ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 534

கேள்வி: எந்த மந்திரத்தை கூறி வழிபட்டால் சகல பாவங்களும் தோஷங்களும் நீங்கி வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும்?

இறைவன் அருளால் எந்த மந்திரத்தை கூறினாலும் மனிதநேயம் இல்லாமல் மனித பண்பாடு இல்லாமல் நல்ல எண்ணங்கள் இல்லாமல் சத்திய வாழ்க்கை இல்லாமல் தர்மம் இல்லாமல் மந்திரங்களை கூறினால் அதனால் பலனேதும் இல்லை. பஞ்சாட்சரத்தை கூறு என்று நாங்கள் கூறுவதாக கொள்வோம். ஏன்? அட்டாட்சரம் மந்திரத்தை கூறக்கூடாதா? என்ற ஒருவன் கேட்பான். அட்டாட்சரத்தை கூறு என்றால் ஏன் பிரம்மதேவர் மந்திரத்தை கூறக்கூடாதா? என்று கேட்கப்பான். சரி பிரம்மதேவர் மந்திரத்தை கூறு என்றால் என் சடாட்சரத்தை கூறக்கூடாதா? என்பான். தெய்வத்தை எந்த மந்திரத்தை கொண்டு வேண்டுமானாலும் வணங்கலாம் தவறில்லை. அதோடு நாங்கள் கூறுகின்ற தர்ம வழியையும் கடைபிடித்தால் கட்டாயம் நூற்றுக்கு நூறு விழுக்காடு இறைவன் அருள் உண்டு. பாவங்களில் இருந்து விடுபடலாம். முன்பே கூறியிருக்கிறோம் ஏதாவது இறை நாமத்தை முன் அதிகாலையில் வடகிழக்கு திசை நோக்கி பத்மாசனமிட்டு அமர்ந்து குறைந்தபட்சம் இரண்டரை நாழிகை அன்றாடம் உருவேற்றி வந்தால் கட்டாயம் நீ கூறிய நன்மை அனைவருக்கும் சித்திக்கும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 533

கேள்வி: சனி லக்னாதிபதியாக இருந்து அந்த சனிபகவான் ஏழாம் பாவத்திலிருந்து எழுக்குரிய கிரகம் ஆறாம் பாவத்தில் வலிமை பெற்று புதனோடும் உச்சம் பெற்று இருக்கிற குருவோடும் இணைந்திருக்கும் பொழுது அந்தப் பெண்ணுக்கு யோகம் வருமா? அல்லது அந்த பெண்ணை மணந்த கணவனுக்கு யோகம் வருமா? அல்லது இருவருக்குமே யோகம் வருமா?

இறைவன் அருளால் உச்சமே பெற்றிருந்தாலும் கூட சில நன்மைகளை தந்தாலும் கூட ஏழு ஆறோடு கூடி விடுகிறது. லக்னத்திற்குரிய பாவம் அங்கே கெட்டுப்போய் விடுவதால் கட்டாயம் இருவருக்கும் கெடு பலன்தான் அதிகமாக இருக்கும். சுக பலன் குறைவாகத்தான் இருக்கும். ஆனால் சற்றே விழிப்புணர்வு பெற்று இறை வழியில் வந்துவிட்டால் கெடு பலனை குறைத்து நல்ல பலனை அதிகரித்துக் கொள்ளலாம். இதை வேறு வகையில் கூறினால் ஆன்ம வழியை நோக்கி வாழ்க்கையை திருப்பி கொண்டால் வாழ்க்கை ஒரளவு நன்றாக இருக்கும். லோகாய சுகத்திற்காக வெற்றிக்காக பாடுபட்டால் வேதனைகள் தான் மிஞ்சும். உடல் நலிவு தான் ஏற்படும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 532

கேள்வி: பிரார்த்தனை பற்றி:

