ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 424

கேள்வி: வ்யதிபாத யோகம் மற்றும் மூதாதையர் வழிபாடு பற்றி:

இறைவனின் கருணையாலே நல்விதமாய் ஒவ்வொரு குடும்பத்திலும் வாழ்ந்து மறைந்த முன்னோர்களின் சாபங்கள் தோஷங்கள் பாவங்கள் அவற்றையும் அந்த குடும்பத்தில் எந்த ஆத்மா குழந்தையாக பிறக்கிறதோ அதை ஏற்றுத்தான் ஆகவேண்டும். அதற்கும் அது பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். அந்த வகையிலே அந்த வழிமுறையிலே வரக் கூடிய பாவங்களையெல்லாம் குறைத்துக் கொள்ள தோஷங்களை சாபங்களை நீக்கிக் கொள்ள செய்யக் கூடிய விதவிதமான வழிபாடுகள்தான் இன்னவன் கூறியது. இந்த வழிபாட்டோடு பரிபூரண எதிர்கால வழிபாட்டிலே வெறும் சுயநலமாய் இந்த உலக வாழ்விற்காக வாழாமலும் ஒரு மகானும் ஞானியும் இறைவனும் ஒரு மனிதன் எப்படி வாழவேண்டும்? என எண்ணுகிறார்களோ அப்படி வாழ்வதற்குண்டான மனோபாவம் வளர்வதற்கு உண்டான வழிபாடும் இவை இரண்டுமே. எனவே பூர்வீக தோஷங்களை பாவங்களை குறைத்துக் கொண்டால்தான் எதிர்கால வாழ்வு செம்மையாக இருக்கும். அதற்குண்டான வழிபாட்டின் தன்மைதான் இரண்டையும் குறிக்கிறது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 423

கேள்வி: ஏகாதச ருத்ர பூஜைக்கான ஆலயத்தைப் பற்றி கூறுங்கள்:

இறைவனின் கருணையாலே எந்த ஆலயத்தில் வேண்டுமானாலும் மனம் ஒன்றி வரிசை க்ரமமாக விநாயகர் துவங்கி பரிபூரணமாக 11 என்றாலும்கூட 111 எண்ணிக்கையிலே மறை ஓதுபவர்களை வைத்துக் கூட தாராளமாக செய்யலாம். இங்குதான் செய்ய வேண்டும் அங்குதான் செய்ய வேண்டும் என்பதெல்லாம் ஏதுமில்லை. எந்த இடத்தில் வாய்ப்பும் சூழலும் அமைகிறதோ அங்கு தாராளமாக செய்யலாம். ஒரு குறிப்பிட்ட ஆலயத்தில் செய்தால்தான் பலன் என்பதை யாங்கள் ஒருபொழுதும் கூற விரும்பவில்லை.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 422

கேள்வி: உச்சிஷ்ட கணபதி ஜேஷ்டாதேவி வழிபாடு பற்றி:

இறைவனின் கருணையாலே நல்விதமாய் இதுபோல் இந்த வழிபாட்டை குறித்து மனிதர்களின் கருத்து எப்படியிருந்தாலும் அதனையும் நாங்கள் ஏற்கிறோம். ஆனாலும் கூட பல்வேறு மன உளைச்சல் காரணமாக பூர்வ ஜென்மத்தில் பலரின் தூக்கம் கெடுவதற்கு காரணமாக வாழ்ந்த மனிதர்கள் இந்த ஜென்மத்தில் அத்தனை எளிதாக தூங்க இயலாது. எனவே நல்லவிதமான தூக்கம் இல்லையே? அதனால் உடலில் பலவிதமான உபாதைகள் வருகிறதே? என ஏங்கித் தவிப்பவர்கள் ஜேஷ்டாதேவியை வழிபாடு செய்யலாம். அதோடு மட்டுமல்ல தூங்க வேண்டிய நேரத்தில் தூங்காமலும் தூங்கக் கூடாத நேரத்தில் தூக்கம் வருவதும் தோஷம்தான். அதற்கும் இந்த வழிபாடு முக்கியம். இது எல்லாவற்றையும் விட தூக்கம் என்பது வெறும் உடல் சார்ந்த ஓய்வு மட்டுமல்ல. இந்த உலக துக்கங்களில் இருந்து விடுபட்டு நிரந்தரமாய் தூங்கக் கூடிய அந்த தூக்கமும் நல்விதமாய் வருவதற்கும் ஜேஷ்டாதேவி வழிபாடு உதவும்.

அதைப் போல மூலாதார குண்டலினி யோக சக்தியை எத்தனை முயன்றாலும் எத்தனை பயிற்சி எடுத்தாலும் ஒன்றும் புரிவதில்லை என்று எண்ணக் கூடியவர்கள் இன்னவன் வினவிட்ட விநாயகப் பெருமானை நல்விதமாக வழிபட வழிபட கட்டாயம் அந்த ஆற்றல் ஏற்படுவதோடு எதைத் தொட்டாலும் தடை தடை வந்து கொண்டே இருக்கிறது எத்தனை கவனமாக திட்டமிட்டு முடிவெடுத்தாலும் தடை வந்து கொண்டே இருக்கிறது எல்லாவற்றையும் விட ஒருசில நேரங்களில் முடிவெடுக்கவே முடியவில்லை. இதை எடுப்பதா? அதை எடுப்பதா? இப்படி செய்தால் இந்தவிதமான பிரச்சினை வருகிறது. அப்படி ஒரு முடிவு எடுத்தால் வேறு விதமான பிரச்சினை வருகிறது என்று முடிவெடுக்க முடியாமல் திணறுகின்ற மனிதர்களும் இதுபோல் விநாயகப் பெருமானை வணங்க நலமாம். இவ்வாறு இந்த விநாயகப் பெருமானை வணங்கினால் இது கிடைக்கும். வேறு விநாயகப் பெருமானை வணங்கினால் கிடைக்காது என்று எண்ணவேண்டாம். ஆத்மார்த்தமாக எங்கு சென்று வழிபாடு செய்தாலும் மேற்கூறிய பலன்கள் உண்டு. அங்கே மனம்தான் முக்கியம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 421

