ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 264

கேள்வி: சிறு குழுந்தைகளுக்கு ஏற்படும் சர்க்கரை நோய் குணமடைய மருத்துவ முறைகள் பரிகாரம்:

இறைவனின் கருணையாலே பிணியாகட்டும் வேறு துன்பமாகட்டும் ஒரு மனிதனுக்கு குழந்தைப் பருவத்தில் அல்லது மத்திய காலத்தில் வருகிறது என்றாலே அதுவும் ஒரு வகையான பாவ வினைகளின் எதிரொலிதான். இது ஒருபுறமிருக்கட்டும். வழக்கம் போல் பரிபூரண வழிபாட்டோடு அதிகமதிகம் தர்ம காரியங்களை செய்வதும் வினைப் பயனால் வறுமையில் வாடுகின்ற குடும்பத்தில் பிறந்த குழந்தைகளை தேடிச் சென்று அந்தக் குடும்பமும் குழந்தையும் எண்ணிப் பார்க்க முடியாத மிக மிக உயர்வான கனி வகைகளையும் உயர்ந்த நெய்யினால் தயாரிக்கப்பட்ட சுவையான பண்டங்களையும் தொடர்ந்து வழங்கி வருவதும் இது போன்ற தர்ம காரியங்களை இன்னும் தொடர்ந்து செய்து வருவதும் கட்டாயம் நல்லதொரு பலனைத் தரும். அதோடு இஷ்ட தெய்வத்தை வணங்குவது ஒரு புறமிக்க நவக்கிரங்களை வணங்கி அதிலே இந்த இனிப்புக்கு காரகத்துவம் பெற்ற சுக்ர பகவானையும் வணங்கி வந்தால் கட்டாயம் வினையினால் வந்த பிணியாக இருந்தாலும் மருந்திற்கும் கட்டுப்படும் பிறகு மட்டுப்படும். பிறகு அதனால் எதிர்விளைவுகள் இல்லாமல் போகும்.

கேள்வி: உத்தம் ஆன்மீக உலகில் ஒவ்வொரு மனிதனுக்கும் 9 உடல்கள் இருப்பதாகவும் தினசரி வாழ்க்கையில் இந்த 9 உடல்களிலும் மாறி மாறி வாழ்வதாகவும் சொல்லப்படுவது பற்றி:

தேகம் தேகத்திற்குள் இருக்கின்ற உயிர் அல்லது ஆத்மா இது தொடர்பாக மனிதன் தாம் தாம் உணர்ந்தவற்றை அவ்வப் பொழுது கூறிவிட்டு செல்கிறான். அவைகள் அனைத்தும் உண்மையென்றோ அல்லது அனைத்தும் பொய் என்றோ எம்மால் கூறவியலாது. சில உண்மைகளும் உண்டு. சில உண்மைக்கு மாறான கருத்துக்களும் உண்டு. ஏனென்றால் அந்தந்த ஆத்மா எந்த அளவிற்கு அதனைப் புரிந்து கொண்டதோ அதனையே சிலருக்கு போதிக்கிறது. எனினும் கூட நீ கூறியது போல அந்த எண்ணிக்கை நவத்தை (ஒன்பது) தாண்டியும் கூட தேகத்தின் பரிணாமம் இருக்கிறதப்பா. அவையெல்லாம் பல விதமான சூட்சும தேகம் என்று அழைக்கப்படுகிறது. அவை ஆத்மாவின் விதவிதமான வடிவங்கள் என்று சுருக்கமாக நீ இத்தருணம் வைத்துக் கொள். இது குறித்து விளக்கமாக தக்க காலத்தில் கூறுவோம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 263

கேள்வி: ஷ ஹ ஸ போன்ற எழுத்துக்களைப் பேசவோ எழுதவோ முடியவில்லையே? இது எதனால் ஏற்பட்டது?

இறைவனின் கருணையாலே மொழியாகட்டும் மனிதனின் பழக்க வழக்கமாகட்டும் ஒரு காலத்தில் இருந்தது போல் மறுகாலத்தில் இருப்பதில்லையப்பா. அதைப் போல மொழியிலே கலப்பு வருவதையும் யாராலும் தடுக்க இயலாது. வேண்டுமானால் ஒவ்வொரு மொழிக்கும் தனித்தன்மை இருக்கிறது. பிற மொழி கலப்பால் அது பாதிக்கப்படுகிறது என்று மனிதன் வாதம் செய்யலாம். எந்த மொழியும் பிற மொழி சேர்வதால் எக்காலத்திலும் எந்த பாதிப்பும் அடைந்து விடாது. ஆனால் அதே சமயம் ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். வாழும் காலம் அல்லது சம காலம் அல்லது நிகழ்காலம் என்று வைத்துக் கொண்டால் சக மனிதர்கள் பெருவாரியான மனிதர்கள் புரிந்து கொள்ளக் கூடிய ஊடகமாகத்தான் மொழி இருக்க வேண்டுமே தவிர அது தனித்தனியாக இருக்க வேண்டும். மிக சிறப்புற மொழி இப்படியெல்லாம் சீரழிந்து கிடக்கிறதே என்றெல்லாம் வருத்தம் அடைந்து விடக்கூடாது. அப்படியொரு நிலையை கடைபிடிக்கத் துவங்கினால் எல்லொருக்குமே ஒருவிதமான அயர்வும் வெறுப்பும்தான் ஏற்படும். இன்னொன்று. நீ கூறியது போல எல்லா வகையான ஒலிக் குறிப்புகளும் இந்த மொழியில் அதாவது தமிழ் மொழியில் ஒரு காலத்தில் இருந்தது.

