ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 444

கேள்வி: நவகிரகங்களை எத்தனை சுற்று சுற்ற வேண்டும்?

நவகிரகங்களை மனிதன் சுற்றுகிறானோ இல்லையோ நவகிரகங்கள் மனிதனை சுற்றிக் கொண்டுதான் இருக்கின்றன. நவகிரகங்களை ஏன் சுற்றவேண்டும்? என்று யாராவது சிந்தித்திருக்கிறார்களா? நவகிரகங்களை சுற்றினால் நவகிரகங்கள் நம்மை சுற்றுவதை விட்டுவிடுமா என்ன? குடம் குடமாய் பாலை கொட்டினாலும் சந்தனத்தை கொட்டினாலும் 1000 சுற்று சுற்றினாலும் கூட நவகிரகங்கள் தன் கடமையிலிருந்து ஒருபொழுதும் தவற மாட்டார்கள். பின் எதற்கு நவகிரகங்களை சுற்றவேண்டும்? பக்தி நம்பிக்கை நல்லது நடக்க வேண்டும் என்பதெல்லாம் ஒருபுறம். இன்னொரு அறிவு சார்ந்த உண்மை என்னவென்றால் பெரும்பாலும் ஆகம விதிப்படி வடகிழக்கு மூலையில்தான் நவகிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும். சில ஆலயங்களில் மாறாக இருக்கலாம். அதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால் வடகிழக்கிலே நவகிரகங்களை எப்படி வைக்கவேண்டும்? என்றால் அந்த வடகிழக்கு பகுதி ஒட்டு மொத்த ஆலயத்தின் பகுதியைவிட சற்று தாழ்வாக இருக்க வேண்டும். முன்னும் பின்னுமாக இல்லாமல் முறையாக நேர்கிழக்காக சுவாமி இருக்குமாறு கட்டப்பட்ட ஆலயத்திலே சற்றும் கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு வடமேற்கு வடகிழக்கு தென்மேற்கு தென்கிழக்கு என்று எந்த திசையும் சிறிதளவு கூட கோணங்கள் மாறாமல் கட்டப்பட்ட ஆலயத்திலே வடகிழக்கிலே தாழ்வான பகுதியிலே அதுபோல் நவகிரகங்களை முறையாக பிரதிஷ்டை செய்து மந்திர உச்சாடனம் செய்து கலச விழா செய்தபிறகு அங்கு சென்று மனிதன் குறைந்த பட்சம் ஒன்பது அல்லது ஒன்பதின் மடங்கு என்று எத்தனை சுற்று வேண்டுமானாலும் சுற்றலாம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 443

கேள்வி: ஸ்ரீராம் என்பதற்கும் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெயராம் என்று சொல்வதற்கும் உள்ள அதிர்வலைகள் வேறுபாடு என்ன?

எப்படி கூறுகிறோம் என்பதை விட என்ன சிந்தனையில் கூறுகிறோம் என்பதில்தான் கவனம் வேண்டும். தாய் அம்மா அன்னை என்று அழைத்தால் வார்த்தைகள் மாறினாலும் பொருள் ஒன்றுதான். உள்ளார்ந்த ஆத்மார்த்தமான அன்போடு அழைத்தால் அந்த தாய்க்கு திருப்தியாக இருக்கிறது. என் குழந்தை இப்படியெல்லாம் என்னை அழைக்கிறதே? என்று. அதைப்போல இறைவனை என்ன வார்த்தை வேண்டுமானாலும் (உச்சரிப்பில் பிழைகூட இருக்கலாம்) சொல்லி வணங்கலாம். உள்ளார்ந்த அன்பிலே பிழையில்லாமல் இருந்தால் போதும். அதைதான் இறைவன் எதிர்பார்க்கிறார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 442

கேள்வி: அரச மரத்திற்கு நீர் ஊற்றி தீபமேற்றி வணங்கலாமா?

அரச மரத்திற்கு மட்டுமல்ல எல்லா மரங்களுக்கும் நீர் ஊற்றலாம். தீபம் ஏற்றுகிறேன் என்று மரத்தை சுட்டெரிக்க வேண்டாம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 441

கேள்வி: நாங்கள் எங்கள் பெற்றோருக்கு செய்யும் கடமையைப் போல் எங்கள் பிள்ளைகள் எங்களுக்கு செய்வதில்லையே? இதற்கு காரணம் எங்கள் வளர்ப்பின் குறையா? அல்லது எங்கள் பாவமா?