கேள்வி: இல்லத்தில் மகனுக்கோ மகளுக்கோ திருமண பொருத்தம் பார்ப்பது எவ்வாறு?

எல்லா மனிதர்களுக்கும் பொருத்தம் பார்க்க தெரிந்திருக்கிறது. மகான்களிடம் இதை கேட்க வேண்டிய அவசியமே இல்லை. பல கோடிகளுக்கு அதிபதியான ஒருவன் தன் பிள்ளைக்கு அதைப்போல பல கோடிகளுக்கு அதிபதியான ஒரு பெண்ணைத்தான் பார்ப்பான். அழகாக இருக்கின்ற ஒரு பெண் தன்னைவிட அழகான ஒரு வாலிபனைத்தான் விரும்புவாள். நன்றாக படித்த ஒரு ஆண் அதைப் போல படித்த பெண்ணைதான் விரும்புவான். இப்படித்தான் காலகாலம் நடந்து கொண்டிருக்கிறது. இனியும் நடக்கப் போகிறது. பலகோடிக்கு அதிபதியான ஒரு குடும்பத்திலே உள்ள ஒரு பெண்ணிற்கு பரம ஏழையை திருமணம் செய்து வை. வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று அந்த ஈஸ்வரனே நேரில் வந்து தோன்றி கூறினாலும் யாரும் ஏற்கப் போவது கிடையாது. அதை எல்லாவற்றையும் விட எத்தனை ஞானிகள் மகான்கள் தோன்றினாலும் ஏன்? எமது வாக்கை சில ஆண்டுகள் கேட்டுக் கொண்டிருக்கும் சில நல்ல ஆத்மாக்கள் கூட இன்னமும் ஜாதி என்ற பிடியை விட்டு வெளியே வர முடியாமல் இருக்கிறார்கள். எனவே முதலில் இந்த பொருத்தம் என்ற வார்த்தையை ஜாதக ரீதியாக அணுகும் பொழுது கட்டாயம் முழுக்க முழுக்க அவன் அந்த ஜாதகத்தை நம்ப வேண்டும் ஏற்க வேண்டும். அடுத்ததாக அந்த ஜாதகம் சரியாக உண்மையாக எழுதப்பட்டிருக்கிறதா? என்று பார்க்கவேண்டும். ஏனென்றால் யாம் ஏற்கனவே கூறியிருக்கிறோம்,

மனிதர்களுக்கு கிடைத்துள்ள பஞ்சாங்கக் குறிப்புகளே முழுமையானது அல்ல என்று. ஜாதக விவரங்களும் நூற்றுக்கு நூறு சரியானது என்று கூற இயலாது. இதையெல்லாம் தாண்டி ஒரு மனிதன் ஜாதக ரீதியாக இருக்கின்ற ஜாதகத்தை வைத்து நாங்கள் பொருத்தம் பார்த்துதான் ஆகவேண்டும் குருநாதா சொல்லுங்கள் என்றால் அதுபோல் ஜாதகத்திலே லக்ன பாவத்திலிருந்து பார்க்கும் பொழுது சப்தம் எனப்படும் ஏழாமிடம் அட்டம் எனப்படும் எட்டாமிடம் தனம் வாக்கு ஸ்தானம் எனப்படும் இரண்டாமிடம் அதையடுத்து நான்காமிடம் இவற்றையெல்லாம் உற்று நோக்கி பார்க்க வேண்டும். கட்டாயம் நூற்றுக்கு தொண்ணூறு விழுக்காடுக்கு மேல் இவையெல்லாம் பழுதுபட்டுதான் இருக்கும். என்ன காரணம்? எந்த இடத்திலே லக்னம் இருக்கிறதோ அதிலிருந்து 180 கலை தாண்டிதான் சப்தமும் இருக்கும். கட்டாயம் இரண்டிற்கும் பொருந்தவே பொருந்தாது. இறைவன் முன்பே முடிவு செய்து விட்டார். எந்தக் கணவனுக்கும் எந்த மனைவிக்கும் பொருந்தாது என்று. வேறு வழியில்லாமல்தான் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதுதான் உண்மை. அன்பினால் அல்ல.எனவே ஜாதகத்தை அதிகமாக ஆராய்ந்து பார்த்தால் குழப்பம்தான் மிஞ்சும். நூற்றுக்கு தொண்ணூறு ஜாதகங்கள் திருமணத்திற்கு உகந்த ஜாதகமாகவே இராது. வேறு எப்படிதான் பொருத்தம் பார்ப்பது? என்றால் ஏதோ மனித வடிவிலே ஜோதிடன் என்று ஒருவன் இருக்கிறானே. அவன் எதை தேர்ந்தெடுத்து தருகிறானோ அதை வைத்துக் கொண்டு அதைத் தாண்டி மனிதர்களின் சிந்தனையில்தான் ஆயிரம் கேள்விகள் இருக்கிறதே? இதுபோல் நடைமுறையிலே ஒரே பெண்ணாக இருக்கிறாளா? அல்லது ஒரே பையனாக இருக்கிறானா?

