ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 374

கேள்வி: நடைமுறையில் புலன்களை எவ்வாறு வெல்வது ?

சட்டென்று விழி மூடி விழி திறப்பதற்குள் வென்று விடலாம் அல்லது கோடானு கோடி பிறவிகள் எடுத்தும் வெல்லலாம். நீ (முன்பு) கூறினாயே திண்ணியம் (உறுதி) அது மனிதன் மனதிலே வந்து விட்டால் உடனே கூட இது நடக்கலாம். எப்படியென்றால் காதற்ற ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே என்ற வாசகம் ஒரு பட்டினத்தானை இல்லறவாசியிலிருந்து துறவறம் ஆக்கிவிட்டது. ஆனால் அந்த வாசகம் எத்தனை பேரை அவ்வாறு துறவறம் ஆக்கும்? அந்த வாசகத்தின் பொருள் அனைவரும் அறிந்ததுதான். ஆனால் எல்லோராலும் சட்டென்று எல்லாவற்றையும் மனதளவிலே விட்டுவிட்டு வெளியே வரமுடிகிறதா? எனவே பற்றும் பாசமும் தீவிர ஆசையும் இருக்கும் வரையில் மனிதனால் புலன்களை வெல்லுவது என்பது கடினம். பற்றையும் பாசத்தையும் மெல்ல மெல்ல விட்டுக் கொண்டே வரவேண்டும். பற்றையும் விடுகிறேன் பாசத்தையும் விடுகிறேன் என்பதற்காக குடும்ப அங்கத்தினர்களுக்கு செய்யவேண்டிய கடமைகளை செய்யாமல் இருந்தால் அது ஒரு தோஷமாக மாறும் என்பதை மனிதர்கள் மறந்து விடக்கூடாது.

இதனை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டுமென்றால் ஒரு மனிதன் ஒரு பணிபுரியும் இடத்திலே பணியாற்றுகிறான். அவனுக்கென்று சில பொருள்கள் அங்கே தரப்படுகின்றன. அமர்கின்ற ஆசனம், எழுதுகின்ற எழுது பலகை இன்னும் பல பல பல. அவனுக்கு நன்றாகத் தெரியும், இவையெல்லாம் நம் பொருள்கள் அல்ல. இந்த பணி புரியும் நிர்வாகத்திற்கு சொந்தமானது. இங்கே ( நான் ) பணியாற்றுவதற்காக இவையெல்லாம் ( எனக்கு ) கொடுக்கப்பட்டிருக்கிறது என்ற எண்ணத்தோடு அந்தப் பணி முடிந்தவுடன் அதனையெல்லாம் விட்டுவிட்டு இல்லம் திரும்புகிறானே? அதைப்போல இல்லமும் ஒரு பணிபுரியும் இடம். கர்மவினையால் இந்த பணிபுரியும் இடத்திற்கு வந்திருக்கிறோம். நம் வினைக்கு ஏற்ப உறவுகள் அமைந்திருக்கின்றன. இங்கே செய்யவேண்டிய பணிகளை செய்யவேண்டும். ஆனால் தீவிர பற்றையோ பாசத்தையோ வளர்த்துக் கொள்ளக் கூடாது என்ற அளவிலே மனதிலே எண்ணத்தை வளர்த்துக் கொண்டு அதனை முறையாக ஒரு பயிற்சியாக விதவிதமாக ஒரு மனிதன் கையாண்டு பார்க்க வேண்டும்.

இந்த உணவு இருந்தால்தான் என்னால் உயிர் வாழ முடியும். இந்த உணவுதான் என் நாவிற்கு பிடித்திருக்கிறது. இந்த பானம்தான் எனக்குத் தேவை. இந்த விதமான படுக்கைதான் எனக்குத் தேவை என்று எதையெல்லாம் ஒரு மனிதன் வேண்டும் வேண்டும் என்று எண்ணுகிறானோ அவையெல்லாம் இல்லாவிட்டால் என்ன? என்று ஒவ்வொரு முயற்சியாக செய்து பார்த்தால் கட்டாயம் எண்ணியது நிறைவேறும். ஆனாலும்கூட இதற்கு முன்னால் அவனைப் பற்றியுள்ள கர்ம வினைகளிலிருந்து வெளியே வரவேண்டும். எனவே எளிய வழி பக்தி மார்க்கம். பலவிதமான ஸ்தலங்களுக்கு சென்று மானசீகமாக பிரார்த்தனைகளை செய்து கொண்டே வர மெல்ல மெல்ல அதீத பற்றும் பாசமும் குறைய கட்டாயம் நீ எண்ணுவது போல புலன்களை முழுமையாக வெல்ல முடியாவிட்டாலும் மெல்ல மெல்ல வெல்லக்கூடிய நிலை வரும். பற்றையெல்லாம் விடு பாசத்தையெல்லாம் விடு என்றால் கட்டிய கணவன் எங்காவது சென்று விடுவானோ? என்று மனைவியும் அல்லது தாரம் தன்னைவிட்டு எங்காவது சென்று விடுவாளோ? என்று கணவனும் அல்லது தாயும் தந்தையும் இப்படி ஆன்மீகம் பார்த்துக் கொண்டு தங்களையெல்லாம் விட்டுவிடுவார்களோ? என்று சேய்களும் எண்ணலாம்.

நாங்கள் அதனைக் கூற வரவில்லை. எல்லாம் செய்ய வேண்டும். அதே சமயம் எதற்குள்ளும் ஆழ்ந்து விடக்கூடாது. கப்பல் பயணம் செய்ய பரந்த நீர்பரப்பு தேவை. நீர்பரப்பின் உதவியில்லாமல் கப்பல் செல்வது கடினம். நீர்தான் தனக்கு உதவி செய்கிறது என்பதற்காக கப்பல் நீரே நீ உள்ளே வா என்று கப்பலுக்குள் நீரை அனுமதித்தால் அந்தக் கப்பல் மூழ்கிவிடும் அல்லவா? அதைப்போல இந்த உலகம் இந்த உலகில் உள்ள விஷயங்கள் எல்லாம் ஓரளவு மனிதர்களுக்குத் தேவை கர்மாவை நுகர்வதற்கு. அதற்காக அதற்குள் ஆழ்ந்து விடாமல் இறை சிந்தனை கவனம் எங்கும் சிதறாமல் இருக்க வேண்டும். வேடிக்கையை சிலர் பார்த்திருக்கலாம் வீதியிலே. இரண்டு முனையிலே நீண்ட கயிற்றை கட்டி அதன் மேல் ஒரு பெண் லாவகமாக நடந்து வருவாள். கையிலே நீண்ட கோல் இருக்கும். அப்படி நடந்து வரும் தருணம் அந்த அதிசய திறமையைப் பார்த்து அனைவரும் ஆர்பரிப்பார்கள். பயங்கர கரகோஷம் செய்வார்கள். அதிலே கவனம் செலுத்தினால் அந்தப் பெண் மேலிருந்து கீழே விழுந்து விடுவாள். கீழே என்ன கூச்சல் என்ன குழப்பம் நேர்ந்தாலும் அந்தக் கயிற்றின் நுனியிலிருந்து கால் பிசகாமல் நடப்பது போல என்ன வேண்டுமானாலும் இந்த உலகில் நடந்துவிட்டுப் போகட்டும். என்ன வேண்டுமானாலும் குடும்பத்தில் நடந்துவிட்டுப் போகட்டும். அதற்கு நியாயமாக என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்துவிட்டு இறைவனிடம் அனைத்தையும் ஒப்படைத்து விட்டு மனது இறைவனை நோக்கியே இருக்க வேண்டும்.

