ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 244

கேள்வி: வயதானவர்களின் கஷ்டங்களால் அவர்களுக்கும் துன்பம் அவர்களின் இரத்த சம்பந்தங்களுக்கும் துன்பம். இதற்கு யார் காரணம்? அவர்களா? அல்லது இவர்களா?

இறைவனின் கருணையாலே இது குறித்து வெளிப்படையாகப் பேசினால் மனிதர்கள் மனம் வேதனைதான் அடையுமப்பா. பொதுவாகப் பாரத்தால் அகவை (வயது) அதிகமானவர்கள் பல இல்லங்களில் புறக்கணிக்கப்படுவதும் அவர்கள் மனம் வேதனைப்படும் வண்ணம் இளையவர்கள் நடந்து கொள்வதும் பொதுவான விஷயமாக இருந்தாலும் கூட ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நன்றும் தீதும் பிறர் தர வாரா. ஒரு மனிதன் தன் பால்ய பருவத்திலே எதையெல்லாம் விதைக்கிறானோ அதனை அடுத்தடுத்து அறுவடை செய்துதான் ஆக வேண்டும். ஒவ்வொரு மனிதனுக்கும் மனசாட்சி என்று ஒன்று இருக்கிறது. தனக்கு நடக்கும் துன்பங்களுக்கும் கொடுமைகளுக்கும் யார் காரணம்? தான் எந்தெந்த சந்தர்ப்பத்தில் சூழலில் எப்படியெல்லாம் நடந்து கொண்டோம்? என்று அவனவன் மனதிற்குத் தெரியும். வெளிப்படையாக அதை அவன் கூறினால் அவனின் அனைத்துத் துன்பங்களுக்கும் காரணம் பலருக்கும் புரியும். எனவே ஒவ்வொரு மனிதனும் நேர்மையாக யார் மனதையும் புண்படுத்தாமல் ஒரு வாழ்க்கை வாழ்ந்தால் அவனுடைய வாழ்க்கையும் நன்றாகவே செல்லும்.

விதிவிலக்காக மிக மிக உத்தமமான அன்பர்களுக்கும் கடைகாலத்திலோ அல்லது இடைகாலத்திலோ கடுமையான துன்பங்கள் பிணியாகவோ பொருளாதார நெருக்கடியாகவோ அல்லது உறவு சிக்கல்களாகவோ ஏற்படலாம். அது போன்ற நல்ல ஆத்மாக்களுக்கு வினைக் கழிவாக அது ஏற்படுகிறது. அந்த வினை கழிந்தவுடன் அவன் மீண்டும் நலம் பெற்று விடுவான். ஆனால் சிறு வயதில் செய்த பிழைக்காக தவறுக்காக மத்திய காலத்திலும் அந்திம காலத்திலும் இடர்படுகின்ற ஆத்மாக்கள் அந்த இடர்களை நுகர்ந்துதான் ஆக வேண்டும். ஏன்? தன் இளமைக் காலத்திலே தன் பெற்றோர்களைப் புறக்கணித்தவர்கள் தன் கணவனின் பெற்றோரைப் புறக்கணித்தவர்கள் இன்று மட்டும் தனக்குப் பிறர் ஆதரவாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்? என்பதை அவனவன் மனசாட்சிப்படி சிந்தித்துப் பார்க்க வேண்டும். இருந்தாலும் கூட துன்பப்படுவதற்கு நீதான் காரணம் என்று கூறுவது அநாகரீகம் என்பது எமக்கும் தெரியும். எனவே இது போன்ற துன்பஙகளில் இருந்து ஒவ்வொரு மனிதனும் தன்னைத் தற்காத்துக் கொள்ள விழிப்புணர்வோடு பிறருக்கு முடிந்தவரை நலம் செய்து வாழ வேண்டும். தன்னைச் சார்ந்தோர்களுக்கு இயன்ற நன்மைகளை செய்ய வேண்டும். அகவை(வயது) அதிகமானவர்கள் மன ரீதியாக வாய் வழியாக மதித்தால் மட்டும் போதாது. மனதிற்குள் நல்ல மரியாதை செய்து வாழ்த்தினால் அவர்களை வணங்கினால் அப்படி வணங்குகின்றவர்களின் அந்திம காலம் (கடைசி காலம்) சிறப்பாகவே இருக்கும். எனவே இது போன்ற இக்கட்டான நிலையில் உள்ளவர்கள் மனதளவிலே இறைவனை எண்ணி வணங்கினால் இறைவன் கருணையாலே கட்டாயம் மாற்றங்கள் நேரிடும்.

