ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 204

கேள்வி: பெட்டவாய்த்தலை (திருச்சி அருகே) அருகே உள்ள தேவதானம் என்ற ஊரில் மகாலட்சுமிக்கு அபிஷேகம் செய்ய ஆசி:

இறைவன் அருளால் தாராளமாக செய்யலாம். அதை செய்வதற்கு முன்னால் இப்பொழுது சென்று வந்த மறைவனத்தில் (வேதாரண்யம்) உள்ள கலைவாணிக்கு (அன்னை சரஸ்வதி) பரிபூரணமான மிக உயர்வான அபிஷேகத்தை செய்ய நன்மை உண்டு. இறைவனருளால் சித்தர்கள் பார்வையிலே இது குற்றம் இது குற்றமல்ல என்று கூறும் பொழுது மனித பார்வையில் அது மாறுபடும். மனித பார்வையில் குற்றம் என்று கூறப்படுவது சித்தர்கள் பார்வையில் குற்றமாகாது. மனித ரீதியாகப் பார்த்தால் ஒரு கணவனும் மனைவியும் இருக்கக்கூடிய இடத்தில் கணவனின் உறவுகள் இருந்தால் அதை உலகம் தவறாகக் கொள்ளாது. ஆனால் மனைவியை சார்ந்த உறவுகள் இருந்தால் பாரப்பா இவன் தன் தாயை விட்டுவிட்டான் தன் சகோதரனை விட்டுவிட்டான். மனைவியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு மனைவியின் உறவுகளை கொண்டுவந்து வைத்திருக்கிறான் என்று பேசுவார்கள். இது இயல்பு. ஆனால் எம்மை (அகத்திய மாமுனிவர்) பொருத்தவரை மனைவியின் பெற்றொர்களை பார்க்கக் கூடாது அல்லது இவர்களை பார்க்கவேண்டும். அவர்களை பார்க்க வேண்டாம் என்பதல்ல. யார் வேண்டுமானாலும் எந்த உறவையும் ஆதரிக்கலாம். அது குற்றமல்ல. அதுவும் கடமைகளில் ஒன்று. கணவனின் உறவுகளை ஆதரிக்கவேண்டிய கடமை மனைவிக்கும் மனைவியின் உறவுகளை ஆதரிக்கவேண்டிய கடமை கணவனுக்கும் இருக்கிறது.

கேள்வி: ஏன் இது போன்ற(மூடர்கள்) மனிதர்கள் வந்து தொல்லை கொடுக்கிறார்கள்?

எல்லா இடங்களிலும் எப்போதும் இது நடப்பதுண்டு. பிரகலாதனுக்கு அவன் தந்தையே தொல்லை தரவில்லையா? அதற்காக பிரகலாதன் தன் பக்தியை விட்டுவிட்டானா. ஒரு உயர்ந்த மலையில் ஏறுகிறாய் வழவழ என பாறை இருந்தால் உன் பாதம் வழுக்கும். கீழே விழுந்துவிடுவாய். அங்கே வழவழப்புக்கு மாறான தன்மை இருந்தால் உறுதியாக பற்றிக் கொள்ளலாம் மேலே ஏறலாம். எதிர்ப்புகளில் வளர்வதுதான் எளிது என்பதை புரிந்துகொள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 203

