தீபம் ஏற்ற ஏற்ற பாவம் குறையும் என்பது ஒரு உண்மையாகும். எனவே இருள் என்பது துன்பமும் பாவமும் ஆகும். ஒளி என்பது அதற்கு எதிராக இருந்து பாவத்தை துன்பத்தை நீக்குவதாகும். இருள் அகற்றி மாந்தனின் மனதிலே உள்ள இருள் அகற்றி சுற்று புறத்தில் உள்ள இருளையும் அகற்றி பாவம் என்னும் இருளையும் அகற்றி சோதனை கஷ்டங்கள் வேதனை என்ற இருளையும் அகற்றி ஒளி வளரட்டும் ஒளி பரவட்டும் என்பதின் ஆத்மார்த்தமான தத்துவமே தீபமாகும். இருந்தாலும் கூட உயர் தரமான நெய்யினை கொண்டு நல்விதமாக தீபத்தை ஏற்றும் பொழுது அந்த நெய் ஏற்றுகின்ற இடத்தையும் ஏற்றுகின்ற மனதையும் சுத்த படுத்துகின்றது என்பதை புரிந்து கொண்டு வெறும் எந்திரம் போல் தீபத்தை ஏற்றாமல் ஆத்மார்த்தமான பிரார்த்தனை செய்து கொண்டே தீபத்தை ஏற்ற ஏற்ற ஏற்ற எற்றுபவனுக்கு ஏற்ற படும் இடத்தில் அதிலே சுற்றி இருந்து பங்கு பெரும் மனிதனுக்கு பாவ வினைகள் படி படியாக குறைந்து நல் வினைகள் கூடி அவன் எதிர்பார்க்ககூடிய நல்ல காரியங்கள் எல்லாம் இறைவன் அருளால் நடக்கும் என்பது தீபத்தின் விளக்கம்.
கேள்வி: நடக்க முடியாதவர்கள் வீட்டில் பூஜை செய்தால் பலன் உண்டா?
இறைவனின் அருளாணைப்படி நடக்க முடியாதவர்கள் வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறார்கள். சித்தர்களின் அருளாணைப்படி வாக்குப்படி நடக்க முடியாதவர்கள் இன்றும் வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறார்கள். எனவே நடப்பது என்பது கால்களால் மட்டுமல்ல.
நாமேல் நடப்பீர் நாமேல் நடப்பீர் என்று அதுபோல் நாவுக்கரசர் கூறியிருக்கிறார்.
நாவால் நடப்பது நல்ல வார்த்தைகளால் நல்ல நல்ல சிந்தனைகளால் ஒருவன் நடக்க வேண்டும். அதுதான் உண்மையான நடப்பு. எனவே வெறும் பாதங்களால் நடப்பது நடப்பல்ல. அப்படி உடல்ரீதியான பிரச்சினை உள்ளவர்கள் அவர்களால் இயன்ற பூஜையை எங்கு செய்தாலும் எப்படி செய்தாலும் உள்ளன்போடு செய்தால் இறைவன் ஏற்றுக் கொள்கிறார்.
கேள்வி: பிள்ளையார்பட்டியில் உள்ள விநாயகர் வலக்கையில் சிவலிங்கம் வைத்திருப்பதின் தாத்பர்யம் என்ன?
