ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 554

கேள்வி: இராகுவும் கேதுவும் சேர்ந்திருக்கக் கூடிய திருப்பாம்புரத்தைப் பற்றி சொல்லுங்கள்:

இராகுவும் கேதுவும் எப்பொழுதுமே சேராதப்பா. இதுபோல் நிலையிலேயே பல்வேறு நாகதோஷங்கள் நீக்குகின்ற ஸ்தலங்களில் திருப்பாம்புரமும் ஒன்று. ஆனால் அங்கும் வழக்கம் போல் பல்வேறு இடைச்செருகல்கள் வந்துவிட்டன. எமக்கு ஏதோ சாபம் ஏற்பட்டதாகவும் அங்கு வந்து நீங்கியதாகவும் கூட வாசகங்கள் அங்கே பொறிக்கப்பட்டிருக்கிறது. இது எப்படியாயினும் இது போன்ற சாபநிவர்த்தி தலங்களிலே பரிபூரண உள்ளத்தோடு வேண்டிக் கொண்டால் கட்டாயம் நல்ல நன்மைகள் கிடைக்குமப்பா. அது மட்டுமல்ல பொதுவாக நாக தோஷம் அல்லது வேறு தோஷங்களுக்கும் பிரயாச்சித்தம் என்ற பெயரிலே அந்தந்த கிரகங்களுக்கும் கிரக அதி தேவதைகளுக்கும் ப்ரீதி செய்வதோடு அந்த கிரகம் தொடர்பான தர்மங்களையும் செய்ய வேண்டும். இராகு என்றால் விஷம் என்று வைத்துக் கொண்டால் விஷம் நீங்கும் மருந்துகளை வாங்கி ஏழைகளுக்கு தானம் செய்யலாம். ஒவ்வாமை நோய்க்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெறும் மனிதனுக்கு உதவியை செய்யலாம். குரு பிரீதி செய்ய வேண்டியவர்கள் குரு பிரீதி பூஜைகள் செய்வதோடு மனித நிலையிலே குருவாக இருக்கக் கூடியவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யலாம். இவைதான் உண்மையிலேயே குரு தோஷம் நீங்குகின்ற உபாயமாகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 553

கேள்வி: ஒரு உயிர் உடலை விட்டபின் அந்த ஆன்மாவிற்கு இறைவன் முக்தி அளிக்க முடிவு செய்துவிட்டால் அந்த ஆன்மா இறைவனிடம் ஐக்கியமாக எடுத்துக் கொள்ளும் கால அளவு என்ன?

காலம் நேரம் இடம் பொருள் எடை எல்லாம் இந்த உலகத்தை பொறுத்தமட்டில் தானப்பா. இந்த உலகத்தை தாண்டி பல்வேறு உலகம் சென்று விட்டால் இப்பொழுது இருக்கின்ற எந்த கணிதமும் வேலை செய்யாது. புரிவதற்காக இந்த இதை வேறுவிதமாக கூறினால் இங்கு ஒரு மனிதன் இப்பொழுது உள்ள 50 கிலோ எடை இருப்பதாக கொள்வோம். அவன் குரு கிரகத்திற்கு சென்று விட்டால் இதை போல் மூன்று மடங்கு ஆகிவிடுவான். இப்பொழுது அவனின் உண்மையான எடை என்ன என்பதை எவ்வாறு எடுத்துக் கொள்வது? எனவே காலம் இல்லை என்பது தான் இறைவனோடு இணைகின்ற அந்த தருணம் அப்பா

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 552

கேள்வி: குழந்தை பிறந்ததும் முதலில் தேன் கொடுப்பதும் பின்பு சில நாள் கழித்து குழந்தைக்கு சிகையை அகற்றுவது பற்றியும்:

இறைவன் அருளால் சிகையை அகற்றுவது என்பது ஆரோக்கியம் தொடர்பான விஷயம். சிகையை அகற்ற அகற்றத்தான் சிகை நன்றாக ஆரோக்கியமாக வளரும். இதை இறை நாமத்தோடு தொடர்பு கொண்டு விட்டால் மனிதன் பயபக்தியோடு செய்வான் என்பதற்காக முன்னோர்கள் வகுத்தது. மற்றபடி தூய்மையான தேனை தருவதும் ஆரோக்கியம் தொடர்பான விஷயம். நல்ல விதமான மழலை பேச்சு வரட்டும் நல்லவிதமான நோய் எதிர்ப்பு சக்தி வரட்டும் என்பதற்காகத்தான். மற்ற விஷயங்கள் எல்லாம் மனிதர்கள் நாகரீகம் கருதி ஏற்படுத்திக் கொண்ட சடங்குகள் அவ்வளவே.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 551

கேள்வி: அருணகிரிநாதர் பாடிய நாத விந்து கலாதீ நமோ நம என்ற வரிகளின் பொருள்:

இப்பொழுது உள்ள கிரக நிலையிலே இதன் பொருள் கூறுவது கடினம். முன்பே துறவு நங்கை கேட்டுவிட்டாள். பின்னர் உரைப்பதாக கூறியிருக்கிறோம். எனவே (இதற்கும்) பின்னர் உரைக்கிறோம். இருந்தாலும் இதன் பொருள் என்பது ஆண் சக்தி பெண் சக்தி சேர்ந்த அந்த சங்கமத்தை குறிப்பதாகும். இரண்டும் சேர்ந்த நிலையிலே உள்ள இறைவா என்பது சூட்சும பொருளாகும்.

விளாங்கனி பழுக்கும் முன்னர் எப்பொழுதுமே ஓடோடு ஒட்டிக்கொண்டு தான் இருக்கும். பலத்த பிறகுதான் ஓட்டை விட்டு ஒதுங்கி தனியாக உள்ளே சுழன்று ஆடும். எனவே பக்குவம் பக்குவம் பக்குவம் என்ற நிலை வந்த பிறகுதான் இந்த நினைவு சாத்தியமாகும். இல்லை என்றால் தானே தானாக தன்னைத்தான் வேறாக பார்க்க இயலாமல் போய்விடும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 550

கேள்வி: மது பானத்திற்கு அடிமையானவர்கள் அதிலிருந்து மீள வழி என்ன?:

இறைவன் அருளால் முன்னோர்கள் பெற்ற கடுமையான பிதுர் சாபங்கள். இதுதான் மதிமயக்கும் பானத்திற்கு அடிமையாவதின் சூட்சுமம் அப்பா. எனவே தொடர்ந்து பைரவர் வழிபாடு சரபேஸ்வரர் வழிபாடு நரசிம்மர் வழிபாடு அன்னை ப்ரத்யங்கிரா வழிபாடு செய்வது நல்ல பலனை தரும்.

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 85

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 549

கேள்வி: தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் அதிகமாக இருக்கிறது. அதனால் இறைவனின் தலையில் இருக்கும் கங்கையையும் தங்கள் கமண்டலத்தில் உள்ள காவிரியையும் இணைக்க ஒரு வழி சொல்லுங்கள்:

இணைத்து விடலாம் அப்பா கவலைப்படாதே. ஒன்று தெரியுமா? மூடர்களால் வரக்கூடிய துன்பங்கள் தான் இந்த உலகிலே அதிகம். தன்முனைப்பு ஆணவம் உள்ள மனிதர்கள் பெருந்தன்மை இல்லாத மனிதர்கள் இவர்கள் கையில் நாடு சிக்கினால் இந்த நாட்டிற்கு விமோசனம் என்பதே கிடையாது. அரியாசனங்கள் என்றுமே அறியா ஜனங்களால் தீர்மானிக்கப்படுவதால் இந்த அறியா சனங்கள் அரியாசனங்களை சரியாக தக்க வைத்துக்கொள்ள தெரிவதில்லை. அறியா சனங்களின் அந்த அறியாத்தனத்தை அரியாசனங்கள் நன்றாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. நல்லவர்களை இனம் காண முடியாத கொடுமைதான் இத்தனை கொடுமைக்கும் காரணம். ஏற்கனவே தான் எல்லா கொடுமைகளையும் ஒருவன் செய்கிறானே? மீண்டும் எதற்கு அவனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனென்றால் மனிதர்களை பொறுத்தவரை எல்லோருக்கும் தெரிந்தவனைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. அவன் மதிக்குள் அவன் விதி அப்படித்தான் அமர்ந்து வேலை செய்கிறது. வேறு விதமாக கூறினால் நன்றாக புரிந்து கொள்ளலாம்.