காலப் போக்கிலே இப்பொழுது எப்படி வேற்று மொழியின் ஆதிக்கம் பரவலாக இருக்கிறதோ அதுபோல ஒரு காலத்தில் அந்த மந்திர மொழி (வட மொழி) என்று இன்று கருதப்படுகின்ற அந்த வட மொழியின் ஆதிக்கம் இருந்தது. அந்த மொழியைப் பேசினால்தான் கெளரவம் என்று இப்பொழுது போல் அப்பொழுதும் மனிதர்கள் எண்ணினார்கள். அதன் விளைவாக பலவிதமான கலப்புகளும் ஏற்பட்டது. ஆனாலும் கூட அந்த ஒலிக் குறிப்புகள் எல்லாம் அடியோடு இல்லாமல் போய் விட்டது. இப்பொழுது அந்த ஒலிக் குறிப்புகள் இல்லையென்று நீ வருந்தத் தேவையில்லை. இருக்கின்ற அந்த ஒலிக் குறிப்பினையே வைத்து தாராளமாக நீ உச்சரிக்கலாம். அப்படி உச்சரித்தால் அது தமிழ் மொழியை சார்ந்தது அல்ல என்கிற கருத்து எம்மால் ஏற்கக்கூடியது அல்ல. எந்த ஒரு வரி வடிவமும் எக்காலத்திலும் தொடர்ந்து அதைப் போலவே நிலை பெறுவது இல்லை. இப்பொழுதுள்ள மொழிக்கும் இப்பொழுதுள்ள சமுதாயத்திற்கும் எது ஏற்றதோ அதனை இறைவன் தந்திருக்கிறார்.

கேள்வி: தங்கள் அருளாசியால் 35 (திருவண்ணாமலை) சித்தர்களின் வரலாறு விளையாடல்களை வெளியிட மட்டுமே அருள் செய்தீர்கள். மீதியுள்ளவற்றையும் வெளியிட தங்களின் ஆசி வேண்டும்:

இறைவன் கருணையாலே இறைவன் அருளாணையிட மீண்டும் ஏனைய மகான்களின் விளையாடல்கள் இறையோடு தொடர்புடைய அந்த திருகிரி (திருவண்ணாமலை) தொடர்புடைய நிகழ்வுகள் மனிதர்களுக்கு தேவைப்படும் மனிதர்களுக்கு நம்பக்கூடிய மனிதர்களுக்கு இந்த வெளி உலகத்தில் தெரிய வருமப்பா.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 262

கேள்வி: கிருஷ்ணகிரி மத்தூர் சிவன் கோவில் கும்பாபிஷேகம் தடைகள் நீங்கி நிறைவேற தங்கள் அருளாசி:

இக்கோவில் பெயர் அருள்மிகு சோமேஸ்வரர் ஆலயம். மத்தூர் ஊராட்சி கிருஷ்ணகிரியில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ளது.

கட்டாயம் விநாயகப் பெருமான் வழிபாட்டை உள்ளன்போடு செய்து உள்ளன்போடு அது தொடர்புடைய மாந்தர்கள் (மனிதர்கள்) அந்த ஸ்தல யாத்திரையை மேற்கொண்டால் நலம் நடக்கும்.

கேள்வியின் தொடர்ச்சி கேள்வி: இத்தலத்தில் (மத்தூர் சிவன் கோவில்) அன்னையின் ஆலயம் எழுப்ப வேண்டுகிறோம். இது 3500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என கூறப்படுகிறது. இத்தலத்தின் சிறப்பு பற்றி கூற வேண்டுகிறேன். இத்தலத்தில் ஒரு சித்தரின் ஜீவ சமாதி உள்ளது என்பது உண்மையா?

