ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 284

கேள்வி: மேலைத் தவத்தளவே ஆகும் தான் பெற்ற செல்வம் என்னும் ஔவையாரின் வாக்கைப்பற்றிக் கூறி அனுக்ரஹம் செய்ய வேண்டும்:

செல்வம் என்றால் பொருள் செல்வத்தையல்ல. அருள் செல்வத்தையே ஔவைப் பிராட்டி கூறி அருளியிருக்கிறாள். முற்பிறவியில் செய்த தவம் அல்லது நல்ல சத்காரியங்களின் விளைவாகத்தான் அடுத்தடுத்த பிறவிகளில் நல்ல ஆன்மீக வாழ்க்கை இயல்பாகவே ஒருவனுக்கு அமைகிறது. எனவே தான் ஒரு மனிதனின் பார்வைக்கு வேண்டுமானால் ஒரு பிறவி என்பது நீண்ட காலம் போல் தெரியும். ஆனால் மகான்களுக்கும் இறைவனுக்கும் ஒருவனின் பிறவி என்பது ஒரு கணப்பொழுது போல் தெரியும். எனவே தான் வாழுகின்ற பொழுதும் இந்த வாழ்க்கை தாண்டி அடுத்த பிறவிக்கும் ஒரு மனிதன் இப்பொழுதிலிருந்தே நல்ல விஷயங்களை பேசியும் செய்தும் பழகி வந்தால் இந்தப் பிறவியும் இனி அடுத்து வரும் பிறவியும் அருள் வாழ்க்கைக்கு செல்வதற்குண்டான சூழலை ஏற்படுத்தும். கடினப்பட்டு ஏற்படுத்திக் கொள்வது என்பது ஒரு வகை. இயல்பாகவே நல்ல குடும்பத்தில் சாத்வீக குடும்பத்தில் தர்மத்தில் நாட்டமுள்ள குடும்பத்தில் சத்தியத்தில் விருப்பமுள்ள குடும்பத்தில் ஒரு குழந்தை பிறந்தால் அது இயல்பாகவே நல்லவனாக வளர்வது எத்தனை எளிதோ அத்தனை ஒரு எளிதான நிலை ஏற்படும். ஆனால் பாவங்கள் அதிகமாக சேர்த்து விட்ட ஆத்மாவிற்கு இது போன்ற வாய்ப்பு அந்த பாவங்கள் தீரும் வரை இயல்பாக அமைவது என்பது கடினம். எனவேதான் அந்த அருட்செல்வத்திற்கு வேண்டிய தவத்தை அதாவது தவம் என்றால் கண்ணை மூடி செய்வது மட்டுமல்ல. வாழுகின்ற வாழ்க்கை முறையில் கடுமையான நிலையிலும் சத்தியத்தைக் கடைப்பிடிக்கின்ற அந்த நிலையைத்தான் தவம் என்று கூறுவது உண்டு. எனவே அப்படி வாழ்ந்தால் அது அருட்செல்வத்தை சேர்த்துத் தரும் என்பதே பொருளாகும்.

கேள்வி: விருத்தாச்சலத்தில் (கடலூர் மாவட்டம்) அவ்வைப் பிராட்டி மூத்தோனை வணங்கி கயிலையை அடைந்ததைப் பற்றியும் அமிர்த சஞ்சீவினி பற்றியும் கூறி அனுக்ரஹம் செய்ய வேண்டும்:

கோவில் உள்ள ஊர் விருத்தாச்சலம். கடலூர் மாவட்டம். திருக்கோவில் விருத்தகிரீஸ்வரர் ஆலயம்

மிக மிக உயர்வான சிறப்பான ஆலயம். தடை நீங்க பிள்ளையை (வினாயகர்) சென்று வணங்க ஏற்றதொரு ஆலயமப்பா. இதோடு இங்கும் பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்கு வழி இருக்கிறது. பிற அற்புத விஷயங்களை தக்க காலத்தில் கூறுவோம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 283

கேள்வி: அன்பே சிவம் விளக்கம்:

இறை அன்பு உருவமாக இருக்கிறது. அல்லது உலகத்தின் ஒட்டு மொத்த கருணையும் அன்பும் சேர்ந்தால் அதுதான் இறை என்பதன் பொருள்தான் இது. ஆனால் மனிதர்களுக்கு பல்வேறு துன்பங்கள் வரும் சமயம் இறைவன் அன்பு மயமானவன் இறைவன் கருணை கொண்டவன் என்றால் ஏற்க முடியவில்லையே? எனக்கு ஏன் இத்தனை இடர் வருகிறது? என்ற ஐயம் (சந்தேகம்) இருக்கிறது. அவனவன் வினைகளை உணர்ந்து கொண்டால் கர்மாக்களை புரிந்து கொள்ள முயற்சி செய்தால் பிறவிகளை புரிந்து கொள்ள முயற்சி செய்தால் அப்பொழுது புரியும் இறைவன் அன்பு மயமானவன் என்று. பல பிறவிகளில் சேர்த்த பாவங்களையெல்லாம் சிறிது சிறிதாகத்தான் நுகர இறைவன் அனுமதிக்கிறார் என்றாலே அதுவே இறைவனின் கருணையாகும். ஒட்டு மொத்தமாக ஒரே கணத்தில் ஒரு மனிதனின் பாவங்களையெல்லாம் அவன் நுகர வேண்டும் என்றால் அதை விட கடுமையான தண்டனை உலகினில் வேறு எதுவும் இல்லை. சில காலம் அரவணைப்பு சில காலம் சந்தோஷம் சில காலம் துயரம் என்று மாறி மாறித்தான் இறைவனும் தருகிறார். மனிதர்கள் எத்தனை கொடுமைகள் செய்தாலும் இந்தப் பூமியை எத்தனை பாழ் படுத்தினாலும் எத்தனை இடர் படுத்தினாலும் எத்தனை கீழ்த்தரமாக நடந்து கொண்டாலும் மீண்டும் அரவணைத்துக் கொள்கிறாரே? எனவே அந்த இறை அல்லது சிவம் அன்பு என்பதில் இரு வேறு கருத்து ஏதும் இல்லையப்பா.