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் நலமான எண்ணங்கள் நலமான வார்த்தைகள் நலமான செய்கைகள் இவைகள் கட்டாயம் நலத்தை சேர்த்துவிக்கும். நலம் எது? என்பதில்தான் மாந்தர்களுக்கு (மனிதர்களுக்கு) எப்பொழுதுமே ஐயமும் குழப்பமும் சமயங்களில் தெளிவற்ற சிந்தனையும் இருந்து வருகின்றது. யாங்கள் கூறுகின்ற நலம் என்றென்றும் தன்னலம் மட்டுமல்லாது பொது நலமும் ஆகும். பொது நலமின்றி எண்ணப்படுகின்ற எண்ணம் பேசப்படுகின்ற வார்த்தைகள் செய்யப்படுகின்ற செய்கைகள் இவைகள் யாவுமே அப்படி நோக்கம் கொண்ட மாந்தனுக்கு (மனிதனுக்கு) என்றும் துன்பத்தை அமைதியின்மையைத் தரும். எனவே யாம் இறைவனின் திருவடியை வணங்கி எமை (அகத்திய மாமுனிவர்) நாடும் மாந்தர்களுக்கு (மனிதர்களுக்கு) அடிக்கடி கூறுவதே பொது நலம் ஆகும். அதன் அடிப்படையில்தான் தர்மங்களையும் தர்மம் சார்ந்த செயல்களையும் இயம்பிக் கொண்டேயிருக்கிறோம். இறைவன் அருளாலே தர்மம் என்கிற சொல் வெறும் பரஸ்பரம் செய்கின்ற உதவிகளை மட்டும் குறிப்பிடாது. உதவி செய்யப்படுகின்ற தருணம் சூழல்,எண்ணம் இவையனைத்தையும் அடிப்படையாய்க் கொண்டே அது முழுமையான இறை வழி தர்மமா? அல்லது மனித வழி தர்மமா? என்று பார்க்கப்படுகின்றது. ஏனெனில் மேலெழுந்தவாரியாக பார்த்தால் அனைத்துமே தர்மமாக உதவியாகத் தெரியலாம். ஆனால் அனைத்தையும் இறை வழி தர்மமாக யாங்கள் ஏற்றுக்கொள்ள இயலாது.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எந்த சுயநலமும் இல்லாமல் வேறு சூது எண்ணங்கள் இல்லாமல் திறந்த மனதோடு பெருந்தன்மையோடு செய்கின்ற செயலே உண்மையில் இறை சார்ந்த தர்மமாகும். இயம்பிடுவோம் மேலும் கோடை காலத்தின் வெம்மையை தணிக்க ஆங்காங்கே பொது இடங்களில் தென்னை ஓலையைக் கொண்டு பந்தல் இடுவது வழக்கம். நன்றாய் கவனிக்க வேண்டும். அது கூரைதான். ஆனால் அது கூரை வருணன் (மழை) பொழிவிற்கு தாக்குப்பிடிக்குமா? என்றால் பிடிக்காது. ஆனாலும் கூரை வேய்ந்தது போலிருக்கும். மனிதனை பார்த்துக் கேட்டால் சற்றே அனலை தணிக்க இந்த வழிமுறை என்பான். ஆனால் அனலையும் தணிக்க வேண்டும் வருணன் பொழிவையும் தாங்கவேண்டும் என்றால் எவ்வாறு கூரையிடல் வேண்டும்? பந்தலிட வேண்டும்? என்றால் மிக மிக மிக அடர்த்தியாக இடல் வேண்டும். பெரும்பாலும் மனிதர்கள் செய்கின்ற உதவி கோடைக்கால கூரை போல் இருக்கின்றது. யாங்கள் கூறுகின்ற தர்மவழி மழைக்கால கூரை போல் இருந்திடல் வேண்டும். இதில்தான் எப்பொழுதுமே வேறுபாடுகள் இருந்து கொண்டே வருகிறது மனிதர்களுக்கும் மகான்களுக்கும். இறைவன் அருளாலே இது போன்ற கருத்தை மனதிலே வைத்துக் கொண்டால் இறை நோக்கி வருவது அல்ல அல்ல. ஒரு மனிதனை நோக்கி இறை வரும் வண்ணம் மனிதன் நடந்து கொள்ள வேண்டிய முறைகளில் இதும் ஒன்றாகும். இறைவன் அருளால் இதுபோல் இங்கு அமர்ந்துள்ள சேய்களுக்கு (பிள்ளைகளுக்கு) யாம் நல்லாசிகளை இத்தருணம் இயம்புகின்றோம். நல்விதமாய் வாழ்வு நிலை செல்ல எம் வழி வருகின்ற சேய்களுக்கும் (பிள்ளைகளுக்கும்) எமது வழிமுறை என்று அறியாமல் எமது வழிமுறைகளை பின்பற்றிக் கொண்டிருக்கும் சேய்களுக்கும் கட்டாயம் நலம் நடந்து கொண்டேயிருக்க வேண்டும் என்று மீண்டும் இறை வழியில் நாங்கள் (சித்தர்கள்) இறையை எண்ணி இறைவனின் திருவடியை எண்ணி பிராத்தனை செய்து இதுபோல் நல்லாசிகளை மீண்டும் இதுபோல சேய்களுக்கும் அதுபோல் சேய்களுக்கும் இயம்புகின்றோம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 202

கேள்வி: நாங்கள் அறப்பணிகள் தர்மம் செய்யும் பொழுது எங்களைவிட வயதில் பெரியவர்கள் எங்களை வணங்கும் பொழுது மனதிற்கு கஷ்டமாகவும் சங்கடமாகவும் இருக்கிறது. தர்மம் செய்யாத செய்ய விரும்பாத சிலர் எங்களை பார்க்கும் பொழுது விமர்சனம் செய்கிறார்கள். இந்த இடர்பாடான சூழலை எதிர் கொள்வது எப்படி?

