ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 304

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

இறைவனின் கருணையைக் கொண்டு யாங்கள் (சித்தர்கள்) மீண்டும் கூறுவது யாதென்றால் முன்னரே வாக்கறிந்த சேய்கள் அதனை மீண்டும் நாங்கள் வாக்கினை கூறும் வரை பின்பற்றி வந்தால் அதுவே இறைவன் அருளை பெற்றுத் தரும். புதிதாக வந்துள்ள சேய்கள் அதுபோல இயன்ற இறை வழிபாடும் இயன்ற தொண்டும் இயன்ற தர்மமும் செய்து வந்தால் அது நலத்தை சேர்க்கும். தொடர்ந்து இதுபோல் ஜீவ அருள் ஓலை மூலம் சில ஆத்மாக்களின் பாவ கர்மாக்களை இறைவன் அருளால் குறைப்பதற்கென்று பல்வேறு அறப்பணிகளை யாம் (அகத்திய மாமுனிவர்) அருளாணையிட்டு செய்து வந்தாலும் கூட பலருக்கும் விதி வசத்தால் அதில் ஆர்வம் இல்லை என்பதை யாங்கள் (சித்தர்கள்) அறிவோம். வேறு எளிய வார்த்தையில் கூற வேண்டும் என்றால் ஜீவ அருள் ஓலையை பின்பற்ற வேண்டுமென்றால் சராசரி மனித சிந்தனை கடுகளவும் கூட ஒத்து வராது. அதிக அளவு பெருந்தன்மை ஒவ்வொரு சேயிடமும் யாங்கள் (சித்தர்கள்) எதிர்பார்க்கிறோம். எம்மிடம் அமரும் போது மட்டும் பணிவு எம்மிடம் அமரும் போது மட்டும் பக்தி இருந்தால் போதாது. அல்லும் பகலும் 60 நாழிகையும் சாத்வீக குணத்தை வளர்த்துக் கொண்டு இறை நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு கூடுமானவரை சத்தியத்தைப் பேசிக்கொண்டு எந்த விஷயத்திலும் மிகவும் கடுமையான சிக்கனத்தைக் கடைபிடிக்காமல் இல்லை எங்களால் அவ்வாறெல்லாம் முடியாது என்றால் அவர்கள் அவர்கள் விதி வழியில் அவர்கள் அவர்கள் மதி செல்லட்டும் என்றுதான் நாங்கள் (சித்தர்கள்) வாக்கினைக் கூற வேண்டியிருக்கிறது.

எனவே வாய்ப்பு உள்ளவர்கள் தொடர்ந்து தொண்டினை புரிந்து வந்தாலே இதுபோல் எம்மை நாடினாலும் நாடாவிட்டாலும் பாவத்தின் தாக்கம் குறையத்தான் செய்யும். ஆயினும் கூட தர்மத்தின் நுட்பங்களையெல்லாம் ஒரே கணத்தில் எடுத்து இயம்புவது கடினம். எடுத்து இயம்பினாலும் மனிதர்கள் புரிந்து கொள்வது கடினம். மனிதர்கள் பார்வையில் தர்மமாக எவையெல்லாம் காணப்படுகிறதோ அவையெல்லாம் எமது பார்வையில் தர்மமாக இருக்குமென்று கூறுவது இயலாது. இதுபோல் நிலையிலே மீண்டும் மீண்டும் எம்மொத்த சேய்களுக்கு யாங்கள் (சித்தர்கள்) கூற வருவது இதுபோல் தர்மகாரியங்களில் தம்மை பிணைத்துக் கொள்வதும் தொடர்ந்து சுயநலம் விட்டு தன்முனைப்பு விட்டு சினம் விட்டு யார் மனதையும் புண்படுத்தாமல் இறைவனை எண்ணி தொடர்ந்து நேர்மையான வழியில் ஈட்டிய பொருளையெல்லாம் தக்க ஏழைகளுக்கும் வேறுவகையான சத்காரியங்களுக்கும் செலவிட்டால் பூர்வீக தோஷங்கள் பாவங்கள் படிப்படியாகக் குறைந்து இறையருளை உணரக்கூடிய ஒரு மனநிலை வரும் என்பதை இத்தருணம் யாம் (அகத்திய மாமுனிவர்) இறைவன் அருளைக்கொண்டு இயம்புகிறோம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 303

