பிரகலாதனின் பக்தி வந்து விட்டால் இராவணனின் பக்தி வந்து விட்டால் (இதுபோல் அத்தனை அசுரர்களின் கதையை எடுத்துப் பார்) அந்த பக்தி வந்து விட்டால் நாயன்மார்களின் ஆழ்வார்களின் மன உறுதி மனத்தெளிவு வந்து விட்டால் சித்தர்களின் பற்றற்ற தன்மை வந்து விட்டால் கட்டாயம் இறை காட்சி கிடைக்கும். பல்வேறு வேலைகளில் இறைவனை வணங்குவது ஒரு வேலை என்றிருப்பது மனிதனின் இயல்பு. உலகியலுக்கு முக்கியத்துவம் தரும்வரை இறை இரண்டாம் பட்சமாகத்தான் மனிதனுக்கு இருக்கிறது. அடுத்து இந்த உலகியல் வாழ்வை நன்றாக வாழ வேண்டும் அது வேண்டும் இது வேண்டும் என்பதற்காக இறையை நோக்கி செல்லும்வரை இறை அதை வேண்டுமானாலும் தரலாம். இறை வேண்டும் என்று இது வரை யாரும் வேண்டவில்லை. அதுபோல் தின்மையும் உறுதியும் வரும் பொழுது கட்டாயம் இறை காட்சி கிட்டும்.
பொதுவாக சம்ஹார யாகத்தை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு துவங்குவது சிறப்பு. ஆனால் இதற்கு ஆலயத்து விதிமுறைகள் இடம் தராது என்பதை யாம் அறிவோம். எனவே அதிகாலை துவங்கினாலும் சாயரட்சை வரையாவது செய்வது நல்லது. இடையிலே அவசியம் ஏற்பட்டால் சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். முதலில் வழக்கம் போல் மூத்தோனுக்கு யாகம் செய்துவிட்டு பிறகு தொடர்ந்து சத்ருசம்ஹார யாகத்தை செய்யலாம். கடைசியாக ஒரே பூரணாகுதியை தந்துவிட்டால் போதும். இதிலே கால அவகாசத்திற்கு ஏற்ப மந்திரங்களை நிறுத்தி நிதானமாக உச்சரிப்பில் பிழையின்றி சொல்வதும் எல்லாவற்றையும் அள்ளி எடுத்து ஏதோ கடமைக்கு அக்னியில் வார்ப்பது போல் இல்லாமல் பொருள்களை பயபக்தியோடு பவ்யமாக நிதானமாக பொறுமையாக பயன்படுத்துதல் சிறப்பை தரும். 300 மந்திரங்கள்தானே என்று அலட்சியமாக இல்லாமல் அதிக எண்ணிக்கையில் மனிதர்களை அமரவைத்து உரத்த குரலிலே உச்சரிப்பு பிழையின்றி ஆத்மார்த்தமாக உச்சரித்து உச்சரித்து ஒவ்வொன்றிற்கும் பூர்த்தி முடிவிலே பொருள்களை யாகத்தீயில் வார்ப்பதும் நல்ல பலனைத் தரும்.
கேள்வி: என் மனைவியிடம் ஆன்மீக விஷயங்களில் பொய் சொல்லி ஈடுபட வேண்டியிருக்கிறது:
உன் போன்ற பலருக்கும் இதே நிலைதான். அப்படியே செய் என்று ஊக்குவிப்பதும் கூறுவதும் ஒரு மகானுக்கு அழகல்ல. அல்லது உண்மையைக் கூறி இல்லத்திலே குழப்பத்தை ஏற்படுத்துவதும் மகான்களுக்கு அழகல்ல. எம் போன்ற ஞானி உலகியல் ரீதியாக இது குறித்து ஒரு யோசனையைக் கூறினாலும் அது ஞான நிலைக்கு ஏற்புடையதாக இராது. ஞானப் பார்வையிலே ஒரு யோசனையைக் கூறினால் உன் போன்ற மனிதனுக்கு அது ஏற்புடையதாக இராது. இரண்டையும் அனுசரித்து கூறுவது என்னவென்றால் எல்லா இல்லங்களிலும் தாயோ தாரமோ இது போன்ற ஆன்மீக அமைப்புகளை விரும்பாததின் காரணம் இதனால் குடும்ப நடைமுறை செலவினங்கள் பாதிக்கப்படும் என்பதால்தான். எனவே குடும்பத்தை பாதிக்காமல் உன் போன்ற ஒருவன் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் நாங்கள் அதை வரவேற்கிறோம். அல்லது இயல்பாகவே உன் மனம் முதிர்வடைந்து இந்த அளவில் குடும்பத்திற்கு செய்தால் போதும் இதனை தாண்டி செய்வதெல்லாம் வீண் விரயம்தான். அவற்றையெல்லாம் புண்ணியமாக மாற்றி வைத்துக் கொண்டால் அது குடும்பத்தாரின் எதிர்காலத்திற்கு உதவும் என்ற எண்ணம் அழுத்தந்திருத்தமாக உன் மனதிலே வந்து விட்டால் அவர்கள் விரும்புவதைப் போல ஒரு சொல்லாடலை பயன்படுத்திவிட்டு உன் விருப்பம் போல் செய்யலாம். எனவே இந்த இடத்தில் உண்மையைக் கூறினால் தேவையற்ற குழப்பம் வரும் என்பதால் உண்மையைக் கூற வேண்டிய அவசியமில்லை. பொய்யைக் கூறு என்று ஜீவ நாடியில் ஞானிகளே கூறிவிட்டார்கள் என்ற அபவாதத்திற்கு ஆளாகவும் நாங்கள் விரும்பவில்லை. எனவே மௌனத்தைக் கடைபிடி. அதே தருணம் தாரத்தின் நிலையில் என்ன குழப்பம் ஏற்படும்? என்றால் கணவன் குடும்பத்தை கவனிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழும். இது போன்ற குற்றச்சாட்டுகள் எல்லாம் எழாத அளவிற்கு அவர்களின் நியாயமான தேவைகளை பூர்த்தி செய்து விட்டு உன் போக்கில் நீ செல்லலாம்.