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 420

கேள்வி: அகோரிகள் இறந்த உடலை இறைவனுக்குப் படைத்து அதை பச்சையாக உண்கிறார்கள். இதை இறைவன் ஏற்றுக்கொள்கிறாரா?

இறைவனின் கருணையைக் கொண்டு இதுபோல் வினாவிற்குள் புகுவதற்கு முன்னால் மனிதர்களை பார்த்து ஒன்று கேட்க வேண்டும். மனிதர்கள் மட்டும் வேறு வேறு விலங்குகளை வேட்டையாடி உண்ணலாம் தவறொன்றுமில்லை. அதை நியாயப்படுத்துகிறான் மனிதன். அது குறித்து எதாவது கூறினால் இதை உண்டால்தான் பலம் உடலுக்கு ஆற்றல் என்று கூறுகிறான். அதோடு மட்டுமல்லாமல் அதற்கு வேறு வேறு வர்ணம் பூசுகிறான். பிற உயிரைக் கொன்று உண்ணாதே. உன் வயிறு என்ன சுடுகாடா? என்று கேட்டால் அதனை மனிதனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏதேதோ காரணங்களை கூறுகிறான். எத்தனை நியாயமான காரணங்களை மனிதன் கூறினாலும் உயிர்களை கொன்று ஒரு மனிதன் தின்னும்வரை அவன் இறையருளை கடுகளவு கூட பெறமுடியாது என்பதுதான் உண்மையிலும் உண்மையாகும். அதற்காக சைவமாக இருக்கிறேன் என்று ஒரு மனிதன் மற்ற அனாச்சாரங்களை செய்தால் இறைவன் ஏற்றுக் கொள்வார் என்று எண்ண வேண்டாம். சைவமாக இருப்பதும் ஒரு நல்ல கொள்கை ஒரு நல்ல சிந்தனை நல்ல குணம். அதோடு பிற நல்ல குணங்களையும் ஒரு மனிதன் வளர்த்துக் கொண்டிட வேண்டும். அறியாமையால் ஒரு மனிதன் இந்தத் தவறை செய்தால் இறைவன் மன்னித்து விடுவார். அறிந்த பிறகு அதைத் தொடர்ந்தால் தவறாகும்.

நிலைமை இவ்வாறிருக்க வலிமையான மனிதன் விதவிதமான பொறிகளை வைத்து விலங்கை பிடித்து உண்ணுகிறான். விலங்குகள் துடித்தாலும் மனிதனுக்கு கவலையில்லை. ஆனால் மனிதனைவிட ஆற்றல் உள்ள ஒருவன் மனிதனை வேட்டையாடித் தின்றால் மட்டும் அவன் அசுரன். இந்த வாதத்தை எப்படி ஏற்றுக் கொள்வது? மனிதன் விலங்கைக் தின்னுவது நியாயம் என்றால் மனிதனை இன்னொருவன் வேட்டையாடி தின்றாலும் இறைவன் பார்த்துக் கொண்டிருப்பார். நடந்தது நடந்து கொண்டிருக்கிறது இப்பொழுதும் நடந்து கொண்டிருக்கிறது. எனவே தனக்கு ஒரு நியாயம் பிறருக்கு ஒரு நியாயம் என்றெல்லாம் கூறக் கூடாது. எனவே ஒரு விலங்கைக் கூட இந்த உலகில் எந்த மனிதனும் துன்புறுத்துவதில்லை, ஆராய்ச்சி என்ற பெயரில் அனாச்சாரம் செய்வதில்லை, உணவுக்காக கொன்று தின்பதில்லை என்ற உறுதி எடுத்துக் கொண்ட பிறகு மனிதனை வேறு யாரும் வேட்டையாடாமல் இருந்தால் அது குறித்து சிந்திக்கலாம். அடுத்ததாக எந்த நிலையிலும் எந்த ஒரு உயிரையுமே அடித்து துன்புறுத்தி உணவாக ஏற்பதை யாங்களோ இறைவனோ விரும்புவதில்லை. அடுத்து இறைவன் இதையெல்லாம் கேட்டாரா? என்று கேட்டால் பிறகு இறைவன் மற்றவற்றைக் கேட்டாரா? என்று மனிதன் கேட்பான். எனவே மனிதனாக உணர்ந்து இந்த உயிர்க் கொலையில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு சாத்வீக வழியில் வந்தால்தான் இதற்கு ஒரு நல்ல தீர்வு ஏற்படும்.