இப்படியொரு பழக்கத்தை மனிதன் மெல்ல மெல்ல பழகிக் கொண்டால் கட்டாயம் நீ எண்ணுவது போல புலன்களை வெல்லக்கூடிய ஆற்றல் எல்லோருக்கும் சித்திக்கும். நீரிலே இறங்காமல் நீச்சல் பழகுவது கடினம். ஒரு வாகனத்தில் அமர்ந்து அந்த வாகனத்தை இயக்க பயந்தால் வாகனத்தை கடைவரையில் இயக்க முடியாது. அதைப் போல இந்த மனித தேகம் எடுத்து, இந்த மனித தேகத்திற்குள்ளாகவே வாழ்ந்து விடாமல் இந்த அழியக் கூடிய தேகத்தை வைத்துக் கொண்டு அழியக் கூடிய உறவுகளை வைத்துக் கொண்டு அழியக் கூடிய அற்ப சுகங்களை வைத்துக் கொண்டே அழியாத பேரின்பத்தை அடைய மனிதன் முயற்சி செய்யவேண்டும்.

ஒரு வங்கியின் மூலம் அதிக அளவு தனத்தையெல்லாம் வரை ஓலையாகக் கீறி அத்தாட்சி சான்றும் வைத்து அதனை வாங்கி வரும் மனிதன் அதனை தூரத்தில் உள்ள மனிதனுக்கு அனுப்ப எண்ணுகிறான். கவசம்போல் ஒரு உறையை தயார் செய்து அதற்குள்ளே பாதுகாப்பாக வைத்து அனுப்புகிறான். இப்பொழுது உள்ளே இருக்கும் வரை ஓலை முக்கியமா? அல்லது அதனை பாதுகாக்கும் கவசம் முக்கியமா? என்று பார்த்தால் அது போய் சேரவேண்டிய இடம் வரை இரண்டும் முக்கியம்தான். போய் சேர்ந்த பிறகு உள்ளே இருக்கும் வரை ஓலையை எடுத்து விட்டு பாதுகாப்பு கவசமாக இருந்ததை தூக்கி எறிவதில்லையா? அதைப் போல இந்த உலகமும் இந்த தேகமும் போய் சேர வேண்டிய இறைவனின் திருவடியை நோக்கி சென்று அதனை உணர்ந்து அதற்குள் பரிபூரணமாகக் கரையும்வரை இதனைக் கவசம் போல் வைத்துக் கொண்டு அந்த கவசத்திற்கு என்ன மதிப்பு தர வேண்டுமோ அந்த மதிப்பைத் தந்து பிறகு உள்ளேயிருக்கும் அந்த விஷயத்திற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் தர வேண்டுமோ அந்த உள்ளேயிருக்கும் ஆத்மாவிற்கு முக்கியத்துவம் தந்தால் கட்டாயம் புலனை வெல்லலாம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 373

குரு நாதர் அருளிய பொதுவாக்கு

இறைவனின் கருணையைக்கொண்டு இயம்புவது யாதென்றால் இதுபோல் நலம் நலம் நலமே எல்லா நிலையிலும் எல்லா சூழலிலும் தொடர்ந்து கிட்டிட இறைவன் அருளால் நல்லாசிகள் இத்தருணம் இயம்புகின்றோம். இறைவன் அருளாலே மனிதர்களின் வாழ்விலே பின்னிப்படர்ந்து கிடக்கின்ற கர்ம வினைகள் பெரும்பாலும் பாவங்களே இருப்பதால்தான் அறியாமை அதிகமாக மதியிலே படர்ந்து கிடக்கிறது. அறியாமையை விட மிகப்பெரிய துன்பம் மனிதனுக்கு வேறு எதுவுமில்லை. எல்லாம் அறிந்திருக்கிறோம் என்று அறியாத நிலையிலும் அறிந்தது போல் மனிதன் இருப்பதுதான் அறியாமையின் உச்ச நிலையாகும். அதாவது லோகாய அறிவு என்பது ஒரு நிலை. லோகாய அறிவை நன்றாகக் கைவரப்பெற்ற மனிதன் கூட பல்வேறு தருணங்களில் அந்த அறிவால் பெரிய பலனேதுமில்லாமல் துன்பத்தில் வாழ்வது உண்டு. அதே சமயம் அறிவை செயல்பட விடாமல் முடக்குவதில் ஆசைக்கு மிகப்பெரிய பங்களிப்பு உண்டு. அந்த ஆசைக்கு துணையாக கடுமையான பாசத்திற்கும் மிகப்பெரிய பங்களிப்பு உண்டு. ஆசையும் பாசமும் மட்டுமா அறியாமைக்கு துணை செய்கிறது? அதோடு உணர்ச்சி நிலை மிகு உணர்ச்சி நிலை. இவை அனைத்தையுமே கொண்டுள்ள மனிதன் அதிலிருந்து தப்ப இயலாமல் தொடர்ந்து போராடிக் கொண்டே வாழ வேண்டிய நிலையில்தான் இருக்கிறான் அன்றும் இன்றும் என்றும். எனவேதான் ஒரு மனிதன் எப்பொழுதுமே இறைபக்தியோடு சத்தியத்தை விடாது மனசாட்சியோடு தொடர்ந்து தர்மசிந்தனையோடு வாழ மேற்கூறிய அறியாமை மெல்ல மெல்ல விலகும்.

