இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இதுபோல நலம் எண்ணி நலம் உரைத்து நலமே செய்ய என்றும் யாவர் வாழ்விலும் நலமே நடக்கும் என்பதை காலகாலம் எமை நாடும் மாந்தர்களுக்கு (மனிதர்களுக்கு) யாம் இயங்கிக் கொண்டே இருக்கிறோம். ஆயினும் கூட நல்லதை எடுத்து கூறினாலும் எத்தனைதான் கூறினாலும் இதுபோல நலமான எண்ணங்கள் நலமான வாக்குகள் நலமான செயல்பாடுகள் என்பது மனிதரிடம் குறைந்து கொண்டுதான் வருகிறது. இதுபோல் நிலையிலே இரண்டு வகையான கண்ணோட்டங்களை இறைவன் அருளை கொண்டு யாம் இத்தருணம் ஆழி தாண்டி (கடல் தாண்டி) வந்திருக்கும் இந்த சேய்களுக்கு கூறுகிறோம். ஒன்று தேகத்தை பெற்ற மனிதன் அந்த தேகத்திற்குள் இருக்கின்ற ஆன்மாவை புரிந்து கொள்வது என்பது கடினம். கடினம் என்பதற்காகவே புரிந்து கொள்ளவே முயற்சி செய்யாமலிருப்பதும் மடமை. இதுபோல் புரிந்து கொள்ளவும் ஒரு வினைப் பயன் வேண்டும் என்பது உண்மை. வினைப்பயன் ஒத்துழைப்பு தராவிட்டாலும் போராடி இறையை வணங்கி வணங்கி புரிந்து கொள்ள வேண்டும். ஏன் புரிந்து கொள்ள வேண்டும்? எதற்காக புரிந்து கொள்ள வேண்டும்? என்ன அவசியம்? என்று மனித மனம் அடுக்கடுக்காக வினாக்களை எழுப்பும். இறைவன் அருளால் யாங்கள் (சித்தர்கள்) கூற வருவது என்னவென்றால் மனிதனின் மனமும் எண்ணங்களும் பெரும்பாலும் உடலெடுத்து அந்த உடலுக்குள்ளே நீக்கமற ஆன்மா நிரப்பப்பட்டு இறைவனால் படைக்கப்பட்டிருப்பதால் மனிதனால் தான் வேறு தன் உடல் வேறு என்று அத்தனை எளிதாக பிரித்துப் பார்க்க இயலவில்லை.
எதற்காக அப்படி பார்க்க வேண்டும்? என்பது அடுத்ததொரு வினா (எழும்). இருதயம் இயங்குகிறது. எனவே குருதி எல்லா நாளங்களிலும் பாய்கிறது. குருதிதான் மனிதன் இயங்க வேண்டிய சக்தியை தருகிறது. எலும்பு இருக்கிறது. எனவே மனிதனுக்கு ஒரு உறுதியான கட்டமைப்பை அது தருகிறது. நரம்புகள் எல்லா பக்கங்களிலும் செல்கிறது. அது உணர்வுகளை எடுத்து செல்கிறது. சுரப்பிகள் சுரந்து அதற்கு ஏற்றார் போல் மற்ற விஷயங்களைத் தூண்டி விடுகிறது. சிந்தனையை மூளை செயல்படுத்துகிறது. உடலில் இப்படி ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு பணியை செய்ய இவைகள் அனைத்தும் ஒட்டு மொத்தமாக சேர்ந்து மனிதனாகிறான். இவைகளெல்லாம் பழுதடைந்து விட்டால் இவைகளில் மிகப்பெரிய பிணி பீடித்து விட்டால் மனிதனால் முழுமையாக இயங்க முடியவில்லை. சோற்வுற்று படுத்து விடுகிறான் அல்லது முற்றிலும் இறந்து விடுகிறான். இதில் எங்கே இருக்கிறது ஆன்மா? அல்லது உயிர் என்று ஒன்று இருக்கிறதா? இந்த தேகமெங்கும் அப்படி ஏதாவது பரவியிருந்தால் அதை புறக்கண்ணால் பார்க்க முடியாதா? புறக்கண்ணால் பார்க்க முடியாத புற செவியால் உணர முடியாத நாசியால் நுகர முடியாத நாவால் சுவைக்க முடியாத ஒன்றை இருக்கிறது என்று நம்பு என்றால் நான் எப்படி நம்புவேன்? என்பது மனிதனின் வாதம். ஆனால் எல்லாம் வெளிப்படையாக பிற அங்கங்களால் புரிந்து கொள்ளக்கூடிய நிலையில் இருந்தால் விலங்குகளும் ஆன்ம முன்னேற்றம் பெற்று விடலாமே. சில விலங்குகள் பெற்று இருக்கின்றன என்பது விதிவிலக்கு. எனவே அப்படி புரிந்து கொள்வதற்கு மனிதன் ஏராளமான முயற்சிகளையும் உழைப்பையும் மெய்யான மெய்ஞானம் நோக்கி திசை திருப்ப வேண்டும்.
ஒன்று உருவாகிறது என்றாலே பிறகு அது இல்லாமல் போய்விடும் என்ற பொருளும் உண்டு. சைவ சித்தாந்தத்தை நோக்கினால் தத்கர்ய வாதம் என்ற ஒன்று இருக்கிறது. எனவே இறை என்றும் எப்போதும் இருக்கிறது. அதற்கு ஆதியும் அந்தமும் இல்லை. ஆத்மாவும் அப்படித்தான். இன்று நீ அன்று நான் எனவே இந்த தத்துவத்தினுள் ஒரு மனிதன் கால் பதித்துவிட்டால் அவனுக்கு காலம் இல்லை இடம் இல்லை உறவில்லை கர்மா இல்லை வேதனை இல்லை சோதனை இல்லை எதுவும் இல்லை. இப்பொழுது பார்க்கின்ற அனைத்தும் ஒரு மாயத் தோற்றம் என்பது அப்பொழுது புரியும். கேள்விகளே இல்லாத ஒரு நிலை ஏற்படும்.
மனிதர்களிடம் உள்ள குறைகளில் பெரும் குறை என்ன என்றால் பேசிக் கொண்டே இருப்பதுதான். மனிதர்கள் மௌனத்தைக் கடைபிடித்தால் பல கேள்விகளுக்கு பதில் உள்ளேயே தோன்றும். எனவே கூடுமானவரை பேசவேண்டிய நாழிகை தவிர வேறு நாழிகைகளில் மௌனமாக செயல்படுவது பேசினால் அர்த்தம் உள்ளதாகவும் பிறருக்கு ஆனந்தம் தரக்கூடியதாகவும் நல்ல ஆக்கப்பூர்வமான விஷயங்களை மட்டுமே பேச வேண்டும். தேவையில்லாத அரசியல் நிகழ்வுகள் அசுர மனிதர்களைப் பற்றிப் பேசுவது இவையெல்லாம் மனித சக்தியை விரயமாக்கும். எனவே கூடுமானவரை மௌனமாக இருந்தால் சிக்கல்கள் யாருக்கும் எழாது.