ஒரு மனிதன் பல நாட்களாக பல தர்ம காரியங்களை நல்ல தொண்டுகளை செய்கிறான். யாராவது அவனை கண்டு கொள்வார்களா? ஆனால் ஒரு நாள் அவன் சில பெண்களோடு பழகினால் தவறான ஒரு இடத்திற்கு சென்று வந்தால் மறுதினம் ஊரே எங்கும் அவனை பற்றி பேச்சாக இருக்கிறது. நல்லதே செய்யும் பொழுது கண்டுகொள்ளாத சமுதாயம் தீயதை செய்யும் பொழுது ஏன் கண்டு கொள்கிறது? இந்த குணம் மாறினால் தான் நாட்டில் சுபிட்சம் உண்டாகும். நல்லதை அங்கீகரிக்க கற்றுக் கொள்ளுங்கள். நல்லவர்களை ஆதரிக்க கற்றுக் கொள்ளுங்கள். முதலில் ஒவ்வொரு மனிதனும் நல்லவனாக வாழ கற்றுக் கொள்ளுங்கள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 548

கேள்வி: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கருவூரார் சாபம் பெற்றது பற்றி:

கருவூரான் என்றுமே கருவில் அவன் ஊரான் என்பதால் தான் அவனுக்கு அப்பெயர் இறைவனால் வழங்கப்பட்டது. மூலஸ்தானத்திலே இறையோடு இரண்டற கருவூர் பசுபதிசுவரர் ஆலயத்திலே அன்னவன் கலந்ததை யாம் என் நேத்திரம் கொண்டு பார்த்து களித்தோம். அது போல் நிலையிலே என்னதான் சித்தனாக இருந்தாலும் கூட சித்தர்கள் குறித்து பல்வேறு அனாச்சாரமான காரியங்கள் செய்ததாக கருத்துக்கள் மனிதர்களிடையே நிலவி வருகிறது. இதை தவிர்க்கவே முடியாது என்பது எமக்குத் தெரியும். இது மட்டுமல்ல அன்னவன் ஒருமுறை நெய்வேலி சென்று நெல்லையப்பரை பார்த்த பொழுது அங்குள்ள காளியிடம் ஏதோ கேட்டதாகவும் ஏதோ கிட்டியதாகவும் நெல்லையப்பர் ஏதோ மறுத்ததாகவும் அவரை சபித்ததாகவும் கூட கதை இருக்கிறது. இவை அத்தனையும் கட்டுக்கதை. இட்டுக்கதை. சித்தர்களை உயர்ந்த நிலையிலும் உயர்ந்த எண்ணத்திலும் தான் பார்க்க வேண்டும். சித்தர்கள் எது ஏதோ பானங்களை பருகுவதாகவோ வேறு விதமான பழக்க வழக்கங்களுக்கு ஆட்பட்டதாகவோ கூறப்படுவதெல்லாம் இடைச் செருகல்களில் ஒன்றுதான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அப்பேர்ப்பட்ட இடைச்செருகல்ளில் ஒன்றுதான் இன்னவன் வினவியது. ஆனாலும் கூட அந்த ஆலய நிர்மாணத்திற்கு வேண்டிய அத்தனை ஆலோசனைகளையும் கருவூரான் தான் தந்தான். அப்படி அந்த சிவலிங்கத்தை ஸ்தாபிக்க மூலிகை சாற்றால் சிலவற்றை செய்தான். பிரார்த்தனையின் பலத்தால் சிலவற்றை செய்து தந்தான். இதுதான் மெய்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 547

கேள்வி: பலரும் கூட்டாக சேர்ந்து பூஜை மற்றும் தர்மம் செய்யலாமா?

