ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 384

அகத்திய மாமுனிவர் அருளிய பொது வாக்கு:

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் கால காலம் வாழ்வியல் துன்பங்களுக்கு தீர்வு தேடி மாந்தர்களில் சிலர் எம்மை நாடுவது உண்டு . துன்பங்கள் எல்லாம் ஒரு கணப்பொழுதில் அல்லது விழி மூடி விழி திறப்பதற்குள் தீர்க்கப்பட வேண்டும் என்பதே மனிதனின் நோக்கமாக இருக்கிறது. அணுவளவும் துன்பமே இல்லாமல் வாழ வேண்டும் சதா சர்வகாலமும் இன்பமும் சாந்தியும் வாழ்வில் நிலவ வேண்டும் என்பதே மனிதர்களின் எண்ணமாக இருக்கிறது. இதை தவறு என்று நாங்கள் கூறமாட்டோம். ஆனால் இந்த இன்பமும் நிம்மதியும் இந்தந்த விதத்தில்தான் இருக்க வேண்டும் என்று மனிதன் எதிர்பார்க்கிறானே அந்த எதிர்பார்ப்புதான் குறையாக மாறி விடுகிறது. எனவே மனிதர்கள் எதிர்பார்க்கக் கூடிய நீடித்த இன்பமும் நிலைத்த சாந்தியும் இறைவனின் பாதாவிந்தங்களை சரண் அடைந்து இறையோடு சாயுச்சமோ சாரூபமோ சாலோகமோ சாமீபமோ ஏதாவது ஒரு ஆன்ம பரிணாம வளர்ச்சி நிலை அடைந்தால் ஒழிய மனிதனுக்கு கிட்டாது.

இந்த உலக வாழ்விலே உன்னதங்களை அடைந்தால் நிம்மதி சந்தோஷம் என்று அதை அடைவதற்கு முன்னால் ஒரு மனிதன் எண்ணுவான். அடைந்த பிறகு அப்படி அவனால் நிம்மதியாக சந்தோஷமாக வாழ இயலாது. மனித மனம் பக்குவம் பக்குவம் பக்குவம் என்று பக்குவத்தின் உச்ச நிலையிலே நின்று பார்க்கும் பொழுது அவன் எதிர் பார்க்கின்ற அனைத்தும் அபத்தமாகத் தெரியும். யாங்கள் மிகத் தெளிவாகக் கூறுகிறோம் என்றாலும் மனிதனால் புரிந்து கொள்ள முடியாத நிலை அவன் கர்மாவில் அடங்கி இருக்கிறது. பெற்று வந்த கர்ம பாவத்தை நுகர்வதற்காக வந்த உடல் சார்ந்த விஷயங்களுக்கு மட்டும் வாழ்வது என்பது மனிதனின் இயல்பான விஷயம். அதை எதிர்த்து இறை நோக்கி செல்வதுதான் மகான்களின் ஆன்ம போதனையாகும். எனவே இயல்பான விஷயங்களுக்காக ஒரு மகானையோ ஞானியையோ மனிதன் நாட வேண்டியதில்லை. அதற்காக இயல்பான விஷயங்களே வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை.

விதி போக்கில் எப்படியெல்லாம் அவை கிட்டுகிறதோ அப்படியே மனிதன் அதை ஏற்றுக் கொள்ளட்டும். ஒரு வேளை அவன் விரும்புவது போல் அது கிட்டாமல் போனாலும் மிகப் பெரிய இழப்பு ஏதும் இல்லை. ஆனால் ஆன்மீக வழியில் வராமல் வரும் சிந்தனை கூட இல்லாமல் பாவம் புண்ணியம் என்கிற பேதம் தெரியாமல் வெறும் விலங்குகளைப் போல் உண்டு உறங்கி சந்ததிகளை உற்பத்தி செய்து வாழும் மனிதர்கள் அனைவரும் எம் பார்வையில் பரிதாபத்திற்கு உரியவர்கள் அவர்கள் இன்னும் எத்தனையோ பிறவிகள் எடுத்துதான் ஆன்ம ஞான வழியை நோக்கி செல்ல இயலும். அது போன்ற மனிதர்களை கூட சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் பல்வேறு பிறவிகளில் சேர்த்த ஓரளவு புண்ணியத்தின் காரணமாக ஏதாவது ஒரு பிறவியிலே நல்ல வழியை இறைவன் காட்டிக் கொடுத்தாலும் கூட தடுமாற்றத்தாலும் குழப்பத்தாலும் வேறு வேறு வாழ்வியல் சிக்கலை முன்னிறுத்தி அந்த ஆன்மீக வழியை புரிந்து கொள்ள மாட்டேன் என்றோ அல்லது புரிந்தாலும் அதன் வழியாக வரமாட்டேன் என்று சில மனிதர்கள் வாழ்கிறார்களே அதுதான் விதியின் கொடுமையிலும் கொடுமை ஆகும். எனவே உலகியல் வாழ்விற்காக கடுமையாக ஒருவன் போராடக் கூடாது என்று நாங்கள் கூறவில்லை. கடுமையாக ஒருவன் உழைக்கக் கூடாது என்று நாங்கள் கூறவில்லை. அந்த செயலின் காரணமாக மறந்தும் பாவத்தை சேர்க்கக் கூடாது என்பதுதான் எமது கோட்பாடாகும்.

கூடுமானவரை யாரையும் பாதிக்காமல் யார் மனதையும் புண்படுத்தாமல் தத்தம் கடமைகளை நேர்மையாக ஆற்றி தன்னால் முடிந்த தர்ம காரியங்களை ஆற்றி அன்றாடம் இறை நாமாவளியை ஆழ் மனநிலையில் நிறுத்தி சிந்தித்து ஒரு மனிதன் வாழ்ந்தாலே தேடுகின்ற நிம்மதியும் சந்தோஷமும் அவனைப் பின்தொடரும். இறைவனின் அருளாசியும் வந்து சேருமப்பா. இதை சரியான விகிதாசாரத்திலே புரிந்து கொண்டு எந்த விதமான காழ்ப்புணர்ச்சிக்கும் இடம் தராமல் எம் வழியில் வர முயற்சி செய்தால் இறைவன் அருளைக் கொண்டு யாமே அதுபோல் மனிதனை கரை சேர்ப்போம் அப்பா.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 383

கேள்வி: திருவைகாவூர் ஸ்தலத்தை பற்றி

சிவராத்திரியின் புண்ணிய காலத்தை பறை சாற்றுகின்ற ஸ்தலங்களில் இதுவும் ஒன்று. பொதுவாக இதுபோன்ற ஸ்தலங்களில் எல்லாம் ஆதிரை நட்சத்திரத்தில் அபிஷேகம் செய்து வழிபாடு செய்பவர்களுக்கு பித்ரு தோஷங்கள் மட்டுமல்லாமல் நாகதோஷம் குறைவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. இதுபோல் ஸ்தலங்களிலே ஆதிரை மீனில் பிறந்தவர்கள் அல்லது ஆதிரை மீன் நடக்கின்ற காலத்திலே முழுமையான விரதத்தோடு வழிபட்டு வந்தால் இவன் கேட்ட காலசர்ப்ப தோஷமோ அல்லது வேறுவகையான நாகதோஷமோ கூடுமானவரை பெரிய அளவு பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்கும்.

