ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 404

கேள்வி: அம்மையப்பன்தான் உலகம் என்று மூத்தோன் ஜெயித்தார் இளையவர் தோற்றார் இது பற்றி:

இறைவன் அருளாலே பரம்பொருள் தோற்பதுமில்லை ஜெயிப்பதுமில்லை அதுதான் உண்மை. எமக்கு தெரிந்த வரையில் மகான்கள் பார்வையில் பரம்பொருள் தோற்ற ஒரே இடம் மனிதனை படைத்ததால்தான். மனிதனை படைத்து பலவிதமான நீதி போதனைகளை கொடுத்து இதை செய் இதை செய்யாதே உனக்கு சிந்திக்கின்ற ஆற்றலை தந்திருக்கிறேன். சிலவற்றை நீயாக சிந்தித்து முடிவெடு என்று சுதந்திரம் கொடுத்தால் எதையெல்லாம் செய்யக் கூடாதோ அதையெல்லாம் செய்கிறான். எதை செய்ய வேண்டுமோ அதை செய்வதில்லை. உடனடியான லாபம் என்றால் எதை வேண்டுமானாலும் செய்கிறான். அதனால் பிறருக்கு எத்தனை தீங்கு வந்தாலும் பாதகமில்லை என எண்ணுகிறான். எனவே இதுபோல் நிலையிலே அவையனைத்தும் இறைவனின் லீலை விளையாட்டு. அந்த அளவில் பார்க்கப் பழகு போதும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 403

கேள்வி: மனித சக்திக்கு அப்பாற்பட்ட கண்ணுக்கு புலப்படாத விஷயங்கள் குறித்து பின்னர் உரைக்கிறோம் என்று சொல்லியிருந்தீர்கள். இப்பொழுது உரையுங்கள் குருநாதா குறிப்பாக இச்சாதாரி பாம்புகள் குறித்து உரையுங்கள்:

பலவிதமான வினாக்களுக்கு யாங்கள் பின்னர் உரைக்கிறோம் என்றுதான் கூறியிருக்கிறோம். காரணம் ஒன்று இறை அனுமதிக்க வேண்டும். அல்லது கேட்கின்ற மனிதனின் கிரக நிலை அதற்கு இடம் தரவேண்டும். எல்லாவற்றையும்விட நாங்கள் கூறுவதை சரியாக புரிந்து கொள்ளக் கூடிய மனோபாவம் அவனுக்கு இருக்க வேண்டும். இதையெல்லாம் தாண்டிதான் சில வாக்குகளை யாங்கள் கூற இயலும். எல்லாவற்றையும்விட எந்தெந்த கிரக நிலையில் எந்த வாக்கை கூற வேண்டும் என்ற நிலை இருக்கிறது. இதுபோல் நிலையிலே மனித சக்திக்கு மேற்பட்ட பல்வேறு விஷயங்கள் மனிதனுக்கு புரிவதில்லை என்பது இருக்கட்டும். மனித சக்திக்கு உட்பட்ட பல விஷயங்களே மனிதர்களுக்கு புரிவதில்லையே? ஓரே காலம் இதே நூற்றாண்டு இதே தேசம் இங்குள்ள மனிதர்களிலேயே எத்தனை வேறுபாடுகள்? ஒரு மனிதனிடம் இருக்கும் திறமை இன்னொரு மனிதனிடம் இல்லை. ஒரு மனித கூட்டத்திடம் இருக்கும் ஆற்றல் இன்னொரு மனித கூட்டத்திடம் இல்லை.

புதிதாக ஒன்றை அவன் கண்டுணர வேண்டாம். ஏற்கனவே யாரோ கண்டு பிடித்ததைக் கூட அதை பார்த்து பிரதியெடுக்க தெரியாமல்தானே மனிதர்கள் வாழ்கிறார்கள். இந்த பாரத பூமியில் தன்னுடைய ஆற்றலையே உணர முடியாமல்தான் மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். எனவே மனிதர்கள் தன்னை நன்றாக புரிந்து கொண்டால்தான் தனக்கு மீறிய ஆற்றலை புரிந்து கொள்வது மிக எளிதாக இருக்கும். நாங்கள் ஆயிரம் வார்த்தைகளில் கூறினாலும் அது புரிவது கொஞ்சம் கடினம்தான்.

இச்சாதாரி பாம்பு இருக்கிறது என்றால் அடுத்த வார்த்தை அது எங்கே இருக்கிறது? யாங்கள் புறக்கண்ணால் பார்க்க முடியுமா? என்றெல்லாம் கேட்பான். அவன் கண்ணால் பார்த்தால்தான் அவன் நம்பக்கூடிய நிலை வரும். அப்படி கண்ணால் பார்க்க வேண்டும் என்றால் அந்தக் கண்ணுக்கென்று சில ஆற்றல்கள் வேண்டும். சில விஷயங்கள் மனிதனின் புறக்கண்ணுக்கு தெரிவதில்லை என்பதால் அது இல்லை என்று ஆகிவிடுகிறது. எத்தனையோ விதமான கதிரியக்கங்கள் மனிதனை சுற்றி நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதுபோல் அக சிகப்பு கதிர்கள் புற ஊதா கதிர்கள் இவைகள் மனிதனின் கண்ணுக்குத் தெரியாது. தெரியாது என்பதால் இவைகள் இல்லை என்று ஆகிவிடாது. எனவே மனிதர்கள் தனக்கு மேற்பட்ட சக்தியையோ அல்லது வேறு விஷயத்தையோ புரிந்து கொள்ள வேண்டுமென்றால் அதற்கு ஏற்ற ஆற்றலை அல்லது தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி வளர்த்துக் கொண்டால் ஒவ்வொரு விஷயமும் புரியும். தன்னை சுற்றி நடக்கின்ற நிகழ்ச்சிகளை ஒவ்வொன்றையும் இறையாற்றலோடு தொடர்புபடுத்தி பார்க்க பழகிவிட்டாலே ஒவ்வொன்றிலும் அற்புதம் இருப்பதும் புரியும். மனித சக்திக்கு மேம்பட்ட விஷயம் இருப்பதும் புரியும். எனவே தன்னைத்தான் உயர்த்திக் கொண்டு தன்னிடம் பாவ கர்மா இல்லாத நிலையில்தான் இவைகள் எல்லாம் சொன்னாலும் புரியும் புரிந்து கொள்ளவும் இயலும் நேரில் பார்க்கவும் இயலும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 402

அகத்திய மாமுனிவர் அருளிய பொது வாக்கு:

இறைவனின் கருணையைக்கொண்டு இயம்புவது யாதென்றால் இதுபோல் இங்கு அமர்ந்துள்ள சேய்கள் அனைவருக்கும் இறைவன் அருளாலே நல்லாசிகளை இயம்புகிறோம். இயும்புகிறோம் காலகாலம் நல்விதமாய் உயிர்கள் வாழ எண்ணுகின்றன. அதிலும் மனித உடம்பெடுத்த ஆத்மாக்கள் முற்றிலும் நலமாய் சுகமாய் சாந்தியாய் வாழ எண்ணுகின்றன. ஆயினும் காலகாலம் பெரும்பாலும் யாரும் அப்படி வாழ்ந்ததாக ஒரு சூழல் இல்லை. வாழ்கின்றதாகவும் சூழல் இல்லை. இனி வாழக்கூடுமோ? என்ற ஐயம்தான் உயிர்களுக்குள் எழுகிறது. காரணம் யாது? உயிர்களை படைத்த இறைவன் உயிர்கள் துன்பப்பட்டு வாழவேண்டும் என எண்ணியா படைத்திருக்கிறார்? இன்பமாய் மகிழ்வாய் சாந்தியாய் வாழவேண்டும் என்றுதான் எண்ணி ஏகனாய் இருந்த பரம்பொருள் அநேகனாய் பரந்து விரிந்து இங்கு பல்வாறாய் மாறியிருக்கிறது என்று கொள்ளலாம். ஆயினும் கூட தன்னிலிருந்து பிரிந்து வேறாய் சென்றுவிட்ட உயிர் தன்னில் ஒரு பகுதிதான் என்று என்று உணருகிறதோ? அன்றுதான் அதற்கு நிரந்தர சாந்தியும் நிம்மதியான மகிழ்வும் உண்டு என்பது மெய்யிலும் மெய்யாகும்.

