ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 254

அகத்திய மாமுனிவர் கூறும் கதை:

இறைவன் அருளால் ஒரு சிறிய காதையை (கதை) கூறுகிறோம் புரிந்து கொள்ளப்பா. உங்களில் பலருக்கு இராமாயணம் தெரிந்திருக்கும். அதிலே குகன் எனப்படும் ஒரு பாத்திரம் இருக்கிறது. அந்த குகன் யார் தெரியுமா? அதற்கு முந்தைய முந்தைய பிறவி ஒன்றில் ஒரு மிகப் பெரிய ஞானியின் சீமந்த புத்திரன் செல்ல புத்திரன். மிகப்பெரிய ஞானியின் பிள்ளையான இவனும் பால்ய வயதிலேயே பரிபூரண ஞானத்தை பெற்றவன். முருகனின் பரிபூரண அருளைப் பெற்றவன். ஒரு முறை ஒரு முக்கியமான பிரச்சனைக்காக அந்த ஆசிரமத்தை அடுத்துள்ள தேசத்து மன்னன் தன் பரிவாரங்களுடன் அந்த முனிவரை பார்க்க வருகிறான். அச்சமயம் ஆசிரமத்தில் முனிவர் இல்லை. வெளியே ஸ்தல யாத்திரை சென்றிருக்கிறார். பால்ய வயது முனிகுமாரன் மட்டும் அங்கே அமர்ந்திருக்கிறான். வந்த மன்னன் (உன்) தந்தையில்லையா? என்று வினவுகிறான். அமருங்கள் என்று கூறி முனிகுமாரன் (அந்த மன்னனுக்கு) உபசரணை செய்த பிறகு தந்தை இங்கு இல்லை வெளியே சென்றுவிட்டார் என்று கூறுகிறான். சரி நான் பல்வேறு குழப்பத்திற்காக (இங்கு) வந்தேன். உன் தந்தை வந்தவுடன் (மீண்டும்) வந்துக் கேட்டுக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு அரசன் எழ தவறாக எண்ண வேண்டாம் அரசே என்னிடம் உங்கள் ஐயத்தைக் கூறுங்கள். முடிந்தால் நான் தீர்த்து வைக்கிறேன். என் தந்தையின் உபதேசம் ஓரளவு எனக்கு இருக்கிறது. இறைவன் அருளைக் கொண்டு நான் தீர்த்து வைக்கிறேன் என்றான் முனிகுமாரன்.

அரசன் தனக்கும் தன் நாட்டு மக்களுக்கும் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பிரச்சனைகளையும் தன் எதிரிகளின் தொல்லைகளையும் தன் உடல் உபாதைகள் குறித்தும் சிலவற்றை கூறுகிறான். என்ன பிராத்தனை செய்தும் எத்தனையோ யாகங்கள் வழிபாடுகள் செய்தும் இந்த பிரச்சனைகள் தீரவில்லை என்றுதான் இங்கு வந்தேன். மிக எளிதான பிரச்சனை மன்னா நீ தேவையில்லாமல் குழப்பம் கொண்டிருக்கிறாய். நாளை அதிகாலையிலே எழுந்து குடும்பத்தோடு ஏனைய மந்திரி பிரதானிகளோடு நீராடி வடகிழக்கு திசை நோக்கி அமர்ந்து ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ என்று மூன்று முறை கூறு. அனைத்தும் சரியாகிவிடும் என்று முனிகுமாரன் கூற மிக்க மகிழ்ச்சி என்று அரசன் சென்று விடுகிறான். அவனுக்கு நம்பிக்கையில்லை. இருந்தாலும் முனி குமாரனாயிற்றே (அவர் சொன்னபடியே) சொல்லுவோம் என்று அதிகாலை எழுந்து அவ்வாறே செய்கிறான். என்ன ஆச்சர்யம் அந்த நாட்டிலே சுபீக்ஷம் வந்து விடுகிறது. மழை பொழிகிறது. அனைத்தும் சரியாகி விடுகிறது. மன்னனுக்கு ஒரே ஆச்சர்யம் சந்தோஷம். எத்தனையோ பெரிய பெரிய பூஜைகள் செய்தும் நடக்கவில்லையே? இந்த இளம் பிள்ளை கூறியது நடந்து விட்டதே? அவருக்கு நன்றி கூறுவோம் என்று எண்ணி உடனடியாக தன் படை பரிவாரங்களோடு அந்த ஆசிரமத்திற்கு மீண்டும் வருகிறான். அப்பொழுது அந்த முனிகுமாரனின் தந்தை அங்கு இருக்கிறார். இந்த மன்னனைக் கண்டவுடன் அந்த முனிகுமாரன் தந்தையே நேற்றைய தினம் இவர்தான் வந்திருந்தார் என்று கூற தன் ஞான திருஷ்டியின் மூலமாக அங்கு நடந்த அனைத்தையும் புரிந்து கொண்டு நலமாய் வாழ்வாய் என்று அரசனை வாழ்த்தி அனுப்பி விட்டு கடும் சினத்தோடு அந்த பிள்ளையைப் பார்த்து நீ முழு மூடன். உனக்கு அந்த இறைவனின் பெருமை தெரியவில்லை. முருகப் பெருமானின் அருமை புரியவில்லை. நீ பூமிக்கு சென்று மிக மிக தாழ்ந்த நிலையிலே பிறந்து அந்த முருகனின் பெயரைக் கொண்டு மகாவிஷ்ணு என்று இராமாவதாரம் எடுக்கிறாரோ அப்பொழுது அவருக்கு சேவை செய்து பிறகு மேலே வா என்று சபித்து விடுகிறார். முனிகுமாரன் அஞ்சி விடுகிறான்.

