ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 564

கேள்வி: பலரின் கேள்விகளுக்கு புரிந்து கொள்ளும்படி பதில் கூறுவது இல்லை? ஏன்

இறைவனின் கருணையை கொண்டு இத்தருணம் கூறுவது யாதெனில் வருகின்ற மனிதன் புரிந்து கொள்ளும்படியாக கூறினால் என்ன? என்றால். அப்படிக் கூறினாலும் கூட புரிந்து கொள்ள மறுப்பதும் அல்லது அந்த நிலை வாக்கை நாங்கள் ஏற்கவில்லை என்ற ரீதியில் விவாதம் செய்வதும் அல்லது அனைத்தையும் தாண்டி இவைகளை போய் என்று கூறுவதும் மனிதனின் இயல்பு. இந்த இயல்பை அறிந்தேதான் யாம் காலாகாலம் இதுபோல் அருள் வாக்கினை கூறி வருகிறோம். இயம்புங்கால் மேலும் இதுபோல் நிலையிலே தெள்ளத் தெளிவாக வெட்ட வெளிச்சமாக எதைக் கூற வேண்டும்? எதைக் கூறக்கூடாது? என்ற இறை கட்டளைக்கேற்பவே கூற வேண்டி இருக்கிறது. உதாரணமாக இப்படி கூறுவதாக வைத்துக் கொண்டால் அதனை ஏற்று அமைதி அடையக்கூடிய பக்குவம் எத்தனை மனிதர்களுக்கு இருக்கும் என்று பார்த்தால் அது மிகவும் குறைவு. இப்படியிருக்கும் பட்சத்தில் முன்னரே பக்குவமின்மையோ விதியோ அல்லது அறியாமையோ துன்பத்தில் வந்து எம்முன்னே வந்து அமருகின்ற மனிதனுக்கு யாமும் ஒரு விதமான வாக்கை கூறி அவனை சங்கடப்படுத்த விரும்பவில்லை. ஒன்று மௌனமாகி விடுகின்றோம். இல்லையென்றால் அவன் திருப்தி அடையும் வண்ணம் கூறி விடுகிறோம். இப்படி கூறுவதால் அடுத்த வினா வரும். சித்தர்கள் பொய் உரைக்கலாமா? என்று ஏற்கனவே நாங்கள் பொய்தான் உரைத்துக் கொண்டிருக்கிறோம் என்று பலரும் கூறிக் கொண்டிருக்கிறார்கள். அது போல் நிலையிலேயே பொய்மையும் வாய்மையிடத்து என்ற கருத்தை இங்கே பொருத்திப் பார்க்க வேண்டும்.

அதுபோல் மெயிலும் மெய்யை நாங்கள் கூற வேண்டும் என்றால் இங்கு வருபவன் மெய்யாக இருக்க வேண்டும் இங்கு வருபவன் யாரும் மெய்யாக இல்லை என்பதே மெய்யிலும் மெய்யான உண்மையாகும் அதாவது எம்மை நாடுவதும் என் மீது பற்று வைப்பதும் பக்தி வைப்பதும் என்பது வேறு ஆனால் நாங்கள் வந்து வாக்கை கூறுகிறோம் என்பதற்காக எல்லா வகை உரிமைகளையும் எடுத்துக் கொண்டு நான் எதிர்பார்க்கின்ற சூழலை அமைத்துத் தந்தால் தான் நம்புவேன் என்ற ரீதியில் வந்தால் இன்றல்ல நாளையல்ல கலப்பக்கூடி காலமானாலும் சித்தர்களும் மனிதர்களும் சரி விகித சமரச உடன்பாடு என்றுமே வராது இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் எப்பொழுதும் மேலும் இது போன்ற சிக்கலான தத்துவார்த்த கருத்துக்களை கூறினால் மீண்டும் மீண்டும் குழப்பங்கள் பொருளைத்தான் அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய நிலை உருவாகும்