ஆகுமப்பா இதுபோல் நல்விதமாய் அன்னையவள் சேயவனை அழைத்து அங்காடிவரை சென்று இன்ன இன்ன பொருட்களை வாங்கி வா என்று பணித்தால் சேயவனோ அன்னை தந்த அதுபோல் பட்டியலை வைத்துக் கொண்டு அன்னை தந்த தனத்தையும் வைத்துக்கொண்டு நேராக அன்னை கூறிய அங்காடிக்கு சென்று அதுபோல் பட்டியல்படி பொருள்களை வாங்கி நேராக இல்லம் திரும்பினால் எல்லாம் நேராகவே இருக்கும். ஆனால் அன்னை தந்த பட்டியலை தனத்தை வைத்துக் கொண்டு நேராக அன்னை சொன்ன அங்காடிக்கு செல்லாமல் வழியில் உள்ள வேறு வேறு காட்சிபொருளை நோக்கி சேயவன் சென்று ஒவ்வொரு காட்சியாக பார்த்து லயித்து வந்த நோக்கத்தை மறந்திருக்கும் பட்சத்திலே அன்னை சொன்னது மறந்தே போய் விடுகிறது. கொடுத்த தனமும் செலவழிந்தே போய்விடுகிறது.

இதுபோலத்தான் பரம்பொருளாகிய அன்னை சொன்னதை மறந்த ஆத்மாக்கள் வந்த நோக்கத்தை விட்டுவிட்டு மாயையில் சிக்கி வேறு வேறு திசை நோக்கி செல்வதால்தான் இத்தனை துன்பமும் இத்தனை துயரமும் இத்தனை மன உளைச்சலும். எனவேதான் எமை நாடும் சேய்களுக்கு யாங்கள் கூறுவது கடமைகளை செய்து கொண்டே இல்லறத்தில் இருந்து கொண்டே இந்த உலக வாழ்வை வாழ்ந்து கொண்டே பற்றற்ற நிலையில் அன்னைக்குரிய அங்காடியின் முகவரியை மறந்து விடாமல் அதை நோக்கி சென்று கொண்டே இருத்தல் அவசியம் என்று கூறிக் கொண்டே இருக்கிறோம். அது எங்ஙனம் சாத்தியம்? என்று ஐயம் எழலாம். பரந்துபட்ட உலகத்திலே பலவிதமான காட்சிகளை இறைவன் படைத்துவிட்டு அதற்குள் உயிர்களை விளையாடவிட்டு இந்த காட்சிகள் எல்லாம் இருக்கும். நீ கண்கொண்டு பார்த்தாலும் மனம் அதிலே லயிக்காமல் உறுதிகொண்டு என்னை நோக்கி வா என்றால் எங்ஙனம் வருவது? என்ற ஐயம் எழலாம். வரவேண்டும் என்ற உறுதி வேண்டும். அங்ஙனம் உறுதியிருந்தால் வந்துவிடலாம்.

நிரந்தர நிம்மதியும் நிரந்தர சந்தோஷமும் வேண்டுமென்றால் வரலாம். இதுபோல் கூறுங்கால் நல்விதமாய் நாவாய் என்னும் கப்பல் செல்ல நீர் வேண்டும். நீர் வழியாகத்தான் கப்பல் செல்லும் என்றாலும் நீர் வழியாக செல்லுகின்ற கப்பலுக்கு நீர்தான் ஆதாரம் என்று கூறுகின்ற அதே தருணத்திலே நல்விதமாய் அதுபோல் அத்தனை சிறப்புமிக்க நீர் இல்லையென்றால் நாவாய் எங்ஙனம் செல்லும்? என்று எண்ணி அந்த நாவாய் எனும் கப்பல் அந்த நீருக்கு நன்றி கூறும் விதமாக நீரே நீரே நீ இல்லையென்றால் நான் பயணம் செல்வது எங்ஙனம்? உனக்கு நன்றி பாராட்டுகிறேன். நீ எனக்குள் வா என்று அந்த நீரை அழைத்தால் கப்பலின் நிலை என்னவாகும்? அதைப்போலதான் உலகாயத விஷயங்களுக்குள் இருந்து கொண்டே பயணித்துக் கொண்டே அதற்குள் ஆழ்ந்து விடாமல் மனிதன் இறை நோக்கி செல்ல முயற்சி எடுத்தல் அவசியமாகும்.

இதுபோல் நல்விதமான அந்த முயற்சியை எடுப்பதும் எவ்வாறு எடுப்பது? இடையிடையே இடையூறுகள் வந்தால் எவ்வாறு எதிர்கொள்வது? என்றெல்லாம் காலகாலம் மகான்களும் ஞானிகளும் பாடம் போதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் மனிதர்கள்தான் அதனை செவிமடுப்பதில்லை. செவிமடுத்தாலும் மனதில் பதிய விடுவதில்லை. மனதில் பதியவிட்டாலும் நடைமுறைப் படுத்துவதில்லை என்பதுதான் மெய்யிலும் மெய்யாகும். ஆகுமே இதுபோல் எம் வழி வருகின்ற சேய்கள் எமது வாக்கை சரியாக புரிந்து கொள்ள முயற்சி செய்கின்ற சேய்கள் கட்டாயம் புரிந்து கொண்டு யாங்கள் கூறுகின்ற அதுபோல் வழிமுறைகளை சரியாக பின்பற்ற நிரந்தர நிம்மதியும் சந்தோஷமும் தொடரும் என்பதே மெய்யாகும். இறையருளை பெறுவதற்கு உண்டான செயலை மட்டும் என்றுமே சிந்தித்து சிந்தித்து செய்து கொண்டே இருப்பதுதான் எமது வழி வரும் சேய்களுக்கு ஏக கடமையாகும்.

ஆகுமே நல்விதமாய் எமது வாக்கை பேசுவதும் எமது வாக்கை லயித்து லயித்து ரசிப்பதும் எமது வாக்கு குறித்து விவாதம் செய்வதும் இவையெல்லாம் இருந்தும் கூட அவற்றில் உள்ள பல பல நல்ல நுண்ணிய விஷயங்களை மனதிலே புரிந்து கொண்டு பதிய வைத்து செயல்படுத்த தவறினால் அதனால் மனித உயிருக்கு எவ்வித லாபமும் இல்லை. ஒன்று மனிதன் தனக்கு தெரிந்தவரையில் வாழ்ந்து கர்மாக்களை சேர்த்து பிறவி சுழலில் உழன்று கொண்டே இருக்க வேண்டும். அதிலிருந்து வெளியே வர வேண்டும் என்ற வாய்ப்பு சில ஆத்மாக்களுக்கு இறைவன் அருளாலே கிட்டும் பொழுது சரியாக அதனை பிடித்துக் கொண்டிட வேண்டும். அதற்குத்தான் இத்தனை போதனைகளும் இத்தனை விதமான பாடங்களும் உபதேசங்களும் யாம் இறைவன் அருளால் கூறிக் கொண்டே இருக்கிறோம். ஆயினும் அனைத்தையும் கேட்டு விட்டு வாழ்விலே இவ்வாறு துன்பம் இருக்கிறது. சித்தர்களை நம்பி வந்தோம். எந்த பிரச்சினையும் உடனடியாக தீரவில்லை.