தேகம் நலிவு பெறுவதும் அகவை (வயது) அதிகமாவதும் ஒவ்வொரு மனிதனுக்கும் நடக்கக் கூடியதுதான் என்பதை வாலிப காலத்தில் ஒவ்வொரு மனிதனும் உணர வேண்டும். அப்பொழுதுதான் தனக்கும் அந்திமம் (கடைசி காலம்) இருக்கிறது. அப்பொழுது பிறர் உதவியை எதிர்பார்த்து வாழ வேண்டும். அப்பொழுது யாராவது தன்னைப் புறக்கணித்தால் தன் மனம் வேதனைப்படும் என்கிற அந்த உணர்வு வரும். இவையெல்லாம் வெறும் பால பாடங்கள்தான். இன்னும் எத்தனையோ சூட்சுமங்கள் இருக்கிறது. ஆனால் வாழ்வியலும் அவசர கதியிலும் வாழ்கின்ற மனிதன் இதையெல்லாம் கவனிக்க எங்கே நேரமிருக்கிறது? என்று கூறினால் அவனையும் பிறர் கவனிக்க நேரமில்லாமல் போய் விடுமப்பா.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 243

கேள்வி: மதுரையில் மீண்டும் மோட்ச தீபம் ஏற்ற குருநாதர் அனுமதி அளிக்க வேண்டும்:

இறைவன் கருணையாலே பல்வேறுவிதமான பூஜைகளை இன்னும் எம் சேய்களுக்கு (பிள்ளைகளுக்கு) யாங்கள் அருளாணையிட்டு செயல்படுத்த வேண்டுமென்ற அவா (விருப்பம்) எமக்கு நிறைய இருக்கிறதப்பா. இப்பொழுது நீயும் உன்னொத்து அன்பர்களும் செய்துவரும் அறப்பணிகளே எமக்கு மிகவும் நெகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. இந்த நிலையிலே இன்னும் பல்வேறு விதமான பூஜைகளையும் யாங்கள் இறைவன் அனுமதித்த பிறகு கூறுவோம். அதே சமயம் எமக்கு வருத்தம் என்று கூற இயலா விட்டாலும் மனிதர்களுக்குப் புரிகின்ற வார்த்தைக்காக அதைக் கூறுகிறோம். இத்தனை ஆண்டுகள் எம்மிடம் வாக்கைக் கேட்டாலும் தமக்குள் பிணக்கு கொண்டு பிரிந்திருக்கின்ற மனிதர்கள் என்று ஒன்று சேருவார்கள்? அவர்கள் ஒன்று சேர்ந்தால் இன்னும் ஊர் கூடி தேர் இழுக்கலாம். ஆனால் எமது வாக்கு என்று அறிந்தாலும் கூட அதையும் கேட்க மறுக்கின்ற விதியமைப்பு கொண்ட மனிதர்கள் நிறைய நிறைய அன்பர்கள் இருப்பதால் சற்று கால அவகாசத்திற்குப் பிறகு இறைவன் அருளாணையிட்ட பிறகு யாம் நீ வினவிய வினாவிற்கு விடை கூறுகிறோம். அதுவரை செய்கின்ற பணியை மேலும் சிறப்பாக மேலும் ஒற்றுமையோடு செய்ய நல்லாசிகள்.

கேள்வி: யார் கேட்டாலும் கருணை செய்வீர்களா? அல்லது மனமார பிராத்தனை செய்பவர்களுக்குத்தான் கருணை காட்டுவீர்களா?