அறியாமை விலக விலகவே மனிதனுக்கு நிம்மதி பிறக்கும். அதுபோல் நிலையிலே மனிதன் தன்னையும் தன்னை சேர்ந்த குடும்பத்தாரையும் பாசவலைக்குள் வைத்து பார்க்கும் பொழுதுதான் என் பிள்ளை இப்படி துன்பப்படுகிறானே என் தாய் இப்படியெல்லாம் கடினப்படுகிறாளே என்றெல்லாம் எண்ணி எண்ணி ஒரு மயக்கத்தில் ஆழ நேரிடும். ஆயினும் கூட அந்த பாசம்தான் பெருமளவு குடும்பக் கடமைகளை செய்ய மனிதனுக்கு ஒருவிதத்தில் உதவுகிறது. இருந்தாலும் அதே அதிகமாகும் தருணத்தில் அவனை அறியாமையில் வழுக்கிவிழ வைக்கிறது. அதை அப்படியே மூன்றாவது மனிதன் மீது பார்க்கும் பொழுது இரத்த சம்பந்தமில்லாத நட்போ உறவோ இல்லாத மனிதனிடம் பார்க்கும் பொழுது அப்படியெல்லாம் ஏற்படாததால் அப்படி ஏற்பட்டு ஒரு மயக்கம் கிட்டாததால் மனிதன் அதனை சாதாரணமாகப் பார்க்கிறான். அவர்களின் துன்பம் மனிதனுக்கு துன்பமாகத் தெரிவதில்லை. அதை அப்படியே இரத்த சம்பந்தம் உடைய உறவுகளோடு பொருத்திப் பார்க்க பழகிவிட்டால் அதுதான் ஞானத்தை நோக்கி செல்கின்ற பாதையாகும். அது எப்படி ? சொந்த உறவுகளுக்கும், சொந்த நட்புகளுக்கும், பழகிய உறவுகளுக்கும் துன்பம் என்றால் பார்த்துக்கொண்டு இருப்பதா? என்றால் யாங்கள் அந்தப் பொருளில் கூறவில்லை. யாராக இருந்தாலும் துன்பம் வந்து விட்டால் அதனை துடைக்கும் வழியை மேற்கொண்டிட வேண்டும். ஆனால் உள்ளத்தில் பாசமும் ஆசையும் அறியாமையும் வைத்துக் கொண்டு அதனை செய்யாமல் நடுநிலையோடு செய்யப்பழகினால் மனதிலே சோர்வில்லாமல் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கலாம். இந்தக் கருத்தை மனதிலே வைத்துக் கொண்டால் வாழ்வு நலமாகும் சுகமாகும் சாந்தியாகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 372

குரு நாதர் அருளிய பொதுவாக்கு.

யாங்கள் அடிக்கடி கூறுவது போல இறைவன் அருளால் கூறுகிறோம். தொடர்ந்த எண்ணங்களின் ஓட்டமே சிந்தனை. தொடர்ந்த சிந்தனை என்பது மனமாகும். விழிகளை மூடிக் கொண்டு ஒவ்வொரு மனிதனும் தன் மனதை உற்று நோக்கினால் அதில் எத்தனையோ ஆசா பாசங்கள் இருக்கலாம். அவற்றிலே ஏற்றத் தாழ்வுகள் இருக்கலாம். அதை விட்டுவிட்டு மேலும் பார்த்தால் என்ன தெரியும் லோகாயம் மட்டுமே அதில் நிரப்பப்பட்டு இருக்கும். ஒன்று இல்லக் கடமை அல்லது தசக்கடமை அல்லது அப்பொழுது அவன் சந்திக்கின்ற கடுமையான பிரச்சினை குறித்த சிந்தனை அல்லது எதிர்காலத்தில் வேறு எதாவது புதிதாக ஒரு பிரச்சினை இதனை சார்ந்து வந்துவிடுமோ? என்ற அச்சம். இது எதுவுமே இல்லாத மனிதனாக இருந்தால் பொழுதை ஆக்குவதற்கு பதிலாக பொழுதை போக்குகிறேன் என்று அந்தப் பொழுதை வீண் செய்வதும் அதற்காக தனத்தை வியம் செய்வதுமான ஒரு அசுரத்தனமான செயல்களில் ஈடுபடுவது. இப்படி மனதிற்கு அந்த மாபெரும் சக்திக்கு சரியான பணியை தராமல் அதன் ஆற்றலை முறைபடுத்தி பயிர்களுக்கு அந்த மனோ சக்தி எனப்படும் நீரை பாய்ச்சாமல் தேவையற்ற வெள்ளமாக வடிய விடுவதுதான் மனிதனுக்கு என்றென்றும் இயல்பாக இருந்து வருகிறது. எல்லோருக்குமே இது பெரும்பாலும் பொருந்துகிறது. உடல் வேறு உடலில் குடிகொண்டு இருக்கும் ஆத்மா வேறு.

ஆத்மா எத்தனையோ உடல்களுக்குள் இருந்து கொண்டு புகுந்து கொண்டு பிறவி என்ற பெயரில் வாழ்ந்து மடிந்து வாழ்ந்து மடிந்து சேர்த்த வினைகளின் தொகுப்புதான் அந்த வினைகளின் அடிப்படையில்தான் அடுத்த உடம்பு கிடைத்திருக்கிறது. அந்த உடம்போடு அந்த ஆத்மா மயக்கமுற்ற நிலையிலே தன்னை அறியாமல் வாழ்கிறது. அப்படி வாழ்கின்ற அந்தப் பிறவியிலும் அது பல்வேறு வினைகளை செய்கிறது. அதில் பாவமும் புண்ணியமும் அடங்குகிறது. இதிலே பாவங்களைக் குறைத்து எல்லா வகையிலும் புண்ணியங்களை அதிகரிக்க வேண்டும் என்பதுதான் மகான்களின் உபதேசமாக இருக்கிறது. இந்த புண்ணியத்தை கனவிலும் நனவிலும் ஒவ்வொரு அணுவிலும் எப்பொழுதும் சிந்தித்துக் கொண்டே கடமைகளை பற்றற்ற நிலையில் ஆற்றிக் கொண்டே உள்ளத்தில் சதாசர்வ காலம் இறை சிந்தனை மட்டும் வைத்துக் கொண்டு எதனையும் இறைவன் பார்த்தால் எப்படி பார்ப்பாரோ அந்த பார்வையில் பார்க்கப் பழகினால் மனம் நிம்மதியான நிலையிலிருக்கும். நிம்மதியான மன நிலையில்தான் மனிதனுக்கு பெரிய ஞானம் சார்ந்த விஷயங்கள் மெல்ல மெல்ல புரியத் துவங்கும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 371

கேள்வி: மோட்ச உலகம் என்பது எங்கே இருக்கிறது?