சித்தர்கள் கூறிய வழிமுறைகளை எல்லாம் பின்பற்றிக் கொண்டுதான் இருக்கிறோம். ஆயினும் மனதிற்கு நிம்மதியில்லை. திருப்திகரமான குடும்ப நிலையில்லை. மனம் விரும்புகின்ற உறவு அமையவில்லை. விருப்பம் போல் பணி அமையவில்லை. விருப்பம்போல் இதுபோல் பொருளாதார நிலை உயரவில்லை. விரும்பிய இடத்திலே பணி கிட்டவில்லை. விரும்பியவாறு இல்லம் அமையவில்லை. சேய்களுக்கும் ஏனைய அனைத்து உறவுகளுக்கும் விருப்பங்கள் ஏதும் நிறைவேறவில்லை. பெண் பிள்ளைகளுக்கும் அதுபோல் ஆண் பிள்ளைகளுக்கும் உரிய வயது வந்தும் திருமணம் ஆகவில்லை. திருமணம் நடந்தாலும் மனமொத்து வாழ்வதில்லை. மனமொத்து வாழ்ந்தாலும் பிள்ளைகள் பிறப்பதில்லை. பிள்ளைகள் பிறந்தாலும் ஆரோக்கியமாக இருப்பதில்லை. ஆரோக்கியமாய் இருந்தாலும் அதுபோல் நன்றாய் கல்வி கற்பதில்லை. நன்றாய் கல்வி கற்றாலும் உரிய பணி கிட்டவில்லை. உரிய பணி கிட்டினாலும் ஈன்றோர் பேச்சை கேட்பதில்லை. ஈன்றோர் பேச்சைக் கேட்டு மணம் முடித்தாலும் மணம் முடித்தவள் ஈன்றோரை விட்டு வா என்று அழைத்து செல்கிறாள் என்றெல்லாம் எம்மிடம் மன வருத்தத்தோடு விசனத்தோடு வந்து கோரிக்கைகளை வைத்துக் கொண்டே இருக்கும் மனிதர்களிடம் யாங்கள் கூறவருவது இது இங்ஙனம்தான் இருக்கும்.

இவற்றை மாற்றவோ சரி செய்யவோ இறைவன் விரும்பவில்லை. ஏனெனில் இவை அனைத்தும் கர்ம வினைகளின் எதிரொலி. இந்த கர்ம வினைகளை ஒவ்வொரு மனிதனும் நுகர்ந்துதான் ஆகவேண்டும். அதற்குதான் நவகிரகங்கள். அந்த நவகிரகங்களை விதி என்னும் பிடிக்குள் வைத்து ஆட்டி வைப்பது இறைவன். எனவே இப்படித்தான் என்றால் எதற்கு நாங்கள் வாக்கினை கேட்க வேண்டும்? எதற்கு பரிகாரங்களை செய்ய வேண்டும்? நடப்பது நடந்துவிட்டு போகட்டுமே? என்ற எண்ணங்கள் தோன்றலாம் உண்மைதான். யாரும் அவ்வாறு நம்பி வந்தாலும் அல்லது எம்மை நோக்கி வராவிட்டாலும் விதி அங்ஙனம்தான். ஆனால் யாங்கள் என்ன கூறுகிறோம்? என்றால் இப்படி பலவகையான துன்பங்களை பாவத்தின் எதிரொலியாக நுகருகின்ற மனிதர்கள் அந்த துன்பங்களை நுகர்ந்து நுகர்ந்து பாவ கர்மாவை கழிக்கின்ற அதே தருணத்தில் மேலும் புதிதாக பாவங்களை சேர்த்துக் கொள்ளாமலும் அதோடு புதிய புண்ணியங்களை சேர்த்து தாக்குகின்ற கர்ம வினைகளை தாங்கிக் கொள்ளக் கூடிய வலிமையை பெற வேண்டும் என்றுதான் இத்தனை விதமான வழி முறைகளையும் பரிகாரங்களையும் கூறுகிறோம்.

எனவே பரிகாரங்களை நல்விதமாய் நுணுக்கமாய் புரிந்து கொண்டு செய்வதும் புண்ணியங்களை சேர்த்துக் கொண்டே இருப்பதும் மட்டும்தான் ஒவ்வொரு மனிதனின் மெய்யான கடமையாக இருக்க இயலும். முழுக்க முழுக்க புண்ணியம் சேர்ந்த பிறகு முழுக்க முழுக்க பாவமற்ற நிலை வந்தபிறகுதான் நன்றாக கவனிக்க ஓரளவு நிம்மதியும் சந்தோஷமும் ஆத்மாவிற்கு கிட்டும் என்பது மெய்யிலும் மெய்யாகும். ஆகுமப்பா இதுபோல் நல்விதமாய் இதுபோல் கருத்தை நல்விதமாய் மீண்டும் கூறுகிறோம் சரியாக புரிந்து கொண்டு மனதிலே வைக்க அதுபோல் நல்விதமாய் வாழ்வு செல்லும் என்பதை கூறுகிறோம். இதுபோல் நல்விதமாய் சேய்களுக்கு கண்கண்ட தெய்வம் முதலாவது ஈன்றோராகும். அதுபோல் ஈன்றோருக்கு கண்கண்ட தெய்வம் சேய்களின் நற்குணம் முதலாவது. எனவே இதுபோல் முதலாவது அதுபோல் முதலாவதை முந்தும். அதுபோல் முதலாவது இதுபோல் முதலாவதை முந்தவேண்டும் என்றுதான் யாங்கள் கூறுகிறோம். இறைவன் முதலாவது என்றாலும் அதுபோல் இறைவனை அடைய புண்ணியம் அதனினும் முதலாவது ஆகும். புண்ணியம் இறைவனைவிட முதலாவது என்றாலும் கூட திண்ணிய எண்ணம் யாருக்கு இருக்கிறதோ அவர்களுக்கே புண்ணியம் செய்யலாகும் என்பதால் திண்ணிய எண்ணம் புண்ணியத்தை விட முதலாவது ஆகும். எனவே இறைவன் முதலாவது இறைவனைவிட புண்ணியம் முதலாவது புண்ணியத்தைவிட திண்ணிய எண்ணம் முதலாவது. எனவே இதுபோல் முதலாவது எல்லாம் தாண்டி நிற்கக்கூடியது 108 ன் முதலாவது இதுபோல் அரங்கமாகும். இதுபோல் 108 ன் முதல் இது.