கேள்வி: ஒரு அன்பர் வியாபாரம் சம்பந்தமாக கேட்ட கேள்விக்கு குருநாதரின் அருள்வாக்கு :
அன்னை மகாலட்சுமிக்கு உண்டான எல்லா வகையான பூஜைகளையும் இயன்ற போதெல்லாம் ஆலயத்திலோ இல்லத்திலோ செய்து கொள்ளலாம். இது பொதுவாக யாங்கள் (சித்தர்கள்) எம்மை நோக்கி கேட்கப்படும் வினாக்களுக்கு கூறுகின்ற பதில். இன்னொன்று தத்துவார்த்த விளக்கம் என்ன என்றால் ஒரு மாணவன் இருக்கிறான். அவன் ஒரு தேர்வு எழுதி பூர்த்தியடைந்து வந்தவுடன் இந்த இந்த தேர்வுகளிலே இன்ன குறைகள் நிகழ்ந்து விட்டன. எனவே எனக்கு மதிப்பெண் குறைந்து விடும். எனவே மதிப்பெண் கூடுதலாகப் பெற முயற்சி செய்ய வேண்டும் என்று முயற்சி செய்கிறான். அந்த நிலையிலே தேர்வின் மதிப்பெண் பட்டியல் வருகிறது. பார்த்தால் மதிப்பெண் குறைந்து இருக்கிறது. இப்பொழுது இவன் மீண்டும் தேர்வு எழுதி மதிப்பெண் பெற்று வரும் வரையில் இவன் பெற்ற மதிப்பெண் எவ்வளவு? என்று கேட்டால் இவன் எதைக் கூறுவான்? அதிகமாக வரும் என்று தான் எதிர்பார்க்கின்ற மதிப்பெண்ணை கூற முடியுமா? அல்லது குறைந்த அளவு பெற்ற மதிப்பெண்ணை கூற முடியுமா?
இதைத்தான் பூஜைக்கும் புண்ணியத்திற்கு ஒரு மனிதன் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏற்கனவே பிறவிதோறும் பெற்று செய்து அனைத்தையும் நுகர்ந்து அது போக இப்பிறவிக்கு வந்துள்ள மனிதர்கள் ஒன்றை மட்டும்தான் எண்ணி பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டும். அது இல்லையே இது இல்லையே என்று எண்ணுவதை விட பிறவி இறைவன் சித்தர்கள் நவக்கிரகம் கர்மா போன்ற வார்த்தைகளை செவிமடுத்து ஓரளவு அந்த வழியில் வர இறைவன் அனுமதி தந்திருக்கிறார் என்றுதான் பெருமைப்பட்டுக் கொள்ள முடியுமே தவிர இருக்கின்ற இந்த மதிப்பெண்ணுக்கு என்ன உண்டோ அதுதான். இதனையும் மீறி ஒருவன் பூஜைகள் செய்தால் அதற்குண்டான பலன் பின்னால்தான் கிட்டும்.
எல்லோருமே தர்மம் என்பதை தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். நிறைய தனம் இருந்தால்தான் தர்மம் செய்ய முடியும். எங்களுக்கு நிறைய தனத்தைக் கொடுத்தால் தர்மம் செய்ய மாட்டாமோ? என்று வினா எழுப்புகிறார்கள் மாந்தர்கள் (மனிதர்கள்). தனம் இருப்பவன் தனத்தைக் கொடுத்து புண்ணியத்தை சேர்த்துக் கொள்ளட்டும். தனம் இல்லாதவன் பிறருக்கு உடல் உழைப்பைக் கொடுத்து புண்ணியத்தை சேர்த்துக் கொள்ளட்டும். உடலால் உழைக்க முடியவில்லை தனமுமில்லை என்பவர்கள் எண்ணங்களால் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று பிராத்தனை செய்து புண்ணியத்தை சேர்த்துக் கொள்ளட்டும். மனதில் கொள்ள வேண்டும். எக்காலத்திலும் அதிகமதிகம் தனத்தை வைத்துக் கொண்டு இது பிற்காலத்தில் நமக்கு உதவும் நமது வாரிசுகளுக்கு உதவும். நாம் உடல் தளர்ந்து போய் விட்டால் இந்த தனத்தை வைத்துக் கொண்டுதானே வாழ வேண்டும்.
உழைக்கின்ற காலத்திலே நன்றாக உழைத்து சேர்த்துக் கொண்டால்தானே உழைக்க இயலாத காலத்திலே இந்த தனம் நமக்கு உதவும் என்றெல்லாம் மனிதன் குருட்டு வேதாந்தம் பேசி தனத்தை இறுகப் பிடித்துக் கொள்கிறான். உடலே தளர்ந்த பிறகு கையிலே தனம் இருந்தால் அந்த தனத்தை வைத்து ஒரு மனிதனை ஏவினால் அவன் உதவி செய்வான் என்பதற்கு என்ன உத்தரவாதம்? ஆக எந்தெந்த வழியிலெல்லாம் முடியுமோ அந்தந்த வழிகளில் எல்லாம் தனத்தால் புண்ணியத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல் வாக்காலும் செயலாலும் புண்ணியத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். வேண்டுமே சில தனவான்கள் ஆலயம் கட்டுவதற்கு லகரம் (லட்சம்) லகரமாக ஈவான் (கொடுப்பான்). தன்னிடம் வேலை பார்க்கும் ஒர் அடிமைக்கு ஏக தனம் கூட அதிகம் தரமாட்டான். இவன் இறைவனை எண்ணிப் பார்க்கக் கூட இயலாது. இறைவன் இவன் பக்கம் ஒரு போதும் திரும்பப் போவதில்லை உணர வேண்டும். ஒரு மனிதன் தன்னைச் சுற்றி இருப்பவர்களின் கஷ்டங்களை தீர்க்க சக்தி இருந்தும் வசதி இருந்தும் அவ்வாறு செய்யவில்லை என்றால் அவனால் இறையருளைப் பெற இயலாது. ஒருவனுக்கு அதிக செல்வம் ஒருவனுக்கு குறைந்த செல்வம் ஒருவனுக்கு செல்வமற்ற நிலை இவ்வாறு இருப்பதன் காரணம் இறைவனுக்கு எந்த பேதமுமில்லை. அவனவன் செய்த பாவ புண்ணியத்தின் பலன்தான் காரணம்.
புண்ணியத்தின் பலனாக கிடைத்த செல்வத்தை வைத்து மேலும் புண்ணியத்தை சேர்க்காமல் பாவத்தைச் சேர்த்துக் கொண்டால் பிறகு எத்தனை பிறவிகள் எடுத்தாலும் செல்வம் என்பது அவனுக்கு கிட்டாப் பொருளாக போய் விடும். அதை உணர்ந்து பலருக்கு கிடைக்காத வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கிறது. எத்தனையோ மாந்தன் (மனிதன்) நல்ல கல்வி கற்றும் பணியில்லாமல் அலையும் போது நமக்கு நல்ல பணியை இறைவன் தந்திருக்கிறான். அந்தப் பணியை செவ்வனே நேர்மையாக செய்து அதன் மூலம் கிடைக்கும் தனத்தை நமக்கும் பயன்படுத்திக் கொள்வோம். நம்மைச் சார்ந்தவர்களுக்கும் பயன்படுத்துவோம் என்ற எண்ணம் வேண்டும். அதனை விட்டு விட்டு இந்த தனம் எனக்காக இறைவன் தந்தது. நான் உழைத்து ஈட்டியது. இதை எதற்காக பிறருக்கு தர வேண்டும்? அவனவன் தலையெழுத்து விதி அவன் கஷ்டப்பட வேண்டும் என்று இருக்கிறது என்றெல்லாம் எண்ணி ஒருவன் சும்மாயிருந்தால் வாளாயிருந்தால் அவனுக்கு காலப் போக்கில் சேமிப்பு இருக்கும் வரை நல்ல வாய்ப்பு இருக்கும். அதன் பிறகு குறைந்து விடும். எனவே ஒரு மனிதன் இறை வழிபாடு செய்கிறானோ இல்லையோ தன்னுடைய உடலில் உள்ள அணுவில் எல்லாம் தர்ம சிந்தனை பரவும்படி செய்ய வேண்டும். வேண்டுமே தர்மத்தை செய் என்று சொல்லி செய்தால் கூட தர்மத்திற்கு ஒரு களங்கம்தான். ஒரு மனிதன் சுவாசிப்பது போல அன்னம் ஏற்பது போல செயல்களை செய்வது போல தர்மம் என்பது இயல்பாக இருக்க வேண்டும்.