இறைவனின் கருணையாலே இதுபோல் நல்விதமாய் இதற்கு பல காரணங்களை கூறலாம். இன்னொன்று தெரியுமா? யாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே பல்வேறு தருணங்களில் பல்வேறு ஆலயங்கள் கட்டப்படும் பொழுது சிற்பிகள் சில தவறுகள் செய்து விடுவார்கள். அதைவிட அந்த ஆலயத்தை கட்டுகின்ற ஆகம வல்லுனன் சில தவறுகளை செய்து விடுவான். உதாரணமாக காலம் காலமாக கிழக்கு நோக்கியபடி இறை ரூபம் வைக்கப்பட வேண்டுமென்றால் ஏதோ ஒரு சிந்தனையில் (இறை ரூபத்தை) தெற்கு நோக்கி வைத்து விடுவார்கள். பிறகு இப்படி இருப்பதுதான் சிறப்பு எங்கும் இல்லாத வழிமுறை அவர்களாகவே ஒரு கற்பனை கலந்த கதையை கூறிவிடுவார்கள். பரவாயில்லை இறை பக்தியால் இதை செய்வதால் யாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அந்த வகையிலே தன் தந்தையை கையில் வைத்து முழுமையாக ஆராதனை செய்து முக்கண்ணனாகிய அந்த சிவனை பரம்பொருளை சிவபெருமானாக உள்ளுக்குள் உணர்ந்து அந்த சிவனை மனதில் வரித்து சிவனோடு ஐக்கியமாக வேண்டுமென்று பலர் தவம் செய்கிறார்கள். அப்படி நேரடியாக தவம் செய்து சிவனை அடைவது என்பது சிவன் செய்கின்ற சோதனையை தாங்குகின்ற வல்லமை உள்ளவர்களுக்கு மட்டும்தான் பொருந்தும். மற்ற மனிதர்கள் சிவனின் சோதனையை இறைவனின் சோதனையை தாங்குவது கடினம்.
அதே இறைவன் விநாயகப் பெருமான் வடிவம் எடுக்கும் பொழுது எளிமையாக மிகவும் சாதாரண நிலையில் அருளைத் தருவதாக ஒரு வைராக்யம் கொண்டிருக்கிறார். அந்த வகையில் இதோ இந்த சிவனை தேடித்தானே போக வேண்டும். இந்த சிவனுக்குள்தானே ஒடுங்க வேண்டும் என்று எண்ணுகிறாய். என்னிடம் வா என் மூலம் சிவனில் ஒடுங்கலாம் என்று கூறாமல் கூறுகிறார். தானும் தன்னுடைய இன்னொரு வடிவமான சிவத்தை நினைத்து தவத்தை செய்து கொண்டிருக்கிறார். அங்கு சென்று வழிபட ஒரே சமயத்தில் பரம்பொருளின் இரண்டு தெய்வீக வடிவத்தையும் வணங்கிய பலன் உண்டு.
கேள்வி: பாடல்பெற்ற ஸ்தலங்களில் ஐந்தினை மயான ஸ்தலங்கள் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். இவற்றிற்கும் பொதுவாக வழிபடக்கூடிய ஸ்தலங்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன ?
இறைவனின் கருணையாலே இதுபோல் மனிதர்கள் ஒருவகையில் அச்சப் படக்கூடிய இடம் விரும்பாத இடம் என்று மயானத்தை கூறலாம். ஆனால் மயான அமைதி என்ற வார்த்தையை மனிதனே கூறுவான். ஏனென்றால் அங்கு செல்லுகின்ற மனிதர்கள் இயக்கமற்ற நிலையிலே ஏதும் செய்ய இயலாத நிலையிலே அமைதியடைந்து விடுகிறார்கள். ஒரு மனித உடல் தேவையற்ற நிலைக்கு ஆளான பிறகு அதாவது ஆத்மாவை விட்ட பிறகு அந்த உடல் சென்று அடங்கக் கூடிய இடத்திற்கும் மனிதன் உயிரோடு சென்று வழிபடக் கூடிய ஆலயத்திற்கும் ஒரேவிதமான பொருள் வரக் கூடிய மயானம் என்ற வார்த்தையை எதற்காக வைத்தார்கள்? மனிதன் சிந்திக்க வேண்டும். உயிர் இல்லாத பொழுது இந்த உடல் அடக்கத்தோடு இருப்பதைவிட உயிர் இருக்கும் பொழுதே அடக்கமாக இருப்பதற்குண்டான வழிமுறையை கற்றுத் தரக் கூடிய ஆலயங்களில் ஒன்றுதான் அந்த ஆலயம். மயானத்தில் ஆடாது அசையாது ஒரு இருக்கும் மனிதன் அதன் பிறகு அவன் எந்த பாவமும் செய்வதில்லை. அவனால் செய்ய முடிவதில்லை. உடலோடு இருக்கும் பொழுது எத்தனையோ பாவங்களையும் அனாச்சாரங்களையும் செய்கிறான்.
