கேள்வி: தஞ்சாவூர் சித்தர் அருட்குடிலில் வாசி யோகம் பயிற்றுவிக்கும் ஆசிரியரை நியமித்து பொது மக்களுக்கு நோய் நீக்கும் யோக முறைகளை சொல்லித்தர அனுமதி அளிக்க வேண்டும்?
இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புகிறோம். இன்னவனின் வினாவிற்கு அவன் கூறியதை அதாவது வாசியை திருப்பி வாசித்தால் அதே பிராணாயாமம் அப்பா. வாசியை திருப்பித் திருப்பி வாசி. அதே பிராணாயாமம். இன்னும் ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். எமை (அகத்திய மாமுனிவர்) நோக்கி வருகின்ற மனிதர்கள் பெரும்பாலும் கான பிம்பப் பேழையிலே (TV) எங்களை வைத்து கற்பனா கதையெல்லாம் பிம்பமாக்கிக் காட்டுகிறார்களே? அதை எண்ணியும் அதனை இயம்புங்கால் நல்விதமாய் காதைகளை(கதைகளை) வாசித்து வாசித்து அந்தக் காதைகளில் உள்ளவற்றைப் போலவே தொடர்ந்து இது போல எம் வாழ்க்கையிலும் சித்தர்கள் தலையிட்டு அனைத்தையும் தீர்த்து வைப்பார்கள் என்று நம்பிக்கையோடு வருகிறார்கள். தவறொன்றுமில்லை. இருந்தாலும் எப்படி படிப்படியான ஒரு முன்னேற்றமோ அஃதாெப்ப மழலை தன் மழலை மாறாத நிலையிலே கல்வி கற்க முனையும் பொழுது அந்த மழலையின் மன நிலைக்கு ஏற்ப வித்தைகள் அங்கே பயிற்று விக்கப்படுகின்றனவோ அதைப் போலதான் எம்மிடம் வருகின்ற மனிதர்களின் மனோ நிலையை அறிந்துதான் யாங்களும் வாக்கைக் கூறுகிறோம். இந்த நிலையிலே இங்கு வருகின்ற மாந்தர்களின் பூர்வீக பாவங்கள் குறைந்தால் ஒழிய வாசி யோகமோ அது தொடர்பான எந்த ஒரு சாகா கலையும் சித்திப்பது என்பது மிக மிக அரிது. இல்லையென்றால் ஆங்காங்கே மனிதர்கள் பயிற்றுவிப்பதாக கூறப்படுகிறதே? அங்கு சென்று வேண்டுமானால் கடுகளவு அறிந்து கொள்ளலாம். எனவே பாத்திரத்தை சுத்தி செய்யாமல் பாலைக் காய்ச்சினால் பால் திரிந்து விடுமப்பா. எனவே தான் எம்மைப் பொறுத்துவரை எம்மை(அகத்திய மாமுனிவர்) நாடி வருகின்ற மனிதனுக்கு யாங்கள் இப்படியெல்லாம் கடுமையான யோகப் பயிற்சியையெல்லாம் கூறாமல் இதுபோல் மிக எளிதான பக்தி மார்க்கத்தையும் அதோடு சார்ந்த தர்மத்தையும் கூறுகிறோம். இப்பொழுதும் கூறுகிறோம் இனியும் கூறுவோம் முன்பும் கூறினோம்.
நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். அவரவர் மனம் அவரவர் விதிப்படி செயல்பட்டு விட்டுப் போகட்டும். ஆனால் விதி மாற வேண்டும். எங்கள் மதியில் நிம்மதி அமர வேண்டும் என்று இந்த ஜீவ அருள் ஓலை முன்னே வருகின்ற மனிதன் 100 க்கு 100 விழுக்காடு யாம் கூறுவதை உளமார ஏற்றுக் கொண்டால் கட்டாயம் படிப்படியான முன்னேற்றம் இறைவனருளால் கிட்டுமப்பா. எனவே யாமே தக்க காலமறிந்து எம்மிடம் வருகின்ற மாந்தர்களுக்கு இதுகாலம் இவன் லோக வாழ்க்கையில் நுகர்ந்து வந்த துன்பங்கள் போதும். இனி யோக வாழ்க்கையை நோக்கி செல்லலாம் என்ற ஒரு நிலை வரும் சமயம் யாமே அது குறித்து போதிப்போம். சிலருக்கு போதித்தும் இருக்கிறோம். ஆனால் போதித்தும் பலன் ஏதுமில்லை. மீண்டும் மீண்டும் லோகாயம் நோக்கிதான் மனம் ஓடிக் கொண்டே இருக்கிறது. எனவே பற்றற்ற தன்மை வராத வரை பெருந்தன்மையான குணம் வளராத வரை என் வீடு என் மக்கள் என் மனைவி என் ஆஸ்தி என்கிற எண்ணம் விட்டுப் போகாத வரை வாசி யோகம் எவருக்கும் சித்திக்காதப்பா.
ஆதிக்கும் ஆதியான இறைபாதம் வணங்கி போற்றி அறிவிப்பேன் சிலவாக்கு இத்தருணம். அகத்தில் நுணுக்கமாய் கருத்தினை பதிய வைத்துவிடு. அறிவதை தெளிவாக உள் உணர்ந்து அறியவில்லை என்றால் எமது (அகத்திய மாமுனிவர்) வாக்கின் அர்த்தங்கள் விபரீதமாகுமப்பா. மனதை ஒரு நிலைபடுத்தியே எமது வாக்கினை அறிய வேண்டும். ஏற்றம் பெற ஏற்றம் பெற கர்மம் தொலைய பல தடங்கள் தரிசிப்பதும் தர்மங்கள் செய்வதும் என்றென்றும் சிறப்புதான் உயர் சிறப்புதான் எக்காலமும். காலகாலம் பல்வேறு மகான்கள் வழிபட்ட தடங்கள் (வழிகள்) சென்று வணங்குவதும் சிறப்புதான். அப்பனே (மகனே) எத்தனை தெய்வீக அருள் பெற்ற மாந்தன்(மனிதன்) ஆயினும் இறையை நேரில் காணும் பாக்கியம் பெற்றவன் ஆயினும் எத்தருணமும் எக்காலமும் தடங்கள் சென்று வணங்குவது சிறப்பாம். ஏனைய குழும அமைப்பில் வழிபாடுகள் செய்தாலும் பித்ருக்கள் தோஷ நிவர்த்தி செய்தாலும் தெய்வ தீவிலும்(இராமேஸ்வரம்) தடத்திலும் ஏற்பதும் சிறப்பாம். செப்புவேன் எம்மாந்தன் ஆயினும் இறை தடமோ தெய்வீக வழிபாட்டு கூடமோ அமைத்து அமைத்து அமைத்து எத்தனை தான் சிறப்பாக வழிபட்டாலும் எத்தகைய அமைப்பு தன்னிலே சதம் சதம் (நூற்றுக்கு நூறு) பிராயசித்தங்கள் எடுபடாது. அப்பனே மாந்தர்கள் எத்தனை ஞான உபதேசத்தை செய்தாலும் கேட்டாலும் மனம் கொள். சதம் சதம் (நூற்றுக்கு நூறு) அகத்தில் சத்தியமும் தெளிவும் உடைய எத்தகைய ஆன்மீக மாந்தனும் (மனிதனும்) இன்றைய அண்டத்தில் இல்லையப்பா. ஆட்சி வழி மாந்தர்களோடு எவ்வித தொடர்பும் எந்த நிலையில் எதற்காக வைத்தாலும் அங்கே ஆன்ம ஞானம் கறைபடுகிறதப்பா.