மேலும் இக்கோவிலைப் பற்றி அறிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 382

கேள்வி: தர்மத்தில் எப்படி கர்ணனை பார்த்தால் பொறாமையாக இருக்கிறதோ அதைப் போல் பக்தியில் பிரகலாதன் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது.

பக்தியில் இடை எழுத்தை எடுத்து விட்டால் பதி என்று வரும். பதியை பக்தியோடு பார்ப்பது ஒரு நிலை ஒரு காலம். இன்றும் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதுபோல் பதியும் பத்தினியை அவ்வாறுதான் நோக்க வேண்டும். பதி பக்தி என்று பதிக்கும் பத்தினிக்கும் ஒரு உடன்பாடு சம நிலையில் வந்து விட்டால் அந்த பதிக்குள் இருக்கின்ற இறையும் பத்தினிக்குள் இருக்கின்ற இறைத் தன்மையும் ஒன்றுபட அங்கே மெய்யான பக்தி உணர்வு என்பது வெளிப்படும். ஆனால் எனக்குள் இருக்கின்ற எதிர்பார்ப்புகள் எல்லாம் நீ பூர்த்தி செய்தால் என்னை அனுசரித்து நீ நடந்து கொண்டால் என் விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம் உன் செயல்கள் இருந்தால் மட்டுமே வாழ்க்கை என்று வெறும் புற செயலோடு ஒப்பிட்டுப் பார்த்து வாழ்வதால் இங்கு உறவுகள் உறவுகளாக இல்லாமல் துறவுகளாக ஆகிவிட்டன. எனவே பக்தி என்பது எதையும் எதிர்பார்க்காது. எந்த நிலையிலும் எதனாலும் பாதிக்கப்படாது. பக்தி என்பது பூரணத்துவத்தை மட்டும் உணரக் கூடியது. பக்தி என்பது அழியாத அன்பு மற்றும் கருணையின் கலப்பாகும். எனவே பக்தியில் செயல் பார்க்கப்படுவதில்லை நோக்கம் மட்டுமே பார்க்கப்படுகிறது.

ஆழ்ந்த நோக்கம் புற மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாமல் போனாலும் இறையால் புரிந்து கொள்ளப்படும். எனவே அதனால்தான் இறைக்கு முன்னால் வேடதாரிகள் தோற்று விடுகிறார்கள். வேடமிடாத மெய் பக்தர்கள் அங்கே வெற்றி பெறுகிறார்கள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 381

நேற்று திருவாசகம் ஓதினோம்:

வாசகம் என்றால் அது கலைவாணி தொடர்புடைய விஷயம். திரு என்றால் அது மகாலக்ஷ்மி தொடர்புடைய விஷயம். இரண்டும் ஒன்று சேர்ந்து இருப்பது சிறப்பல்லவா ? அதனால்தான் அது சிறப்பாக இருக்கிறது. ஆனால் நடைமுறையில் இந்த உலகிலே இந்த இரண்டும் ஒன்று சேர்ந்தே இருப்பதில்லை.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 380

அகத்ததிய முனிவரின் பொதுவாக்கு:

இறைவனின் கருணையைக்கொண்டு இயம்புவது யாதென்றால் இறை வழிபாட்டை மறவாது ஆழ்ந்து நுண்ணியமாய் தீவிரமாய் நுணுக்கமாய் எவ்வாறு லோகாய ஆசைகளை மனிதனை விட்டு பிரிக்க முடியவில்லையோ அதைப்போல மனித மனம் இறைவனின் திருவடி மீது ஒரு பிரிக்க முடியாத பற்றை வளர்த்துக் கொண்டால் ஒரு மாறாத அன்பை வளர்த்துக் கொண்டால் அதே ஒவ்வொரு ஆத்மாவிற்கும் கரை சேருகின்ற வழியாகும். ஆனால் ஞானியர்கள் இதனையும் தாண்டி ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள் என்றுதான் கூறுகிறார்கள். ஆனாலும் இந்த உயர்ந்த நிலையை நோக்கி செல்வது கடினம் என்பதால்தான் மனிதன் நடப்பதற்கு குறைந்த பட்சம் ஒரு ஊன்றுகோல் தேவை ஒரு பிடிமானம் தேவை என்பதுபோல இறைவனின் அருள் கருணை கல்யாண குணங்கள் ரூபம் இறைவன் இத்தன்மை கொண்டவர் போன்றவற்றை மனதிற்குள் எண்ணி அந்த நீக்கமற நிறைந்துள்ள பரம்பொருளின் உயர் குணத்திற்குள் அந்த ஆத்மா ஐக்கியமாக முயல வேண்டும்.

இதை ஒவ்வொரு மனிதனும் கடுமையாக முயற்சி செய்து போராடித்தான் பெறவேண்டும். அது எடுத்த எடுப்பிலேயே சாத்தியப்படாது என்பது எமக்கும் தெரியும். அது முடியாது என்பதால் முயற்சிக்காமல் இருக்கத் தேவையில்லை. எத்தனை முறை தோற்றாலும் தொடர்ந்து அந்த உயர்ந்த விஷயத்தை நோக்கி செல்வதில் தவறில்லை. தீய பின் விளைவுகள் இல்லாத ஒரே உறவு இறைவன்தான். நேற்றும் இன்றும் நாளையும் ஒரே நிலையில் எல்லா உயிர்களையும் சம அளவில் பார்க்கக் கூடியவர் பராமரிக்கக் கூடியவர். தன்னை உணர்ந்தாலும் உணரா விட்டாலும் உயிர்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்பவர். உயிருக்கு உயிராய் இருக்கக் கூடியவர். அந்த உயிரையும் தாண்டி உணர்வுகளால் ஐக்கியப்பட்டு இருக்கக் கூடியவர். எப்பொழுதும் எங்கும் தீர்க்கமாய் திடமாய் ரூபமாய் அரூபமாய் நம்பிக்கையிலும் நம்பிக்கையின்மையிலும் அவர்தான் இருக்கிறார். அப்பேற்பட்ட அந்த உயர்ந்த இறைவனிடம் மனிதன் எந்த அடிப்படையில் தோற்று விடுகிறான் என்றால் லோகாய விஷயங்களை எதிர்பார்த்து எதிர்பார்த்து பரம்பொருளை நோக்கி சென்று பழக்கப்பட்டு விட்ட மனிதனுக்கு ஒருவேளை அவன் எண்ணிய எண்ணம் அவன் விரும்புகின்ற விஷயம் கிட்டவில்லை என்றால் இறை நம்பிக்கை பொய்த்துப் போய் விடுகிறது.