இறைவனின் கருணையாலே இந்த ஸ்தலத்திற்கு எத்தனையோ சிறப்புகள் இருக்கிறது. ஸ்தல புராணம் குறித்து நாங்களே ஒரு முறை என்ன நிகழ்ந்திருக்கிறது? அல்லது என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது? மனிதர்கள் இது வரை செவியாறலாகக் கேட்டவை எவை? கேட்கத் தவறியவை எவை? என்றெல்லாம் பின்னர் கூறுவதாகக் கூறியிருக்கிறோம். அந்த நிலையிலே ஜீவ சமாதி என்பதை விட பல சித்தர்கள் வந்து வழிபட்டார்கள். இன்றும் வழிபடுகிறார்கள் என்று கூறுவது பொருத்தமாகும். அதே தருணம் இந்த நிலையிலே நல்விதமாய் அன்னைக்கு ஆலயமும் திருப்பணியும் ஆவதற்கு நாங்கள் அருளாசி கூறுகின்ற அதே தருணம் மனிதர்கள் ஒன்றை மறந்து விடுகிறார்கள். அன்னையாக தெய்வத்தை வணங்கத் தெரிகிறது. அன்னையாக நதியைப் போற்றத் தெரிகிறது. ஆனால் நிஜமான வடிவிலே வாழ்கின்ற பெண்களையெல்லாம் இடர்படுத்தினால் கொடுமைப் படுத்தினால் எப்படியப்பா இறைவன் அருள்வார்? அன்னையை வணங்க வேண்டும் அன்னைக்கு வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறிக் கொண்டே அதே பெண்களை நீ இப்படி இருப்பதால் இப்பொழுது இங்கு வரக்கூடாது. நீ பெண் என்பதால் இந்த பூஜையை செய்யக்கூடாது என்றெல்லாம் யார் வகுத்துத் தந்தார்கள்? என்று தெரியவில்லை. எனவே முதலில் அவரவர்கள் இல்லத்தில் உள்ள பெண்களை ஒவ்வொரு ஆணும் மதிக்க வேண்டும். அதைப் போல ஆண்களையும் பெண்கள் மதிக்க வேண்டும். இதை செய்யாமல் ஆலயத்திற்கு சென்று அங்கு மட்டும்தான் அன்னை இருப்பதாக எண்ணினால் கட்டாயம் அந்த அன்னையின் அருள் யாருக்குமே கிட்டாது. பொதுவாக ஒரு மனிதன் நல்லவனாக இருக்கலாம். அல்லது அதற்கு மாறான குணங்கள் கொண்டவனாக இருக்கலாம். பெண்களிலும் விரும்பத்தகாத குணங்கள் கொண்டவர்களும் இருக்கலாம். அது பற்றி நாங்கள் கூறவில்லை. ஆனாலும் கூட மனித வடிவம் எடுத்துவிட யாரையும் பழிக்காமல் இடர்படுத்தாமல் ஒருவன் வாழ்ந்தாலே அதுவே இறைவனை பூஜை செய்வதற்கு சமமாகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 261

கேள்வி: வைணவ ஆலயங்களில் தீர்த்தம் சடாரி துளசி போன்றவற்றையும் சிவ ஆலயங்களில் விபூதியை பிரசாதமாக வழங்குவதின் தாத்பர்யம் என்ன?

சில சிவ ஆலயங்களிலும் சடாரி வைக்கப்படுவது உண்டப்பா. எல்லாவற்றிலும் மனிதனின் வித்தியாசமான சிந்தனை இருந்து கொண்டே இருக்கும். நீ இப்படி செய்கிறாயா? நான் இப்படி செய்யமாட்டேன் என்பது போன்ற மனோபாவத்தில் வருவதுதான். இருந்தாலும் கூட சில ஆகமங்களுக்குப் பின்னால் பலவிதமான மகான்களின் நீதி போதனைகள் அர்த்தங்கள் அடங்கியிருக்கின்றன. சகலமும் ஒரு தினம் ஒன்றுமில்லாமல் அழியப் போகிறது. அப்படி அழிக்கக்கூடிய ஆற்றல் கொண்டது நெருப்பு. அந்த நெருப்பை தன்னகத்தே கொண்டவர் இறைவன். அந்த இறைவன் நெருப்பு வடிவமாக இருக்கும் பொழுது சிவனாக முக்கண்ணனாக லிங்க ரூபியாக இருக்கிறார். அந்த அக்னி எரிந்து கொண்டே இருக்கிறது. எரியும் அக்னியிலிருந்து என்ன வரும்? சாம்பல் வரும். எனவே அங்கே விபூதி பிரசாதமாக தரப்படுகிறது. அந்த விபூதி எரியும் அக்னியிலிருந்து வந்தாலும் விபூதி என்பது அக்னித் தன்மையும் கொண்டது. குளிர்ந்த தன்மையும் கொண்டது. அதே சமயம் தூய்மையான விபூதியை ஒருவன் நெற்றியிலே அதிகமாக இட்டால் கபாலத் தொல்லைகள் (தலைவலி) குறைவதோடு கபாலத்தின் உள்ளே இருக்கும் நீர் உறிஞ்சப்பட்டு பாதுகாப்பாக வெளியேறும். இதனால் சீதளத் தொல்லைகள் இல்லாமல் வாழலாம். அதனால்தான் அக்னி ஸ்வரூபமாக இருக்கக்கூடிய அந்த லிங்க ரூபிக்கு குளிர்ந்த வில்வத்தை ஆராதனை செய்ய பயன்படுத்த சொல்லி மகான்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

அதே இறை குளிர்ந்த ரூபமாக மஹாவிஷ்ணுவாக அங்கே காட்சி தருகிறார். யோக நிலையிலே சயன நிலையிலே நின்ற நிலையிலே இருக்கிறார். அங்கு சதா குளிர் சதா நீர் எனவே அங்கு வெது வெதுப்பும் வெப்பமும் தேவை என்பதால் அதுபோல் துளசி தரப்படுகிறது. யாருக்கெல்லாம் சீதளத் தொல்லை இருக்கிறதோ நுரையீரலிலே நீர் கோர்த்துக் கொண்டு இருக்கிறதோ நுரையீரல் தொடர்பான பிரச்சினை இருக்கிறதோ சுவாசம் செய்யவே கடினமாக இருக்கிறதோ அவர்கள் எல்லாம் தூய்மையான செம்பு கலசத்திலே சிறிதளவு கருந்துளசியை இட்டு தூய்மையான நீரை இட்டு அதை ஏக நாழிகை அல்லது உபய நாழிகை இயன்றால் சில நாழிகைகள் வைத்திருந்து பலமுறை தன்வந்திரி நாமத்தை உருவேற்றி அந்த நீரையும் துளசி தளத்தையும் உண்டால் கட்டாயம் தேகம் (உடல்) நலமாக இருக்கும். எனவே எல்லா மருத்துவ முறைகளும் எல்லா விதமான மனிதனுக்குத் தேவையான பொருள் பொதிந்த ஆன்மீக உண்மையும் கொண்டதுதான் இறை வழிபாடு. இவையெல்லாம் சிறு குறிப்புதான். இன்னும் போகப் போக உள்ளே அதிக விஷயங்கள் இருந்து கொண்டேயிருக்கும். ஒவ்வொரு மனிதனும் ஆய்வு செய்து பார்த்தால் ஒவ்வொரு இறை வழிபாட்டின் நுட்பங்களுக்குப் பின்னால் உள்ள தத்துவம் நன்றாகவே புரிபடும். சிக்கல் இல்லாமல் வாழ்வு இல்லை சிக்கலையெல்லாம் மெதுவாக களைந்தால்.