உன்னுடைய மனம்தான் மோட்சம். உன்னுடைய மனம்தான் சொர்க்கம். உன் மனம்தான் நரகம் என்று வைத்துக் கொள். ஏன்? என்றால் எது யாருக்கு எப்படி நடந்தாலும் அது அவனுக்கு கவலையை அளிக்கவில்லையோ எது எவனுக்கு எக்காலம் எந்த தருணத்தில் எல்லா நிலைகளிலும் திருப்தியை தருகிறதோ எது எவனுக்கு எந்த சூழலிலும் எந்தவித கஷ்டத்தையும் தரவில்லையோ அவன் வாஸ்தவமாகவே சொர்க்கத்தில் இருக்கின்றான். மோட்சத்தில் இருக்கிறான் என்பதுதான் பொருள். அப்படியானால் இத்தருணம் முதல் நீ மௌனத்தை கடைபடி. மௌனம்தான் அப்பா நீ இறையோடு கலக்கவும் இறையோடு பேசவும் உதவும். செவியிலே விழும் வார்த்தைகளுக்கெல்லாம் வாய் திறந்து பதில் கூற வேண்டும் என்று துடிக்காதே. அப்படி துடிக்க துடிக்க உனது சக்தி விரயமாகிக் கொண்டே போகும். உன்னை சுற்றி முட்டாள்கள் நின்றால் உனக்கென்ன? ஞானவான்கள் நின்றால் உனக்கென்ன? உன்னை பொறுத்தவரை மௌனத்தில் இரு. மௌனம்தான் உயர்ந்த ஞானம். மௌனத்தில் இருக்க பழக வேண்டும். எப்படி பழக வேண்டும் ? வாய் பேசாமல் இருப்பது மௌனமல்ல. உன் மனமும் எது குறித்தும் பேசாமல் இருக்க வேண்டும். மனம் சூன்யமாக இருக்க வேண்டும். எண்ணங்கள் அற்ற நிலையில் இருக்க வேண்டும். மனதிலே இறந்த காலம் நிகழ் காலம் எதிர் காலம் என்று மூன்று காலமும் இருக்கக் கூடாது. அப்படி ஒரு பயிற்சியை பெறுவதுதான் நீ இங்கிருந்தே மோட்சத்தை பெறும் வழியாகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 370

கேள்வி: அக்னி நட்சத்திர‌ வெயில் குறித்து?

எல்லோரும் அக்னி நட்சத்திர வெயிலின் போது என்னை இந்த வெயில் இப்படி வதைக்கிறதே கொடுமையாய் இருக்கிறதே என்று திட்டுகிறார்கள். அந்த நேரத்தில் அப்படிப்பட்ட அனல் இருப்பதன் காரணம் அந்த அளவு வெப்பம் இருந்தால் தான் பூமியில் அந்த நேரத்தில் உண்டாகி இருக்கக் கூடிய சில கிருமிகள் அழியும் இப்படி பட்ட பல்வேறு நுணுக்கங்கள் இருக்கிறதப்பா.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 369

இறைவனின் கருணையால் தொடர்ந்து தர்மங்கள் செய்து பல்வேறு பிரார்த்தனைகள் செய்து ஒவ்வொரு ஆத்மாவும் நல்கர்மாக்களை கூட்டி வாழ நல் ஆசிகளை கூறுகிறோம். ஒவ்வொரு கணமும் நாழிகையும் சதா சர்வகாலமும் இறை சிந்தனையில் இருப்பது என்பது ஏதோ சோம்பி எந்தவிதமான வேலையும் செய்யாமல் இருப்பதற்காக கூறப்பட்ட ஒருவிதமான மூடப்பழக்கம் என்று பலர் எண்ணலாம். இறைவா இறைவா இறைவா இறைவா என்று கூறிக் கொண்டே இருந்தால் ஒருவனின் வயிறு நிரம்புமா? அவன் இந்த உடல் எடுத்ததற்கு ஏதாவது ஒரு தொழில் செய்து பிழைக்க வேண்டாமா? என்று எல்லாம் கூட அறிவானது வினாக்களை கேட்டுக் கொண்டே போகும். சித்தர்கள் ஆகிய நாங்கள் உடலுக்காக மட்டும் வாழாதே என்றுதான் கூறிக் கொண்டே இருக்கிறோம். உடல் சார்ந்த வாழ்வு ஒரு முழுமையான வாழ்வாக இராது. உடல் வாழ்வுக்காகத்தான் மனிதன் எல்லாப் பாவங்களையும் சேர்த்து கொள்கிறான். மனைவி பிள்ளைக்காக செய்தேன் என்று காரணம் கூறி ஒரு தனி நியாய விவாதத்தை இவன் கூறலாம். ஆனால் யாருக்காக செய்தாலும் பாவம் பாவம் தான். தாய்க்காக தந்தைக்காக செய்தேன் என்று கூறினாலும் யாருக்கும் பாவ மன்னிப்பு கிட்டி விடாது. மறந்தும் ஒரு மனிதன் பாவத்தை நினையாமலும் செய்யாமலும் விழிப்புணர்வுடன் வாழக் கற்றுக் கொண்டாலே மனிதனுக்கு பல பிரச்சினைகள் தீர்ந்து விடுமப்பா. இயம்புங்கால் ஒரு மனிதனின் நல்ல எண்ணங்கள் செயல்கள் ஒரு ஆரோக்யமான அதிர்வலைகளை அவனைச் சுற்றி உண்டாக்கும். கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்பது போல நல்லாரை கண்டவுடன் சந்தோஷமும் மீண்டும் மீண்டும் இவனுடன் பழக வேண்டும் என்ற எண்ணமும் ஏற்படும். நல்ல சிந்தனையற்ற ஒரு மனிதன் நல்லவரோடு பழகப்பழக காந்தமற்ற இரும்பு காந்தத்தோடு சேர்ந்து தானும் காந்தமாவதுபோல அவனுக்குள் நல்ல எண்ணங்கள் இடம் மாறும்.