எனவேதான் ஒரு மனிதனுக்கு இத்தகைய ஆசைகள் இருந்தாலும் கூட அவைகள் நடந்தாலும் சரி நடக்கா விட்டாலும் சரி இறைவா இன்னின்ன விஷயங்கள் எனக்குத் தேவை என்று என் சிற்றறிவுக்கு எட்டுகிறது. இவைகள் எல்லாம் கிடைத்தால் நான் சந்தோஷமாக வாழலாம் என்று எண்ணுகிறேன். இயன்றால் இதனைத் தந்து உதவு. இல்லையென்றால் எது கிடைத்தால் தடையற்ற சந்தோஷமோ திருப்தியோ தொடர் நிம்மதி எங்களுக்குக் கிட்டுமோ அதைத் தா என்று ஒரு வேண்டுகோளை வைக்கலாம். அதிலும் நுணுக்கமாய்ப் பார்த்தால் ஏதாவது வந்தால்தான் தந்தால்தான் நிம்மதி சந்தோஷம் என்றாலே அதற்கு ஒரு எல்லை வகுக்கப்பட்டு விடுகிறது. எனவே பெறுவதிலோ அல்லது வெளியிலிருந்து வருவதிலோ சந்தோஷமில்லை. ஒரு மனிதன் தன்னிடம் இருப்பதிலிருந்து எப்படியெல்லாம் இழக்கிறானோ தன்னை இழந்தால்தான் ஆனந்தம். தன் உணர்வு தான் என்ற நினைவு எப்பொழுது நூற்றுக்கு நூறு விழுக்காடு அற்றுப் போகிறதோ அப்பொழுதுதான் அவன் தூய நித்திய ஆனந்தத்தை பிரம்மானந்தத்தை உணர முடியும் நுகர முடியும்.

நான் அற்றுப் போன பிறகு அங்கு உணர்வதற்கு எது இருக்கிறது? நான் இருந்தால்தானே அந்த நான் எதையாவது உணர முடியும்? என்ற ஒரு வினா வைக்கலாம். உண்மைதான் நான் கடுகளவாவது இருந்தால்தான் உணரமுடியும். ஆனால் அப்படி உணரக் கூடியது என்றென்றும் தொடர்ந்து சந்தோஷமாக மட்டும் இருக்கும் என்பதற்கு உத்திரவாதமில்லை. அது துக்கமாக துன்பமாக துயரமாக உளைச்சலாக விரும்பத்தகாத நிகழ்வாக இருக்கலாம். இரண்டையும் ஏற்றுக் கொள்ளக் கூடிய பக்குவமான மனிதன் நான் என்ற உணர்வில் இருக்கலாம். இரண்டில் ஒன்று மட்டும்தான் வேண்டும். அதாவது துயரம் வேண்டாம் சந்தோஷம் வேண்டும் துக்கம் வேண்டாம் நிம்மதி வேண்டாம் என்று எந்த மனிதன் எண்ணுகிறானோ அப்பொழுது அவன் நான் அற்றுப் போக வேண்டும். நானில் இருக்கும்வரை அவன் நாணித்தான் வாழ வேண்டிய நிலைமை இருக்கும். எனவே நான் அற்றுப் போனால் அப்பொழுதுதான் நிரந்தர நிம்மதி. இல்லையென்றால் ஒரு மனிதன் தன்னுடைய நிம்மதிக்கும், சந்தோஷத்திற்கும் ஏதாவது ஒரு எல்லையை வகுத்துக் கொண்டே செல்ல வேண்டியிருக்கும்.

இது கிடைத்தால் ஆனந்தம் அது கிடைத்த பிறகு இன்னொன்று கிடைத்தால் ஆனந்தம் பிறகு கிடைத்தது நீடித்தால் ஆனந்தம். நான் எண்ணுவது போல என்னை சுற்றியுள்ளவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப் போனால் துக்கம். அப்படி நடந்தால் ஆனந்தம் ஒருமுறை நடந்து மறுமுறை நடக்கவில்லை என்றால் துக்கம். என்னுடைய உணர்வுகள் எந்த விதத்திலும் காயப்படாமல் இருக்க வேண்டும். என்னுடைய உடல் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க வேண்டும். உடல் அவஸ்தை என்பதே இருத்தல் கூடாது. உணர்வுகள் எப்பொழுதும் ஒருவிதமான நல் உயர் சுக அனுபவத்தில் திளைத்திருக்க வேண்டும். அந்த அனுபவத்திற்கு குறுக்கே யாரும் வந்து விடக் கூடாது. நான் எந்த நிலையில் சிந்திக்கிறேனோ எந்த உச்சத்தில் இருந்து கொண்டு எதையும் பார்க்கிறேனோ என்னைச் சுற்றியுள்ளவர்களும் அப்படியே இருக்க வேண்டும் என்று இப்படி ஒரு மனிதன் எதை எண்ணினாலும் தோற்றுத்தான் போவான். நடப்பதையெல்லாம் இயல்பாகவே எடுத்துக் கொண்டு ஒரு பார்வையாளனாகவே பார்த்து கொண்டு உள்ளுக்குள் அவன் கரைந்து போய் விட்டால் அந்த பரம்பொருளோடு நீக்கமற இணைந்து விட்டால்தான் அவனுக்கு நிரந்தர சுகம் நிரந்தர நிம்மதி.

பிறகு தனக்குள் இருந்து தான் இன்னும் துடித்துக் கொண்டும் இருந்தால் அந்தத் தானில் ஏதாவது மிச்சம் மீதி இருக்கும் வரையிலும் அங்கு சந்தோஷமும் ஒருவேளை இருக்கலாம். துக்கமும் இருக்கலாம் அல்லது வேறு வகையில் கூறப்போனால் முட்டாள்தனமான அறியாமையில் தொடர்ந்து வாழக்கூடிய மனிதன் சந்தோஷமாக இருக்கலாம் அல்லது தெய்வீக அறிவின் உச்சத்தில் இருக்கக் கூடிய மனிதன் சந்தோஷமாக இருக்கலாம். அறியாமையால் கிடைக்கக்கூடிய சந்தோஷம் நீடிக்காது. தீய பின் விளைவுகளைத் தரும். நல்ல முறையிலே அறிவார்ந்த நிலையிலே மெய்யறிவை தெளிந்த தெய்வீக அறிவை பெற்ற பிறகு கிடைக்கக் கூடிய சந்தோஷம் நீடிப்பதாக இருக்கும். அதனையும் தாண்டி ஒரு நிரந்தர நிம்மதியும் சந்தோஷமும் பெற ஒருவனுக்கு அவன் என்ற உணர்வோ அவள் என்ற உணர்வோ அற்றுப்போக வேண்டும். அது அற்றுப் போகும் வரை அவனிடமும் அவளிடமும் எல்லாம் இருக்கும். எல்லா இருக்கின்ற அந்த நிலையிலே வாழ்விலே இவைகள் எல்லாம் வேண்டும் இவைகள் எல்லாம் வேண்டாம். எனக்கு தானியங்கள் வேண்டும் தவிடு வேண்டாம். எனக்கு நீர் வேண்டும் சேறு வேண்டாம். எனக்கு சுகந்த நறுமணமிக்க காற்று வேண்டும். ஆனால்
புயல் வேண்டாம். தேவையான அளவு நீர் வேண்டும். ஆனால் வெள்ளம் வேண்டாம் என்றால் அது சாத்தியமேயில்லை.