இப்பொழுது இன்னவன் கேட்ட அகோரி தொடர்பான வினாக்களுக்கு வரும் பொழுது உண்மையான ஞானிகளும் மகான்களும் இந்த உலகில் எப்படி குறைவோ எப்படி அவர்களைப்போல் வேடமிட்டவர்கள் அதிகமோ அதைப்போல அகோரிகள் போல் வேடமிட்டவர்கள்தான் அதிகம். உண்மையான அகோரியின் தத்துவம் என்ன? பஞ்சபூத மாற்றங்களை எதில் வேண்டுமானாலும் செய்யலாம். ஒரு பொருளை இன்னொரு பொருளாக மாற்றலாம். மனிதன் அருவறுக்கும் ஒரு பொருளை உண்ணக் கூடிய பொருளாக மாற்றலாம் என்ற தத்துவம்தான் இது. இறந்த மனித உடலை உண்கிறார்கள் என்றால் அப்படியல்ல அதன் பொருள். இறந்து போன அந்த உடலை வேறு ஒரு கனிவகையாக மாற்றிதான் உண்மையான அகோரி உண்ணுவான். அந்த ஆற்றல் யாருக்கு இருக்கிறதோ அந்த நிலைக்கு எவன் சென்றானோ அவனை வேண்டுமானால் ஓரளவு அகோரி என்று கூறலாம். மற்றவர்கள் எல்லாம் ஏதோ அந்தக் கொள்கையில் ஈர்க்கப்பட்டு அதுவாக முயற்சி செய்கிறார்களே தவிர எம் நோக்கிலே அவர்களையெல்லாம் ஏற்பதில்லை. எனவே இதுபோன்ற அனாச்சாரமான விஷயங்களை ஒருபொழுதும் சித்தர்கள் ஏற்பதில்லை. உச்ச நிலை ஞானம் பெற்றவர்கள் எதையும் செய்கிறார்கள் என்றால் அந்த ஞானத்தை பெறாதவர்கள் அதைப்பார்த்து புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டதைப் போல செய்தால் அது ஏற்புடையது அல்ல. எனவே இது எப்படிப் பார்த்தாலும் அனாச்சாரமே.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 419

கேள்வி: கடைவிரித்தேன் கொள்வாரில்லை இது வள்ளலாரின் ஆதங்கம். கடந்த 9 ஆண்டுகளாக ஞானக் கருத்துக்களை தொடர்ந்து கூறிவந்தும் ஒருவர் கூட கடுகளவு கூட தேறவில்லை என்பதே கசப்பான உண்மை. இது தங்கள் ஆதங்கம். இரண்டிற்கும் வேறுபாடில்லை. நாங்கள் என்ன செய்வது?

இறைவனின் அருளைக் கொண்டு இயம்புவது யாதென்றால் காலகாலம் உயர்ந்த கருத்துக்களும் விஷயங்களும் ஞானக் கருத்துக்களும் பலரால் பல மகான்களால் போதிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கும். அவற்றை பல மனிதர்கள் கேட்டாலும் சிலர்தான் பின்பற்ற முடியும். சிலரில் சிலர்தான் உறுதியாக பின்பற்ற முடியும். இது போதிக்கின்ற மகான்களுக்கு தெரிந்தாலும் கூட பிள்ளைகள் இப்படி தவறான வழியில் செல்கிறார்களே? இந்த செல்வங்கள் உண்மையான ஒரு நல்ல விஷயத்தை எடுத்துக் கூறினாலும் நான் உணர்ந்ததை அறிந்ததை பெற்றதை இவர்களும் பெற வேண்டும் என்று எண்ணி உரைத்தாலும் அதை புரிந்து கொள்ள மறுக்கிறார்களே? என்ற ஆதங்கத்தில் கூறுவதுதான். இறைவனின் அருளாலே மகான்களுக்கு எதை செய்தாலும் அதன் எதிர்பார்ப்பும் விளைவும் எப்படியிருந்தாலும் பாதகமில்லை இறைவன் இட்ட கட்டளையை செய்ய வேண்டும். இந்த காலத்தில் இந்த ஜென்மத்தில் இந்தந்த பிறவிக்கு இந்தந்த ஞானத்தை போதிக்க வேண்டும். அதை இந்தந்த மனிதர்கள் பின்பற்றுவார்கள். இந்தந்த மனிதர்கள் கேட்பார்கள் பின்பற்ற மாட்டார்கள். இந்தந்த ஜென்மங்கள் தாண்டி அவர்களுக்கு இந்த ஞானக் கருத்துக்கள் உதவலாம் என்று தெரிந்துதான் போதிப்பார்கள். இருந்தாலும் மனித உடலெடுத்த பிறகு எத்தனை பெரிய ஞானியாக இருந்தாலும் சில ஆதங்கங்களும் எதிர்பார்ப்புகளும் வந்து விடுகிறது. அதன் விளைவுதான் அவன் கடைவிரித்தேன் என்ற வாசகத்தைக் கூறியது.