அடுத்ததாக இதுபோல் நிலையிலேயே பல்வேறு விதமான சிந்தனைகள் கொண்டவர்கள் இங்கு வருவதும் போவதும் பின்னர் தூற்றுவதும் என்பது இயல்பு. இது காலாகாலம் நடக்கக்கூடிய நிகழ்வு. இதற்காக இதழ் ஓதுபவனோ மற்றவர்களோ விசனம் கொள்வதும் வேதனை கொள்வதும் அறிவுடைமை ஆகாது. ஒருவன் முதலில் இங்கு வருவான். இதை நம்புவான். எம்மை தலையை தூக்கி வைத்துக் கொண்டாடுவான். அடுத்த சில மாதங்களில் கீழே போட்டு மிதிப்பான். இவையும் நடந்து கொண்டுதான் இருக்கும். இது போன்ற மனிதர்களை மனதிலே வைத்து எந்த ஒரு காரியத்தையும் செய்தல் கூடாது. எனவே வருபவர் வரட்டும் செல்பவர் செல்லட்டும் ஒத்துக் கொள்ளக் கூடிய மனித ஒத்துக் கொள்ளட்டும். மறுக்கக்கூடிய மனிதன் மறுக்கட்டும். ஆனாலும் கூட இது போல் நிலையிலேயே இன்னும் எத்தனை கடினங்கள் எத்தனை வேதனைகளை அனுபவித்தாலும் இது போல் நிலையிலேயே தர்மம் சத்தியம் பக்தி இந்த மூன்றையும் தவறாமல் கடைபிடிப்பேன் என்ற ஒரு வைராக்கியம் இருப்பவனுக்குத்தான் தொடர்ந்து எமது வழிகாட்டுதல் என்பதும் இருக்கும் தொடரும். இன்னொன்று இதுபோல் விபத்தை முன்கூட்டியே உணர்ந்து சிலரை காப்பாற்றுவது போல பலரை ஏன் காப்பாற்றவில்லை? என்ற ஒரு வினா வரும். அடுத்ததாக அப்படியானால் அகத்தியரை வணங்கினால் அல்லது மற்ற சித்தர்களை நம்பினால்தான் காப்பாற்றுவார்களா? நம்பாதவர்கள் எல்லாம் கைவிட்டு விடுவார்களா? என்ற ஒரு சிந்தனை வினா வரும். அப்படியல்ல யார் யாருக்கு விதிப்படி என்ன நடக்க வேண்டுமோ அது நடந்து கொண்டே இருக்கிறது. இந்த கடுமையான விதியிலிருந்து ஒருவனை காப்பாற்ற வேண்டும் என்றால் அதற்கு சரியான காரணத்தை இறையிடம் நாங்கள் காட்ட வேண்டும். அப்படி சரியான காரணம் எம்மை பொறுத்தவரை தர்மம் தர்மம் தர்மம் தர்மம் தர்மம் தர்மம் இது ஒன்றுதான்.

அதனையும் தாண்டி மனதிலே அப்பழுக்கில்லாமல் எந்த சூதுவாது இல்லாமல் சிறு குழந்தை போல் மனதை வைத்திருந்தால் அதையும் ஒரு சரியான காரணமாகக் காட்டுவோம். ஆனால் இங்கு வருகின்ற பலரும் வெறும் லோகாய விஷயங்களை கேட்பதற்காக நாங்கள் வருத்தப்படவோ எனப்படுவோ இல்லை. இது மனிதனின் தேவை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் எம்மிடம் வந்தும் ஒன்றும் நடக்கவில்லை என்றால் குற்றம் எங்கே? என்று யாரும் சிந்தித்து கூட பார்ப்பதில்லை. எனவே இன்று இங்கே எம்முன்னே அமர்ந்து வாழ்க்கை கேட்கின்ற அனைவருக்கும் கூறுகிறோம். எமது வாக்கை 100க்கு 100 சரியாக புரிந்து கொண்டு சரியான தர்ம வழியில் எவன் ஒருவன் நடக்கிறானோ கட்டாயம் அவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எதை கேட்டாலும் கேட்கா விட்டாலும் அவனுக்கு எதை செய்ய வேண்டுமோ அதை நாங்கள் இறையருளால் செய்திருக்கிறோம். செய்து கொண்டிருக்கிறோம். இனியும் செய்வோம். அப்படியெல்லாம் ஏதுமில்லை பல ஆண்டுகளாக சித்தர்கள் வழியில் நான் வருகிறேன். என் கஷ்டங்கள் ஏதும் தீரவில்லை. மறாக கஷ்டங்கள் அதிகமாக இருக்கிறது என்று யாராவது எண்ணினால் இரண்டு நிலைகளை அங்கே பார்க்க வேண்டும் ஒன்று பரிபூரணமாக முன் ஜென்ம பாவங்கள் அங்கு குறையவில்லை. முன் ஜென்ம பாவங்கள் ஓரளவு குறைந்திருந்தாலும் இந்த ஜென்மத்திலே இளமை காலத்திலிருந்து அவன் நடந்து கொண்ட விதத்தை சிந்தித்துப் பார்த்தால் எங்கே குற்றம்? எங்கே குறைகள்? என்பது அவனவன் மனதிற்கு கட்டாயம் புரியும். எனவே இறைவன் அருளைக் கொண்டு கூறுவது என்னவென்றால் நூற்றுநூறு எம்மை நம்பி என் வழியில் வருகின்ற அனைவருக்கும் நாங்கள் இறையருளால் நல்ல வழி காட்டுவோம். உலகில் ரீதியாக முன்னேற்றம் காட்டினால் தான் ஒருவனுக்கு நாங்கள் அனுகிரகம் செய்கிறோம் என்பது மிகவும் குறைந்தனமான எண்ணம்.