இறையருளின் துணைகொண்டு இயம்புகிறோம் இத்தருணம் இறையருளின் துணையின்றி எது நிகழும் எக்கணமும்? இறையருளை பெறத்தானே மாந்தர்கள் விடாமுயற்சி செய்யவேண்டும். இறையருளைத் தவிர வேறு எதைப் பெற்றாலும் பலனில்லை என்பதை உணரவேண்டும். இதுபோல் இறையருளை பெறுகிறேன் என்று இறை வணக்கம் செய்கிறேன் என்று இறை தங்கியிருக்கும் பிற உயிர்களை வருத்துதல் கூடாதப்பா. இதுபோல் வாழ்விலும் வாழ்விற்கு பிறகும் உடன் வருவது கர்மங்கள் என்பதை புரிந்து இதுபோல் கர்ம பாவத்தின் அடிப்படையிலே மனித வாழ்வு அமைகிறது என்பதையும் புரிந்துகொண்டு இயம்புங்கால் கணத்திற்கு கணம் (ஒவ்வொரு வினாடியும்) விழிப்போடு வாழ பழக வேண்டும். இதுபோல் பொறுமை விடாமுயற்சி பெருந்தன்மை சகிப்புத்தன்மை இரக்கம் கருணை அன்பு என்ற குணங்களை வளர்த்துக் கொண்டே செல்ல செல்ல இறையருள் தேடி வந்து கொண்டே இருக்கும்.
இதுபோல் தொடர்ந்து இறையருளை பெறவேண்டும் என்று எண்ணக் கூடிய மனிதன் முதலில் விடவேண்டியது ஆளுமை குணத்தை. தான் எண்ணுவதை தான் நினைப்பதை பிறர் செய்ய வேண்டும். தான் எதை ஆசைப் படுகிறோமோ அதன்படி தன்னை சுற்றியுள்ளவர்கள் நடக்க வேண்டும் என்ற தன்முனைப்போடு இருக்கக் கூடிய அந்த ஆளுமை குணத்தை ஒரு மனிதன் விட்டொழித்தால்தான் இறையருளை நோக்கி அவன் மனம் பயணம் செய்ய துவங்கும். இந்த ஆளுமை குணம்தான் பல மனிதர்களை அதள பாதாளத்திற்குள் தள்ளுகிறது. வேண்டுமானால் ஒருவரிடம் இருக்கக் கூடிய தனத்திற்காகவோ பதவிக்காகவோ மற்றவர்கள் அடிபணிவதுபோல் பாவனை செய்யலாமே ஒழிய உண்மையான அடிபணிதல் என்பது இராது. எனவேதான் பிற மனிதர்களை அன்பால் கருணையால். உதவி செய்து அடிமையாக்கலாம். ஆனால் அதிகாரத்தால் அடிமையாக்குதல் என்பது எக்காலமும் நீடிக்காது அது இறையருளையும் பெற்றுத் தராது. இறை தான் படைத்த உயிர்கள் ஒன்றுக்கொன்று சமாதானத்துடனும் சத்தியத்துடனும் நிம்மதியுடனும் இன்பத்துடனும் வாழவேண்டும் என்ற குறிக்கோளுடனும்தான் படைத்திருக்கிறது. ஆனாலும்கூட அவ்வாறெல்லாம் நிகழ்வதில்லை. காரணம் இந்த ஆளுமை குணமும் தன்முனைப்பும் ஒரு மனிதனை வெறிகொண்டு எழச்செய்து அதனாலே பல்வேறு அனர்த்தங்களை ஏற்படுத்தி காலகாலம் தொடர்ந்து அந்த ஆத்மாவை பாவப் படுகுழியிலே வீழ்த்திவிடுகிறது. எனவேதான் இந்த தன்முனைப்போடு கூடிய ஆளுமை குணம் அது ஆணோ பெண்ணோ அது யாரிடமும் இல்லாமல் இருப்பதே இறைவனின் அருளைப் பெறுவதற்கு மிகப்பெரிய வழிமுறையாகும்.
ஆகுமப்பா அதுபோல் ஒருவேளை ஒருவன் அள்ளியள்ளி தர்மங்கள் செய்யலாம். அனேக ஸ்தலங்கள் சென்று தரிசனம் செய்யலாம். அனேக பாழ்பட்ட ஆலயங்களை எழுப்புவிக்கலாம். ஆனாலும் கூட எத்தனை நல்ல குணங்கள் இருந்தாலும் தேவையற்ற ஒரு தீக்குணம் இருந்து விட்டால் அது ஒரு குடம் பாலிலே ஒரு துளி விஷம் போல. முன்னமே யாம் உதாரணம் இயம்பியதுபோல வித்தையிலே பல்வேறு பாடப்பிரிவுகள் இக்காலத்திலே இருக்கிறது. அது மொத்தம் ஐந்து என்றால் நான்கிலே தேர்ச்சி பெற்று ஒன்றிலே தேர்ச்சி பெறவில்லையென்றால் தகுதிச் சான்றிதழை வித்தைக் கூடம் தராது. ஐந்திலேயும் தேர்ச்சி பெறவேண்டும். அதைப் போலத்தான் இறை வழியில் வரக்கூடியவர்கள் நான் நித்தமும் பிரம்ம முகூர்த்தத்தில் மந்திரம் சொல்லி பூஜை செய்கிறேன். நித்தமும் எதாவது ஒரு ஆலயம் செய்கிறேன் என்றெல்லாம் கூறினாலும் கூட இதைத் தாண்டி மனித நேயத்துடன் நடந்து கொள்கிறானா? என்றுதான் இறை பார்க்கும். எனவே இதுபோல் கருத்துக்களை மீண்டும் மீண்டும் அசைபோட இறையருளை பெறுவதற்கு இந்த சிந்தனை உதவி செய்யும்.
கேள்வி: மகாபாரதத்தில் வரும் விதுரரை பற்றி சொல்லுங்கள்:
விதுர நீதி என்று ஒரு நீதியே இருக்கிறதப்பா. விதுரனும் ஒரு மகான்தான். அதுபோல் திருதராஷ்டிரனுக்கு விளக்கம் எல்லாம் தந்தது இவன்தான். இதுபோல் அன்றே இருக்கும் இடத்திலிருந்து தொலைவில் நடப்பதை எல்லாம் கண்டு உணரும் ஞான திருஷ்டி பெற்றவனப்பா. இந்த சமுதாயத்தில் வாழ்ந்தாலும் பற்றற்று வாழக்கூடிய தன்மையை ஒரு மனிதன் பெற்று விட்டால் ஜனகனைப் போல யோகியாகிறான் ஞானியாகிறான். யோகியாக வேண்டும் ஞானியாக வேண்டும் என்று எல்லோருக்கும் ஆசையிருக்கிறது. ஆனால் சிறு துன்பம் வந்தாலும் கூட சோர்ந்து போய் விடுகிறான். நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். எவன் ஒருவனால் அதிகமதிகம் அவமானங்களை தாங்க மனம் இடம் தருகிறதோ எவனொருவனால் அதிகமதிகம் பிறரால் ஏமாந்தவன் என்கிற பட்ட நாமத்திற்கு ஆளாக நேரிடுகிறதோ எவனொருவனால் பிழைக்கத் தெரியாதவன் என்று பலரால் கூறப்படுகின்ற நிலை ஏற்படுகிறதோ சராசரி உலகியல் செயல்கள் எல்லாம் பாவங்கள் என்று வெறுத்து ஒதுக்கி எவனொருவன் எம் வழியில் வருகிறானோ அவனுக்குத்தான் ஞான வாழ்க்கை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரியும். அப்படி வாழ்ந்தவர்களில் விதுரனும் ஒரு உயர்ந்த ஞானியப்பா.