ஒவ்வொன்றின் உச்ச நிலையையும் அடுத்த நிலையையும் மனிதன் சந்தித்தே ஆக வேண்டும். இரண்டு தன்மையும் வேண்டாம் என்றுதான் ஒருவனால் இருக்க முடியுமே தவிர இரண்டில் ஒன்று என்பது இறை படைப்பில் எப்பொழுதுமே இல்லை. இரண்டையும் சமமாக பார்க்கின்ற பக்குவத்தைதான் மனிதன் வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த உணர்வை நோக்கி எமை நாடுகின்ற மனிதர்கள் மெல்ல மெல்ல வர இதுபோல் நல்விதமாய் முழுமதி தினம் தன்னிலே செவ்வாய்க்குரிய நட்சத்திரத்திலே இறைவன் திருவடியை வணங்கி யாம் அனைவருக்கும் நல்லாசி கூறுகிறோம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 379

கேள்வி: சித்ரா பௌர்ணமிக்கும் சித்தர்களுக்கும் என்ன தொடர்பு ?

இறைவன் அருளாலே எதோடும் தொடர்பு வேண்டாம் என்றுதான் நாங்கள் சித்தர்களாக மாறியிருக்கிறோம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 378

கேள்வி: ஸ்ரீ இராமபிரான் பற்றி?

இறை கருணை கொண்டா ராம் அதனால் உலகை படைத்தா ராம்.
இறை கருணை கொண்டா ராம். அதனால் உலகை படைத்தா ராம்.
இன்பம் இது என காட்டித் தந்தா ராம்.
இன்பம் இது என காட்டித் தந்தா ராம்.
ஈகை குணம் வளர்த்தலே என்றும் உயர்வை தரும் என்றா ராம்.
இன்பமிது என காட்டி தந்தா ராம்.

இறை கருணை கொண்டா ராம் அதனால் உலகை படைத்தா ராம்.
இறை கருணை கொண்டா ராம். அதுபோல் இறை கருணை கொண்டதனால் அதுபோல் இறை கருணை கொண்டுள்ள அத்தன்மையை மீண்டும் உள் உணர்ந்து பார்க்க ஞானிகள் வந்தா ராம்.

இறை கருணை கொண்டா ராம். இதுபோல் ஒவ்வொரு கணமும் உயிர்கள் மீது அன்பு தந்தா ராம். இயம்புங்கால் திருஷ்டியில் அருளை தருவா ராம். துயரத்தில் தன்னை இணைத்து கொள்வா ராம். தொல்லை வரும் பொழுதெல்லாம் தன் பக்தருக்கு முன்னால் நடப்பா ராம். அவர் வருவா ராம். போவா ராம். இருப்பா ராம். என்றும் நல் அருளை தருவா ராம். ஆயினும் இதை உணர்ந்தவர் யார்? புரிந்தவர் யார்? இதுபோல் இருக்கும் கருணை வெள்ளம் அனைத்தும் சொந்தம் என கொண்டவ ராம். அதனை தன் உள்ளே உள்ள கருத்தில் ஞானியர் கொண்டவ ராம்.

அதுபோல் கொண்டவ ராம். அதுபோல் கொண்டவ ராம் தன்னை கொண்டவளே அன்னை கொண்டவ ராம். தன்னை கொண்டவளே அன்னை. இயம்புங்கால் அவர் என்றும் இருப்பா ராம். அவர் இருந்து இருந்து உயிர்களை காப்பா ராம். காத்து காத்து ரட்சித்து அருள்வா ராம். அவர் என்றும் உயிர்களோடு பரிவாய் உறுதுணையாய் இருப்பா ராம். அவர் போவா ராம் வருவா ராம் என்று தோன்றினாலும் அவர் என்றென்றும் இருப்பா ராம். அவர் பக்தர்கள் நெஞ்சில் கிடப்பா ராம். அவர் அன்புக்கு என்றும் அடிமையாய் இருப்பா ராம். இதை உணர்ந்த உயிருக்குள் உயிராய் ஒளிர்வா ராம். அவர் என்றும் உயர்ந்தா ராம். அவர் ஒரு பொழுதும் தாழ்ந்தா ராம் என்று யாரும் கூற இயலாதாம். இதுபோல் இறை கருணை கொண்டா ராம். அதன் தன்மையை புரிய புரிய ஒவ்வொரு உள்ளமும் மகிழ்வில் ஆழுமாம்.

இறை கருணை கொண்டா ராம். இறை கருணை கொண்டா ராம். அதனால் அவர் வந்தா ராம். அதனால் பிள்ளை என பிறந்தா ராம். அதும் நாடு ஆள்வது தொல்லை என துறந்தா ராம். பிறகு வனம் சென்றா ராம். அதுபோல் அங்கு சிலரை கண்டா ராம். அதன் மூலம் பக்தியை வெளிப்படுத்தினா ராம். அதுபோல் அவர் தன் துணையை பிரிந்தா ராம். அங்கு அவர் கண்டா ராம். தன் துணைக்கு மேல் துணையாய் தன்னையே தனக்குள் அடிமைபடுத்தும் ஒரு துணையை அதுபோல் வாயுபுத்திரனை அவர் கண்டா ராம். தோழமை கொண்டா ராம். அதுபோல் அவர் வாலியை ஒதுக்கி வைத்தா ராம். அதுபோல் வாலியின் சோதரனை ஏற்றி வைத்தா ராம். அதனால் வாலியை மோட்சத்தில் இறக்கி வைத்தா ராம். அதுபோல் அவர் மனிதருக்கும் இறைக்கும் பாலம் என இருந்தா ராம். அதுபோல் மனிதர் செய்யும் பாவமெல்லாம் களைய அவர் பாலம் என இருந்தா ராம். அதுபோல் ஆழியை (கடலை) கடந்தா ராம். அதுபோல் ஆழிதாண்டி ஆழிதாண்டி அது பிறவி பெருங்கடல் தாண்டும் வண்ணம் மனிதர் உணரும் வண்ணம் அவர் பாலம் அமைத்தா ராம்.