ஒரு மிகப்பெரிய தனவானிடம் எவ்வளவு நாள் பழகினாலும் அந்த தனம் இவனிடம் வந்துவிடாது. அழகான தோற்றம் உடையவனிடம் அழகற்ற ஒருவன் எத்தனை ஆண்டு பழகினாலும் அந்த அழகு இவனை வந்தடையாது. ஆனால் நல்ல குணங்கள் கொண்ட ஒரு மனிதனோடு பழக்கத்தை அதிகரிக்க அதிகரிக்க அந்த அதிர்வலையின் தாக்கத்தால் அவை மெல்ல மெல்ல இவனிடமும் வந்தடையும். எனவே சதாசர்வ காலமும் மனதிலே சினமும் வாயிலே தகாத வார்த்தைகளும் பிறரை பற்றி குறை கூறுவதுமாக இருந்தால் பிறகு அதுவே இயல்பாகி சமாதானமாகி பிறகு அதுதான் சரி என்றாகி பிறகு மனமும் புத்தியும் வாக்கும் எண்ணமும் செயலும் அமைந்து விடும் என்பதால் சதாசர்வ காலமும் இறை சிந்தனையில் மனம் லயிக்க பயிற்சி எடுக்க வேண்டும். இதுபோல் நிலையை உயர்த்த உயர்த்த உயர்த்த உயர்த்த மனம் பக்குவமடைந்து பிறகு அரிவை என்ற நிலை தாண்டி சித் என்ற உன்னத நிலை அறிவு அவனுள் மலரிடத் துவங்கும் சித் எனப்படும் அந்த சித்தம் தெளிந்தால்தான் உண்மையான சித்தர்களின் வழி வாக்கு யாம் எதை ஏன் எந்த காலகட்டம் உரைக்கிறோம்? என்பது புலப்படத் துவங்கும். எனவே பாவத்தை நீக்குவதற்கு போராட வேண்டும். பாவம் செய்யாமல் இருப்பதற்கும் போராட வேண்டும் .

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 368

கேள்வி: எண்ணியது எண்ணியாங்கு பெறின் – இந்தக் குறளில் திண்ணியம் என்பதின் பொருள் என்ன?

மனிதன் எதில் திண்ணியமாக (மன உறுதி- வலிமை) இருக்கக் கூடாதோ அதில் திண்ணியமாக இருக்கிறானப்பா. அளவற்ற உறுதி. எத்தனை இடர் வந்தாலும் எத்தனை சோதனை வந்தாலும் எத்தனை கலக்கம் வந்தாலும் அந்த நோக்கத்திலிருந்து வழுவாமல் ஒரு மனிதன் இருக்கிறானே? அந்த உறுதி. அதைதான் இதன் பொருளாகக் கொள்ள வேண்டும். இது எதில் இருக்க வேண்டும்? நல்ல எண்ணங்களுக்கும் நல்ல செயல்களுக்கும் நேர்மைக்கும் தர்மத்திற்கும் இவ்வாறு உறுதியோடு போராடக் கூடிய மன நிலை வேண்டும். ஆனால் இவற்றுக்கெல்லாம் உறுதி கொள்ளாத மனிதன் வேறு வேறு தேவையற்ற விஷயங்களில் உறுதி கொள்கிறான். பகையிலே திண்ணியம் கொள்கிறான். பொறாமையிலே திண்ணியம் கொள்கிறான். பிறரை வெறுப்பதில் திண்ணியம் கொள்கிறான். தேவையற்ற விவாதத்தில் திண்ணியம் கொள்கிறான். இப்படி மன உளைச்சலில் கவலையில் திண்ணியம் கொள்வதையெல்லாம் விட்டுவிட்டு நல்ல எண்ணங்களிலே அந்த உறுதியை வளர்த்துக் கொண்டால் என்றென்றும் மனித வாழ்வு சுகமாகும். எனவே அந்த எண்ணிய எண்ணம் அது நல் எண்ணமாக உயர்ந்த நோக்கமாக இருந்து அந்த எண்ணம் உறுதி உறுதி உறுதி உறுதியோ உறுதி என்று இருந்தால் கர்மா இடம் தரவில்லை என்றாலும் கட்டாயம் நடக்கும் என்பதே இதன் அடிப்படை பொருளாகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 367

கேள்வி: பித்ரு தோஷம் குறைய ஆதி முதல் அந்தம் வரை தில யாகம் செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்கள் அது குறித்து:

மிகவும் கடினமப்பா. முதலில் மனிதன் மனோ ரீதியாக தயாராக இருக்க வேண்டும். பொதுவாகவே இறை பக்தியும் தர்ம சிந்தனையும் அதிகமாக இருப்பவர்களுக்கு தோஷம் குறைந்து கொண்டே வரும். எந்த விதமான வழிபாடும் செய்யாமல் எடுத்த எடுப்பிலேயே தில யாகம் செய்து விட்டால் மட்டும் தோஷம் குறையும் என்று எண்ணி வருபவனுக்கு வெறும் தில யாகத்தால் யாதொரு பயனுமில்லை. பித்ருக்கள் தோஷம் குறைவதற்கு தொடர்ந்து பைரவர் வழிபாடும் திருவிடைமருதூர் வழிபாடும் அவசியம். முக்கண்ணனுக்கு தினமும் பரிபூரண அபிஷேகம் செய்ய வேண்டும். இதை செய்ய முடியாதவர்கள் குறைந்தபட்சம் பாலபிஷேகமாவது செய்ய வேண்டும். இது ஒரு பகுதியாக இருக்க பட்சம் (15 நாள்) குறையாது பைரவருக்கு பரிபூரண அபிஷேகமும் மறு பட்சத்திலே சந்தனக்காப்பும் மாறி மாறி செய்யப்பட வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் ஆளுக்கு ஒரு ஐ வதன தீபம் (ஐந்து முகம் தீபம்) ஏற்ற வேண்டும். பைரவர் சன்னிதியில் தொடர்ந்து அணையா தீபம் ஏற்றப்பட வேண்டும். பசு தானமும் பசு காப்பகத்திற்கு தகுந்த உதவிகளும் ஆலய குளத்து கயல்களுக்கு(மீன்கள்) உணவும் கொடுக்கப்பட வேண்டும். அன்னதானம் செய்யப்பட வேண்டும். இவற்றை செய்து கொண்டே ஒரு தினத்தில் (அமாவாசை சதுர்த்தி பஞ்சமி ஏகாதசி) அன்று தெய்வ சமுத்திர கோட்டம் எனப்படும் இராமேஸ்வரம் சென்று தீர்த்தமாடி இறை தரிசனம் செய்து இவன் சக்திக்குட்பட்டு அத்தனை வழிபாடுகளையும் செய்து ஏழைகளுக்கு அன்னம் ஆடை தனம் அளித்து விட்டு அங்குள்ள விலங்கினங்களுக்கு முடிந்ததை செய்து விட்டு பிறகு அவன் தில யாகத்திலே அமர வேண்டும்.