அதிகாரம் உள்ள மாந்தனையோ (மனிதனையோ) ஆட்சி வழி மாந்தனையோ ஆன்ம வழி அமைப்பில் சேர்த்தால் சேர்த்தால் அது அமைப்பு சிதறுண்டுதான் போகுமப்பா. எந்தநிலையிலும் தான் (நான் என்ற எண்ணம்) தோன்றக் கூடாது. தோன்றினால் இறைவன் தோன்ற மாட்டான். குற்றமோ பாவமோ செய்வது மாந்தர்களின் (மனிதர்களின்) இயல்புதான். பாதகமில்லை. பாதகம் அதில் இல்லையப்பா. செய்வதை உணர்ந்து திருந்தாமல் இருப்பதே பாதகமப்பா. பகருங்கால் லக்கினத்தை ராசியை திருட்டிக்க (பார்க்க) பாலனே பொன்னன் திருட்டிருக்க இத்தகு மாந்தர்கள் (மனிதர்கள்) எம்வழி வரத்தக்கவர்கள். பகருவேன் ஏனையோர் இது போல் இருந்தால் இறை கருணை பெறலாம். பகருவேன் ஏக ஏக மாந்தனுக்கும் சரியோ தவறோ தனி தனி உணர்வு உண்டு. தனித்தனி கருத்து உண்டு உண்டு என்பதால் அதனை ஏளனம் செய்வதில் எவருக்கும் லாபமில்லை. உணர்ந்து உரைக்க வேண்டினால் மட்டுமே அறஉரை உரைக்க வேண்டும். நல் உணர்வு அற்றோர் இறை அருளினால் மட்டுமே நன்மையை உணர் இயலும் இயலும். தீமையை விலக்க இயலும் இயலும். உயர்ந்ததை பேச இயலும் இயலும். உன்னதத்தை உன்னதமாய் உரைக்க இயலும் இயலும். உள்ளத்தில் உறுதியும் திடமும் அறமும் கொண்டு வாழ இயலும்.
இறைவன் அருளால் ஆலயம் ஆகமங்கள் என்பது மகான்களாலும் ஞானிகளாலும் வகுக்கப்பட்டு மயன் மற்றும் விஸ்வகர்மாக்களால் அவை படி எடுக்கப்பட்டு பின்னாளில் மனிதர்களுக்கு உரைக்கப்பட்டது. எனவே மனிதன் குடி இருக்கின்ற மனை சாஸ்திரம் என்பது வேறு. இறை அருள் நிரம்பி இருப்பதாக கருதப்படுகின்ற ஆலய சாஸ்திரம் வேறு. சில விஷயங்களில் ஒத்து வந்தாலும் பல விஷயங்களில் ஆகம விதிகள் வேறு. ஆனால் கலிகாலத்தில் மனிதரிடம் நல் தன்மை விட தீய தன்மை அதிகரித்து கொண்டே வருவதால் ஆலய விதிமுறைகள் மீறப்பட்டு மறக்கப்பட்டு வருவதால் மனிதனுக்கு கிடைக்க வேண்டிய நல்ல ஆற்றல்கள் கிடைக்காமல் போகிறது. தோஷங்கள் அதிகமாகிறது. பொதுவாக பொது விதி மனிதன் நடப்பதற்கும் வாகனங்கள் செல்வதற்கும் பயன்படுத்தப்படும் சாலையானது அகலமாகவும் நல்ல முறையிலே இருப்பதோடு மட்டுமல்லாமல் அந்த சாலையை விட பல மடங்குதான் ஆலயமும் மனிதன் குடி இருக்கும் இல்லமும் உயரமாக இருக்க வேண்டும். எங்காவது அந்த சாலை உயரமாகவும் ஆலயம் அந்த சாலையின் உயரத்தை விட பள்ளமாகவும் இருந்தால் கட்டாயம் அப்பகுதியில் இறையின் அருளாட்சி என்பது குறைவு என்று புரிந்து கொண்டு இதை தக்க முறையில் நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.
பிரகாரங்கள் முறையாக வகுக்கப்பட்டு 1 3 5 7 என்று பிரதானமாக ஒற்றை படையில் வைப்பது ஒரு வகையான ஆகமம். அதை போல் அஷ்ட திக்கு பாலகர்களையும் அந்தந்த திசைகளில் முறையாக பிரதிஷ்டை செய்து அங்கு பரிபாலனம் செய்யும் வண்ணம் வைக்கப்பட வேண்டும். இவை பல ஆலயங்களில் பின்பற்றப்படுவதில்லை. ஆலயம் என்பது முன்புறம் சென்றுவிட்டு அதே புறம் தான் வர வேண்டும் என்பது விதி. நான்கு புறம் மட்டுமல்ல அஷ்ட திக்குகளும் பாதை வைக்கலாம் தவறோன்றுமில்லை. ஆனால் காலப் போக்கில் இந்த முறை மறைந்து பின்னர் பாண்டிய காலத்தில் நான்கு முறையும் சோழர் காலத்தில் பிரதானமாக ஒரு வாயில் மட்டுமே திறக்கப்பட்டு மூடப்பட்டது. இந்த விதி எதனால் மீறப்பட்டது என்றால் பாதுகாப்பு கருதி எல்லா புறத்திலும் பாதை இருந்தால் அங்கே பாதுகாப்பு பணிகள் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்பதால் பிற்காலத்தில் அந்தந்த வாயில்களெல்லாம் மூடப்பட்டு பிரதான வாயில் மட்டும் மூலஸ்தானத்தை நோக்கி உள்ள வாயில் மட்டும் திறக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இதையெல்லாம் மனிதர்களாக தன் ஆட்சிக்காக சொந்த நலனுக்காக மீறப்பட்ட விஷயங்கள். உண்மையான ஆகமம் என்றால் ஒரு ஆலயத்திற்கு குறைந்தபட்சம் நான்கு புற வாயில்கள் இருக்க வேண்டும். கட்டாயம் ஆலயத்தை சுற்றி நெருக்கமாக வீடுகளோ அங்காடிகளோ (கடைகளாளோ) கட்டாயம் இருக்கவே கூடாது. ஆலயத்தை சுற்றி பிரதானமாக சாலைகளும் கட்டாயம் பசு மடமும் அந்த ஆலயத்தை சுற்றி அகலமான வீதிகளும் அந்த வீதிகளில் தேரோட்டம் வருவதற்கு உண்டான அந்த சூழல் இருக்க வேண்டும். இதுபோல ஆலயத்தில் உள்ள ராஜகோபுரம் உயர்ந்தும் மூலஸ்தான கோபுரம் சற்றே சாய்ந்து இருப்பதும் ஒரு பொதுவான விதி.