நன்றாக எமது வார்த்தை கவனித்து பொருள் கொள்ள வேண்டும் எதற்காக இந்த ஜீவ அருள் ஓலைக்கு இங்கு வருகின்ற அனைவரையும் இழுத்து வந்து பலவிதமான வாக்குகளை கூறி விதவிதமான தேர்வுகளை வைக்கிறோம் என்றால் இங்கு மனித நிலையிலே வெறும் தோற்றத்தில் மனிதனாக குணத்தில் மிருகமாக இருக்கலாம். பிறகு தோற்றத்திலும் குணத்திலும் மனிதனாக இருக்கலாம். தோற்றத்திலும் குணத்திலும் மனிதனை விட மேம்பட்ட மனிதனாக இருக்கலாம். புனிதனாக இருக்கலாம். இதை எல்லாம் தாண்டி ஒவ்வொரு மனித ஆத்மாவையும் சித்த ஆத்மாவாக மாற்ற வேண்டும். இதுதான் இறைவன் எங்களுக்கு இட்ட கட்டளை.

ஒவ்வொரு மனிதனையும் சித்தர்களாக மாற்ற வேண்டுமென்றால் அது எத்தனை பெரிய இரசவாதம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இது எளிமையான காரியம் அல்ல. செம்பை தங்கம் ஆக்குவதோ அல்லது இரும்பை பொன்னாக்குவதோ அல்ல. அது மிக மிக எளிது. ஆனால் மனிதனை குறைந்தபட்சம் மனிதனாக்கி அவனை மாமனிதனாக்கி அந்த மாமனித நிலையில் இருந்து மேலும் புனிதனாக்கி அவனை நல்ல நிலையில் சித்தனாக்க வேண்டும். அப்படி சித்த நிலையை நோக்கி செல்ல வேண்டும் என்றால் நாங்கள் கற்பிக்கும் பாடங்கள் கடினமாகத்தான் இருக்கும். அந்த பாடங்களை சரியாக உள்வாங்கி எவன் புரிந்து கொள்கிறானோ லோகாய கஷ்டங்களையெல்லாம் ஒதுக்கி வைத்து என் பின்னால் வருகிறானோ அவனை நாங்கள் ஒரு சித்தன் ஆக்கி விடுவோம். சித்தனாக்கிவிட்டால் பிறகு அவன் எதற்கு இன்னொரு சித்தனை நாட வேண்டும். அவன் இறையை கூட நாடத் தேவையில்லை. ஒவ்வொரு ஆணையும் பெண்ணையும் அந்த நிலைக்கு அழைத்துப் போக வேண்டும் என்றுதான் நாங்கள் இந்த ஜீவ அருள் நாடி என்று நாமமிட்டு மூன்று முனிவர்களும் போராடிக் கொண்டிருக்கிறோம்.

பலர் எண்ணலாம் உலகில் ரீதியான எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்ந்த நிலையில் நிம்மதியாக ஒருவன் ஆன்மீகத்தில் வரலாமே? என்று அதை வாதத்திற்கு ஒப்புக் கொள்ளலாமே தவிர நடைமுறையில் அது சாத்தியம் என்று கூற இயலாது. ஏனென்றால் ஒரு மனிதன் ஒரு கஷ்ட நிலையில் இருக்கிறான். இறையருளோ அல்லது எமது வழிகாட்டுதலோ அல்லது இயற்கையாக மாறிவரும் தசா புத்தியாலோ சற்றே மேம்பட்ட ஒரு நிலை வருகிறது என்று வைத்துக் கொள்வோம். உடனடியாக என்னிடம் வந்து குருதேவா முன்பை விட இப்பொழுது நிலைமை உயர்ந்திருக்கிறது. வருமானம் அதிகமாக இருக்கிறது. இந்த உபரி வருமானத்தை என்ன செய்யலாம்? என்று யாராவது கேட்கப் போகிறார்களா? இல்லை. அடுத்தது உலகியல் ரீதியான முன்னேற்றத்தை நோக்கித்தான் மனித மனம் செல்லும். எனவே மீண்டும் மீண்டும் கூறுகிறோம். ஒவ்வொரு மனிதன் உலகில் உலகியல் ரீதியாக முன்னேற்றம் சுகம் என்று எண்ணுகிறானோ அது வெறும் மாயை கானல் நீர்தான். ஏனென்றால் ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு வந்த பிறகு அடுத்த நிலையை நோக்கி அவன் மனம் சென்று விடும். ஏற்கனவே பட்ட கஷ்டத்தை இப்பொழுது வாழ்கின்ற வாழ்க்கை எத்தனையோ மடங்கு மேல் என்று எந்த மனமும் எண்ணாது. இவைகள் வெறும் வாதத்திற்கு தான் உதவும். உண்மை அது அல்ல.