இறைவனின் கருணையாலே கேட்கின்ற விஷயமல்ல. கேட்கின்ற மனிதனல்ல. அவன் வினைப் பயன்களின் தொகுப்பை வைத்து தானப்பா நாங்கள் எதையும் செயலாற்ற முடியும். நல்ல விஷயங்களை பொதுவாக உபதேசம் செய்யலாம். ஆனால் இன்றே என் கஷ்டத்தையெல்லாம் நீக்கு. இல்லையென்றால் நீ இருப்பது பொய் என்று ஒருவன் வந்தால் நாங்கள் மெளனத்தைத் தவிர வேறு எதையும் கடைபிடிக்க இயலாது. இருந்தாலும் மெய்யாக மெய்யாக மனமார இறைவனையோ எம்மையோ ஒருவன் துதித்து ஒரு செயலில் இறங்கினால் கட்டாயம் நாங்கள் இறைவனருளால் வழி காட்டுவோம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 242

கேள்வி: ஒருவர் கண்டிப்பாக தர்ப்பணம் செய்ய வேண்டுமா? அதனால் என்ன பயன்?

அர்ப்பணத்தோடு செய்தால் அது தர்ப்பணம். செய்து தீர வேண்டியிருக்கிறதே என்று செய்தால் அது அவலம். எனவே இது போன்ற பூஜைகள் எதற்காக ஏற்படுத்தப்பட்டன? என்று ஊன்றி கவனித்தால் ஒருவிதமான பொருளாதார சுழற்சி தெரியும். ஒரு தனி மனிதனைப் பார்த்து இயல்பாகவே பிறருக்கு உதவு என்றால் உதவ மாட்டான். அவனை போன்றவர்களுக்கு புரிய வைத்து இது போன்ற பூஜைகள் மூலம் சில தர்ம காரியங்களையும் சில மந்திரங்களை உருவேற்றி அதன் மூலம் அவன் பூர்வீக தோஷங்களைக் குறைப்பதற்குண்டான யுக்தி. கட்டாயம் அவரவர்களால் இயன்ற அளவு செய்து வருவது சிறப்பு. பூர்வீக தோஷத்தையும் எந்த குடும்பத்தில் ஒரு மனிதன் பிறந்திருக்கிறானோ அந்தக் குடும்பத்தில் உள்ள பூர்வீக தோஷமும் அந்த மனிதன் எத்தனை பிறவிகளில் சேர்த்த பாவத்தை நீக்குவதற்கு இது ஓரளவு உதவும். ஏன் என்றால் பெயரளவிற்குதான் இத்தருணம் இது நடந்து கொண்டிருக்கிறது. மீதியைக் குறைப்பதற்கு என்ன வழியென்றால் யாங்கள் (சித்தர்கள்) கூறுவது போல போதுவாக பக்தியும் தர்மமும் இருந்தாலும் இறைவனை பைரவர் வடிவத்திலே வணங்கி பைரவருக்கு இயன்ற வழிபாடுகளை தொடர்ந்து செய்து வர நன்மையுண்டாம்.

கேள்வி: லட்சுமி நரசிம்மர் காயத்ரி மந்திரம்:

அப்பனே இக்கலிகாலத்தில் எது கிடைக்கிறதோ அதை உள்ளன்போடு ஓது. கட்டாயம் இறைவனருள் உண்டு. மந்திரத்திலே தவறும் பிழையும் இருக்கலாம். அது தெரிந்த பிறகு திருத்திக் கொள்ளலாம். தெரியாத நிலையிலே தவறாக உச்சரிப்பதால் இறைவன் ஒன்றும் சினம் கொள்ளப் போவதில்லை. எனவே மந்திரத்தைத் தவறாக உச்சரிப்பதால் குற்றம் வந்துவிடப் போவதில்லை. ஆனால் மனதிலே தவறான எண்ணங்கள் இருந்தால்தான் அது பாவமாக மாறும். மனம் சுத்தமாக பரிசுத்தமாக இருக்கும் நிலையில் இறைவன் எப்படி அழைத்தாலும் இறைவனுக்கு மகிழ்ச்சியே.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 241

கேள்வி: ஒரு மனிதன் மற்றவர்களால் பாதிக்கப்பட்டால்?