இன்னொன்று இந்த நிலை மாறி சில ஆலயங்களில் மூலஸ்தான கோபுரம் உயர்வாகவும் பிரதானமான ராஜகோபுரம் சற்றே உயரம் குறைவாகவும் கட்டப்படுகிறது. இது வேறு விதமான விதிமுறைகளில் உட்பட்டதாகும். இருந்தாலும் இது போன்ற பிரதான ராஜ கோபுரத்தை தொடர்ந்து அடுத்தடுத்து செல்லும் பொழுது ஒற்றைப் படை முறையே பின்பற்றப்படுவதுண்டு. 1 3 5 7 என்று எத்தனை எண்ணிக்கையில் வேண்டுமானாலும் கோபுரங்கள் அமைக்கப்பட்டு இறுதியாக மூலஸ்தான கோபுரம் அமைக்கப்படலாம். எனவே இந்த நிலையோடு நீ கூறியபடி பிரகாரங்களும் அமைக்கப்பட்டு அது எந்த அளவு ஆகமத்தை பின்பற்றப்பட்டு இருக்கிறது எத்தனை அடுக்குகள் கொண்ட கோபுரம் என்பதை மேலே உள்ள கலசம் அந்த எண்ணிக்கையில் இருந்து குறிப்பாக உணர்த்தும். ஆனால் பல இடங்களில் அந்த விதியும் மீறப்பட்டு இருக்கிறது. உதாரணமாக ஒரு பிரதான ராஜகோபுரத்திலே ஒன்பது அடுக்குகள் கொண்ட சாளரங்கள் துணை கோபுரங்களாக இருக்கும் பட்சத்திலே மேலே ஒன்பது கலசங்கள் வைக்கப்பட வேண்டும். அடுத்த கோபுரத்தில் மூன்று சாளரங்கள் துணை கோபுரங்களாக இருந்தால் மூன்று கலசங்கள் வைக்கப்பட வேண்டும். ஆனால் அப்படி எல்லாம் பல இடங்களில் இன்று பின்பற்றபடுவதில்லை. எப்படி விஞ்ஞானப்படி ஒரு அலையை கிரகிக்க முறையான அளவுகளில் அந்த அலைஉறிஞ்சி குழலை(ஆன்டெனா) அமைக்கிறார்களோ அப்படி முறை மீறி எல்லாமே உலோகம் தானே என்று எப்பிடி வைத்தால் என்ன என்று வைத்தால் முழுமையான முறையில் அதாவது முழுமையாக அந்த அலையை உள்வாங்க முடியாது. அதே போல பிரபஞ்ச ஆற்றலை விதிமுறைகள் மீறி கட்டப்படும் ஆலயங்களால் முழுமையாக உள்ளே வாங்க இயலாது. அங்கே வருகின்ற நல்ல எண்ணம் கொண்ட பக்தர்களால் இறை அருள் பரவுமே தவிர அங்கு உள்ள ஆகம விதிகள் மீறப்படுவதால் அங்கு எந்த நோக்கத்திலே அது கட்டப்பட்டதோ அந்த நோக்கம் காலப் போக்கிலே சிதறுண்டு போகும்.
இறைவனருளால் யாம் கூறவருவது யாதென்றால் உன் போல் எம் (அகத்திய மாமுனிவர்) மீது அவா (ஆவல்) கொண்டு இந்த ஓலை (ஜீவநாடி) வாயிலாக எமது வாக்கை மெய்யாக மெய்யாக மெய்யாக மெய்யாக நாடுகின்ற மெய்யன்பர்கள் அனைவருக்கும் பொருந்துவதாகும். ஆகுமப்பா அந்த லெளகீக வாழ்விலே துன்பங்களும் தோல்விகளும் துவண்டு விழ வைக்கும் நிகழ்வுகளும் வந்து கொண்டேயிருக்கும். அதற்கும் ஒரு மனிதன் இறைவன் திருவடியை உணர்வதற்கும் உண்டான முயற்சிக்கும் என்றுமே தொடர்புபடுத்தி பார்க்கக் கூடாது. இறைவனை வணங்குகிறேனே? எனக்கு இப்படியொரு துன்பம் வரலாமா? இறைவனை வணங்கிக் கொண்டே இருந்தால் நல்லது நடக்கும் என்கிறார்களே? ஆனால் அன்றாடம் பதறிப் பதறி வாழவேண்டிய நிலை இருக்கிறதே? என்றெல்லாம் அறியாமையால் மனிதன் புலம்புவது இயல்பு என்றாலும் அங்ஙனம் புலம்புலது எம்மைப் பொருத்தவரை ஏற்புடையது அல்ல. இந்த இல் (இல்லறம்) ஆனாலும் உறவானாலும் நட்பானாலும் கர்மவினைகளின் காரணமாக பிறப்பெடுத்து குறிப்பிட்ட மனிதர்களோடு குறிப்பிட்ட உறவு என்ற பந்தத்திற்குள் இந்த ஜென்மத்திற்கு என்று அது அடைபட்டு இருக்கிறது. இது போல் ஜென்ம ஜென்மமாய் எத்தனை தாய்? எத்தனை தந்தை? எத்தனை தாரம்? எத்தனை பிள்ளைகள்? கடந்த ஜென்மத்து தாய் அவளை நினைத்து ஏங்குவதா? அழுவதா? கடந்த ஜென்மத்து பிள்ளைகளை எண்ணி ஏங்குவதா? அழுவதா? இனிவரும் ஜென்மத்து உறவுகளை எண்ணி அழுவதா? சிரிப்பதா? என்றெல்லாம் மனிதன் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
தொலை தூர பயணத்திற்காக வாகனத்தில் அமரும் மனிதன் அருகருகே அமரும் பிற மனிதர்களோடு எந்தளவில் தொடர்பு கொள்கிறானோ அப்படியொரு வாழ்க்கை பயணத்திலே தான் உறவுகளும். அதற்காக இவர்களையெல்லாம் விட்டுவிடு இவர்களையெல்லாம் வெறுத்துவிடு என்றெல்லாம் யாம் (அகத்திய மாமுனிவர்) கூறவில்லை. இந்த நிலையிலே அவர்களுக்கு செய்ய வேண்டிய நீதியான நியாயமான கடமைகளை செய்வதோடு மனதளவிலே எந்தவிதமான பற்றுக்கும் இடம் தராமல் வாழ கடினம் பாராது முயற்சி செய்ய வேண்டும். இந்த கருத்தை நன்றாக மனதிலே வைத்துக் கொண்டால் ஒவ்வொரு மனிதனும் செழுமையாக வாழ்ந்து இறைவனின் அருளை புரிந்து கொள்ளக் கூடிய அந்தவொரு சூழலுக்கு தன்னை ஆட்படுத்திக் கொள்ளலாம்.