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இப்பொழுது அரவு பொழுதாகும். இருந்த போதிலும் சில வாக்குகளை யாம் (அகத்திய மாமுனிவர்) கூறி பூர்த்தியினை இத்தருணம் செய்கின்றோம். இறைவன் அருளால் மீண்டும் பிரம்ம முகூர்த்த காலத்திலே இந்த உலகியல் வழக்கப்படி நாளை என்றும் எமது (அகத்திய மாமுனிவர்) வழக்கப்படி இன்று என்றும் வைத்துக் கொண்டால் நாளைய பொழுது பிரம்ம முகூர்த்தம் துவங்கி பிரம்ம முகூர்த்தம் பூர்த்தி வரை பொது வாக்கினை இறைவன் அருளால் இயம்ப இருக்கின்றோம். வாய்ப்பு உள்ள சேய்கள் (பிள்ளைகள்) இருக்கட்டும். பயணம் துவங்க உள்ள சேய்கள் மூத்தோனை (விநாயகரை) வணங்கி பயணம் துவங்கலாம். இதுபோல் நிலையிலே இறைவன் அருளாலே யாம் கால காலம் கூறி வருவது எம்முன்னே யார் அமர்ந்தாலும் இதுபோல பரிபூரண சரணாகதியான பக்தியும் இறை வழிபாடும் சத்தியமும் தர்மமும்தான். இதனையே விதவிதமான வார்த்தைகளில் யாங்கள் (சித்தர்கள்) எமை நோக்கி வருகின்ற மனிதர்களின் மனோ நிலைக்கு ஏற்ப இயம்பிக் கொண்டே இருக்கின்றோம். இதனை ஏற்கவும் ஏற்றுப் பின்பற்றுவும் கூட ஒருவரின் ஜாதகத்தில் விதிக்க இருக்க வேண்டும் என்று யாம் உணர்ந்தாலும் தொடர்ந்து நல்விஷயங்களைக் கூறிக்கொண்டே இருந்தால் இறைவன் கருணையினால் ஆத்மாவில் பதிந்து இப்பிறவி இல்லா விட்டாலும் அடுத்தடுத்த பிறவிகளில் நல்விஷயங்களை அந்த ஆத்மா புரிந்து பின்பற்றி மேலேறி வரட்டும் என்பதுதான் எம்போன்ற மகான்களின் நோக்கமாகும்.

ஆகுமே இதுபோல் ஜீவ அருள் ஓலையிலே கூறுகின்ற கருத்துக்களையெல்லாம் எல்லா மனிதர்களாலும் அப்படியே உள்வாங்கி ஜீரணித்துக் கொள்ள இயலாது என்று யாம் அறிந்தாலும் பொதுவில் யாங்கள் கூறிக்கொண்டே செல்வதால் இங்கு வந்து வாக்கு அறியாமலேயே பலரும் ஏற்று நடப்பவரும் உண்டு. நடவாமல் போகின்ற மாந்தர்களும் (மனிதர்களும்) உண்டு. அனைத்தும் விதிப்பயன் என்று நாங்கள் (சித்தர்கள்) இறைவனருளால் மௌனமாக பார்வையிட்டுக் கொண்டுதான் இருக்கின்றோம். இறைவன் கருணையைக் கொண்டு சேய்களுக்கு நல்லாசிகளைக் கூறுகின்ற இத்தருணம் தொடர்ந்து எங்கள் வாழ்விலே பிரச்சனைகள் அதிகமாக இருக்கிறது. எங்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட வாக்கினை தர வேண்டும் என்று பலரும் வினா எழுப்புகின்ற இத்தருணத்தில் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் இயம்புகின்றோம். தொடர்ந்து இறை வழிபாடும் தர்மத்தையும் கடைபிடித்தால் எத்தனை கடுமையான கர்ம வினையென்றாலும் கட்டாயம் படிப்படியாக குறையத்தான் செய்யும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 302