ஒரு கடினமான ஓடு உடைய தேங்காய் இருக்கிறது. அந்தக் கடினத்தையும் மோதி முயற்சி செய்து உடைத்து விட்டால் தேங்காயின் வெண்மையான தன்மை தெரிகிறது. எனவே அந்த இறை தத்துவமும் சிக்கல் போலவும் கடினம் போலவும் இருந்தாலும் கூட போராடி அதனை புரிந்து கொண்டால் இறுதியில் அந்த தேங்காயின் தன்மை போல் இறை பொருள் என்பது மனிதனுக்கு புரியவரும். அதைப் போல் அக்னி ஸ்வரூபமாக இருக்கக் கூடிய தெய்வத்திற்கு இன்னொரு அக்னியைக் காட்டி இந்த அக்னியும் ஒன்று நீயும் ஒன்று அக்னியாகிய உன் தன்மையை நாங்கள் தொட இயலாது. ஆனால் உன் சார்பாக இந்த சிறு அக்னியை உனக்கு காட்டிவிட்டு அந்த அக்னியை நாங்கள் தொட்டு ஆராதனை செய்கிறோம் என்றுதான் தூய்மையான கற்பூர தீபமும் நெய் தீபமும் காட்டப்படுகிறது. இவையெல்லாம் பல மனிதர்கள் அறிந்த உண்மைதான். இவற்றுக்குள்ளேயே ஆழ்ந்து விடாமல் ஒரு மனிதன் தனக்குள் இருக்கக் கூடிய இறையையும் தனக்குள் உள்ள பாவங்களையும் வென்று எண்ணங்களில் எல்லா விதமான நல் சிந்தனைகளை வளர்த்துக் கொண்டு வாழ்ந்தால் கட்டாயம் இறையருள் அது எந்த நிலையாக இருந்தாலும் அவன் எந்த வடிவை வணங்கினாலும் அவன் விரும்பும் வடிவில் அவன் விரும்பும் நிலையில் அவனுக்கு இறைவனால் காட்சி தரப்படும் அருளப்படும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 260

கேள்வி: ஒவ்வொருவருக்கும் பொருளாதாரக் கல்வி ஆன்மீகக் கல்வி கிடைக்க வேண்டுமென்றால் என்ன பயிற்சி என்ன வழிபாடு செய்ய வேண்டும்?

இறைவன் அருளால் எல்லோருக்கும் எல்லாம் கிட்ட வேண்டும் என்பது பொதுவாகவே நல்லவர்களின் பிராத்தனை ஞானியர்களின் பிராத்தனையாக இருந்தாலும் கூட கர்ம வினை என்ற ஒன்று இருக்கும் வரை இந்த ஏற்றத் தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும். அதே தருணம் இன்னொருபுறம் மனிதன் சுயமாக சிந்தித்து ஏதோ செய்த புண்ணியமோ அல்லது இறைவன் அருளோ என்னை இறைவன் நன்றாக வைத்திருக்கிறான். எனக்கு நிறைய செல்வம் சேர்ந்திருக்கிறது. என்னால் முடிந்த ஒரு சில குடும்பத்தையாவது நான் காப்பாற்றுவேன் என்று ஒரு முடிவெடுத்து அவன் செயலில் இறங்கி விட்டால் எல்லோருக்கும் எல்லாம் என்கிற நிலை வந்துவிடும். ஆனால் இவையெல்லாம் கேட்பதற்கு நன்றாக இருக்கும். நடைமுறைக்கு சாத்தியமில்லை என்றுதான் மனிதன் எண்ணிக் கொண்டிருக்கிறான். இருந்தாலும் கூட பிராத்தனை என்று வைத்துக் கொண்டால் இறைவனை அன்னப் பூரணியாக வணங்கினால் இந்த அன்ன பிரச்சனை தீர்வதற்கும் இதே ஹயக்ரீவரையும் அன்னை கலைவாணியையும் (அன்னை சரஸ்வதி) வணங்கி வணங்கி வந்தால் கூட்டு வழிபாட்டிலும் இது போல முக்கியத்துவம் தந்து வந்தால் நல்லதொரு ஞானமும் கல்வி என்றால் ஏதோ மனிதர்களால் கற்பிக்கப்படும் கல்வியை நாங்கள் கூறவில்லை. மனிதர்களால் கற்பிக்கப்படும் கல்வியை நாங்கள் கல்வி என்றே ஒத்துக் கொள்வதில்லை. எனவே மெய்யான ஞானத்தை உணர்வதற்கு அது வழிகாட்டுவதாக இருக்கும். எனவே இந்த பக்தி மார்க்கம் தவிர இக்காலத்தில் வேறு எளிய வழி மனிதர்களுக்கு இல்லை.

