ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 454

கேள்வி: செய்வினை பில்லி சூனியம் சாத்தியமானதா?

இறைவன் அருளால் எப்படி மனிதர்கள் விஞ்ஞானத்தை வைத்து தவறான செயல்களை செய்ய கற்றுக் கொள்கிறார்களோ அதைப்போல மந்திரங்களை வைத்துக் கொண்டு கெடுதி செய்யவும் மனிதன் கற்றுக் கொண்டிருக்கிறான். இவையனைத்தும் சாத்தியமே. ஆனால் இவைகளில் உள்ள நுட்பத்தை மனிதன் புரிந்து கொள்ள வேண்டும். எல்லாத் துன்பங்களுக்கும் காரணம் செய்வினைதான் என்று அச்சப்பட தேவையில்லை. இன்னொன்று செய்வினையால் ஒரு மனிதன் பாதிக்கப்பட வேண்டுமென்றால் அதுவும் ஜாதகப்படிதான் நடக்கும். அடுத்ததாக இதைப்பற்றி அறிந்த மனிதர்கள் இந்த ஆற்றல் பெற்ற மனிதர்கள் மிகக் குறைவு. மற்றபடி தெரிந்ததாகக் கூறி தனம் பறிக்கும் மனிதர்களே அதிகம். எனவே இது குறித்து மனிதன் குழப்பம் அடைய வேண்டாம். ஆலயம் சென்று வழிபாடு செய்வதும் தர்மங்களை செய்வதும் சித்தர்களிடம் வந்தால் மீண்டும் மீண்டும் தர்மத்தைதானே கூறுகிறார்கள் என்று மனிதன் சலிப்படையலாம். மனிதர்கள் எத்தனைதான் சலிப்படைந்தாலும் விரக்தியடைந்தாலும் யாங்கள் மீண்டும் மீண்டும் எல்லோருக்கும் நல்லது செய்யவேண்டும் எல்லா உயிர்களுக்கும் நல்லதும் வேண்டிய உதவிகளும் செய்ய வேண்டும் தர்மத்தை செய்ய வேண்டும் புண்ணியத்தை சேர்க்க வேண்டும் என்றுதான் கூறுவோம். இப்படி செய்து கொண்டே இருந்தால் எந்த செய்வினையும் யாரையும் பாதிக்காது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 453

கேள்வி: எலுமிச்சையை வேலின் மீது குத்துவது நல்லதா?

வேலை எடுத்து மனிதன் மீது குத்தலாம் அது ஏற்றுக் கொள்ளக் கூடியது. இறைவனின் அருளாலே கூறவருவது என்னவென்றால் அரசக்கனி எனப்படும் எலுமிச்சம் பழத்தின் ஆற்றல் எத்தனையோ இருக்கிறது. இறைவனை பூஜை செய்யும் பொழுது கனி வகைகளில் புஷ்பங்களில் பதார்த்தங்களில் அரசக்கனி அவசியம் வைக்கப்பட வேண்டும். இறைவனுக்கு பரிபூரண பூஜையை செய்யும் பொழுது ஏராளமான அரசக்கனியை இறைவன் திருவடிகளில் வைத்து ஆரமாக கோர்த்து இறைவனுக்கு அணிவிப்பதும் நல்லதொரு பலனைத் தரும். அதோடு மட்டுமல்லாமல் இல்லத்தில் தோஷம் வாஸ்து குறைபாடு அதர்வண குற்றம் செய்வினை தோஷம் பிரச்சினை சண்டை மனஸ்தாபம் உடல் பிணி என்றெல்லாம் மனிதன் வருந்துகிறானே? இவர்கள் அதிக அளவு அரசக்கனியால் இறைவனை ஆராதனை செய்து எத்தனை கனிகள் கொண்டு இறைவனை வணங்குகிறானோ அதில் பாதி கனிகளை இறைவனின் திருவடியில் வைத்துவிட்டு மீதி கனிகளை இல்லத்தில் வைத்து தூப தீபங்கள் காட்டி வழிபாடு செய்தால் மேற்கூறிய தோஷங்கள் குறையும். அந்தளவில் அரசக்கனியை ஏற்றுக்கொள்ளலாம். எங்கு சென்றாலும் பூஜை செய்து அருகம்புல் எடுத்து செல்வது போல அரசக்கனியையும் உடன் எடுத்து செல்வது ஆக்கபூர்வமான ஒரு பாதுகாப்பு வளையத்தை தரும். எனவே அதிக இறையாற்றலை பெற்றுத் தரக்கூடிய கனிகளில் அரசக்கனியும் ஒன்று.