தந்தையே நான் பிழை ஏதும் செய்யவில்லையே? (எதற்கு இந்த தண்டனை?) என்ன குற்றம் செய்தேன்? மகா பெரிய பாவத்தை செய்து விட்டு ஒன்றும் தெரியாதது போல் நடிக்கிறாயே? என்று ஞானி கூற என்ன? என்று அந்த சேயவன் (மகன்) கேட்க அரசன் வந்தானா? வந்தார் தந்தையே (தன்) பிரச்சனைகளை கூறினானா? கூறினார் தந்தையே (அதற்கு) நீ என்ன கூறினாய்? அதிகாலையிலே எழுந்து ஸ்நானம் செய்து வடகிழக்கு திசை நோக்கி அமர்ந்து ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ என்று மூன்று முறை கூறும்படி கூறினேன். இங்குதான் நீ மகா பெரிய பாவத்தை செய்துஙவிட்டாய். உனக்கு முருகன் மீது நம்பிக்கையே இல்லையே? ஏன்? ஒரு முறை சொன்னால் முருகன் தீர்க்க மாட்டாரா? பாவத்தை போக்க மாட்டாரா? ஒரு குளிகை தின்றால் தீரக்கூடிய வியாதிக்கு தேவையில்லாமல் மூன்று குளிகைகள் கொடுத்திருக்கிறாயே? நீ முருகப்பெருமானின் அருமையை உணராததால் மாபெரும் தவறு செய்துவிட்டாய் என்று கடிந்து கொண்டார். சற்று இந்த காதையை (கதை) நினைவூட்டப்பா. ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான ஜபத்தை விட உள்ளன்போடு ஆத்மார்த்தமாக பரிசுத்த இதயத்தோடு ஒரே ஒரு முறை இறை நாமத்தை ஜபித்தால் இறை தரிசனம் உண்டு. ஆனால் இறை தரிசனம் வேண்டும் என்கிற அந்த எண்ணம் தீவிரமடைந்து லோகாயம் எல்லாம் போக வேண்டும் என்ற எண்ணத்தோடு ஜபித்தால் கட்டாயம் இறை துவாபர யுகத்தில் மட்டுமல்ல த்ரேதா யுகத்தில் மட்டுமல்ல இந்த கலியுகத்திலும் காட்சி தருவார் என்பது உறுதி. இருந்தாலும் யாமும் லகரம் (லட்சம்) ககரம் (கோடி) மந்திரங்களை ஜெபி என்று கூறுவதன் காரணமே மனித மனம் ஒரு ஒழுங்குக்கு கட்டுபடாததால் (அப்படி) கூறிக் கொண்டே இருந்தால் என்றாவது ஒரு நாள் அந்த திருவின் நாமத்தை மனம் வாக்கு காயம் (உடல்) 72000 நாடி நரம்புகள் பரவ கூறுவான் என்று தானப்பா நாங்களும் கூறுகிறோம். எனவே கூறிக் கொண்டேயிரு. இறைவன் கருணையால் அது ஏதாவது ஒரு நிலையில் சித்திக்கும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 253

கேள்வி: பிரம்மஹத்தி தோஷம் என்ற ஒன்று இருக்கிறதா? இருக்கிறது என்றால் அதற்கு என்ன பரிகாரம்?