நன்மைகளையும் செய்கிறான் இல்லையென்று கூறவில்லை. இங்கே ஒரு வேடிக்கை என்னவென்றால் அந்த இடத்தில் ஞானம் பெற வேண்டும் என்பதற்காகத்தான் மயானத்தோடு தன்னை தொடர்புபடுத்தி வைத்திருக்கிறார் முக்கண்ணன். ஒன்றுமில்லை எல்லாம் மாயை என்பதை மனிதன் உணர வேண்டும் என்று. ஆனால் மனிதன் என்ன செய்கிறான்? அங்கும் சென்று மனிதன் தன் ஆதிக்கத்தை காட்டி இறைவனை பின்னே தள்ளி விடுகிறான். இது இன்ன பிரிவில் பிறந்தவன் எரிக்கப்பட வேண்டிய மேடை. இது இன்ன ஜாதியில் பிறந்தவன் எரிக்கப்பட வேண்டிய மேடை என்றெல்லாம் பிரித்து வைக்கிறான். அதைத் தாண்டி இன்னொன்று செய்கிறான். ஒரு குழி தோண்டி இந்த உடலை மூடிவிட்டு ஒரு சிறு கட்டிடம் எழுப்பி அவன் படித்த பட்டங்களையெல்லாம் போட்டு வைக்கிறான். இதையெல்லாம் இறைவன் பார்த்து ஓ இவன் இந்தளவு படித்திருக்கிறானா? இவனை அழைத்து பக்கத்தில் வைத்துக் கொள்ளலாம் என்று சிந்திக்கப் போகிறாரா என்ன? மனிதனின் அறிவு வளரவே மறுக்கிறது என்பதுதான் எங்களின் ஆதங்கம். எத்தனை சொல்லித் தந்தாலும் நான் கீழேதான் இருப்பேன் என்பதுதான் மனிதனின் அறியாமை இருக்கட்டும்.
மனிதனின் அறியாமைதான் இந்த உலக இயக்கத்திற்கு அச்சாணியாக இருக்கிறது. இந்த உலகிலே அத்தனை பேரும் ஞானம் பெற்றுவிட்டால் இறைவனுக்கே அலுத்துவிடுமப்பா. மீண்டும் இன்னவனின் வினாவிற்கு வருகிறோம். அந்த மயானத்திலே ஒரு மனிதனுக்கு ஞானம் கிட்டும். நல்விதமான ஞானத்தை எத்தனையோ சித்தர்கள் மயானத்திலே அடைந்திருக்கிறார்கள். பிராந்தையார் எனும் சித்தனுக்கு ஞானம் மயானத்தில்தான் கிடைத்தது. மயானத்தில்தான் அவன் தவம் செய்து ஞானத்தை பெற்றான். அப்படியொரு ஞானம் மயானத்தில் கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு சில ஜாதக விதிகள் வேண்டும். எல்லோரும் அதற்காக மயானம் சென்று உயிரோடு இருக்கும் பொழுதே தியானம் செய்ய வேண்டாம்.
தேவராய ஸ்வாமிகள் இயற்றிய சத்ருசம்ஹார வேல் பதிகம் பற்றி:
இறைவனின் கருணையாலே சத்ரு சம்ஹார த்ரிசதியை ஓது என்று யாங்கள் கூறுவோம். பலமான எதிர்ப்புகளும் எதிரிகளின் தொல்லையும் எங்கிருந்து வருகிறது? இவன் பாவ கர்மாவில் இருந்துதானே வருகிறது. எனவே பாவங்களை குறைத்துக் கொள்ள கூறப்படுகின்ற வழிபாடுகளில் இதும் ஒன்று. அதைப் போல இன்னவன் வினவிட்ட அன்னவன் (தேவராய ஸ்வாமிகள்) கூறிய அதும் நல்விதமான மாற்றத்தை மனித மனதிலே ஏற்படுத்தும். எதிர்ப்பு வெளியில் இருந்து வந்தாலும் இவன் மனம் பக்குவம் அடைந்து விட்டால் எதிர்ப்புகள் குறைந்து விடும். அதற்கு முதலில் இந்த வழிபாடு உதவும். மனம் சாந்தமடையத்தான் இந்த வழிபாடுகள். இதைப்போல சுதர்சன வழிபாட்டையும் செய்யலாம்.