எனவே மனித உயிருக்கு முதல் இது. மனித ஆத்மாவிற்கு முதல் இது. எங்கும் சுற்றி ரங்கம் என்பார்கள். எனவேதான் இதுபோல் இந்த புண்ணிய சேத்திரம் ஆத்மாக்கள் கடைத்தேற மிக அற்புதமான சேத்திரமாகும். இதுபோல் பரந்துபட்ட பிரபஞ்சத்தின் இறைவன் படைப்பிலே எல்லாம் உயர்வே. ஒன்று உயர்வு ஒன்று தாழ்வு என்றில்லை. எனவே சரியாக புரிந்து கொள்ள யாங்கள் சில சமயம் சில வார்த்தைகளை பயன்படுத்துவோம். எனவே எல்லாம் உயர்வுதான். இருந்தாலும்கூட இதுபோல் அரங்கம் அரங்கத்தில் எல்லாம் முதலாவது. இதுபோல் அரங்கம் அனைத்து கல்வி அரங்கத்திலும் முதலாவது. இதுபோல் அரங்கம் அனைத்து ஆடலரங்கிலும் முதலாவது. இதுபோல் அரங்கம் அனைத்து விளையாட்டு அரங்கிலும் முதலாவது. இதுபோல் அரங்கம் உலகில் உள்ள அனைத்து அரங்கங்களிலும் முதலாவது. அனைத்து அறமான அரங்கங்களிலும் முதலாவது இதுபோல் அரங்கம். அதுபோல் அனைத்து விதமான ஆடல் அரங்கங்களிலும் முதலாவது. எனவே இங்குள்ள பல்வேறு சூட்சுமம் பல்வேறு மனிதர்கள் அறியாதது. இதுபோல் அரங்கம் அதுபோல் பள்ளிகொண்ட பெருமாளுக்கு மட்டுமல்ல அதுபோல் பரம்பொருள் கால்தூக்கி ஆடுகிறதே தில்லை தில்லையின் சூட்சும ஆற்றல் இங்கும் ஆடிக் கொண்டிருக்கிறது என்பதுதான் மெய்யிலும் மெய்யாகும். எனவே இதும் தில்லைதான். அதும் தில்லைதான். யாரும் கூற இயலாது. நான் போனதில்லை என்று. நான் போனதில்லை என்று கூறும்பொழுதே நான் போன தில்லை என்று வந்து விடுகிறது. நான் போனதில்லை என்று கூறும்பொழுதே அங்கே நான் போன தில்லை வந்துவிடுகிறது. நான் போனதில்லைதான். நான் போனதில்லைதான். எனவேதான் இதுபோல் தில்லையும் அதுபோல் தில்லையும் இல்லை என்றால் இதுபோல் உயிர்கள் ஏதும் இல்லை என்பது.

இதுபோல் சேய்கள் புரிந்து கொண்டு யாங்கள் கூறுகின்ற நுண்மான் வாக்கினை சரியாக புரிந்து கொள்ள நன்றாம். நன்றாம் இதுபோல் நலமாய் யாங்கள் கூறுகின்ற இவ்வாக்கிலே உள்ள தத்துவார்த்த விளக்கங்களை சரியாக புரிந்துகொள்ள அதுபோல் நன்றாம் நன்றாம் நன்றாம். இதுபோல் நன்றாய் சமகால அதுபோல் அலைபேசி கருவியிலே அனுப்ப இதுபோல் வாக்கின் தன்மை நீளமாய் இருப்பதால் அதுபோல் நீளத்தை குறைக்கும் வண்ணம் இதுபோல் சற்று சில மணித்துளிகள் அயர்வு யாங்கள் ஏற்படுத்துகிறோம். பிறகு இன்று என்னுடன் போகன் வந்துள்ளதால் அடுத்து போகனே வாக்குரைப்பான் பரிபூரண நல்லாசிகள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 401

கேள்வி: இலையை கிள்ளுவதே பாவம் என்றால் சில சுப நிகழ்வுகளுக்காக வாழை மரத்தை வெட்ட வேண்டியுள்ளது இது பற்றி:

இதனை யாங்கள் ஏற்பதில்லை. அக்காலத்தில் என்ன வழக்கம் இருந்தது? என்றால் குறிப்பாக திருமணத்தின் பொழுது ஆணும் பெண்ணும் நிறைய செடிகளை நடும் பழக்கம் குறிப்பாக வாழைக் கன்றுகளை நடும் பழக்கம் இருந்தது. அந்த வாழை வாழையடி வாழையாக தழைப்பதுபோல இவர்களின் குலம் தழைக்க வேண்டும் என்பதே இதன் உட்பொருளாகும். ஆனால் கால ஓட்டத்தில் எல்லாமே மாறிவிடுவதுபோல இந்த வாழை மர பழக்கமும் மாறிவிட்டது. வாழை மரத்தை வெட்டி முன்னால் கட்டுவது சுபம் அல்ல. ஒரு பச்சிளம் குழந்தையை கொன்று முன்னால் தொங்கவிட்டு உள்ளே சுப காரியம் நடத்துவதுபோல. இதுமட்டுமா மனிதன் செய்கிறான்? இன்னும் எத்தனையோ அனாச்சாரங்களை செய்கிறான். சொன்னால் விதண்டாவாதம் செய்வான். யாங்கள் ஒன்று கூறினால் வேறு ஒன்று கூறுவான். இதையெல்லாம் கொல்லாதே என்றால் பாம்பைக் கொன்று சாப்பிடும் பழக்கம் உள்ள தேசத்திலே நாகதோஷமே இல்லையே குருதேவா என்று கேட்பான்.

ஒன்றை மனிதன் புரிந்து கொள்ள வேண்டும். பாவத்தை சேர்த்துக் கொள்ள வேண்டிய ஆத்மாக்கள் பிறவிகள் என்று பலர் இருக்கிறார்கள். அவர்கள் எத்தனையோ பாவங்களை சேர்க்கவேண்டும் என்பது விதியாகும். அப்படி பாவங்களை சேர்க்க வேண்டும் என்றால் அவர்கள் பாவங்கள் செய்யும் பொழுது இறைவனோ நவகிரகங்களோ தலையிடாமல் ஒதுங்கி பாவங்களை இவன் சேர்க்கிறான். பலரின் கர்ம வினையை இவன் வாங்கிக் கொள்கிறான் என்று அமைதியாக இருப்பார்கள். அதனால் பாவங்கள் செய்பவர்கள் நன்றாக இருக்கிறார்களே? என்று நல்லவர்கள் மனக்குழப்பம் அடையக் கூடாது. பாவங்களை குறைத்துக் கொள்ளக் கூடிய எண்ணம் உள்ளவர்கள் பாவங்களை குறைத்துக் கொள்ள பிறவியெடுத்தவர்கள் சில துன்பங்களையும் சில வேதனைகளையும் பட்டுத்தான் ஆகவேண்டும். ஆனால் பாவங்களை சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கக் கூடிய ஆத்மாக்கள் எல்லாவகையான பாவங்களையும் செய்து ஒட்டுமொத்தமாக நரகில் விழுந்து பிறகு படிப்படியாக மேலேறி வரவேண்டும். எனவே அவர்களை பார்த்து நல்ல வழியில் செல்கின்ற மனிதர்கள் மனம் குழப்பம் அடைதல் ஆகாது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 400

கேள்வி: இராமர் இராமேஸ்வரத்தில் வழிபட்டதினால் அங்கு திலயாகம் போன்றவற்றை செய்ய சொல்கிறீர்கள். இராமர் வேறு புண்ணிய நதிக்கரைகளிலும் வழிபாடு செய்திருக்கிறார். அப்படிப்பட்ட இடங்களிலும் நாங்கள் திலயாகம் போன்றவற்றை செய்யலாமா?