அரசக்கனி வைத்திருந்தால் நல்ல பலன்கள் உடன் நடக்க வாய்ப்பிருக்கிறது. அரசக்கனியை வலது உள்ளங்கையில் வைத்து மூடிக்கொண்டு அதிக அளவு மந்திர ஜபத்தை உருவேற்றினால் அந்த அரசக்கனியினால் மனிதனுக்கு நற்பலன்கள் ஏற்படும். அதைப்போல இறைவனின் பிரசாதமான அரசக்கனியை காய்ந்த பிறகு தூக்கி எறிவதா? அல்லது அதனை உட்கொள்ளலாமா? என்றால் கனிச்சாறாக தாராளமாக உட்கொள்ளலாம். தவறொன்றுமில்லை. சில அரசக்கனிகளை மட்டும் பூஜைக்கு வைத்துக் கொள்ளலாம். எனவே இந்த அடிப்படையில் அரசக்கனியை ஆதரிக்கிறோம் வேறு அடிப்படையில் அல்ல.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 452

கேள்வி: வீட்டில் குழலூதும் கிருஷ்ணன் ராதை பழனியாண்டி படங்களை வைத்து வணங்கலாமா?

யார் யாரோ படங்களை வைத்து வணங்குகிறார்களே அப்பனே அவற்றையெல்லாம் வணங்கும்போது வராத ஐயம் இவர்களை வைத்து வணங்கினால் ஏதோ அனாச்சாரம் வந்துவிடுமோ? என்று எண்ணுகிறார்களே? முதலில் இந்த பழக்கம் எதனால் ஏற்பட்டது தெரியுமா? மனிதர்களின் அச்சம் காரணமாக. ஆஞ்சனேயரை ஐயப்பனை வீட்டில் வைத்து வணங்காதே என்றெல்லாம் கூறுவார்கள். ஆனால் இதில் வேறு உண்மை ஒன்று இருக்கிறது. கர்ப்பமான பெண்களின் மனோநிலை பதட்டமாகவும் மென்மையாகவும் இருக்கும். யாங்கள் கூறுவது உண்மையான பெண்களுக்கு. அந்த கர்ப்பமான பெண்களின் குழந்தையின் ஆரோக்யம் முக்கியம். வீட்டை சுற்றி சுகமான நறுமண சூழலும் சாத்வீக வாசகங்களும் சாத்வீக தெய்வ காட்சிகளும் இருந்தால் அந்தப் பெண்ணின் மனதில் பதிந்து குழந்தைக்கு ஆக்கபூர்வமான சிந்தனையைத் தரும். அதிபயங்கரமான காளி போன்ற ரூபங்களை வைத்தால் தேவையற்ற பயமும் அந்த பயத்தினால் சொப்பனமும் ஏற்படும். அது அந்தக் குழந்தையை பாதிக்கும். அந்த அடிப்படையில் பயங்கரமான தெய்வ ரூபங்களை வைக்காமல் இருந்தால் நல்லதே தவிர மற்றபடி இறைவனை எந்த வடிவத்தில் வணங்க எந்த மனிதனுக்கு பிடித்திருக்கிறதோ அந்த வடிவத்தை வீட்டில் வைத்து ஆத்மார்த்தமாக வணங்கலாம் தவறேதுமில்லை.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 451

கேள்வி: விநாயகருக்கு ஜாதிபத்திரி வைத்து வழிபட்டால் என்ன பலன்?