அடக்கத்தோடு ஒருவன் செய்கின்ற அறமானது (தர்மமானது) இருமடங்கு மும்மடங்கு பஞ்சமடங்கு (ஐந்து மடங்கு) என்று அதன் அடக்கம் காரணமாக உயர்ந்து கொண்டே செல்லும். அஞ்ஞான அழுக்கு ஒரு மனிதனை விட்டு செல்ல வேண்டுமென்றால் அதற்கேற்ற மனப் போராட்டங்களும் மனத்தாக்கங்களும் இருந்து கொண்டேயிருக்கும். மனிதன் எதிர்பார்க்கின்ற சுகமான வாழ்வு சம்பவங்களால் மட்டும் ஒரு மனிதனின் அறியாமை அஞ்ஞானம் அகன்று ஞானம் வந்துவிடாது. எனவே மனொரீதியாக என்றும் நீ திடமாக இரு. இறைவன் அருளாலே இயன்ற பக்தியை செய்து கொண்டே தர்ம காரியங்களை செய்து கொண்டே இருக்க இருக்க அந்த பாவவினைகள் முன்ஜென்ம வினைகள் குறைய குறைய பக்குவமும் பரிபக்குவமும் புரிதலும் இறை நோக்கி செல்ல வேண்டும் என்கின்ற தீவிரமும் வருமப்பா. செய்கின்ற தர்மங்கள் எல்லாம் மேலும் இறைவனருளைக் கூட்டி வைக்கும் முன் ஜென்ம பாவத்தை கழித்து வைக்கும் புண்ணியத்தை பெருக்கி வைக்கும் தேவையற்றதை எல்லாம் அது வகுத்து வைக்கும். மனிதனுக்கு துக்கமோ துயரமோ இன்பமோ துன்பமோ அதற்கேற்ற சிந்தனையோ அல்லது நடைமுறை நிகழ்வுகளோ அனைத்தும் ஊழ்வினைகளின் எதிரொலிதானப்பா. மனதை தளரவிடாது செய்கின்ற இறை பக்தி தொண்டு தன்னலமற்ற தர்மகாரியங்கள் சாத்வீக வாழ்வு கடமைகளை சரியாக ஆற்றுதல் இவற்றை ஒரு மனிதன் கடைபிடித்தால் அவனுடைய தேவையற்ற குழப்பங்களும் ஐயங்களும் வேறு கலக்கங்களும் எழாமல் இருக்கும்.
உலகரீதியாக ஒரு மனிதனின் செயல்பாட்டை பார்ப்பதை விட கர்மரீதியாக பார்க்கும் பொழுது ஒரு அமைதி கிட்டும். நியாயம் நியாயம் இல்லை என்பது அடுத்த நிலை. இந்த நிலையிலே விதி என் மகனை தவறான வழிக்கு அழைத்து செல்கிறது. விதி என் மகனை தவறு செய்ய தூண்டுகிறது என்று நியாயம் கற்பித்து விட்டு அமைதியாக இருந்து விடலாமா? இருந்து விடக்கூடாது. விதி ஒரு மனிதனை இறை வழியில் அழைத்து சென்றால் விட்டுவிடலாம். விதி ஒரு மனிதனை துறவு நிலைக்கு அழைத்துச் சென்றால் விட்டுவிடலாம். விதி ஒரு மனிதனை தர்மம் செய்ய தூண்டினால் விட்டுவிடலாம். ஆனால் விதி ஒரு மனிதனை தவறு செய்ய தூண்டும் பொழுது கூடுமானவரை நேர் வழியில் சாத்வீக வழியில் ஆன்மீக வழியில் அதனை திருத்த மாற்ற முயல வேண்டும். அப்பொழுதும் நன்றாக கவனிக்க வேண்டும். தவறு செய்யும் மனிதனை உலக ரீதியாக தண்டிக்கின்ற முறைகளோ கண்டிக்கின்ற முறைகளோ சித்தர்களுக்கு ஏற்புடையது அல்ல. நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். பழுது வராத கருவிகள் உலகில் ஏதும் இல்லை. கருவி என்று இருக்குமானால் பழுது என்பது வந்து கொண்டே இருக்கும். மனிதன் ஒருவன் இருக்கும் வரையில் அவனிடம் குறைகளும் குற்றங்களும் இருந்து கொண்டே இருக்கும். எப்படி செம்பை எத்தனை துலக்கி வைத்தாலும் மீண்டும் களங்கம் வந்து விடுகிறதோ மனிதன் தன்னை அன்றாடம் சுத்தி படுத்திக் கொண்டிருக்க வேண்டும். அன்றாடம் சுத்திபடுத்த தவறினால் செம்பிலே ஒரு களிம்பு ஏறுவது போல மனிதனிடம் மாசு ஏறிவிடும். எனவே அதிகம் மாசு ஏறிவிட்டால் ஏறிவிட்டால் ஏறிவிட்டால் அதனை தூய்மைபடுத்துவது கடினமாகிவிடும். எனவே அன்றாடம் செம்பை துலக்குவது போல அன்றாடம் ஆடையை தூய்மை செய்வது போல அன்றாடம் மனிதன் தன் மனதை தூய்மை செய்து கொண்டே இருக்க வேண்டும்.
தன்னைத்தான் நீதிபதியாக தன்னைத்தான் குற்றவாளியாக வைத்துக் கொண்டு மனிதன் என்றுமே அன்றாடம் செய்கின்ற செயல்களையெல்லாம் சீர்தூக்கி பார்த்து ஒரே தீர்ப்பை அவன் எழுத வேண்டும். நாம் செய்த இந்த செயலை எல்லாம் மற்றவர்கள் செய்தால் நாம் ஏற்றுக் கொள்வோமா? நாம் செய்கின்ற இந்த செயலை நாளை நமது மகன் செய்தால் ஆதரிப்போமா? கட்டாயம் ஆதரிப்போம் அதற்கு வழி வகுப்போம் உதவியும் செய்வோம் என்றால் அந்த செயலை தொடரலாம். தன் மகன் செய்யக் கூடாத செயலை அல்லது செய்ய வேண்டாத ஒரு செயலை கட்டாயம் தகப்பனும் தாயும் செய்யக்கூடாது. இது தான் ஒரே வழி தவறிலிருந்து தப்பிக்க. இப்படி மனதை நன்றாக ஆய்ந்து ஆய்ந்து ஆய்ந்து பார்த்து மனிதன் சோதனை செய்து சோதனை செய்து தன்னை நன்றாக உயர்த்திக் கொள்ள பாடுபட வேண்டும்.