கேள்வி: தென்மேற்கு பருவ மழை பரவலாக அதிகரிக்க வேண்டும். மேட்டூர் அணை விரைவில் நிரப்ப வேண்டும்:

பருவ நிலைகள் மாற்றங்கள் அடைந்து மனித சமுதாயத்திற்கு எதிராக இருக்கிறது என்றாலே அதாவது அதிக மழை அல்லது அறவே மழையற்றுப் போதல். அனல் அதிகமாக அடித்தல் அல்லது வெயிலோன் அடிக்காமல் போதல். காற்று இல்லாத நிலை அல்லது அதிக சூறை காற்று. இதனால் மனிதன் வாழ முடியாமல் போய் விடுகிறது. தர்மம் எங்கே குறைகிறதோ அங்கே இயற்கை தன் சீற்றத்தைக் காட்டும். எனவே மனிதர்கள் கூட்டாக சேர்ந்து நல்ல சத்சங்கமாக கூட்டுப் பிரார்த்தனை செய்வதும் தன்னிடம் இருக்கக் கூடிய மிகுதியான செல்வத்தை தக்க மனிதர்களுக்கு தாராளமாக பகிர்ந்து கொடுக்கக்கூடிய நிலை வரும் வரை இது போன்ற இயற்கை சீற்றங்கள் தொடரத்தான் செய்யும்.

கேள்வி: இறைவனை மோகினி அவதாரத்தில் எந்தெந்த கோவில்களில் தரிசனம் செய்யலாம்? மோகினி அவதாரத்திற்குண்டான ஸ்லோகம் கூறியருள வேண்டும்:

மகாவிஷ்ணுவை எந்த ஆலயத்திலேயே வணங்கினாலும் மோகினி ரூபமாகவும் பார்த்து வணங்கலாம். அதுபோல் நிலையிலே மகாவிஷ்ணுவிற்குரிய அனைத்து வழிபாடுகளும் அனைத்து மந்திரங்களும் இதுபோல் அவதாரத்திற்கும் பொருந்துமப்பா.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 301

கேள்வி: கோதண்ட ராமரின் கோதண்டத்திற்கு மாலை போடுவதன் தாத்பர்யம் என்ன?

பொதுவாக இறை அல்லது நிலையோடு இருக்கின்ற ஏனைய உப பொருள்களுக்கும் இறைத்தன்மை வந்துவிடுகிறது என்பது மெய்தான். அதனால்தான் இறைவனின் வாகனங்கள் கூட பக்திக்குரிய வழிபாட்டுக்குரிய விஷயமாகப் போற்றப்படுகிறது. எனவேதான் விஷ்ணுவிடம் இருக்கக்கூடிய சங்கும் சக்கரமும் கூட அஃறிணைப் பொருள்களாக இல்லாமல் அதுவும் உயர் தெய்வ கடாக்ஷம் பெற்ற தெய்வீகமாகவே போற்றப்படுகிறது. அதேப் போலதான் இந்த கோதண்டமும். அது இறைவனின் கையிலே ஸ்ரீராமபிரானின் கரத்திலே இருப்பதால் அதுவும் தெய்வாம்சம் பெற்றதாகவே போற்றப்படுகிறது. எப்படி பகை குறைவதற்கு பகை கடிதலும் சத்ரு சம்ஹார யாகமும் எம்மால் உபதேசம் செய்யப்படுகின்றதோ அதைப் போல இங்கு ராமரையும் அந்த ராமரின் கரத்தில் இருக்கக் கூடிய வில்லையும் வழிபாடு செய்வதால் பகையைக் குறைத்துக் கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.