கேள்வி: சரணாகதி தத்துவத்தை விளக்கிக் கூற வேண்டும்:

விடம் (விஷம்) அருந்து என்று குருவோ அல்லது குரு வடிவமாக இறை வந்து கூறினால் இது விடமாயிற்றே? (விஷமாயிற்றே) இது அருந்தினால் உயிர் போய் விடுமே? விடத்தை (விஷத்தை) யாராவது அருந்துவார்களா? அவன்தான் கூறினான் என்றால் இவனுக்கு எங்கே போயிற்று புத்தி? அவன் தான் குரு என்று கூறினால் இவனுக்கு இறைவன் புத்தியைத் தந்திருக்கிறானே? மறுத்திருக்க வேண்டாமா? என்றெல்லாம் அறிவு கூறினாலும் கூறியது அல்லது குருவாக நம்பிய அந்த உன்னதமான ஆத்மா கூறியது என்பதால் அதனை அப்படியே எந்தவிதமான காரண காரியங்கள் பாராமல் எவன் ஏற்கிறானோ அதுதான் பரிபூரண சரணாகதி தத்துவத்தை நோக்கி செல்கின்ற நிலையாகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 282

கேள்வி: திருமண தடை இருக்கும் பெண்கள் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

இறைவன் அருளாலே பல்வேறு ஆண்களுக்கு திருமண தோஷம் இருப்பதால் திருமணத் தடை ஏற்பட்டிருக்கிறது. பல்வேறு பெண்களுக்கு திருமண தோஷம் இருப்பதால் திருமணத் தடை ஏற்பட்டிருக்கிறது என்றெல்லாம் வருத்தம் கொள்கிறார்கள். இதை தோஷம் என்று நாங்களும் கூறினாலும் கூட வேடிக்கையாகக் கூறுகிறோம் இதை ஒரு வகையான வரம் என்றுதான் அனைவரும் நினைத்துக் கொள்ள வேண்டும். ஏற்கனவே திருமணம் ஆகியிருக்கக் கூடிய ஆண்களையும் பெண்களையும் பார்த்து திருமணம் செய்து கொள்ளலாமா? என்று ஒரு முறைக்குப் பலமுறை கேட்டு விட்டு இதுபோல் பரிகாரங்களை செய்வது திருமண ஆகாத இளைஞர்களுக்கு ஏற்புடையதாக இருக்கும். இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இதுபோல் திருமண நிகழ்வு குறித்து யாம் கூற வருவது யாதென்றால் சிலருக்கு மிக மிக சிறிய வயதிலேயே மணம் நிகழ்ந்து விடுகிறது. சிலருக்கோ எல்லா வகையான தக்க சூழல் இருந்தும் திருமணம் என்பது தடைபட்டுக் கொண்டே செல்கிறது. பொதுவாக ஒவ்வொரு விதமான ஜாதகத்திலும் திருமணத் தடைக்கு விதவிதமான தோஷங்கள் காரணமாக இருந்தாலும் ஒட்டு மொத்தமாக அதனை களத்திர தோஷம் என்று ஜோதிடம் கூறுகிறது.

இதுபோல நிலையிலே பொதுவாக இது குறித்து இந்தத் தருணத்திலே பரிகாரங்களை தெரிந்து கொள்ள விரும்பும் சேய்கள் (பிள்ளைகள்) நவக்ரக தம்பதியரை நாடிச்சென்று இயன்றவரை நல்ல முறையில் வழிபாடு செய்வதும் வழிபாடு என்றால் என்ன? என்று அடுத்து ஒரு வினா வரும் சமயத்திலே வாய்ப்பு உள்ளவர்கள் மனம் உள்ளவர்கள் உயர்வான பொருள்களைக் கொண்டு அபிஷேகமோ நல்ல நறுமணமிக்க மலர் ஆரங்களை சாற்றி வழிபாடு செய்வதும் வாய்ப்பு உள்ளவர்கள் மனம் உள்ளவர்கள் ஏழை ஆண் பெண்களுக்கு திருமண உதவி செய்வதும் ஆலயங்களில் தெய்வத் திருமண விழா வைபவம் நிகழும் பொழுது அதில் இயன்ற அளவு பங்கெடுத்துக் கொள்வதும் இந்தத் திருமண தோஷம் நிவர்த்தி ஆவதற்கு வழியாகும். இவையெல்லாம் கடினம் என்று எண்ணக் கூடியவர்கள் அருகில் உள்ள ஆலயம் சென்று குறைந்த பட்சம் ஏக மண்டலம் (48 தினங்கள்) ஒரு பொழுது விரதத்தோடு சப்த வதன தீபம் அதாவது ஏழு முக நெய் தீபம் இறைவனுக்கோ இறைவிக்கோ பொதுவாகவே கூறுகிறோம். சிவன் ஆலயமாக இருந்தாலும் மகாவிஷ்ணு ஆலயமாக இருந்தாலும் மகாலட்சுமி ஆலயமாக இருந்தாலும் அம்பாளாக இருந்தாலும் எந்த இறை வடிவமாக இருந்தாலும் பரிபூரண சரணாகதியோடு சப்த வதன நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதும் தீபம் ஏற்ற இயலாத நிலையிலே தக்கதொரு மலர் ஆரம் (மாலை) தெய்வ ரூபத்திலே திருவடி(பாதம்) வரை அந்த மலர் ஆரம் இருக்கும் வண்ணம் தொடர்ந்து சுக்ர வாரம் (வெள்ளிக்கிழமை) அல்லது மங்கள வாரம் (செவ்வாய்க்கிழமை) அல்லது அவரவர்கள் ஜென்ம நட்சத்திரம் வருகின்ற பொழுது இது எதுவும் நடைமுறையில் சாத்தியம் இல்லாதவர்கள் இயன்ற பொழுது சென்று வழிபட்டு வர கட்டாயம் திருமண தோஷம் அகன்று நல்விதமாய் திருமணம் நடப்பதற்கு வாய்ப்பாக அமையும்.

தொழில் தோஷமோ திருமண தோஷமோ அல்லது திருமணம் நடந்து கருத்து வேறுபாட்டால் பிரிந்து இருக்கக்கூடிய தம்பதியரோ இதுபோல் வழிபாட்டை செய்யலாம். இந்த தருணத்திலே யாங்கள் (சித்தர்கள்) மீண்டும் மீண்டும் கூறுகிறோம். கேட்கின்ற மனிதர்களுக்கு இது அயர்வைத் தரலாம். சலிப்பைத் தரலாம். இருந்தாலும் கூற வேண்டியது எமது கடமை என்பதால் கூறுகிறோம். ஒரு மனிதனின் துன்பங்களுக்கு அவன் மட்டுமே காரணம் என்பதை ஒவ்வொரு மனிதனும் உணர வேண்டும். பிறர் மூலம் ஒரு துன்பம் வருவது போல் தோன்றினாலும் அதற்கு மூல காரணம் என்றோ செய்த வினை என்பதை மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதனைப் புரிந்து கொண்ட பிறகு கூடுமானவரை மனம் வாக்கு (சொல்) காயம் (உடல்) இவற்றால் பிறருக்கு எந்தவிதத் துன்பமும் செய்யாமல் வாழப் பழக வேண்டும். வெறும் வார்த்தைதானே என்று வார்த்தையால் பேசி யாரையும் துன்புறுத்தாமல் கூடுமானரை பேசினால் இறை நாமம் அல்லது சத்செயல் அல்லது நாம சங்கீர்த்தனம் அல்லது ஏற்புடைய சொல் என்று வைத்துக் கொண்டு இயன்றளவு உடல் ரீதியாகத் தொண்டும் வாய்ப்பும் மனமும் உள்ளவர்கள் தனம்தனை இழந்தாவது தர்மத்தையும் சேர்த்துக் கொண்டால் கட்டாயம் எல்லா வகையிலும் வருகின்ற துன்பம் குறையும். ஆனால் இது நான் ஈட்டிய பொருள். நான் எதற்கு பிறருக்குத் தர வேண்டும்? என்ற மனப்பான்மையோடு இருப்பவர்கள் அவன் செய்த பாவம் அவன் வறுமையில் வாடுகிறான். அதில் தலையிட்டு அவன் விதியை நான் ஏன் மாற்ற வேண்டும்? என்று விதண்டாவாதம் செய்பவர்கள் இப்படியே எல்லோருக்கும் எல்லாவற்றையும் இலவசமாகத் தந்தால் அவன் சோம்பி இருக்க மாட்டானா? என்று அறிவு பூர்வமாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு பேசக்கூடியவர்கள் அவரவர்கள் வழியில் செல்லலாம்.