அதுபோல் சென்றா ராம் . அசுரர் தலை எடுத்தா ராம். அசுரர் தலை எடுத்தா ராம். அங்கு தன் ஆத்மாவென விளங்கும் அன்னையை மீட்டா ராம். அந்த ஆத்மாவை அவர் மீண்டும் சோதித்து பார்த்தா ராம். மோட்சம் என்னும் தேசத்தில் அமர்ந்தா ராம். ஆட்சியை தொடர்ந்தா ராம். பஞ்ச புலனெல்லாம் வித விதமாய் அலை கழிக்க ஆத்மா தன்னை அது தொலைக்க தொலைந்ததை வைராக்கியம் என்னும் வாய்வு சென்று தேட தேடி கண்டுபிடித்து அதை உறுதியோடு பிடித்துக் கொள்ள அந்த ஆத்மாவுக்குள் உள்ள ஆத்மஞானம் செல்ல அதே இது. இதே அது என உணர்ந்தா ராம் உணர்ந்தா ராம். அவரெல்லாம் ராமர் வழி வந்தா ராம் வந்தா ராம். அதுபோல் அப்படி வருவோரெல்லாம் சிறந்தா ராம். சிறந்தா ராம். அதுபோல் சிறந்தோரெல்லாம் தொடர்ந்து பிறவியற்ற நிலைக்கு உயர்ந்தா ராம் உயர்ந்தா ராம்.

இறை கருணை கொண்டா ராம். அதனால் உயிர்கள் மீது அன்பு பொழிந்தா ராம். அவர் என்றென்றும் இருப்பா ராம். பக்தர்கள் உள்ளத்தில் கிடப்பா ராம். இது உணர்ந்தோரே உண்மையை உணர்ந்தோராம் ஏனையோர் எல்லாம் தாழ்ந்தோ ராம். எனவே தாழ்ந்தோ ராம் என்கிற நிலை தாண்டி உயர்ந்தோ ராம் என்ற நிலைக்கு வர அன்றாடம் அவரவர் வாயும் (மூச்சுக்காற்றோடு) ராம் ராம் ராம் என ஜபிக்க அவரவர் ஆத்மாவும் உயர்ந்தோ ராம் என்கிற நிலைக்கு வரும். இதுபோல் யாம் இறை அருளால் அதுபோல் உள்ளத்தில் கலந்து அன்பினால் உயர்ந்து வாழ இறை அருளால் நல்லாசி கூறுகிறோம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 377

கேள்வி: போக மகரிஷியின் தொடர்பு கிடைக்க என்ன செய்யவேண்டும்? அதற்கு ஆசி கூறுங்கள்:

இறைவனின் அருளைக்கொண்டு இன்னவனின் முன் இரு வினாக்களுக்கு பின்னொரு தருணம் இன்னவன் எம்முன்னே அமரும் தருணம் யாங்கள் வாக்குகளை பரவலாகக் கூறுகின்ற தருணம் இயம்பிடுவோம். அதே தருணம் போகன் என்று இல்லை. எந்த மகானுடன் மனிதன் தொடர்பு கொள்ள வேண்டும். எந்த சித்தர்களுடன் மனிதன் தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் முதலில் மனிதன் தன்னிடம் உள்ள அனைத்து தீய பழக்க வழக்கங்களையும் குணங்களையும் விட்டுவிட்டு இன்னும் கூறப் போனால் பல மனிதர்களிடம் தன்னிடம் இன்ன இன்ன வேண்டாத குணங்கள் இருக்கின்றன என்று கூட புரிந்து கொள்ள முடியாமல் வாழ்கிறார்கள். அவற்றையெல்லாம் சுய ஆய்வு செய்து மெல்ல மெல்ல விட்டுக் கொண்டே இன்னொருபுறம் எந்த சித்தனோடு தொடர்பு கொள்ள வேண்டும் என்று மனிதன் எண்ணுகிறானோ அந்த சித்தனின் நாமத்தை அடிக்கடி ஆழ்மனதிலே சொல்லிக் கொண்டு இருப்பதும் குறிப்பாக முன் பிரம்ம முகூர்த்தத்திலே எழுந்து வடகிழக்கு திசை நோக்கி பத்மாசனமிட்டு அமர்ந்து ஓர் முக சிந்தனையோடு அந்த சித்தனின் நாமாவளியை மனதிற்குள் உருவேற்ற உருவேற்ற சித்தர்களின் தொடர்பு என்பது மிக எளிதாகும். ஆனால் சிக்கல் எங்கே உருவாகிறது? என்றால் சித்தர்களோடு எனக்கு தொடர்பு இருக்கிறது.

சித்தர்கள் என்னோடு பேசுகிறார்கள் அல்லது நான் சித்தர்களை தரிசனம் செய்திருக்கிறேன் என்பது ஒரு மனிதனை பொறுத்தவரை அந்தரங்கமாக இருக்கும் வரையில் பிரச்சினை இல்லை. அதனை பலரும் நம்பவேண்டும் என்று அவன் முயற்சி செய்யும் பொழுதுதான் சிக்கல் உருவாகிறது. எனவே இதனை அவன் தனித்தன்மையோடு வைத்துக் கொண்டு இந்தவிதமான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டு இதோடு பெருவாரியான தொண்டுகளையும் தேக வழி தொண்டுகளையும் பொருள் வழி தொண்டுகளையும் செய்து கொண்டே இருந்தால் கட்டாயம் சித்தர்களின் தொடர்பு எல்லா மனிதர்களுக்குமே எளிதாகக் கிட்டும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 376

கிருஷ்ணனின் பால்ய நண்பரான குசேலர் அக்ஷய திருதியை அன்று அவல் முடிப்பை தந்து திருவருள் பெற்றது அனைவருக்கும் நியாபகம் வந்து இருக்கும்.

அதுபோல் வறுமையில் வாடினாரே குசேலன் அவர் கிருஷ்ண பரமாத்மாவை பார்க்க செல்கிறார். எப்படி செல்கிறார்? பல நாள் பட்டினியால் வாடிய வயிறு தேகம் இளைத்து இருக்கிறது. களைத்து இருக்கிறது. உச்சி கதிரவன் தன் பணியை செவ்வனே செய்து கொண்டிருக்கிறார். அன்றோ அக்னி நட்சத்திரம் தகித்து கொண்டிருக்கிறது. பாதை ஓரங்களில் நல்ல நிழல் தரும் விருட்சங்கள் இருக்கின்றன. ஆனால் குசேலர் ஓரமாக செல்லாமல் தன் பாதங்கள் புண்பட கடும் வெயிலில் நடந்து செல்கிறார். ஒருவர் கேட்கிறார் குசேலரிடம் அப்பனே உன் உடலோ வறுமையால் வாடியிருக்கிறது. உன் உள்ளமோ வேதனையில் ஆழ்ந்திருப்பது தெரிகிறது. இந்த நிலையிலும் உன் உடலை சூரிய ஒளியில் நடந்து ஏன் வாட்டுகிறாய்? அதுதான் சாலை ஓரங்களில் நிறைய விருட்சங்களை மன்னர்கள் வைத்திருக்கிறார்களே? எல்லோரும் அப்படித்தானே செல்கிறார்கள். நீயும் அதில் இளைப்பாறி ஓரமாகவே செல்லலாமே? என்று கேட்கிறார். உண்மைதான் பெரியவரே அப்படியே நடந்து செல்லலாம். என் உடலும் களைப்பில்லாமல் இருக்கும். ஆனால் இந்த அனல் தாங்காமல் சிறிய சிறிய உயிரினங்கள் எல்லாம் அந்த மரங்களின் அடியில் இருக்கும். என் கண்ணுக்குத் தெரியாமல் அவை அங்கே வாழ்ந்து கொண்டிருக்கும் தருணத்தில் நான் சுகமாக இருக்க வேண்டும் என்பதற்காக அந்த உயிரினங்களின் வாழ்க்கையை முடித்து விடக்கூடாதல்லவா நான் நடக்க நடக்க என் பாதங்கள் பட்டு அந்த உயிரினங்கள் எல்லாம் இறந்து விடக்கூடாதல்லவா? கட்டாயம் இந்த கடும் வெயிலில் எந்த உயிரினமும் இராது. எனவேதான் நான் பயமின்றி எந்த பாவமும் சேர்ந்து விடுமோ? என்ற அச்சமும் இன்றி நடந்து செல்கிறேன் என்று நடந்து செல்கிறார்.