ஆணி மாண்டவ்யர் மிகப்பெரிய ஞானி. மகாபாரத கால கட்டத்திற்கு முன்னால் இருந்து இன்றளவும் வாழ்ந்து வருகின்ற அற்புத ஞானி. அடர்ந்த வனத்திலே தவம் இருந்து வருகின்ற வேளையில் ஒரு முறை காசி மன்னனின் காவலர்கள் சில திருடர்கள் கூட்டத்தை தேடி வருகின்றனர். காரணம் அந்த திருடர்கள் அரண்மனையில் இருந்த தங்க நகைகள் எல்லாம் கொள்ளையடித்து தப்பித்து விட்டனர். அதனால் அந்த கொள்ளை கூட்டத்தை தேடி காவலர்கள் மற்றும் மந்திரிகள் செல்கின்றனர். அவ்வாறு செல்லும் வேளையில் இந்தக் கொள்ளைக் கூட்டமானது ஒரு அடர்ந்த வனத்திலே புகுந்து தப்பித்து ஓடி சென்று கொண்டிருக்கிறார்கள். அது சமயம் அந்த வனத்திலே கடும் தவத்தில் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து கொண்டு தவம் செய்து கொண்டிருக்கிறார் ஆணி மாண்டவ்ய மகரிஷி. அவரைப் பார்த்த அந்த கொள்ளை கூட்டம் தாங்கள் கொள்ளை அடித்து வந்த தங்க நகைகள் எல்லாம் அந்த ஞானியின் மேல் ஆபரணமாக போட்டு விட்டு சில ஆபரணங்களை அவர் அமர்ந்திருக்கின்ற அந்த மரத்தின் அருகில் போட்டுவிட்டு தப்பித்து ஓடி விடுகிறார்கள். மறுபுறம் இந்த கொள்ளை கூட்டத்தை தேடி வருகின்ற காவலர்களும் அமைச்சர்களும் அதே வனத்திற்கு உள்ளே வருகிறார்கள். இந்த ஞானியை பார்த்தவுடன் அதிர்ச்சிக்கு உள்ளாகிறார்கள். இவர்தான் அந்த கொள்ளைக் கூட்டத்தின் தலைவனாக இருக்க வேண்டும் கொள்ளைக் கூட்டத்தினரை தப்பிக்க வைத்து விட்டு இவர் மட்டும் ஒன்றும் தெரியாத அப்பாவி போல் தவத்தில் இருப்பது போல் நம்மிடம் நடிக்கிறார் என்று நினைக்கிறார்கள். இந்த நகைகள் எல்லாம் இவர்தான் திருடி வந்து யாருமில்லாத இந்த வனத்தில் அமர்ந்து தன் உடம்பில் போட்டுக் கொண்டு ஒன்றும் தெரியாது போல் தவத்தில் இருப்பது போல் நடிக்கிறார் என்று அந்த ஞானியை அப்படியே தூக்கிச் சென்று மன்னனின் முன்னால் நிறுத்துகிறார்கள்.
அப்போது கூட அந்த ஞானி தவத்தில் இருந்து சிறிதும் பிசகாமல் இறைவனின் திருவடியை எண்ணி தவம் இயற்றிக் கொண்டிருக்கிறார். ஊர் மக்களுக்கெல்லாம் தெரிகிறது இவர் ஒரு மிகப்பெரிய ஞானி இவரை பார்த்தால் திருடன் போல் தெரியவில்லை. இவருக்கு இந்த நிலைமையா என்று அனைவரும் மனதிற்குள்ளே புலம்பி வருகிறார்கள். மன்னனும் உணர்ச்சி வசப்பட்டு உடனடியாக அவரை கழு வில் ஏற்றுங்கள் என்று உத்தரவிடுகிறார். காவலர்கள் உடனே ஆணி மாண்டவ்யரை கழு வில் ஏற்றி தண்டனை கொடுக்கிறார்கள். அப்பொழுதும் அந்த ஞானி தவத்தில் இருக்கிறார். அந்தக் கழு ஏற்றப்பட்ட அந்த மரத்தோடு தொடர்ந்து தவத்தில் இருக்கிறார். அந்த மரத்தோடு தான் அவர் பயணிக்கிறார். ஒரு கட்டத்தில் தான் தவத்திலிருந்து இயல்பு நிலைக்கு வரும் பொழுது கழுமரம் ஏற்றப்பட்டு நமக்கு தண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர்கிறார். ஆனால் அரசன் மீதும் காவலர்கள் மீதும் அவருக்கு கடுகளவும் கோபமோ வருத்தமோ இல்லை. எந்த ஒரு வினைப் பயன் என்னை இவ்வாறு தாக்கியிருக்கிறது. நான் செய்த பாவம்தான் என்ன? என்று எமதர்மராஜனிடம் சென்று கேட்கிறார். எமதர்மராஜனும் அவரின் முன் வினைப் பயன் ஒன்றை உரைக்கிறார். அதாவது சென்ற பிறவியில் சிறுவனாக சிறுபிள்ளையாக நீ இருக்கும் பொழுது சிறு சிறு பூச்சி இனங்களை துன்புறுத்தி இருக்கிறாய். அந்த உயிர்களின் துன்பத்தின் விளைவு தான் இன்று உமக்கு இந்தக் கழு வல் ஏற்றி தண்டனை கொடுக்க வேண்டும். என்ற விதியாக மாறி இருக்கிறது. அந்த விதிப்படி இந்த சம்பவம் நடந்திருக்கிறது என்று மாண்டவ்யரிடம் எமதர்மராஜன் கூறுகிறார். மாண்டவ்யருக்கோ கடும் கோபம் வந்துவிட்டது.
நான் செய்த தவத்தை ஏற்றுக் கொண்டாவது என் முன்வினைப் பயனை நீங்கள் என் கணக்கில் இருந்து கழித்திருக்கலாம். நீங்கள் அதை செய்யவில்லை. எனவே நீங்கள் பூவுலகில் மனிதப் பிறவி எடுத்து துன்பத்தை அனுபவியுங்கள் என்று எமதர்மராஜனுக்கு சாபம் விடுகிறார். அந்த சாபத்தின் விளைவாகத்தான் எமதர்மராஜன் மீண்டும் பிறவி எடுத்து மகாபாரத காலகட்டத்தில் விதுரராக பிறக்கிறார் என்ற ஒரு புராண சம்பவமும் உள்ளது.
இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இதுபோல் வினைகளின் கூட்டுத் தொகுப்பான பிறவிகளில் மனிதப் பிறவி விலங்கான பிறவிகளிலிருந்து சற்றே கடுகளவு மேம்பட்டது என்றாலும் மேலும் மேம்பட சற்றே முயலாமல் அந்த விலங்குத் தன்மையை மட்டும் கொண்டு உணர்வுகளுக்கு ஆட்பட்டு உணர்வுகளால் அலைக் கழிக்கப்பட்டு வாழ்கின்ற தன்மையே பெரும்பாலான மாந்தர்களிடம் நிலவி வருகிறது. இறைவனின் கருணையைப் பெறவும் மேலும் மேலும் இறை நோக்கி பயணம் செய்யவும் பாவங்களை சேர்க்காத வாழ்க்கை வாழவும் சேர்த்த பாவங்களை கழிக்கவும் மட்டுமே மனித பிறவி என்று ஒரு மனிதன் புரிந்து கொள்ளவே பல பல பல பிறவிகள் ஆகிவிடுகிறது. அவன் புலன்களால் கண்டு கேட்டு உணரக்கூடிய வாழ்க்கை முறையை நுகர்வதே வாழ்க்கை என்று எண்ணுகின்ற தன்மையில்தான் பெரும்பாலும் வாழ்ந்து கொண்டிருக்கிறான். இதுபோல் புலன் வாழ்வைத் தாண்டி மேலான வாழ்வு நிலையை நோக்கி செல்வதற்கு கொடுக்கப்பட்ட பிறவியை நன்றாக பயன்படுத்திக் கொள்ள கூடுமானவரை முயற்சி செய்வதே ஒவ்வொரு மனிதனின் கடமையாகும். ஆகிடுமே மனதை உறுதியாக வைத்துக்கொள்ள இது. அதுபோல் வினைகளின் தொகுப்பு உறவுகள் ரீதியாகவும் நட்பு வழியாகவும் இன்னும் தொடர்பு கொள்ளக் கூடிய பிற மாந்தர்கள் வழியாகவும் வேறு வேறு காரணங்களைக் கொண்டும் செயல்படும் தன்மையாகும். தேகத்தின் ஒட்டுமொத்த இயக்கம் மனிதன் தன் அறிவால் கண்டு இது இதனால் இயங்குகிறது. இது இவ்வாறு இருக்கிறது என்று புரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற் போல் செயல் பட்டாலும் அப்படி தேகம் இயங்குகின்ற அந்த இயக்கத்தின் பின்னால் இருப்பதும் வினைகள்தான் என்பதை புரிந்து கொள்வது கடினமே.
இறைவனின் கருணையைப் பெறுவதற்கு சாத்வீக வாழ்வும் சலனமற்ற சினமற்ற தன்முனைப்பு அற்ற வாழ்வும் தேவை. இவையெல்லாம் விழி மூடி விழி திறப்பதற்குள் யாருக்கும் கிட்டிவிடாது. தொடர்ந்து போராடிக் கொண்டே இருத்தல் வேண்டும். எத்தனை முறை வீழ்ந்தாலும் மீண்டும் மீண்டும் எழுந்து எழுந்து எழுந்து இறை நோக்கி நல்ல நிலை நோக்கி போராட மனிதன் கற்றுக் கொண்டிட வேண்டும். இறைவன் கருணையாலே எதையெடுத்தாலும் வினைகள் வினைகள் சென்ற பிறவிகளின் கர்மாக்கள் என்று கூறுவதால் என்ன லாபம்? மனிதனுக்கு கொடுக்கப்பட்டுள்ள அறிவு எதற்கு? அந்த அறிவைக் கொண்டு ஒரு மனிதன் தன் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள இயலாதா? துன்பங்களற்ற நிலையை அடைய இயலாதா? என்றால் இறைவன் படைத்த மனிதன் தான் பெற்றுள்ள அறிவை விருத்தி செய்து கொள்ளவும் அந்த அறிவை அனுபவங்களால் நிரப்பி தான் ஏற்கனவே பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் முடிவெடுக்கவும் தன்னுடைய அறிவின் திறன் கொண்டு தன்னை வளர்த்துக் கொள்ளவும் தனக்கு இடர் வராமல் காத்துக் கொள்ளவும் அவன் முயல்வது தவறு என்று நாங்கள் கூற வரவில்லை. அப்படி முயலுகின்ற பல மனிதர்களில் சிலரில் சிலரில் சிலரில் சிலரில் சிலருக்கு மட்டுமே அவன் எண்ணுவது போல ஓரளவு வாழ்க்கை நிலை அமைகிறது. பலருக்கு அவ்வாறு அமைவதில்லை. அது போன்ற தருணங்களில் எல்லாம் மனிதன் சோர்ந்து விடக்கூடாது. என்றோ எப்பொழுதோ செய்த வினை இப்பொழுது வருகிறது என்று எடுத்துக் கொண்டு பக்குவமாக அதனை எதிர்கொண்டு இனி பாவங்களற்ற வாழ்க்கையை வாழ போராட ஒவ்வொரு மனிதனும் கற்றுக் கொண்டிட வேண்டும். தன்னுடைய லோகாய கடமையை நேர்மையாக ஆற்றுவதோடு தன்னால் இயன்ற தொண்டினை செய்வதோடு அமைதியான முறையிலே பிரார்த்தனைகளை ஸ்தல யாத்திரைகளை தொடர்வதும் இயன்ற தர்மகாரியங்களை செய்வதும் ஒரு மனிதனின் பாவங்களைக் குறைப்பது மட்டுமில்லாமல் மேலும் கடுமையான பாவங்களை சேர்க்காமல் இருப்பதற்கும் உதவும்.