தெய்வ சமுத்திர கோட்டம் எனப்படும் இராமேஸ்வரத்தில் மட்டும்தான் இதுபோல் திலயாகமோ தர்ப்பணமோ முன்னோர்களுக்கு உண்டான சாந்தி பூஜையோ செய்ய வேண்டும் என்பதல்ல. ஒன்றை நன்றாக கவனிக்க வேண்டும். மனிதர்கள் அறிந்ததுதான். மனித நாகரீகம் வளர்ந்ததே நதிக்கரையோரங்கள் கடலோரங்களில்தான். மனிதனுக்கு நீர் அவசியம். அந்த நீரை எங்கிருந்தாலும் கொண்டு வந்து சேர்க்கின்ற ஒரு சூழல் இன்று இருக்கிறது. ஆனால் அன்று இல்லை. நீரை ஒட்டிதான் நகரங்களும் நாடுகளும் வளர்ந்து வந்தன. இதுபோல் நிலையிலே மெல்ல மெல்ல பரிணாம மாற்றம் அடைந்த மனிதன் வேறுவிதமான வசதிகளையெல்லாம் பெற்ற பிறகு வேறுவிதமான வாழ்க்கை முறைக்கு சென்று விட்டான். எனவே எம்மைப் பொருத்தவரை ஆத்மார்த்தமாக மலைகளில் அமர்ந்து தில தர்ப்பணம் செய்தாலும் இறைவன் ஏற்றுக் கொள்வார். இல்லத்தில் அமர்ந்து செய்தாலும் ஏற்றுக் கொள்வார் அதல்ல பிரச்சினை. அடுத்ததாக இராமபிரான் வந்து அமர்ந்து பூஜை செய்ததால் சிறப்புதான் என்றாலும் அதற்காக மட்டும் யாங்கள் கூறவில்லை.

இதைத் தாண்டி ஒரு மனிதன் இல்லத்தில் அமர்ந்து பூஜை செய்து முன்வினை பாவங்களை போக்கிக் கொள்ளக் கூடிய அளவிற்கு மனோதிடமோ புண்ணிய பலமோ இல்லாத நிலையிலே தூர தூர இடங்களுக்கு தன் தனத்தை செலவழித்து சென்று அங்குள்ள மனிதர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து இதுபோல் ஒரு பொருளாதார சுழற்சியை ஏற்படுத்தும் பொழுது அதனால் அவனுடைய பாவங்கள் குறையட்டும் என்றுதான் யாங்கள் கூறுகிறோம். ஒன்று தீர்த்தம் புனிதமானது. அடுத்து ஆழி புனிதமானது. அதுபோல் அங்குள்ள இராமேஸ்வர தெய்வம் புனிதமானது தெய்வ சாந்நித்யமானது. அங்கு இருக்கின்ற மனிதர்கள் பல தவறுகள் செய்யலாம். ஆனால் தெய்வ சாந்நித்யம் என்பது உயர்ந்தது. அதனாலும் அங்கு செய்ய அருளாணை இடுகிறோம். திருவெண்காட்டிலும் செய்யலாம். கோடியக்கரையிலும் செய்யலாம். பூம்புகாரிலும் செய்யலாம் தவறொன்றுமில்லை. காசிதான் உயர்ந்தது இராமேஸ்வரம்தான் உயர்ந்தது என்று நாங்கள் கூற வரவில்லை. வாய்ப்பும் வசதியும் இருப்பவர்கள் அங்கு செய்யலாம். மற்றவர்கள் எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் புனித நதியை புனித நதியாக மதிக்கின்ற மனிதர்கள் அந்த புனித நதியை நன்றாக பராமரித்து அந்த நதிக்கரையிலேயே நல்லவிதமாக பூஜைகளை செய்தால் கட்டாயம் நற்பலன் ஏற்படும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 399

கேள்வி: சமீபகாலமாக ஆலயங்களில் தீப்பற்றி விடுகிறது. மேலும் சிலைகள் திருடப்படுகின்றன. இதற்கு தீர்வு காண எந்த ஆலயம் சென்று வழிபடுவது ?

ஆலயம் தீப்பற்றி எரிவது மட்டும்தான் மனிதர்களுக்கு தெரிகிறது. பல ஆலயங்களில் இறைவனே பற்றி எரிந்து கொண்டுதான் இருக்கிறார். மனிதர்களின் செயலைப் பார்த்து அவர் உள்ளுக்குள் எரிந்து கொண்டுதான் இருக்கிறார். இவையெல்லாம் ஏதோ இறைவனின் சீற்றமோ கோபமோ என்பது அல்ல. இதைவிட மோசமாக மனித சமுதாயம் நடந்து கொள்ளும் பொழுதெல்லாம் அமைதியாகத்தானே இறைவன் இருக்கிறார்? எனவே இதை இயல்பான விஷயமாக எடுத்துக் கொண்டால் போதும். எதையும் கவனமாக கையாள மனிதர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 398

கேள்வி: ஞானசம்பந்தர் திருவெண்காட்டில் உள்ள மூன்று தீர்த்தங்களும் இறைவனின் மூன்று கண்கள் என்று சொல்லியிருக்கிறார் அது பற்றி:

இதுபோல் நல்விதமாய் அந்த தீர்த்தங்கள் உண்மையில் இறைவன் அருளுக்கு பாத்திரமான தீர்த்தங்கள்தான். ஆனால் தீர்த்தங்களை பரிசுத்தமாக நல்விதமாக பக்தியோடு பராமரித்தால் அவைகள் இறைவன் அருளைத் தரும். இல்லையென்றால் தோஷத்தைதான் தரும். இறைவனை வணங்க முடியாதவர்கள் நன்றாக கவனிக்க வேண்டும் ஆலயம் சென்று இறைவனை வணங்க வாய்ப்பில்லாதவர்கள் அல்லது வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் இந்தத் தீர்த்தத்தில் நீராடினாலே இறைவன் அருள் கிட்டும். இப்படியெல்லாம் மனிதர்கள் சூழ்ச்சி செய்வார்கள் என்றுதான் மகான்கள் தீர்த்தம் என்ற ஒன்றை கண்டுபிடித்து வைத்தார்கள். அந்த தீர்த்தத்திலும் இன்னவன் இறங்கக்கூடாது இன்ன ஜாதியில் பிறந்தவன் இறங்கக் கூடாது என்று மனிதன் கண்டுபிடித்தான். எத்தனையோ போராடியும் அவன் திருந்தவில்லை என்றுதான் த்வஜஸ்தம்பம் எனப்படும் கொடிமரத்தை வைத்தார்கள். கொடிமரத்தை தொட்டு வணங்கினால் போதுமென்று. அதிலும் பல கொடிமரங்கள் அங்கே பழுதுபட்டுவிட்டன. எனவே வெறும் இராஜ கோபுரத்தை பார்த்து பரிபூரண பக்தியோடு வணங்கினால்கூட பலன் உண்டு. ஆனால் அனாச்சாரம் இல்லாத ஆலயமும் நிர்வாகமும் அங்கு செல்லக்கூடிய மனிதர்களின் தூய பக்தியும்தான் இறைவன் அருளை பெற்றுத்தரும்.

இறைவனின் கருணையைக் கொண்டு விதவிதமான பிரார்த்தனைகளை செய்து கர்மவினைகளை நீக்கிக் கொள்கின்ற ஸ்தலத்திலே இதுபோல் இந்த இடத்திலே சந்திரனின் பரிபூரண பலன் கிட்டாதவர்கள் சென்று வணங்க வேண்டிய ஸ்தலம். குழந்தை பாக்கியம் வேண்டும் என விரும்பக் கூடியவர்கள் சென்று வணங்கக்கூடிய ஸ்தலங்களில் ஒன்று.