இறைவன் கருணையாலே பொதுவாக பிராம்மணர்களைக் கொல்வதால் ஏற்படும் தோஷம் பசுக்களை கொல்வதால் ஏற்படும் பாவம் அல்லது தோஷம் பிரம்மஹத்தி தோஷம் என்று வழங்கப்பட்டாலும் கூட அது ஒரு குறியீடு. தவறே செய்யாத அப்பாவிகளுக்கு செய்த இடர் துன்பம் உச்சக்கட்ட பாவமாக பாவம் மீண்டும் தோஷமாகத் தொடர்வதுதான் பிரம்மஹத்தி தோஷம் எனப்படுவது. பிரம்மாவை ஹத்தி செய்தால் என்ன பாவம் வருமோ அத்தனை பாவம் வரும் என்று ஒரு குறியீடாகக் கூறப்படுவது. எனவே இது உடலுக்கு மட்டும் செய்த தீங்கல்ல. பிறர் மனதை புண்படுத்தியிருந்தாலும் அதனாலும் இது போன்ற தோஷங்கள் ஒரு மனிதனைத் தொடரும். தொடர்ந்து இறை வழிபாடும் இடைமருதூர் (திருவிடைமருதூர்) போன்ற ஆலயங்களுக்குச் சென்று இயன்ற வழிபாடுகள் செய்வதும் தொடர்ந்து அறக்காரியங்களில் ஈடுபடுவதும்தான் இதற்குத் தக்க பிராயச்சித்தமாகும்.

கேள்வி: தமிழ் மொழி இந்தியாவின் ஆட்சி மொழியாக என்றாவது சாத்தியக் கூறுகள் உண்டா?

ஏன் அப்படி வரவேண்டும் என்று உன்னொத்து பலர் அப்படி எதிர்பார்க்கிறார்கள்? (அனைவரும் அந்த அருள் மொழியால் இறையருளைப் பெறுவதற்காக ஆட்சி மொழியாக வரவேண்டும் என்பதால்). ஏனைய மொழிகள் அவ்வாறு வந்தால் என்ன நட்டம் வந்து விடப் போகிறது?

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 252

கேள்வி: எங்கள் மூதாதையர்கள் வழிபட்ட குலதெய்வம் தெரியவில்லை. அவர்களின் தலைமுறைக்கு பிறகு வந்தவர்கள் பழனி முருகனை குலதெய்வமாக சில காலம் கழித்து சப்த கன்னிமார்களை குலதெய்வமாக வழிபட்டிருக்கிறார்கள். இப்பொழுது நாங்கள் எந்த குலதெய்வத்தை வழிபடுவது? மேலும் வழிபாடு செய்துவிட்டு நேராக வீட்டிற்குதான் வரவேண்டுமா?

இறைவனின் அருளைக் கொண்டு யாம் கூறுவது யாதென்றால் கும்பிடும் தெய்வமெல்லாம் குலதெய்வம் என்று வைத்துக் கொள்ளலாம். தவறொன்றுமில்லை. எப்படியாவது தெய்வ நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்பதற்குதான் முன்னோர்கள் குலதெய்வம் என்ற ஒன்றை வகுத்து வைத்தார்கள். குலதெய்வத்தை வணங்கு என்று நாங்களும் கூட சில சமயம் கூறுவோம். அதற்கு சில காரணங்கள் இருக்கிறது. பெரும்பாலானவர்களுக்கு குலதெய்வம் என்பது பல தலைமுறைகளுக்குப் பிறகு மாறிப் போவது என்பது இயல்பு. இது மிகப்பெரிய குற்றமோ தோஷமோ அல்ல. இருந்தாலும் இன்னவளைப் (கேள்வி கேட்ட பெண்மணி) பொருத்தவரை சப்த மாதர்கள் சப்த கன்னியர்களை குல தெய்வங்களாக வழிபாடு செய்வது நல்ல பலனைத் தரும். அதற்காக பழனி முருகனை வணங்க வேண்டாம் என்பது பொருளல்ல.

இன்னொன்று பொதுவாக மனிதரிடம் ஒரு தவறான நம்பிக்கை இருக்கிறது. ஒரு தவறு என்றில்லை. எத்தனையோ தவறுகளில் ஒரு தவறு ஏதாவது ஆலயம் அல்லது குலதெய்வ ஆலயம் சென்று விட்டால் நேரடியாக இல்லம்தான் வர வேண்டும் வேறு எங்கும் செல்லக் கூடாது என்று. அப்படியெல்லாம் ஏதுமில்லை. தாராளமாக ஆலயம் சென்றுவிட்டு வேறு சில பணிகளையும் பார்க்கலாம். தவறொன்றும் இல்லை. ஆனால் உள்ளூரிலே ஒரு பிராய்ச்சித்தம் என்று செல்லும் பொழுது வேறெங்கும் செல்லாமல் நேரடியாக ஆலயம் சென்று விட்டு பிறகு மற்ற பணிகளைப் பார்ப்பது நல்ல பலனைத் தரும். அதாவது ஆலயத்தை நோக்கி செல்லும் பொழுது முதலில் ஆலயம் என்ற ஒரு நியதியை வகுத்துக் கொண்டால் அது மிக சிறப்பான பலனைத் தரும்.

கேள்வி: மனிதர்களாக வகுத்துக் கொண்டதுதான் ஜாதி மதம் என்று சொன்னீர்கள். ஆனால் சில ஜாதகத்தை ஜோதிடர்கள் பார்த்து இந்த ஜாதகர் இந்த ஜாதியை சேர்ந்தவரைதான் திருமணம் செய்து கொள்வார்கள் என்று கூறுகிறார்கள். அது எப்படி?

