண்டும். பின்னர் ஆலய பிரகாரங்களை வலம் வந்து கொடி மரத்தின் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும். பின்னர் தனிமையில் அமர்ந்து அமைதியாக தியானம் செய்து பிராத்தனை செய்து கொள்ள வேண்டும். மேலே சசொன்ன விஷயங்களில் மிக முக்கியம் செய்கின்ற பிராத்தனை ஆத்மார்த்தமாக இருக்க வேண்டும்.

கேள்வி: மந்திரங்களை உறு ஏற்ற:

மனம் திடம் பெறத்தான் மந்திரம். நலம் பெறத்தான் மந்திரம். மந்திரத்தை உதடு சொன்னாலும் மனமும் சேர்ந்து சொல்ல வேண்டும். மனதை ஒரு நிலை படுத்தி உறு ஏற்றுவது நலம். பல வகையான மந்திரங்களை உறு ஏற்ற முடியாத நிலையில் ஏதேனும் தெய்வ வடிவத்தின் ஒரே வகையான மூல மந்திரங்களை அதிகம் அதிகம் உறு ஏற்றலாம். உடல் சுத்தம் உள்ள சுத்தத்துடன் சினம் இன்றி பதற்றமின்றி விரக்தி இன்றி அகமும் முகமும் மலர மந்திரம் உறு ஏற்றப்பட வேண்டும். இல்லத்தில் அமைதியான இடத்திலோ அல்லது ஆலயத்திலோ உறு ஏற்றலாம். பூஜைக்கு பிறர் இடர் செய்ய கூடாது என்று எப்படி நாம் எண்ணுகிறோமோ அப்படியே நாம் செய்யும் பூஜையும் பிறருக்கு இடையூறு செய்ய கூடாது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 148

கேள்வி: மும்மூர்த்திகளில் (பிரம்மா சிவன் விஷ்ணு) மூவரும் ருத்ரன் தான் சிவனா அல்லது இவர்கள் மூவருக்கும் மேலே உள்ள சக்தியா?

ஒரே பசுவின் கால் கண் வால் மடியைக் காட்டி இதுதான் பசுவா? இதுதான் பசுவா? என்றால் எப்படி இருக்குமோ அப்படிதான் நீ வினவிய வினாவும். அனைத்துமே பரம்பொருள்தான். பரம் பொருளை நீ பிரம்மா விஷ்ணு ஏன் சிறிய தேவதையாக அன்னை பராசக்தியாக வணங்க விரும்பினால் அப்படியே செய். இறையை வணங்க ஒரு வுருவம் தேவை. அதை வைத்துதான் ஒரு மனிதன் தன் கவனத்தை வளர்த்துக் கொள்ள முடியும் என்பதற்காக தான் ஒரு புற தோற்றம். அதையும் தாண்டிய ஒரு நிலைதான் இறை உணர்வு. அந்த இறை உணர்வை நீ உணரும் போது நீ வினவிய அனைத்து வினாக்களும் ஏன் அனைத்து ஐயங்களும் அடிப்பட்டுப் போய்விடும். பரிபூரண நிசப்தம் சாந்தம் சாந்தி ஒரு இனம் புரியாத இன்ப உணர்வு அதாவது கடுமையான குளிர் வாட்டி கொண்டிருக்கும் போது வெதுவெதுப்பான நீரில் குளிக்கும் போது ஏற்படும் அனுபவம் போல் வைத்துக் கொள். எனவே இது அதுவா? அது இதுவா? ஏன் நான்முகனுக்கு (பிரம்மன்) ஆலயம் இல்லை? இது எல்லாம் இறையோ பரம் பொருளோ எடுத்த முடிவு அல்ல. இன்று எப்படி தன்னை புத்திசாலி என்று கூறிக்கொண்டு முட்டாள்தனமான மனிதர்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்களோ அப்படி ஒரு முட்டாள் பின்னால் பல முட்டாள்கள் போய் கொண்டிருக்கிறார்கள்.

வெறும் பகட்டு மயக்கு வாரத்தைகளை கேட்டு அவன் பின்னால் செல்லும் கூட்டம் எக்காலத்திலும் இருக்கிறது. அப்படிதான் கால ஓட்டத்தில் அனைத்து ஆலயங்கள் வழிபாடுகள் இருந்தது போய் சில தெய்வ வழிபாடுகள் மறைந்து போயிருக்கிறது. எனவே இதற்கும் இறைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. எனக்கு இப்படித்தான் ஆலயம் வேண்டும் என்று தெய்வம் கூறியதே இல்லை. மனிதர்கள் பாமர நிலையில் உணர வேண்டும் என்பதற்காக ஒரு சில வழிபாட்டு முறைகளையும் உச்ச நிலையில் தியானம் போன்ற முறைகளையும் மகான்கள் வகுத்து கொடுத்தார்கள். ஆனால் இவன் ஏதாவது ஒரு நிலையில் நின்று கொண்டு அதுதான் உச்ச கட்டம் என்று வாதாடுகின்ற பரிதாபத்திற்குரிய மனிதர்களாக கால போக்கிலே ஒவ்வொருவரும் மாறிவிட்டது தான் வேதனை.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 147

கேள்வி: வேல் வழிபாடு பற்றி:

வேல் வழிபாடு என்பது துவக்க காலத்தில் இருந்தே இருக்கிறது. இடையிலேதான் வேல் வழிபாட்டின் முக்கியத்துவம் குறைந்து விட்டது. வேல் யார் தெரியுமா? அன்னை தான் (பராசக்தி). அன்னையின் (பராசக்தி) அம்சம்தான் வேல். வேலை வணங்குவதும் அன்னை பராசக்தியை வணங்குவதும் ஒன்றுதான். எனவே முருகனின் ஆயுதமாக மட்டுமே பார்த்து பழக்கப்பட்ட விஷயம் வேல் என்பதால் மனிதனுக்கு அதைத் தாண்டிய விஷயங்கள் தெரியாமல் போய்விட்டது. எதிர்ப்புகளும் தோஷங்களும் கடுமையான கர்மாக்களும் குறைவதற்கு இந்த வேல் வழிபாடு உதவும். வேலை பவித்ரமாக வைத்து அதை வணங்கினால் பல்வேறு வேதனைகள் தீரும். அது மட்டும் அல்லாது மனிதன் ஆசைப்படுகிறானே வைரம் வைடூரியம் முத்து கனகம் (தங்கம்) போன்ற கற்கள் எங்காவது தனக்குதானே மதிப்பு வைத்திருக்கிறதா? மனிதன்தான் அவற்றின் மீது மதிப்பு வைத்திருக்கிறான். இந்த நவரத்னங்கள் உலோகங்களில் வெளிப்படும் கதிர்வீச்சுகள் எல்லாம் மனிதனுக்கு நன்மையைத் தரும். அதனால் பலருக்கு நன்மை தரும் நோக்கிலேதான் சுவாமிக்கு வைரக் கிரீடம் தங்கக் கவசம் வைள்ளிக் கிரீடம் நவரத்னம் பதிக்கப்பட்ட வேல் வைப்பதன் காரணம் இதுதான். இவற்றை தரிசனம் செய்தாலே கற்கள் உலோகங்களின் தோஷம் குறையும். சில தோஷங்களை தரிசனம் நயன (பார்வை) தீட்சயாலே ஒரு குரு நீக்குவது போல நீக்கிக் கொள்ளலாம். அது போல ஐம்பொன்னால் செய்யப்பட்ட வேல் செம்பால் பித்தளையால் செய்யப்பட்ட வேல் – எதுவாயினும் உரு ஏற்றி பூஜை செய்தால் கடுமையான எதிர்ப்பு முக்கியமாக காவல் துறை ரணகளத் துறையில் உள்ளவர்களுக்கு இந்த வழிபாடு நன்மையைத் தரும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 146

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 146

கேள்வி: ஆணவம் கன்மம் மாயை என்ற மும்மலங்கள் பற்றி:

அனைத்துமே ஒன்றோடொன்று தொடர்புடையவை. தன்னாலும் முடியும் என்றால் தன்னம்பிக்கை. தன்னால் மட்டும்தான் முடியும் என்றால் அது ஆணவம். ஒரு தொழில் ரீதியாக புகழ் ரீதியாக ஒரு பதவி ரீதியாக மட்டும் ஆணவம் வருகிறது என்பதல்ல. நான் எப்படி செய்வேன்? என்னைப் போய் இப்படி கூறிவிட்டானே? நான் எப்பேற்பட்ட மனிதன்? என்னை ஒருவன் இப்படி பேசிவிட்டானே? நான் எப்படியெல்லாம் வாழ்ந்தேன்? என்னை எப்படியெல்லாம் வளர்த்தார்கள்? இப்படி பேசிவிட்டானே? என்று ஒருவன் எண்ணினால் அதுவும் ஆணவத்தின் ஒரு பகுதிதான். நாம் இந்த அண்ட சராசர பிரபஞ்சத்திலே வெறும் தூசியிலே தூசி. இந்தக் காற்றிலே கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ பூச்சிகள் உயிரினங்கள் அலைந்து கொண்டு இருக்கின்றன. அது போல இந்த அண்ட சராசரங்களை எல்லாம் பார்க்கும் போது எத்தனையோ கிரகங்கள் உயிரினங்கள். அனைத்திற்கும் அதனதன் வழியில் அதனதன் போக்கில் துன்பங்கள் இருந்து கொண்டுதான் உள்ளன. எனவே துன்பம் ஒருவனுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. மனதை தெளிவாக வைத்துக் கொண்டால் எல்லாம் மாயை என்பது புரியவரும்.

கேள்வி: நவகிரகங்கள் பற்றி?

கையூட்டு வாங்காத நேர்மையான காவல் அதிகாரிகள்.

கேள்வி: என்றாவது நவகிரங்கள் தங்களால் இவ்வளவு ஆத்மாக்கள் துன்பப்படுகிறார்களே என்று எண்ணி வருத்தப்பட்டதுண்டா?

எதற்காக வருந்த வேண்டும்? ஒரு குழந்தை பிற்காலத்தில் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தடுப்பு ஊசி போட வேண்டும் ஊசி போடுவது என்பது குழந்தைக்கு வலியை உண்டாக்கும் என்பதால் அந்த குழந்தைக்கு அந்த தடுப்பு பூசி போட வேண்டுமா வேண்டாமா?