திருவெண்காடு தலத்தைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 397

கேள்வி: சிவன் சொத்து குல நாசம் இது பற்றி:

இறைவன் அருளால் யாங்கள் கூறவருவது யாதென்றால் சிவன் சொத்து குல நாசம் என்றால் விஷ்ணு சொத்தை எடுக்கலாமா? என்று ஒருவன் கேட்பான். உண்மையான விஷம் எது தெரியுமா? அவனுடைய நேர்மையான உழைப்பில் வராத அனைத்துமே விஷம்தான். இப்படி விஷமான பல விஷயங்களை மனிதன் தனக்குள்ளே சேர்த்து வைத்திருப்பதால்தான் இத்தனை பிரச்சினைகளும் துன்பங்களும் வந்துகொண்டே இருக்கின்றன. தான் சேர்த்தது மட்டுமல்லாமல் தன் வாரிசுகளுக்கும் அந்த விஷத்தை அவன் அனுப்பி வைக்கிறான். இந்த விஷம் நீங்க வேண்டுமென்றால் அந்த விஷத்தை கண்டத்தில் அடக்கியவனை சென்று பார். எப்பொழுது பார்க்க வேண்டும்? அந்த விஷம் எப்பொழுது அவன் கண்டத்தில் தங்கியதோ அந்த காலத்தில் பார் என்று பிரதோஷம் என்ற ஒரு காலத்தை குறிப்பிட்டு தினமும் அந்திப்பொழுதிலே சென்று (அதிகாலை பிரம்ம முகூர்த்தம்தான் பலருக்கு கயப்பாக இருக்கிறது) பார் என்றால் அதையும் பார்க்க மறுக்கிறான்.

இதுபோல் பிறரின் சொத்து எதுவாக இருந்தாலும் அதை எடுத்துக் கொள்வது என்பது தீங்கான விஷயம்தான் பாவமான விஷயம்தான். ஆனாலும் காலகாலம் மனிதன் அந்த தவறை செய்து கொண்டுதான் இருக்கிறான். இறைவனும் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருப்பார். ஏன் இறைவன் இதை வேடிக்கை பார்க்கிறார்? இறைவன் ஏன் இதையெல்லாம் தடுக்கக்கூடாது? என்று கேட்டால் இறைவனை பொருத்தவரை மனித பாவங்கள் தன்னிடம் வராமல் இருந்தால் போதும் என்று எண்ணுகிறார். உதாரணமாக ஒருவனுக்கு கடுமையான பிணி வந்துவிட்டது. முடிந்தவரை போராடுகிறான். விதவிதமான மருந்துகளை ஏற்கிறான். மருத்துவனை பார்க்கிறான். நோய் நீங்கவில்லை. நோயால் அவஸ்தை வந்துகொண்டே இருக்கிறது. என்ன செய்வது? இறுதியாக இறைவனை நோக்கி வேண்டுகிறான். இறைவா இந்த நோயின் கடுமையை என்னால் தாங்கமுடியவில்லை. வலி உயிர் போகிறது இந்த நோயிலிருந்து என்னை காப்பாற்று. என் சொத்தில் பகுதியை உன் ஆலயத்திற்கு எழுதிவைக்கிறேன் என்று அவன் அறிந்த ஆன்மீகம் அவனுக்கு போதிக்கப்பட்ட வகையில் வேண்டுகிறான். ஏதோ அவன் வினைப்பயன் நோய் தீர்ந்து விடுகிறது. உடனடியாக அவன் சொத்தின் ஒரு பகுதியை ஆலயத்திற்கு எழுதி வைக்கிறான். அது சொத்து அல்ல அந்த நோய்தான் சொத்தாக உரு மாறி சென்றிருக்கிறது. இவையெல்லாம் யாருக்குத் தெரியும்? ஞானத்தன்மையுள்ள மனிதனுக்கு தெரியும். சராசரி மனிதனுக்கு இது புரியாது.

ஆலயத்தில் இறைவனிடம் பூஜை செய்தாலும் இறைவனைப் பற்றிய எந்தவிதமான ஞானமும் இல்லாமல் இருக்கக்கூடிய மனிதர்கள்தான் அதிகம். எனவே ஆலயத்தில் பூஜை செய்கின்ற மனிதனாகட்டும் ஊழியம் செய்கின்ற மனிதனாகட்டும் ஆலயத்தை நிர்வாகம் செய்கின்ற அதிகாரியாகட்டும் அனைவரும் சராசரி மனிதர்களே. என்ன எண்ணுகிறான்? இத்தனை சொத்தும் இந்த ஆலயத்திற்கு எதற்கு? என்று. ஏதாவது ஒரு குறுக்கு வழியை கையாண்டு அதனை எடுத்து அனைவரும் பங்குபோட்டுக் கொள்கிறார்கள். எதை பங்குபோட்டுக் கொள்கிறார்கள்? அந்த மனிதனுக்கு வந்த வியாதியை பங்குபோட்டுக் கொள்கிறார்கள். இப்பொழுது இந்த வியாதி எங்கு செல்லும்? இறைவன் தாங்கிக் கொள்வார் என்று எழுதி வைத்தால் இறைவனிடம் செல்லவே மனிதன் அனுமதிப்பதில்லை. அந்தப் பாவத்தை நானே வாங்கிக் கொள்கிறேன் என்று தானாக முன்வந்து வாங்கிக் கொள்கிறான். இறைவன் ஏனப்பா தடுக்கப்போகிறார்? தனக்கு வரவேண்டிய பாவத்தை தான் பெற்ற பிள்ளை வாங்கிக் கொள்கிறதே? அடடா இவன் அல்லவா என் பிள்ளை என்று மனம் மகிழ்ந்து அமைதியாக இருந்து விடுகிறார்.

ஆகையினால் இதுபோல் ஒவ்வொரு ஆலயம் மட்டுமல்ல பொதுவான விஷயங்களில் தவறு செய்கின்ற அனைவருமே பாவத்தை சேர்க்க வேண்டும் என பிறவி எடுத்தவர்கள். இவர்கள் உணர வேண்டும் என்றால் பல்வேறு மிருகங்களாக பிறந்து பல்வேறு இன்னல்களை அடைந்து பாவங்களை குறைத்துவிட்டு பிறகு மீண்டும் மனிதப் பிறவியாக பிறந்து முதலில் இருந்து வரவேண்டும். என்ன எடுத்து சொன்னாலும் கேட்கப் போவதில்லை. ஒரு சிலருக்கு இறைவன் அருள் இருந்தால் அந்திம காலத்தில் ஏதோ ஓரளவு திருந்துவார்கள். எனவே காலகாலம் இது நடந்தது நடந்து கொண்டிருக்கிறது இன்னமும் நடக்கும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 396

கேள்வி: ஒரு குடும்பத்தில் தலைப் பிள்ளைக்கு பாவங்களும் மற்ற பிள்ளைகளுக்கு சொத்தும் சேரும் என்று கூறப்படுவது பற்றி:

இதுபோல் கருத்தை யாங்கள் ஏற்கவில்லையப்பா. எல்லா குழந்தைகளுக்கும் அவர்கள் அவர்கள் செய்த பாவங்களும் அவர்கள் பிறந்த குடும்பத்தின் வம்சாவழி பாவங்களும் கட்டாயம் போய் சேரத்தான் செய்யும். ஒரு குடும்பத்திலே பிறக்கும் குழந்தையின் ஆத்மா பல பிறவிகளில் சேர்த்த பாவங்கள் அதிகமாகவும் புண்ணியம் குறைவாக இருப்பதாகக் கொள்வோம். அந்தக் குடும்பத்தின் பாவங்களும் அந்தக் குழந்தைக்கு சேரும் பொழுது அது அதிகமாக துன்பமடைகிறது. அதே குடும்பத்தில் வேறு சில காரணங்களுக்காக இன்னொரு குழந்தை பிறக்கிறது. அது பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணியம் அதிகமாகவும் பாவங்கள் குறைவாகவும் இருக்கின்ற தருணத்திலே அந்த பூர்வ ஜென்ம புண்ணியங்களின் விளைவாக அந்தக் குடும்பத்தின் சாபங்களும் தோஷங்களும் அந்தக் குழந்தையை குறைவாகவே தாக்குகிறது அவ்வளவே.