இறைவன் அருளால் ஜாதகத்தைப் பார்த்து ஜாதியைக் கூறுவது என்பது அல்ல. அதுபோல கூறுவது என்னவென்றால் இது போன்ற குணங்களைக் கொண்ட சமூகத்தை சேர்ந்த வரன் தான் கிடைக்கும் என்று கூறலாமே தவிர மற்றபடி ஜாதியை நாங்கள் கூறவில்லை. ஜாதியையும் ஜாதகம் குறிப்பதில்லை.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 251

கேள்வி: நிகழ்காலத்தை கவனித்தாலே போதும் என்று மகான்கள் கூறுகிறார்களே. அது பற்றி:

கடந்த காலத்தை எண்ணி தொடர்ந்து விசனப்படுவதை விட எதிர்காலத்தை எண்ணி அச்சப்படுவதை விட நிகழ்காலத்தில் செய்ய வேண்டியதை நேர்பட ஒழுங்காக செய்தால் நலம் என்ற கூற்றில் இது கூறப்படுகிறது. ஆனால் அதே சமயம் கடந்த காலத்தை மீண்டும் அந்தத் தவறுகள் செய்யாமல் இருப்பதற்கு திரும்பி பார்ப்பது தவறல்ல. கடந்த காலத்தில் செய்த தவறுகள்தான் பாவமாக மாறுகிறது என்பதால் அதை நினைவில் வைத்துக் கொண்டு விழிப்புணர்வோடு வாழ அந்தக் கடந்த கால அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எதிர்காலத்தைப் பொறுத்தவரை நிகழ்காலத்தில் கூடுமானவரை தெளிவாக இருக்கிறோம். நல்லதை எண்ணி நல்லதை செய்கிறோம். இருந்தாலும் சிலவற்றை செய்யத் தவறி விட்டோம். இதையாவது இனி எதிர்காலத்தில் செய்ய வேண்டும் என்கிற ஒரு உணர்வு வருவதற்கு சற்று அவகாசம் எடுத்து எதிர்காலத்தை நினைத்துக் கொள்ளலாம். ஆனால் அதற்காக சதா சர்வகாலம் கடந்த காலக் கவலையிலும் எதிர்கால அச்சத்திலும் இருந்து கொண்டு நிகழ்காலத்தை கோட்டை விடக்கூடாது என்பதுதான் எம்போன்ற ஞானிகளின் வாக்காகும்.

கேள்வி: ரமண மகரிஷியின் நான் யார்? என்ற விசாரமே வேதத்தின் முடிவா?

அது ஒரு உச்ச நிலை. அதை நோக்கி செல்வதற்கு ஏற்கனவே ஏற்கனவே பல பிறவிகளில் அன்னவன் (ரமண மகரிஷி) முயற்சி செய்தது போல் செய்திருக்க வேண்டும். எடுத்த எடுப்பிலேயே உச்ச நிலையை நோக்கி சென்றால் ஒரு மனிதனுக்கு சோர்வு தட்டும். எனவே தான் எளிய பக்தி மார்க்கமும் வேறு பல செயல்களும் செய்து கொண்டே சென்றால் ஒரு கட்டத்திலே அவனவன் ஆத்மாவிற்கே அந்த விசாரம் செய்வது எப்படி? என்பது இறைவனால் உணர்த்தப்படும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 250

கேள்வி: கொங்கண சித்தரின் ஜீவ சமாதி திருப்பதியில் எந்த இடத்தில் அமைந்திருக்கிறது?

ஜீவ அருட் பீடங்கள் என்று நாங்கள் கூறுகின்ற முறை வேறு. மனிதர்கள் அறிந்த முறை வேறு. பெரும்பாலும் புராண கால ரிஷிகளுக்கெல்லாம் இந்த ஜீவ அருட் பீடங்கள் அதாவது மனிதர்களால் கூறப்படும் ஜீவ சமாதிகள் என்றுமே கிடையாது. ஆண் பெண் கலப்பிலே யோனிப் பிறப்பாக வந்தவர்களில் சிலருக்கு மட்டும்தான் இந்த ஜீவ சமாதி என்பது அதுவும் அந்தந்த சித்தன் நினைத்தால் இறைவன் அருளினால் கிடைக்கிறது. மற்றவை எல்லாம் அந்தந்த சித்தர்கள் அங்கு வந்து சிலகாலம் தங்கி வழிபாடு நடத்திய ஆலயங்கள் என்ற அளவிலே பொருள் கொள்ள வேண்டும். எனவே இந்தக் கருத்தை அவரவர்கள் சொந்தக் கருத்தோடு சேர்த்து வைத்து குழப்பம் அடையாமல் அப்படி இந்த இடத்தில்தான் இருக்கிறார்கள் என்று கூறினால் தாராளமாக வணங்கி விட்டு செல்லலாம். ஆனால் உண்மை என்னவென்றால் இதுதான். முன்னர் முன்னர் புராண கால ரிஷிகள் யாருமே ஜீவ சமாதி என்பது அடைந்தது கிடையாது. அவர்கள் நித்திய சொரூபிகள். இறை போல் அன்றும் இருந்தார்கள். இன்றும் இருக்கிறார்கள் இனியும் இருப்பார்கள்.