எனவே எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் அவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு மனிதன் அன்றாட கடமைகளை செய்வது போல நாங்கள் கூறுகின்ற கருத்தை சிந்தித்துப் பார்த்து தேவையில்லாத விவாதங்களையெல்லாம் குறைத்து தூஷணைகளை எல்லாம் விட்டு பிறர் மீது குற்றம் சாட்டுவதை நிறுத்தி தானுண்டு. தன் கடமையுண்டு. பக்தியுண்டு. தர்மம் உண்டு. சத்தியம் உண்டு என்று என் வழியில் திடமாக வந்து கொண்டே இருந்தால் காலப்போக்கில் அவன் எதையெல்லாம் பிரச்சனை என்று எண்ணுகிறானோ அவைகள் எல்லாம் தீர்ந்தது கூட அவனுக்கு தெரியாமல் அதை தாண்டி அழைத்து வந்து விடுவோம்.

மீண்டும் மீண்டும் நாங்கள் கூறுகின்ற கருத்து இதுதான். சத்தியம் தர்மம் பத்தி இதை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டால் எல்லோரும் சுகமாக வாழலாம் ஆசிகள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 563

கேள்வி: சில தேவாலயங்களில் இறந்தவர்களை புதைத்து வைக்கும் வழக்கம் இருக்கிறது. இதனைப்பற்றி:

பொதுவாக இதுபோன்ற விஷயங்களை நாங்கள் ஆதரிப்பதில்லை. போதிக்கவுமில்லை. இவையெல்லாம் தவறான வழிகாட்டுதலால் ஏற்பட்ட விஷயம். இவைகளை குறைத்துக் கொள்வது மனித சமுதாயத்திற்கும் பூமி வளத்திற்கும் நல்லது. நன்றாக கவனிக்க இறந்த விலங்குகளை புதைத்தால் பூமிக்கு நன்மை உண்டு. தாவரங்களுக்கு நன்மை உண்டு. மனிதனை அவ்வாறு செய்வதைவிட அக்னிக்கு இரையாக்குவதே நல்ல செயலாகும். இருந்தாலும் மிகப்பெரிய புனிதமான ஆத்மாக்கள் சிலரை வேண்டுமானால் இவ்வாறு செய்யலாம். இருந்த போதிலும் அக்னிகாரியம் என்பதே இந்த இடத்தில் பொருத்தமானதாகும். மற்ற விளக்கங்களை மீண்டும் தக்க காலத்தில் உரைப்போம் ஆசிகள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 562

கேள்வி: இராஜராஜ சோழன் கருவூரார் நேரடி பார்வையிலே இருந்தார். அப்படியென்றால் அவர் புரிந்த போர்களை நீங்கள் சொன்ன அடிப்படையில் எப்படி புரிந்து கொள்வது?