உடனே நமது மனது சிந்திக்கும் இது சாத்தியமா? இப்படி நடந்து கொள்ள முடியுமா என்று. காலையிலிருந்து எங்கள் பிரச்சினைகளே பெரிதாக இருக்க எறும்பு எங்கே இருக்கிறது? சிறிய பூச்சி எங்கே இருக்கிறது? பாதங்களில் என்ன மிதிபடுகிறது? என்றெல்லாம் பார்க்க முடியுமா முடியாதுதான் ஒத்துக் கொள்கிறோம். அதற்குதான் தர்மம் தர்மம் தர்மம் தர்மம் தர்மம் தர்மம் தர்மம் தர்மம் என்று புண்ணியத்தின் பலனை அதிகரித்துக் கொண்டால் இந்த புண்ணியத்திலிருந்து சில பகுதிகளை எடுத்து அப்படி புண்ணியவானின் பாதங்கள் பட்டு இறந்து போன உயிர்களுக்கு இறைவன் மோட்சத்தை தந்துவிடுவார். வேறு வழியில்லாமல் தவிர்க்க முடியாமல் உயிர்க் கொலை செய்யக் கூடிய நிலை வந்து விட்டால் அந்த உயிர்களுக்கு யார் அப்படி செய்தார்களோ அவர்களின் கணக்கிலிருந்து புண்ணியத்தை எடுத்து அந்த உயிர்கள் நன்றாக இருப்பதற்குண்டான ஒரு சூழலை தருகிறார். இல்லையென்றால் மனித பிறப்பைத் தருகிறார். இல்லையென்றால் மாண்பாக வாழக்கூடிய ஒரு பிறப்பைத் தருகிறார்.

இன்னும் சில சூட்சுமங்கள் இருக்கிறது. இருக்கின்ற தனத்தையெல்லாம் புண்ணியம் என்று தர்மம் செய்து விட்டால் தாரம் பிள்ளைகள் சும்மா இருப்பார்களா? என்றெல்லாம் வறட்டு வாதமும் வீண் விவாதமும் செய்தால் நல்ல பலன்களை இழக்கப் போவது மனிதன்தான். புண்ணியத்தை முறையாக சேர்த்திருந்தால் எதற்கப்பா மருத்துவ சிகிச்சை வருகிறது? மருத்துவ சிகிச்சை வருகிறது என்றாலே செய்த புண்ணியங்கள் போதவில்லை இன்னும் பாவங்கள் இருக்கிறதுதான் என்று பொருள். வீண் விரயங்கள் ஒரு மனிதனுக்கு ஏன் வருகிறது? என்றால் விதி அவன் கணக்கிலிருந்து எத்தனை தனத்தைப் பிடுங்க வேண்டும் என்று இருக்கிறதோ அத்தனை தனத்தை பிடுங்கித்தான் ஆகவேண்டும். தனத்தை இறுக்கிப்பிடிக்கின்ற மனிதனிடமிருந்து விதி தனத்தை பிடுங்குகின்ற விதமே வேறு. தவறான மனிதர்கள் மூலம் அவனிடம் உள்ள செல்வத்தை மறைமுகமாகப் பிடுங்கிக் கொள்ளும். மனமார ஒருவனுக்கு உதவி செய்தால் மனதிற்கும் ஆறுதல் புண்ணியத்திற்கும் புண்ணியம். அப்படி செய்ய இயலாதவர்கள் தர்மத்தை மறந்தவர்கள் அல்லது தர்மத்தை மறுத்தவர்கள் பிறருக்கு உதவி செய்தால் அவன் சோம்பேறியாக மாறிவிடுவான். ஒரு சோம்பேறிக் கூட்டத்தை எதற்கு நாம் உருவாக்க வேண்டும்? என்றெல்லாம் புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்து தம்மைத்தாமே ஏமாற்றிக் கொள்பவர்கள் எல்லாம் இப்படித்தான். சோம்பேறி கூட்டம் உருவாகினாலும் பாதகமில்லை. ஒரு திருட்டுக் கூட்டத்தையே இவர்கள் எல்லாம் உருவாக்கி விடுவார்கள்.

ஒரு வளமான மனிதனை சுற்றி பல வறுமையான மனிதர்கள் இருந்தால் அவர்களின் குறைந்த பட்ச தேவைகளை அந்த வளமான மனிதன் நிறைவேற்றா விட்டால் எதாவது ஒரு காலகட்டத்தில் அந்த வறுமையான கூட்டம் அந்த வளமான மனிதனைத் தாக்கத்தான் செய்யும். இது மனித இனத்தின் மாற்ற முடியாத விதியாகும். ஆகுமே இரைந்து கேட்கும் போது தராத மனிதன் அடித்துக் கேட்டால்தான் தருவான் என்ற நிலை வந்துவிட்டால் அவன் அடிக்கத்தான் செய்வான். அவன் அடிக்கிறானே அவன் தவறு செய்கிறானே என்று வருத்தப்படுவதை விட அவனை ஏன் இந்த நிலைக்கு ஆளாக்கினோம்? என்று இந்த சமுதாயமும் ஒட்டு மொத்த மனித சமூகமும் சிந்திக்க வேண்டும். இந்த உலகில் உள்ள அனைவருமே இறைவனின் பிள்ளைகள். ஒரு பிள்ளைக்கு அதிக செல்வத்தை கொடுத்ததின் காரணம் மற்ற பிள்ளைகள் வறுமையில் வாடும்பொழுது கொடுத்து உதவுகிறானா? என்று சோதித்து பார்க்கத்தான். ஒருக்கால் அவன் உதவவில்லை என்றால் பிறகு அவன் மீண்டும் பிறவி எடுக்கும் போது வறுமையில்தான் வாட வேண்டும். இத்தனைக்கும் நடுவிலே சிலர் மட்டும் செல்வ செழிப்பிலே இருப்பதன் காரணம் என்ன தெரியுமா? தர்மம் செய்ததால்தான். ஆனால் ஒன்று. தர்மம் செய்து அப்படி செல்வத்தை பெற்ற பிறகு மாயையால் இந்த செல்வத்தை மீண்டும் புண்ணியமாக மாற்ற வேண்டும் என்ற கருத்து உதிக்கவில்லை என்றால் இந்தப் பிறவியில் மட்டும் செல்வம் இருக்கும் நிலை ஏற்படும்.

