ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 414

கேள்வி: அன்னை லோபாமுத்திரை வாக்கு அருள வேண்டும்:

இறைவனின் கருணையாலே இதுபோல் சூழல் இறைவன் அருளால் நிகழும் பொழுது கட்டாயம் நடக்குமப்பா. யாம் முன்னரே கூறியதைதான் மீண்டும் நினைவூட்டுகிறோம். எம்மைப் பொறுத்தவரை எல்லாம் ஒன்றுதான் என்று பார்க்க எம் சேய்கள் பழக வேண்டும். இதுபோல் பெண்பால் லோபா முத்திரையாக யானும் ஆண்பால் அகத்தியனாக அன்னையும் இருந்து அருள்பாலிப்பது உண்மை. எனவே இந்த உண்மையை புரிந்து கொண்டால் இங்கு ஆண் பெண் பேதங்கள் யாருக்கும் தோன்றாது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 413

கேள்வி: காஞ்சியில் தாங்கள் வழிபட்ட சாளக்ராமத்தினால் ஆன ஸ்ரீ ராம சக்ரம் சூட்சுமத்தைப் பற்றி சொல்லுங்கள்:

இறைவனின் கருணையைக் கொண்டு பல்வேறு விதமான சக்கரங்கள் குறிப்பாக யந்திரங்கள் செம்பில் கனகத்தில் வெள்ளியில் இருந்தாலும் இதுபோல் சிறப்பிலும் சிறப்பு தூய்மையான கருங்கல்லிலே செதுக்கப்பட்ட சக்கரங்கள். இவற்றிலிருந்து சில ஆற்றல்கள் வருவது உண்மைதான். இவற்றை நன்றாக புரிந்துகொள்வது மனிதர்களுக்கு சற்றே கடினம்தான். இருந்தாலும் சுருக்கமாக யாங்கள் கூறுகிறோம். இதுபோல் எதாவது ஒரு காரணத்தால் குழந்தைகளை பிரிந்திருக்கும் பெற்றோர் கணவனை பிரிந்திருக்கும் பெண்டிர் இதுபோல் எதாவதொரு பிரிவு வாட்டுகின்ற கர்மவினை இருக்கின்ற மனிதர்கள் இதனை வழிபட்டால் பிரிவால் ஏற்பட்ட சோகம் மெல்ல மெல்ல மாறும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 412

கேள்வி: அறப்பணிகளில் ஈடுபடும்போது சில நேரங்களில் மனம் தொய்வடைகிறது. அப்போது என்ன செய்ய வேண்டும்? அடுத்து கர்மவினை ஒரு மனிதனை விட்டு விலகி சென்று கொண்டிருக்கிறது என்பதை எப்படி புரிந்துகொள்வது?

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இதுபோல் நல்விதமாய் ஒரு மனிதன் தர்மம் செய்து கொண்டே இருக்க வேண்டும். புண்ணிய காரியங்களை ஆற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அறச்செயல்களை செய்து கொண்டே இருக்க வேண்டும். சத்தியநெறியில் வாழ்ந்து கொண்டே இருக்க வேண்டும். பரிபூரண சரணாகதி பக்தியை வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். இப்படியெல்லாம் வாழ்ந்தாலும் கூட எதாவது ஒரு துன்பம் வந்து மனம் சோர்ந்து விடுகிறதே? விரக்தியடைந்து விடுகிறதே? இறை பக்தியே வீண் என்பது போலெல்லாம் தோன்றுகிறதே? இத்தனை உருகி உருகி இறைவனை வணங்கினாலும் துன்பம்தான் வருகிறது என எண்ணுவது மனதின் இயல்பு. அப்பொழுது மௌனமாக தனக்குள்ளே சிந்திக்கவேண்டும் உண்மைதான்.