யாங்களும் எத்தனை ஞானக் கருத்துக்களை கூறினாலும் அதை சரியாக புரிந்து கொள்ள முடியாமல் பாவங்கள் மனிதர்களை திசைமாற வைக்கிறதே? தடுமாற வைக்கிறதே? என்றுதான் கூறுகிறோம். அதனால்தான் அடிக்கடி யாங்கள் கூறுவது பாத்திரத்தை சுத்தி செய்து பிறகு பாலைக் காய்ச்சினால் பால் நன்றாக இருக்கும். பாவங்களை வைத்துக் கொண்டு எத்தனைதான் ஆன்மீகம் பேசினாலும் இறைவனை வணங்கினாலும் அந்த பாவங்கள் இறையாற்றலை சரியாக உணர விடாது. எனவே ஒன்று பாவங்களை அனுபவித்து தீர்க்க வேண்டும் அல்லது தர்ம காரியங்களால் தீர்க்க வேண்டும் அல்லது மந்திர ஜெபத்தால் தீர்க்க வேண்டும் அல்லது ஸ்தல யாத்திரையால் தீர்க்க வேண்டும். எல்லாவற்றையும் விட முக்கியம் பாவங்களைத் தீர்க்கிறேன் என்று ஒருபுறம் பரிகாரங்கள் செய்து கொண்டே தர்மங்கள் செய்து கொண்டே இன்னொருபுறம் வார்த்தைகளால் பிறரை காயப்படுத்திக் கொண்டே உதாசீனம் செய்து கொண்டே பலரை நோகடித்துக் கொண்டே இருந்தால் அதனால் எந்த விதமான பலனும் இல்லை. எனவேதான் விதவிதமான ஞானக் கருத்துக்களை யாங்கள் போதித்தும் அதனை சரியாக புரிந்து கொள்ள இயலாமல் தடுமாறுகிறார்களே? தடுமாறி தடுமாறி மக்கள் மாய்ந்து வாழ்கிறார்களே? என்ற நோக்கில் யாங்கள் அதனை கூறியிருக்கிறோம். என்றிருந்தாலும் ஒவ்வொரு ஆத்மாவும் கடைத் தேறத்தான் வேண்டும்.

அது இன்றே இப்பொழுதே இத்தருணமே இக்கணமே கடைத்தேறினால் நன்றாக இருக்குமே? அதற்குதானே நாங்கள் இறைவனருளால் வழிகாட்டுகிறோம் என்றும் அதோடு மட்டுமல்ல எதையெதை எப்படியெப்படி உணர்வது? என்றெல்லாம் கூட நாங்கள் அவ்வப்பொழுது கோடிட்டுக் காட்டுகிறோம். இதழ் ஓதுகின்ற இன்னவன் மூலமும் சில விஷயங்களை செய்து காட்டுகிறோம். என்ன செய்தாலும் எதைப் பார்த்தாலும் எங்கள் உள்ளம் எங்கள் மனம் எங்கள் சிந்தனை எப்படியெல்லாம் இருக்கிறதோ அதற்கு தகுந்தாற் போல்தான் இறைவனும் சித்தர்களும் வரவேண்டும் என்று மனிதர்கள் எண்ணும் பொழுது அங்கேதான் சித்தர்களுக்கு, மனிதர்களுக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டுவிடுகிறது. இந்த இடைவெளி குறைய வேண்டும். இறைவனுக்கும் மனிதர்களுக்கும் இடையே இடைவெளியை குறைக்க வேண்டும் என்றுதான் யாங்கள் வந்திருக்கிறோம். ஆனால் அந்த இடைவெளியை குறைக்கவே மனிதர்கள் விரும்பவில்லை என்பதுதான் உண்மையிலும் உண்மையாகும். இடைவெளி குறைய நல்ல நல்ல மாற்றங்கள் ஏற்படும். இறைவனுக்கும் மனிதர்களுக்கும் இடையே என்னென்ன இடைவெளி இருக்கிறது? என்பது மனிதர்களுக்கே தெரியும். அவனுடைய ஆசை பாசம் பற்று அவனுடைய எதிர்பார்ப்பு சினம் இவையனைத்தும் இறைவனுக்கும் மனிதர்களுக்கும் இடையே உள்ள இடைவெளி. இவற்றையெல்லாம் மெல்ல மெல்ல விட்டுவிட்டால் இறையோடு மனிதன் நெருங்குவான்.

இறையோடு மனிதன் நெருங்க நல்ல மாற்றங்களை ஒரு மனிதன் உணர இயலும். நிரந்தர நிம்மதி சந்தோஷம் வேண்டும் என்று மனிதன் எண்ணுகிறான். அதற்கு வழிகாட்டினால் அந்த வழியில் செல்லத்தான் மனிதர்களுக்கு அச்சமாக தயக்கமாக குழப்பமாக இருக்கிறது. அதை மாற்றத்தான் நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கொண்டே இருக்கிறோம். இதனை சரியாக புரிந்து கொண்டு எம் வழியில் இறை வழியில் எம் சேய்கள் வர நல்லாசிகள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 418

ஆஞ்சனேயர் வாய்பொத்தி இருப்பதின் தாத்பர்யம் என்ன ?

இறைவனின் கருணையைக்கொண்டு யாம் கூறவருவது யாதென்றால் இதுபோல் முற்றிய கதிர் வளைந்தே இருக்கும். நிறைகுடம் தழும்பாது என்பார்கள். அதைப்போல பரிபூரண ஞானத்தன்மையும் பரிபூரண இறையாற்றலை உள்ளே உணர்ந்து கொண்ட எந்தவிதமான ஆத்மாவும் அல்லது இறையின் அம்சம் தானாக இருந்தாலும்கூட பணிந்து ஒன்றுமே இல்லாத நிலையில் தான் ஒன்றுமேயில்லை என்பதுபோல் காட்டிக் கொள்வதுதான் பெரியதின் விளக்கம். என்றுமே பெரியது சிறியதாக இருக்கும். சிறியது பெரியதாக இருக்கும். இதனால்தான் தமிழ் எழுத்திலே சிறியது சிறியவர் என்று சொல்லும் பொழுது அங்கே பெரிய எழுத்தையும் பெரியது என்று கூறும் பொழுது அங்கே சிறிய எழுத்தையும் எழுதுகின்ற வழக்கம் வந்தது. எனவே ஒரு மனிதன் வளர வளர ஒரு ஆத்மா வளர வளர தனக்குள் அதிக ஆற்றல் இருப்பதாக தற்பெருமை பேசாமல் அப்படியாக நயந்து நயந்து பணிந்து பணிந்து எந்தளவிற்கு பணிய முடியுமோ அப்படி பணிவதே சிறப்பாகும். எனவே ஆஞ்சனேயர் யார்? முக்கண்ணன் யார்? முக்கண்ணன் வேறு ஆஞ்சனேயர் வேறா? அதிருக்க நிலையிலே அதுபோல் பேதங்கள் எல்லாம் மறைந்து எல்லாம் ஒன்று பட வேண்டும் என்ற கருத்திலே முக்கண்ணனாகிய நான் ஆஞ்சனேயராக இருந்தாலும் கூட மஹாவிஷ்ணுவின் அவதாரத்திற்கு முன்னால் பணிந்து தாழ்ந்து இருக்கிறேன் என்பதுதான் பொருள். எனவே உயர ஒரு மனிதன் பணிய வேண்டும் என்பதின் உட்பொருளே இது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 417