குசேலர் உயர்ந்த பண்புடனும் தர்ம சிந்தனையுடன் நடந்த பொழுது வறுமை அவரை வாட்டிய பொழுது கிருஷ்ண பரமாத்மாவின் கருணையினால் வறுமை நீங்கி வளமை வந்தது. ஒரு மாபெரும் சக்ரவர்த்திக்கு ஈடான செல்வம் அவரிடம் சேர்ந்தது. வறுமையில் இருந்த போது அவர்கள் சிறப்பாக வாழ்ந்தார்கள். செம்மையாக வாழ்ந்தார்கள். நேர்மையை தர்மத்தை கடை பிடித்தார்கள். தாம் பட்டினியாகக் கிடந்தாலும் வருகின்ற அதிதிக்கு உணவு தந்தார்கள். செல்வம் செல்வம் செல்வம் ருணம் ருணம் ருணம் என்றெல்லாம் எம்முன்னே அரட்டுகிறீர்களே? எளிய வழி மகாலட்சுமியை வணங்குங்கள் வணங்காமல் இருங்கள். புண்ணியம் வரும் என்ற எண்ணமில்லாமல் தர்மத்தை செய்து கொண்டே இருக்க வேண்டும். யாருக்கெல்லாம் தேவைகள் இருக்கிறதோ அவர்களுக்கெல்லாம் நேரிய வழியில் பொருளை ஈட்டி தந்து கொண்டே செல்லுங்கள். செல்வம் உங்கள் பின்னால் வந்து கொண்டே இருக்கும். இதனை சோதனை மார்க்கமாக செய்து விட்டு பிறகு தர்மம் செய்யலாமா? வேண்டாமா? என்ற முடிவிற்குக்கூட நீங்கள் வரலாம். ஏனென்றால் வழக்கம் போல் ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு பிறவியிலும் செல்வந்தர்கள் குறைவு வறுமையாளர்கள் அதிகம். காரணம் செல்வந்தர்கள் தாராளமாக தர்மம் செய்வதில்லை. தாராளமாக தர்மம் செய்தவர்கள் செல்வத்தையெல்லாம் இழந்து வறுமையில் வீழ்ந்தாலும் இறைவன் அவர்களைக் கைவிடுவதில்லை. அப்படியொரு விதியிருந்தாலும்கூட பாதகமில்லை. கொடுத்து கொடுத்து வறுமை வந்தால் அதுதான் உச்சக்கட்ட வளமை. கொடுத்ததால் ஒருவன் வறுமைக்கு வந்துவிட்டான் என்றால் அவன் இறைக்கு பக்கத்தில் இருக்கிறான் என்று பொருள் ஆகும். எனவே இந்த கருத்தை மனதிலே வைத்து இனி வருகின்ற ஒவ்வொரு கணத்திலும் தேடித் தேடி உதவி செய்வதை லட்சியமாகக் கொண்டு விட்டால் அவர்களுக்கு எம் அருளாசி என்றும் தொடரும். சுபம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 375

குருநாதர் அருளிய பொதுவாக்கு:

இறைவனின் கருணையைக் கொண்டு இறைவனின் துணையைக் கொண்டு இறைவனின் அளப்பரியாத அந்த ஆற்றலைக் கொண்டு இதுபோல் இயம்புகிறோம் சிலவாக்கு அன்பு செய்தல் நல்ல பண்பை வளர்த்தல் வேறு தப்பு குறும்பு செய்யாமல் இருப்பதே நல்ல பண்பு அப்பா. அன்பு என்பதின் விரிவாக்கமே பூஜையாகும். பூ செய்தல் அன்பு செய்தல் நல்ல பண்பு செய்தல் அதன் மூலம். மனிதன் தமக்குள் இருக்கின்ற அசுரத்தனங்களை விலங்கு குணங்களை விட்டொழிக்க தன்னைத்தான் மேம்படுத்திக் கொள்ள தன்னைத்தான் இன்னமும் பண்படுத்திக் கொள்ள இருக்கின்ற எத்தனையோ வழிமுறைகளில் பூஜையும் ஒன்று. ஆத்மார்த்தமாக அமர்ந்து நீக்கமற நிறைந்துள்ள இறைவனை ஏதாவது ஒரு வடிவத்தில் பிடித்து வைத்து அதற்குரிய மந்திரங்களை தொடர்ந்து உச்சரிக்கும் பொழுது மனம் திடமாகி மனமெங்கும் இறையாற்றல் இவன் எந்த வடிவத்தில் வணங்குகிறானோ அந்த வடிவத்தில் வியாபிக்கும். அப்படி வியாபிக்கின்ற இறை சக்தி இவன் என்ன எண்ணத்தோடு பூஜை செய்கிறானோ அந்த எண்ணத்திற்கு அவனை அழைத்து செல்கிறது. என்ன நோக்கத்தோடு பூஜை செய்யப்படுகிறதோ அந்த நோக்கம் சற்றும் பழுதற நிறைவேறுகிறது. எனவே ஒரு வகையில் பூஜை என்பது ஒவ்வொரு மனித மனமும் பண்பட உயர்வு பெற திடம் பெற மனதிலே எந்த குழப்பமும் இல்லாமல் அவன் கம்பீரமாக செயல்பட உதவக் கூடிய ஒருவகையான மனோதத்துவ சிகிச்சை என்றுகூட எடுத்துக் கொள்ளலாம்.

அந்த வகையில் இதுபோல் பூஜையில் எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன. பூஜையிலே புற சடங்குகள் விதவிதமானவை. அதிலே நடை வண்டிகள்தான் பூஜைகள் வழிபாடுகள். இது பிடிக்காமல் எடுத்த எடுப்பிலேயே நடக்கவேண்டும் என்றுதான் சிலர் தியானம் செய்கிறேன். தியானத்தில் எனக்கு அந்த காட்சி தெரிகிறது. இந்த காட்சி தெரிகிறது என்றெல்லாம் பேசி திரிகிறார்கள். இவையெல்லாம் வெறும் மாயா வார்த்தைகள். எம்முன்னே அமர்ந்து கூட நான் சித்தர்களைப் பார்த்தேன் தெய்வத்தை பார்த்தேன் அது பற்றி உங்கள் கருத்து என்ன குருதேவா? என்று கேட்கும் பொழுது பேதைத்தனமாக அவர்கள் கேட்கிறார்கள் என்று தெரிந்தும்கூட அவர்கள் மனம் மகிழ்ந்துவிட்டுப் போகட்டும் என்பதற்காக ஆமாமப்பா காட்சி தெரிந்தது யாம்தான் வந்தோம் என்று கூறி யாமும் மனிதர்களைப் போலவே பேசக் கற்றுக் கொண்டு விட்டோம்.