இது போன்ற பொதுவான கருத்துக்களை நாங்கள் மீண்டும் மீண்டும் கூறுவதின் நோக்கமே மீண்டும் மீண்டும் இது போன்ற கருத்துக்களை அசைபோட அசைபோட அசைபோட அசைபோட மனித மனம் தடுமாற்றமில்லாமல் உறுதியோடு இதனை பின்பற்ற வேண்டும் என்பதற்காகத்தான். ஏனென்றால் சராசரி மனிதர்கள் எதையெதையோ பேசி சற்றே தடுமாறி மேலே வரக்கூடிய மனிதர்களை குழப்பத்தில் ஆழ்த்தக் கூடும் என்பதால்தான் நல்ல விஷயங்களை உயர்ந்த கருத்துக்களையெல்லாம் மனிதன் அடிக்கடி செவியில் விழுவது போல் ஒரு சூழலை ஏற்படுத்திக் கொண்டிட வேண்டும். எனவேதான் வினைகளின் தொகுப்பான பிறவிகளை களைய மனிதன் முயற்சி எடுத்திட வேண்டும். இதுபோல் எல்லா நிலையிலும் மனிதனுக்கு துன்பங்களற்ற நிலை வேண்டும் என்றாலும் துன்பங்களற்ற ஒரு நிலையை புறத்தே தேடுவது என்பது அத்தனை ஏற்புடையது அல்ல. ஒரு மனிதன் பக்குவப்பட பக்குவப்படத்தான் துன்பங்களற்ற சூழல் என்பது அவன் உணரக்கூடிய சூழலாக இருக்கும்.ஒரு மனிதன் வியாபாரத்திலே கடுமையான நட்டத்தை சந்திக்கிறான். அதிகளவு பொருளை இழக்கிறான். உண்மையில் பார்க்கப் போனால் அது மிகப்பெரிய நட்டமே. அதைப்போல் இன்னொரு மனிதனும் அடைகிறான். இரண்டு மனிதர்களும் இழந்தது மிகப் பெரிய இழப்பு நட்டம். ஆனால் சரி போகட்டும். எங்கோ தவறு செய்து விட்டோம் இனி கவனமாக இருப்போம் என்று மனதை தளரவிடாமல் ஒரு மனிதன் இருந்தால் அவனைப் பொறுத்தவரை இந்த நட்டம் துன்பத்தை தரவில்லை. அதை விடுத்து இப்படியொரு நட்டம் வந்துவிட்டதே இனி எப்படி வாழ்வது? என்று அவன் மிகவும் சோர்ந்து சோர்ந்து அமர்ந்தால் இருக்கின்ற சக்தியும் அவனைவிட்டு சென்றுவிடும். சோர்வே அவனை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தி விடும். எனவே நிஜமான துன்பம் என்பதும் நிஜமான இன்பம் என்பதும் இந்த உலகில் இல்லை என்பதை மனிதர்கள் புரிந்து கொண்டிட வேண்டும். அப்படியானால் துன்பம் என்று உணர்வதும் இன்பம் என்று உணர்வதும் பொய்யா? என்றால் அது பொய் என்று உணரும் நிலை வரும் பொழுது ஒவ்வொரு மனிதனுக்கும் அது புரியும். ஏனென்றால் பக்குவம் அடைய அடையத்தான் எது நிஜமான துன்பம்? எது நிஜமான இன்பம்? என்பது மனிதனுக்குத் தெரியும். இறைவனின் கருணையால் இது போன்ற ஞானக் கருத்துக்களை அசைபோட்டாலே வாழ்வின் எதிரே எத்தகைய சூழல் வந்தாலும் மனம் கலங்காமல் வாழ்ந்திடலாம்.
கொடுத்துக் கொண்டேயிரு. காற்று எப்படி நல்லவன் தீயவன் என்று பாராமல் வீசுகிறதோ சூரிய ஒளி எப்படி நல்லவன் தீயவன் என்று பாராமல் படுகிறதோ மழை எவ்வாறு நல்லவன் தீயவன் என்று பாராது பொழிகிறதோ அதைப் போல பொதுவாக செவியில் பிறர் குறை விழுந்த உடனோ அல்லது தெரிந்த உடனோ உன்னால் முடிந்தவரை முயற்சி செய்து தீர்த்துக் கொண்டேயிரு. இதில் எத்தனை தடைகள் வந்தாலும் எத்தனை ஏளனங்கள் வந்தாலும் அதையெல்லாம் அமைதியாக ஏற்றுக் கொண்டேயிரு. ஏனென்றால் ஒருவகையில் தர்மம் செய்வது எளிது. இன்னொரு வகையில் கடினம். எப்பொழுது கடினம்? தர்மம் செய்ய செய்ய செய்ய இறைவன் சில சோதனைகளை வைப்பார். அதையெல்லாம் தாண்டி இந்த ஆத்மா வருகிறதா? என்று பார்ப்பார். உடன் இருப்பவர்களை வைத்தே எதிர்ப்பு காட்ட வைப்பார். இப்படி கொடுத்துக் கொண்டே போனால் நாளை உனக்கு ஒரு தேவை என்றால் என்ன செய்வாய்? என்பது போன்ற அச்சமூட்டும் வினாக்களையெல்லாம் பிறரை கேட்க வைப்பார். இது போன்ற தருணங்களிலெல்லாம் மனம் தடுமாறாமல் சோர்வடையாமல் தொடர்ந்து நல்ல வழியில் சென்று கொண்டே இருக்க வேண்டும்.
இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் பலர் எண்ணலாம் எப்பொழுது வந்தாலும் நலமான வாழ்வு உண்டு. நலமான எதிர்காலம் உண்டு. அச்சம் வேண்டாம். கலக்கம் வேண்டாம். கவலை வேண்டாம் என்று சித்தர்கள் கூறுகின்றார்கள். ஆயினும் கூட இதுபோல் உலகத்தில் அவ்வாறு எல்லா வகையிலும் நிம்மதியாக சந்தோஷமாக வாழ முடிவதில்லையே? பின் சித்தர்கள் ஆசிகள் கூறுகிறார்களே? பின் அது அவ்வாறு நடை முறையில் காண முடியவில்லை? என்று பலரும் ஐயமும் குழப்பமும் ஏன்? எங்கள் மீது விரக்தியும் கொண்டுதான் வாழ்கிறார்கள். நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். இது போல் இந்த உலகத்தில் ஒவ்வொரு ஆன்மாவும் பிறவி எடுத்ததின் நோக்கம் பூர்வீக பாவங்களைக் கழிப்பதற்கும் புதிதாக பாவங்களை சேர்த்துக் கொள்ளாமல் வாழ்வதற்குமே. அதாவது இது முற்றிலும் மனித பிறவிக்கு 100 க்கு 100 விழுக்காடு பொருந்தும். ஆயினும் கூட எண்ணற்ற பாவங்களை பிறவிகள் தோறும் இது ஆன்மாவிற்கு தான் செய்தது அல்லது செய்து கொண்டிருப்பது பாவம். இதனால் மற்றவர்களுக்கு துன்பமும் துயரமும் மன வேதனையும் ஏற்படும் என்பதை இறைவன் பெருங்கருணை கொண்டு கால அவகாசம் கொண்டு உணர்த்தவே எண்ணுகின்றார். இல்லையென்றால் எல்லோரும் கூறுவது போல தவறு செய்யும் பொழுதே ஒரு மனிதனை தடுத்து விடலாமே? தண்டித்து விடலாமே? என்ற பார்வையிலே பார்த்தால் இறைவன் எண்ணினால் அவ்வாறும் செய்யலாம்தான். ஏன்? அதை விட படைக்கும் பொழுதே எல்லோரும் நல்லவர்களாக இருக்க வேண்டும். நல்லதையே எண்ண வேண்டும் நல்லதையே உரைக்க வேண்டும் நல்லதையே செய்ய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவன் எண்ணினால் அது மிக எளிதாக நடக்குமே?. ஆனால் அவ்வாறு இல்லாமல் இதுபோல் நிலையிலே மனிதர்களுக்கு எல்லா வகையான சுதந்திரங்களையும் தந்து அவனை பல்வேறு தருணங்களில் அவன் போக்கிலே விட்டு இது நல்லது இது தீயது இது தக்கது இது தகாதது என்று அவனையே சிந்தித்துப் பார்க்க வைத்து இயல்பாக ஒருவன் நல்லவனாக மாற வேண்டுமே தவிர தண்டனைக்கு பயந்தோ அல்லது தன்னை கண்காணிக்கின்றான் ஒருவன் அதாவது தான் கண்காணிக்கப் படுகிறோம் என்பதற்காகவோ அல்லது வேறு எதற்காகவோ அச்சத்தினாலோ அல்லது வேறு ஏதாவது உபாதை ஏற்பட்டு விடும் என்பதற்காகவோ ஒருவன் நல்லவனாக இருப்பது என்பது இறைவனை பொருத்தவரை ஏற்புடையது அல்ல.