கேள்வி: தனி மனிதன் தன் மானசீக குருவை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?

அவனவன் கற்ற விஷய பொருள்களில் அல்லது கேள்விப்பட்ட ஆன்மீக விஷயங்களில் எந்த குரு மீது இயல்பாக ஈர்ப்பு வருகிறதோ அந்த குருவை மானசீக குருவாக ஏற்றுக் கொள்ளலாம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 259

கேள்வி: பத்ரிநாத்தில் (உத்திராகண்ட் மாநிலம்) சிரார்த்தம் செய்தாலே போதுமானது. ஒவ்வொரு வருடமும் வந்து செய்ய வேண்டிய அவசியமில்லை என்பது பற்றி:

இறைவன் கருணையாலே சில ஆலயங்களில் குறிப்பை எழுதி வைத்து இருப்பார்கள். இங்கு வந்து வழிபட்டால் கோடி முறை ஆலயத்தை வணங்கியது போல என்று இங்கு ஒரு முறை பஞ்சாட்சரம் ஜெபித்தால் கோடி முறை ஜெபித்ததற்கு பலன் உண்டு என்று. இவையெல்லாம் அந்த ஆலயத்தின் சிறப்பையும் அப்படியாவது மனிதர்கள் வர வேண்டும் என்கிற நல்ல நோக்கில் கூறப்படுவது. அப்படியே ஒரு வாதத்திற்கு இது உண்மையென்று வைத்துக் கொள்வோம். அனைத்து நதிக்கரை ஸ்தலங்களிலும் இப்பொழுது நடக்கின்ற எல்லோரும் ஆத்ம சுத்தியோடு (யாம் செய்து வைக்கின்ற மறை (வேதம்) கற்றவனை மட்டும் கூறவில்லை அதிலே கலந்து கொள்ளக் கூடிய மனிதர்களையும் சேர்த்துத்தான் கூறுகிறேன்) உடல் சுத்தம் உள்ள சுத்தம் பரிசுத்தத்தோடு பூஜை செய்கிறார்களா? பிழையற வேத மந்திரங்களை ஓதுகிறார்களா? ஒருவனுக்கு ஒரு முறை சரியான முறையில் பித்ரு காரியங்களை செய்ய வேண்டுமென்றால் குறைந்தபட்சம் குறைந்தபட்சம் எமது நோக்கில் இந்தப் பூவுலகில் 48 தினங்கள் (ஒரு மண்டலம்) ஆகும். ஒரு குடும்பத்திற்கு 48 தினங்கள் சில மறையோதுபவர்கள் (வேதத்தை ஓதுபவர்கள்) முறையாக செய்து வைத்த பிறகு 48 நாட்கள் அவர்கள் உபவாசம் இருந்து உருவேற்ற வேண்டும் அவரவர்கள் இஷ்ட தெய்வத்தை. பிறகுதான் அடுத்த பணியை செய்ய வேண்டும். இதையெல்லாம் கூறினால் இந்த அவசர உலகத்தில் சாத்தியமில்லை என்பார்கள். எனவே ஒரு முறை செய்தால் போதும் என்றால் அந்த ஒரு முறை எப்படி செய்ய வேண்டுமோ அப்படி செய்கின்ற நிலை வந்தால் அது பொருந்தும். ஆனால் இப்பொழுது இருக்கின்ற நிலையிலே ஒன்றுக்குப் பலமுறை பலமாக செய்தாலும் வினைகள் குறைவதில்லை எனும் பொழுது தாராளமாக பல ஸ்தலங்கள் சென்று பலமுறை செய்யலாம். தவறொன்றுமில்லை.

கேள்வி: ஆலயம் செல்ல இயலாத பொழுது மானசீகமாக இறைவனை வணங்குவது ஏற்புடையதா?

தாராளமாக. ஒருவன் ஆலயம் சென்று வணங்குவதே பக்தி வளர வேண்டும் என்பதற்காகத்தான். ஆலயம் சென்று வேறு எங்கோ கவனம் இருப்பதை விட வேறு எங்கு இருந்தாலும் இறைவனிடம் கவனம் இருந்தால் அதும் வழிபாடுதானப்பா.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 258

கேள்வி: ஒருவருக்குப் பணியில் நல்ல சம்பள உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? எந்த இறையிடம் பிராத்தனை வைக்க வேண்டும்?