இறைவன் கருணையால் இவன் சுற்றி வளைத்துக் கேட்பதே செய்வினை குறித்துதான். இந்த செய்வினையால் (வினாவைக் கேட்டவனல்ல வினாவை கேட்பித்தவனைப் பற்றி யாங்கள் கூறுகிறோம்) தன் குடும்பம் பாதிக்கப்பட்டு இருப்பதாக எண்ணுகிறான். எம்மிடமும் முன்பு வந்து வாக்கை(ஜீவநாடி) அறிந்திருக்கிறான். இதழ் (ஜீவநாடி) ஓதுபவனிடம் சில பூஜைகளை செய்ய யாம் (அகத்திய மாமுனிவர்) அருளாணை இட்டிருந்தோம். ஆனால் பல்வேறு காரணங்களால் அது பூர்த்தியடையவில்லை. அது பூர்த்தியடைந்த பிறகு அன்னவனுக்கு வாக்கு உண்டு என்றாலும் இதுபோல தொடர்ந்து ஒரு மனிதன் எண்ணுவது போல உண்மையானது என்றே வைத்துக் கொள்வோம். அந்த அதர்வண வேதத்தால் ஒரு மனிதன் பாதிக்கப்பட வேண்டும் என்று அவன் விதியில் இருந்தால் அந்த பாதிப்பு வரத்தான் செய்யும். இருந்தாலும் தடைபடாத பக்தியும் தாராளமான தர்மமும் இருந்தால் இதிலிருந்து ஒரு மனிதன் வெளியே வந்து விடலாம். சுக்ர வாரமும் (வாய்ப்பு இல்லாதவர்கள்) அனலி வாரம் (ஞாயிறு) உக்கிரமான அன்னையை வணங்கி வர இது போன்ற பிரச்சினைகளிலிருந்து மெல்ல மெல்ல விடுபடலாம்.

கேள்வி: ஆதித்ய ஹ்ருதயம் சொல்லுவதன் மூலம் பிறவியைப் பற்றி அறிந்து கொள்ள முடியுமா?

ஆதித்ய ஹ்ருதயம் ஓது என்று கூறினால் ஒருவன் வினவுவான் (கேட்பான்). ஏன் ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் என்று இளங்கோ கூறியிருக்கிறானே? அதைக் கூறக்கூடாதா? என்று. அதைக் கூறு என்று கூறினால் இல்லையில்லை வடமொழியில்தான் சக்தி அதிகமாக இருக்கிறது. வடமொழியில் உள்ள காயத்ரி மந்திரத்தை சொல்லலாமா? என்று கேட்பான். முன்பு கூறியதுதான் இதற்கும். தாராளமாக ஆதித்ய ஹ்ருதயமும் கூறலாம். வேறு வகை அவரவர்கள் அறிந்த எந்த மொழியாக இருந்தாலும் அந்த மொழி மந்திரங்களையும் கூறலாம். நல்ல ஆத்ம பலம் பிறக்குமப்பா.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 240

கேள்வி: இராம ரக்ஷா ஸ்தோத்ரம் பற்றி:

மிக மிக உயர்வு. அந்த உயர்வைக் காட்டிலும் எதாவது ஒரு வார்த்தை இருந்தால் அந்த வார்த்தைகளை இங்கே பயன்படுத்திக் கொள்ளலாம். அதைத் தவிர வேறு கூற யாது இருக்கிறது அப்பனே?

கேள்வி: பரணி கிருத்திகை அஷ்டமி நவமிகளில் தாங்கள் வாக்கை (ஜீவநாடி வாக்கு) அளிப்பதில்லை என்பது உண்மையா?