ஔவையார் சொன்ன அற்புதம் நின்ற கற்பகக் களிறே இதற்கு விளக்கம்:

இறைவனின் கருணையைக் கொண்டு இதுபோல் கூறும் முன் ஒவ்வொரு வாசகம் வாக்கியம் இதுபோல் பக்தி பாடல்கள் பாசுரங்கள் இவற்றின் பொருள் என்பதும் அர்த்தம் என்பதும் வெளிப்படையாக தெரிவது ஒன்று உள்ளொன்று இருப்பது ஒன்றாகும். மனிதர்கள் அதற்கு அர்த்தம் கற்பிப்பது என்பது வேறு. மகான்கள் அதை வேறு வகையில் புரிந்துகொள்ள என்றுமே அர்த்தம் கற்பிப்பார்கள். இதுபோல் முழுக்க விநாயகப் பெருமானின் தன்மையையும் பரம்பொருள் விநாயகப் பெருமானின் வடிவில் இருக்கின்ற பொழுது அந்த ஓம்கார தத்துவத்தை அந்த வடிவம் உணர்த்தி அந்த வடிவத்தையே தொடர்ந்து தியானம் செய்து தியானம் செய்து அந்த வடிவத்தின் தன்மையாய் தானும் மாறுகின்ற அந்த செயல்தான் அற்புதமாகும்.

அந்த அற்புதமாய் நின்ற கற்பகக் களிறே என்று அதுபோல் விநாயகப் பெருமானின் அற்புதமான அந்த ஆற்றலை பரம்பொருள் விநாயகப் பெருமானின் வடிவத்தில் செய்கின்ற லீலா வினோதங்களை விநாயகப் பெருமானின் அந்த வடிவத்தால் மனிதனுக்குள் ஏற்படக்கூடிய ஆன்மீக மெய்ஞான மாற்றங்களை அதோடு மட்டுமல்லாமல் முழுமையான நல்விதமான பற்றற்று மிகவும் லோகாய ஆசைகளில் சிக்கி உழல்கின்ற மனிதனுக்கு அதையெல்லாம் தாண்டி அதுபோல் ஒரு ஞான நிலை சட்டென்று கிட்டுவதற்கு அதுபோல் வழிமுறையை கற்பிக்கின்ற அருளுகின்ற விநாயகப் பெருமானையே அற்புதம் என்றும் களிறே என்றும் பிராட்டி (அவ்வை) போற்றுகிறாள். அதோடு மட்டுமல்ல எல்லோரும் அவசரமாய் சுந்தரரின் முக்திமோட்ச நிலையை தரிசிக்கும் வேளையிலே இதுபோல் பிராட்டியும் நல்விதமாய் ( திருக்) கோவிலூர் தன்னிலே அவசரகதியாய் பூஜை செய்யும் பொழுது மூத்தோனும் தடுத்தாட் கொண்டு சுந்தரனுக்கு முன் உன்னை அழைத்து யாம் செல்வோம் என்று கூறிய அந்த வாசகத்தின் பொருளால் சிலிர்த்துப் போன பிராட்டியின் வாசகமப்பா இது. இதைத்தாண்டி எந்தவிதமான பொருள் கூறினாலும் அது மனிதனின் விருப்பமப்பா.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 416

அகத்திய மாமுனிவர் அருளிய பொது வாக்கு:

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இதுபோல் நல்விதமாய் எமை நாடும் சேய்கள் ஏன் மனித குலம் முழுவதும் எல்லா உயிரினங்களும் நலமாய் வாழ பாவ எண்ணங்கள் இல்லாது வாழ பாவத்தின் பிடியிலிருந்து விலகி வாழ இறைவன் அருளாலே நல்லாசிகளை இயம்புகிறோம். இயம்புகிறோம் இதுபோல் நல்விதமாய் ஹஸ்தம் (அஸ்த நட்சத்திரம்) மீன் ஓடும் காலம் இதுபோல் இறைவனின் அருள் ஆணையால் யாம் எம் சேய்களுக்கு சில வாக்குகளை கூற இருக்கின்றோம் நலமாய். நலமாய் வாழத்தான் உயிர்கள் எண்ணுகின்றன. நலமாய் வாழத்தான் மாந்தனும் எண்ணுகிறான். நலமாய் வாழ வேண்டும் என எண்ணுகின்ற மாந்தன் நலத்தை எண்ணி நலத்தை உரைத்து நலமே செய்ய நலமே நடக்கும் என்று நாங்களும் நாள்நாளும் கூறிக் கொண்டே இருக்கிறோம். நலத்தை எண்ணி நலத்தை உரைத்து நலத்தை செய்தாலும் நலமில்லாமல் வருகிறதே? என மனிதன் விரக்தி கொண்டே வாழ்கிறான். நலத்தை எண்ணி நலத்தை உரைத்து நலமாய் வாழ என்றென்றும் யாங்கள் அருளாணையிட்டாலும் நலத்தை எண்ணி நலத்தை உரைத்து நலத்தை செய்து வாழ மாந்தர்களுக்கு பல்வேறு தயக்கங்கள் இருக்கின்றன. அத் தயக்கம் யாவற்றையும் விட்டுவிட்டு என்ன விளைவுகள் நடந்தாலும் நலம் எண்ணி நலத்தை உரைத்து நலமாய் வாழ இதுபோல் மீண்டும் அதுபோல் நலத்தை நினைவூட்டி நலமாய் அனைவரும் வாழ இறைவனருளால் நல்லாசிகளை இயம்புகிறோம்.

இயம்புகிறோம் இதுபோல் மனம் தொடர்ந்த எண்ணங்களின் ஓட்டமாகும். இயம்புகிறோம். தொடர்ந்த எண்ணங்களின் ஓட்டமானது இதுபோல் விதவிதமாய் மனிதர்களை வாட்டி வதைத்துக் கொண்டே இருக்கிறது. தொடர்ந்த எண்ணங்களின் ஓட்டம் ஒடுங்கினால் தொடரும் எண்ணங்கள் அற்ற நிலை வரும். எண்ணங்களற்ற நிலை ஒரு மனிதனுக்கு எப்பொழுது வருகிறதோ அன்றுதான் அவன் பின்னங்கள் இல்லாது வாழக்கூடிய வழியை அறிவான். எனவே எவ்வித எண்ணங்களும் இல்லாத நிலையை நோக்கி மனிதன் செல்வது என்பது எடுத்த எடுப்பிலேயே கடினம் என்றுதான் பக்திவழி கூறிக் கொண்டே இருக்கிறோம். பக்தியும் தர்மமும் சத்தியமும் ஒருநாள் கட்டாயம் மனிதன் எண்ணுகின்ற நிரந்தர நிம்மதியை, நிரந்தர சந்தோஷத்தை தரும். ஆனால் அதுவரை மனிதனின் மனம் அலை பாய்ந்து கொண்டேதான் இருக்கிறது இந்த உலகினால் ஆசாபாசங்களால் பந்தபாசங்களால் பற்றால். ஆசையால் அதனால்தான் எடுத்த எடுப்பிலேயே இவற்றையெல்லாம் விடு என்று கூறுவதைவிட மாந்தர்களின் போக்கிலேயே ஆன்மீக வழிமுறைகளை போதித்து இதுபோல் பல்வேறு விதமான சடங்குகளையும் பூஜை முறைகளையும் கூறி அந்த வழியிலிருந்து மெல்ல மெல்ல அவன் மேலேறி வரவேண்டும் என்றுதான் யாங்கள் எதிர்பார்க்கின்றோம். ஆனாலும்கூட எத்தனைதான் நுணுக்கமாய் யாங்கள் வெளிப்படையாய் தெளிவாய் உரைத்தாலும் யாங்கள் எந்த நோக்கிலே உரைத்தாலும் அந்த நோக்கிலே புரிந்து கொள்ளாமல் போவதுதான் மனிதர்களின் தன்மையாகும்.

யாங்கள் எதை எதற்காக எப்படி கூறுகிறோம்? என்பதை சரியாக புரிந்து கொள்ளக் கூடிய மனம் ஒரு மனிதனுக்கு இருந்து விட்டால் அவன் விரைவில் இறையருளை பரிபூரணமாக பெற்றுவிடுவான். இதுபோல் மனதிலே ஒரு மனிதனுக்கு கள்ளமும் சூதும் சூழ்ச்சியும் இல்லாத நிலையிலே அவன் இறையருளைப் பெறுவது எளிதாகும். சுயநலமும் சூழ்ச்சியும் சந்தேகமும் ஆளுமை சிந்தனையும் அகங்காரமும் யாரிடம் இருந்தாலும் இறையருளைப் பெறுவது கடினமாகும். எனவே எமை நாடும் சேய்கள் நாள்நாளும் எமது வாக்கின் போக்கை சிந்தித்து சிந்தித்து யாங்கள் என்ன கூற வருகிறோம்? எதற்கு கூறுகிறோம்? எப்படி கூறுகிறோம்? எந்த இடத்தில் கூறுகிறோம்? எதற்காக கூறுகிறோம்? என்ன வழிமுறைக்காக கூறுகிறோம்? அதனை எப்படி புரிந்துகொள்ள வேண்டும்? என்பதை நன்றாக சுய ஆய்வு செய்து புரிந்து புரிந்து புரிந்து எமது வாக்கை அசைபோட்டு அசைபோட்டு அந்த வழியில் மேலேற இறைவன் அருளால் நல்லாசிகளை இயம்புகிறோம்.