இறைவனின் கருணையைக் கொண்டு இதுபோல் கூறுவது யாதென்றால் நல்விதமாய் எல்லா ஆலயங்களுக்கும் எம் சேய்கள் சென்று இயன்ற வழிபாடுகள் செய்க. இல்லத்திலும் வழிபாடு செய்க. இதுபோல் குறிப்பிட்ட ஆலயத்தில் குறிப்பிட்ட பெருமை இருக்கிறது என்று மனிதன் எழுதி விட்டாலே அங்கு கூட்டம் அதிகமாகி விடுகிறது. யாங்கள் கூறிவிட்டால் இன்னும் அதிகமாக செல்வார்கள். எனவே எம்மைப் பொருத்தவரை எம் வழியில் வருகின்ற சேய்களுக்கு எல்லா ஆலயங்களும் ஒன்றுதான். அதுபோல் இன்னவன் குறிப்பிட்ட ஆலயமும் சிறப்புதான். குறிப்பாக கடுமையான மன உளைச்சலில் இருக்கின்ற பெண்கள் சென்று வழிபட்டு அவர்கள் கர்ம வினையை தணித்துக் கொள்ளலாம். அதற்காக ஆண்கள் செல்லக் கூடாது என்று பொருளல்ல. ஆண்களின் பாவகர்மாவும் குறைகின்ற இடம். குறிப்பாக இன்னவன் கேட்டதால் யாங்கள் கூறினோம். இதோடு மட்டுமல்லாமல் பாழ்பட்ட ஆலயங்களிலே இறைவன் அருள் இல்லையென்று தவறான கருத்து இருக்கிறது. ஆத்மார்த்தமான பூஜைகள் செய்து எந்த இடத்தில் அழைத்தாலும் இறைவன் அருள் உண்டு. எம் வழியில் வருகின்ற சேய்கள் பலரும் சென்று வணங்கக் கூடிய ஆலயத்தை நோக்கி செல்வதைவிட (அங்கும் செல்லட்டும்) பலரும் செல்லாத ஆலயமாக தேர்ந்து எடுத்து சென்று அந்த ஆலயத்தை நன்றாக பராமரிக்க உதவுவது ஏற்புடையது ஆகும்.

இதுபோல் வழிமுறையை தொடர்ந்து பின்பற்றி இறையருளை பெறுவதோடு தொடர்ந்து இறையருளை பெறுவதற்குண்டான சத்தியத்தை கடைபிடிப்பதும் தர்மத்தை கடைபிடிப்பதும் எத்தனை இன்னல்கள் துன்பங்கள் துயரங்கள் வந்தாலும் மன உறுதியோடு அதனை எதிர்கொண்டு தொடர்ந்து எம் வழியில் எம் பார்வையில் நல்ல சேய்களாக வாழ முயற்சி செய்ய இறைவன் அருளால் நல்லாசிகள் கூறுகிறோம். மீண்டும் இறைவன் அருளால் இதுபோல் பொது வாக்கினை கூறும் வரை அனைவரும் இறைவன் வழியிலே மனம் தடுமாறாது வர மீண்டும் மீண்டும் நல்லாசிகளைக் கூறுகிறோம். ஆசிகள் ஆசிகள் பூரண ஆசிகள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 395

அகத்திய மாமுனிவர் அருளிய பொது வாக்கு:

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இதுபோல் நல்விதமாய் போகனை பணித்தால் அவன் ஒதுங்கி விடுகிறான் இவையெல்லாம் தன்னால் ஆகாது என்பதுபோல. இருப்பினும் சுவாசம் குறித்து கூறி சென்றிருக்கிறான். அதனை மீண்டும் மீண்டும் கேட்க பல்வேறு புதிய பொருள் சேய்களுக்கு புரியும். அது ஒருபுறமிருக்க சித்தன் வாக்கு என்றால் ஏதோ வாழ்வியல் குறித்து அறிந்து கொள்ளலாம். எங்கள் குடும்பத்தில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வை தேடி வரலாம். எங்கள் பிள்ளைகளின் பிரச்சினைகளுக்கு தீர்வை தேடலாம் என்று வந்தால் ஒன்றும் புரியவில்லை. ஏதோ கூறுகிறார்கள். வெறும் தத்துவார்த்த விளக்கமாக இருக்கிறது. எமக்கு இவையெல்லாம் தேவையில்லை. என்று எங்கள் வாழ்வியல் பிரச்சினைகள் தீரும்? என்று எங்கள் பொருளாதார நெருக்கடி தீரும்? என்று எங்களுக்கு ஏற்பட்டுள்ள வழக்கு தீரும்? என்று எங்கள் சேய்கள் எங்கள் பேச்சைக் கேட்பார்கள்? என்று எங்கள் வாழ்க்கையிலே மகிழ்ச்சி மலரும்? என்று எண்ணுகின்ற எண்ணங்கள் இங்குள்ள சேய்களுக்கு அதிகம் அதிகம். எனவேதான் இதுபோல் தத்துவம் தாண்டி பக்திமார்க்க வழியை கூறுகிறோம்.

முன்பே அன்றொரு உபதேச பணி புரிகின்ற அன்னவன் இல்லத்தில் கூறினோம். அதுபோல் பரிகாரத்தை தொடர்ந்தே இதுபோல் மீண்டும் கூறுகிறோம். பல்வேறு தடம் சென்று வழிபட முடியாத அரங்கத்தில் அனைத்தையும் தீர்த்துக் கொள்ளலாம். இருந்தாலும்கூட தூர தூர தேசம் சென்று தூர தூர ஸ்தலங்கள் செல்வதால் சில சூட்சும கர்மவினைகள் அலைச்சலாலும் மன உளைச்சலாலும் தன வியத்தாலும் தீரும் என்பதால்தான் சில ஸ்தலங்களை ஸ்தல பயணங்களை யாங்கள் அடிக்கடி சேய்களுக்கு அறிவுறுத்துகிறோம். இதனை நன்றாக புரிந்து கொள்ள நன்றாம். இதுபோல் ஆதிரை மீன் என்றாலும் அவன் அரவுக்கு சொந்தம் என்பதால் நன்றாக அரவின் (ராகு) பிடியில்தான் அனைவரும் இருக்கின்ற நேரமிது காலமிது. நன்றாய் சேய்கள் கடும் மன உளைச்சல் நீண்டகால துன்பம் தொடர்ந்து எத்தனை போராடினாலும் அறிவை பயன்படுத்தினாலும் துன்பத்திலிருந்து வர முடியவில்லை என எண்ணுகின்ற அனைத்து சேய்களுமே அரவு (நாக) தோஷ நிவர்த்தி ஆலயம் சென்று மனமார பிரார்த்தனை செய்ய நன்று. நன்றாய் அதனையும் தாண்டி கடும் பொருளாதார நெருக்கடி இருக்கிறது. எங்களின் நியாயமான தேவைகள்கூட நிறைவேறவில்லை என எண்ணக் கூடியவர்கள் தம் மனசாட்சியின்படி தனக்கு வந்துள்ள ருணம் (கடன்) நியாயம் என எண்ணக் கூடியவர்கள் தன்னுடைய அறிவைக் கொண்டு நியாயமாக அந்த ருணத்தை தீர்க்கலாம் என்ற வழிமுறையை பின்பற்றியும் தீர்க்க முடியாதவர்கள் நன்றாய் ஒவ்வொரு அரவு வேளையிலும் (ராகு காலத்திலும்) நன்றாக அன்னை துர்க்கையை மனமார பிரார்த்தனை செய்ய தொடர்ந்து நல்லதொரு மாற்றத்தை மெல்ல அறியலாம்.