ஆதியோடு அந்தமாக திலயாகம் என்றால் முதலில் கணபதி பூஜை குல தெய்வ பூஜை இஷ்ட தெய்வ பூஜை யாகம் நவகிரகங்களுக்கு பித்ரு தேவதைகளுக்கு சுதர்சன யாகம் இவற்றை முதலில் பூர்த்தி செய்ய வேண்டும். பிறகுதான் தில தொடர்பான பூஜைக்கு செல்ல வேண்டும். இவற்றை செய்து விட்டு தனுஷ்கோடி சென்று (அங்கும் யாகம் செய்தால் சிறப்பு அப்படி முடியாதவர்கள்) பிரார்த்தனை செய்து விட்டு அந்தக் கடலிலும் நீராடி விட்டு வர வேண்டும். பூஜைகள் முடிந்த பிறகும் ஒவ்வொரு மனிதனும் தானங்கள் செய்ய வேண்டும். நன்றாக வார்த்தையை கவனிக்க வேண்டும் தானம். ஏனென்றால் தோஷங்கள் போக வேண்டும் என்ற நோக்கத்தோடு செய்யப்படுவதால் ஆடை தானம் அன்ன தானம் இதுபோல் ஸ்வர்ண தானம் வெள்ளி தானம் இல்ல தானம் கிருடி எனப்படும் நில தானம் மாடு தானம் ஆடு தானம் கல்வி தொடர்பான தானம் மருத்துவ தானம் என்று 32 வகையான அறங்கள் இதிலே அடங்கும். இதுபோல் நீர் நிலை இல்லாத இடங்களில் நீர் நிலையை அமைத்து தருவது எல்லாம் தில யாகத்தோடு தொடர்புடையவை. ஏனென்றால் இத்தனை தானத்தோடு தொடர்பாக அவனுடைய முன்னோர்கள் கட்டாயம் பாவங்கள் செய்திருப்பார்கள். அந்தப் பாவங்கள் இந்த தானங்களின் மூலம் நிவர்த்தியாகும். இதை உரைத்தால் யாரால் இது முடியும்? என்று மனிதன் எழுந்து போய் விடுவான். எனவே அவனுக்கு சிறந்த வழி விதி வழியாக சென்று மனிதனிடம் மருத்துவனிடம் தனத்தை இழப்பது விபத்திலே சிக்கி தனத்தை இழப்பது தொலைத்து இழப்பது என்று விதி பரிகாரம் செய்து விட்டால் அவனுக்கு அது இயல்பாகத் தெரியும். இவனாக மனமுவந்து இதையெல்லாம் செய் என்றால் கட்டாயம் செய்ய மாட்டான். சொல்லி வைக்கிறோம் ஆதி முதல் அந்தம் வரை என்று இயன்றவர்கள் செய்யட்டும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 366

க்ருத யுகத்தில் தர்மம் 4 கால்களில் இருந்தது. அவ்வாறு கலியுகத்திலும் இருக்க சாத்தியம் உண்டா?

எல்லா காலங்களிலும் தர்மம் இப்படிதானப்பா இருந்தது. ஒருக்கால் இருக்கலாம் கலியுகத்தில் என்ற பெயர்தான் ஒரு கால் என்று வந்து விட்டது. கலியுகம் போக்கிற போக்கிலே ஒருக்கால் தர்மம் இருந்தாலும் இருக்கலாம். ஒரு காலிலும் இருக்கலாம். ஒருக்காலும் இல்லாமல் போகாது என்பதாகத்தான் ஒருக்கால் தர்மம் இருக்கலாம் என்று கூறப்பட்டது. எல்லா காலங்களிலும் இதே நிலைதானப்பா. ஒரு காலத்தில் நிறைய தர்மவான்கள் இருந்தது போலவும் இப்பொழுது குறைந்து விட்டது போலவும் அல்ல. அப்பொழுது மக்கள் தொகை குறைவு. எனவே நல்லவர்கள் ஓரளவு அதிகமாக காணப்பட்டார்கள். அவ்வளவேதான் தவிர இப்பொழுதுள்ள எல்லாவகை மோசமான குணங்களும் அப்பொழுதும் மனிதர்களிடம் இருந்தன. அக்காலத்தில்தான் சகோதரர்கள் முன்னிலையில் துகில் உரித்தான் துரியோதனன். அதுவும் பகவான் க்ருஷ்ணனாக அவதரித்த அந்த காலத்தில் நடந்தது. எனவே எல்லா காலங்களிலும் அசுர குணங்கள் தலை தூக்கியேதான் இருந்தது. தர்ம குணங்கள் மறைந்தே இருந்தது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 365

குருநாதர் அருளிய பொதுவாக்கு

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இதுபோல் இறைவனின் கருணையாலே மனிதப் பிறவி எடுத்திட்ட பல்வேறு ஆத்மாக்களில் சில குறிப்பிட்ட ஆத்மாக்களுக்கு குறிப்பிட்ட விதமாக குறிப்பாக இதுபோல் ஜீவ அருள் ஓலை மூலம் இறைவனின் அருளாணையின்படி வழிகாட்டவே எமைப் போன்ற சித்தர்கள் இதுபோல் ஓலை மூலம் ஒளி வடிவான அக்ஷரங்களை இதுபோல் இதழை ஓதுவதற்கென்றே தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஆத்மாக்களின் மூலம் உள் உணர்வாக சில வழி காட்டுதல்களை இறையின் அருள் கொண்டு காலகாலம் நடத்திக் கொண்டிருக்கிறோம். இதுபோல் நிலையிலே எத்தனைதான் இறைவன் அருளை பெறுவதற்கு ஒரு மனிதன் முயற்சி செய்தாலும் கூட பழ வினை அதோடு பல வினை ஒரு ஆத்மாவை கரையேற கடைத்தேற விடாது. பாசமும் பந்தமும் ஆசையும் அறியாமையும் ஒருபுறம் ஆன்மீகம் பேசிக் கொண்டே மறுபுறம் மிக மிக சராசரியாகவே நடந்து கொள்ளத் தூண்டும். இதனை யாம் உரைத்து ஒவ்வொரு மனிதனின் கீழ்த்தரமான எண்ணங்களை எல்லாம் புறந்தள்ளி அந்த ஆத்மாவை மேலேற்றுவதற்கு அந்தந்த ஆத்மாவின் அடிப்படை ஜாதக நிலை எமை நாடுகின்ற பொழுது இருக்கின்ற கிரக நிலை தசாபுத்தி அந்தர சூட்சுமம் அதுபோல் பல்வேறு கர்ம கணக்குகளின் அடிப்படையிலே யாம் வழிகாட்டிக் கொண்டு இருக்கிறோம். ஆயினும் கூட இவையெல்லாவற்றையும் நூற்றுக்கு நூறு புரிந்து கொள்ள முடியாது என்பது எமக்கும் தெரியும். புரிந்து கொள்ள இயலாது என்பதால் அதுபோல் முன் காலங்களில் எல்லாம் குருவானவன் எதைக் கூறுகிறானோ அதை ஏன்? எதற்கு? எப்படி? என்றெல்லாம் அறிவு கொண்டு ஆராய்ச்சி செய்யாமல் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தம் இருந்தது. அதற்காக அவற்றையெல்லாம் இக்காலத்தில் அப்படியே புகுத்து விரும்பவில்லை. ஏனென்றால் குரு என்ற ஸ்தானத்தில் இருந்து கொண்டு ஏற்கக் கூடாத கருத்துக்களை கூறினால் அதை ஏற்க வேண்டும் என்று நாங்கள் ஒருபொழுதும் வலியுறுத்த மாட்டோம்.