எத்தனையோ தர்மங்களை ஒருவன் செய்திருக்கலாம். எத்தனையோ புண்ணிய காரியங்களை செய்து கொண்டிருக்கலாம். எத்தனையோ விதமான பூஜைகளை செய்யலாம். வாழ்க்கையை தொண்டாகவே மாற்றி வாழலாம். தியாக செம்மலாகவே வாழலாம். ஆனாலும்கூட அவனுக்கும் முன் ஜென்ம முன் ஜென்ம பாவவினைகள் இருக்கிறதல்லவா? அது வந்து வாட்டுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சரி இத்தனை செய்தும் இப்படியொரு துன்பம் வந்திருக்கிறதே? இவையெல்லாம் செய்யாதிருந்தால் இதே துன்பத்தின் தாக்கமும் அளவும் எந்தளவிற்கு இருந்திருக்கும்? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். எனவே தர்ம வழியில் சத்திய வழியில் பக்தி வழியில் சாத்வீக வழியில் பிறருக்கு நல்லதை நினைக்கின்ற செய்கின்ற வழியில் வருகின்ற மனிதனுக்கு துன்பம் வந்தாலும் இறைவன் தலையிட்டு அதனை எப்படியெல்லாம் குறைக்க முடியுமோ குறைத்து அது விதியே ஆனாலும் மாற்றித் தருகிறார். இதற்கு நம்பிக்கைதான் முக்கியம். இதனையும் தாண்டி மனம் விரக்தி அடைந்துவிட்டால் அமைதியாக யாருடனும் பேசாமலும் ஏதாவதொரு ஆலயம் சென்று அமைதியாக அமர்ந்து பிரார்த்தனை செய்துவிட்டு இட்டம் போல் விருப்பம் போல் சில ஆத்மாக்களின் நியாயமான தேவைகளை எப்படியாவது நிறைவேற்றி விடுவோம் என்று போராடி தர்ம காரியத்தை செய்தால் உடனடியாக மறுதினமே மாற்றங்கள் வந்து நல்லதொரு சூழல் ஏற்படும். எனவே இதனை நன்றாக புரிந்து கொண்டு இந்த தர்ம சூட்சுமத்தை நன்றாக செய்ய நன்மை உண்டு. குறிப்புக்காக கூறுகிறோம். இதையே உதாரணமாக பிடித்துக்கொள்ளக் கூடாது.

சில மனிதர்கள் பூர்வ ஜென்ம பாவத்தின் காரணமாக பறவைகளை சிறைபிடித்து விற்பனை செய்வார்கள். இவற்றை வாங்கி உகந்த வனாந்திரமான இடத்திலே சுதந்திரமாக பறக்க விட்டால் எத்தனை மன இறுக்கமும் ஒருசில தினங்களில் மாறிவிடும். பறவைகளை பறக்கவிடு என்பதற்காக மெனக்கெட்டு ஒரு பறவையை பிடித்து அதன் சிறகுகளை நறுக்கி அதனை பற என்றால் அது பாவமாகும். பறவையை வெளியே விடு என்றால் என்ன பொருள்? பறவை எப்படி சிறைபட்டு நொந்து இருக்கிறதோ அப்படி எத்தனையோ ஆண்களும் பெண்களும் சில வேதனையான விஷயங்களை வெளியே சொல்லாமல் இருப்பார்கள். சில நியாயமான தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். அதே சமயம் அதற்கான சூழல் இராது. தனமும் இராது. அவர்களையெல்லாம் தேடிக் கண்டுபிடித்து அவர்கள் வாய் திறந்து கேட்கும் முன்னர் அந்த உதவியை செய்ய வேண்டும். குறிப்பாக இடர்பாட்டில் வேதனையில் இருக்கின்ற பெண்களுக்கு இன்னும் சரியாக கூறப்போனால் எங்கெல்லாம் பெண்கள் துன்பத்தில் இருக்கிறார்களோ அவர்களின் நியாயமான துன்பங்களையெல்லாம் யார் தீர்த்து வைக்கிறார்களோ அவர்களுக்கு இறையருள் பரிபூரணமாக உடனடியாகவே கிட்டும் என்பதை யாங்கள் கூறுகிறோம். அதைப்போல யாரையும் துன்புறுத்தக்கூடாது. குறிப்பாக பெண்களை எந்த விஷயத்திலும் யாரும் துன்புறுத்தாமல் வாழ்ந்தால் அதே இறையருள்தான்.

ஆனாலும்கூட இவையெல்லாம் தெரிந்தாலும் என்னுடைய சூழ்நிலை நான் இவ்வாறு நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது என்று ஒரு மனிதன் தொடர்ந்து தவறுகளை செய்தால் அதன் விளைவுகளை அவன் எதிர் கொண்டுதான் ஆகவேண்டும். எனவே இதுபோல் நல்விதமான வழிமுறையை தர்மத்தை பின்பற்றிக் கொண்டே வந்தால் பாவ கர்மாக்கள் குறையும். பாவ கர்மாக்கள் குறைந்து கொண்டே வருகிறது என்பதை எவ்வாறு ஒரு மனிதன் புரிந்து கொள்ள முடியும்? என்றால் சினம் குறைந்து விடும். பொறாமை இல்லாத மனோநிலை வந்து விடும். ஆற்றாமை இராது. யார் மீதும் எதற்காகவும் ஆத்திரமும் எரிச்சலும் வராது. தனக்கு தீமை செய்த மனிதன் மீது கூட அன்பு பெருகும். இப்படியொரு மனம் யாருக்கு மெல்ல மெல்ல வளர்கிறதோ அவர்களுக்கு பாவங்கள் மெல்ல மெல்ல குறைந்து கொண்டே இருக்கிறது என்று பொருளாகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 411