இறைவனின் கருணையால் யாங்கள் கூறவருவது யாதென்றால் ஒரு மனிதனுக்கு நடக்கக் கூடிய துன்பமோ அல்லது அவன் பார்வையில் இன்பமோ அனைத்தும் கர்ம வினைகளின் எதிரொலிதான். அது ஒருபுறமிருக்கட்டும். எம் வழியில் வரவேண்டிய மனிதன் மனதிலே உறுதியாக தெளிவாக ஒன்றை வைத்துக் கொள்ள வேண்டும். நல்லதை எல்லோருக்கும் எப்பொழுதும் செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் காலம் தாழ்த்தாமல் செய்ய வேண்டும். தாய் தந்தையருக்கு செய்ய வேண்டிய கடமைகளை கடுகளவும் தவறாமல் செய்ய வேண்டும். உற்றாருக்கும் உடன் பிறந்தாருக்கும் நட்பு கொண்டோருக்கும் செய்ய வேண்டும். ஆனால் இதை பிறர் பாராட்ட வேண்டும் என்று எதிர் பார்க்கக் கூடாது. பிறர் நமக்கு அதைப் போல செய்ய வேண்டும் என்றும் எதிர்பார்க்கக் கூடாது. அப்படி எதிர் பார்த்து செய்யும் பொழுது மலையளவு புண்ணியம் கடுகளவாக மாறிவிடுகிறது. மற்றவர்கள் செய்யவில்லையே? என ஆதங்கம் வரலாம். ஆனால் கட்டாயம் இறைவன் கைவிட மாட்டார் என்ற சிந்தனையை வளர்த்துக் கொண்டால் எதிர்பார்ப்பு குறைந்துவிடும். பிள்ளைகளுக்கு நல்ல விஷயத்தை சொல்லித் தரலாம். நடந்து கொண்டும் காட்டலாம். ஆனால் அந்த பிள்ளைகள் அதனை கட்டாயம் பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்த்தால் சமயத்தில் ஏமாற்றமாகப் போகும். பிள்ளைகள் நல்லவற்றை பின்பற்ற வேண்டும் என்ற பிரார்த்தனையை வைத்துக் கொண்டால் போதுமானது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 440

கேள்வி: இறைவன் பெரியவரா? இல்லை நாங்கள் செய்யும் தர்மம் பெரியதா? ஏனென்றால் திருமந்திரத்தில் திருமூலர் கூறும்போது இறை காப்பாற்றா விட்டாலும் தர்மம் காப்பாற்றும் என்று சொல்லியிருக்கிறார்:

தர்மம் செய்யக் கூடிய சிந்தனையை மனிதனுக்கு தரக் கூடிய இறைவன் பெரியவர்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 439

கேள்வி: சப்தரிஷிகள் என்பவர்கள் யார் ?

இறைவன் அருளால் கூறுவது என்னவென்றால் இதுபோல் புலஸ்தியர் பிருகு என்றெல்லாம் வரிசை கிரமமாக கூறுவார்களே இவர்களை மட்டும் சப்தரிஷிகள் என்று எண்ண வேண்டாம். இதுபோல் நல்விதமாய் சப்தம் என்ற ஒரு பொருளை மட்டும் வைத்துக் கொண்டு ஏழு என்று குறிப்பிடக் கூடாது. இதுபோல் இந்த ரிஷிகளுக்குண்டான தன்மைகளை யாரெல்லாம் பெறுகிறார்களோ இந்த ரிஷிகளின் போதனைகளை ஒலியாக உள்வாங்கி யாரெல்லாம் தவம் செய்து இந்த ரிஷிகளுக்கு சமமாக ஆக முயற்சி செய்கிறார்களோ ஆக முயன்று அந்த நிலையை நோக்கி செல்கிறார்களோ அனைவருமே எம்மைப் பொருத்தவரை சப்தரிஷிகள்தான்.