ஆதியந்த பராபரத்தின் திருவை சாட்சி. அன்பான மனோஹரியின் பாதம் சாட்சி. சோதி எனும் சுடர் ஒளியின் திருவடி சாட்சி. சொல்லொண்ணா ரகசியங்கள் அடங்கி நிற்கும் பரம்பொருள் சாட்சி. சாட்சியே மெய் சாட்சியே மூலம்தானப்பா. சாட்சிக்குத் தெரியாது இங்கு எக்காட்சியும் கிடையாதப்பா. சாற்றுங்கால் சாட்சியறியா காட்சி ஏதேனும் உண்டா? என்றால் ஏதும் இல்லை. காட்சிக்கும் தெரியும் எது மெய்யான மனசாட்சி என்று. சாட்சிக்கும் சாட்சியாய் நின்று காத்து அருளுகின்ற அந்த மெய் சாட்சியின் காட்சிதனை காண வேண்டும் என்பதையே மெய் நோக்கமாகக் கொள்ள வேண்டும். மாந்தரினம் (மனித இனம்) அதை விட்டு விட்டு தனம் தேடி அலைவதும் அதுபோல வாழ்வதும் அது வாழ்க்கையே மெய் என இருப்பதும்தான் கவலைக்குரிய சூழல் அப்பா. மற்றுமொரு வினா எழக்கூடும். இந்த நில உலகிலே மாந்தன் (மனிதன்) தனம் இல்லாமல் எப்படி வாழ்வது? அதுபோல வினாக்கள் கால காலம் இருப்பதுதான். மாந்தர்கள் (மனிதர்கள்) நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். தனத்தை தேடாதே விட்டுவிடு என்று நாங்கள் (சித்தர்கள்) கூறவில்லை. அழிகின்ற அந்த தனத்தை சேர்க்கிறேன் என்று பாவத்தை சேர்த்துக் கொள்ள வேண்டாம் என்றுதான் யாம் கூறுகிறோம்.
தனம் சேர்க்கிறேன் என்று எதாவது வழியிலே தனம் சேர்ந்தால் போதும் என்று பாவத்தை சேர்த்துக் கொண்டால் பிறகு எதற்காக அந்த தனத்தை சேர்த்தானோ அந்த நோக்கம் நிறைவேறாமல் போய்விடும் என்பதே மெய்யாகும். ஆகுமப்பா ஒவ்வொரு மனிதனும் எம்மை நாடுகிறானோ இல்லையோ எம்மை நம்புகிறானோ இல்லையோ எத்தனையோ பிரச்சினைகளை சிக்கல்களை எதிர்கொள்கிறான். உறவு சிக்கல் பண சிக்கல் ருண (கடன்) சிக்கல் பிணி சிக்கல் தச வழி (தொழில் வழி) சிக்கல்கள் பிற மனிதர்களோடு தொடர்பு கொள்ளும் பொழுது ஏற்படும் சிக்கல்கள் என்று இவ்வாறு மாந்தன் வாழ்வில் சிக்கல்களே நிறைந்துள்ளன. காரணம் மிகுந்த புண்ணியத்தை சத்தியத்தை பொறுமையை தர்மத்தை பெருந்தன்மையை எவன் ஒருவன் கடைபிடிக்கிறானோ அவனுக்கு வாழ்க்கை வசப்படும். அனைத்தும் எளிதாகும். நினைத்தது உடனே பலிதமாகும். அவன் தனவானோ ஏழையோ நிம்மதியான வாழ்க்கை வாழ்வான். இல்லையென்றால் எந்தெந்த வழிகளில் எல்லாம் அந்த மனிதன் குற்றங்களை செய்தானோ பாவத்தை செய்தானோ அந்தந்த வழிகளில் எல்லாம் நிம்மதி குறைவதற்கான வழிகள் உண்டாகும். ஆகுமே எத்தனைதான் ஞானிகள் நேரிலே தோன்றி எத்தனைதான் உபதேசம் செய்தாலும் கூட மாந்தன் (மனிதன்) செவியில் (காதில்) இவையெல்லாம் ஏறாது என்பது எமக்கு நன்றாகத் தெரியும். சுருக்கமாக சொல்லப் போனால் ஆலயங்கள் சென்றாலும் செல்லா விட்டாலும் அபிஷேக ஆராதனைகள் செய்தாலும் செய்யா விட்டாலும் யாகங்கள் செய்தாலும் செய்யா விட்டாலும் எவன் ஒருவன் சத்தியத்தையும் தர்மத்தையும் விடாப்பிடியாகப் பிடித்துக் கொள்கிறானோ அவனைத் தேடி இறை வரும் என்பது மெய்யாகுமப்பா.
ஒரு மகானின் வழிகாட்டுதல் இருந்தாலும் ஏன்? ஆண்டவனே அருகில் இருந்தாலும் விதி தன் கடமையை செய்து கொண்டே இருக்கும். விதி தன் கடமையை செய்து கொண்டே இருக்கட்டும். மனிதன் தன் கடமையை மனம் சோர்ந்து விடாமல் செய்து கொண்டே இருந்திட வேண்டும். கடமை என்றால் வெறும் லோகாய கடமை மட்டுமல்ல. பாவ புண்ணியம் என்ற கர்மக் கணக்கிலே பாவக் கணக்கு அதிகமாக பெற்றதனால் குழப்பமும் தெளிவுமாக வாழக்கூடிய நிலைமை கொண்ட மனிதர்கள் பாவங்களை குறைக்க எல்லா வழிகளையும் அன்றாடம் முயற்சி செய்திட வேண்டும். அது பிணியாக வாட்டி குறையலாம். அது கடினமென்றால் முன்னதாகவே கூடுமானவரை சிந்தித்து தேகத்தை பராமரிப்பது போல ஏழைப் பிணியாளர்களுக்கு இயன்ற உதவிகளை செய்தும் கூடுமானவரை பிணி அவஸ்தையை குறைக்க முயற்சி செய்யலாம். பிறர் பொருட்டு பிரார்த்தனை செய்து அதன் மூலம் சில பாவங்களை குறைக்கலாம். இப்படி ஒவ்வொரு முறையிலும் மனிதன் எல்லாவகையான தர்மங்களையும் எதிர்பார்ப்பு என்ற நிலை கடந்து செய்ய கட்டாயம் பாவவினைகள் குறையும். பாவ வினைகளின் அளவு குறைய குறையவே மனிதனுக்கு நல்விதமான இறை ஞானத் தெளிவு ஏற்படும். இது வருகிறது அல்லது வந்து கொண்டிருக்கிறது என்பதை மனிதன் எவ்வாறு புரிந்து கொள்வது? என்றால் விதவிதமான அளவு கோல் மனிதப் பிறவியை பொறுத்து இருக்கிறது என்றாலும்கூட மீண்டும் பாவங்கள் செய்யத் தோன்றாத ஒரு நிலையும் அப்படி தவிர்க்க முடியாமல் செய்து விட்டால் பாடாய் படுத்துகின்ற நிலையும் அதனையும் தாண்டி மனமும் எண்ணங்களும் எப்பொழுதும் காற்றை விட லேசான எடையற்ற நிலையில் இருப்பதுபோல் தோன்றும்.