இறைவன் அருளால் ஒரு மனிதன் இதையெல்லாம் பெறலாம் இதையெல்லாம் பெறக்கூடாது என்று அவன் முந்தைய பிறவிகளின் பாவ புண்ணிய கணக்கிற்கு ஏற்பத்தான் அடுத்த பிறவி இறைவனால் வகுக்கப்படுகிறது. அப்படி தீர்மானிக்கப்பட்ட பிறகு அது வேண்டும் என்று வினவுவது மனித ஆசையாக இருக்கலாம். தரக்கூடாது என்பது விதியாக இருக்கும் பட்சத்தில் அது சற்று கடினம்தான். இருந்தாலும் ஆசைப்பட்டதை பிரார்த்தனை மூலம் நல்ல தருமத்தின் மூலம் போராடி பெற்றுக் கொள்ளலாம். ஆனால் நாங்கள் கூறுவது என்னவென்றால் இவையெல்லாம் எனக்கு வேண்டுமோ இறைவா அதை நீயே தந்துவிடு. எது கிடைத்தால் எனக்கு நலமோ அதை நீ எனக்கு தந்துவிடு. எதை இழந்தால் எனக்கு நலமோ அது என்னை விட்டுப் போகட்டும் என்று இறைவனிடம் பொதுவாக ஒரு பிரார்த்தனை செய்து விடுவதே சிறப்பு. வேண்டும் வேண்டும் வேண்டும் என்று வேண்டுவதை விட வேண்டாம் வேண்டாம் வேண்டாம் என்ற பிரார்த்தனையே உண்மையான பிரார்த்தனையாகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 531

கேள்வி: தமிழ்நாட்டில் அஷ்ட பைரவர் கோவில் சீர்காழியைத் தவிர வேறு எங்கு உள்ளது? என்று சொல்லுங்கள்.

அப்படியானால் ஏக பைரவரை வணங்கினால் இந்த பலனும் வராது என்ற பொருளாகிவிடும். தாராளமாக அஷ்டபைரவரையும் வணங்கலாம். சதுர் கால பைரவரையும் வணங்கலாம். பஞ்ச பைரவரையும் வணங்கலாம். ஏக பைரவரையும் வணங்கலாம். பைரவரை வணங்காத பலரும் நன்றாகத் தானே இருக்கிறார்கள். அஷ்டபைரவர் வழிபாடு சதுர்கால பைரவர் வழிபாடு என்பதெல்லாம் குறிப்புக்காக ஏற்படுத்தப்பட்ட ஒன்று. பைரவரை எப்படி எந்த நாமத்தின் வணங்கினாலும் பைரவரின் அவதார நோக்கமே பாவ கர்மாவை குறைப்பதுதான். குறிப்பாக அறிந்தும் தவிர்க்க முடியாமல் சில பாவங்களை செய்ய நேரிடுகிறது என்று வருந்தக் கூடியவர்கள் ஒரு குடும்பத்திலே அகால மரணங்கள் அடிக்கடி நேரிடுகிறது என்று வருந்தக்கூடிய மனிதர்கள் கட்டாயம் அன்றாடம் குறைந்தபட்சம் ஐந்து ஐந்து முக நெய் தீபங்களாக பைரவர் முன்னால் ஏற்றி மானசீகமாக பைரவரின் அஷ்டோத்திரத்தையோ சகஸ்ர நாமத்தையோ பைரவர் அஷ்டகத்தையோ அல்லது அவன் அறிந்த மந்திரத்தையோ துதித்து வந்தால் கட்டாயம் இந்த தோஷம் நீங்கும். இது பக்தி வழி.

அதற்காக பைரவரை வணங்கி விட்டு வெளியே வந்தவுடன் ஒரு பைரவரின் வாகனம் (நாய்) வால் ஆட்டிக் கொண்டே வந்தால் அந்த பக்கம் போ வராதே என்று அதனை விரட்டினால் ஏற்றிய தீபம் வேண்டிய பிரார்த்தனை அத்தனையும் வீணாகிவிடும். எனவே உயிரினங்களையும் போற்ற வேண்டும். பைரவரையும் வணங்க வேண்டும். பல இடங்களிலேயே பைரவ வாகனத்தை வளர்த்து விட்டு தொல்லையாக இருக்கிறது என்று எங்காவது கொண்டு போய் விட்டு விடுகிறார்கள். இந்த பாவத்திற்கு பிரயாசித்தம் இல்லை என்பதை மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தொல்லை என்று தெரியும் அல்லவா? எதற்கு அதனை வளர்க்க வேண்டும்? எதற்கு அதனோடு போராட வேண்டும்? அதை போல் ஒரு மனிதனுக்கு பூர்வீக தோஷங்கள் கர்மங்கள் முன்னோர்கள் செய்த கடுமையான பாவங்கள் சாபங்கள் இருக்கிறதென்றால் கட்டாயம் அவன் வாழ்க்கையிலே பைரவர் வழிபாட்டை எல்லா வகையிலும் சிறப்பாக செய்ய வேண்டும். ராகு காலத்திலோ அல்லது அஷ்டமியிலோ தான் செய்ய வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. அப்படி செய்யக்கூடிய வாய்ப்பு உள்ளவர்கள் செய்யட்டும். வாய்ப்பு இல்லாதவர்கள் எப்பொழுதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ தாராளமாக செய்யட்டும். நெய் தீபம் ஏற்ற முடியவில்லை என்றால் தூய்மையான எள் எண்ணெய் தீபமும் ஏற்றலாம் குற்றம் ஏதுமில்லை. நல்ல மிளகினை அதிலே போட்டு ஏற்றலாமா? என்றால் தாராளமாக ஏற்றட்டும் தவறொன்றும் இல்லை. தீபம் மட்டும் ஏற்றினால் போதுமா அபிஷேகம் செய்ய வேண்டாமா? என்றால் தாராளமாக அபிஷேகம் செய்யலாம். அரளி பூதான் போட்டு அர்ச்சிக்க வேண்டும் என்பது இல்லை. எல்லா வகையான நறுமண மலர்களையும் சாற்றலாம்.