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் பரணியோ அட்டமியோ நவமியோ கிருத்திகையோ சந்திராஷ்டமமோ எமக்கு (அகத்திய மாமுனிவர்) ஏதும் இல்லையப்பா. எம்மைப் பொருத்தவரை புரிதல் உள்ள மனிதன் வந்து அமர்ந்தால் (ஜீவநாடி முன் அமர்ந்தால்) அதே போதும். நாங்கள் (சித்தர்கள்) அல்லும் பகலும் அறுபது நாழிகையும் (ஒரு நாள்) வாக்கு உரைக்கத் தயார் இறைவன் அனுமதித்தால். ஆயினும் சுருக்கமாக வெளிப்படையாகக் கூற வேண்டுமென்றால் வருகின்ற மனிதனின் பூர்வீக பாவங்கள் கடுமையாக இருக்க அவன் வினவுவதும் லோகாய விஷயமாக இருக்க ஏற்கனவே பாவங்கள் அவனை முன்னேற விடாமல் தடுத்துக் கொண்டு இருக்க வேதனையில் வந்து அமரும் அவனுக்கு எதாவது ஒரு வழியைக் காட்ட வேண்டுமென்றால் விதி வழிவிட வேண்டும். ஆனால் லோகாய விஷயமாக அவன் கேட்கின்ற வினாவிற்கு யாம் இறைவன் கருணையால் விடையைக் கூறி அதை அவன் பின்பற்றி மேலேறி வர வேண்டத்தான் நாங்கள் காலத்தைப் பார்க்கிறோமே தவிர பொதுவாக ஞானத்தை அறிந்து கொள்வதற்கு எக்காலமும் தடையல்ல.

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 95

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 239

கேள்வி: முருகனின் தரிசனம் வேண்டும்? அதற்கு என்ன செய்ய வேண்டும்? அது எப்போது நடக்கும்?

முருகனின் தரிசனம் வேண்டுமென்றால் யானை துரத்த வேண்டும். யானை துரத்தினால் முருகனின் தரிசனம் கிடைக்கும். இதுதான் யாம் அன்று கண்டது. இருந்த போதிலும் இறைவனை தரிசிக்க வேண்டும் என்று முன்பு எம்மிடம் பலரும் பலமுறை வினவியிருக்கிறார்கள். யாங்கள் அப்பொழுது கூறிய வாக்கையே இப்பொழுதும் கூறுகிறோம். இறையைத் தரி இறை சிக்கலாம். தரி சிக்கலாம். எனவே உள்ளத்தில் இறைவனை இடையறாது தரித்தால் இறையைத் தரிசிக்கலாம். மனம் இறையைத் தவிர வேறு எதனையும் எண்ணாத நிலை வருகின்ற சூழல் வரும் வரை இறை தரிசனம் என்பது கடுமையான போல மனிதனுக்குத் தெரியும். ஆனால் மனிதன் இறைவனை நோக்கி செல்வதே லோகாய விஷயங்களுக்குத்தான். இறைவா எனக்கு அது வேண்டும் இறைவா எனக்கு இது வேண்டும் என்று அது வேண்டும் இது வேண்டும் என்ற வேண்டாத எண்ணம் கொண்டு எதுவும் வேண்டாம் நீ மட்டும்தான் வேண்டும் என்று வேண்டுகின்ற எண்ணத்தோடு இறையை நோக்கி சென்றால் அக்கணமே இறை தரிசனம் நிச்சயம்.

கேள்வி: தமிழகம் முழுவதும் தொழிலில் ஒரு தேக்கம் ஏற்பட்டுள்ளது. பல தொழிலாளர்கள் வேலையில்லாமல் கஷ்டப்படுகிறார்கள். இந்த நிலை மாற அருளாசி வேண்டும்:

இறைவனின் கருணையாலே பொதுவாக சமுதாய குறைபாடுகள் நீங்குவதற்கு அவ்வப்போது அன்பர்கள் வாய்ப்புள்ள இடத்திலே ஒன்று கூடி கூட்டு வழிபாடுகள் செய்வது ஒன்றுதான் எளிய வழியாகும். அதனைத் தொடர்ந்து செய்தால் ஒட்டுமொத்த மனித சமுதாயத்தின் குறைபாடுகள் மெல்ல மெல்ல நீங்கும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 238

கேள்வி: ஆப்பூர் மலையில் சுதர்சன ஹோமம் நடத்த ஆசி வேண்டும். அந்த மலையின் அடிவாரத்தில் இருக்கும் பெருமாள் பற்றி:

இறைவனின் கருணையைக் கொண்டு முன்னரே முன்னரே இச்சுவடி வந்த பொழுதிலேயே யாம் அருளாணையிட சில சேய்கள் மூன்று தினங்கள் அங்கு அமர்ந்து சகல விதமான யாகங்களையும் செய்து பூர்த்தி கண்டார்கள். பிறகு மீண்டும் ஒருவன் வந்தும் யாகம் செய்திருக்கிறான். எனவே தக்க காலத்தில் மீண்டும் அங்கு இறைவனருளால் யாகம் நடைபெறும். இறைவன் கருணையாலே அந்த பரம்பொருள் மஹாவிஷ்ணுவாக வெங்கடேசப் பெருமாளாக அருளுகிற அம்மலையிலே இன்னும் 60 க்கும் குறையாத சித்த பெருமக்கள் அரூபமாக தவம் செய்து கொண்டிருக்கிறார்கள். முழுமதி நிறைமதி காலங்களிலே வழிபாடு செய்ய இதனை தக்க அன்பர்கள் உணரலாம் ஆசிகள்.

கேள்வி: நாராயணா என்று கூற வேண்டுமா? அல்லது ஓம் நமோ நாராயணா என்று கூற வேண்டுமா?

ஓம் நமோ நாராயணாய நாராயணாய அல்லது மகாவிஷ்ணுவே சரணம் என்று எப்படி கூறுவது? என்பதை விட எந்த மனோபாவத்தில் ஒரு மனிதன் கூறுகிறான் என்பதைதான் இறைவன் பார்க்கிறார். எனவே வார்த்தைகளில் பிழையில்லாமல் இருக்க வேண்டும் சரியாக உச்சரிக்க வேண்டும் என்பது மட்டுமல்ல மனதிலும் வேறு சிந்தனைகள் இல்லாமல் உச்சரித்தால் அதுதான் மந்திரம். அப்படி உச்சரிக்கின்ற ஒரு நிலை வரும் வரை ஒரு மனிதன் தொடர்ந்து பயிற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். எனவே இதில் எத்தனை அட்சரம்? என்பதை விட அவன் திறம் எத்தனை? என்பதையே இறை பார்க்கும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 237

கேள்வி: அஷ்டாவக்ரரைப் பற்றி:

இறைவனின் கருணையால் உடல் அதாவது தேகம் (உடல்) எட்டு விதமாகத் திரிந்து பார்ப்பதற்கு அவலட்சண தோற்றத்தோடு தன்னை இருக்குமாறு இறையிடம் வரம் கேட்டு வந்த மிகப்பெரிய ரிஷி அந்த அஷ்டாவக்ர ரிஷியாகும். பலரும் அவரைப் பார்த்து பரிகாசம்(நிந்தனை) செய்த பொழுது மெளனமாக அதனை அவர் எதிர்கொண்டார். அந்த மகான் மட்டுமல்ல ஒவ்வொரு ஞானியும் தான் உணர்ந்ததை தான் அடைந்ததை தான் எந்த நிலையை நோக்கி நகர்ந்து வந்திருக்கிறோமோ அந்த நிலைக்கு ஒவ்வொரு ஆத்மாவும் வர வேண்டும் என்ற பரந்த எண்ணத்தோடு உபதேசம் செய்கிறார்கள். ஆனால் சிக்கல் எங்கே இருக்கிறது? மாயையும் அறியாமையும் விடாத வரை ஒரே கணத்தில் உயர்ந்த நிலை எந்தவொரு ஆத்மாவிற்கும் சித்திக்காது. இன்னவன் கூறியது போல் எதும் தேவையில்லை. அந்த அஷ்டாவக்ரரின் முறைகளைக் கடைபிடித்தால் மேலேறி விடலாம் என்பது மெய்யிலும் மெய்யே. ஆனால் அதைக் கண்டு உணர்ந்து கேட்டு புரிந்து கொள்வதற்காக ஒரு ஆத்மாவிற்கு கோடிக்கணக்கான பிறவிகள் தாண்டிவிடுமே? எனவே அப்படியொரு நுழைவாயில் இருப்பவனுக்குதான் இந்த உபதேசம் உண்மையாக மெய்யாக புரியுமப்பா. இல்லையென்றால் வெறும் செவியாடல்களாக எத்தனையோ ஞான நூல்களை மனிதன் வாசிக்கிறானல்லவா? என்ன வாசித்தாலும் அவையெல்லாம் வெறும் ஏட்டோடு செவியோடு என்று வைத்து விட்டு நடைமுறை என்று வரும் பொழுது மிக மிக மிக மிக கீழ்த்தரமாக நடந்து கொள்கிறானே? அதை விடாத வரை எந்தவொரு ஆத்மாவும் மேலேறுவது கடினம். எனவே உன்னதமான உயர்ந்த அஷ்டாவக்ர மகரிஷியை அன்றாடம் நினைத்து குறிப்பாக குருவாரம் விரதமிருந்து அன்னவரை நினைத்து மானசீகமாக வழிபாடு செய்தால் கனவிலோ நேரில் வேறு வடிவிலோ வந்து மேலும் பல உபதேசங்களை அவர் செய்ய இறைவனருளால் காத்திருக்கிறார்.