சர்வ சுதந்திரமாக ஒரு ஆத்மாவை சிந்திக்க வைத்து அதன் கர்மக் கணக்கின் அடிப்படையில் மேலேற்றுவதுதான் எமது எண்ணம். என்றாலும் கூட அந்த அதீத சுதந்திரம் ஒவ்வொரு ஆத்மாவையும் திசை மாற்றித்தான் போக வைக்கிறது என்பதை யாங்கள் நன்றாகவே அறிவோம். இதுபோல் நிலையிலே இந்த ஜீவ அருள் ஓலையின் மூலமாக எப்பொழுதும் வாக்கை தந்து கொண்டிருப்பது சித்தர்கள்தான் மகான்கள்தான் என்ற அடிப்படை எண்ணம் அணுவளவும் கூட குறையாமல் அழுத்தந்திருத்தமாக எவனொருவன் நம்பிக் கொண்டிருக்கிறானோ அவனுக்கு யாங்கள் தோன்றாத் துணையாக தொடர்ந்து இருந்து கொண்டே இருப்போம். ஆனால் இங்கு வருவதும் எம்முன்னே அமர்வதும் வாக்குகளைக் கேட்பதும் சுவையான வாக்குகள் என்று விவாதம் செய்வதும் பிறகு புறம் பேசுவதுமாக இருக்கும் ஆத்மாக்களுக்கு நாங்கள் யாது வழி காட்ட இயலும்? பல முறை கூறியிருக்கிறோம் எம்மைப் பொறுத்தவரை அனைவரும் எமது சேய்களே என்று. ஆனால் அந்த அதீத உச்ச நிலை பக்குவம் மனிதர்களுக்கு வந்து விடாது என்பது எமக்குத் தெரியும். உதாரணமாக இந்த இதழை ஓதும் மூடனுக்கு என்ன எண்ணம் இருக்கிறது? வருகின்ற அனைவருக்குமே நல்லது நடக்க வேண்டும். அவர்களின் பிரச்சினைகள் தீர வேண்டும். இது ஒரு புறமிருக்க இங்கு வருகின்ற அனைவருமே இந்த இதழை நம்ப வேண்டும் என்று எண்ணுவான். ஆனால் அது நடைமுறையில் சாத்தியமல்ல என்பதே உண்மை. ஆனால் இதை வெளிப்புறமாக நம்புவது போல் நடித்துக் கொண்டு உள்புறமாக இவை எல்லாம் சித்தன் வாக்கா? இல்லை பித்தன் வாக்கா? என்று எண்ணிக் கொண்டே ஒருவன் இங்கு உள்ளே நுழைந்தால் அவன் வாயிலிருந்து நம்பிக்கைக்குரிய உரிய வார்த்தைகள் வந்தாலும் அவன் எண்ணங்கள் எதிர்மறையாக இருப்பதால் அந்த அலை இந்த இதழ் ஓதும் மூடனை பாதிக்கும். இனம் தெரியாத வெறுப்பு அந்த ஆத்மாவின் மீது ஏற்படும்.

ஏதோ ஒன்று தடுக்கிறதே? இந்த ஆத்மா இங்கிருந்து அகன்றால் போதும் என்ற எண்ணம் வரும். இந்த போராட்ட நிலையிலே என்னதான் பிரார்த்தனை செய்து ஓலையை எடுத்தாலும் வருபவனின் கர்மக் கணக்கின் அடிப்படையிலே இவன் கர்மக் கணக்கையும் அனுசரித்து எதாவது பரிகாரத்தைக் கூறினாலும் கூட அது முழுமையான ஒரு நிலைக்கு ஆட்படாது. அதனால்தான் ஆதியிலிருந்து நாங்கள் கூறிக்கொண்டு இருக்கிறோம் சில முறை வந்து பார்த்துவிட்டு இந்த ஏட்டிலே கூறப்படும் விஷயங்கள் எமக்கு ஏற்புடையது அல்ல என்று யாருக்கு தோன்றினாலும் வெளிப்படையாக நேர்மையாக அதை ஒப்புக் கொண்டு விலகிவிட வேண்டும். இங்கும் வருவேன் அங்கும் செல்வேன் மனம் போனபடி பேசுவேன் என்றால் அதுபோல் ஆத்மாக்கள் தானும் கரையேறாமல் கரையேற முயற்சி செய்யும் மற்ற ஆத்மாக்களையும் திசை மாற்றிக் கொண்டேதான் இருக்கும். எனவே இதுபோன்ற ஆத்மாக்களுக்கு எதிர்காலத்திலே இறைவன் தன் அருளை அதீதமாக அளித்தால் ஒழிய நாங்கள் வாக்கினை பகர இயலாது.