எது நிகழ்ந்தாலும் அதனால் மனம் பாதிக்கப்படாமல் ஒரு மூன்றாவது மனிதனுக்கு நிகழும் பொழுது பார்வையாளனாக இருந்து பார்க்கின்ற சராசரி மனிதனைப்போல தன்னுடைய தேகத்தையும் தன்னுடைய தேகம் எடுத்த பிறகு நடக்கின்ற வாழ்க்கை நிகழ்வுகளையும் பார்க்கின்ற நிலை ஏற்படும். எனவே இறை ஞானத்தெளிவு வராத வரையில் மனிதனுக்குள் எல்லாவகையான அனாச்சாரங்களும் இருக்கத்தான் செய்யும். அன்றாடம் அமைதியாக அமர்ந்து செய்கின்ற பிரார்த்தனையினாலும் செய்கின்ற முறையான சுவாசப் பயிற்சியினாலும் அகவைக்கு ஏற்றவாறு செய்கின்ற தேக நலத்திற்கு ஏற்றவாறு செய்கின்ற முறையான யோகப் பயிற்சியினாலும் அமைதியாக வாழ்கின்ற வாழ்க்கை முறையினாலும் கட்டாயம் பாவ வினைகள் குறைக்கின்ற வழிமுறைகள் இறையருளால் ஒவ்வொரு மனிதனுக்கும் சுட்டிக்காட்டப்படலாம். அதனை உறுதியாக பிடித்துக் கொண்டு மேலே ஏறுவது மாந்தர்களின் கடமையாகும்.
இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் நலமான வாழ்வு நல்விதமாய் அமைந்திட நலமான வழி முறைகளையெல்லாம் நாள் நாளும் மாந்தர்கள் கடைபிடிக்க வேண்டியது கட்டாயம்தான். இயம்பிடுவோம் எத்தனைதான் ஒரு மனிதனுக்கு விதி அவன் வாழ்விற்கு எதிராக இருந்தாலும் அவன் மதியை ஆக்கிரமித்து அவனுக்கு தவறான வழிகளைக் காட்டினாலும் மீண்டும் மீண்டும் சரணாகதி பக்தியாலும் அல்லது தன்னுடைய மனச்சான்றின் வழிகாட்டுதல் படியும் ஒரு மனிதன் சரியான வழிமுறைகளை பின்பற்ற முயற்சி செய்திட வேண்டும். இறைவனின் கருணையாலே விதி வழி ஒருவன் தவறு செய்ய வேண்டியிருக்கிறது. எனவே இதற்கு விதிதான் பொறுப்பு அல்லது எல்லாம் வல்ல இறைவன் பொறுப்பு என்றெல்லாம் மனிதர்கள் எண்ணி விடக்கூடாது. ஒன்று எல்லாம் விதி என்ற நிலைக்கு வந்து விட்டால் ஒரு விதி தவறு செய்யத் தூண்டுகிறது. அது விதியின் குற்றமே என்று கூறும் பொழுது அப்படியொரு தவறை செய்து அதன் விளைவாக கடுமையான தண்டனையையும் அந்த விதிதான் தருகிறது என்று ஏற்றுக் கொள்ளக் கூடிய மனோபாவம் வந்துவிட வேண்டும். இறைவனின் கருணையாலே விதி குறித்தும் கர்மவினைகள் குறித்தும் மகான்கள் கூறுவது எப்பொழுதும் மனிதர்களை அச்சப்படுத்த அல்ல. விழிப்புணர்வோடு வாழ்ந்திட வேண்டும் என்பதற்காகத்தான்.
ஆத்மா சிறைப்பட்டுள்ள கூடான தேகத்தை நன்றாக பராமரித்து வருதலும் அப்படி பராமரிக்காமல் விட்டுவிட்டு கடுமையான பிணி தாக்கும் பொழுது விதிதான் என்று கூறுவதும் மனிதர்களின் இயல்புதான். விதிதான் நாங்கள் மறுக்கவில்லை. விதி வழியாக ஒரு மனிதனுக்கு கடுமையான பிணி வரும் காலத்தில் வரட்டும். அவன் எத்தனைதான் சாத்வீக உணவுகளை உண்டாலும் எத்தனைதான் தேகப்பயிற்சிகளை செய்தாலும் எத்தனைதான் பிராணாயாமம் யோகாசனங்களை செய்தாலும் ஒரு கால கட்டத்திற்கு பிறகு தேகம் கடுமையான பிணியால் பாதிக்கப்பட வேண்டும் என்ற விதி இருக்குமாயின் பாதிக்கப்பட்டே ஆகும். அதல்ல பிரச்சனை. அப்படி பாதிக்கப்பட வேண்டும் என்பதாலேயே ஒரு மனிதன் தேகப் பயிற்சி செய்யாமலோ அல்லது தேகத்தை முறையாக பராமரிக்காமல் விட்டுவிட வேண்டும் என்பது பொருளல்ல. விதி வழியாக நடப்பது நடந்து விட்டுப் போகட்டும். அதே சமயம் இறைவனை எண்ணி நேரிய வழியில் ஒரு மனிதன் தன் கடமைகளையும் ஆற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.
மகான்கள் கூறுவது பல்வேறு தருணங்களில் குழப்பமாக இருப்பதுபோல் மனிதர்களுக்கு தோன்றும். எல்லாம் விதி. அதன் வழியாக வாழ்ந்து விட்டுப்போ என்பதுபோல் சில சமயம் மகான்கள் கூறுகிறார்கள். சில சமயம் விதிக்கு எதிராக கூறுகிறார்கள் அல்லது விதிக்கு எதிராக முயற்சி செய்யுமாறு கூறுகிறார்களே? என்றால் என்ன பொருள். இரண்டுமே மெய்யிலும் மெய். அதே சமயம் சரியான பக்குவமும் புரிதலும் இல்லையென்றால் இது போன்ற கர்ம ஞான விஷயங்களை ஒரு மனிதனுக்கு குழந்தை கையில் கிட்டிய ஆயுதம் போல் ஆகிவிடும். எனவே சரியான புரிதலை ஒரு மனிதன் புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். அந்த சரியான புரிதலும் தெளிவான ஞானமும் பாவங்கள் இருக்கும் வரை ஒரு மனிதனுக்கு அத்தனை எளிதாக சித்திக்காது. சித்திக்காது என்றாலும் தக்கவர்கள் கூறுகின்ற வழிமுறைகளை அவன் பின்பற்றத்தான் வேண்டும். ஆனால் அவனுடைய தெளிவற்ற மனம் தெளிவான சிந்தனையை என்றுமே ஏற்றுக் கொள்வதில்லை. தான் எண்ணுவதும் தான் நினைப்பதும் தனக்கு போதிக்கப்பட்ட விஷயங்கள் மட்டுமே மெய் என்று எண்ணுவதோடு புறத்தே இருந்து வருகின்ற விஷய ஞானத்தைக் கூட தன்னுடைய நம்பிக்கையின் அடிப்படையிலே மட்டும்தான் மனிதன் ஏற்கவும் மறுக்கவும் முற்படுகிறான்.