இந்த சப்தரிஷிகள் சப்தரிஷி மண்டலம் என்பது ஒரு குறிப்புக்காக கூறப்படுவது. இவர்களைப்போல் இன்னும் பலரும் வர வேண்டுமென்றுதான் இவர்கள் இன்னமும் தவம் செய்துகொண்டிருக்கிறார்கள். ஒரு செல்வந்தன் தன்னிடம் வேலை பார்ப்பவனுக்கு எத்தனைதான் அள்ளித் தந்தாலும் எத்தனை நாள்தான் இவன் என்னிடம் அடிமையாக வேலை பார்ப்பது? என்னைப் போலவே இவனும் செல்வந்தன் ஆக வேண்டும் இறைவா என்று ஒருபொழுதும் அவன் பிரார்த்தனை செய்ய மாட்டான். ஆனால் மகான்களும் ஞானிகளும் ரிஷிகளும் சித்தர்களும் கணத்திற்கு கணம் இறைவனிடம் கேட்பது என்னவென்றால் அத்தனை மனிதர்களும் எங்களையும் எங்களைத் தாண்டி செல்ல வேண்டும் என்றுதான் தவம் செய்து கொண்டிருக்கிறோம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 438

கேள்வி: சித்தர் அருட்குடில் மற்றும் ததீசியகம் (தம்மை வருத்தி சேவை செய்யும்) திருமண வயதுடைய பிள்ளைகளுக்கு விரைவில் திருமணம் நடைபெற ஆசிகள்:

இறைவன் அருளால் கூறுகிறோம். இப்பொழுதுதான் கூறினோம். ஒருவன் திருமணம் வேண்டும் குழந்தை வேண்டும் எனும் பொழுது அவற்றால் அவன் நலத்தை அடைவானா? நலத்திற்கு மாறான நிகழ்வை அடைவானா? என்பதை உணர்ந்து இன்னவள் கூறியது போல இத்தனை சேவைகள் செய்கிறானே? இவனுக்கு எதற்கு திருமணம்? என்று இறைவன் அவன் மீது பரிதாபப்பட்டு நடக்க வேண்டிய திருமணத்தையே தடுத்து வைத்திருக்கிறார். மீண்டும் மீண்டும் இன்னவள் இவ்வாறு கேட்க சரி அவனே விரும்புகிறான். நாம் ஏன் தடுக்க வேண்டும்? என்று திருமண பந்தத்தை இறைவன் ஏற்படுத்தி விடுவார். ஒரு மனிதனுக்கு கர்மாவை கழிப்பதில் அத்தனை ஆர்வம். எப்படியாவது திருமணம் செய்து சீக்கிரம் கர்மா குறைய வேண்டும் என்று ஆணும் பெண்ணும் ஆசைப்படுகிறார்கள். எனவே அனைத்து திருமணமாகாத ஆண்களுக்கும் பெண்களுக்கும் விரைவில் இறைவன் அருளால் திருமணம் நடக்க இத்தருணம் யாங்கள் நல்லாசி கூறுகிறோம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 437

கேள்வி: மகாமேரு பூஜையை பற்றி :

இறைவன் அருளால் கூறுகிறோமப்பா. மகாமேரு குறித்து ஆண்டுக் கணக்கில் கூறலாம். அதில் அத்தனை விஷயங்கள் இருக்கிறது. இதுபோல் நல்விதமாய் ஸ்ரீ சக்ரமாக இருந்தால் அது ஸ்ரீ சக்ரம் யந்திரம். அதையே ஒரு ஸ்தூல வடிவமாக செய்தால் இன்னவன் கூறிய மகாமேருவாகும். இதனை தூய உள்ளத்தோடு முறையாக உபதேசம் பெற்று தொடர்ந்து ஒரு மனிதன் ஆண்டாண்டு காலம் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் வழிபட்டு வந்தால் அவன் இறையருள் பரிபூரணமாக பெறுவான். ஆனால் இதை எழுதுகின்ற முறையிலே பல பிழைகள் இருக்கின்றன. பிழையோடு பூஜை செய்வது சிறப்பல்ல. இதைவிட அன்னையின் வடிவத்தை வைத்து தற்கால மனிதர்கள் பூஜை செய்வதே ஏற்புடையதாகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 436

கேள்வி: ஸ்ரீ ருத்ரத்தில் க்ரம பாட என்ற பகுதி எதற்காக ஓதப்படுகிறது?