எனவே பைரவர் வழிபாடு என்பது ஒவ்வொரு குடும்பத்தின் பிதர் சாபத்தை, முன்னோர்கள் பெற்ற சாபத்தை, பாவத்தை, முன்னோர்களுக்கு இவர்கள் செய்ய தவறிய கடமையினால் ஏற்படக்கூடிய பாவத்தை, சாபத்தை நீக்கக்கூடிய மிக முக்கியமான வழிபாடு. அந்தந்த சிறப்பான ஸ்தலங்களுக்கு சென்று தான் இதை செய்ய வேண்டும் என்று இல்லை. அவரவர்களின் இல்லத்தில் அருகில் உள்ள ஆலயங்களுக்கு சென்று செய்யலாம். அந்த வசதியும் இல்லாதவர்கள் சிவபெருமானின் அம்சம் தான் பைரவர் என்பதால் பைரவரின் ரூபம் கிடைக்காதவர்கள் சிவபெருமானின் ரூபத்தை வைத்துக்கூட பைரவ வழிபாட்டை இல்லத்தில் உள்ள சுத்தி உடல் சுத்தியோடு தாராளமாக செய்யலாம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 530

கேள்வி: பாவ கர்மாக்களை குறைக்க உடலோடு இருக்கும் பொழுது மட்டும்தான் பிரார்த்தனை செய்ய முடியுமா? அல்லது உடலை உகுத்த பிறகும் அந்த ஆன்மா பிரார்த்தனை செய்து கர்ம வினைகளை குறைத்துக் கொள்ள முடியுமா?

பூர்வ புண்ணியம் அதிகமாக இருந்தால் விலங்கு நிலையில் இருந்தால் கூட இறைவனை வணங்கக்கூடிய வாய்ப்பு உண்டு. இதற்கு திருவானைக்காவல் திருவெறும்பூர் உதாரணம். எனவே அப்படி பூர்வ புண்ணியம் அதிகமாக பெற்றவர்கள் தேகத்தை இழந்த பிறகும் சூட்சும சாரீரத்தில் அலைந்து கொண்டே கூட இறை நாமத்தை ஜெபிக்கக் கூடிய வாய்ப்பு உண்டு. ஆனால் லகரத்தில் சிலருக்கு தான் அந்த வாய்ப்பு கிட்டும். ஏனையோர்க்கு எல்லாம் குழப்பத்திலும் பயத்திலும் தான் இறந்து விட்டோம் என்று கூட தெரியாத நிலையில் எப்பொழுதும் அலைந்து கொண்டிருப்பார்கள். இது போல் நிலையிலேயே பூர்வ புண்ணியம் இருந்தால்தான் உடலோடு இருந்தாலும் வாழ இயலும். உடலை விட்டாலும் நன்றாக வாழ இயலும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 529

கேள்வி: மோட்ச தீப வழிபாட்டில் கலந்து கொண்டால் பாவ கர்மங்களின் அளவு குறைக்கப்படுகின்றதா?