கேள்வி: ஒரு புறம் பசு மாடுகளை காப்பாற்ற வேண்டும் என்று சொல்லப்பட்டாலும் மறுபுறம் கொலைக் களத்திற்கு பசுமாடுகளை அனுப்புவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதை எப்படி தடுப்பது?

இந்த உலகம் தோன்றிய நாள் முதல் நன்மையும் தீமையும் கலந்தேதான் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. எனவே இப்படி தீமையை செய்கின்ற மனிதன் எப்படி யார் சொன்னாலும் கேட்காமல் தீமையை செய்கிறானோ அதைப் போல நன்மையை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்த மனிதனும் யார் சொன்னாலும் அந்த நன்மையை விட்டுவிடாமல் எத்தனை சோதனைகள் வந்தாலும் தொடர்ந்து செய்ய வேண்டும். ஆனால் நடை முறையில் என்ன நடக்கிறது? தீமை செய்கின்ற எத்தனை எதிர்ப்பு வந்தாலும் அது கண்டு அஞ்சாமல் தொடர்ந்து தீமையை செய்து கொண்டே இருக்கிறான். ஆனால் நன்மையை எண்ணி இறங்குகின்ற மனிதன் சிறு எதிர்ப்பு வந்தாலும் சோர்ந்து விடுகிறான். எனவே இது போன்ற தீமைகள் தொடர்ந்து இருந்து கொண்டேதான் இருக்கும். கூட்டு வழிபாடும் தொடர்ந்து அவரவர்களால் முடிந்த நன்மையான தர்ம காரியங்களை செய்வதன் மூலம்தான் இதனை தடுக்க அல்லது குறைக்க இயலும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 249

கேள்வி: தேங்காய் எண்ணெயில் விளக்கு ஏற்றலாமா?

தீபத்தை ஏற்றுவதின் பொருள் இருள் மாயா சக்தி. இருள் அசுர சக்தி. ஔியே தெய்வ சக்தி. எனவே ஔியைத்தான் ஆதிகாலத்தில் தெய்வத்தின் வடிவமாக மனிதன் பார்த்து வழிபாடு செய்து வந்தான். ஔி அக்னியாக மின்னலைக் கண்டு அதும் தெய்வ அம்சமாக இப்படி தீபத்திலும் இறை சக்தியை கண்டு வணங்கி வந்தான். எனவேதான் இன்றும் தற்காலத்திலே எத்தனையோ எண்ணையில்லா விளக்குகள் மனிதன் கண்டு பயன் படுத்தக்கூடிய நிலை இருந்தாலும் முந்தைய கால தீபம் ஏற்றுகின்ற முறையும் இருந்து வருகிறது. இவற்றில் கலப்பில்லா நெய் தீபம் எல்லாவற்றிலும் சிறந்தது. தீபத்தை ஏற்றுவதின் மூலம் ஒரு மனிதன் அந்த சுற்று வெளியை தூய்மைப் படுத்துகிறான். எனவே அந்த தீபத்தீல் அவன் இடுகின்ற பொருளுக்கும் அந்த சுற்று வெளிக்கும் பரவெளிக்கும் தொடர்பு இருக்கிறது. பொதுவாக தூய்மையான நெய்தீபம் அனைவருக்கும் ஏற்றது. எந்த நிலையிலும் அது ஏற்புடையது. அது இல்லாத நிலையிலே இலுப்பை எண்ணையைக் கொண்டு ஏற்றலாம். எள் எண்ணையிலும் ஏற்றலாம். தேங்காய் எண்ணையில் தாராளமாக ஏற்றலாம். ஆனால் இவற்றுக்கெல்லாம் காலமோ அல்லது இந்தந்த நட்சத்திரங்களில்தான் இந்தந்த தீபங்கள் ஏற்ற வேண்டும் என்பதல்ல. ஆனால் தீபத்தை ஏற்றுகிறேன் என்று ஆலயத்தை அசுத்தப் படுத்தினால் அது கடுமையான தோஷத்தை செய்கின்றவனுக்கு ஏற்படு்த்தும். ஆலயத்தை தூய்மைமாக பராமரிப்பதும் பக்தியில் ஓர் அங்கம்தான்.