ருத்ரம் ஓதுவது நல்லது என்ற அளவில் நாங்கள் கூறுகிறோம். அதற்குள் உள்ள பொருளை வெளிப்படையாக பார்த்தால் குழப்பமாகவும் மிகவும் சிறு பிள்ளைத் தனமாகவும் இருக்கும். சகல சக்திகளும் ஆற்றலும் பெற்ற பரம்பொருளே உன்னை ருத்ர வடிவில் வணங்குகிறேன். நீ படைத்த இந்த பொருளையெல்லாம் உனக்கு தருகிறேன். நீ எனக்கு இதனைக் கொடு என்பதெல்லாம் அதில் வந்துகொண்டிருக்கும். ஆனால் கவனிக்க வேண்டும். முக்கண்ணனாகிய பரம்பொருளை அல்லது ஏதோ தெய்வத்தின் வடிவை வணங்கும் பொழுது யாராவது அழியக் கூடிய பொருளை கேட்பார்களா? அப்படி கேட்கக் கூடிய ஒரு நிலையை பிரசித்தி பெற்ற துதியாக மாற்றுவார்களா? எனவே மேலெழுந்தவாரியாக பார்த்தால் வெறும் உலகியல் ஆதாயத்திற்காக கூறப்படும் பாடல் போல் தோன்றினாலும் கூட இதையெல்லாம் தாண்டி பரிபூரண ஞானத்தைக் கொடு என்பதுதான் அதன் ஒட்டுமொத்த பொருளாகும். மற்ற உலகியல் விஷயங்களையெல்லாம் அருளியல் விஷயங்களாக பார்க்க மனிதன் முயற்சி எடுத்து பழக வேண்டும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 435

கேள்வி: இறைவன் மேல் அணிவித்த மாலையை பிரசாதமாக ஏற்ற பிறகு நாங்கள் எப்படி பராமரிப்பது?

இறைவனின் கருணையால் யாங்கள் கூறவருவது யாதென்றால் இதுபோல் சுவாமியின் திருமேனியில் உள்ள மாலையை அதுபோல் பிரசாதமாக ஏற்பதும் பய பக்தியாக வழிபாடு செய்வதும் தவறல்ல. என்றாலும் கூட நன்றாக கவனிக்க வேண்டும். தெரிந்தும் தெரியாமலும் அந்த பிரசாத பூக்கள் எங்கும் சிதறாமல் பாதுகாக்க வேண்டும். அப்படி பாதுகாக்க முடியவில்லை என்றால் அதை அங்கேயே ஸ்தல விருட்சத்தின் அடியில் வைத்து விடலாம். அல்லது அது இறைவனிடமே இருக்கட்டும் ஒரு மலரை மட்டும் கொடுங்கள் என்று பவ்யமாக கேட்டுக் கொள்ளலாம். அதைவிட்டு அதை வாகனத்தில் மாட்டுவது அனாச்சாரமாகும். அதை யாங்கள் ஒருபொழுதும் ஏற்பதில்லை. மலர்கள் அனைத்துமே இறைவனுக்கும் இறைவனுக்கு சமமான மகான்களுக்கு மட்டுமே உரியது. அதை அனாச்சாரமான காரியங்களுக்கு பயன்படுத்துவதை யாங்கள் ஒருபொழுதும் ஏற்பதில்லை. பாவப்பட்ட மனிதனின் மேல் மலர்கள் இருக்கும் பொழுது கண்ணீர் விட்டுக் கதறி இறைவனிடம் கேட்கும். என்ன பாவம் செய்தேன் இறைவா இவன் மேனியில் நான் கிடக்கிறேனே? என்னை மன்னிக்கக் கூடாதா? உன் மேனிக்காக மலர்ந்த எனக்கு இவன் மேனியில் இடம் வந்திருக்கிறதே? இது நியாயமா? என் மீது இரக்கமில்லையா இறைவா? என்று ஒவ்வொரு மலரும் கண்ணீர் விடுகிறது. எனவே மலர்களை கழுத்திலே சூடிக்கொள்ளும் முன்னால் மனிதன் சிந்திக்க வேண்டும். அடுத்த வார்த்தை கேட்பார்கள். பெண்கள் தலையில் சூடுகிறார்களே? என்று. இதிலே பெண்களுக்கு சில விதி விலக்குகளை இறைவன் தந்திருக்கிறார். அதிக அளவு இல்லாமல் சிறிய அளவிலே நறுமணமிக்க மலர் மாலையை மலர் சரத்தை பெண்கள் சூடிக் கொள்ளலாம். அதற்கு காரண காரியங்கள் வேறு. அதை நன்றாக சிந்தித்துப் பார்த்தால் ஆண்களும் பெண்களும் புரிந்து கொள்ளலாம்.