கேள்வி: சிராத்தத்தில் 96 வகை இருப்பதாக சொல்லப்படுகிறது. மஹாவ்யதிபாதம் பற்றி சொல்லுங்கள்:

பின்னர் விளக்கமாகக் கூறுகிறோம். 96 அல்ல. 108 க்கும் மேலான வகைகள் உண்டப்பா. எல்லாவற்றையும் எல்லா மனிதர்களாலும் பின்பற்ற முடியாது. ஒரு எளிய பூஜை ஒரு எளிய தர்ப்பணத்தை செய்து ஒரு ஆவினத்திற்காவது (பசு) வயிறார உணவைத் தரலாம். ஏதும் இல்லாதவர்கள் சிறிய உயிரினங்களுக்கு உணவினைத் தரலாம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 300

கேள்வி: அற்புதம் நின்ற கற்பகக் களிறே என்ற பொருள்?

இதுபோல் நல்விதமாய் மூத்தோனின் லீலைகளும் மூத்தோனின் தோற்றமும் மூத்தோன் வழிபாட்டால் கிடைக்கக் கூடிய அனைத்து விளைவுகளும் அற்புதத்தில் அடங்கும் என்பதின் சுருக்கமே இதுபோல் வாக்கியமாகும்.

கேள்வி: கோட்சார பலன்களை அறிந்து கொள்ள லக்ன பாவத்திலிருந்து பார்க்க வேண்டுமா? அல்லது சந்திர பாவத்திலிருந்து பார்க்க வேண்டுமா?

இரண்டிலிருந்தும் பார்க்க வேண்டுமப்பா. இருந்தாலும் கூட அடிப்படை ஜாதகம் வலுவானது. அதை பிரதிபலிக்கக் கூடியது திசா புத்தி அந்தர சூட்சுமம். அதன் பிறகுதான் கோட்சார பலன்கள்.

கேள்வி: கோச்சாரத்தில் சனியும் செவ்வாயும் துலாத்தில் சேர்ந்திருக்கிறார்கள். தீய விஷயங்கள் நடக்காமல் இருக்க வேண்டும். என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

முருகப்பெருமான் வழிபாட்டில் கவனம் செலுத்துவதும் நவகிரக அபிஷேகம் செய்வதும் ஏற்புடையதாகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 299

கேள்வி: ஸ்ரீரங்கத்திலே சுக்ரவார கிருஷ்ணன் சன்னிதி இருக்கிறது. அதன் தாத்பர்யம் என்ன?

பொதுவாகவே அரங்க ஸ்தலம் (பெருமாள் ஆலயம்) என்பது சுக்ரனுக்கு உகந்த ஸ்தலம் என்று கூறலாம். ஜாதகத்தில் சுக்கிர பகவானின் அருள் குறைவாக இருக்கப் பெற்றவர்கள் சென்று வழிபட வேண்டிய ஸ்தலங்களில் ஸ்ரீரங்கமும் ஒன்று. எனவே அந்த ஸ்ரீரங்கம் முழுவதுமே சுக்கிரனின் ஆட்சி இருக்கிறது. அதனால்தான் அது ஆதிகாலத்தில் இருந்த நிலை நாளுக்கு நாள் மாறி மாறி தற்காலத்திலே மிகப்பெரிய நகரமாக வளர்ச்சி பெற்றிருக்கிறது. அதுபோல் நிலையிலே அங்கு எந்த சன்னிதியிலே சென்று இறைவனின் எந்த வடிவத்தை வணங்கினாலும் கூட அது சுக்ர தோஷத்திற்கு பரிகாரமாக அமையும். எனவே மூலவரை வணங்கினாலும் வேறு உப சன்னதியில் சென்று வழிபாடு செய்தாலும் கூட அது சுக்ரன் தொடர்பான தோஷங்களை நீக்கும். எனவே அங்குள்ள எல்லா வகை சன்னதியிலும் ஒரு மனிதன் எந்த வகை பூஜை செய்தாலும் அதற்கு சுக்கிர பரிகார பூஜை என்று பொதுவாக கொள்ளலாம். எனவே அந்த அடிப்படையில் எழுந்ததுதான் இன்னவன் விடுத்த வினா.