கேள்வி: குடும்ப ஒற்றுமைக்கு என்ன முயற்சிகள் எடுக்க வேண்டும்:

கருத்து வேறுபாட்டை பகை என்று எண்ணுகின்ற குணம் மனிதர்களிடம் என்றென்றும் இருக்கிறது. கருத்து வேறுபாடு என்பது வேறு. அதை பகையாக்க முயற்சி செய்யாமல் இருப்பது ஒவ்வொரு மனிதனுக்கும் நன்மையைத் தரும். அதே சமயம் பாவ வினைகள்தான் இது போன்ற உறவு சிக்கலை ஏற்படுத்துகிறது. எனவே யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து வாழப்பழகி விட்டால் இல்லத்தில் பெரிதும் குழப்பம் இராது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 248

கேள்வி: வலிப்பு நோய் நீங்க மருந்து:

இறைவனின் கருணையாலே வெண்மனம் (திருவெண்காடு) என்கிற ஸ்தலம் இருக்கிறது. புதனுக்கு ஏற்ற ஸ்தலம் என்று கூறுவார்கள். அங்கு சென்று வழிபாடு செய்வதும் அதே போல் மதுரையம்பதி (மதுரை) சென்று அன்னை மீனாளின் (அம்பிகை மீனாட்சியம்மன்) திருவடியை வழிபாடு செய்வதும் இது போக நவகிரக வழிபாடும் தன்வந்திரி வழிபாடும் பக்தி மார்க்கத்திலே இந்த பிணியைக் குறைக்க உதவும். இதோடு அன்றாடம் உச்சிப் பொழுதிற்கு முன்பாக எதாவது அன்று பறிக்கப்பட்ட பசுந்தளிரான கீரைகளை உணவிலே கட்டாயம் ஏற்றுக் கொண்டு வந்தால் தொடர்ந்து இந்த உணவு முறையை விடாப்பிடியாகக் கடைபிடித்தால் இதோடு தக்க மருத்துவம் எடுத்துக் கொண்டால் விரைவில் கர்ம வினையிலிருந்து விடுபட்டு இந்தப் பிணி நீங்கும்.

கேள்வி: பித்தப்பை கற்கள் சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதை எவ்வாறு தடுப்பது?

இறைவன் அருளால் கர்மாவை ஒதுக்கி வைத்து விட்டு இதற்கு வாக்கைக் கூறுகிறோம். ஏனென்றால் இது போன்ற பிணிகள் வந்துதான் ஆக வேண்டுமென்றால் விதிப்படி வந்துதான் ஆகும். அது ஒரு புறமிருந்தாலும் இக்காலம் உணவு முறையும் உடற்பயிற்சி முறையும் அறவே தடம் மாறி இருக்கின்றன. நல்ல ஆரோக்கியமான உணவை உடல் உழைப்பின்றி ஏற்ற உணவை மனிதன் உண்ணுவதும் உடல் உழைப்பை மனிதன் அலட்சியப்படுத்தியதாலும் ஏற்பட்ட பல்வேறு விளைவுகளில் இதுவும் ஒன்று. எனவே உடலுக்குத் தீமை என்று எது தெரிந்தாலும் அதனை உணர்வுக்கு அடிமைப்பட்டு மனிதன் தொடர்ந்து உண்ணுவதும் இது போன்ற நோய்கள் பெருகக் காரணமாகிறது. அறுசுவை என்பதிலே மனிதன் சிலவற்றை மட்டும் சேர்த்துக் கொண்டு துவர்ப்பையும் கயப்பையும் (கசப்பையும்) விட்டுவிட்டான். அது இரண்டையும் சரிவிகிதமாக சேர்த்துக் கொண்டே வந்தால் பெருவாரியான பிணிகள் ஒரு மனிதனை அண்டாமல் இருக்கும். இக்காலத்திலே யாங்கள் பட்டியலிடத் தேவையில்லை. இந்த சத்சங்கத்தில் கூட பரிமாறப்படுகிறது பல்வேறு விதமான போக உணவுகள். இவற்றையெல்லாம் விட்டு ஒரு யோகியின் உணவு போல் மாற்றிக் கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் மனிதனின் அறிவுக்கு இது தெரிந்தாலும் அவன் உணர்வு இதனைக் கடைபிடிக்க விடுவதில்லை. சுருக்கமாகக் கூறப் போனால் அனலில் இட்டு சமைத்து உண்ணுகின்ற உணவிலே பெருவாரியானவற்றை விட்டுவிட்டு கொழுப்பைத் தவிர்த்து மனிதன் பசுமை படர்ந்த உணவு வகைகளையும் கூடுமானவரை கனிவகைகளையும் ஏற்றால் நல்ல பலன் உண்டு. இவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்துவது கடினம் என்றால் விளைவுகளுக்கும் மனிதன்தான் பொறுப்பு.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 247

கேள்வி: காவிரி பிரச்சனை எப்போது தீர்க்கப்படும்?