கேள்வி: புற்றுநோயால் இறக்கும் தருவாயில் உள்ள ஒருவரிடம் நீங்கள் விரைவில் குணமாகி விடுவீர்கள் என்று பொய் சொல்ல வேண்டியிருக்கிறது. இது இன்னுரையில் வருமா? இது சரியா? தவறா?

வள்ளுவன் கூற்றைத்தான் இங்கு எடுத்துக்கொள்ள வேண்டும். பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின். எனவே பிறருக்கு தீங்கைத் தராத எதுவும் பொய்யல்ல. எனவே இதுகுறித்து குழப்பமே வேண்டாம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 410

கேள்வி: பிறருக்கு இன்னுரைதானே திருமூலர் திருமந்திரத்தின் விளக்கம்:

இன்னுரை என்ற சொல்லிற்கு இனிமையான உரை நல்ல சாத்வீகமான வாக்கு அன்பு ததும்புகின்ற வாக்கு என்று பொருள் கொள்ள வேண்டும். இருந்தாலும்கூட நல்ல நண்பர்கள் அல்லது பெற்ற குழந்தைகள் இவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று கடினமான வார்த்தைகளை வேறு உள்நோக்கம் இல்லாமல் பயன்படுத்தும் பொழுது அதும் இன்னுரையாக மாறிவிடுகிறது. அதாவது ஒரு குறிப்பிட்ட பிணிக்கு இனிப்பு பண்டம் எதிரி என்றால் அந்த இனிப்பு பண்டமே விஷமாக மாறிவிடுகிறது. அதே பிணிக்கு கசப்பு பண்டம் மருந்து என்றால் அது மருந்தாக மாறி பிணியில்லாமல் செய்து விடுகிறது. நிலைமை இவ்வாறிருக்க இனிமையாக பேசுகிறேன் பிறரை எப்பொழுதும் நன்றாகவே ஆராதிக்கிறேன் என்று அவர்களை தவறான பாதைக்கு இட்டு சென்றால் அது இன்னுரை அல்ல. பேசுகின்ற வார்த்தை பேசுகின்ற மனிதனுக்கும் பிறருக்கும் நன்மையை தரத்தக்கதாய் உண்மையான வார்த்தையாக இருக்கும் பட்சத்தில் அனைத்து நன்மைகளும் உள்ளடக்கிய வேறு தீய உள்நோக்கம் இல்லாத வாக்கே இன்னுரையாகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 409

கேள்வி: பட்டினத்தாரின் முன்வினைப்பயன் கழுமரம் பற்றி:

பல்வேறு மனிதர்களுக்கு பாவ வினைகளால் அடுத்தடுத்து துன்பங்கள் வருகிறது. ஆனால் ஞானிகளுக்கும் தேவதை வர்க்கங்களுக்கும் ஏது கர்மவினை? என எண்ணலாம். அவர்களுக்கும் சில கர்ம வினைகள் இருக்கின்றன என்பது ஒருபுறமிருக்க பல்வேறு தருணங்களில் கர்மவினை இல்லை என்றாலும் பூமியிலே மனிதனாக பிறந்தால் நல்லவனாக வாழ்ந்தாலும் ஊழ்வினை வந்து உறுத்தூட்டும் என்பதை பிற மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரு கர்மவினை தன்னை தாக்கியதாக நாடகம் ஆடுவார்கள் ஞானிகள். இதுபோல் பார்க்கும் பொழுது பிரகலாதன் வாழ்க்கையிலே என்ன கர்ம வினை இருக்க முடியும்? ஆனால் அதுபோல் பிரகலாதன் இராகவேந்திரராக அவதாரம் செய்தபோது இராகவேந்திரர் பட்ட துயரமெல்லாம் பலர் அறிந்ததே. எதற்கு இராகவேந்திரர் வாழ்க்கையில் அப்படியெல்லாம் நடக்கவேண்டும்? எனவே இதையெல்லாம் கர்மவினையோடு ஒப்பிட்டு பார்க்கக்கூடாது.