பாம்பன் ஸ்வாமிகளின் இதுபோல் நல்விதமாய் பகை கடிதலையும் ஓதலாம். இவை அனைத்துமே மனித மனதை பக்குவப்படுத்தவும் மனம் பக்குவமடைய பக்குவமடைய அவனுக்கு வரும் எதிர்ப்பை மிக லாவகமாக எப்படி கையாள்வது? என்ற அறிவையும் இந்த வழிபாடு அவனுக்கு சொல்லித்தரும். எனவேதான் இந்த வழிபாட்டை யாங்கள் கூறுகிறோம். சிலர் எண்ணுவதுபோல இந்த வழிபாடுகளையெல்லாம் கூறினால் எதிரிகள் ஒழிந்து விடுவார்கள். எதிரிகள் தோற்று ஓடி விடுவார்கள். எதிரிகள் எங்கோ பதுங்கி விடுவார்கள் என்றெல்லாம் கற்பனை செய்ய வேண்டாம். ஒரு நல்ல மனிதனுக்கு முன்வினையின் பயனாக எதிரிகளும் எதிர்ப்பும் வந்தால் அதனை அந்த வினைகள் வழியாக சென்று தீர்த்துக் கொள்ள உதவக் கூடிய வழி முறைகளில் இதும் ஒன்று.
ஆழ்வார்களின் பாடல்கள் அனைத்துமே உயர்ந்ததப்பா. அத்தனையும் தீந்தமிழ் சுவை. ஆண்டாளின் அத்தனை பாடல்களுமே சிறப்பு அப்பா. அதிலே ஒன்றில்
வியாழன் உறங்கி வெள்ளி முளைத்தது என்ற சொற்றொடர் வரும்.
யோசித்து பார்க்க வேண்டும். குரு அஸ்தமனமானால் அங்கே சுக்கிரன் உதிக்கும். ஆக உலக ஞானம் தலை தூக்கி விட்டால் பர ஞானம் என்பது மறைந்து விடும். ஞானகுரு மறைந்த இடத்திலே உலக இச்சைகள் தலை தூக்கும் என்ற பொருளும் அதுபோல் குருவாகிய கிரகம் மறைய சுக்கிரன் மேலே எழுந்தது என்ற ஒரு பொருளும் உண்டு. குரு மறைய சுக்கிரன் தோன்ற வேண்டுமென்றால் எத்தனையோ நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் நடக்கும். இதை ஜோதிட கலைஞர்கள் கணித்துப் பார்த்தால் ஆண்டாளின் காலம் என்ன? என்பதை கண்டுபிடித்து விடலாம்.
கேள்வி: பெண் சித்தர்கள் குறைவாக இருப்பதன் காரணம் என்ன? குறிப்பாக ஆழ்வார்கள் நாயன்மார்களில் கூட பெண் சித்தர்கள் அதிகமாக இல்லையே?
இறைவனின் கருணையாலே கூறுகிறோம். பல பல பல லகரம் கோடி ஆண் சித்தர்களுக்கு ஒரேயொரு பெண் சித்தரே சமம். அப்படி எடுத்துக் கொள்ளலாமே? ஏன் எண்ணிக்கையில் அதிகம் குறைவு என பார்க்க வேண்டும்? ஏனென்றால் எல்லா ஆண் சித்தர்களையும் பெற்றுத் தருவது பெண்மைதானே? எனவே எல்லா நிலைகளிலும் இங்கே பெண் சித்தர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள். ஆனால் மனித பார்வையில் குறைவு போல் தோன்றுகிறது. வேறு வகையில் கூறப்போனால் சித்தர்களை உருவாக்குவதே பெண்கள்தான் அதாவது சக்திதான். எனவே இன்னொரு வகையில் கூறப்போனால் ஒரு துலாக்கோலிலே ஒரு பக்கம் அதிக அளவு பஞ்சினை பருத்தியினை வைப்போம். இன்னொரு பக்கம் நிறை கல்லை வைப்போம். எது அதிகமாக இருக்கும்? அங்கே பருத்தி எனப்படும் பஞ்சு மூட்டை மூட்டையாக இருக்கும். இந்த அளவு மூட்டைக்கு அதே அளவா எடை கல்லை வைப்பார்கள்? ஆனால் எடை கல் அளவில் சிறியதாக இருந்தாலும் அந்த பஞ்சு மூட்டையின் அளவை அது தீர்மானிக்கிறது அல்லவா? அதைப்போல ஒரேயொரு ஆண்டாள் போதும் அத்தனை ஆண் சித்தர்களையும் சமமாக கருதுவதற்கு. அதைப்போல் ஒரேயொரு ஔவையார் போதும் அனைத்து ஆண் சித்தர்களுக்கும் சமமாக. எனவே பெண் சித்தர்கள் இல்லையென்று கூறவே வேண்டாம்.