கேள்வி: கனவிலே லிங்கம் தோன்றினால் என்ன பலன்?

நல்ல சகுனம் தானப்பா. தொடர்ந்து இறை காட்சிகளைக் கனவில் பார்ப்பதும் எதிர்பாராத இடத்திலே இறைவன் ஊர்வலத்தைப் பார்ப்பதும் சுப சகுனம். தோஷங்கள் குறைவதற்கு நல்லதொரு வாய்ப்பை இறைவனே தந்திருக்கிறார் என்று பொருள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 236

கேள்வி: எந்த சூழ்நிலையிலேயும் மனதில் நினைத்து சொல்லக்கூடிய மந்திரம் எது?

இறைவனின் கருணையைக் கொண்டு இப்பொழுது பஞ்சாட்சரம் என்று யாம் உரைத்தால் ஒருவன் வினவுவான் (கேட்பான்). ஏன் அட்டாட்சக்ஷரத்தைக் கூறக் கூடாதா? என்று. அட்டாக்ஷரம் என்று நாங்கள் கூறினால் இன்னொருவன் வினவுவான் ஏன் சடாக்ஷரத்தைக் கூறக் கூடாதா? என்று. தேவாரத்தை ஓது என்று கூறினால் ஏன் திருவாசகத்தை ஓதக்கூடாதா? என்பான். இல்லை ஆழ்வார்களின் மொழியை ஓதக்கூடாதா? என்பான். எனவே இது அவனவன் மனப்பான்மையைப் பொறுத்தது. இன்னும் கூறப்போனால் இன்னும் சிலர் கேட்பார்கள் மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம் என்று சித்தர்கள் கூறியிருக்கிறார்களே? என்று. எனவே மனம் செம்மையடைவதற்கு உண்டான மார்க்கம்தான் மந்திரம். வாய் மந்திரம் ஓத மனம் எதையோ எண்ணினால் அதனால் பலனேதும் இல்லை. கருவிகள் கூட இத்தருணம் இக்காலத்தில் மந்திரங்கள் ஓதுகிறது. அதற்காக கருவிகள் எல்லாம் முக்திக்கும் மோட்சத்திற்கும் சென்று விடுமா என்ன? எனவே மனதிலே ஒரு தெம்பும் மனதிலே குழப்பமற்ற நிலையும் மனதிலே பெருந்தன்மையும் எல்லா உயிர்களையும் நேசிக்கின்ற ஒரு தன்மையும் வளர்வதற்கு உதவுவதுதான் புராணங்களும் இது போன்ற மந்திர உபதேசங்களும். எனவே மந்திரம் என்பதை ஆதி நிலையில் உள்ளவர்கள் வாய்விட்டுக் கூறலாம். பிறகு நாள் செல்ல செல்ல மனதிற்குள் கூறுவது சிறப்பு. எது அவன் இஷ்டதெய்வமாக அதாவது பரம்பொருளின் எந்த வடிவம் அவனுக்குப் பிடித்திருக்கிறதோ அதை அவன் மானசீகமாக எந்த தருணத்திலும் எந்த இடத்திலும் உருவேற்றிக் கொண்டே இருக்கலாம். இது அவனுக்கு மட்டுமல்ல இந்த வாக்கு அனைவருக்குமே பொருந்தக்கூடிய வாக்கு ஆசிகள்.

கேள்வி: மறைந்த முன்னோர்களுக்காக என்ன விதமான பூஜைகள் செய்ய வேண்டும்?