இதுபோல் நல்விதமாய் தொடர்ந்து இறை பக்தியும் பரிபூரண சரணா பக்தியும் இந்த சரணா பக்தி என்பது சரணாகதியிலிருந்து வருவதாகும். சரணாகதி பக்தி இல்லையென்றால் ஒரு மனிதனுக்கு எந்தவிதமான நிம்மதியும் சட்டென்று வந்துவிடாது. எனவேதான் எந்தவிதமான ஐயமுமின்றி சரணாகதி பக்தியை ஒருவன் வளர்த்துக்கொள்ள வேண்டும். சரணாகதி பக்தி வளரவேண்டும் என்றால் ஒரு மனிதனிடம் கூடுமானவரை குற்றங்களும் குறைகளும் இல்லாமல் இருத்தல் அவசியம். குற்றங்கள் இருந்தாலும் அவற்றை உள்ளுணர்ந்து மெல்ல மெல்ல திருத்திக்கொள்ள வேண்டும். தவறு செய்வதைவிட பலர் முன் அந்தத் தவறை எவனொருவன் ஒத்துக்கொள்கிறானோ அவன்தான் எமது வழியில் வர தகுதி பெற்றவனாவான். எனவே நல்விதமாய் சிந்தனையை வளர்த்து சிந்தனையை கூர்மையாக்கி எமது வழிமுறையை புரிந்துகொண்டு வர பரிபூரண நல்லாசியை இத்தருணம் கூறுகிறோம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 415

நாங்கள் ஆலயத்திற்கு செல்லும் பொழுது லிங்க ஸ்வரூபத்தை வணங்குவதா? அல்லது சுடரை ஆராதிப்பதா? எதில் ஒன்றுபடுவது?

இறைவனின் கருணையைக் கொண்டு யாம் கூறுவது என்னவென்றால் இறையை உணர்வதற்கு உண்டான கரணங்களே புறத்தோற்றங்களே இத்தனையும். ஆலயமாக இருக்கட்டும் தெய்வ வடிவங்களாக இருக்கட்டும். அங்கே நடக்கின்ற புற சடங்குகளாக இருக்கட்டும் தீப ஆராதனையாக இருக்கட்டும் ஒலிக்கின்ற மணியாக இருக்கட்டும். மனிதரின் மனோநிலையும் மன பக்குவமும்தான் இறைவனை உணர்வதற்கு உண்டான ஒரு கருவியாகும். உதாரணமாக உரத்து மந்திரங்களை சொன்னால்தான் சிலருக்கு இறைவனை வழிபட்ட திருப்தி ஏற்படும். அப்படி ஒரு மனோபாவம் இருக்கின்ற மனிதன் அவ்வாறு செய்துவிட்டுப் போகட்டும். சிலருக்கு மனதிற்குள் மந்திரத்தை உச்சரித்தால்தான் இறைவனை திருப்தியாக வழிபட்ட ஒரு நிலை ஏற்படும். அப்படிப்பட்ட மனிதன் அப்படியே வணங்கிவிட்டு செல்லட்டும். இன்னும் சிலருக்கோ இன்னவன் கூறியதுபோல கண் மூடி மௌனமாக இருந்தால்தான் இறைவனை வணங்கியது போல் தோன்றும்.

இறைவன் காட்சி தந்தது போலவும் தோன்றும். அப்படியொரு மனோபாவம் இருக்கின்ற மனிதன் அவ்வாறே செய்துவிட்டுப் போகட்டும். இது மனிதன் வளர வளர மாறக் கூடிய நிலையாகும். எனவே கருவறையின் முன்னால் நிற்க வேண்டும் விழி மூடவேண்டும் அல்லது விழி திறக்க வேண்டும் அல்லது லிங்க ஸ்வரூபத்தையோ அம்பாளையோ பார்க்க வேண்டும் அல்லது ஆராதனையை காதால் கேட்க வேண்டும். மந்திரங்களை கேட்க வேண்டும் அல்லது தீப சுடரை உற்றுப் பார்க்க வேண்டும். இப்படி எதையும் நாங்கள் கூறவில்லை. மனதில் இறை பற்றிய சிந்தனை இருக்கிறதா? இறைவனை இந்த வடிவத்தில் பார்த்தால் என் மனம் ஏற்றுக் கொள்கிறது என்று ஒரு மனிதனுக்கு ஒரு வடிவம் பிடித்திருக்குமே? அந்த வடிவத்தை மனதில் கொண்டுவந்து வைத்து விட்டால் போதும். இறை சிந்தனை இருந்தால் போதும். விழி மூடி வாய் மந்திரங்களை உச்சரிக்க உடலெங்கும் திருநீறு பூசியிருக்க சிந்தனை எங்கோ இருந்தால் அதனால் பலனேதுமில்லை. அங்கே ஒரு கணமாவது வேறு சிந்தனை ஏதுமில்லாமல் அதுபோல் நீக்கமற நிறைந்துள்ள பரம்பொருளை லிங்க வடிவமாகவோ அல்லது வேறு எந்த வடிவத்தில் எண்ணினால் மனம் சிக்கென்று பிடித்துக் கொள்கிறதோ அந்த வடிவத்தில் நினைக்க பிடித்துக் கொள்ள நன்மையாகும் அதே வழிபாடாகும்.

Spiritual evolution is achieved by yoga and striving. Devotees perform tapas, holding pots of fire, meditating for long hours, rolling around the temple in hot sand and carrying kavadi. Devas bless their efforts from the inner planes, while the baser worlds remain below and apart.