கேள்வி: சக்கரத்தாழ்வாரின் பின் பக்கம் நரசிம்மரை பிரதிஷ்டை செய்வதன் தாத்பரியம் என்ன?

மகாவிஷ்ணுவும் மகாவிஷ்ணுவுடன் இருக்கக்கூடிய சங்கும் சக்ரமும் இணை பிரியாதவை என்பதை ஒரு குறிப்பாக உணர்த்துவதற்காகத்தான். இதுபோல் முற்காலத்திலே எங்கு சுதர்சனத்தை பிரதிஷ்டை செய்தாலும் அதன் பின்னால் மகாவிஷ்ணுவின் வடிவத்தை பிரதிஷ்டை செய்வதாக ஒரு ஐதீகம் இருந்தது. அது சுதர்சனம் என்பது தீமையை அழிக்கக் கூடிய பகையை வெல்லக் கூடிய ஒரு அம்சமாக இருப்பதால் மகாவிஷ்ணுவின் அவதாரமான நரசிம்மரை பிரதிஷ்டை செய்யும் வழக்கமும் இருந்தது. எப்படியும் உப தெய்வங்களை வணங்குவதோடு பிரதான தெய்வத்தையும் வணங்குவதே சிறப்பு என்ற அடிப்படையிலேயே இவ்வாறு பிரதிஷ்டை செய்யப்படுகிறது. சுதர்சன பகவானை வணங்கினாலும் மகாவிஷ்ணுவை வணங்கினாலும் பலன் ஒன்றுதான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 298

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

இறைவனின் கருணையைக் கொண்டு உரைப்பது யாதென்றால் இதுபோல் நலம் எண்ணி நலம் உரைத்து நலமே செய்ய நலமே விளையும் என்பது தான் மனிதன் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய எளிய சூத்திரமாகும். வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் மனம் விரும்பாத சம்பவங்கள் நிகழ்வுகள் நிகழ்கிறதோ விரும்பாத உறவுகள் தொடர்கிறதோ விரும்பாத சூழலில் இருக்க நேரிடுகிறதோ அப்பொழுதே புரிந்து கொள்ள வேண்டும். யாருக்கோ எப்பொழுதோ எந்த ஊருக்கோ நகருக்கோ நாட்டிற்கோ ஒட்டுமொத்தமாக பிடிக்காத உயிர்கள் விரும்பாத பாதிப்பை தரக்கூடிய ஒன்றை அம்மனிதன் செய்திருக்கிறான் என்று. ஏற்படுத்திய விளைவு ஏற்படுத்திய மனிதனை மீண்டும் சென்று சேர்ந்த பிறகே அந்த விளைவு நேரமாகும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். பழங்கால ஆயுதமான பூமராங்கு எப்படி எய்தவனிடமே திரும்ப வருமோ அது போல ஒவ்வொரு வினைக்கும் விளைவுகள் இருப்பதால் செய்கின்ற வினையை நல் வினையாய் செய்து விட்டு போனால் என்ன என்பதை தான் நாங்கள் காலம் காலமாக எம்மை நாடுகின்ற மனிதர்களுக்கு உணர்த்திக் கொண்டு இருக்கிறோம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 297