இறைவனின் கருணையாலே இந்த உடல் உகுந்த எந்த ஆத்மாவிற்காகவும் யார் வேண்டுமானாலும் எந்தவிதமான வழிபாடும் அவரவர்களால் இயன்றளவு செய்யலாம். அனைத்தையும் விட அந்தந்த ஆத்மாவின் நினைவாக இயன்றளவு தர்ம காரியங்களை செய்தால் அது மிகவும் உயர்வாகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 235

கேள்வி: தந்தையே இறைவன் உறையும் இடம் கயிலை. கயிலை செல்ல பொருளாதாரம் இல்லை. பொருளாதாரம் இருந்தால் உடல் ஒத்து வரவில்லை. எனவே கயிலைக்கு சமமான ஸ்தலம் இங்கு எங்கு இருக்கிறது? எல்லா ஸ்தலங்களும் என்று சொல்லக்கூடாது குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.

இறைவன் உறையும் இடம் கயிலை என்று நீ கூறுகிறாய். வேறு மார்க்கத்தைப் பின்பற்றுபவனைக் கேட்டால் வேறு ஒன்றைக் கூறுவான். இறைவன் உறையும் இடம் அவனவன் கையிலே. எனவே அவனவன் கையைக் கொண்டு அவன் ஆற்றுகின்ற செயலும் அவன் மனப்பக்குவமும்தான் இறைவனை உணர்த்துகிறது. எனவே கயிலை சென்றுதான் இறைவனை வணங்க வேண்டும் என்று நாங்கள்(சித்தர்கள்) கூறவில்லையப்பா. மனிதர்களுக்கு ஒரு ஆசை தூர தூரமான இடங்களுக்கு சென்று வழிபட வேண்டும் என்று. அப்படியெல்லாம் முற்காலத்திலே செல்லும் பொழுது நீண்ட காலம் ஆகும். இக்காலத்திலும் கால அவகாசம் தேவைப்படுகிறது. அப்படி இறைவனை நோக்கி செல்கிறோம் என்ற உணர்வோடு பரிசுத்தமான எண்ணத்தோடு செல்லும் பொழுது அந்தப் புனிதப் பயணம் பூரத்தியடைகிறது. ஆனால் அப்படியோரு எண்ணமில்லாமல் எங்கு சென்றாலும் அந்த இறை பக்தி என்பது நிறைவடையாது. எனவே கயிலை தான் செல்ல வேண்டும் என்று நாங்கள் (சித்தர்கள்) கூறவில்லை. இருக்கும் இடத்திலேயே உருக்கமான வழிபாடும் நல்ல எண்ணங்களும் இருந்தால் அதுபோல மனிதனைத் தேடி இறைவன் வருவான். மன்னன் கட்டிய ஆலயத்தில் அல்ல பூசலார் (63 நாயன்மார்களில் ஒருவர்) இதயத்தில்தான் இறைவன் அன்று கலச விழா என்று தேடிச் சென்றார். எனவே மனம்தான் ஒவ்வொரு மனிதனுக்கும் கயிலையாக இருக்க வேண்டும். அவனவன் மனம்தான் திருவண்ணாமலையாக இருக்க வேண்டும். அவனவன் மனம்தான் திருப்பதியாக இருக்க வேண்டும். எனவே மனதை நல்ல எண்ணங்களால் இட்டு நிரப்புவதுதான் இறைவனுக்குப் பிடித்த பூஜையப்பா.

கேள்வி: புருவ மத்தி தியானத்தை எப்படி செய்வது?

வடகிழக்கு திசை நோக்கி பிரம்ம முகூர்த்தத்தில் பத்மாசனமிட்டு அமர்ந்து குறைந்தபட்சம் ஏக (ஒரு) நாழிகையாவது (ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள்) உடல் சோர்வில்லாமல் அமர இயலுகிறதா? என்று முயற்சி செய்து பிறகு மனதிலே உள்ள எல்லா வகையான எண்ணங்களையும் விட்டுவிட்டு முதலில் இஷ்ட தெய்வ நாமாவளியை மனதிற்குள் சொல்லிக் கொண்டே வந்தால் பின்னால் இந்த தவ முறை மெல்ல மெல்ல சாத்தியமாகும்.