கேள்வி : சனியும் செவ்வாயும் ஒன்றாக இருந்தாலோ அல்லது சப்தம பார்வையான ஏழாம் பார்வையாக இருந்தால் வரும் பிரச்சனைகளை சரி செய்து கொள்ளுவது எப்படி?
இறைவன் கருணையாலே ஒரு ஜாதகத்தைப் பார்த்த உடனேயே கிரகங்கள் எல்லாம் எதிர்மறையாக இருக்கிறது. நல்ல பலன்களை விட தீய பலன்கள்தான் நடக்கிறது என்றால் அந்த கிரகங்களைப் பார்த்தாலே மனிதன் அஞ்சுகிறான். இது எப்படி இருக்கிறது? என்றால் ஒரு மனிதன் வழுக்கி விழுந்து விடுகிறான் அடிபடுகிறது. எலும்பு முறிந்து விடுகிறது. இவனுக்கு சிகிச்சை தர வேண்டி மருத்துவன் விழி காணா ஔி பிம்பம் (எக்ஸ்ரே) எடுத்து பார்க்கிறான். அதிலே மிகவும் பலமாக அடிபட்டு எலும்பு விலகியும் பிசகியும் உடைந்தும் இருப்பது தெரிகிறது. அதைக் காட்டினால் பாதிக்கப்பட்ட மனிதனும் அவன் குடும்பத்தினரும் இந்த பிம்பத்தை எடுத்ததால்தானே இந்த விளைவு? இதை ஏன் எடுத்தோம்? இதை எடுக்காமல் இருந்திருந்தால் நிம்மதியாக இருந்திருக்கலாமே? என்று கூறினால் எப்படி இருக்குமோ அப்படிதான் ஜாதகத்தைப் பார்த்து ஒருவன் அச்சப்படுவதும். எனவே எல்லா கிரகங்களும் நேர்மையான அதிகாரிகள் என்று வைத்துக் கொண்டால் அந்தந்த மனிதனின் கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை நுகர்வதற்கு அந்த கிரகங்களுக்கு இறைவன் அதிகாரங்களை தந்திருக்கிறார். இதனைப் பார்த்து மனிதன் என்ன புரிந்து கொள்ள வேண்டும்?. துன்பம் அதிகமாக இருக்கும் தருணங்களிலே இந்த பாவம் கழிகிறது என்று எண்ணி அமைதியான முறையிலே அதனை ஏற்றுக் கொள்கின்ற பக்குவத்தை எப்பொழுதுமே அந்த நிலையை அடைவதற்கு முயற்சி செய்ய வேண்டும். அது என்ன கிரகமாக இருந்தாலும் மனிதனுக்கு வேண்டுமானால் கிரகம் சுபமாகவும் சுபத்திற்கு மாறாகவும் தெரியலாம். ஆனால் எல்லா கிரகங்களுமே எப்பொழுதுமே சுபத்தன்மை கொண்டவை தான்.
அந்த வகையிலே இன்னவன் கூறியது போல் இந்த கிரகம் இப்படியிருந்தால் தோஷம் அந்த கிரகம் அங்கு இருந்தால் தோஷம் என்பதெல்லாம் ஒரு வகையிலே ஜாதகக் குறிப்புக்காகக் கூறப்பட்டாலும் அது எதனை சுட்டிக்காட்டுகிறது? உடம்பிலே இன்ன வியாதி இருக்கிறது என்றால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதற்கு ஏற்ற மருந்தை உண்ண வேண்டும். அதற்கு ஆதரவான உணவை உண்ண வேண்டும். அதற்கு எதிரான உணவை தவிர்க்க வேண்டும் என்கிற ஒரு உணர்வு வருகிறதல்லவா? அதைப் போலத்தான் இந்த ஜாதகப் பலனைப் பார்த்து இப்படியிப்படி கிரகங்கள் இருந்தால் இன்னின்ன வகையான வழிபாடுகள் செய்து இன்ன வகையான தர்மங்களை செய்து தற்காத்துக் கொள்ளக்கூடிய ஒரு முறையை ஒரு மனிதன் வளர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர வெறும் அச்சத்தாலும் குழப்பத்தாலும் ஒரு மனிதன் அப்படியே சோர்ந்து விடக்கூடாது. யாம் (அகத்திய மாமுனிவர்) அடிக்கடி கூறுவது தான். தர்மகாரியங்களில் எவனுக்கு இயல்பாக நாட்டம் இருக்கிறதோ அவன் இன்னும் அதிகப்படுத்திக் கொள்வதும் அறவே நாட்டமில்லாதவன் சிறிதளவாவது தர்ம குணத்தை வளர்த்துக் கொண்டால் கட்டாயம் நவகிரக தோஷங்கள் ஒரு மனிதனை பெருமளவு பாதிக்காது.
கேள்வி: பித்ரு பூஜை செய்ய முடியாத சூழலில் என்ன செய்வது? காயத்ரி மந்திரங்களை பெண்கள் சொல்லலாமா?
இறைவன் கருணையாலே இதற்கு பலமுறை வாக்கைக் கூறியிருக்கிறோம். ஆன்மீகத்தில் யார் வேண்டுமானாலும் ஆன்மீகத்தில் சென்று இறை வழிபாட்டில் ஈடுபடலாம். மனமொன்றி யார் வேண்டுமானாலும் எந்த மந்திரமும் கூறலாம். இதிலே ஆண் பெண் என்கிற பாகுபாடு ஏதுமில்லை. இதுபோல் முன்னொர்களுக்கு செய்ய வேண்டிய பூஜைகளையும் வேறு சிறப்பு வழிபாடுகளையும் முன்னோர்கள் தொடர்பான தர்ம காரியங்களையும் ஒருவன் செய்துதான் ஆக வேண்டும். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அதே சமயம் முறையான பூஜை செய்ய இயலாதவர்கள் மானசீக பூஜை செய்து இயன்ற தர்ம காரியங்களில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இது ஒருபுறமிருக்க வீட்டிலே வாழ்கின்ற முதிர்ந்த பெரியவர்களை அவமானப்படுத்தி வேதனைப் படுத்திவிட்டு அவர்கள் இறந்த பிறகு பூஜை செய்வதால் எந்த பலனுமில்லை. வாழும் பொழுதும் அவர்கள் எப்படி நடந்து கொண்டாலும் மதிக்க வேண்டும் போற்ற வேண்டும். அதே சமயம் அவர்கள் இந்த உலகை விட்டு சென்ற பிறகும் குறைந்த பட்சம் மாதம் ஒரு தினமாவது குறிப்பாக நிறைமதி (பௌர்ணமி) காலத்திலாவது அவர்கள் நினைவாக தர்ம காரியங்களை செய்வதும் சிறிய சிறிய பூஜைகளை செய்வதுமாக இருக்க வேண்டும். கால அவகாசம் இல்லை என்று மனிதன் கூறுகிறான். ஒரு வாதத்திற்காக ஒப்புக் கொள்ளலாம். ஆனால் உலகியல் வாழ்வை எதிர் கொள்ள வேண்டிய மனிதன் எத்தனையோ இடங்களில் காத்திருக்கிறான். அலுவலகத்தில் பயண இடங்களில் இன்னும் பல்வேறு இடங்களில் அவன் காலத்தை வியம் (விரயம்) செய்கிறான். ஆனால் ஒரு தினம் ஒதுக்கி முன்னொர்களுக்கோ அல்லது வேறு வழிபாட்டிற்கோ கால அவகாசத்தை ஒதுக்க அவனுக்கு காலம் இல்லை என்கிறான். காலமில்லை என்பதை விட மனதிலே ஈடுபாடு இல்லை என்பதுதான் மெய்யான நிலையாகும்.