தங்கம் என்றால் அதன் இயல்பு எந்த நிலையிலும் மாறாதது. அதைபோல மனிதன் என்றால் தர்மத்திலும் சத்தியத்திலும் எப்பொழுதும் வழுவாமல் இருக்க வேண்டும். அந்த இயல்புதன்மை ஒரு ஆன்மாவிற்கு எப்பொழுது வரும்? ஏற்கனவே சேர்த்த பாவங்கள் அவனை நல்ல பாதையில் செல்ல விடாது. அந்த பாவங்களை கழிக்க இறைவன் கருணை கொண்டு ஏதாவது ஒரு பிறவியிலே சில நல்ல விஷயங்களை செய்வதற்குண்டான வாய்ப்பை ஏற்படுத்தித் தருவார் அல்லது சில நல்லவர்களின் தொடர்பை ஏற்படுத்தித் தருவார் அல்லது நல்ல தாய் தந்தையர்களுக்கு பிள்ளைகளாக பிறக்க வேண்டிய சூழ்நிலையை அப்படியொரு வாய்ப்பை தந்தருள்வார். அதைப் பிடித்துக் கொண்டு மனிதன் மெல்ல மெல்ல மேலேற வேண்டும். அதாவது எத்தனையோ கணக்கற்ற பிறவிகளை பிறந்து பிறகு இறந்து பிறகு பிறந்து பிறகு இறந்து அவையெல்லாம் நினைவுப்பதிவில் இருந்தும் இல்லாமல் போனது போல இந்த உலக வாழ்க்கையே நிஜம். இந்த தேகம் நிஜம். இந்த தேகம் சார்ந்த சுகத்திற்காகத்தான் பாடுபட வேண்டும். இந்த லோகாய விஷயங்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று சராசரி குணம் கொண்டு வாழ்கின்ற மனிதன் இறைவனின் கருணையால் ஏதாவது ஒரு பிறவியிலே மெல்ல மெல்ல இவையெல்லாம் பொய். இதனைத் தாண்டி மெய்யான விஷயம் ஒன்று இருக்கிறது. அதனை நோக்கி செல்ல வேண்டும். இந்த தேகம் என்பது ஆன்மாவிற்கு ஒரு கூடு போன்றது. இன்னும் கூறப்போனால் ஆன்மா இந்த தேகத்திற்குள் சிறை வைக்கப் பட்டிருக்கிறது. அந்த ஆன்மா விடுதலை பெற வேண்டுமென்றால் இந்த தேகத்தைவிட்டு செல்வதோடு மீண்டும் ஒரு தேகத்திற்குள் புகாமல் இருப்பதற்கு என்ன வழி? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். இப்படி சிந்தித்து சிந்தித்து சிந்தித்து சிந்தித்து கடைத் தேறியவர்களே மகான்களும் ஞானியர்களும் சித்த புருஷர்களும் ஆவர்.
இதற்காகத்தான் இத்தனை விதமான வழிபாடுகளும் சாஸ்திரங்களும் விதவிதமான ஆலயங்களும் மரபுகளும் ஏற்படுத்தப்பட்டன. ஆனால் காலப் போக்கில் என்னவாயிற்று? இந்த மரபையும் சாஸ்திரத்தையும் பிடித்துக் கொண்ட மனிதன் அதன் உண்மைத் தத்துவத்தை உணராமல் அல்லது உணர ஒரு முயற்சி செய்யாமல் இருந்து விட்டான். தேர் இழுக்கவேண்டும் என்பதை கற்றுக் கொண்ட மனிதன் தன் உடலில் இருக்கக் கூடிய குண்டலினி எனும் தேரை கீழிருந்து மேலே பிரயாசைபட்டு ஐம்புலன்களையும் ஒன்றாக்கி பிற இச்சைகளை எல்லாம் விட்டுவிட்டு மேலே இழுக்கவேண்டும் என்பதை விட்டு விட்டான். தீர்த்தமாடுதல் என்றால் உள்ளே சுரக்கும் அமிர்தத்தைத் தூண்டிவிட்டு அதை சுவைத்து உள்ளே இருக்கும் ஆன்மாவை உள்ளே சுரக்கும் அமிர்தத்திலே நீராட வைக்கவேண்டும் என்ற உண்மையை மறந்து விட்டு ஆங்காங்கே இருக்கின்ற நீர் நிலைகளுக்கு சென்று தேகத்தையே சுத்தி செய்து கொண்டிருக்கிறான். தேகத்தைப் போற்ற வேண்டும். தேகத்தை நன்றாக பேண வேண்டும். தேகத்தை ஆரோக்யமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதல்ல. யாங்கள் அடிக்கடி கூறுவதுபோல 100 ஆண்டுகள் மேலும் வாழ்வதற்கு என்ன வழியோ அதனை தேகத்திற்கு ஒருவன் செய்து கொள்ளலாம் தவறில்லை. ஆனால் அடுத்த கணம் மரணம் வந்தாலும் ஏற்க மனதையும் தயாராக வைத்திருக்க வேண்டும். உடம்பு 100 வயதையும் தாண்டி வாழ்வதற்குண்டான பயிற்சியை மேற்கொண்டு வஜ்ர தேகமாக மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும். மனது எப்பொழுது மரணம் வந்தாலும் அதை ஏற்கும் நிலைக்கு ஆயத்தமாக இருக்கவேண்டும். இதுதான் சித்தர்களின் வழியாகும்.