இறைவனின் கருணையால் இதனை யார் கேட்டார்? இந்த போதனைகள் எதற்கு போதனைகள் கேட்டு கேட்டு சலித்து விட்டது எமக்கு. தத்துவார்த்த விளக்கங்கள் கேட்டு கேட்டு புத்தி பேதலித்து விட்டது. இவையெல்லாம் தேவையில்லை. இவைகளை தாண்டி அதிசயங்களை எதிர்பார்க்கிறோம். அதிசயங்களை எதிர்பார்த்து மனித சக்திக்கு மீறிய ஒரு செயல் இக்குடிலில் (அகத்தியர் அருட்குடில் தஞ்சாவூர்) நடந்தால் தான் இறை நம்பிக்கையும் சித்தர்களின் மீது நம்பிக்கையும் பலருக்கு ஏற்படும். அப்படி ஏற்படும் பொழுது அதை எப்பொழுதும் சத்சங்கமாக கூடிப்பேசி புளங்காகிதம் அடையலாம் என்று ஒருவன் இருக்கிறான். இறைவன் அருளால் அதனை நடத்த ஞானியர் நிலையில் எப்பொழுதுமே ஒப்பிதம் இல்லை என்றாலும் அது தப்பிதம் இல்லை என்ற நிலையில் இறை அனுமதிக்கும் தருணம் அப்படி வெளிப்படையாக ஒரு வித்தையை சுருக்கமாக கூற போனால் அது ஒரு வித்தை தான். அந்த வித்தையை காட்டலாம். அது ஒருபுறம் இருக்க அன்றாடம் அதிசயங்கள் நடந்து கொண்டே தான் இருக்கிறது. ஒவ்வொரு மனிதனை சுற்றியும் மனிதன் விழிப்புணர்வோடு கண்டு அதனை உணரத் தவறினால் அதற்கு சித்தர்களோ மகான்களோ ஞானியர்களொ பொறுப்பில்லை. அன்றாடம் இக்குடிலிலும் நடந்து கொண்டே இருக்கிறது. ஒரு நல்ல தூய பக்திமானின் வாழ்க்கையிலும் நடந்து கொண்டே இருக்கிறது. அவன் ஆய்ந்து பார்க்கவேண்டும். அதை புரிந்து கொள்ளும் தகுதியை அவனே வளர்த்துக் கொள்ள வேண்டும்.
கேள்வி: உடல் என்ற கருவியை பராமரிப்பது எப்படி ஐயனே?
இறைவன் அருளால் பெற்ற உடலை பராமரிக்க பல மனிதர்களுக்கு தெரியுமப்பா. சில ஆயிரம் விலை கொடுத்து வாங்கிய ஒரு வாகனத்தை இயக்குவதற்கு திரவப் பொருளை நிரப்பாமல் தண்ணீரை விட்டு நிரப்பி ஓட்டு என்றால் யாராவது ஓட்டுவார்களா? அல்லது கல்லையும் மண்ணையும் அள்ளித் தெளித்து ஓட்டு என்றால் யாராவது ஓட்டுவார்களா? ஓட்டமாட்டார்கள். கருவி அந்த வாகனம் வீணாகி விடும் என்கிற அச்சம். ஆனால் இந்த உடலானது உடனடியாக வீணாகவில்லை என்பதால் எதையெல்லாம் உண்ணக் கூடாதோ அதையெல்லாம் உண்ணுவதும் எதையெல்லாம் செய்யக் கூடாதோ அதையெல்லாம் செய்வதும் இயல்பான விஷயமாகி விட்டது. பெரும்பாலான மனிதர்கள் உடலை நன்கு பராமரிக்க என்ன உண்ண வேண்டும்? என்பதை விட என்னவெல்லாம் உண்ணக் கூடாது என்று அறிந்து கொண்டால் போதுமப்பா. என்ன செய்ய வேண்டும்? என்பதை விட என்னவெல்லாம் செய்யக் கூடாது? என்பதை அறிந்து கொண்டால் போதுமப்பா.
கேள்வி: ஒருவர் பிறந்த நேரம் சரியாக கணிக்கப் படவில்லையென்றால் லக்னம் போன்ற விஷயங்கள் மாறிவிடும். இதற்கு என்ன செய்வது?
துல்லியமாக கணிக்க முடியாமல் ஜாதகம் தவறாக அமைய வேண்டும் என்ற விதி இருப்பதால்தான் அவ்வாறெல்லாம் நடக்கிறது. இதைப் போன்ற ஜாதக குறைபாடு உள்ளவர்கள் எல்லோருமே நவக்ரக பிராயச்சித்தம் செய்து கொள்வதும் வாய்ப்பு உள்ள பொழுதெல்லாம் நவக்கிரக ஸ்தலங்களுக்கு சென்று வழிபாடு செய்வதும் இல்லத்தில் அமர்ந்து நவக்கிரக அதிதெய்வ மந்திரங்களை உருவேற்றுவதும் கட்டாயம் ஜாதகத்தில் உள்ள குழப்பத்தை நீக்கி வழியைக் காட்டும்.
கேள்வி: சத்சங்கமாக அன்பர்களை அழைத்து வாக்கை அளிக்க வேண்டும். அப்படி இறை அனுமதிக்க நாங்கள் என்ன செய்ய வேண்டும் ஐயனே?
பலவற்றை செய்யாமல் இருந்தாலே போதுமப்பா. ஒருவனுக்கு ஒருவன் விதி மாறுபடுவது ஒருவனுக்கு ஒருவன் அவன் மதி அதனால் மாறுபடுகிறது. ஒருவனுக்கு ஒருவனின் மதி மாறுபடுவதால் சிந்தனையும் செயலும் மாறுபடுகிறது. இந்த இடத்தில் பொதுவாக நாங்கள்(சித்தர்கள்) ஒன்றை ஒருவனுக்கு கூறினால் அது இன்னொருவனுக்கு பொருந்தாது. நாங்கள் ஆதியிலிருந்து கூறுகின்ற விஷயம் இன்னமும் இங்கு சர்ச்சைக்குறிய விஷயமாகத்தான் இருக்கிறது. நன்றாக கவனிக்க வேண்டும். சிலரைப் பார்த்து ருணம் (கடன்) பெற்றாவது தர்மம் செய் என்று கூறுகிறோம். இந்த ஒரு கருத்தையே இன்னும் பலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அடுத்த நிலைக்கு எவ்வாறு அழைத்து செல்வது?
தொடர்ச்சி கேள்வி: தாங்கள் உணர்த்தலாமல்லவா ஐயனே?