கேள்வி: மனிதன் வாழும் பொழுதே சில விருப்பங்களை ஆசைகளை இறைவனிடம் தெரிவிக்கிறான். அதனால் தன் விருப்பத்திற்கேற்ப பூமியில் பிறக்கிறானா?
அதிக புண்ணியம் செய்த ஆத்மாக்களுக்கு வேண்டுமானால் சில வாய்ப்புகளை இறைவன் தரலாம். ஆனால் புண்ணியம் மிகக் குறைவாகவும் பாவம் அதிகமாகவும் உள்ள அதாவது மனித பிறவி எடுக்கும் அளவிற்கு மட்டுமே புண்ணியம் இருந்து வேறு புண்ணியம் இல்லாத ஆத்மாக்களுக்கு எந்த வாய்ப்பையும் இறைவன் தருவதில்லை.
அகத்திய மாமுனிவர் உறுதி படக்கூறும் உண்மைச் சம்பவம். பல நூற்றாண்டுகளுக்கு முன் நடந்தவை:
நம் தமிழகத்திலிருந்து ஒரு குடும்பம் காசிக்குச் சென்று ஏதோ ஒரு காரணத்தால் அங்கேயே தங்க நேரிடுகிறது. அது அந்தண குலம் என்பதால் வேதம் ஓதுவதும் குழந்தைகளுக்கு வித்தை போதிப்பதுமாக அந்தக் குடும்பத் தலைவர் இருக்கிறார். கால ஓட்டத்தில் அந்தக் குடும்பத் தலைவி இறந்து விடுகிறார். தன் ஒரே மகளை செல்லமாக வளர்ப்பதோடு நிறைய சாஸ்திரங்களையும் அப்பெண்ணுக்கு தந்தையானவர் கற்றுத் தருகிறார். மகளும் வளர்கிறாள். மகள் வளர வளர தந்தைக்கு ஒரு கவலை. நாமோ ஒரு எளிய வாழ்க்கை வாழ்கிறோம். இவளுக்கு ஒரு திருமணத்தை செய்து விட்டால் நிம்மதியாக இருக்கலாமே என்று. ஆனால் மகளோ பிடிவாதமாக அப்பா நான் இறை சேவைக்கே என்னை அர்ப்பணிக்கப் போகிறேன். எனக்குத் திருமணம் வேண்டாம் என்று உறுதிபடக் கூறி விட அக்கம் பக்கம் உள்ளவர்களும் அறிந்தவர்களும் கூட அம்மா நீ பெண். தனியாக வாழ இயலாது. ஒரு ஆணைத் திருமணம் செய்துதான் ஆக வேண்டும் என்று எத்தனையோ அறிவுரைகள் கூறினாலும் காசி விஸ்வநாதர் மீது ஆணை என்னை தொந்தரவு செய்யாதீர்கள் என்று கூறி ஒதுங்கி விடுகிறாள். தந்தையும் எவ்வளவோ சொல்லிப் பார்த்து பிறகு வேறு வழியில்லை என்பதால் தன்னிடம் இருக்கக் கூடிய நில புலன்களை எல்லாம் விற்று அம்மா ஒரு வேளை நான் இறந்து போய் விட்டாலும் இந்த செல்வத்தைக் கொண்டு பிறரை நாடாமல் கையேந்தாமல் வாழ்ந்து கொள் என்று ஏற்பாடு செய்து ஒரு பெரிய இல்லத்தையும் வாங்கித் தந்து விட்டு சில காலங்களில் இறந்தும் விடுகிறார். தந்தை எனக்கு சில விஷயங்களை போதித்தார் அவற்றை செயல்படுத்தினால் என்ன? என்று மகளுக்கு ஒரு ஆசை. எனவே பல ஊர்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு இலவசமாக தன் இல்லத்திலே தங்க இடம் தருவதும் உணவு தருவதும் என்று ஒரு அறப் பணியைத் துவங்க காலம் செல்லச் செல்ல இப்படிப்பட்ட அறப்பணிகளை ஒரு பெண் செய்கிறார் என்று அறிந்து பலர் மருத்துவ உதவி கல்வி உதவி வேண்டும் என்று கேட்க இவளும் செய்து கொண்டே வருகிறாள்.
இறைவனின் திருவுள்ளம் இந்தப் பெண்ணை சோதிக்க எண்ணியது. அந்தக் காசி மாநகரம் முழுவதும் இவள் புகழ் பரவத் தொடங்கியது. அனைத்து செல்வங்களையும் தந்து தந்து ஒரு கட்டத்தில் வறுமை இவளை சூழ்ந்து கொண்டது. இப்பொழுதும் பலரும் வந்து உதவிகள் கேட்க வேறு வழியில்லை அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் சிறு தொகைகளை கடன் வாங்கி தர்மம் செய்யத் துவங்குகிறாள். ஒரு கட்டத்திலே அவர்களும் இவளுக்குக் கடன் தர மறுத்து விடுகிறார்கள். அது மட்டும் அல்லாமல் முன்னர் நாங்கள் அளித்த கடன்களைக் கொடு என்று கேட்கவும் துவங்கி விடுகிறார்கள். இரவில் படுத்தால் இவளுக்கு உறக்கம் வரவில்லை. சிறு பெண் என்பதால் அச்சமும் ஆட்கொண்டு விட்டது. இந்த வேதனையோடு காசி விஸ்வநாதரை வணங்கி எந்த ஜென்மத்தில் நான் செய்த பாவமோ இப்படிக் கடனாக என்னை இடர் படுத்துகிறது. இறைவா நான் செய்தது சரியோ? தவறோ? தெரியவில்லை. ஆனால் தர்மம் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தோடு நான் இருந்ததால் என் சக்திக்கு மீறி தர்மம் செய்து விட்டேன். ஊரைச் சுற்றி கடன் வாங்கி விட்டேன். எல்லோரும் கடனை திரும்பக் கேட்கிறார்கள். என்னால் கொடுக்க முடியவில்லை. அவர்கள் கேட்பது தவறு என்று நான் கூறவில்லை. அந்த கடன்களை திருப்பிக் கொடுக்கும் சக்தியை கொடு என்றுதான் கேட்கிறேன் என்று மனம் உருகி இறைவனை வணங்கி வேண்டுகிறாள்.