இந்த ஜீவ அருள் ஓலையிலே வாக்கைக் கேட்க வேண்டும் தொடர்ந்து இந்த வழியில் வர வேண்டும் என்றால் யாங்கள் (சித்தர்கள்) கூறுகின்ற வழிமுறை நடைமுறைக்கு ஏற்றதாக இருக்கலாம். சில சமயம் அறிவுக்கு புறம்பு போல் தோன்றலாம். இவற்றையெல்லாம் நினைத்து மனம் குழப்பம் அடையாமல் எமது வழியில் வந்தால் தொடர்ந்து பாவ வினைகளிலிருந்து விடுபட்டு மெல்ல மெல்ல ஒவ்வொரு மனிதனும் எதிர்பார்க்கின்ற நிம்மதி என்பது கிட்டும் இறைவனருளால்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 281

கேள்வி: ஒரு ஆன்மாவிற்கு ஒரு பிறவி ஏற்படும் பொழுது அதன் மொத்த தொகுப்பாக பல கோடி பிறவிகளின் தொகுப்பாக அமையுமா? அல்லது ஒரு குறிப்பிட்ட கர்மாவைக் கழிப்பதற்காக ஒரு பிறவியும் இன்னும் பல பிறவிகளும் வேண்டியிருக்குமா?

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் பிறவிகளின் சூட்சுமம் கர்மாக்களின் சூட்சுமம் ஒரு பிறவியில் ஒரு ஆத்மா நுகருகின்ற கர்மக் கணக்கின் சூட்சுமம் இறை மட்டும் அறிந்த ரகசியமப்பா. இருந்தாலும் இறை நிலைக்கு சமமான ரிஷிகளும் ஞானிகளும் ஓரளவு உணர்ந்தாலும் அது தெய்வீக ரகசியம் என்பதால் பொதுவாக சராசரி மனிதர்கள் அறிவது கடினம். அப்படி அறிய முயற்சி செய்தாலும் குழப்பம்தான் மிஞ்சும். இருந்தாலும் பொதுவாக குறிப்புக்காக கூறுகிறோம். சில ஆத்மாக்கள் ஒரு குறிப்பிட்ட பாவத்தையே கழிப்பதற்கே ஒரு பிறவியல்ல பல்வேறு பல் நூறு பல்லாயிரம் பிறவிகள் எடுக்க நேரிடும். சில ஆத்மாக்கள் பலவிதமான பாவங்களை நுகர்வதற்கு பல நூறு நூறு நூறு பிறவிகள் எடுக்க நேரிடும். இது அந்தந்த தனிப்பட்ட ஆத்மாவின் கர்மக்கணக்கிற்கும் அதை எப்படி அந்த ஆத்மா நுகர வேண்டும்? என்று இறைவன் தீர்மானிக்கிறாரோ அதைப் பொறுத்தும் அமைவதாகும்.

கேள்வி: மாந்தர்களுக்குப் (மனிதர்களுக்கு) புரியும் வண்ணம் அற்புதங்கள் நடத்திக் காட்டுகிறேன் என்று கூறியிருக்கிறீர்கள். அது எப்பொழுது நடக்கும்?

அற்புதம் என்று கூறி அதனை அற்புதமாய் செய்வதைவிட அற்புதம் இது என்று உணரும் வண்ணம் செய்வதே யாங்கள் (சித்தர்கள்) எப்பொழுதுமே விரும்புகிறோம். எனவே ஒன்றை அற்புதமாய் செய்து விட்டோம் என்று நாங்கள் (சித்தர்கள்) அற்பமாய் கூறாமல் நடப்பதெல்லாம் அற்புதம் என்று உணரும் வண்ணம் சேய்களை (பிள்ளைகளை) மாற்றுதே அற்புதமப்பா.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 280

கேள்வி: பைரவர் வழிபாடு கால வைரவர் வழிபாடு ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு இந்த மூன்று வழிபாடுகளையும் ஒரே மாதிரி செய்யலாமா? மேலும் தேய்பிறை அஷ்டமி வளர்பிறை அஷ்டமி இதில் எது உகந்தது?

அம்மாவை வணங்கு. தாயை வணங்கு என்று கூறினால் எல்லாம் ஒன்றுதானப்பா. பைரவர் என்றால் சிவனின் அம்சம்தான். இந்த பைரவருக்கு 64 வடிவங்கள் இருப்பதாக இப்பொழுது மனிதர்கள் எண்ணியிருக்கிறார்கள். 108 க்கும் மேற்பட்ட பைரவர் வடிவங்களும் வழிபாடுகளும் இருந்தது உண்மை. தற்சமயம் சில வைரவ வழிபாடுகள் மட்டும் இந்தப் பூவுலகில் இருக்கிறது. எனவே எந்த பைரவரை உள்ளன்போடு எப்படி வழிபட்டாலும் நன்மைதான். பொதுவாக அஷ்டமியில் லோகாய காரியங்களை செய்யாமல் இறைவனை வணங்குவது தொண்டுகள் ஆற்றுவது மனிதனுக்கு ஏற்றது. அவனுடைய கடுமையான பாவ தோஷங்கள் வெளிப்படக்கூடிய தருணங்களில் அஷ்டமியும் நவமியும் ஒன்று என்பதால்தான் முற்காலத்திலே லோகாய செயலையெல்லாம் செய்ய வேண்டாம் என்று கூறினார்களே தவிர ஏதோ அஷ்டமியும் நவமியும் தீமை பயக்கக்கூடிய தினமாக மனிதன் எண்ணி விடக்கூடாது. ஒரு மனிதனுக்கு சந்திராஷ்டமம் என்றால் அன்றும் அந்த தினங்களில் அவன் இறை வழிபாடும் தர்ம காரியங்களும் தொண்டும் செய்து வருவது ஏற்புடையதாக இருக்கும். இதுபோல் நிலையிலே எந்த காலமாக இருந்தாலும் பைரவரை உள்ளன்போடு வழிபடலாம். அது மட்டுமல்லாது நல்விதமாய் தீப வழிபாடோ மலர் கொண்டு வழிபாடோ அல்லது ஏதும் இயலாதவர்கள் மனமொன்றி பிராத்தனையோ செய்து வரலாம். இதற்கு அஷ்டமி வரை பொறுத்திருக்க வேண்டியதில்லை. அன்றாடமும் வணங்கலாம். அவரவர்கள் வாய்ப்பு போலவும் வணங்கலாம். எல்லா காலத்திலும் இறைவனை வணங்கலாம். இறைவனை வணங்க காலம் தேவையில்லை. அவனவன் உள்ளம் பக்குவம் அடைந்தால் அதே போதும்.