அப்படியென்று நாங்கள் ஒருபோதும் கூறவில்லையே. இப்பொழுது எப்படி இங்கு வருகின்றவர்களுக்கு நாங்கள் ஜீவ அருள் ஓலையிலே தோன்றி ஆலோசனைகள் கூறுகிறோமோ. நாங்களே ஆலோசனைகள் கூறுவதால் இங்கே வருகின்றவன் உயர்ந்த வழியில் சென்று விடுகிறானா என்ன? அல்லது இதுவரை செய்த பாவத்தை எல்லாம் நிறுத்திவிட்டு மகா முனிவர்களெல்லாம் இப்படி கூறுகிறார்கள். இந்த வழியில் தான் செல்ல வேண்டும் என்று தீர்மானிக்கிறானா? இந்த இடத்தில் கேட்கும் பொழுது பவ்வியமாக கேட்டுவிட்டு பிறகு இவையெல்லாம் நடைமுறைக்கு ஒத்து வராது. நடைமுறை வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால் சக மனிதர்கள் எதையெல்லாம் பின்பற்றுகிறார்களோ அதைத்தான் பின்பற்ற வேண்டும் என்று இங்கு வருகின்ற இங்கு சில ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கின்ற அனைவருமே அப்படித்தான் வாழ்கிறார்கள். அப்படித்தான் கருவூரார் எதைக் கூறினாலும் எது தனக்கு சாதகமோ தன்னால் இயலுமோ அதை ஏற்றுக் கொள்வதும் எது மற்ற மன்னர்கள் பின்பற்றினார்களோ அதை பின்பற்றித்தான் அந்த மன்னனும் வாழ்ந்தான். எனவே கருவூரார் என்ன? முக்கண்ணனாகிய சிவபெருமானே நேரில் தோன்றி அறிவுரை கூறினாலும் அப்பொழுது பவ்வியமாக கேட்டுவிட்டு சிவபெருமான் அந்த இடத்தை விட்டு சென்ற பிறகு மீண்டும் வழக்கம்போல் மனிதன் வாழ்வான். ஏனென்றால் அவன் மதி விதியிடம் இருக்கிறது. எவன் விதி அவன் மதியிடம் அடங்கி இருக்கிறதோ அவன் தான் எமது சொல்லை ஏற்பான்.

புண்ணியம் செய்கின்ற மன்னர்களுக்கு அந்த புண்ணியத்தால் சில அரிய பெரிய சாதனைகளை செய்யக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. செல்வம் எப்படியோ புண்ணியமும் அப்படிதான். மிகப்பெரிய புண்ணியம் ஒரு மனிதனுக்கு பரிபூரண ஞானத்தை மிக இளவயதிலேயே அதாவது எல்லா தவறுகளையும் செய்துவிட்டு பிறகு மனம் திருந்தி நல்லவனாக மாறுவதுகூட ஆதியில் அவர்களுக்கு பாவம் இருக்கிறது என்பதை குறிக்கிறது. பரிபூரண புண்ணியம் என்றால் அவன் சிறிய பாவத்திற்காகவோ அல்லது இறைவன் கட்டளைக்காகவோ மனிதனாக பிறவியெடுக்க நேரிடும். அப்படி பிறவியெடுக்கும்பொழுதே ஒருவன் துறவியாக பிறவியெடுத்தால்தான் அவனுக்கு முழுமையான ஞானம் இருக்கிறது என்பதை நாங்கள் ஓரளவு ஒப்புக்கொள்வோம். மற்றவர்கள் எல்லாம் புண்ணியத்தால் உலகியல் சுகங்களை நுகர்ந்துகொண்டே பிறகு எனக்கு இறை பக்தி இருக்கிறது. எனக்கு இறையருள் இருக்கிறது. என்னிடம் இந்த அளவு வளம் இருப்பதால் நான் மிகப்பெரிய ஆலயம் கட்டப்போகிறேன் என்று கூறக்கூடிய நிலையில்தான் இருக்கக்கூடியவர்கள். எனவே சராசரி மனிதர்களைப் பார்க்கும்பொழுது ழுது அவன் மிகப்பெரிய புண்ணியவான். அதற்கு முன்பு அதற்கு முன்பும் மிகப்பெரிய சிவபக்தன். சிவனுக்காக தொண்டு செய்து, செய்து. செய்து தன் ஆஸ்திகளையெல்லாம் இழந்தவன். சிவன் மீது மிகப்பெரிய பிரியத்தை வளர்த்தவன். அந்த வழியில் இறைவன் அருளால் மாபெரும் சக்ரவர்த்தியாக பிறவியெடுத்து வழக்கம்போல் சக்ரவர்த்திகள் என்னென்ன தவறுகள் செய்வார்களோ அதையெல்லாம் செய்து வாழ்ந்தவன்தான். என்ன ? ஏனைய சக்ரவர்த்திகள் இறக்கும் தருவாயில் கொஞ்சம் திருந்துவார்கள். இவன் தன் வாழ்வின் ஒரு) பகுதிக்கு மேல் திருந்தி ஒரு துறவிபோல் வாழ முற்பட்டான். அவ்வளவே. ஒரு தீபம் சுடர்விட்டு எரிந்து கொண்டிருக்கலாம். அந்த தீபத்திலிருந்து இன்னொரு தீபத்தை ஏற்ற அந்த தீபம் முன்வரலாம், அதிலுள்ள சுடரும் முன்வரலாம். ஆனால் இன்னொரு தீபம் அதற்கு ஆயத்த நிலையில் இருக்கவேண்டும். என்ன ஆயத்த நிலையில் இருக்கவேண்டும்? நல்ல நிலையில் ஒரு திரி இருக்கவேண்டும். அதிலே தூய எண்ணெய் இருக்கவேண்டும் அல்லது