இந்த பூஜையை முறையாக செய்ய வேண்டிய அவசியம் என்ன? இந்த பூஜையை எதற்கு முறைப்படுத்தி வைத்திருக்கிறார்கள்? இந்த பூஜையிலே சோடசம் என்ற சொல் எதற்காக பயன்படுகிறது? எந்த அர்த்தத்தில் இந்த ஈரெட்டு என்பது பயன் படுத்தப்படுகிறது? பொதுவாக இந்த நிலவுலகிலே ஒரு மனிதனுக்கு தேவையான பேறுகள் 16. அந்த 16 பேற்றையும் ஒரு மனிதன் பெற வேண்டும். அப்போதுதான் அவன் பரிபூரணமான மனிதனாக கருதப்படுவான் இருக்கவும் முடியும். அந்த 16 வகை பேறுகளை தருவதே இந்த பூஜை. இந்த பூஜையின் உச்சகட்ட நிலையிலே விக்கிரக ஆராதனை செய்கின்ற ஒரு இல்லமாகவோ அதற்கு வாய்ப்புள்ள இடமாகவோ இருக்கும் பட்சத்திலே ஐம்பொன்னால் ஆன அன்னை மகாலட்சுமியின் திருவுருவத்தை நல்லதொரு பத்மாசனத்திலே இட்டு அற்புதமான முறையில் அபிஷேகம் செய்யும் பட்சத்திலே வாழை இலையிட்டு அதன் மீது அரிசியிட்டு அதன் மீது நவதானியமும் இட்டு அதன் மீது தேவலோக பொருளான வெற்றிலையை அழகாக இட்டு அதன் மீது வலம்புரி சங்கும் வைத்து அந்த வலம்புரி சங்கத்திலே தூய்மையான நீர் பால் போன்ற 16 வகையான திரவியங்களையும் வைத்து இந்த வலம்புரி சங்கத்தையும் 108 ஆக வைத்து எல்லா வகை பூர்த்திக்குப் பிறகு இந்த சங்கினை எடுத்து அன்னையின் திருவுருவிற்கு அபிஷேகம் செய்தால் அது அபூர்வமான பலனப்பா.

இதுபோல் செய்யும் பொழுது தரித்திரம் போகிறது. தன (செல்வம்) சிக்கல் போகிறது. அச்சமற்ற வாழ்க்கை முறையும் அவனுக்கு கிட்டுகிறது. அதோடு நன்றாக வார்த்தையை கவனிக்க வேண்டும் வலம்புரி சங்கே 108 வைக்க வேண்டும். விலை அதிகம் என்பதால் ஒரு வலம்புரி சங்கமும் ஏனையவை எல்லாம் இடம்புரி சங்காக வைக்கும் பழக்கம் பல இடங்களில் இன்று இருக்கிறது. இதை குற்றம் என்று நாங்கள் கூறவில்லை. மேலும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று எண்ணக் கூடியவர்களுக்கு அனைத்தும் வலம்புரியாக இருக்கவேண்டும். இந்த வலம்புரியை ஏன் குறிப்பிடுகிறோம் என்று தெரிகிறதா? ஒரு புராணக் கதையை நினைவூட்டுகிறோம் அப்பா.

திருப்பாற்கடலில் இருந்து என்னென்ன வந்தது? உச்சைசிரவஸ் காமதேனு கற்பக விருட்சம் வலம்புரி சங்கு. இவற்றிலே மகாலட்சுமி எங்கே சென்றார்? (மகாவிஷ்ணுவிடம் சென்றார்). ஏன் சென்றார்? (அவரிடம்தான் பாஞ்சஜன்யம் என்ற வலம்புரி சங்கு இருக்கிறது) அதனால்தான் மகாலட்சுமி பூஜையில் வலம்புரி சங்கு வைக்க வேண்டும் என்று கூறுகிறோம். எனவே முக்கண்ணனாகிய சிவ பெருமானுக்குத்தான் பொருத்தம் என்று எண்ணக் கூடாது. எந்த தெய்வமாக இருந்தாலும் வலம்புரி சங்கால் அபிஷேகம் செய்ய வேண்டும் இது ஒன்று. ஆனால் இதையே நாங்கள் வேறொரு வாக்கிலே சங்கு வைத்து பூஜை செய்வதைகூட நாங்கள் அசைவ பூஜை என்று கூறியிருக்கிறோம். அது தெரியுமா? ஏனென்றால் இயல்பாக உயிரை விட்ட சங்கு கடலிலே மிதக்கும். அவற்றை எடுத்து வந்துதான் சித்தர்களும் முனிவர்களும் பயன்படுத்துவார்கள். ஆனால் இயல்பாக ஒரு சங்கு எப்போது இறப்பது? அது எப்போது கிடைப்பது? என்று மீனவர்கள் வலை வீசும் போது உயிருள்ள சங்கும் சிக்கி விடுகிறது. அதை எடுத்து வந்து கொடிய திராவகத்திலே இட்டு அதை துடிக்க வைத்து கொன்று பிறகுதான் விற்கிறார்கள். எனவே தோஷமுள்ள சங்குகள்தான் இங்கு பெரும்பாலும் கிட்டுகிறது. இருந்தாலும் ஆத்மார்த்தமான பூஜையை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பவர்களுக்கு வலம்புரி சங்கு என்பது தேடி வரும். அப்படி தேடி வருகின்ற வலம்புரி சங்கானது கட்டாயம் தூய்மையான சங்காகத்தான் இருக்கும். இருந்தாலும் அதன் பூர்வீகம் தெரியாததால் அது இங்கு வந்த பிறகு ஒரு மண்டலம் கங்கா ஜலம் கொண்டு அபிஷேகம் செய்வதும் ஒரு மண்டலம் பூர்த்தியடைந்த பிறகு சகல அபிஷேகமும் செய்து அதன் பிறகு அதனை பூஜைக்கு பயன்படுத்தினால் அந்த தோஷம் குறையும்.

108 இயலாத பொழுது ஒன்றையாவது வைத்து சிறப்பாக செய்யலாம். இது சிறப்பிலும் சிறப்பாக இருக்கும். இதுபோல் பூஜை செய்வதால் என்ன நன்மை ஏற்படும்? வெறும் செல்வம் என்று கருதக் கூடாது. இங்கே அறிவில் குறையுடையோர் பலருண்டு. எனவே அறிவு செல்வம் உண்டு. திருமணம் என்பதும் ஒருவகையான செல்வம்தான். திருமண தடை உள்ளவர்களுக்கு திருமண பாக்கியம் ஏற்படும். திருமணமாகி கருத்து வேறுபாடு இருப்பவர்களுக்கு இந்த பூஜை உதவும். குழந்தை பாக்கியம் உண்டு. இந்த நிலவுலகில் மனிதனாக பிறவியெடுத்தவனுக்கு வேண்டிய சகலத்தையும் ஒருங்கே ஒருசேர தருகின்ற பூஜைகளில் தலையாய பூஜை இதுபோல் சோடச மகா அன்னை திரு பூஜையாகும்.