கேள்வி: மதிய உணவை ஒரு சிறந்த யோகிக்கு வழங்கினால் ஒருவருடைய பூர்வ வினை கழிந்து மறு பிறப்பு இல்லாத நிலையை அடைவார்கள் என்ற கருத்து பற்றி:

தொடர்ந்து எல்லோரையும் யோகியாகப் பார்ப்பது ஒன்றுதான் இதற்கு ஏற்ற வழியாகும். எல்லோருக்கும் வழங்கிக் கொண்டே போவதுதான் சிறப்பு அப்பா. குறிப்பாக இன்ன ஆலயம் செல் இன்ன திதியில் செல் இந்த நட்சத்திரத்தில் செல் இந்தக் கூட்டத்திலே மூன்றாவது வரிசையில் நான்காவதாக அமர்ந்திருக்கிறானே அவன்தான் யோகி என்றால் மனிதன் என்ன செய்வான்? அவனை மட்டும் நன்றாக கவனித்து விட்டு வருவான். இது சுயநலம் இல்லையா? எல்லோருக்கும் உதவ வேண்டும். எல்லோருக்கும் இயன்றதை செய்ய வேண்டும். பிறகு அது தன்னால் யோகியின் கரங்களுக்கு சென்று சேரும். யோகியை யாரும் தேட வேண்டாம். மெய்யான அன்பர்களை நாடி யோகி எனப்படுபவன் தன்னால் வருவான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 279

கேள்வி: வேதாத்ரி மகரிஷி தன் வாழ்நாளை அர்ப்பணித்து தவ முறை தியான முறை பயிற்சியை சொல்லிக் கொடுத்திருக்கிறார். அது உயர்வு பெறுமா? அதன் மூலம் இந்த உலகம் அமைதியை நோக்கி நகருமா?

இறைவனின் கருணையாலே இந்த உலகிலே மனிதர்கள் எப்படி வாழ வேண்டும்? எப்படி வாழக் கூடாது? என்பதற்காக இறைவன் பல்வேறு ஞானியர்களையும் மகான்களையும் அவ்வப்பொழுது மனித வடிவிலேயே அனுப்பி வைத்து போதனைகள் செய்து வருகிறார். சில சமயம் நூல்கள் வாயிலாக கூட பல மனிதர்கள் கண்ணில் நல்ல விஷயங்களை படுமாறு இறைவன் செய்வதும் உண்டு. பல மனிதர்களுக்கு இவையெல்லாம் ஓரளவு தெரியத்தான் செய்யும். ஆனால் மனிதன் அறிவு மயமானவன் அல்ல. உணர்வு மயமானவன். அவன் அறிவுக்கு பல நல்ல விஷயங்கள் தெரிந்தாலும் அவன் உணர்வுக்கு எது பிடித்திருக்கிறதோ அதைதான் செய்வான். மனிதனின் உணர்வுகளைத் தூண்டி விட்டாலே இங்கே எல்லா செயல்களையும் செய்யலாம் என்றுதான் பல மனிதர்கள் காரியத்தை சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே உணர்வுகளை கட்டுப்படுத்தி பெரும்பாலான தருணங்களில் நல்லறிவை தெய்வீக அறிவைப் பயன்படுத்த மனிதன் முயற்சி செய்ய வேண்டும். இல்லையென்றால் கட்டாயம் எத்தனை உயர்ந்த போதனையாக இருந்தாலும் எத்தனை நல்ல விஷயமாக இருந்தாலும் அது வெறும் செவியாடலாக மட்டும் இருக்குமே ஒழிய நடைமுறைக்கு வரவே வராது.

பெரும்பாலான மனிதர்களுக்கு இதை செய்யலாம். இதை செய்யக்கூடாது என்பது தெரிந்தாலும் உடனடியான லாபத்திற்கும் தேகம் சார்ந்த உணர்வுக்கும் அடிமைப்பட்டு செய்யக் கூடாத காரியங்களை செய்து கொண்டுதான் இருக்கிறான். செய்ய வேண்டியவற்றை செய்யாமல் தள்ளிப் போடுகிறான். எனவே தனி மனித ஒழுக்கமும் பண்பும் அவன் தன்னைத்தான் சீர் தூக்கிக் கொள்கின்ற முறையும்தான் முக்கியம். அப்படி தன்னைத்தான் திருத்திக் கொண்டால் ஏற்கனவே போதித்த நல்ல போதனைகளே போதும் மனித குலம் உயர. வெறும் உணர்வுகளுக்கு அடிமையாகி வாழுகின்ற மனிதனுக்கு எத்தனை போதனைகளையும் எத்தனை விதமான கருத்துக்களையும் கூறினாலும் அவைகள் அவன் செவியில் ஏறாது. இறைவனே நேரில் வந்து சொன்னாலும் கூட அத்தருணம் கேட்டுவிட்டு பிறகு அவன் மாற்றப் பாதையில்தான் செல்வான். எனவே தன் உடல் சார்ந்த இச்சைகளையெல்லாம் அவன் தன்னிடம் உள்ள அறிவைக் கொண்டு அடக்க முயன்றால்தான் இதிலிருந்து அவன் மேலேற முடியும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 278

கேள்வி: ஐயனே அம்மை நோய் எதனால் ஏற்படுகிறது? மக்கள் மாரியம்மன் உடம்பி்ல் இறங்கி விட்டதாக எண்ணி இதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டால் அன்னையின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்று மருத்துவரிடம் செல்லாமல் வீட்டிலேயே வேப்பிலை சிகிச்சையோடு நிறுத்திக் கொள்கிறார்கள். அதற்கேற்றாற் போல் நான்கைந்து தினங்களில் அம்மை நோய் இறங்கி விடுகிறது. மருத்துவர்களோ இது நோய்க் கிருமிகளால் ஏற்படுகிறது. சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம் என்கின்றனர். இதில் எது உண்மை?