தூய நெய் இருக்கவேண்டும். நெய் எப்படி இருக்கவேண்டும்? இளகிய நிலையில் இருக்கவேண்டும். அப்பொழுதுதான் இந்த தீப சுடர் அதில் பற்றும். வெறும் அகல் விளக்கு இருந்தாலும், வெறும் திரி இருந்தாலும் அல்லது திரி இல்லாமல் எண்ணெய் இருந்தாலும் அல்லது எண்ணெயும், திரியும் இருந்து அகல் இல்லாமல் இருந்தாலும் அங்கு பரிபூரண சுடர் பற்றாது. இப்படிப்பட்ட நிலையில்தான் பல மன்னர்களும் வாழ்ந்தார்கள். பல மனிதர்களும் வாழ்கிறார்கள். அவர்களுக்கு மீண்டும், மீண்டும் பிறவி கொடுக்கப்பட்டு, நிறைய பக்குவம் கொடுக்கப்பட்டுதான் இறுதியில்தான் இறைவன் சாயுச்சம், சாரூபம் போன்ற நிலைகளையெல்லாம் காட்டுவார்.

இன்னொரு வினாவை யோசித்துப் பார்த்தாயா? நீ உன் பூஜை தடத்தை அலங்கரிக்க என்ன செய்ய வேண்டும்? ஒரு மிகப்பெரிய சிவலிங்கத்தை வைத்து வணங்கவேண்டும் என்றால் நீ என்ன செய்ய வேண்டும்? நீ நேர்மையாக உழைத்த தனத்தைக் கொண்டு ஒரு சிற்பியை அழைத்து “எனக்கு இன்ன வகையான சிவலிங்கம் வேண்டும் அல்லது இன்ன வகையான பூஜை பொருள்கள் வேண்டும்” என்று உன் பூஜை இடத்தை அலங்கரித்துக் கொள்ள வேண்டும் அல்லது வைத்துக்கொள்ள வேண்டும். ஏற்கனவே இன்னொருவன் அலங்கரித்து வைத்துள்ள பூஜை தடத்தை மிரட்டி எடுத்து வந்தால் அதற்கு என்ன பெயர்? அதற்கு என்ன பொருள் கூறுவது? இன்னொரு தேசத்தையெல்லாம் போர் என்ற பெயரில் கொள்ளையடித்து அந்த பொருள்களைக் கொண்டு ஆலயம் கட்டினால் இறைவன் ஏற்றுக்கொள்வாரா? அது நேர்மையான போராகவே இருக்கட்டும். அங்கு உள்ளவர்கள் தொல்லை கொடுக்கும் மனிதர்களாகவே இருக்கட்டும். ஒரு தேசத்தில் தொல்லை கொடுக்கும் மனிதர்கள் மட்டும்தான் இருப்பார்களா? நல்லவர்கள் இருக்க மாட்டார்களா? போர் என்றால் தீயவர்கள் மட்டும்தான் பாதிக்கப்படுவார்களா? அங்குள்ள நல்லவர்கள் பாதிக்கப்பட மாட்டார்களா? எனவே போரால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் பலகோடி பிறவிகள் எடுத்தாலும் தீராது அப்பொழுதும் அவனுக்கு ஆலோசனைகள் கூறப்பட்டது. ”நீ அறிந்தும், அறியாமலும் புகழுக்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ உனது சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்த லட்சக்கணக்கான மனிதர்களை கொன்றிருக்கிறாய். அந்த தோஷம் பிறவிதோறும் பற்றாமல் இருக்கவேண்டும் என்றால் மிகப்பெரிய சிவாலயம் அமைத்தால் நல்லது’ என்று போதிக்கப்பட்டது. எனவேதான் தன் தோஷம் நீங்கவேண்டும் என்றும், தனக்கு சந்தோஷம் கிடைக்கவேண்டும் என்றும் அவன் செய்த செயல். ஆனாலும் இப்படியொரு செயலை செய்ததற்கு நாங்கள் அவனை பாராட்டுகிறோம்.

யானைகளை ஏன் பழக்கவேண்டும்? என்பதுதான் எமது கேள்வி. (ஜனகர், தசரதர் போன்ற மன்னர்களிடமும் யானைகள் இருந்தன. அப்படியென்றால் அவர்கள் செய்தது பாவம் இல்லையா). எல்லா பாடங்களிலும் தேர்வு பெறக்கூடிய நிலையில் யாருமே இருந்ததில்லை என்பதேயே இது குறிக்கிறது.