ஒர நாள் ஒரு பழுத்த மகான் இவளைத் தேடி வருகிறார். மகளே கவலையை விடு. இந்தக் காசி மாநகரத்திலே மிகப் பெரிய தனவான் ஒருவர் இருக்கிறார். அவரைச் சென்று பார். உனக்கு உதவி கிடைக்கும் என்று அந்த மகான் கூறுகிறார். எனக்கு அவரை அறிமுகம் இல்லை. நான் சென்று கேட்டால் தருவாரா? அல்லது மறுத்து விடுவாரா? என்று அச்சம் இவளுக்கு ஏற்படுகிறது. என்றாலும் துறவி கூறியதால் அன்று மாலை அந்த தனவான் இல்லத்திற்குச் செல்கிறாள். அந்த செல்வந்தன் இந்தப் பெண்ணைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறான். ஆனால் நேரில் பார்த்தது இல்லை. இருந்தாலும் கூட மிகப் பெரிய ஞான நிலையில் இருப்பவள் என்று கேள்விப்பட்டதால் அவளை உள்ளே அழைத்து அமர வைக்கிறார். அவரைச் சுற்றி ஊர் பெரியவர்கள் பலர் அமர்ந்திருக்கும் நிலையில் பெண்ணே உனக்கு என்ன வேண்டும்? எதற்காக என்னைப் பார்க்க வந்திருக்கிறாய்? என்று செல்வந்தன் கேட்க எதற்காக என்னைப் பார்க்க வந்திருக்கிறாய்? என்று செல்வந்தன் கேட்க இவள் தயங்கி தயங்கி தனக்கு ஏற்பட்டுள்ள கடன் மற்ற பிரச்சனைகளைப் பற்றிக் கூறி அக்கால கணக்கின்படி ஐந்து லட்சம் கடன் ஆகிவிட்டது. பலரிடம் கடன் வாங்கியதால் எல்லோரும் இடர் படுத்துகிறார்கள். எனவே நீங்கள் ஐந்து லட்சம் தந்தால் காசி விஸ்வநாதர் சாட்சியாக எப்படியாவது சிறு சிறு பணிகளை செய்து தங்களிடம் பட்ட கடனை அடைத்து விடுவேன். நீங்களோ மிகப்பெரிய செல்வந்தர். ஒரு துறவி தான் என்னை இங்கு அனுப்பினார். என்று தயங்கி தயங்கி கூறுகிறாள்.
அந்த செல்வந்தர் யோசிக்கிறார். இவள் மிகப்பெரிய புண்ணியவதி என்று தெரிகிறது. ஆனால் இப்பொழுது இவளிடம் எதுவும் இல்லை. ஐந்து லட்சம் கேட்கிறாள். சுற்றிலும் ஊர் பெரியவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். தர முடியாது என்றால் இவள் மனம் வேதனைப்படும். நம்மைப் பற்றி ஊர் தவறாக நினைக்கும். எனவே நாகரீகமாக இதிலே இருந்து வெளியே வர வேண்டும் என்று எண்ணி அந்த செல்வந்தர் மிக சாமார்த்தியமாகப் பேசுகிறார். பெண்ணே நான் கூறுவதை நீ தவறாக எண்ணக்கூடாது. உன் தந்தை ஓரளவு செல்வத்தை உனக்கு சேர்த்து வைத்தார். நீ அந்த செல்வத்தை வைத்து நன்றாக வாழ்ந்து இருக்கலாம். ஆனால் அதை விட்டுவிட்டு ஆங்காங்கே ஏரிகளை அமைப்பதும் நீர்த் தடங்களை அமைப்பதும் கல்விச் சாலைகளை கட்டுவதும் ஆகிய தர்ம காரியங்களை செய்தாய். பாராட்டுகிறேன். ஆனால் உனக்கென்று கொஞ்சம் செல்வத்தை வைத்துக் கொள்ள வேண்டாமா? சரி உன் செல்வத்தை தர்மம் செய்தாய். ஆனால் எந்த தைரியத்தில் கடன் வாங்கி தர்மம் செய்தாய்? கடன் வாங்கும் முன் என்னைக் கேட்டாயா? சரி நீ செய்தது எல்லாம் நியாயம் என்றாலும் இப்படி தர்மம் செய்த நீயே நடு வீதிக்கு வந்து விட்டாய். எப்படி உன்னால் என்னிடம் வாங்கிய கடனை திருப்பித் தர முடியும்? அடுத்ததாக நான் கடன் கொடுத்தால் அதற்கு ஈடாக ஏதாவது ஒரு பொருள் வேண்டும். அதற்கு உன்னிடம் ஏதாவது இருக்கிறதா? உன்னிடம் எதுவுமில்லை என்று நீ கூறுகிறாய். எதை நம்பி நீ கேட்கின்ற அந்த தொகையை நான் தர முடியும்? அடமானம் வைக்க உன்னிடம் என்ன இருக்கிறது? என்று அந்த செல்வந்தர் கேட்கிறார்.
இந்தப் பெண் இறைவனை எண்ணியபடி அய்யா நீங்கள் கூறுவது உண்மைதான். ஏதோ ஒரு ஆர்வத்தில் செய்து விட்டேன். அடமானம் வைக்க என்னிடம் எதுவுமில்லை. உங்களிடம் கோடி கோடியாக செல்வம் இருக்கிறது என்று ஊர் மக்கள் சொல்கிறார்கள். அதில் ஒரு சிறு பகுதியைத்தான் கேட்கிறேன். காசி விஸ்வநாதர் மீது ஆணை. எப்படியாவது சிறுக சிறுக கடனை அடைத்து விடுகிறேன். உதவி செய்யுங்கள் என்று கேட்கிறாள். மன்னித்து விடு பெண்ணே அடமானம் இல்லாமல் நான் எதுவும் தருவதற்கு இல்லை என்று செல்வந்தர் கூற அந்தப் பெண் சற்று யோசித்து விட்டு அய்யா உங்களுக்கே தெரியும். உங்கள் வாயாலேயே ஒப்புக் கொண்டுள்ளீர்கள். நானும் என் தந்தையும் ஆங்காங்கே பல்வேறு அறச் செயல்கள் செய்திருக்கிறோம் என்று. தங்களின் மாளிகை முன்பு இருக்கக் கூடிய ஊர் பொதுக் குளம் கூட அடியேன் கட்டியதுதான். இந்த நீரை தினமும் ஆயிரக்கணக்கான மனிதர்கள் பயன்படுத்துகிறார்கள். ஏன்? விலங்குகளும் இந்த நீரைப் பருகுகின்றன. இவையெல்லாம் புண்ணியம் என்று நீங்கள் அறிவீர்கள் அல்லவா? என்றாலும் இந்த பொதுக் குளத்தை எதையும் எண்ணி அடியேன் அமைக்கவில்லை. இருப்பினும் எனக்கு உடன்பாடில்லை என்றாலும் நீங்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தத் திருக்குளத்திலே நாளைக் காலை சூரிய உதயத்தில் இருந்து யாரெல்லாம் நீர் பருகுகிறார்களோ அதனால் அடியேனுக்கு வரக்கூடிய புண்ணிய பலன் முழுவதையும் உங்களிடம் அடகு வைக்கிறேன். ஐந்து லட்சத்திற்கு உண்டான அசல் வட்டிக்கு சமமான புண்ணியம் எப்பொழுது உங்களிடம் வந்து சேருகிறதோ அப்பொழுது அடியேன் தங்களிடம் பட்ட கடன் தீர்ந்ததாக வைத்துக் கொள்ளலாமா? அல்லது அதனையும் தாண்டி நான் தர வேண்டுமென்றாலும் தருகிறேன் என்று கேட்க அந்த செல்வந்தர் சிரித்துக் கொண்டே பெண்ணே ஏதாவது ஒரு பொருளைத்தான் அடமானம் வைக்க முடியும். புண்ணிய பாவங்களை அல்ல. ஒரு பேச்சுக்கு நீ கூறியபடி நீரைப் பருகுவதால் ஏற்படும் புண்ணியம் என் கணக்குக்கு வருவதாக வைத்துக் கொண்டாலும் புண்ணியம் அரூபமானது. கண்ணுக்குத் தெரியாதது. உன் கணக்கில் இருந்து புண்ணியம் என் கணக்கிற்கு வந்து விட்டது என்பதை நான் எப்படி தெரிந்து கொள்வது? என்று கேட்கிறார்.