இறைவன் அருளால் இதுபோல் பல்வேறு நோய்களுக்கு மனிதன் பல்வேறு விதமான காரணங்களைக் கற்பித்துக் கொள்கிறான். இது ஒருபுறமிருக்கட்டும். எல்லா நோய்களும் கிருமிகளால் ஏற்படுகின்றன என்பது மனித விஞ்ஞானத்தின் கருத்து. நாங்கள்(சித்தர்கள்) அதை மறுக்கவில்லை. கிருமிகள் ஏன் ஏற்படுகின்றன? என்பதை மனிதன் ஆய்ந்து பார்க்கவேண்டும். எத்தனையோ கிருமிகள் எப்பொழுதுமே சுற்றிக் கொண்டிருக்க அந்த கிருமிகள் ஏன் குறிப்பிட்ட மனிதனை தாக்க வேண்டும்? எனவே மீண்டும் மீண்டும் பாவகர்மா என்ற நிலைக்குதான் நாங்கள் (சித்தர்கள்) வரவேண்டும். இது ஒருபுறமிருக்க தீவிரமான பக்தியிருந்தால் மனதிலே அணுவளவும் கபட எண்ணம் இல்லாமலிருந்தால் நல்ல எண்ணங்களும் சாத்வீக எண்ணங்களும் இருந்தால் தீவிரமான பக்தியோடு நல்ல எண்ணங்களும் சேர இவன் கூறிய நோயை மட்டுமல்ல எந்த நோயையும் மனிதன் விரட்டலாம் மருத்துவ சிகிச்சை இல்லாமல். இப்படி நாங்கள் (சித்தர்கள்) கூறினால் அடுத்ததொரு வினா வரும். அப்படியானால் இருக்கின்ற எல்லா மருத்துவமனைகளையும் இடித்துவிட்டு ஆலயங்களாக கட்டிவிடலாம் அல்லவா? வெறும் பிராத்தனைகள் மூலம் எல்லா நோய்களையும் நீக்கலாம் அல்லவா? என்று. விதி வழியாக நோய் வருவது இருக்கட்டும். மனிதனே தன்னை நன்றாக பராமரிக்க வேண்டும் தன் சுற்றுப்புறத்தை நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வில்லாமல் அவனாகவே வரவழைத்துக் கொள்வது யார் குற்றம்? என்று பார்க்க வேண்டும்.

அடுத்ததாக ஒரு நோய்க்கு சிகிச்சையே செய்யாதே என்று நாங்கள் (சித்தர்கள்) ஒருபொழுதும் கூறமாட்டோம். தெய்வத்தை நம்பு. வேண்டாம் என்று நாங்கள் (சித்தர்கள்) கூறவில்லை. மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வதையும் நாங்கள் தவறு என்று நாங்கள் கூறவில்லை. ஆனால் சிகிச்சை எடுத்தால்தான் ஒரு பாதிப்பு வந்தது என்றோ பிராத்தனையால்தான் பாதிப்பு வந்தது என்ற வார்த்தைதான் நாங்கள் (சித்தர்கள்) ஏற்றுக் கொள்ள மாட்டோம். ஏனென்றால் சிகிச்சை செய்தாலும் அல்லது பிராத்தனை செய்தாலும் ஒரு நோயால் ஒருவனுக்கு பாதிப்பு வந்துதான் ஆகவேண்டும் என்ற விதி இருப்பின் அந்த பாதிப்பு வரத்தான் செய்யும். இதையெல்லாம் தாண்டி இவன் குறிப்பிட்ட நோய் மற்றும் இன்னும் சில நோய்களெல்லாம் இறைவனே மனித உடலில் ஆக்கிரமிப்பு செய்வதாக மனிதன் எண்ணுகிறான். இதை சித்தர்கள் ஒருபொழுதும் ஏற்றுக் கொள்வதில்லை. அது மட்டும்லாமல் இந்த மூடத்தனத்தின் உச்சம் என்னவென்றால் அன்னை இறங்கியிருக்கிறாள். எனவே அது அம்மையாகவே காட்சியளிப்பதாகவே கொள்வோம். ஆனால் அதற்கு சிகிச்சையளித்ததால் அன்னைக்கு கோபம் வந்துவிட்டது என்ற கருத்து மிகவும் ஏற்க முடியாத வாதம்.

கோடானு கோடி உயிர்களை துடிக்க துடிக்க கொல்லும் போது அன்னைக்கு வராத கோபம் அடுத்தவனை வஞ்சித்து ஏமாற்றும் பொழுது அன்னைக்கு வராத கோபம் அடுத்தவன் சொத்தையெல்லாம் ஏமாற்றி பிடுங்கும் பொழுது அன்னைக்கு வராத கோபம் இந்த உலகம் கெட்டுப் போக வேண்டும் என்று எண்ணி எத்தனையோ நச்சுத் தொழிலையெல்லாம் விடமாட்டேன் எனக்கு இதில் லாபம் கிட்டுகிறது. அடுத்த வரும் தலைமுறை எப்படி போனால் எனக்கென்ன? என்று மனிதர்கள் செயல்படும் பொழுது அன்னைக்கு வராத கோபம் தன் பிணி போக வேண்டும் என்று ஒரு மருத்துவ முயற்சி எடுத்தால் மட்டும் வந்து விடப் போகிறதா என்ன? மனிதனுக்கு சந்திக்கின்ற அறிவை பிரம்மதேவன் தந்திருக்கிறாரப்பா. சற்றே சிந்தித்துப் பார்த்தால் நன்றாக இருக்கும். ஒரு நோய்க்கு சிகிச்சை செய்வதும் தவறல்ல பிராத்தனை செய்வதும் தவறல்ல. அவன் விதி எவ்வாறோ அவ்வாறுதான் நடக்கும். அந்த விதியையும் மாற்றத்தான் நாங்கள் (சித்தர்கள்) எப்பொழுதுமே தர்மம் தர்மம் தர்மம் தர்மம் என்று எப்பொழுதுமே கூறிக் கொண்டேயிருக்கிறோம். இதை நன்றாக புரிந்துக் கொள்ள வேண்டும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 277

தர்மத்தின் சிறப்பை உணர்த்தும் காதை (கதை) ஒன்று கூறுங்கள் ஐயனே

எத்தனையோ காதைகளை (கதைகளை) முன்னர் கூறியிருக்கிறோம் அப்பா. கூறியது கூறல் பலருக்கு இகழ்ச்சியாகத்தான் இருக்கிறது. அந்தக் காதை (கதை) முக்கியமல்ல. அதில் உள்ள கருத்துதான் முக்கியம் என்பதற்காக மீண்டும் கூறுகிறோம். இதுவும் முற்காலத்திலே நடந்த நிகழ்வுதான். கொடுப்பதில் அளவு பார்க்காமல் தாராளமாக இருந்தால் அது பிறருக்கு கொடுப்பதல்ல (மறைமுகமாக) தனக்குதானே கொடுப்பது போல என்ற தத்துவத்தை புரிய வைக்கவே இந்த காதையை (கதையை) மீண்டும் நினைவூட்டுகிறோம்.