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புகிறோம் அப்பா. மனிதர்கள் இருக்கும் வரையிலும் எதாவது மனிதர்குள்ளே பிரச்சனைகளும் பிணைப்புகளும் அல்லது சிக்கல்களும் இருந்து கொண்டேதான் இருக்கும். காரணம் காலந்தோறும் மாறலாம். ஆனால் மனிதர்களிடையே பகைமையும் கருத்து வேறுபாடுகளும் இருந்து கொண்டே தான் இருக்கும். எனவே தனி மனித ஒழுக்கம் தனி மனித பண்பாடு வளராத வரை இதை எதனாலும் யாராலும் தீர்க்க இயலாது. இது மனித ரீதியான பார்வை. விதியும் கர்மாவும் எப்படி அமைக்கப்பட்டு இருக்கிறதோ அப்படிதான் மனித மனம் செல்லும். இருந்த போதிலும் யாங்கள் இறையிடம் பிராத்தனை வைத்து இந்த சமாதான லோகம் என்றும் இருக்க வேண்டும். அப்படியொன்று இருக்க வேண்டும் என்று அன்றாடம் தவம் செய்து கொண்டுதான் இருக்கிறோம். இங்குள்ள மனிதர்களும் அங்குள்ள மனிதர்களும் எல்லா மனிதர்களும் இறைவனருளால் படைக்கப்பட்டவர்கள். இந்த உலகம் மட்டுமல்லாது அனைத்தும் இறைவனருளால் படைக்கப்பட்டவை. எனவே இதில் யாரும் ஆண்டானும் இல்லை. யாரும் அடிமையும் இல்லை. எல்லோருக்கும் எல்லாம் போது என்கிற உணர்வு ஒவ்வொரு தனி மனித மனதிலும் வர வேண்டும். அப்படி வருவது கடினம் என்றாலும் வர வேண்டும் வர வேண்டும் என்று எப்பொழுதுமே இறையிடம் வரம் வேண்ட அந்த வரம் வர வேண்டும் என்று யாமும் இத்தருணம் நல்லாசி கூறுகிறோம்.

கேள்வி: எந்த மந்திரங்கள் ஜெபிக்கலாம்?

இட்டமான (விருப்பமான) தெய்வத்தின் ரூபத்தை மனதிலே தரித்து எந்தவொரு மந்திரத்தையும் உருவேற்றலாம். ருத்ராட்சத்தைக் கையில் வைத்துக் கொண்டு ஓம் நமோ நாராயணா என்று சொல்லக்கூடாது என்று நாங்களும் கூறவில்லை. இறையும் கூறவில்லை. எதை வேண்டுமானாலும் வைத்துக் கொண்டு எந்த மந்திரத்தையும் மனமார மனம் ஒன்றக் கூறலாம். அதில் கட்டாயம் ஆன்ம உயர்வு உண்டு.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 246

கேள்வி: முற்பிறவியில் செய்த பாவங்களை நீக்குவதற்கு என்ன செய்வது?

இறைவனின் கருணையாலே ஒரு வார்த்தைக்குக் கூறுவதுதானப்பா. சென்ற பிறவியில் செய்தது இந்தப் பிறவியில் தாக்குகின்றது என்று. அது உண்மைதான். ஆனால் அதற்காக இந்தப் பிறவியில் யாரும் பாவமே செய்யாமல் இருக்கிறார்களா? இல்லையே. இந்தப் பிறவியிலும் தவறு மேல் தவறு செய்துவிட்டு அதற்கு சமாதானமும் கூறிக் கொண்டுதான் எம்முன்னே வந்து அமர்கிறார்கள். நீ இந்த பாவங்களை செய்து விட்டு வந்திருக்கிறாய். எம்முன்னே அமராதே. எழுந்து செல் என்று நாங்கள் கூறுவது அத்தனை சிறப்பாக இராது என்பதால்தான் பொதுப்படையாக சென்ற பிறவி பாவம் என்று கூறி வைக்கிறோம். அதே சமயம் ஒரு மனிதன் செய்கின்ற பாவத்தால் எத்தனை ஆத்மாக்கள் எத்தனை காலம் பாதிக்கப்படுகிறது? என்பதைப் பொறுத்தும் அந்த பாவம் முதல் பாவமா? அதாவது முன்னர் அந்த ஆத்மா இவனுக்குத் தீங்கு செய்ததால் அதற்கு பிரதிபலனாக இவன் ஒரு செயல் செய்து அந்த ஆத்மாக்கள் பாதிக்கப்பட்டனவா? அல்லது புதிதாக இவன் எடுத்த முடிவால் செயலால் அந்த ஆத்மாக்கள் பாதிக்கப்பட்டனவா? என்பதையெல்லாம் பார்த்து ஒரு மனிதன் செய்கின்ற செயல் அல்லது அந்த செயலால் ஏற்படுகின்ற விளைவு எத்தனை மனிதர்களுக்கு எத்தனை காலம் எந்தவிதமான கடினங்களைத் தந்திருக்கிறது? என்பதை பார்த்து அதே அளவு அதற்கு சமமான ஒரு பிரதிபலனை செய்த மனிதன் நுகரும் வரை ஒரு பாவம் கூட ஒரு மனிதனை விட்டு செல்லாது. ஆனால் குறுக்கு வழி எதாவது இருக்கிறதா? என்றால் ஏதுமில்லை. பெரும்பாலான பாவங்கள் மனிதன் அறிந்தே செய்வது. சில பாவங்கள் அறியாமல் செய்வது.