விநாயகருக்கும் ஜாதியா? இறைவனுக்கு உள்ளன்போடு எதை வைத்தாலும் அதை அப்படியே ஏற்றுக் கொள்வார் என்பதே உண்மை. இதைதான் அதைதான் வைக்கவேண்டும் என்றெல்லாம் இறைவன் எந்த எதிர்பார்ப்பும் வைத்துக் கொள்வதில்லை. மனிதர்கள் எதை வைக்கிறார்கள்? என்பதைவிட எப்படி வைக்கிறார்கள்? என்பதைதான் இறைவன் பார்க்கிறார். எனவே எதை வைத்தாலும் உள்ளன்போடு வைப்பதே சிறப்பு. அருகம்புல் மருத்துவ குணம் கொண்டது. அருகம்புல்லை அருந்து உடலுக்கு நல்லது என்றால் கேட்கக் கூடிய மனோபாவம் இன்று ஓரளவு இருந்தாலும் எக்காலத்திலும் அப்படி எதுவும் இல்லை. அருகம்புல்லை உண்டால் நல்லது என்று கூறுவதைவிட அதை இறைவனின் பிரசாதமாக கொடுப்பது அக்காலத்தில் சிறப்பான முறையாக கையாளப்பட்டு வந்தது. நன்றாக கவனிக்க வேண்டும். இப்பொழுது அருகம்புல்லை மாலையாக இறைவனுக்கு சாற்றி கையில் தந்துவிடுகிறார்கள். அதுவும் பிரசாதம்தான். ஆனால் ஒரு காலத்திலே அருகம்புல்லை மாலையாக சாற்றுவதோடு தூய்மையான அருகம்புல்லை பணிவன்போடு மிகவும் பணிந்து போற்றி இறைவனின் பூஜைக்காகவும் எங்களின் நலத்திற்காகவும் உன்னை பறிக்கிறேன். மன்னித்துக்கொள் என்றெல்லாம் வேண்டி மூலிகை சாபத்தை நீக்கி அந்த மூலிகையை பறித்து வந்து அருகம்புல்லை கஷாயமாக்கி அதையும் விநாயகர் முன் வைத்து படைத்து அதை பிரசாதமாக தரும் வழக்கம் இருந்தது. இப்பொழுது அது இல்லை என்பதுதான் உண்மை.

துளசியை இறைவனுக்கு நிவேதனம் செய்வதும் மருத்துவ குணத்தின் காரணமாகத்தான். எனவே எப்படியாவது மனிதன் நலம் பெறவேண்டும். அவன் உடலும் உள்ளமும் நன்றாக இருக்கவேண்டும் என்றுதான் விதவிதமான வழிபாடுகளும் பிரசாதம் என்ற பெயரில் விதவிதமான பொருள்களும் வைக்கப்பட்டன. அதை அன்போடு வைத்தால் கட்டாயம் இறைவன் ஏற்றுக்கொண்டு சாதம் பிரசாதமாக மாறும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 450

கேள்வி: கந்தர் அனுபூதி வேல் மாறலின் சிறப்பு மற்றும் அதை பாராயணம் செய்யும் முறை:

இறைவனின் கருணையாலே நல்விதமாய் இன்னவன் கேட்ட இறை தொடர்பான ஸ்லோகங்கள் பதிகங்கள் மட்டுமல்லாமல் எந்த பதிகமாகவோ தேவாரமோ திருவாசகமோ ஆழ்வார்களின் பாடல்களோ மனம் ஒன்றி கண்ணில் நீர் மல்க நல்விதமாய் உள்ளம் உருகி வேறு சிந்தனைகள் இல்லாமல் ஓதினால் நற்பலன் உண்டு. இவற்றை ஓத ஓத கட்டாயம் முன்னர் கூறியதுபோல உலகியல் வாழ்வில் உள்ள எதிர்ப்புகளும் சிறிதளவுகூட பண்பாடு இல்லாத மனிதர்களின் தொடர்பால் மன உளைச்சல் ஏற்படுகிறதே? அதிலிருந்து மனிதன் வெளியே வரவேண்டுமென்றால் இன்னவன் கூறிய பதிகங்களை ஓதினால் நன்மை உண்டு.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 449

கேள்வி: மனம் தடுமாறி தீய வழியில் செல்லும்பொழுது எந்த இறை நாமத்தை ஜபிப்பது?