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

ஒருவன் உலகியல் ரீதியாக தேடக்கூடிய செல்வங்கள் பொருள் ஆஸ்தி இவை அனைத்தும் உடலை விட்டு அவன் சென்ற பிறகு வருமா? உதாரணமாக நாங்கள் (சித்தர்கள்) அடிக்கடி கூறுவது போல ஒரு விலை உயர்ந்த வாகனத்தை வாங்கி அதை இயக்கிப் பார்த்து சந்தோஷப்படுகிறான். நாங்கள் குறை கூறவில்லை. ஆனால் அந்த வாகனம் அவன் அந்த உடலை இங்கேயே விட்டு விட்டு அதாவது இழப்பு கண்ட பிறகு அந்த ஆன்மா அந்த வாகனத்தில் ஏறி அமர்ந்தால் அந்த ஆன்மாவிற்கு அந்த வாகனம் பயன்படுமா? சுகம் தருமா உயர்ந்த வைர கனக அணிமணிகளை வாங்கிக் குவிக்கிறான். அவை எல்லாம் விலை உயர்ந்தது என்று. அவற்றை வாங்கி அவன் உடலோடு இருக்கும் போது கழுத்திலே அணிந்து சந்தோஷப்படுகிறான். இதை மற்ற மனிதன் பார்த்தால் தன்னை மதிக்க வேண்டும் என்கிறான். ஆனால் அதே சமயம் அந்த உடலை விட்ட பிறகு அந்த ஆன்மா அந்த அணிகலன்களை எல்லாம் அணிய இயலுமா? எனவே சுருக்கமாகக் கூறுவது சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் ஆதியில் இருந்து தொகுத்து சுருக்கமாக மீண்டும் மீண்டும் கூறுவது என்ன என்றால் ஆன்மா எனப்படும் உயிர் அல்லது ஆத்மா எப்படி அழைத்தாலும் ஒரு மனித உடலில் அது இருந்தாலும் அல்லது விலங்கு உடலில் அது இருந்தாலும் அல்லது வேறு எந்த உடலில் இருந்தாலும் அந்த ஆத்மா சந்தோஷமாக நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் பாவங்களற்ற தன்மையை மனிதன் மேற்கொள்ள வேண்டும். புண்ணியத்தை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இறுதியாக ஒரு ஆத்மா உடலோடு இருந்தாலும் உடலற்று இருந்தாலும் அதனுடன் இருப்பது பாவங்களும் புண்ணியங்களும். எனவே ஆத்மா நித்ய சந்தோஷமாக நித்ய நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் புண்ணியம் புண்ணியம் புண்ணியம் புண்ணியம் புண்ணியம் புண்ணியம் சதாசர்வ காலம் மனிதன் புண்ணியத்தை தேடித்தான் ஆக வேண்டும். ஒரு விலங்கு புண்ணியத்தை சேர்க்க இயலாது. பாவத்தையும் செய்ய இயலாது. அது செய்த பாவத்தை அந்த விலங்கு உடலுக்குள் அந்த ஆத்மா புகுந்து செயல்பட்டு அந்த விலங்காகவே வாழ்ந்து அந்த பிறவியை முடிக்க வேண்டும் என்பது விதியின் கட்டளை. ஆனால் மனிதன் நினைத்தால் புண்ணியத்தை சேர்த்துக் கொள்ள முடியும். பாவத்தை குறைத்துக் கொள்ள முடியும். இந்த சுதந்திரம் மனிதனுக்கு இறைவனால் கொடுக்கப்படுகிறது. கொடுத்த சுதந்திரத்தை மனிதன் என்றுமே சரியாக பயன்படுத்தியதாக சரித்திரமில்லை. சரியாக பயன்படுத்தினால் இறைவனருள் அதிக தொலைவில் இல்லை ஆசிகள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 296