இறைவன் அருளால் பலரும் கூட்டாக சேர்ந்து பூஜை செய்வதையோ தர்மம் செய்வதையோ நாங்கள் ஒருபோதும் தடை கூறவில்லை. ஆனால் மனிதர்களுக்குள் தேவையில்லாத கசப்புணர்வு ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை. மனம் திறந்து மனதிலே எந்த வஞ்சனையும் சூழ்ச்சியும் சராசரி எண்ணங்களும் இல்லாமல் பெருந்தன்மையோடு யார் வேண்டுமானாலும் ஒன்று சேர்ந்து பூஜைகள் செய்யலாம். எமது பரிபூரண நல்லாசிகள் உண்டு.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 546

கேள்வி: திருவண்ணாமலை இடுக்குப் பிள்ளையார் இருக்கும் இடுக்கின் வழியாக வந்தால் முக்தி கிடைக்குமா?

இறைவன் அருளால் இதே போல காஞ்சியிலே கைலாசநாதர் ஆலயம் இருக்கிறது. அங்கே தவழ்ந்து வந்தால் ஒரு பிறவி போய்விடும் என்ற வழக்கு இருக்கிறது. இன்னொரு ஆலயத்திலேயே தலவிருட்சம் இருக்கிறது. அதனை சுற்றி வந்தால் பல பிறவிகள் போய்விடுகிறது என்று கூறுகிறார்கள். இன்னொரு ஆலயத்திற்கு ஒருமுறை சென்று இறை நாமத்தை ஒரு முறை ஜெபித்தாலே கோடி முறை ஜெபித்த பலன் இருக்கிறது என்று கூறுகிறார்கள். இவையெல்லாம் இறைவனின் பெருமையை பறைசாற்றுவதற்காக மனிதர்களால் கூறப்பட்டது. பஞ்சமா பாதகங்கள் அனைத்தையும் செய்துவிட்டு நீ கூறிய இடுக்கின் வழியாக ஒருவன் வெளியே வந்தால் அவனுக்கு என்ன முக்தி கிடைக்குமா? மோட்சம் கிடைக்குமா? முதலில் ஒருவனின் நடைமுறை வாழ்க்கையில் சாத்வீகமும் சத்தியமும் தர்மமும் பக்தியும் தான் இருக்க வேண்டும். மற்ற புற சடங்குகள் எல்லாம் இரண்டாம் பட்சம் தான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 545

கேள்வி: விராலிமலைக்கு சென்றால் வாய்ப்புள்ளவர்களுக்கு அதிகாலையில் நாரதர் தரிசனம் தருவார் அதுபற்றி:

இறைவன் அருளாலே மோட்சம் முக்தி சாயுச்சியம் சாரூபம் சாமீபம் சாலோகம் என்கிற ஆன்ம உயர்வு நிலைகளுக்கெல்லாம் எத்தனையோ தெய்வீக சூட்சமங்கள் இருக்கிறது. இவளொத்து பலர் கேட்பது என்னவென்றால் மிகப்பெரிய ஞானிகளெல்லாம் ஒரு பிறவியிலே மகானாக ஞானியாக பிறந்து இறை தரிசனத்தை கண்டு இறையோடு இரண்டற கலந்த பிறகு மீண்டும் ஏன் பூமியில் பிறக்க வேண்டும்? என்று. இந்த இடத்தில் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் மருத்துவமனைக்கு நோயாளி செல்கின்ற விதம் வேறு. மருத்துவர்கள் செல்கின்ற விதம் வேறு. மருத்துவமனையில் பணியாற்றுகின்ற ஊழியர்கள் செல்கின்ற விதம் வேறு. நோயாளி நோய் குணமாவதற்காக செல்கின்றான். மருத்துவன் அந்த நோயாளியை குணப்படுத்தும் பணிக்காக செல்கிறான். இங்கே சராசரி மனிதர்கள் நோயாளியாக வருகிறார்கள். மகான்கள் பிறப்பது மருத்துவன் போல் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.