இறைவன் கருணையாலே இறை வழியில் நாங்கள் வழி முறைகளைக் கூறினால் அது மனிதர்களுக்கு ஏற்புடையதாக இராது. அந்தந்த நிறுவனத்திலே யார் அந்த அதிகாரம் பெற்று இருக்கிறானோ அவனைப் பார்த்து சரியாக கவனிக்க வேண்டியதைத் தவிர (பணியில் பொறுப்பாக இருந்து செயல்படும் செயல்கள்) வேறு வழி இருப்பதாக இத்தருணம் யாங்கள் நினைக்கவில்லை. எனவே இதற்கு ஒரே மார்க்கம் எனறு நாங்கள் கூறினால் அப்படியெல்லாம் அந்த மனிதன் (இருக்க வேண்டும்) என்றுதானே இருக்கிறது விதியில். அதை மாற்ற வேண்டுமானால் நவக்கிரகங்களிடம் இறை அருளாணையிட வேண்டும். ஆனால் இன்னொன்று பதவி உயர்வு என்பது உண்மையில் உயர்வு என்று மனிதன் எண்ணுகிறான். மனசாட்சி உள்ள மனிதனுக்கு நேர்மையான மனிதனுக்கு இந்தக் கலிகாலத்தில் பதவி உயர்வு என்பது ஒரு வகையான தண்டனை. இறைவன் அருளாலே குருவாரம் சனகாதி முனிவரோடு குரு தட்சிணா மூர்த்தியை மெளனமாக குரு தட்சிணா மூர்த்தியின் அஷ்டகத்தை ஓதி விரதமிருந்து வழிபட்டால் ஒரு வேளை இது வேண்டும் என்று எண்ணுகின்ற ஆத்மாக்களுக்கு கிடைக்க வாய்ப்புண்டு ஆசிகள்.

கேள்வி: சித்தர் பெருமக்கள் கூறும் இரண்டும் எட்டும் யாது? இதன் மூலம் இறை நிலையை அடைய முடியுமா?

ஏதும் இல்லாத ஒன்றுக்குத்தான் அத்தனை வார்த்தைகளும் அத்தனை விதமான வாக்கியங்களும் பூட்டப்பட்டுள்ளன. ஏதுமே இல்லாத சூன்யத்தை அந்த சூன்யத்திற்கு ஏதாவது பெயரிட வேண்டுமே என்று பரம் பொருள் என்றும் அந்தப் பரம் பொருளிலிருந்து மனிதனுக்கு புரிந்துக் கொள்ளக் கூடிய வடிவங்களாகிய இறைவன் வடிவங்கள் அதற்கு நாமங்கள் என்று பெயரிடப்பட்டு இருக்கின்றன. எனவே ஒட்டு மொத்தமாக நீ ஏதிலிருந்து எதைக் கூறினாலும் அல்லது கூறிக் கொண்டே சென்றாலும் கூட அதன் பூர்த்தி அந்தம் முடிவு நீக்கமற நிறைந்துள்ள அந்தப் பரம் பொருளைதான் குறிக்கிறது. அதை நோக்கிச் செல் செல்வதற்குண்டான முயற்சியை செய் என்பதுதான் அனைத்திற்கு அடிப்படை ஆகுமப்பா.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 257

கேள்வி: ருத்ராட்ச மாலையின் மகிமைகளைப் பற்றி

இறைவனின் கருணையால் ருத்ராட்சமாகட்டும் அது போல் துளசி ஆரமாகட்டும் இன்னும் இறை சார்ந்த பிற பொருளாகட்டும் கட்டாயம் உயர்விலும் உயர்வு. அதனை யாங்கள் (சித்தர்கள்) மறுக்கவில்லை. ஆனால் ஒரு மிகப்பெரிய செல்வந்தன் கையிலே தனத்தை வைத்துக் கொண்டு அன்ன அங்காடிக்கு (உணவகம்) அருகே அமர்ந்து கொண்டு மூன்று தினங்களாக பசி பட்டினி உயிர் போகிறது மயக்கம் வருகிறது என்று புலம்பிக் கொண்டு இருந்தால் பார்ப்பவர்கள் என்ன கூறுவார்கள்? ஏனப்பா நீயோ வறியவனல்ல செல்வந்தன். (உன்) கையிலே நிறைய தனம் இருக்கிறது. அருகிலே அன்னம் விற்கும் அங்காடியும் இருக்கிறது. சென்று பசியாற்றிக் கொள்ள வேண்டியது தானே? என்று. அதைப் போல இது போன்ற உயர்ந்த தெய்வீக பொருட்களையெல்லாம் தேகத்தில் (உடலில்) அணிந்து கொண்டு தோற்றத்தில் மட்டும் தெய்வீகத்தைக் காட்டிக் கொண்டு உள்ளத்திலே மிக மிக சராசரியாக நடந்து கொள்கின்ற மனிதனுக்கு இது போன்ற உயர்ந்த பொருள்களால் எந்த விதமான பலனும் இல்லை. மனிதன் வினவலாம் (கேட்கலாம்) உண்மையில் இது உயர்ந்த விஷயம் என்றால் அதை அணிந்து கொண்ட மனிதன் தாழ்ந்த மனிதனாக இருந்தாலும் அவனையும் இது உயர்த்த வேண்டியதுதானே? என்று. கட்டாயம் உயர்த்தும். ஒரு அடி உயர வேண்டும் என்று அவன் நினைத்தால் கட்டாயம் இறைவன் இந்தப் பொருள்கள் இல்லாமல் கூட உயர்த்தி வைக்க சித்தமாக இருக்கிறார். ஆனால் அப்படியொரு எண்ணமே இல்லாத மனிதனை இன்னும் எத்தனை பிறவி தாண்டி இந்த ஆன்மா உயரப் போகிறதோ அந்தப் பிறவியில் உயர்த்திக் கொள்ளலாம் என்று இறையே அமைதியாக இருக்கும் பட்சத்தில் யாங்களும் (சித்தர்களும்) அமைதியாகத்தான் இருக்கிறோம். இந்த ருத்ராட்சம் போன்ற பொருள்களும் தங்கள் அலைவரிசையைக் காட்டாமல் அமைதியாகத்தான் இருக்கும். ஆனால் சிறிது பக்குவமடைந்த சிறிது பரிசுத்தம் உடைய மனிதர்கள் இதனை மந்திர சுத்தி செய்து தொடர்ந்து மந்திரம் ஜெபித்துக் கொண்டே அணிந்து கொண்டால் கட்டாயம் நல்ல பலனை அனுபவ ரீதியாகப் பார்க்கலாம்.