இதுபோல் அதிகாலை நேரத்திலே இதுபோன்ற எதிர்மறை எண்ணங்களைக் கொண்ட ஆத்மாக்களைக் குறித்து எதற்காக கூறுகிறோம்? என்றால் அதுபோல் ஆத்மாக்கள் தன்னிச்சையாக இங்கு வருவதும் போவதும் தவறில்லை என்றாலும்கூட வாஸ்தவமாகவே எம் மீது அதீத பற்று கொண்டு இந்த சுவடியை நூற்றுக்கு நூறு நம்புகின்ற சில நல்ல ஆத்மாக்களும் கூட இப்படிப்பட்ட எதிர்மறை எண்ணம் கொண்ட ஆத்மாவை இங்கு அழைத்து வந்து விடுவார்கள். எம் மீது முழு நம்பிக்கை கொண்டவனுக்காக இன்னவனுக்கும் நாங்கள் வாக்கினை பகர வேண்டியிருக்கிறது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். அடுத்ததாக பல முறை கூறியிருக்கிறோம் தர்மங்களின் அடிப்படையில்தான் கலிகாலத்திலே ஒவ்வொரு ஆத்மாவின் பாவத்தை இறைவன் சுத்தி செய்ய விரும்புகிறார் என்று. ஆனால் அதற்கும் ஜாதகத்தில் இடம் வேண்டும். சுப கிரகங்கள் ஆதிபத்யம் பெற்றிருக்க வேண்டும். இருந்தாலும்கூட ஜாதகத்தில் அங்ஙனம் வழியில்லாத ஆத்மாவிற்கும் தொடர்ந்து வாக்குகளைக் கூறி தர்ம வழியில் திசை திருப்ப இறைவன் அருளாணை இடுவதால் நாங்கள் கூறிக்கொண்டு இருக்கிறோம் என்றாலும், இங்கு வந்து சில ஆண்டுகளாக வாக்குகளைக் கேட்டாலும்கூட எம் முன்னே அமரும்போது மட்டும் ஒருவன் நல்லவனாக இருந்து பயனில்லை. அவன் 60 நாழிகையும் நல்லவனாக இருந்தால்தான் இறைவன் அருளை பெற முடியும். இறைவன் அருளை பெறுவது என்பது ஒருவிதத்தில் எளிமை ஒருவிதத்தில் மிக மிகக் கடினம். எந்த விதத்தில் எளிமை? வனம் சென்று தவம் செய்வது என்பது எல்லோருக்கும் சாத்தியமல்ல. வாழ்க்கையில் இருந்து கொண்டே இறை வழியில் செல்வது என்பது வனம் சென்று தவம் செய்வதை விட கடினம் என்பது எமக்கு தெரியும். சராசரி எண்ணங்கள் அவ்வப்பொழுது வந்து மனிதனை பாடாய் படுத்தும் என்பதும் எமக்குத் தெரியும். அதற்கு இடம் தராமல் புண்ணியத்தை சேர்த்துக் கொள்ளா விட்டாலும் பாவத்தை சேர்த்துக் கொள்ளாமல் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.

ஒரு பிரச்சினை வரும் பொழுது அடுத்த மனிதன் தன்னை காயப்படுத்துகிறான் புறந்தள்ளுகிறான் என்பதைவிட அந்த பிரச்சினையின் இரு பக்கத்தையும் அலசி ஆராய கற்றுக் கொள்ள வேண்டும். வேறுபாடு இல்லாமல் தானே குற்றவாளியாக தானே நீதிபதியாக இருந்து பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். தான் எண்ணுவதே சரி செய்வதே சரி மற்றவர்கள் எல்லோரும் குற்றவாளிகள் என்று எண்ணினால் அங்கே உண்மை காயப்படுகிறது. பொய்மை மேலேறுகிறது. பாவம் சேர்ந்து விடுகிறது. தேவையில்லாமல் புண்ணியத்திலே பங்கம் ஏற்பட்டுவிடுகிறது. இதை எத்தனை முறை கூறினாலும் மனிதர்களின் ஜாதகப்பலன் அவனை மதி இழக்கத்தான் செய்கிறது. இது ஒருபுறமிருக்க எதிர்காலத்திலே தடையற்ற வாக்குகள் வேண்டும் என்று பலரும் எண்ணுகிறார்கள். நல்ல எண்ணம்தான். இறைவன் அருளால் நாங்கள் முழுமையாக எல்லோருக்கும் வாக்கை ரிஷபத் திங்கள் வளர்பிறையோ அல்லது அதற்குப் பிறகோ என்று முன்னரே கூறியிருக்கிறோம்.

இது ஒருபுறமிருக்க இதற்கு இடையிலே தூய்மையான எமது இந்த இதழ் வழியாக வருகின்ற வாக்குகளை நம்புவதோடு நூற்றுக்கு நூறு (இப்படி கூறுவது கூட சித்தர்களாகிய எங்களுக்கு உடன்பாடில்லை. ஒரு குறிப்புக்காக கூறுகிறோம்) இங்கு நடக்கின்ற அறப்பணிகளிலே எவ்விதமான ஐயமும் இல்லாமல் அணுவளவு கூட சந்தேகம் இல்லாமல் இவ்வளவு தனத்தை தருகிறோமே முறையாக செலவு செய்கிறார்களா? இங்கு முறையான கணக்கு வழக்குகள் இல்லையே? இதை நம்பி தரலாமா? உணர்ச்சி வசப்பட்டு தந்துவிட்டு மற்றவர்களிடம் கூறும் போது நீ ஏனப்பா தனம் தந்தாய்? இப்படியெல்லாம் தனம் தந்தால் உன் பாவங்கள் போகும் இறையருள் கிட்டும் என்று யார் கூறினார்கள்? இப்படியெல்லாம் ஒரு நூலில் கூட நாங்கள் படிக்கவில்லையே? என்றெல்லாம் விவாதம் நடக்கும் பட்சத்திலே அதைக் கூட நாங்கள் குறை கூறவில்லை. அப்படிப்பட்ட எண்ணங்கள் கடுகளவு தோன்றினாலும் கூட அதுபோல் ஆத்மாக்கள் இக்குடில் மூலம் நடக்கின்ற அறப்பணிகளுக்கு எதுவும் தரவேண்டாம் என்றுதான் நாங்கள் பலமுறை வலியுறுத்தி வருகிறோம். நூற்றுக்கு நூறு ஐயம் இல்லாத நிலை எப்பொழுது வருகிறதோ அன்று செய்யட்டும் அல்லது அவர்கள் மனம் போனபடி செய்துவிட்டுப் போகட்டும் என்றுதான் நாங்கள் கூறுகிறோம். கொடுத்தவனின் பாவங்கள்தான் குறையுமே தவிர அதை வாங்கி தர்மம் செய்தவனுக்கு எந்த பலனுமில்லை. அதை வாங்கி தர்மம் செய்தவனுக்கு செய்கூலி உண்டப்பா. இங்கு கனகத்தை (தங்கத்தை) நினைவூட்டிக் கொள்ள வேண்டும்.

இதுபோல் நிலையிலே நாங்கள் வாக்குகளுக்கு தடை கூறினால் அவரவர்கள் மனம் போனபடி அதற்கு கற்பனை காரணங்களை பொருளாக்கிக் கொண்டால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. குடிலும் குடில் சார்ந்த அறப்பணிகளும் தெய்வத்தின் அருளாணையால் சித்தர்களால் நடத்தப்படுகிறது. இவற்றை குறித்து வினா எழுப்ப நமக்கு அருகதையில்லை. முடிந்தால் நம் பங்களிப்பை செய்வோம். இல்லையென்றால் ஒதுங்கிக் கொள்வோம் என்பதே ஒரு உயர்ந்த வழியாகும்.