அய்யா அது மிக சுலபம். கட்டாயம் நீங்கள் புரிந்து கொள்ளும் படியான ஒரு ஏற்பாட்டை செய்கிறேன். என்னுடன் வாருங்கள் என்று அந்த செல்வந்தரின் வீட்டிற்கு எதிரில் உள்ள குளக்கரைக்கு அழைத்துச் செல்கிறாள். அங்கே குளக்கரையில் கருங்கல்லால் ஆன சிவ லிங்கத்தைக் காட்டி எம்பிரானே அடியேன் செய்த அறக்காரியங்களை சொல்லிக் காட்டக் கூடாது. என்றாலும் கடனிலிருந்து தப்பிக்க இந்த அபவாதத்தை செய்கிறேன். தேவரீர் இந்த திருக்குளத்தின் அடியில் இருக்க வேண்டும். எப்பொழுது அடியேன் கணக்கில் இருந்து அசலும் வட்டியுமான புண்ணியம் இந்த செல்வந்தரின் கணக்கிற்கு சென்று சேர்கிறதோ அப்பொழுது நீங்கள் மேலே வந்து மிதக்க வேண்டும் என்று கூறி பல முறை பஞ்சாட்சரம் கூறி வணங்கி அடியாட்களின் துணை கொண்டு அந்த சிவலிங்கத்தை கடினப்பட்டுத் தூக்கி திருக்குளத்தின் நடுவே இடுகிறாள். சிவலிங்கம் நீரின் அடியிலே சென்று அமர்ந்து விட்டது. பிறகு அந்த செல்வந்தரைப் பார்த்து அய்யா நீரின் உள்ளே இருப்பது வெறும் கல் என்று எண்ணாதீர்கள். சாட்சத் சிவபெருமான்தான் உள்ளே இருக்கிறார். நாளைக் காலை சூரிய உதயத்தில் ஆறு மணியில் இருந்து கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். யாரெல்லாம் நீரைப் பயன் படுத்துவார்களோ எத்தனை காலம் ஆகுமோ? எனக்குத் தெரியாது. ஆனால் எப்பொழுது அடியேன் கணக்கில் இருந்து தங்கள் கடன் தொகைக்கு சமமான புண்ணியம் வந்து சேருகிறதோ அப்பொழுதே இந்த சிவலிங்கம் மிதக்கும் என்று கூறுகிறாள்.
செல்வந்தரோ நகைத்து அம்மா சற்று முன் நீ கூறியபடி புண்ணியத்தை அடகு வைப்பதைக் கூட என்னால் ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் கருங்கல் மிதக்கும் என்பது சாத்தியமில்லையே. இதை எப்படி நான் நம்புவது? யாராவது கேட்டால் கூட நகைப்பார்களே. இல்லை. நம்புங்கள் சிவபெருமான் மீது ஆணை. கட்டாயம் சிவலிங்கம் மிதக்கும். இதைக் கல் என்று பார்க்காதீர்கள். பகவான் என்று பாருங்கள் என்று அந்தப் பெண் உறுதியாகக் கூறுகிறாள். செல்வந்தர் யோசிக்கிறார். இவளோ புண்ணியவதி. நம்மைச் சுற்றி ஊர் மக்கள் வேறு இருக்கிறார்கள். வாதம் செய்து பணம் தர மாட்டேன் என்றால் நம் புகழுக்கு களங்கம் வந்துவிடும். மேலும் இவள் கேட்பது மிகச் சிறிய தொகை. அது மட்டுமல்லாது இவள் கூறுவது மெய்யா? பொய்யா? என்பதை சோதிக்க நமக்கு இது நல்ல தருணம். ஒரு வேளை சிவலிங்கம் மிதந்தால் இவள் புண்ணியவதி என்பதை நானும் ஊரும் உணர வாய்ப்பு கிடைக்கும். மாறாக நடந்தால் இவள் செய்வது வீண் வேலை என்பதை நிரூபிக்க ஏதுவாக இருக்கும். என்று எண்ணி அவள் கேட்ட தொகையைத் தருகிறார். அதைப் பெற்றுக் கொண்டு வீடு சென்று யார் யாருக்கு தர வேண்டுமோ அவற்றை எல்லாம் திருப்பி தந்து விட்டு இறைவா உன்னை நம்பித்தான் இந்த பெரும் தொகையை கடனாக வாங்கி இருக்கிறேன். என்னைக் கைவிட்டு விடாதே என்று வேண்டிக் கொண்டு உறங்கச் செல்கிறாள்.
இங்கே செல்வந்தரோ அவசரப்பட்டு விட்டோமோ? ஏமாந்து தனத்தைக் கொடுத்து விட்டோமோ? என்று உறக்கம் வராமல் எப்பொழுது விடியும்? என்று பார்த்து விடிந்ததும் சில வேலையாட்களை ஏற்பாடு செய்து நீங்கள் குளக்கரையில் ஆங்காங்கே அமர்ந்து கொண்டு கையில் ஒரு ஏடும் எழுத்தாணியும் வைத்துக் கொண்டு ஒரு தினம் எத்தனை பேர் நீர் அருந்துகிறார்கள்? எத்தனை பேர் நீரை எடுத்துச் செல்கிறார்கள்? மறுகரையில் எத்தனை விலங்குகள் நீரைப் பருகுகின்றன? என்று குறித்துக் கொண்டே வாருங்கள். எத்தனை காலம் ஆகும்? என்று தெரியவில்லை. ஆனால் தினமும் நீங்கள் கணக்கு எடுக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்து விட்டு இவரும் வீட்டின் மேல் விதானத்தில் அமர்ந்து கொண்டு குளக்கரையை பார்வையிடத் துவங்குகிறார். காலை மணி ஆறு ஆகிறது. காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமான காளை ஒன்று குளத்து நீரை அருந்தி விட்டு மேலே செல்கிறது. அவ்வளவுதான். குபுகுபுவென சாம்பிராணி குங்கும மணத்தோடு பகவான் (சிவலிங்கம்) மேலே வந்து மிதக்கிறார். அவ்வளவுதான். அந்த செல்வந்தருக்கு உடம்பெல்லாம் நடுங்கி விட்டது. ஒரு மாடு நீர் அருந்திய புண்ணியமே ஐந்து லட்சத்திற்கு சமம் என்றால் அந்த புண்ணியவதி செய்த அறப்பணிக்கு முன்னால் என் செல்வம் அத்தனையும் வீண் என்பதை புரிந்து கொண்டு என் கண்களைத் திறந்து விட்டாய் மகளே செல்வம்தான் நிலையானது என்று இருந்தேன். அப்படியல்ல என்பதை பரிபூரணமாக உணர்ந்து கொண்டேன். எம்பிரான் மிதக்கிறார். எல்லோரும் வந்து பாருங்கள் என்று கூற ஊரே சென்று பார்த்தது. அதன் பிறகு தன் செல்வம் முழுவதையும் அந்தப் பெண்ணிடம் தந்து தானும் கடைவரை(கடைசி வரை) தர்மம் செய்து வாழ்ந்தார். இது 300 400 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த உண்மை சம்பவம்.