பல குடும்பங்களில் நடக்கின்ற கொடுமைகளை பார்க்கும் பொழுது இல்லற பெண் சித்தர்களே அதிகமாக இருக்கிறார்கள். ஏதோ சித்தர்கள் என்றால் சித்து வேலையும் அதிசயங்களையும் செய்தால்தான் சித்தர்கள் என்பது அல்ல. தன் குடும்பத்திற்காக தன்னை சேர்ந்தவர்களுக்காக ஏன்? பொது நலத்திற்காக அனைத்தையும் சகித்துக் கொண்டு யார் இருந்தாலும் சித்தர்களே. எனவே அப்படி நயத்தகு நாகரீகமாக நல்ல எண்ணங்களோடு வாழ்கின்ற பல பெண் சித்தர்கள் இன்றும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அது மட்டுமல்ல ஆண் சித்தர்களில் மனிதர்கள் அறிந்த சித்தர்கள் இந்த அளவு. அறியாத சித்தர்கள் கோடி கோடி என்பதை மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
கேள்வி: நரம்பு சம்பந்தமான பிரச்சினைகள் தீர வழிபாடுகள் ஸ்தலங்கள் பற்றி:
எந்தப் பிணியாக இருந்தாலும் ஆற்றொண்ணாத கொடுநோயாக இருந்தாலும் கூட ஒரு குறிப்பிட்ட பாவத்தின் காரணமாக வருவதில்லை. ஒட்டு மொத்த பாவங்களின் எதிரொலிதான் பல்வேறு விதமான துன்பங்கள் அதிலும் நோய் அதிலும் இன்னவன் குறிப்பிட்ட தந்தி தொடர்பான பிணி. இதுபோல் பிணி தீர ஒரு மனிதன் அவனால் இயன்ற வழிபாடுகளை இல்லத்திலும் எந்த ஆலயத்திலும் செய்யலாம். அடுத்து புதன் சார்ந்த ஸ்தலங்கள் சென்று வழிபாடு செய்வதாலும் சனி சார்ந்த ஸ்தலங்கள் சென்று வழிபாடு செய்வதாலும் இன்னவன் கூறிய நரம்பு தொடர்பான பிணிகள் கட்டுக்குள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதுபோல் ஏழை பிணியாளர்களுக்கு இயன்ற மருத்துவ உதவிகளை நல்விதமாய் அன்பாய் ஆதரவாய் தொடர்ந்து செய்ய இந்தப் பிணி மட்டுமல்லாமல் மற்ற பிணிகளும் கட்டுக்குள் வரும். குறிப்பாக கூற வேண்டுமென்றால் திருவெண்காடு சென்று வழிபாடு செய்வதும் பழனி சென்று முருகப் பெருமானையும் போகனையும் வணங்குவதும் இதுபோல் மதுரை அன்னை மீனாளை வணங்குவதும் (இன்னவன் கூறியதால் குறிப்பிட்ட ஸ்தலங்களை கூறியிருக்கிறோம்) இன்னும் சில ஸ்தலங்கள் சென்று வணங்குவதால் நரம்பு தொடர்பான பிணிகள் குறையும். எனவே நரம்பு தொடர்பான பிணிகள் யாருக்கெல்லாம் இருக்கிறதோ அவர்கள் இதுபோன்ற ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்து பலன் அடையலாம். தீவிரமான வழிபாடு ஒரு பிணியை குறைக்கும். ஆனாலும் அந்தப் பிணியோடுதான் அந்தப் பிறவியில் அவன் கடைவரையில் வாழ வேண்டும் என்று பிரம்மன் விதி எழுதியிருந்தால் அதனை மாற்ற யாராலும் முடியாது.