கேள்வி: நீங்கள் கூறியப்படி வழிபாடு நடத்த கொங்கணர் உருவம் கிடைக்கவில்லை. எப்போது கிடைக்கும்?

தொடர்ந்து எந்த சித்தர்களை யார் மானசீக குருவாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறார்களோ அந்த சித்தர்களின் நாமத்தை அவரவர்கள் அறிந்த முறையிலே குறிப்பாக பிரம்ம முகூர்த்த காலத்திலே (அதிகாலைப் பொழுது) எழுந்து மனமொன்றி மனதிற்குள் உருவேற்றி வந்தால் கட்டாயம் அந்தந்த சித்தர்களே வந்து வழிகாட்டுவார்கள். விரைவில் இது நடக்கும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 256

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

பிரம்மகாரு என்ற ஞானி முன்பு இருந்தான். பலர் (இவரை) அறியலாம். அவனும் மஹா ஞானியே. அந்த காலத்திலே முறையாக வேதத்தைக் கற்றுக் கொண்டு நாங்கள்தான் இறைக்கு நெருக்கமானவர்கள் என்றெல்லாம் கூறிக் கொண்டு திரியும் கூட்டம் ஒன்று இருந்தது. இந்த பிரம்மஞானியை சிலர் அலட்சியம் செய்ய வேதமே உயர்ந்தது உனக்கென்ன தெரியும் வேதத்தைப் பற்றி என்றெல்லாம் சிலர் பேச இறையருளால் இந்த ஞானி என்ன செய்தான் தெரியுமா? ஒரு எருமை விலங்கை அழைத்து வேதத்தைக் கூறு என்று கூற எருமை வேதத்தை ஒப்புவித்தது. புரிகிறதா? வேதம் என்பது அதன் பொருள் உணர்ந்து அதன் உண்மையான தாத்பர்யம் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். மகான்களும் ஞானிகளும் கூறியது ஒன்றாக இருக்க மனிதர்கள் தம் வசதிக்கேற்ப அதனை மாற்றிக் கொள்வது என்பது கால காலம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. எதற்கு இதை இந்த இடத்தில் கூறுகிறோம் என்றால் இன்னவள் கூறினாளே? வியாசரின் (பகவத் கீதையை எழுதியவர்) பிள்ளை பிறந்தவுடன் திவ்யமாக ஞானியாகத் திகழ்ந்தான் என்றும் வியாசர் பிறக்கும் பொழுது திவ்யமான ஞானியாகப் பிறந்தார் என்றும் அந்தளவிற்கு பிரம்மஞானம் பிறக்கும் பொழுதே இருக்கின்ற ஒருவனுக்கு ஜாதி மத இன பேதம் இருக்குமா? இவையெல்லாம் மனிதனின் இடைச் செருகல்கள்.

இன்னொன்று எதற்காக முனிவர்களும் முனிசிரேஷ்டர்களும் இல்லற வாழ்க்கை இருக்கிறதோ இல்லையோ வேறு சில நங்கையர்களோடு (பெண்களோடு) தொடர்பு கொண்டதாக காதைகள் (கதைகள்) கூறப்படுகிறதே எதற்கு? அதன் உட்பொருள் தத்துவம் என்ன? என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சராசரி மனிதனின் எண்ணமும் நோக்கமும் பார்வையும் ஞானிகளின் பார்வையும் இந்த விஷயத்தில் வேறாக இருக்கும். இப்பொழுது இத்தருணம் ஒன்று நிகழ வேண்டும். அதற்கு காரண காரியமாக நாம் இருக்க வேண்டும். அந்த அளவோடு நம் எண்ணம் பூர்த்தியடைந்து விடுகிறது என்ற அளவில்தான் இது போன்ற மனிதனுக்கு முரணாகத் தோன்றுகின்ற சில செயல்களை ஞானிகள் செய்கிறார்களே தவிர உள்ளார்ந்த ஆசையில் அல்ல. இதை எப்படி புரிந்து கொள்வது? என்றால் ஒரு குழந்தை ஒரு பொம்மையை வைத்து ஆர்வமாக விளையாடிக் கொண்டிருக்கும். பெரியவர்களும் அந்தக் குழந்தையின் சந்தோஷத்திற்காக குழந்தையோடு விளையாடுவார்கள். குழந்தை விளையாடுவதற்கும் பெரியவர்கள் விளையாடுவதற்கும் வேறுபாடு உண்டல்லவா? அந்த பொம்மை தான் உலகம் அந்த பொம்மையோடு இருப்பதே சந்தோஷம் என்று குழந்தை ஆழ்ந்து விளையாடுகிறது. ஆனால் வளர்ந்த மனிதனுக்குத் தெரியும் பொம்மை சந்தோஷல்ல. பொம்மை தாண்டிய எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன என்று. அப்படித்தான் லோகாய இச்சைகளில் மனிதன் ஈடுபடுவதும் மகான்கள் ஈடுபடுவதும் இது பொம்மை விளையாட்டு போன்றது தான். எனவே இது போல நிலையிலே ஒரு போதும் வியாசர் தவறாக எதையும் பேசவில்லை. அதே போல் சுகப்பிரம்மரிஷி குறித்து வருகின்ற காதைகளும் (கதைகளும்) இடைச் செருகல்களே. எந்த மகான்கள் குறித்தும் தவறாகப் பேசும் பொழுது சிந்திக்க வேண்டும். அப்படியொரு செயலை செய்வதாக இருந்தால் எப்படி அவர் மகானாக இருக்க முடியும்? என்று. அதைப் போல் சித்தர்களைப் பற்றி ஒரு காதை (கதை) எழும்புகிறது. கோரக்கர் போன்றவர்களெல்லாம் மகா ஞான ரகசியங்களையெல்லாம் எழுதியதாகவும் அதை எம்போன்ற முனிவர்கள் மறைத்து விட்டதாகவும் இன்னும் சதுரகிரியிலே அப்படி மறைக்கப்பட்ட விஷயங்கள் இருப்பதாகவும் ஆராய்ச்சியெல்லாம் செய்துவிட்டு சிலர் நூல் எழுதுகிறார்கள்.