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

பாவம் என்றால் என்ன? எண்ணத்தால் வாக்கால் செயலால் பிறருக்கு அணுவளவும் துன்பத்தைத் தராமல் வாழ எண்ணுவது. அப்படி இல்லாமல் செய்கின்ற அனைத்தும் பாவங்களே. எனவே பாவங்களே இல்லாத ஒரு நிலையை நோக்கி ஒரு மனிதன் சென்றால்தான் துன்பங்களே இல்லாத வாழ்க்கை கிட்டும். ஆனால் இருக்கிறது அதற்காக இந்த தவறை செய்ய வேண்டி இருக்கிறது என்னை விட பல மடங்கு தவறுகளை செய்யக் கூடிய மனிதன் நன்றாகத்தானே வாழ்கிறான். நான் சிறிய தவறைதானே செய்கிறேன் என்று எதையாவது தனக்குத்தானே சமாதானம் கூறிக் கொண்டு தவறு மேல் தவறு செய்யும் செய்து கொண்டே போகிறான். இறைவனும் கருணையோடு எப்படியாவது இந்த மனிதன் திருந்துவான் என்று பல்வேறு வாய்ப்புகளை தருகிறார். ஆனால் அப்படி எல்லாம் திருந்தாமல் அதிக துன்பம் வரும் பொழுது ஏதாவது ஒரு நிலையிலே மெல்ல உணரத் தொடங்குகிறான். அப்படி உணரும் பொழுது அவன் சேர்த்த பாவங்கள் அவனைப் பாடாய் படுத்தத் துவங்குகிறது. எனவே தொடர்ந்து புண்ணிய செயலை செய்வதும் (புண்ணியம் என்றால் நிறைய செல்வம் இருந்தால் தான் செய்ய முடியும். தனத்தை வாரி வாரி வழங்கினால்தான் புண்ணியம் என்று எண்ண வேண்டாம்) தனம் உள்ளவர்கள் தனத்தை வைத்து புண்ணியம் செய்யட்டும். தனம் இல்லாதவர்கள் உடல் உழைப்பால் பிறருக்கு நன்மையை செய்து அதன் மூலம் புண்ணியம் சேர்க்கட்டும்.

உடலாலும் பிறருக்கு உழைத்து நன்மையை செய்ய முடியாதவர்கள் வார்த்தைகளில் இதம் இதமாக நல்ல சுகமாக ஆறுதலாக பிறரிடம் பேசிப் பேசி அனைவரையும் மனமார குளிர வைத்து அதன் மூலம் புண்ணியம் சேர்த்து கொள்ளட்டும். எனவே மனிதனாக பிறவி எடுத்தவன் இந்த உலக வாழ்விற்காக ஏதாவது ஒரு பணியை செய்தாக வேண்டும். அந்தப் பணியில் கூடுமானவரை நேர்மையை கடைபிடிக்க வேண்டும். தன் கடமையை தவறாது செய்ய வேண்டும். தன்னையும் தன்னை சேர்ந்தவர்களையும் காப்பாற்ற வேண்டும். அதன் பிறகுதான் அவன் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். எனவே இவற்றை எல்லாம் செய்து கொண்டே ஒருவன் நேர்மையாக வாழ்ந்து கொண்டே நீதியை தவறாமல் பின்பற்றி கொண்டே இறைவனை 100/100 அவன் அறிந்த வடிவத்தில் அவனுக்கு எப்படி இறைவன் இப்படிப்பட்டவர் இந்த வடிவில் இருக்கிறார் என்று போதிக்கப்பட்டு இருக்கிறதோ அந்த வடிவிலேயே இறைவனை நம்பி நல்லவனாக வாழ்ந்தால் வாழ்க்கை என்பது தொடர்ந்து அவனுக்கு அதிக சிக்கல் இல்லாமல் இருக்கும். ஆனால் வெறும் புறத்தே உள்ள மாயையிலே சிக்கி காண்பதெல்லாம் காட்சி காண்பதெல்லாம் வேண்டும் என்ற நோக்கில் அவன் பயணப்பட்டால் மிகவும் கடினம்தான் அவனுக்குத் தொடர்ந்து வரும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 295