கேள்வி: இறை மறுப்பாளர்களும் நீண்ட ஆயுளும் புகழும் பெறுவது எப்படி?
இறை உண்டு என்று கூறிக் கொண்டு தவறான செயலை செய்வதை விட இறைவன் இல்லை என்று கூறிவிட்டு நல்ல தொண்டினை செய்வதை இறைவனே விரும்புகிறார். அடுத்ததாக இறை மறுப்பாளர்கள் அல்லது வேறு தவறான காரியங்களை செய்கின்ற மனிதர்கள் ஒருபுறம் இருக்கட்டும். எத்தனையோ அசுரர்கள் தவமாய் தவமிருந்து இறைவனை நேரில் தரிசனம் செய்து பல வரங்களை வாங்குகிறார்கள். அந்த அசுரன் பிறக்கும் பொழுதே தெரியும் அவன் என்ன செய்யப் போகிறான்? என்று. அவன் எதற்காக தவம் செய்கிறான்? என்றும் தெரியும். வரம் கேட்கும் பொழுதும் இறைவனுக்கும் தெரியும் அவன் எதற்காக வரம் கேட்கிறான்? என்ன செய்வான்? என்று. இதெல்லாம் தெரிந்தும் இறைவன் எதற்காக அவனை அனுமதிக்கிறார்? ஒன்று இந்த உலகத்தில் பல்வேறு விதமான அனுபவங்கள் பல்வேறு ஆத்மாக்களுக்கு ஏற்பட்டு அதன் மூலம் கர்மங்கள் குறைய வேண்டும். விதவிதமான மனிதர்கள் விதவிதமான குணங்கள் கொண்ட உயிரினங்கள் இவைகளை எல்லாம் படைப்பது ஒருவகையில் கர்மக் காரணங்கள் இன்னொரு வகையில் இறைவனின் திருவிளையாடல்.
இன்னொன்று எல்லாம் இந்த உலகத்தில் ஒரே வகையாக இருந்தால் எதையும் பயன்படுத்த முடியாது. பரிபூரண ஞானநிலை பெற்று இறையோடு ஒன்றிவிட்டால் ஒன்றும் தேவையில்லை. இந்த உலகிலே விதவிதமான விஷயங்கள் தேவைப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. குற்றம் செய்கின்ற ஒருவன் ஒரு பொருளை எடுத்து விடுகிறான். பொருளை இழக்க வேண்டும் அதனால் துன்பப்பட வேண்டும் என்பது பொருளை இழந்தவன் கர்மா. சிறையில் அடைபட்டு துன்பம் அடைய வேண்டும் என்பது இவன் கர்மா. இந்த குற்றவாளியை துரத்தி சென்று பிடிக்க வேண்டும் என்பது தீது அடக்கும் துறை சார்ந்தவனின் கர்மா. இவர்களை பிடித்து நீதிமன்றத்திலே நிறுத்தி தண்டனை வாங்கித் தர வேண்டும். நீதிமன்றம் இயங்க வேண்டும் என்பது அவர்களின் கர்மா. எனவே மின்சாரத்தை கடத்தக் கூடிய பொருள் எப்பொழுதெல்லாம் தேவையோ அப்பொழுதே மின்சாரத்தைக் கடத்தாத பொருளும் தேவை. மின்சாரத்தை கடத்தாத பொருள் இருந்தால்தான் மின்சாரத்தை கடத்துகின்ற பொருளை நாம் பயன்படுத்த முடியும். எனவே இறைவன் இருக்கிறார் என்று கூறுகின்ற மனிதர்கள் இருக்கின்ற அதே உலகில் இறைவன் இல்லை எனும் மனிதன் இருந்தால்தான் இறைவனின் பெருமையை உணர முடியும். இவையனைத்தும் இறைவனின் லீலையே.