இறைவனின் அருளால் ஒரு ஏழை சிறு அளவு தனத்தை கூட செலவு செய்ய முடியாத நிலையில் இருக்கிறான். அன்றாடம் வாழ்க்கையில் போராட்டத்தையே காண்கிறான். வறுமையின் உச்சத்தில் இருக்கிறான். அவனைப் போன்ற மனிதர்கள் ஆலயம் சென்று வெறும் உடல் ரீதியான தொண்டை செய்துவிட்டு எதை வேண்டினாலும் ஒருவேளை இறைவன் அருளால் கிடைக்கலாம். ஆனால் வசதி வாய்ப்பு உள்ளவர்கள் மோட்ச தீபத்திலோ வேறு வழிபாடுகளிலோ கலந்து கொண்டு வணங்கி விட்டு வந்தால் மட்டும் பலன் கிட்டாது. அந்த தொண்டிற்கு உண்டான செலவினங்களை தாராளமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். என்னிடம் இருக்கிறது நான் மிகவும் போராடி சேர்த்து வைத்திருக்கிறேன். நான் ஏன் தர வேண்டும்? என் அந்திம (இறுதி) காலத்திற்கு நான் யாரிடம் கையேந்துவது? என்ற சித்தாந்தங்களும் கொள்கைகளும் உள்ளவர்கள் இதுபோன்ற இடங்களுக்கு சென்று மிகவும் சிக்கனமாக சாமர்த்தியமாக நடந்து கொண்டால் ஒரு பலனும் அவர்களுக்கு கிட்டாது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 528

கேள்வி: தீபத்தை புதிதாக தான் ஏற்ற வேண்டும். பழைய விளக்கில் எண்ணையை ஊற்றி தீபத்தை ஏற்றக்கூடாது என்று சொல்லப்படுகிறது அது பற்றி விளக்குங்கள்:

இறைவன் அருளால் பரிகாரம் கோரிக்கை பாவங்கள் குறைய வேண்டும் என்று ஒரு நேர்த்திக்கடனாக செய்யப்படும் பூஜைகளிலே புதிய விளக்குகளை ஏற்றுவதும் புதியதாக அனைத்தையும் பயன்படுத்துவதும் சிறப்பு. ஆனால் சாதாரணமாக ஒரு ஆலயத்துக்கு செல்கிறான் ஒரு மனிதன். அங்கு ஒரு தீபம் அணையும் நிலையில் இருக்கிறது. அதனை தூண்டிவிட்டு சுடர்விட செய்யலாம். அதில் ஒன்றும் தோஷம் இல்லை. எதையும் எதிர்பார்க்காமல் தொண்டாக செய்யும் பொழுது ஏற்றிய தீபத்தில் ஏற்றுவது தவறில்லை. ஆனால் பிராயச்சித்தம் என்று வரும்பொழுது ஏற்றிய தீபத்தில் ஏற்றக்கூடாது. சாப்பிட்ட இலையில் சாப்பிடுவாய் என்றால் ஏற்றிய தீபத்தில் ஏற்றலாம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 527

கேள்வி: சித்தர்கள் கூறிய பரிகாரம் பிரார்த்தனை சிறந்ததா? நாங்கள் ஆலயத்திற்கு சென்று செய்யும் பரிகாரம் பிரார்த்தனை சிறந்ததா? இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை கூறுங்கள் ஐயனே:

இறைவன் அருளால் உண்மையான பிரார்த்தனைகளை நாங்கள் கூறி செய்தாலும் மனிதனாக செய்தாலும் இரண்டிற்கும் நல்ல பலன் உண்டு. இது ஒரு நிலை அடுத்ததாக மகான்களும் ஞானிகளும் வழிகாட்டி அதன் மூலம் பரிகாரங்களை செய்யும் பொழுது மனிதனுக்கு சற்று கூடுதல் பலமும் வலிமையும் கிடைப்பது என்பது உண்மையாகும். இதை புரிந்து கொள்ள வேண்டுமானால் ஆளுகின்ற அரசனை நேரடியாக சென்று பார்த்து உதவி கேட்பது ஒருவகை. அந்த அரசனுக்கு நெருங்கிய உறவின் மூலம் செல்வது இன்னொரு வகை. இரண்டில் எது சிறப்பு? என்பதை புரிந்து கொண்டால் இந்த வினாவிற்கு விடை புரியும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 526

கேள்வி: ஜாதகத்தில் உள்ள எல்லா தோஷங்களும் சுலபமாக தீர எளிமையான பரிகாரங்கள் இருக்கிறதா?