ஒரு வார்த்தைக்காக முன்வினை என்று பாடலிலே பட்டினத்தான் கூறியிருக்கலாம். ஆயினும்கூட அந்த முன்வினையையும் தாண்டி அங்கே தெய்வ நாடகம் இருக்கிறது என்பதுதான் உண்மையிலும் உண்மையாகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 408

கேள்வி: ஸ்வஸ்திக் சின்னத்தை மனதில் எண்ணும் போது நம்மை எதிர்க்கும் நபர் அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்வார் என்ற நம்பிக்கை பற்றி:

இறைவனின் கருணையாலே ஓம்காரத்தையும் நினைத்து பிரார்த்தனை செய்தால் பலனுண்டு. இதுபோல் சேவற்கொடியை வேலினை நினைத்துக் கொண்டு பிரார்த்தனை செய்தாலும் பலனுண்டு. இங்கு எந்த இலச்சினை (சின்னம்) என்பது முக்கியமல்ல. மனோபாவம்தான் முக்கியம். எனவே எந்த மனோபாவத்தில் பிரார்த்தனை செய்கிறாயோ அதை உறுதியோடு உள்ளன்போடு நம்பிக்கையோடு செய்தால் கட்டாயம் பலனுண்டு.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 407

கேள்வி: மலையடிப்பட்டி கண் திறந்த பெருமாளின் மகிமை :

இதுபோல் கண் நோய் என்றால் மனிதனுக்கு புறக்கண்தான் ஞாபகம் வருகிறது. மனிதனிடம் இருக்கக்கூடிய அகக்கண்ணை திறந்து அவன் ஞானக்கண்ணை திறந்து உண்மையான வாழ்க்கை எது? இறைவனை புரிந்துகொள்வது எப்படி? என்று வழிகாட்டக்கூடிய ஆலயங்களில் இதும் ஒன்று. கேதுவின் தாக்கம் கடுமையாக இருப்பவர்கள் சென்று வழிபட வேண்டிய ஸ்தலங்களில் இதும் ஒன்று. உலகியல் ரீதியாக கூறப்போனால் புறக்கண்ணில் நீண்டநாள் பிரச்சினை இருப்பவர்கள் சென்று வணங்கக் கூடிய ஆலயங்களில் இதும் ஒன்று.

மலையடிப்பட்டி கண் திறந்த பெருமாள் ஆலயத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 406

கேள்வி: விதிக்கு எதிரான போர்தான் பிராயச்சித்தம். அப்படியென்றால் போர் புரிபவன்தானே ஜெயிக்க வேண்டும்? ஆனால் எதிராளிதானே ஜெயிக்கிறார் எப்பொழுதும்?

நோய்க்கு எதிரிதான் மருந்து. எல்லா மருந்தும் எல்லா நேரமும் நோயை குணப்படுத்தி விடுகிறதா? இதுபோல் இறையருளால் யாங்கள் கூறவருவது யாதென்றால் விதிக்கு எதிராக மனிதன் நல்ல வழியில் போரிட்டுக் கொண்டுதான் இருக்க வேண்டும். விளைவுகளைக் குறித்து அவன் கவலைப்படாமல் தான் அறிந்த நல்ல வழிமுறைகளை செய்து கொண்டே வர (விதி என்று நாங்கள் கூறுவது விதியால் வருகின்ற துன்பங்களை) விதியால் வருகின்ற துன்பங்கள் ஒருநாள் விலகித்தான் போகும். அது ஒரு நாளில் நடக்குமா? ஓரிரு ஆண்டுகளில் நடக்குமா? சில ஆண்டுகள் கழித்து நடக்குமா? என்பது அந்த விதியின் வலிமையையும் அந்த வலிமையைத் தாண்டி அவன் போர் புரிகின்ற திறமையையும் பொறுத்தது ஆகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 405

கேள்வி: கர்மயோகம் பற்றி கர்மயோகி எப்படி இருப்பார்:

அவனவனுக்கு உகந்த கடமைகளை நல்விதமாக செய்து அவனவன் உணர்ந்து கொண்ட நன்மைகளை தொடர்ந்து செய்து கொண்டே ஒரு நன்மையை ஒரு நற்காரியத்தை செய்ய ஆற்றலிருந்தும் செய்ய வாய்ப்பிருந்தும் வசதியிருந்தும் சூழலிருந்தும் செய்யாமல் போகாமல் கட்டாயம் செய்வதும் செய்ய முடியாத நிலையிலும் நற்காரியங்களை செய்வதும்தான் எம்மை பொறுத்தவரை நல்ல கடமையாளி நல்ல கர்மயோகியாகும்.