ஒரு காலத்திலே பல்வேறுவிதமான பணிகளை செய்யக் கூடிய மனிதர்கள் இருக்க அவர்களில் இல்லங்களை பழுதுபார்க்கும் ஒருவன் இருந்தான். ஜாதி பேதங்கள் கடுமையாக இருந்த காலமது. சில நாட்களாக பணியில்லாமல் இருந்த அவன் பக்கத்து ஊருக்கு பணி தேடுவதற்காக புறப்பட்டான். செல்லும் வழியில் ஒரு வனம் (காடு). அந்த வனத்தை கடந்து அவன் போகும் பொழுது மகனே வா என்று அன்பொழுக யாரோ அழைப்பது போல் அவனுக்குத் தோன்றுகிறது. யார் நீ? எனக்கு பயமாக இருக்கிறது. ஓர் உருவத்தையும் இங்கு காண முடியவில்லையே? என்றான் மனிதன். அச்சம் வேண்டாம் மகனே ஒரு காரியத்தின் பொருட்டுதான் உன்னை அழைத்தேன். உன் நீண்ட கால வறுமையும் நீங்கிவிடும் என்றது அக்குரல். யார் என்னிடம் பேசிக் கொண்டிருப்பது? என்றான் மனிதன். நான் வனதேவதை. நான் உன் கண்ணுக்கு தெரியமாட்டேன். ஆனால் நான் சொல்வதை நீ செய்தே ஆக வேண்டும். ஏதும் குழப்பமில்லை. நான் சொல்வதை மட்டும் கேள். சரி சொல் என்றான் மனிதன். இதொ இந்த ஆலயத்தின் வடகிழக்கு மூலையிலே ஒரு அற்புதமான மணம் பரப்பும் பாரிஜாத மரம் இருக்கிறது. அதிலுள்ள மலர்களை பறித்து இங்குள்ள என் ஐயன் முக்கண்ணனுக்கு (சிவபெருமான்) சாற்றி வணங்கிவிட்டு அம்மரத்தின் பக்கத்தில் இத்தனை தூரம் குழி தொண்டு என்று வனதேவதை கூற இவனும் பவ்யமாக அவ்வாறே செய்கிறான். அங்கே ஏராளமான தங்கத் துவர்கள் (துவரம் பருப்பு) இருந்தன. இதை பார்த்தவுடன் அந்த மனிதனுக்கு ஆசை பொங்கி விட்டது. எல்லாவற்றையும் எடுத்து தன்னிடம் உள்ள ஒரு கோணிப்பையிலே போட்டு முடிக்கும் பொழுது வனதேவதை குறுக்கிட்டது. மகனே அவசரப்படாதே. அத்தனையையும் எடுத்துக் கொள்ளாதே. அது உனக்கு ஆபத்தை விளைவிக்கும். அதில் ஒரு சிறிய பங்கை மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை அங்கேயே வைத்துவிடு. நான் காரணமாகத்தான் கூறுகிறேன். முழுவதையும் எடுத்துக் கொள்ள உன் விதி இடம் தரவில்லை என்று வனதேவதை கூற அதெல்லாம் முடியாது. எனக்கென்று காட்டினாய். இப்பொழுது மாற்றிப் பேசினால் என்ன பொருள் முழுவதும் எனக்கே சொந்தம் என்றான் மனிதன். வேண்டாமப்பா பகுதியாவது வைத்துவிடு. முடியாது. வேண்டாம் மகனே கால் பகுதியையாவது மீதம் வை. ஒரு காரணமாகத்தான் கூறுகிறேன” என்றது வனதேவதை. அதெல்லாம் முடியாது என்றான் மனிதன். மீண்டும் வனதேவதை பலமுறை கெஞ்ச என்ன இது? உன் தொல்லை அதிகமாகி விட்டதே? என்று அலுத்துக் கொண்டே நான்கே நான்கு கனகப்பருப்பை மட்டும் மீதம் வைத்து விட்டு மற்றவற்றையெல்லாம் மூடை கட்டி அந்த வனதேவதைக்கு நன்றி கூட சொல்லாமல் வனத்தை (காட்டை) விட்டு வெளியேறுகிறான்.

ஏதாவது பணி கிடைத்தால் அந்த பணியையும் செய்து அதில் வரும் தனத்தையும் பெறலாமே? என்ற பேராசையோடு ஓர் ஊரை அடைகிறான். அந்த ஊரிலே ஒரு பெண்ணின் வீட்டு மேல்விதானம் சிதிலம் அடைந்திருந்தது. ஓடுகள் அலங்கோலமாக இருந்தது. அந்த பெண்மணி இவனிடம். அப்பா என் வீட்டு ஓடுகளை எல்லாம் சரி செய்து தருவாயா? என்று கேட்க அது எனக்கு கை வந்த கலை. செய்து தருகிறேன். அதற்கு எவ்வளவு தனம் தருவீர்கள்? என்று இம்மனிதன் கேட்க அப்பெண்மணி ஒரு தொகையைக் கூற இந்த பெண்மணி குறைவாகத்தான் சொல்கிறாள். என்றாலும் கிடைத்தவரை இலாபம்தானே? என்று எண்ணி மூடையை ஓரமாக வைத்துவிட்டு மேலே ஏற முற்படுகிறான். அந்த மூடையைப் பார்த்த அப்பெண்மணி இது என்னப்பா மூடை? என்று கேட்க அது ஒன்றுமில்லை தாயே என் மனைவி சமையலுக்கு பருப்பு வாங்கி வரும்படி சொன்னாள். சந்தையிலே வாங்கிக் கொண்டு போகிறேன் என்றபடியே மேலேறி ஓடுகளை சரிசெய்யும் பணிகளில் இறங்குகிறான். அப்பெண்மணி வீட்டின் உள்ளே சென்று சமையல் செய்யத் துவங்குகிறாள். அப்போது தான் பருப்பு இல்லை என்று என்பது நினைவிற்கு வருகிறது. உடனடியாக அவளுக்கு ஓர் எண்ணம் தோன்றுகிறது. இதோ இவன்தான் பருப்பு மூடை வைத்திருக்கிறானே? இதிலிருந்து சிறிது எடுத்துக் கொள்வோம். அதற்குரிய தனத்தை மாலையிலே சேர்த்துக் கொடுத்து விடுவோம் என்று முடிவு செய்து அப்பா உன் மூடையிலிருந்து சிறிது பருப்பு எடுத்துக் கொள்ளட்டுமா? என்று கேட்கிறாள். வேலை மும்முரத்தில் இருந்தவனுக்கு இப்பெண்மணி கேட்டது காதில் விழவேயில்லை. சரி பிறகு இவனிடம் சொல்லிக் கொள்ளலாம் என்று மூடையை அந்தப் பெண்மணி திறந்து பார்க்கிறாள். உள்ளே கனக துவரம் பருப்புகள். ஆச்சிரியம் மேலிட அப்பா எத்தனை தங்கம்? என்று எண்ணுகிறாள். வழக்கம் போல் அங்கே அவளுக்கு அசுர புத்தி தலை தூக்குகிறது. துவரம் பருப்பு என்று சொல்லி இவன் நம்மை ஏமாற்றி விட்டானே? என்று எண்ணியவள் சூழ்ச்சியாக அந்த கனக பருப்புகளை எல்லாம் வேறு இடத்தில் பாதுகாப்பாக வைத்துவிட்டு உண்மையான பருப்பை வாங்கிக் கொட்டி மூடையாக மூடி மீண்டும் அதே இடத்திலேயே வைத்து விடுகிறாள்.