இதுபோல் சுயநலமற்று பந்த பாசங்களில் சிக்காமல் கடமைகளில் இருந்து தவறாமல் கடமைகளை செய்கிறேன் என்று பாசத்தில் வழுக்கி விழாமல் கடமைகளை செய்கிறேன் என்பதற்காக நேர்மை தவறாமல் ஒருவன் தன்னையும் பாதுகாத்துக் கொண்டு தன் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொண்டு மனதை இறைவனின் திருவடியை நோக்கி வைத்துக் கொண்டு சதாசர்வகாலம் அந்த இறை சிந்தனையிலே வாழ வேண்டும். ஏன்? ஒருவன் எதை எண்ணுகிறானோ அதுவாகவே மாறிவிடுகிறான். இந்த கருத்து பல மனிதர்கள் அறிந்ததே. அதைப் போல நீக்கமற நிறைந்துள்ள எங்கும் வியாபித்துள்ள பெரும் கருணை கொண்ட அந்த பரம்பொருளை எண்ண எண்ண எண்ண எண்ண ஒரு மனிதனுக்கு தவறு செய்யக் கூடாது பாவங்கள் சேர்க்கக் கூடாது என்கிற நினைவு இருந்து கொண்டே இருக்கும். இந்த நினைவு இருக்கும் வரையில் ஒரு மனிதன் கூடுமானவரை சரியான வழியில் சென்று கொண்டே இருப்பான். பாவங்கள் செய்வதால் ஒரு ஆன்மாவை மனித தேகம் எடுக்க வைத்தோ அல்லது விலங்கு தேகம் எடுக்க வைத்தோ கடுமையாக தண்டிப்பதில் இறைவனுக்கு என்ன லாபம்? ஒரு மனிதன் கண்ணீர் சிந்தினால் அதனால் இறைவனுக்கு எதாவது லாபமா? மூதுரை (பழமொழி) ஒன்று இருக்கிறதல்லவா நன்றும் தீதும் பிறர் தர வாரா என்று. ஒருவன் நுகர்வதெல்லாம் அவன் என்றோ செய்தவைதான். இன்றொருவன் எல்லா வகையிலும் நிம்மதியாக வாழ்கிறான் என்றால் அவன் அதற்கேற்றாற்போல் முந்தைய பிறவிகளில் உழைத்திருக்கிறான் என்று பொருள். ஒருவன் எல்லா வகையிலும் நிம்மதியிழந்து வாடுகிறான் என்றால் அதற்கேற்றாற்போல் அவன் விதைகளை விதைத்திருக்கிறான் என்பது பொருளாகும்.
இப்பொழுது எதை யாங்கள் கூற வருகிறோம் என்றால் சித்தர்கள் நல்லாசிகள் தந்தாலும் வாழ்வு நன்றாக இருக்கும் இறைவனருளால் என்று கூறினாலும் கூட எங்கள் வாழ்வு நன்றாக இல்லையே என்று இங்கு வந்து போகின்ற மனிதர்கள் எண்ணுவது எதைக் குறிக்கிறது? என்றால் அறியாமையைக் குறிக்கிறது. ஏனென்றால் லோகாய வாழ்விலே ஒருவனுக்கு எத்தனை செல்வத்தைத் தந்தாலும் எத்தனை மாளிகைகளைத் தந்தாலும் எத்தனை கோடி கோடியாக தனத்தைத் தந்தாலும் அவன் விரும்புகின்ற எந்த விஷயத்தைத் தந்தாலும் அது பதவியோ அவன் ஆசைப்படுகின்ற பெண்களோ அல்லது நிறைய தங்கமோ எதைத் தந்தாலும்கூட ஒரு மனிதனால் நிம்மதியாக சந்தோஷமாக வாழ இயலாது. தொடர்ந்து ஒருவன் செய்கின்ற பக்தியும் தொண்டும்தான் நேர்மையான வழியில் சேர்த்த செல்வத்தை பிறருக்கு பயன்படுமாறு அள்ளி அள்ளி அள்ளி அள்ளி வழங்குகின்ற தடைபடாத தர்ம குணத்தினால் மட்டும்தான் ஒருவனுக்கு நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். சேர்ப்பதல்ல சுகம். சேர்த்து வைப்பதல்ல சுகம். இருப்பதையெல்லாம் தந்து கொண்டேயிருப்பதே சுகம். இழக்க இழக்கதான் மனிதன் பெறுகிறான் என்பதை மனிதன் மறந்து விடக்கூடாது. எதையெல்லாம் ஒரு மனிதன் இழக்கிறானோ நியாயமான விஷயங்களுக்கு எதையெல்லாம் ஒரு மனிதன் கொடுக்கிறானோ தன்னையே எப்பொழுது இழக்கிறானோ அப்பொழுதுதான் அவனுக்கு இறைவனின் பரிபூரண கருணை கிட்டும். அதை விட்டு எனக்கு இந்த செல்வம் வேண்டும் எனக்கு இந்தவகையான வசதியான வாழ்வு வேண்டும் என்று இறைவனை நோக்கி வேண்டுவதால் பயனொன்றுமில்லை.
ஒருவேளை இவையெல்லாம் இறைவன் தரலாம். ஆனால் ஒரு மனிதன் கேட்கின்ற லௌகீக விஷயங்களால் லௌகீக வசதிகளால் சில காலமோ அல்லது சில நாழிகையோ வேண்டுமானால் அவன் சுகமாக நிம்மதியாக இருக்கலாம் அல்லது அப்படி இருப்பது போல் ஒரு மாயத்தோற்றம் ஏற்படலாம். நிரந்தர நிம்மதியும் நிரந்தர சந்தோஷமும் பற்றற்ற தன்மையும் யோகாசனத்தால் தன் தேகத்தை வஜ்ரமாக ஆக்கி வைத்துக் கொள்வதிலும் சுவாசப் பயிற்சியை தடையற்று செய்து சுவாசத்தை ஒரு கட்டுக்குள் வைத்துக் கொள்வதும் பிறகு தன்னிடம் இருப்பவற்றை எல்லாம் தேவையான மனிதர்களுக்கு தேவையான பொழுது அவன் வாயைத் திறந்து கேட்கும் முன்னே குறிப்பறிந்து தருவதும் அப்படி தந்து விட்ட பிறகு எவன் பெற்றானோ அவனுக்கு ஒரு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தும் வண்ணம் நடந்து கொள்ளாமல் அதாவது ஒருவனுக்கு ஒரு உதவியை செய்ய வேண்டியது. பிறகு நான் உனக்கு இந்த உதவியை செய்திருக்கிறேன் செய்திருக்கிறேன் என்பது போல் அவனுக்கு நினைவூட்டிக் கொண்டே இருப்பது. இது போன்ற உதவியை செய்வதற்கு ஒரு மனிதன் செய்யாமலேயே இருக்கலாம். எனவே உதவியை செய்து விட்டு பிரதிபலன் எதிர்பார்ப்பது கூட அந்த உதவிக்கு ஒரு களங்கத்தை ஏற்படுத்தியது போல் ஆகும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு மனிதன் வழங்கிக் கொண்டே இருத்தல் என்பதே இறைவனின் அருளையும் ஏன்? இறைவனின் தரிசனத்தையும் பெறுவதாகும். எனவே கொடுப்பது ஒன்று மட்டும்தான் இறைவன் கருணையை எளிதில் பெறுவதற்குண்டான வழியாகும்.