கேள்வி: காரணமின்றி காரியம் இல்லை. இதற்கு இறை விளக்கம் தருக:
இறைவனின் கருணையாலே எல்லா காரியங்களுக்குப் பின்னாலும் காரணம் இருக்கிறது. ஆனால் அந்தக் காரணத்தை மனிதன் ஏற்றுக் கொள்வதுதான் கடினமாக இருக்கிறது. ஏனென்றால் மனிதன் முழுக்க முழுக்க உடல் ரீதியாக வருகின்ற எந்த துன்பத்தையும் அவன் அனுபவித்து தீர்க்க வேண்டும் என்று எண்ணுவதில்லை. அது அனுமதிக்கவுமில்லை. ஆனால் உடல்ரீதியாக ஒரு மனிதனுக்கு ஒரு துன்பம் வருகிறது என்றால் அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. புரிவதுபோல் கூறவேண்டும் என்றால் அம்மை நோய் ஒரு குழந்தையை தாக்கிவிட்டால் அது துன்பம். அந்தக் குழந்தை துடிக்கும். பெரியவர்களை தாக்கினாலும் சிறியவர்களை தாக்கினாலும் துன்பம்தான். வெம்மையின் மிகுதியால் இந்தப் பிணி தாக்குவதாக கூறப்படுகிறது. ஒருவித நுண் கிருமியால் இந்த நோய் வருவதாக விஞ்ஞான அறிவு மனிதனுக்கு சொல்லித் தந்திருக்கிறது. இந்த நோய் மனிதனை தாக்கினால் துன்பம். இது மனிதனுக்கு பிடிக்கவில்லை. ஆனால் இந்த நோய் ஒரு மனிதனை தாக்கிய பிறகு அந்த மனிதனுக்குள் நோய் எதிர்ப்பு ஆற்றல் பெருகுகிறது என்பது உண்மை. இதுவும் விஞ்ஞானம் கூறுகிறது. எனவே எந்தவொரு துன்பத்திற்குப் பின்னாலும் ஒரு மனிதனுக்கு நன்மையை தரக்கூடிய ஒரு நிகழ்வு இருக்கும் என்பதே உண்மையாகும். இதை பொறுமையோடு சிந்தித்துப் பார்த்தால் ஒரு மனிதனுக்கு புரியும். பொறுமை இல்லையென்றால் காரணமில்லாமல் இந்த துன்பம் வந்திருக்கிறது என்பதுபோல் தோன்றும்.
இப்படிக் கூறினால் ஒரு மனிதனுக்கு வேறுவிதமான ஐயம் வரும். எல்லாம் சரி குருதேவா ஒரு தாய் தந்தைக்கு நீண்ட நாட்களாக குழந்தையில்லாமல் இருக்கிறது. பல்வேறு ஆலயங்கள் சென்று பிரார்த்தனை செய்து தர்மங்களை செய்து ஒரு குழந்தையை பெற்றுக் கொள்கிறார்கள். அன்போடும் ஆசையோடும் வளர்க்கிறார்கள். இருபது வயது வளர்ந்த பிறகு அந்தக் குழந்தை திடீரென நோய் வாய்பட்டோ விபத்திலோ இறந்து விடுகிறது. தாய் தந்தைக்கு துக்கம் தாங்க முடியவில்லை. கதறுகிறார்கள் அழுகிறார்கள். இதை எப்படி நியாயப்படுத்த முடியும்? இந்த துன்பத்திற்கு என்ன நியாயம் இருக்கும்? இந்த துக்கம் அவர்களைவிட்டு என்றுமே நீங்காதே? இன்னும் இதுபோல பல நிகழ்ச்சிகள் மனித வாழ்க்கையிலே நீக்க முடியாத துன்பமாக இருக்கிறதே? இதை எப்படி எடுத்துக் கொள்வது? இந்த இடத்தில்தான் கர்மாவை ஒரு மனிதன் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். ஒரு குழந்தை பிறந்து ஆசையோடும் அன்போடும் வளர்க்கப்பட்ட பிறகு தாய் தந்தையரை விட்டு பிரிகிறது என்றால் அங்கே மூன்று ஆத்மாக்களின் கர்மா இணைக்கப்படுகிறது. அதற்குப் பின்னாலும் பலவிதமான கர்மக் கணக்கு இருந்தாலும் புரிவதற்காக சுருக்கமாக கூறுகிறோம். முதலில் அந்தக் குழந்தையை பிரிந்து துக்கப்பட வேண்டும் என்று அந்த தாயின் கர்மாவும் தந்தையின் கர்மாவும் இருக்கிறது.