அந்த மனிதன் ஓட்டு வேலை முடிந்ததும் கூலியைப் பெற்றுக் கொண்டு மூடையை எடுத்துக் கொண்டு செல்கிறான். திடீரென்று அவனுக்கு ஒரு நப்பாசை. அந்த வனதேவதையின் ஆலயத்திற்கு அருகே வந்தவுடன் அந்த மூடையை திறந்து பார்க்கிறான். உள்ளே எல்லாம் பருப்பாக இருக்கிறது. அவனுக்கு ஒரே அதிர்ச்சி. ஆஹா அந்தப் பெண்மணி நம்மை நன்றாக ஏமாற்றி விட்டாள். திரும்பி சென்று அவளிடம் கேட்பதானால் எந்த ஆதாரத்தை வைத்துக் கேட்பது?. உண்மையையும் சொல்ல முடியாதே? என்று வேதனைப்பட்டு அழத் தொடங்கினான். அப்பொழுது அந்த வனதேவதையின் குரல் கேட்டது. மகனே ஏனப்பா அழுகிறாய்? தாயே கொடுப்பது போல் கொடுத்து மீண்டும் அத்தனையும் பறித்துக் கொண்டாயே? நாங்கள் மனிதர்கள் மோசக்காரர்கள் ஒத்துக் கொள்கிறோம். தேவதை வர்க்கமான நீ இப்படி செய்யலாமா? இது நியாயமா? என்று அம்மனிதன் கேட்க மகனே அதற்குத்தான் முன்னமே சொன்னேன் பகுதியை வைத்து விட்டு மீதத்தை எடுத்துக் கொள் என்று. பிறகு பகுதியிலும் பகுதி வை என்றேன். ஆசை விட்டதா? ஒன்றைத் தெரிந்து கொள். இன்றைய விதிப்படி அந்த பெண்ணுக்குத்தான் இந்த புதையல் போய் சேர வேண்டும். அதுவும் உன் மூலம் போக வேண்டும் என்பதே விதி. என்றாலும் நீ தூக்கி செல்வதற்காக உனக்கு சுமை கூலி தர வேண்டும் என்று நான் விரும்பினேன். அதற்கு உன் விதியில் இடம் இல்லை என்றாலும் என் வார்த்தைகளால் உன் மனதை மாற்றலாம் என்று ஆசைப்பட்டுத்தான் அவ்வாறெல்லாம் கூறினேன். கெஞ்சினேன். ஆனால் விதி உன் மதிக்குள் அமர்ந்து ஆசை எனும் அசுரனைப் புகுத்தி அனைத்தையுமே உனக்கே என்று வைத்துக் கொள்ள செய்தது. அனைத்தும் அந்தப் பெண்மணிக்குதான் போய் சேர வேண்டும் என்பது எனக்கு தெரிந்தாலும் அதை வெளிப்படுத்த இயலாது என்பதே எமது விதி. இப்பொழுது நாலே நாலு வைத்தாயல்லவா? அதை மட்டும் எடுத்துக் கொள். புரிந்துகொள் யாருக்கோ எனும் பொழுது உன் கை சுருங்குகிறது அல்லவா? தரும் பொழுது தாராளமாக கொடுத்தால் அதுவே வேறு வடிவில் உனக்கே மீண்டும் வந்து சேரும் என்று வனதேவதை கூற வேறு வழியில்லாமல் அந்த நாலு பருப்புகளை மட்டும் அவன் எடுத்து சென்றான்.

இந்தக் காதையின் (கதையின்) சம்பவங்களை விட்டுவிட்டு கருத்தை மட்டும் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். பிறருக்கு தரும் பொழுது தாராளமாக இருந்தால் தனக்கு வரும் பொழுதும் அது தாராளமாகவே இருக்கும். எனவே பிறருக்கு தருவதெல்லாம் தனக்குத்தானே மறைமுகமாகத் தருவதுதான் என்ற கருத்துதான் இக்கதையின் மையக்கருத்தாகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 276

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

பரந்துபட்ட உலகமும் இந்த பேரண்டமும் நீக்கமற நிறைந்துள்ள அனைத்தும் பரம் பொருள்தான் என்பதை ஒரு மனிதன் நன்றாக உள்வாங்கி திடமாக நம்பி எல்லாம் அவன் செயல் என்று தன்னை பரிசுத்த மனிதனாக மெல்ல மெல்ல மாற்றிக் கொண்டால் அப்படி மாற்றிக் கொள்கின்ற மனிதனுக்கு அப்படி மாற்றிக் கொண்டு உண்மையாக வாழ வேண்டும் உண்மை வழியில் செல்ல வேண்டும் என்று எண்ணுகின்ற மனிதனுக்கு அவன் எங்கிருந்தாலும் இறைவன் எம்போன்ற மகான்கள் மூலமாகவோ வேறு வழி மூலமாகவோ வழிகாட்டிக் கொண்டேயிருப்பார் அப்பா. அதுபோல் ஆத்மாக்களுக்கு யாங்களும் இறைவனருளால் வழிகாட்டிக் கொண்டிருக்கிறோம். இங்கு (குடிலுக்கு) வந்துதான் அவன் வழிமுறைகளைப் பெற வேண்டும் என்பதல்ல. நாங்கள் எத்தனையோ வழி முறைகளை வைத்திருக்கிறோம். அதில் ஒன்றுதான் ஓலை (ஜீவநாடி) மூலம் பேசுவது. வேளை வரும் பொழுது வேறு வேறு மார்க்கங்களையும் நாங்கள் (சித்தர்கள்) கடைபிடிப்போம். விதியிலே ஒரு மனிதனுக்கு அவன் எத்தனை நல்லவனாக இருந்தாலும் கூட நல்லவனாக இருந்து விட்ட அல்லது இருக்கின்ற காரணத்தினாலேயே இறை தரிசனமோ அல்லது சித்தர்கள் தரிசனமோ கிடைக்க வேண்டும் என்பது இல்லை அல்லது ஓலை (ஜீவநாடி) மூலம்தான் சித்தர்களின் வாக்கை அறிந்து முன்னேற வேண்டும் என்ற நிலையும் இல்லை. வேறு எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன. இதுகுறித்தும் பலமுறை கூறியிருக்கிறோம்.