பதவி இருக்கிறதே என்ற மமதையில் செய்வது. தன்னிடம் நிறைய செல்வம் இருக்கிறது என்ற ஆணவத்தில் செய்வது தன் உடலில் பலம் இருக்கிறது என்று செய்வது. இப்படியெல்லாம் செய்துவிட்டு பிறகு அழுவதால் கூக்குரலிடுவதால் பலனென்ன? எனவே மெல்ல மெல்ல நுகர்ந்துதான் பாவங்களை அனுபவிக்க வேண்டும். ஆனால் இவற்றையெல்லாம் தெரிந்து கொண்ட பிறகு முதலில் ஒரு மனிதன் செய்ய வேண்டியது இனி விழிப்புணர்வோடு இருந்து கடுகளவு கூட பாவ எண்ணங்கள் இல்லாமலும் செய்யாமலும் வாழ முயற்சி செய்ய வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் அதிகம் அதிகம் அதிகம் அதிகம் புண்ணிய காரியங்களை தர்ம காரியங்களை செய்ய வேண்டும். அன்றாடம் ஒரு ஆலயமாவது சென்று மனம் ஒன்றுபட்டு வழிபாடு செய்ய வேண்டும். இதனைத் தொடர்ந்து கடைபிடித்தால் நல்ல பலன் உண்டு.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 245

கேள்வி: இறையை அடைவதற்கு ஸ்தூல வடிவில் குரு அவசியமா? அல்லது தனிப்பட்ட முயற்சியினாலேயே இறையை அடைய முடியுமா?

இறைவன் கருணையாலே யார் இருளை நீக்குகிறாரோ அவர் குரு. யார் பிறவித் தளையை நீக்குவதற்கு வழி காட்டுகிறாரோ அவர் குரு. இது ஒரு புறம் இருக்க ஒன்றை உணர்ந்து கொள்ள ஒன்றை கற்றுக் கொள்ள எது காரணமாக இருக்கிறதோ அது அனுபவமோ நிகழ்வோ சக உறவோ நட்போ இதன் மூலம் தக்க பாடம் கற்றுக் கொண்டோம். இனி விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்ற உணர்வு எத்தருணம் யார் மூலம் அல்லது எதன் மூலம் ஒரு மனிதனுக்கு வருகிறதோ அனைத்தும் குருதான். எனவே புறத்தோற்றத்தில் குருவைத் தேடுவதை விட மானசீகமாக இறைவனை வணங்கி குறிப்பாக இறைவனை குரு தக்ஷிணாமூர்த்தி ரூபத்திலே வணங்கி வந்தால் குரு தொடர்பான ஐயங்கள் நீங்கும். மனதில் உள்ள இருள் நீங்கும். மனித வடிவில் குருவைத் தேட வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை. எத்தனைதான் உயர்ந்த புண்ணியங்கள் செய்து பலருக்கு ஆன்மீக வழி காட்டுகிறேன் என்று ஒரு ஆத்மா பிறந்தாலும் இங்கு வந்த பிறகு சிறிது சேற்றைப் பூசிக் கொள்ளத்தான் செய்கிறது. எனவே அவன் 90 நல்ல விஷயங்களை போதித்து சில தவறான விஷயங்களை போதித்து விட்டால் அதைக் கேட்கின்ற மனிதனுக்கும் அந்தத் தவறு பாடமாகப் பதிந்து விடும். எனவே மனித விடிவில் பலரை சென்று பார்ப்பதை தவறு என்று கூறவில்லை. எல்லாம் கேட்டு விட்டு பிறகு இறைவனை மானசீகமாக வணங்கி எது நல்லது? எது அல்லது? என்பதை இறைவா நீ உணர்த்து என்று இறைவனிடம் சரணாகதி அடைவதே மெய்யான குருவிற்கும் குருவின் போதனைக்கும் ஏற்ற வழியாகும்.

கேள்வி: பிறவி தோறும் வரும் வாசனை காமம் குரோதம் (கோபம்) லோபம் (பேராசை) போன்றவற்றைக் கடக்க வழி:

வைராக்யத்தால் மட்டும்தான் கடக்க இயலும்.