பகவானின் அம்சமாக இராமபிரான் இருந்தாலும் அந்த நிலை என்பது வேறு. அதாவது ஒரு கருடன் மீது மகாவிஷ்ணு ஏறி அமரும்பொழுது கருடனுக்கு அது பாரமாக இருக்குமா? துன்பமாக இருக்குமா? துயரமாக இருக்குமா? சுகமாக இருக்குமா? (சுகமாக இருக்கும்) எனவே பசுவான் செய்யும் செயல்களையெல்லாம் மனிதன் தன் செயல்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பது என்பது. சிறு குழந்தை பெரியவர்கள் செய்கின்ற செயலை தன்னோடு ஒப்பிட்டுப் பார்ப்பதுபோல. இஃதொப்ப நிலையிலே பகவானின் அம்சமான ஸ்ரீ இராமரோடு ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும் என்றால், அவருடைய ஏக தாரத்தை ஒப்பிட்டுப் பார்க்கவேண்டியதுதானே? அதே சமயம், சிற்றன்னை (ஸ்ரீ இராமரை) அழைத்து * நாடு வேண்டாம். காடு ஏற்றுக்கொள் என்றவுடன் புன்முறுவலோடு சென்றாரே. அதை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதானே? ஆனால் நல்லவைகளை ஏற்றுக்கொள்ள மனித மனம் விரும்பாது. அதே சமயம் மன்னர்கள் தம், தம் படைபலத்தை வளமாக்க, பலமாக்க விலங்குகளை பயன்படுத்துகின்ற முறைகளும் எம்மைப் பொறுத்தவரை ஏற்க முடியாத முறைதான். பகவானே செய்தாலும் நாங்கள் குற்றம் என்றுதான் கூறுவோம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 561

கேள்வி: பூமி பாரத்தை குறைப்பதற்காக கிருஷ்ண பரமாத்மா இந்த யுத்தத்தை ஏற்படுத்தினாரா?

பதில்: இறைவன் அருளால் பூமி பாரமே ஏற்படாமல் செய்யக்கூடிய ஆற்றல் அவருக்கு இருக்கிறதா? இல்லையா? இருக்கிறது. அப்படியென்றால் எதற்காக ஒன்றை ஏற்படுத்த வேண்டும்? பிறகு ஒன்றை நீக்க வேண்டும்?

கேள்வி: புரியவில்லை ஐயனே?

பதில்: புரியும் பொழுது புரியும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 560

கேள்வி: ஒரு தேவனோ அல்லது மனிதனோ இந்த பூமியில் பிறவி எடுக்கும் பொழுது தான் எதற்காக பிறவி எடுத்திருக்கிறோம் என்று தெரிவதில்லை தான் எதற்காக துன்பப்படுகிறோம் என்றும் தெரிவதில்லை இது ஏன்?

காரணமே தெரியாமல் துன்பத்தில் ஆழும் பொழுதுதான் தண்டனையின் உச்சகட்டம். அதன் பிறகுதான் இப்படி இனம் தெரியாமல் துன்பம் வருகிறதே? இனியாவது ஒழுங்காக இருக்க வேண்டும் என்ற சிந்தனை வரும் என்பதின் காரணமாகத்தான் பல விஷயங்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன. ஆசிகள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 559

கேள்வி: கும்பாபிஷேகத்தின் போது கருடன் வருவது பற்றி:

சுபசகுனம் தான். பல்வேறு தருணங்களில் கருடாழ்வாரே வந்து தரிசனம் தருவதும் உண்டு. ஆனால் சில ஆலயங்களில் அவ்வாறு வருவதில்லை. வேறு சில பறவைகள் வருகிறது. அதுவும் தேவலோகத்தில் இருந்து வரக்கூடிய பறவைகள் தான். எப்படி இருந்தாலும் அதை சுப சகுனமாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். கருடன் வந்தால் மட்டும்தான் அது நன்மையை தரும் என்று எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 558

கேள்வி: கர்ப்ப ஸ்த்ரீகள் சந்திர கிரகணம் போன்ற நாட்களில் எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது என்று சொல்வது பற்றி:

இறைவன் அருளால் இது போல் கிரகணத்தின் போது கர்ப்பவதிகள் மட்டுமல்ல யாருமே உணவு உண்ணாமல் இருந்து இறை நாமத்தை ஜபிப்பதே முதலில் தேக ஆரோக்கியத்திற்கு ஏற்புடையதாக இருக்கும். அடுத்ததாக மகான்களும் ஞானிகளும் அவர்களின் பத்தினிமார்களும் சதா சர்வ காலமும் லோக நன்மைக்காக பிரார்த்தனை செய்து கொண்டு தான் இருப்பார்கள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 557

கேள்வி: கருங்காலி மரத்தை வீட்டில் வளர்க்கலாமா?