இதுபோல் நிலையிலே எம்மைப் பொறுத்தவரை இங்கு வருபவர்களுக்கு பலமுறை உரைத்திருக்கிறோம். இதுபோல காலத்திலே பக்தி மார்க்கமும் பரிபூரண சரணாகதி தத்துவமும் அதோடு தக்க ஏழைகளுக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்வதும் அந்த தர்ம குணத்தை எப்படியாவது இறையிடம் போராடி பெற்று இன்னும் கூறப் போனால் மனித அறிவு ஏற்றுக் கொள்ள முடியாத எத்தனையோ விஷயங்கள் நாங்கள் (சித்தர்கள்) கூறினாலும் அதில் உச்சகட்டமாக இங்கு வருபவர்கள் வெளியில் ஏளனம் செய்வது ருணம் (கடன்) பெற்று அறம் செய் என்று நாங்கள் (சித்தர்கள்) கூறுகின்ற கருத்தை அதுவும் எல்லோருக்கும் நாங்கள் (சித்தர்கள்) கூறவில்லை. சிலருக்கு சிலவற்றை மனதிலே வைத்து கூறுகிறோம். அந்த தர்மத்தை எவனொருவன் தன்முனைப்பு இல்லாமல் செய்கிறானோ அவனுக்கு ஏதும் கூற வேண்டியதே இல்லையப்பா. அந்த தர்மத்தை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டு எத்தனை இடர் எதிர்ப்பு சோதனை வேதனை வந்தாலும் நீ தர்மம் செய்தாயே? அவன் உன்னை நன்றாக ஏமாற்றி விட்டான். அவனைப் போன்ற ஏமாற்றுக்காரனுக்கெல்லாம் நீ ஏனப்பா உதவி செய்கிறாய்? என்று இன்னொருவன் வந்து குழப்பத்தை ஏற்படுத்தினாலும்கூட என் கடன் தர்மம் செய்து கிடப்பதே என்று எவன் தொடர்ந்து தர்ம வழியில் வருகிறானோ அவனுக்கு ஏதும் கூற வேண்டாம். இறையே அவனை வழி நடத்தும். அதைதான் நாங்களும் தர்மம் தர்மம் தர்மம் என்று பலருக்கும் பல முறை கூறுகிறோம். ஆனால் கேட்க விடவேண்டுமே அவனவன் கர்மம். இந்த ஜீவ அருள் ஓலை உண்மை. இதில் வாக்குகளைக் கூறுவது சித்தர்கள்தான் என்று நம்பக்கூடிய அனைவருக்குமே இந்த வாக்கு பொருந்துமப்பா.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 275

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

யாம் கூறுகின்ற நங்கையை (பெண்ணை) மணக்க வேண்டும் என்று சிலர் எண்ணலாம். அப்பொழுதுதான் வாழ்க்கை மணக்கும் என்றும் எண்ணலாம். ஆனாலும் கூட விதியில் எது இடம் பெறுகிறதோ அதைதான் எப்பொழுதுமே மனிதன் நுகர இயலும். திருமணம் தொடர்பான கர்ம வினைகள் எத்தனையோ சிக்கலான கர்ம வினைகளைக் கொண்டிருக்கிறது. அது குறித்து ஆண்டாண்டு காலம் பாடம் எடுத்தாலும் கூட மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாத விஷயம் இந்த களத்திர பாவம். எல்லா பாவங்களும் அப்படிதான் என்றாலும் களத்திர பாவம் என்பது மிகவும் நுட்பமானது. அதனால்தான் பல்வேறு தருணங்களிலே பல்வேறு விதமான திருமணங்கள் பொய்த்து போவதும் பல்வேறு திருமணங்கள் புறத் தோற்றத்திற்கு அவர்கள் ஒற்றுமையாக இருப்பது போல் தோன்றினாலும் உள்ளே நிம்மதியாக வாழாமல் இருப்பதுமாக இருக்கிறது. மனிதனின் பெருமளவு கர்மாக்கள் குறைகின்ற இடம் களத்திர பாவம். ஆன்மீகம் என்றாலே தற்சமயம் அது பலவகையான ஆன்மீகமாக மனிதனால் பார்க்கப்படுகிறது. இந்த ஜீவ அருள் ஓலையிலே (ஜீவநாடி) நாங்கள் (சித்தர்கள்) சுட்டிக் காட்டுகின்ற வழியானது மிக மிக ஞானியர் என்று மனிதர்களால் மதிக்கப்படுகின்ற ஞானியர்களாலேயே ஏற்றுக் கொள்ளப்படாத வழி முறையாகத்தான் இருக்கும். நீ கற்ற கற்கின்ற ஆன்மீக நூல்கள் நீ பார்க்கின்ற ஆன்மீக மனிதன் உன் செவியில் விழுகின்ற ஆன்ம செய்திகள் இது வரை கற்ற பல்வேறு ஆன்மீக விஷயங்கள் எல்லாம் கூட நாங்கள் (சித்தர்கள்) காட்டுகின்ற வழியிலே முரணாகத் தோன்றும்.

எமது வழி முறையில் வர வேண்டும் என்று நீயோ உன்னொத்து சிலரோ எண்ணலாம். நாங்கள் (சித்தர்கள்) வாழ்த்துகிறோம். ஆனால் அதனால் மிகப்பெரிய உலகியல் நன்மையோ அல்லது உளவியல் நன்மையோ வந்து விடாதப்பா. அதிக துன்பங்களும் அவமானங்களும் வரும். அதை சகித்துக் கொள்கின்ற பொறுமையும் சகிப்புத் தன்மையும் இருந்தால் எமது வழியில் நீயும் வரலாம். யாங்கள் (சித்தர்கள்) தடுக்கவில்லை. வந்து வெற்றி பெற நல்லாசி கூறுகிறோம். யாம் பலமுறை கூறியிருக்கிறோம். நாங்கள் (சித்தர்கள்) பாரபட்சம் பார்ப்பதில்லை என்று. எல்லோரும் இறைவனுக்கும் எமக்கும் சேய்கள்தான் (பிள்ளைகள்தான்). ஆனாலும் கூட இறைவனுக்கும் மனிதனுக்கும் குறுக்கே மாயத்திரையாக இருப்பது எது? சித்தர்களுக்கும் மனிதனுக்கும் குறுக்கே மாயத்திரையாக இருப்பது எது? அந்த மாயத்திரை எது? அது எப்பொழுது அகலும்? தீவிர பற்று தன் பிள்ளைகள் மேல் கொண்டிருக்கின்ற பாசம் அந்த பாசத்தின் காரணமாக ஏற்படுகின்ற தடுமாற்றம். அந்த தடுமாற்றத்தில் தன் குழந்தைகள் தவறு செய்தாலும் கூட தவறாக தெரியாத ஒரு நிலை. அதையே மற்றவர்கள் செய்தால் அது மிகப்பெரிய பஞ்சமாபாதகமாகத் தோன்றுவது. இவையெல்லாம் மாயையின் உச்சநிலை. எனவே சுயநலமும் தன்முனைப்பும் தீவிர பாசமும் ஆசையும் பற்றும் எந்த மனிதனுக்குள்ளும் எத்தனை காலம் இருந்தாலும் இறைவன் அவன் பக்கத்தில் அமர்ந்தாலும் அவனால் புரிந்து கொள்ள முடியாது.