பரிபூரண சரணாகதியோடு இறைவனின் வணங்குவது கூடுமானவரை பிறருக்கு துன்பம் செய்யாமல் வாழ்வது நேர்மையாக உழைத்து ஈட்டிய பொருளை தனக்கு மட்டும் வைத்துக் கொள்ளாமல் கூடுமானவரை தக்க ஏழைகளுக்கு பயன்படுத்துமாறு செய்வது அன்றாடம் ஏதாவது ஒரு ஆலயம் சென்று முடிந்த தொண்டை செய்வது இது போதும் அப்பா.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 525

கேள்வி: லக்னம் என்ற உயிருக்கு ஆறாம் இடத்து அதிபதியாகிய சூரியன் ஒரே சாரத்தில் ஒரே மாதத்தில் இருக்கும் பொழுது ஜாதகனுக்கு தோஷமா? பாவமா?

இறைவன் அருளால் ஜாதக நிலை என்பது மேலெழுந்தவாரியாகக் கூறினால் எல்லோராலும் புரிந்து கொள்ள முடியாத நிலையாகும். இருந்தாலும் சுருக்கமாக கூறுகிறோம் புரிந்து கொள்ள முயற்சி செய். உதாரணமாக பஞ்சம ஸ்தானத்திலே அரவு (நாகம்-ராகு) இருந்தால் பொதுவாக புத்திர தோஷம் என்று கூறி விடுவார்கள். ஆனால் எத்தனையோ மனிதர்களுக்கு பஞ்சம ஸ்தானத்திலே அரவு இருந்து எந்த விதமான பரிகாரமும் இல்லாமல் குழந்தைகள் பிறந்திருக்கின்றன. ஏனென்றால் அப்படி ஒரு பாக்கியம் புண்ணியம் வேறு வகையில் அங்கு இருக்கலாம். அல்லது புத்திரன் பிறந்து அவன் மூலம் துன்பப்பட வேண்டும் என்ற ஒரு தோஷம் அங்கு இருக்கலாம். எனவே தோஷம் பாவம் என்பது ஒன்று கிட்டாமல் போவது மட்டுமல்ல. கிட்டியும் அவனுக்கு துன்பத்தை தந்தாலும் அது தோஷத்தின் விளைவுதான்.

இன்னவன் வினவிய லக்ன பாவத்திலிருந்து ஆறாம் இடத்திற்கு உரிய கிரகம் அல்லது அந்த சாராம்சம் எதனோடு தொடர்பு கொண்டாலும் அதுபோல் அது தோஷத்தைதான் பெரும்பாலும் ஏற்படுத்தும். லோகாய ரீதியாக அது பாதிப்பை ஏற்படுத்தினாலும் கூட அவன் சற்றியே விழிப்புணர்வு பெற்று ஆன்ம வழியிலே வந்துவிட்டால் அந்த பாதிப்பை குறைத்து விடலாம். என்னவன் குறிப்பாக சூரியனை மையப்படுத்தி கேட்டதால் இது போல் இந்த தோஷத்திற்கு இது பாவமா? தோஷமா? என்று கேட்டால் ஆம் என்று தான் நாங்கள் கூறுவோம். சரியான பிரயாத்தம் சில ஆலயங்களிலே குறிப்பிட்ட மாதத்தில் குறிப்பிட்ட தினத்திலே சூரியன் மூலஸ்தானத்தில் உள்ள மூலவரை வணங்கக் கூடிய ஒரு நிலையில் அந்த ஆலயம் எழுப்பப்பட்டிருக்கும். அதுபோன்ற ஆலயத்திற்கு சென்று வழிபடுவதும் சூரியனுக்கு உகந்த நட்சத்திரத்திலே சூரியனுக்கு உகந்த தலங்கள் சென்று வழிபாடு செய்வதும் அதோடு ஆதித்ய ஹ்ருதயத்தை ஓதுவதும் சூரியனுக்கு உண்டான ப்ரீதிகளை எந்தெந்த ஸ்லங்களில் சிறப்பாக செய்ய முடியுமோ அதனை செய்வதும் இதனையும் தாண்டி சூரியனுக்கு காரகத்துவம் உடைய தந்தை அரசு இது தொடர்பான விஷயங்களில் ஒருவனால் என்னென்ன வகையான தொண்டுகளை செய்ய முடியுமோ அதனை செய்வதும் பிராயச் சித்தமாகும்.