கடும் தோஷம் உள்ளதால் குடும்பத்தில் ஒன்று மாற்றி ஒன்று பிரச்சினை வந்துகொண்டே இருக்கிறது அல்லது திடீர் திடீரென கடுமையான விபத்துக்களை சந்திக்க நேரிடுகிறது. வெறும் மருத்துவ வியமாகவே இருக்கிறது. எத்தனைதான் மாற்றி மாற்றி கவனமாக வாழ்ந்தாலும்கூட குடும்ப உறுப்பினர் யாராவது மருத்துவ செலவுக்கு ஆட்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். கடும் பிணி அல்லது இன்ன பிணி என்று கண்டுபிடிக்க முடியாமல் போராட வேண்டி இருக்கிறது என வருந்துகின்ற சேய்கள் அதே அரவு காலத்திலே பைரவரை நோக்கி சென்று நல்விதமாய் பரிபூரணமாய் பிரார்த்தனை செய்ய நன்றுதான். இதுபோல் நன்றாய் முன்பே கூறியபடி சேய்களுக்கு செய்ய வேண்டிய அனைத்து பிராயச்சித்தங்களையும் செய்து விட்டோம். முடிந்தவரை அனைத்து ஸ்தலங்களும் சென்றுவிட்டோம். ஆத்மார்த்தமான தர்மங்களையும் செய்துவிட்டோம். இன்னும் திருப்திகரமாய் மணம் கூடவில்லை என வேதனையோடு இருக்கக் கூடிய ஈன்றோர்கள் அதே அரவு காலத்திலே நல்விதமாய் அன்னையின் ஸ்தலம் நோக்கி சென்று அதிலும் தெற்கு நோக்கி பிரதான வாயில் இருக்கக் கூடிய ஆலயமாக தேர்ந்தெடுத்து கீழ்திசை வாசல் இருந்தாலும் தெற்கு வாயிலை மாந்தர்கள் பிரதானமாக பயன்படுத்தும் ஆலயமாக தேர்ந்தெடுத்து அரவு காலத்திலே அன்னையை பரிபூரணமாக தொடர்ந்து வணங்கிவர நன்றுதான். தடைபட்ட மணமும் இதுபோல் பரிகாரத்தால் தீருமப்பா.

நல்விதமாய் நன்றாய் மணம் கூடினாலும் கூடியவர் கூடி வாழவில்லையே? என்ற ஏக்கம் இருக்கின்ற அனைவருமே அரவு காலத்திலே நன்றாய் ஜென்ம மீன் (ஜென்ம நட்சத்திரம்) ஓடும் காலத்திலோ அல்லது சுக்கிர வாரத்திலோ சேர்ந்து வாழ்கின்ற தன்மை பெறத்தானே இளையோன் முருகப்பெருமானின் திருவடியை நோக்கி சென்று நன்றாக பரிபூரண வழிபாட்டை செய்ய நன்மை உண்டாம். நன்றாய் தேகம் மிகவும் பிணியால் வாடிக்கொண்டே இருக்கிறது. தேகத்திலே ஒன்றுபோனால் ஒன்று குறை வந்து கொண்டே இருக்கிறது என எண்ணக் கூடிய சேய்களும் முடவன் வாரம் அதே அரவு காலத்திலே நன்றாய் முக்கண்ணனாகிய சிவனை நோக்கி சென்று பரிபூரண வழிபாட்டை செய்யவும் நன்றாம். எதையும் எங்களால் செய்ய இயலவில்லையே? இருந்தாலும் அனைத்து பிரச்சினைகளும் தீரவேண்டும் என எண்ணக் கூடியவர்கள் நன்றாய் மூத்தோனை வணங்கி ஒவ்வொரு தினமும் அரவு காலத்திலே வாய்ப்புள்ள ஆலயம் சென்று அந்தந்த மனிதனின் அகவை எனப்படும் வயதிற்கு ஏற்ப நவகிரகங்களை வலம் வந்து வலம் வந்து கொடிமரத்தின் கீழே சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து நன்றாய் பிரார்த்தனை செய்து விட்டு வர படிப்படியாய் கர்மவினைகள் குறையும்.

நாங்கள் தனித்தனி சேய்களுக்கு தனித்தனி பரிகாரங்களை எத்தனையோ முறை கூறியிருக்கிறோம். எதையும் செய்ய முடியவில்லை அல்லது முயற்சி செய்தாலும் தடை வருகிறது என எண்ணக்கூடிய அனைவருமே இதுபோல் கூறிய இந்த ஆகமத்தையோ அல்லது அனைத்தையும் செய்ய முடியாதவர்கள் நவகிரக வழிபாட்டையோ தொடர்ந்து செய்ய நன்மை உண்டு. இதுபோல் எத்தனையோ வழிபாடுகளை செய்து விட்டோம். பெரிய பெரிய பூஜைகளை செய்துவிட்டோம் என்றெல்லாம் மனம் வெதும்பி இருக்கக்கூடிய சேய்கள் கட்டாயம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். பாவ வினைகளின் அளவு மலைபோல் இருக்க செய்கின்ற பூஜையோ தர்மமோ கடுகுபோல் இருந்தால் பலன் கிட்டாது. எனவே தொடர்ந்து மனம் தளரா பிரார்த்தனையையும் புண்ணியத்தையும் சேர்த்துக் கொண்டே இருத்தல் அவசியமாகும். இதுபோல் வாய்ப்பு உள்ளவர்கள் கட்டாயம் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இல்லத்திலோ அல்லது வாய்ப்புள்ள ஆலயத்திலோ அனைத்து யாகங்களையும் செய்ய மேலும் தேக நலத்தோடு பாவ வினைகள் குறைந்து முன்னேற்றம் பெற வாய்ப்புண்டு.

இதோ இங்கு கூடியுள்ள சேய்களிலே மனக்குறை தீராத குறை அச்சம் எதை எண்ணியாவது குழப்பம் வேதனை இருக்கக் கூடிய அனைவருமே இதுபோல் அரவு காலத்திலே நன்றாய் சிகி எனப்படும் கேது பகவானுக்கு பரிபூரண பிரார்த்தனையும் வழிபாடும் செய்து கேதுவின் திருவடியை வணங்குவதோடு விநாயகப் பெருமானின் திருவடியையும் வணங்கி நன்றாக பிரார்த்தனை செய்ய கடும் மன உளைச்சலும் மன வேதனையும் இனம் தெரியாத அச்சமும் விலகும் என்று இத்தருணம் கூறுகிறோம். இதுபோல் கூறிய தத்துவார்த்த விளக்கத்தை நன்றாக புரிந்து கொள்ளவும். அது புரியாத சேய்கள் கூறிய வழிபாடுகளை நன்றாக ஆத்மார்த்தமாக பரிகாரங்களை செய்வதோடு முன்னரே கூறியபடி நவகிரக தோஷம் விலக செய்யக் கூடிய தர்ம காரியங்களையும் கேட்டறிந்து செய்ய நன்றான சூழல் வாழ்க்கையில் ஏற்படுவதோடு பாவ வினைகள் படிப்படியாய் குறையும் என்று கூறி சேய்கள் அனைவருக்கும் இறைவன் அருளால் பரிபூரண நல்லாசிகளை கூறுகிறோம். ஆசிகள் ஆசிகள் ஆசிகள்.