இறைவன் அருளால் யாம் உணர்த்துவதை விட விதி நன்றாக உணர்த்திவிடும் அப்பா. இரைந்து கேட்கும் பொழுது தராத மனிதனுக்கு இறைவன் கள்வனை (திருடனை) படைத்திருக்கிறார். எனவே ஒரு மனிதன் தன்னை சுற்றி நடக்கின்ற பல்வேறு நிகழ்வுகளிலே துன்பப்படும் துயரப்படும் மனிதனைப் பார்த்து அங்கே நல்ல குணத்தை பயன்படுத்த வேண்டும். அங்கே அறிவை பயன்படுத்தக்கூடாது. இவன் உதவி கேட்கிறான். இவனுக்கென்ன? தேகம் ஆரோக்கியமாகத்தானே இருக்கிறது. இவன் கையேந்துவது தகாதது. இவனுக்கு எதற்கு தரவேண்டும்? என்று இவனாகவே ஒரு முடிவிற்கு வருகிறான். அடுத்தவனை பார்க்கிறான். இவனுக்கென்ன? இவன் குடும்பத்தில் இவனுக்கு போதிய ஊதியம் இல்லையென்றாலும் உடன் பிறந்தவர்கள் நன்றாகத்தானே இருக்கிறார்கள். அவர்கள் செய்யட்டுமே? அவர்களுக்கே இல்லாத அக்கறை நமக்கு எதற்கு? நாம் ஏன் இதிலே ஈடுபட வேண்டும்? அடுத்து இன்னொருவனை பார்க்கிறான். இவனுக்கென்ன? நன்றாகத்தானே இருக்கிறான். இவன் முட்டாள்தனமாக வாழ்ந்து எல்லாவற்றையும் இழந்து விட்டால் அதற்கு நானா பொறுப்பு? நான் எதற்கு அதிலே தலையிட வேண்டும்? என்றெல்லாம் மனிதன் தன் கைப்பொருளை இழப்பதற்கு முன்னால் மிக தந்திரமாக சிந்தனை செய்வதில் சாமார்த்தியத்தைக் காட்டுகிறான். பிறகு விதியும் தன் சாமார்த்தியத்தைத்தான் காட்டுமப்பா. எனவே அப்படியெல்லாம் அள்ளி அள்ளி தருகின்ற மனிதர்களையே விதி விடுவதில்லை எனும் பொழுது மற்றவர்களின் நிலையை எண்ணிக்கூட பார்க்கத் தேவையில்ல.
அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு: இந்த பாடலுக்கான விளக்கம் கீழே தனியாக கொடுக்கப்பட்டுள்ளது
பூ வாட்டம் பொன் ஆட்டம் மனம் இருக்க என்றென்றும் கொண்டாட்டம். தேன் ஆட்டம் சொல் இருக்க என்றென்றும் மகிழ் வாட்டம். தினை ஆட்டம் உளம் இருக்க என்றென்றும் அது உறுதி ஆட்டம். ஆண் ஆட்டம் பெண் ஆட்டம் எல்லாம் அடங்கும் காலம் ஆட்டத்தில் விதி ஆட்டம். முன்னே மாந்தர் வாழ்வு வினை ஆட்டம் போல் இருக்கும் மதி ஆட்டம். ஆடி மாந்தன் அவன் தனக்குத்தான் விதி ஆட்டம் போடுகிறான். தொடர்ந்து பிறவி ஆட்டம் தொடர அதற்கு ஒப்ப அவன் ஆடிய மதி ஆட்டம் விதி ஆட்டம் ஆடி கதி ஆட்டம் போடுதப்பா. வாழ்வு ஆட்டம் உயர் ஆட்டம் ஆட நலம் ஆட்டம் தொடரும். தப்பாட்டம் தவறாட்டம் ஆட தாழ்வு ஆட்டம் தொடரும். பெண் ஆட்டம் கண்டு பெண் நாட்டம் கொண்டால் வாழ்வின் ஆட்டம் தவறு ஆட்டம் ஆகும். புலன் ஆட்டம் வழியே மனம் ஆட முடிவில் திண்டாட்டம் ஆகுமப்பா. ஆட்டம் ஆட மெய் ஆட்டம் ஆட பொய் ஆட்டம் ஆடாது வாழலாம். விதி ஆட்டம் ஆடும் அதன் வழியாட்டம் யாவும் தொடர்ந்து சேர்க்கும் வீண் பழியாட்டம் நரி ஆட்டம் புத்தி பேதலிக்க அது சரி ஆட்டம் என்று அத்தருணம் மதி சொல்ல சரி ஆட்டம் அல்ல தப்பாட்டம் என விதி காட்டும். என்னாட்டம் ஆடினாலும் முடிவில் அந்தம் (முடிவு) ஆட்டம் வந்த பின்னே முதல் ஆட்டம் தொடங்கி முடிவு ஆட்டம் வரை யாவும் கர்ம ஆட்டம் என புரியும். தர்ம ஆட்டம் ஆடும் மாந்தனுக்கு கர்ம வாட்டம் வாட்டாது. பேதமில்லா பிராத்தனை ஆட்டம் ஆடும் மாந்தனுக்கு துயர் ஆட்டம் ஆட்டாது. உயர் வாட்டம் தேடும் மாந்தன் உலக ஆட்டத்தில் உயர் ஆட்டம் தேடுகிறான். உயர் வாட்டம் என்பது மெய்ஞான வழியிலே என்பது புரியாது தடுமாற்றம் காணுகிறான். உள்ளபடி உள்ளம் உயர்வாட்டம் ஆட பொறுமை கூடத்தான் ஆட்டம் ஆட எளிமை பின் ஆட்டம் ஆட கருணை தானும் நல் ஆட்டம் ஆட இரக்கம் பின் ஆட்டம் ஆட சாந்தம் வதனம் ஆட்டத்தில் ஆட தெளிவு உள்ளத்தில் சதா ஆட்டம் ஆட ஆடாத நிலையில் ஆடிய ஆட்டம் புரிபடும். ஆடுவதும் ஆட்டுவிப்பதும் தில்லையில் ஆடும் அம்பலத்து அரசனாட்டம் என்று தெரிய வரும். முடிவாட்டத்தில் தெரிய வரும். புத்தி முதலாட்டத்திலே தெரிந்தால் அவன் ஞானி. சதா அம்பலத்திலே ஆடும் பொன்னம்பலம் ஆடியான் அடியினின் அடியையும் ஆடும் அரசனின் ஆட்டத்தில் அடியையும் மறவாமல் தொழத்தான் தப்பாட்டமாய் தவறாட்டம் பாவாட்டம் ஆடாது வாழ்வு புனிதம் ஆகும். நல் ஆட்டம் வாழ்வில் ஆட நல் ஆடல் அரசன் அருளட்டும் என ஆசிகள்.
ஆட்டம் என்ற தமிழ் வார்த்தை வைத்து அகத்தியர் தமிழில் விளையாடி இருக்கிறார். இதன் விளக்கம் பலருக்கு புரியாது என்கின்ற காரணத்தால் இதன் விளக்கத்தை கீழே கொடுத்திருக்கிறோம்.