மனம் தடுமாறாமல் இருக்க மனம் சபலத்தில் ஆழாமல் இருக்க மனம் சாத்வீக எண்ணங்களோடு இருக்க ஸ்ரீ ராம நாமத்தை ஜபிக்கலாம். ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரத்தை ஜபிக்கலாம். பஞ்சாட்சரத்தை ஜபிக்கலாம். அஷ்டாக்ஷரத்தை ஜபிக்கலாம். இவையனைத்தும் சிறப்புதான். எதுவும் ஒன்றுக்கொன்று குறைவில்லை. இதோடு இன்னமும் சிறப்பாக மனம் அடங்குவதற்கு உச்சிஷ்ட மகாகணபதியின் மூல மந்திரத்தை அன்றாடம் வடகிழக்கு திசை நோக்கி அமர்ந்து பிரம்ம முகூர்த்தத்தில் தொடர்ந்து உருவேற்றிக் கொண்டே வந்தால் மனம் சலனங்களுக்குள் ஆட்படாமல் இருப்பதற்கு நல்லதொரு நிலையை நோக்கி செல்வதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும். இது பக்தி வழி. பக்தியை ஏற்றுக் கொள்ளாத மனிதருக்கு அறிவு பூர்வமாகக் கூறுவதென்றால் ஒரு செயலை செய்யும் பொழுதோ அல்லது ஒரு எண்ணத்தை எண்ணும் பொழுதோ அவன் எப்படி சிந்திக்க வேண்டும்? என்றால் உதாரணமாக ஒருவன் ஒரு எண்ணத்தை எண்ணுகிறான். இது வெறும் எண்ணம்தானே? செய்தால்தானே பாவம். செய்தால்தானே தவறு. அதனால் பிறருக்கு பாதிப்பு வரப்போகிறது. மனதில்தானே எண்ணுகிறோம் என்று அவன் எண்ணுவதாகக் கொள்வோம். அதே எண்ணத்தை பிறர் எண்ணினால் அதை நியாயம் என்று இவன் ஏற்றுக் கொள்வானானால் இவன் அதை தாராளமாக எண்ணலாம

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 448

கேள்வி: ஆஞ்சநேயர் பற்றி:

ஆஞ்சநேயர் இறைவனின் அம்சம். சாட்சாத் சிவபெருமானின் சக்திதான் மால்தூதன். ராம நாமத்தை மால்தூதன் மட்டுமல்ல ஜடாயு என்ற பட்சி வடிவில் இருந்த மகானும் ஜெபித்து நலமடைந்து இருக்கிறார். அதுபோல் இவரின் சகோதரர் சம்பாதி என்ற பட்சியும் ராம நாமத்தால் உயர்ந்திருக்கிறார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 447

கேள்வி: சித்தர் அருட் குடிலில் இராமாயண பிரசங்கம் நடத்த அனுமதி தர வேண்டும்:

இறைவன் அருளால் இங்கு வருகின்ற அன்பர்கள் பாரி ஆய் பேகன் போன்றோர் இருந்த பகுதியிலிருந்து வருகின்ற பலரும் ஒருமுறை எம்மை நோக்கி ஒரு வினா வைத்தார்கள். எங்கெல்லாம் இராம நாமம் உச்சரிக்கப்படுகிறதோ எங்கெல்லாம் ஆத்மார்த்தமாக இராமாயணம் ஓதப்படுகிறதோ அங்கெல்லாம் ஏதாவது ஒரு வடிவிலே ஆஞ்சநேயர் வருவார் என்று கூறுகிறார்கள். பல இடங்களில் அது நடந்திருக்கிறது. இன்றும் அது நடந்து கொண்டிருக்கிறது. எனவே இந்த குடிலிலே இராமாயணத்தை நல்ல முறையில் ஓதினால் அதைப் பலரும் வந்து அன்றாடம் கேட்டால் அதன் மூலம் ஆஞ்சநேயர் தரிசனம் கிடைக்கலாமே என்ற ஒரு நல்ல எண்ணத்திலே ஒரு வினாவை எழுப்பினார்கள். இதை நாங்கள் தவறு என்று கூறவில்லை. தாராளமாக இதுபோன்ற ஒரு சத்சங்கத்திலே இராமாயணத்தை ஓதலாம். ஓதலாம் என்று நாங்கள் அனுமதித்து விட்டால் அடுத்ததாக இதழ் ஓதும் மூடன் கேட்பான். இதற்கு உண்டான செலவினங்களுக்கு எங்கு செல்வது? இதற்கு உண்டான நடைமுறையை எங்கிருந்து பார்ப்பது? ருணம் பெற்றால் ருணம் வந்துவிட்டது என்று எல்லோரும் கூறுகிறார்களே? என்று. நாங்கள் ஒரு நல்லதை செய் என்றுதான் கூற இயலும். நாங்களே எல்லாவற்றையும் நடத்த இயலாது. எனவே நல்ல செயலை தாராளமாக செய்யலாம். ஆஞ்சநேயர் வருகிறாரா? இல்லையா? என்பது அவனவன் ஆத்மார்த்தமான பக்தியைப் பொறுத்தது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 446