ஒரே குழுமத்தில் இருந்து கொண்டு அந்த குழுமத்திற்கு எதிராக செயல்படக் கூடிய மனிதனைப் பார்த்து இந்த மரத்தின் நாமத்தை கூறுவார்கள் ஏன் தெரியுமா? இதுபோல் இந்த மரத்தின் உறுதியை கொண்டுதான் பிற மரங்களை பிளக்கும் கோடாலிக்கு கைப்பிடி போட மனிதன் கற்றுக் கொண்டிருக்கிறான். தன் இனத்திலே பிறந்த தன் இனத்தையே அழிப்பதற்கு உதவி செய்கிறது என்ற ஒரு நோக்கில் இவ்வாறு கூறப்பட்டாலும் கூட இதுபோல் மரம் நேரடியான காரணம் அல்ல. மனிதன் செய்யக்கூடிய தவறுகளில் ஒன்று. இருந்தாலும் அதிகமாக வேர் விடக்கூடிய புளியமரம் கருங்காலி மரம் போன்றவற்றை இல்லங்களை வளர்ப்பதை தோஷம் என்று நாங்கள் கூற மாட்டோம். ஏற்புடையதாக இராது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 556

கேள்வி: இறந்து போன முன்னோர்களின் படங்களை பூஜை அறையில் வைத்து பூஜிக்கலாமா?

முன்னோர்களை தெய்வத்திற்கு சமமாக எண்ணுவதை நாங்கள் தவறு என்று கூறவில்லை. ஆனால் இல்லத்தில் இறை இருக்கக்கூடிய பூஜை இடம் என்று வைத்துவிட்டால் அங்கே (இறந்தவர்களின் பிம்பத்தை) வைப்பதே நாங்கள் ஏற்பதில்லை. தனியாக வேறு இடத்தில் வைத்துக் கொள்ளலாம் அதுதான் ஏற்புடையது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 555

கேள்வி: சில நாடி ஜோதிடர்கள் வருபவர்களின் பிரச்சனைகளை கேள்விகளாக எழுதி குருவின் பாதத்தில் வைத்தால் அவரே ஓலைச்சுவடி மூலம் பிரசன்னமாகி தக்க பதில் தருவார் என்று கூறுகிறார்கள் அது குறித்து:

இது குறித்து யாங்கள் என்ன கூறுவது? உண்மை ஆங்காங்கே இருந்துகொண்டு இருக்கும் உண்மைக்கு மாறான நிகழ்வும் இருக்கத்தான் செய்யும். மனிதர்கள்தான் அதனை நடைமுறையில் உணர்ந்து கொள்ள வேண்டும். யாம் ஏதாவது கூறினால் அது தேவையில்லாத எதிர் விளைவுகளைத்தான் ஏற்படுத்தும். எனவே எப்போழுது ஒரு இடம் செல்கிறீகளோ அந்த இடம் மனதிற்கு பிடிக்கவில்லையா? இந்த சித்தர் அருட் குடிலாக இருந்தாலும் இதனையும் சேர்த்தே யாம் கூறுகிறோம். ஓரிரு முறை வருகிறீர்கள். வாழ்க்கையில் ஏதும் பெரிதாக மாற்றமில்லை அல்லது எதுவும் திருப்தியில்லை என்றால் தாராளமாக மனிதன் தன் கடமையை பார்த்துக் கொண்டு செல்லலாம். மீண்டும் மீண்டும் போராட வேண்டிய அவசியமில்லை என்றுதான் நாங்கள் கூறுகிறோம். இன்னவன் கேட்கின்ற வினா காலாகாலம் எம்முன்னை கேட்கப்படுவதுதான் மனிதன் தவறுகளை செய்து கொண்டுதான் இருப்பான். அந்த தவறுகளிலிருந்து அவனை வெளியே கொண்டுவர வேண்டும் என்றுதான் ஞானிகளும் மகான்களும் போராடுகிறார்கள். எமது நாமத்தை வைத்தும் தவறுகள் செய்து கொண்டுதான் இருப்பார்கள். மனிதர்கள்தான் இதுபோன்ற மனிதர்களிடமிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அவன் விதி. அதுபோன்ற இடத்திற்கு சென்று அவன் ஏமாற வேண்டுமென்று இருந்தால் அது அங்ஙனம்தான் நடக்கும்.