தெய்வ ரகசியமோ சித்த ரகசியமோ எந்தவிதமான ரகசியத்தையும் மறைக்க வேண்டிய அவசியமேயில்லை. வெட்ட வெளிச்சமாகவே இராமானுஜர் முக்திக்கு வழி அட்டாச்சரமே என்று ஆலய கோபுரத்தில் நின்று கொண்டு ஓம் நமோ நாராயணா என்று கூறுங்கள் என்று கூறினார். அதற்காக அதனைக் கேட்ட அத்தனை பேரும் மோட்சத்திற்கு சென்று விட்டார்களா என்ன? மனிதனிடம் எந்த ரகசியத்தையும் தெய்வீக ரகசியம் என்று கூறவே வேண்டாம். லோகாயத்திற்கு உதவுகின்ற விஷயம் போக வேறு எதைக் கூறினாலும் அதில் மனிதன் கவனம் செலுத்த மாட்டான் என்பதால் இறைவனும் நாங்களும் பலவற்றை வெளிப்படையாகத்தான் வைத்திருக்கிறோம். ஆனால் மனிதன் இறைவனையோ அல்லது எங்களையோ இன்றுவரை எந்த நோக்கில் அணுகுகிறான்? என்றால் தன் உலக வாழ்வில் உள்ள துன்பங்கள் தீர்வதற்காக மட்டும்தான். நாங்கள் என்ன வழிகாட்டுகிறோம்? என்பதை அவன் புரிந்து கொள்ளவில்லை.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 255

கேள்வி: ஜேஷ்டா தேவியைப் பற்றி முழுமையாக சொல்லுங்கள்:

இறைவனின் கருணையால் யாங்கள் (சித்தர்கள்) அடிக்கடி கூறுவது போல பரம் பொருளின் வெவ்வேறு வடிவங்கள் விதவிதமான தெய்வ நாமத்தில் விளங்கி மனிதர்களின் தேவைக்கு ஏற்ப அருளைத் தருகிறது. ஒரே மனிதன் தந்தையாக சகோதரனாக கணவனாக அலுவலகத்தில் அதிகாரியாக எப்படியெல்லாம் உருமாற்றம் அடைகிறானோ அப்படிதான் பரம் பொருள் விதவிதமான வடிவங்களில் மனிதர்களுக்கு அருளை வாரி வழங்குகிறது. இதுபோல் நிலையிலே துயில் (தூக்கம்) தொடர்பான பிரச்சனைகள் அமைதியற்ற மனம் கொண்டவர்கள் நல்ல முறையிலே வழிபட வேண்டிய தெய்வ வடிவம் இன்னவன் வினவிய (கேள்வி கேட்டவர்) தேவியின் வடிவமாகும். இந்த அளவிற்கு இதனைப் புரிந்து கொண்டு இந்த வழிபாட்டில் கவனம் செலுத்தினால் நன்மையைத் தரும்.

கேள்வி: அயல்நாடு (செல்லும்) ஆசை நிறைவேற வேண்டும்:

கேது பகவானை வணங்கலாம். நவகிரக வழிபாட்டை செய்யலாம். கருடாழ்வாரை வணங்கலாம். அவரவர் இஷ்ட தெய்வத்தை வணங்கலாம். இயல்பாகவே ஜாதகத்தில் ஆழி (கடல்) தாண்ட வேண்டும் என்ற நிலை இருக்கும் மனிதர்களுக்கு சிறிய முயற்சியினால் வெற்றி வந்து விடுகிறது. இல்லையென்றால் சற்று அதிகமாக முயற்சி செய்ய வேண்டியிருக்கிறது. இப்படிதான் வேண்டும் என்பதை விட இறைவா கடல் தாண்டி செல்ல வேண்டும். அதுபோல தேசம் பார்க்க வேண்டும். அங்கும் சென்று பொருள் ஈட்ட வேண்டும் என்கிற ஆவல் இருக்கிறது. இது எனக்கு ஏற்றதென்றால் நிறைவேற்றித் தா. இதனால் நன்மையை விட தீமை அதிகம் விளையும் என்றால் நீயே தடுத்து விடு என்று இறையிடமே இந்த பிரச்சனையை ஒப்படைத்து பிராத்தனை செய்வதே ஏற்புடையது.