கேள்வி: ஆஞ்சநேயர் தன் இதயத்தைப் பிளந்து காட்டிய பொழுது அதில் இராமரும் சீதையும் காட்சியளித்ததாக இதிகாசம் கூறுகிறது. இது எந்த நோக்கத்தில் கூறப்பட்டது? அனுமன் போல் அனைவரும் சிறந்த பக்தர்களாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கூறப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் தத்துவார்த்த விளக்கங்கள் உண்டா?

இறைவன் அருளாலே ஒரு காதலன் தன் காதலியைப் பார்த்து என்ன கூறுவான்? என் இதயத்தில் நீ இருக்கிறாய் என்று கூறுவான். அப்படிதான் காதலியும் கூறுவாள். எனவே என் சிந்தனை என்னுடைய எண்ணங்கள் என்னுடைய நோக்கம் நான் செய்கின்ற செயல் அனைத்தும் நீயாக இருக்கிறாய். யாதுமாகி நிற்கிறாய் என்பது போல உண்ணும் உணவு பருகும் நீர் சுவாசிக்கும் காற்று இன்னும் நான் செய்கின்ற அனைத்து செயல்களும் நீயாக இருக்கிறாய் நீயாக இருக்கிறாய் நீயாக இருக்கிறாய் நீயாக இருக்கிறாய் என்பதை உணர்த்தும் வண்ணம் அந்த இராமபிரான் மீது மால்தூதனாகிய ஆஞ்சநேயர் கொண்ட பக்தியை விளக்குவதற்காக இப்படி பரிபூரண சரணாகதியிலே ஒவ்வொரு மனிதனும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த சித்திரம் போடப்பட்டது.

இராமாயணம் நடந்த காலத்து எச்சங்கள் இப்பொழுது ஆங்காங்கே இருப்பது உண்மை. அவற்றை மனிதன் இன்னும் முழுமையாக கண்டு பிடிக்கவில்லை. அதில் இரணமண்டலம் என்கிற மலை ஒன்று இருக்கிறது. அது குறித்து முன்பே யாங்கள் கூறியிருக்கிறோம். இருந்தாலும் இன்னும் பல்வேறு விஷயங்கள் பூமியில் புதையுண்டுதான் இருக்கின்றன. அது தொடர்பாக சில கற்பனைக் கதைகள் கூறப்படுகின்றன. எப்படிக் கூறினாலும் எம்பிரான் இராமபிரானின் பெருமைகளைக் கூறுவதால் அதையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 445

கேள்வி: இறைவன் அம்மையே என்று அழைத்த காரைக்கால் அம்மையார் வாழ்ந்த பூமியில் தற்சமயம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதற்கு என்ன பரிகாரம் செய்வது?

ஆஞ்சநேயர் வழிபாடு தொடர்ந்து ராம நாம ஜெபம் குறிப்பாக மாருதி கவசம் மாருதி காயத்ரியை பெண்கள் எப்பொழுதும் உச்சரித்துக் கொண்டே இருந்தால் இது போன்ற இடர்பாடுகள் இல்லாமல் இருக்கும். இது எல்லா காலத்திலும் எல்லா இடங்களிலும் நடந்து கொண்டு இருப்பதுதான். இறைவன் முன்னால் ஆலயத்திலேயே நடந்ததுதான். ஏன்? கிருஷ்ண பரமாத்மா வாழ்ந்த காலத்திலேயே என்ன நடந்தது என்பது பாரதம் படித்த அனைவருமே உணர்ந்ததுதான். எனவே அசுரர்கள் எக்காலத்திலும் தங்கள் கைவரிசையைக் காட்டிக் கொண்டுதான் இருப்பார்கள். அதற்கு எதிராக வாழ வேண்டும் என்றால் ஆன்ம பலத்தை பக்தியை தர்மத்தை புண்ணியத்தை ஒவ்வொரு மனிதனும் அதிகரித்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அசுரர்கள் சூழ்ச்சிக்கு இரையாக வேண்டியதுதான்.