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

ஒன்றுமில்லாத நிலைத்து இல்லாத சில காலம் இருந்து அழிந்து போகக் கூடிய உலகியல் வாழ்க்கைக்காகவே தன் முயற்சியையும் உழைப்பையும் செலவு செய்ய துணியும் மனிதன் இப்படி எதையும் புரிந்து கொள்ள முடியாத நிலையில் ஒன்று இருக்கிறது என்று வெறும் நம்பிக்கையின் அடிப்படையிலே அந்த நம்பிக்கையோடு மட்டும் அதை நோக்கி என்றால் அவனால் செல்ல முடியாது என்பது எமக்குத் (அகத்திய மாமுனிவர்) தெரியும். ஆனால் இதை எப்படி புரிந்து கொள்வது என்றால் வெறும் உலகியல் வாழ்க்கையோடு அல்லாமல் அதனைத் தாண்டி இறை தேடல் என்கிற உணர்வும் ஒரு மனிதனுக்கு இருந்தால் அடிப்படையிலே சிறு பொறி போல் இருந்தால் அதனை எம்போன்ற (அகத்திய மாமுனிவர்) ஞானிகளும் மகான்களும் ஊதி ஊதி மிகப்பெரிய அக்னிப்பிழம்பாக மாற்றி விடலாம். ஆனால் அடிப்படையிலேயே அந்த பொறி இல்லையென்றால் பொறி என்றால் அந்த ஆன்மிகத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்கின்ற உணர்வை தரக்கூடிய புண்ணியம் இல்லையென்றால் இறைவனே நேரில் வந்தாலும் அந்த மனிதனை புரிந்து கொள்ள வைப்பது கடினம்.

ஆதியில் குறிப்பிட்டதைப் போல இரண்டு வகையாக இதனை நோக்க வேண்டும். ஒன்று உலகில் சார்ந்த வெற்றிகள் இரண்டாவது உலகியல் சார்ந்த இன்பங்கள். இவை அனைத்தும் மனிதனால் விரும்பப்படுபவை. எந்த மனிதனும் உலகில் துன்பமாக வாழ விரும்புவதில்லை. சதாசர்வ காலம் இன்பமாக வாழவேண்டும் சாந்தியோடு இருக்க வேண்டும் என்றே மனிதன் விரும்புகிறான். ஆனால் அப்படி எல்லாம் எல்லோருக்கும் வாழ்க்கை அமைந்து விடுவதில்லை. பெரும்பாலான மனிதர்கள் பொருளாதார சிக்கலில் நெருக்கடியில் இருக்கிறார்கள். இன்னும் சிலர் தேக நலம் குன்றி அதனால் துயரமடைகிறார்கள். இன்னும் சிலர் உறவு சிக்கலால் வேதனைப் படுகிறார்கள். இப்படி பலவிதமான பிரச்சனைகளால் மனிதன் சூழப்பட்டு காலகாலம் பெரும்பாலும் ஒன்று போனால் ஒன்று என்று துன்பத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறான். இரண்டு மனிதர்கள் வேண்டுமானால் துன்பம் இல்லாமல் வாழலாம். ஒன்று சித்தம் தெளிந்தவன். இன்னொன்று சித்தம் கலைந்தவன். அதாவது பைத்தியக்காரனுக்கு எந்த விதமான துன்பமும் தெரியாது அல்லது ஞானத்தில் உச்ச நிலையடைந்த தோற்றத்தில் பைத்தியக்காரன் போல் இருக்கின்ற அவனுக்கும் துன்பம் தெரியாது. எனவே இரண்டிற்கும் இடையில் இருந்து வாழுகின்ற மனிதனுக்கு ஏதாவது ஒரு துன்பமென்பது இருந்து கொண்டேதான் இருக்கும். எனவே யாங்கள் (சித்தர்கள்) கூற வருவது யாதென்றால் ஒரு மனிதன் அல்லது உயிர் எதுவாக இருந்தாலும் துன்பமில்லாமல் வாழ வேண்டும் என்று எண்ணுகிறது. நிம்மதியாக வாழ வேண்டும் என்று எண்ணுகிறது. நீடித்த இன்பம் வேண்டும். நிலைத்த நிம்மதி வேண்டும் என்று விரும்பாத மனிதர்களே இல்லை. அதற்கு ஒரே வழி மறந்தும் கனவிலும் பாவத்தை செய்யாமல் இருப்பது.