ஏது ஏதோ மந்திரங்களை வாயில் நுழையாமல் கடினப்பட்டு கற்றுக் கொள்வதாலோ புரியாத அர்த்தம் கொள்ள இயலாத மந்திரங்களை கூறுவதாலோ மட்டும் இறைவனருள் கிட்டாது. அவையெல்லாம் ஒரு அடிப்படை பாடமாகும். இறைவன் அருளைப் பெற வேண்டும். எதற்காக பெற வேண்டும்? எல்லாவகையிலும் நிம்மதியாக வாழவேண்டும் என்பதற்காகத்தானே? பிறரை நிம்மதியாக வாழ வைத்தால் ஒருவனுக்கு நிம்மதி தானாக வந்துவிடும். பிறர் கண்ணீரை ஒருவன் துடைத்தால் அவன் கண்ணீர் இறைவனால் துடைக்கப்படும். பிறர் புன்னகைக்கு ஒருவன் வழிவகுத்தால் இவன் நிரந்தரமாக புன்னகைக்க இறைவன் ஏற்பாடு செய்வார். இதுதான் அடிப்படை ஆன்மீகமாகும். இதனைப் புரிந்து கொண்டு விட்டால் எமது வாக்கும் வாக்கின் போக்கும் புரியும்.
கேள்வி: முக்தி என்றால் என்ன? முக்தி ஸ்திதி என்றால் என்ன? அதற்குரிய சாதனைகள் என்னென்ன? ஒரு சாதகன் எந்தெந்த சாதனைகளைப் பின்பற்ற வேண்டும் ?
இறைவனின் கருணையால் இயம்புவது யாதென்றால் முத்தி என்றால் என்ன? முற்றிய நிலை என்று கொள்ளலாம். ஒரு வகையான ஒரு உயர்வான நிலை என்றும் கொள்ளலாம். சிப்பி என்ற கூட்டுக்குள் விழுகின்ற தூய நீர் முற்றி முத்து ஆவது போல. இதுபோல் தேகம் என்னும் சிறிய கூட்டுக்குள் அடைபட்டு அடைபட்டு பிறவிகள் எடுத்து எடுத்து மாயா வாழ்வில் சிக்கி உழன்று உழன்று தவிக்கின்ற ஆத்மாக்கள் அதிலிருந்து விடுபட்டு ஒரு முற்றிய நிலை. அந்த நிலையை நோக்கி செல்லுதல் அல்லது அடைதல் முக்தி எனலாம்.
விடுதல் அது நீழ்ச்சி பெற்று அது வீடுபேறு ஆயிற்று. விடுதல் என்றால் எதிலிருந்து? எவையெல்லாம் மனிதனுக்கு முதலில் இன்பமாய் தோன்றி பிறகு நிரந்தர துன்பத்தைத் தருகிறதோ அவை அனைத்திலிருந்தும் மனிதன் விடுபட வேண்டும். எல்லாவற்றிலிருந்தும் விடுபடக் கூடிய மனோபாவத்தை அந்த மனோநிலையை வைராக்கியம் கொண்டு எவனொருவன் வளர்த்துக் கொள்கிறானோ இதுபோல் ஒவ்வொரு மனிதனும் துயிலும்பொழுது கனவு காண்கிறான். ஆனால் என்றாவது காண்பது கனவு என்று உணர்கிறானா? கனவிலே அச்சமூட்டும் நிகழ்வு என்றால் அஞ்சுகிறான். மகிழ்வைத் தரும் நிகழ்வு என்றால் மகிழ்கிறான். அதைக் காணும் பொழுது கனவு என்று உணராமல் விழித்த பிறகுதான் கனவு என்று உணர முடிகிறது. ஆனால் அதை இப்படியே என்றென்றும் விழிப்பு நிலையிலேயே இருந்து உணர்ந்து பார்க்கின்ற ஒரு கலை அதாவது வாழும் பொழுதே இவ்வாழ்க்கை மெய்யல்ல பொய். வினைகளை நுகரத்தான் இந்த வாழ்வு.
இப்பொழுது நடப்பதும் பார்ப்பதும் சொப்பனம். விழிப்பு நிலை ஜாக்ரதா நிலை என்பது வேறு என்பதை உணர்ந்து இந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டே வினைகளை நுகர்ந்து கொண்டே இடைவிடாத இறை சிந்தனையோடு எவனொருவன் அந்தப் பரம்பொருளை நோக்கி செல்கின்ற முயற்சியை விடாது செய்கிறானோ அப்படி செய்கின்ற அந்த மனிதனின் ஆத்மாவிற்கு இறுதி நிலையில் கிட்டுகின்ற ஒரு முற்றிய நிலை முக்தி நிலை. இதற்கு வைராக்யமும் பற்றற்ற தன்மையும் 100 க்கு 100 விழுக்காடு சத்தியமும் தர்மமும் தேவை. இதனை விட்டுவிட்டு வேறு எத்தனை மந்திரங்களை ஒருவன் உருவேற்றினாலும் மனம் பக்குவப்படாத நிலையில் இந்த முக்தி என்கிற ஒரு உயர் நிலையை அடைவது கடினம்.
வழக்கமான பூஜை வழிபாடுகளோடு நிறைய ஏழைகளைத் தேடிச் சென்று தர்மம் செய்வதுதான் பித்ரு வகை தோஷங்களையும் கடனையும் நிவர்த்தி செய்யும். கால பைரவருக்கு நெய் தீபம் நிறைய ஏழைகளுக்கு வயிறார உணவு வேறு உதவிகள் விலங்கினங்களுக்கு உணவு வேறு உதவிகள் இதோடு மாதம் ஒரு முறை ராமேஸ்வரம் போன்ற ஜோதிர் லிங்க ஸ்தலங்களுக்குச் சென்று முறையான வழிபாடு அன்ன சேவை போன்றவை. அதோடு மட்டுமல்லாது வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் தில யாகத்தை உட்பிரிவுகளோடு குறைந்த பட்சம் 2000 மந்திர ஜெபத்தோடு செய்வது நல்லது. அதோடு பசுமாடுகள் தொடர்பான தர்மங்களை செய்வது பித்ரு கடனைக் குறைக்கும்