பூ போல மென்மையாகவும் தூய்மையான தங்கம் போல அழகாகவும் மனம் இருக்க என்றென்றும் கொண்டாட்டம் இருக்கும். தேன் போல இனிமையாகவும் சொல்லுகின்ற வார்த்தைகள் இருக்க என்றென்றும் அடுத்தவர் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவம் ஆடும். தினை மாவு போல உறுதியாக உள்ளம் இருக்க என்றென்றும் உள்ளம் உறுதியாகவே இருக்கும். ஆண் தனது உடல் வலிமையால் செய்கின்ற வினைகளும் பெண் தனது உடல் அழகால் செய்கின்ற வினைகளும் அடங்கிப் போகின்ற காலம் எனும் வாழ்க்கையின் விளையாட்டில் அவரவர்களின் கர்ம விதிகளே விளையாடுகின்றன. வாழ்க்கையின் முற்பகுதியில் மனிதர்களின் வாழ்க்கையானது அவர்கள் செய்யும் செயல்கள் எனும் வினைகளை போலவே இருப்பதால் அந்த வினைகளின் பயன்படியே அவர்களின் எண்ணங்களும் செயல்படுகின்றது. தன் விருப்பத்திற்கு ஏற்ப விளையாடிய மனிதன் வேறு எவராலும் இல்லாமல் தனக்குத் தானே கர்மங்களை சேர்த்துக் கொண்டு அந்த கர்ம விதிகளின் படியே தனது எதிர்கால வாழ்க்கையும் இருக்கும் படி மனம் போன போக்கில் செயல்படுகின்றான். தொடர்ந்து வரும் ஒவ்வொரு பிறவியிலும் மனம் போன போக்கில் வினைகளை தொடர்ந்து செய்து கொண்டு இருந்தால் ஏற்றபடியே விளையாடிய எண்ணங்களின் செயல்களும் அவன் சேர்த்துக் கொண்ட கர்மங்களின் விதிப்படியே செயல் பட்டு அதனால் அவனது வாழ்க்கையின் முடிவும் மாயையின் செயலாகவே விளையாடுகின்றது. வாழ்க்கையில் செய்யும் செயல்கள் அனைத்தையும் உயர்வான செயல்களாக செய்தால் அவற்றால் நல் வினைகள் சேர்ந்து வாழ்க்கையில் எப்போதும் நன்மையின் விளைவுகளே தொடரும்.
தப்பான செயல்களால் தவறான வினைகளை செய்தால் வாழ்க்கையில் எது நடந்தாலும் தாழ்மையான விளைவுகளே தொடரும். பெண் தனது உடல் அழகால் செய்யும் செயல்களை பார்த்து பெண் மீது ஆசை கொண்டால் வாழ்வின் நிகழ்வுகள் அனைத்தும் தவறான நிகழ்வுகளாகவே இருக்கும். புலன்கள் விரும்பிச் செல்லும் வழியே மனிதனின் மனமும் சென்றால் முடிவில் வாழ்க்கை மிகவும் கடினமாக ஆகுமப்பா. வினைகள் செய்ய வேண்டும் என்று தர்மமான செயல்களையே செய்தால் பொய்த்துப் போகின்ற நிகழ்வுகள் நடக்காத வாழ்க்கையை வாழலாம். கர்ம விதிகளின் படியே செயல்களைச் செய்தால் அதன் வழியாகவே வாழ்க்கையும் இருக்கும். அப்போது தேவையில்லாத பழிகளை சேர்த்துக் கொள்ளும் படி வாழ்க்கை ஆகிவிடும். எப்படி என்றால் தர்மத்திற்கு புறம்பான / அதர்மமான செயல்களை செய்யும் படி சிந்தனைகள் வினைப் பயனால் அறிவுறுத்த அது தர்மமான செயலே என்று அந்த நேரத்தில் கர்ம விதியால் கெட்டுப் போன எண்ணங்களும் எடுத்துச் சொல்லும். ஆனால் அது தர்மமான செயல் இல்லை தவறான / அதர்மமான செயல் என்று ஒருவருக்கு இருக்கும் நல்ல கர்மங்கள் வழி காட்டும். எந்த விதமான செயல்களை செய்தாலும் வாழ்வின் இறுதியில் இறப்பு எனும் நிகழ்வு நடந்த பிறகு வாழ்க்கையின் முதலில் செய்த செயல்களில் ஆரம்பித்து வாழ்க்கையின் கடைசியில் செய்த செயல்கள் வரை அனைத்தும் தாம் சேர்த்துக் கொண்ட கர்ம விதிகளின் வழியே செயல்பட்டது என்பது புரியும். தர்மமான செயல்களை செய்கின்ற மனிதனுக்கு கர்ம வினைகளினால் எப்போதும் துன்பம் வந்து கடினங்களை கொடுக்காது.
எந்தப் பிரிவினையும் இல்லாமல் தூய்மையான மனதுடன் இறைவனை வணங்கும் செயல்களை செய்கின்ற மனிதனுக்கு துன்பமான நிகழ்வுகள் எதுவும் வந்து வருத்தப் படுத்தாது. உயர்வான செயல்களை தேடும் மனிதன் உலக வாழ்க்கை எனும் விளையாட்டில் உயர்வான கர்ம வினைகளையே தேடுகிறான். உயர்வான செயல்கள் என்பது உண்மையான ஞானம் கற்றுக் கொடுக்கும் வழியில் செய்யும் செயல்களே என்பது புரியாது தடுமாற்றம் காணுகிறான். உள்ளபடி உயர்வான சிந்தனைகளையே செய்ய பொறுமையை வளர்த்துக் கொள்ளும் நன்மையான விஷயங்களை அவன் செய்ய எளிமையும் பொறுமையோடு சேர்ந்து செயல் பட அன்பும் கருணையும் அதனோடு சேர்ந்து நன்மையாக செயல்பட இரக்க குணமும் பின் அதனோடு சேர்ந்து செயல்பட அமைதியை பிரதிபலிக்கும் முகமும் அவற்றோடு சேர்ந்து செயல் பட தெளிவு உள்ளத்தில் எப்போதும் செயல்பட மனிதன் தானாக எந்த செயல்களும் புரியாத நிலையிலும் அவைகள் எல்லாம் சேர்ந்து புரிந்த நன்மையான வினைகளின் பயன்கள் அவனுக்கு புரிய ஆரம்பிக்கும். ஆன்மா புகுந்த வாழ்க்கை எனும் விளையாட்டில் உயிர் செய்கின்றதும் அவை அனைத்தையும் செய்ய வைப்பதும் சிதம்பரத்தில் திருச்சிற்றம்பலத்தின் அரசனாகிய இறைவன் என்று தெரிய வரும். வாழ்க்கை முடியும் போது நிகழும் நிகழ்வுகளில் தெரிய வரும். ஒருவனின் அறிவுக்கு இது எல்லாம் வாழ்க்கையின் முதல் நிகழ்விலேயே தெரிந்து விட்டால் அவன் ஞானி. எப்போதும் திருச்சிற்றம்பலத்திலே தாண்டவம் ஆடும் தங்க சபையில் ஆடுகின்ற இறைவனின் திருவடிகளின் ஆட்டத்தையும் வாழ்க்கை எனும் விளையாட்டிற்கு தலைவனாகிய இறைவனின் கூத்தாட்டும் திருவடிகளையும் எப்போதும் மறக்காமல் போற்றி வணங்கினால்தான் தப்பான செயல்களும் தவறான நிகழ்வுகளும் பாவங்களான வினைகளும் செயல் படாமல் வாழுகின்ற வாழ்க்கை புனிதமான வாழ்க்கையாகும். நன்மையாகவே செயல் பட வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் நன்மையாகவே நடக்க நன்மையான செயல்களுக்கு எல்லாம் தலைவனாகிய இறைவன் அருளட்டும் என ஆசிகள்.
இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் ஜாதகத்திலே இராகு கேதுவிற்குள் எல்லா கிரகங்களும் அடங்கி விட்டாலும் அல்லது இராகு கேது லக்னம் (முதல் வீடு) லக்னத்திற்கு அடுத்த இடம் (2 ஆம் வீடு) குறிப்பாக சப்தமஸ்தானம் (7 ஆம் வீடு) அட்டம ஸ்தானம் (8 ஆம் வீடு) விய ஸ்தானம் (12 ஆம் வீடு) ருண ரோக ஸ்தானம் (6 ஆம் வீடு) இது போன்ற இடங்களில் அமர்ந்து அதிலும் சுபாவ சுபர்களாலும் அந்த ஜாதப்படி உள்ள சுப கிரங்களாலும் பார்க்கப்படாமல் இருக்கும் பட்சத்திலே கடுமையான நாக தோஷம் என்று பொதுவாகக் கூறப்படுவதுண்டு. உடனடியாக மனிதன் என்ன எண்ணுகிறான்? பாம்புகளையெல்லாம் கொன்றால் தான் இந்த பாவம் வந்து விட்டதாக எண்ணுகிறான். அப்படியானால் பசுவைக் கொன்றால் பாவம் வராதா? பிறகு எதற்கு இவ்வாறு கூறப்பட்டது? இது ஒரு வகையான அடையாளம். உச்சக்கட்ட பாவ தோஷம் என்பதை அடையாளப்படுத்த அங்கு ஒரு அடையாள சின்னமாக வைத்திருக்கிறார்கள் அவ்வளவே. எனவே அதற்காக அந்த நாக தோஷம் போவதற்குண்டான ஸ்தலங்கள் சென்று வழிபாடுகள் செய்தால் மட்டும் நல்ல பலன் வந்துவிடும் என்று எண்ணி விடாமல் இந்த நாக தோஷத்தால் பாதிக்கப்பட்ட பிற மனிதர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதும் குறிப்பாக ஒவ்வாமை நோய் பலரை பிடித்து வாட்டுகிறது.
இந்த ஒவ்வாமை நோய்க்குண்டான மருத்துவ சிகிச்சையை தக்க மனிதர்களுக்கு செய்து வந்தாலும் நாக தோஷம் குறையும். அதைப் போல நாக தோஷங்களுக்கு உண்டான ஸ்தலங்கள் சென்று உரிய முறையிலே பரிகாரங்கள் செய்து கொள்வதும் இல்லத்திலே அமர்ந்து அது தொடர்பான மந்திரங்களை உருவேற்றி வருவதும் நல்லப் பலனைத் தருவதோடு இன்னமும் கூறப்போனால் நாக தோஷம் இருக்கக்கூடிய ஜாதகரின் தேகத்தை ஆய்ந்து (ஆராய்ந்து) பார்த்தால் (இந்த விஷ பொருள்கள் என்று உடலிலே மருத்துவ இயல் கூறும்) அந்த விஷ பொருள்கள் அதிகமாக கழிவுகளாக தேங்கி நிற்கும். எனவே தேகம் (உடல்) சார்ந்தும் விஷத்தை எடுத்துவிட வேண்டும். இவற்றிற்கு உரிய பரிகாரத்தோடு நல்விதமான பூஜைகளோடு நாங்கள் கூறிய தர்மகாரியங்களை செய்து வருவதும் நல்ல பலனைத் தருவதோடு மிகவும் சிறப்பான ஸ்தலம் அந்த காளஹஸ்தி அருகே வேதபுரம் என்று முன் அழைக்கப்பட்டு இன்று திரிந்து போய் வேடியம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஸ்தலம் சென்று வழிபட நன்மை உண்டாம்.
கேள்வி: சத்சங்கமாக அன்பர்களை அழைத்து வாக்கு அருள வேண்டும்:
இறைவன் அருளாலே மிகப்பெரிய நெருக்கடி எது தெரியுமா? மகான்கள் மகான்கள் நிலையிலேயே மனிதர்களை அணுகுவதுதான். மனித நிலைக்கு இறங்கி சிலவற்றை எம்மால் கூற இயலாது. வெளிப்படையாக நாங்கள் கூறவந்தால் எதற்காக இந்த வாக்கை சித்தர்கள் கூறியிருக்கிறார்கள்? என்பதை புரிந்து கொள்ளாமல் அதற்கு குதர்க்கமான பொருளைத்தான் பல மனிதர்களும் கொள்வார்கள். யாரையெல்லாம் மனதில் வைத்து நீ கேட்கிறாயோ அவர்கள் விதி அனுமதித்தால் யாருக்கெல்லாம் இந்த ஜீவ அருள் நாடி மீது நம்பிக்கை வந்து தர்மத்தின் மீது நாட்டம் வந்து சத்தியத்திலும் பிடிப்பு வந்தால் இறைவனருள் அவர்களை வழிநடத்தும். யாமும் (அகத்திய மாமுனிவர்) இந்த ஜீவ அருள் ஓலை (ஜீவநாடி) மூலம் வழி நடத்துவோம். பொதுவாக சிலரை அழைத்து சத்சங்கமாக வாக்கை கூறவேண்டும் என்று யாம் எண்ணிணாலும் எமைப் பொருத்தவரை ஒருவன் தீய வழியில் சென்றாலும் நல்ல வழியில் சென்றாலும் எமது சேய்களே. நல்வழிப்படுத்த வேண்டியது எமது கடமை என்றாலும் இறைவன் அனுமதித்தால் நாளை கூட அதற்கு ஆயத்தமாக இருக்கிறோம். எனவே இறைவனிடம் எல்லோரும் பிராத்தனை வைப்பதைத் தவிர வேறு வழியில்லை.
அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:
மனித மதியானது விதிவழியாக செல்லும் பொழுது இறைவனும் நாங்களும் வெறும் பார்வையாளராகத்தான் இருக்க வேண்டியிருக்கிறது. அது எங்ஙனம் சாத்தியம்? அது எங்ஙனம் நியாயம்? என்றெல்லாம் மனிதன் வினவலாம். படைத்த இறைவனுக்கு பொறுப்பில்லையா? ஞானிகளுக்கு பொறுப்பில்லையா? மனிதர்கள்தான் அறியாமையால் தவறு செய்தால் அல்லது உழன்றால் அதிலிருந்து அவர்களை கரை சேர்க்க வேண்டாமா? என்ற ஒரு வினா எழலாம். அப்படி கரை சேர்ப்பதற்குதான் விதியை எதிர்த்து ஒரு மனிதன் பயணம் செய்ய வேண்டும் என்பதற்குதான் இறைவனின் அருளாணைக்கேற்ப யாம் (அகத்திய மாமுனிவர்) இந்த ஜீவ அருள் ஓலையிலே சில நுணுக்கமான வாக்குகளையெல்லாம் கூறுகிறோம். ஆனால் நடைமுறையில் இவையெல்லாம் ஏற்கத்தக்கதாக இல்லை. நடைமுறையில் இவற்றை பின்பற்ற முடியாது என்று மனிதன் தனக்குத்தானே சமாதானம் கூறிக் கொண்டு மீண்டும் விதிவழியாகத்தான் செல்கிறான்.