இறைவன் கருணையால் மனத்திட்பத்தை (மனஉறுதியை) வளர்த்துக் கொள்ள வேண்டும். உன்னை வணங்கினால் நீயும் வணங்கிவிடு. அதுதான் சரியான முறையாகும். அடுத்ததாக தர்மத்தை பொதுவில் செய்யும் பொழுது அதை விமர்சனம் செய்யும் மனிதர்கள் என்றும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். இதற்கு நாங்கள் கூறுகின்ற உதாரணம் தவறான வழியை பின்பற்றக்கூடிய மனிதன் என்ன போதித்தாலும் அவன் தான் செய்வதை விடுவதில்லை. நான் இப்படித்தான் இருப்பேன் இதைத்தான் செய்வேன் என்று உறுதியாக இருக்கிறானே? அந்த உறுதி நல்லதை செய்கின்ற மனிதனுக்கு ஏன் இல்லாமல் போகிறது.

கேள்வி: இறைவனால் படைக்கப்பட்ட மனிதன் பரிணாம வளர்ச்சியில் எவ்வளவோ முன்னேறியிருக்கிறான். வாழ்க்கை முறையும் முற்றிலும் மாறிவிட்டது. ஆனால் ஆதிகாலம் தொட்டு இறை வழிபாடுகள் ஹோம யாகங்கள் தூப தீபங்கள் போன்றவை மட்டும் மாறாமல் இருக்கிறதே. மனிதர்கள் அழிந்து போகக் கூடியவர்கள் என்பதால்தான் மாற்றங்களை அனுமதிக்கிறாரா? விளக்குங்கள்:

அப்படியெல்லாம் ஏதுமில்லையப்பா. காலத்திற்கு தகுந்தாற் போல் இறை வழிபாடுகளும் மாறிக் கொண்டுதான் இருக்கிறது. இங்கு புறச்செயல்களை பார்ப்பதில்லை இறைவனும் நாங்களும். ஒரு மனிதன் செய்கின்ற பூஜையிலே அவன் அகந்தைதான் நாங்கள் எப்ப்பொழுதும் பார்க்கிறோம். நாங்கள் அடிக்கடி கூறுகின்ற உதாரணம்தான். கற்களை தம் மீது விட்டெறிந்த மனிதனுக்கு இறைவன் அருள் செய்கிறார். அதே சமயம் மலர்களை தம் மீது விட்ட மன்மதனை எரித்து விடுகிறார். எனவே இங்கு செயலைப் பார்ப்பதில்லை. பின்னால் உள்ள நோக்கத்தை தான் இறைவன் பார்க்கிறார். இறைவன் கருணையால் நாங்கள் கூற வருவது என்னவென்றால் இறைவன் அருளால் மனிதன் உலகியல் ரீதியான முன்னேற்றங்களை பெற்றுக் கொண்டே வருகிறான். அதற்கேற்றாற் போல் அன்றைய தினம் ஆலயத்தில் தீப்பந்தங்கள் ஏற்றப்பட்டன. இன்றுதான் ஔிரும் விளக்குகள் வந்து விட்டனவே. காலத்திற்கேற்ப மனிதன் எல்லாவற்றையும் மாற்றுவது போல் இது போல் வழிபாட்டு முறைகளையும் மாற்றிக் கொண்டுதான் வருகிறான். வழிபாட்டு முறைகளை மாற்றுவது குற்றமல்ல. ஆனால் வழிபடுகின்ற விதத்தில் உள்ள எண்ணத்தில் என்ன இருக்கிறது? என்று பார்த்துதான் குற்றமா? இல்லையா? என்று இறைவன் பார்ப்பார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 201

கேள்வி: காம தேகத்தை உடைய எங்களுக்கு மனைவி மக்கள் தேவை. காம தேகத்தை அறுத்த தங்களுக்கும் குடும்ப வாழ்க்கையை ஏன் இறை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது? அது மட்டுமல்ல. எங்களுக்கு அருள் செய்யும் நிலையில் உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் தாரம்(மனைவி) இருப்பதாக அறிந்து கொண்டோம். மனைவி மட்டுமல்ல மக்களும் இருக்கிறார்கள். ஏன்? அந்த சிவபெருமானுக்கே உமாதேவியாரும் விநாயகரும் முருகப்பெருமானும் உள்ளனர். அதுமட்டுமல்ல ஞானப்பழம் கிடைக்காத கோபத்தினால் தான் முருகப்பெருமான் பழனி மலையில் ஆண்டிக் கோலத்தில் இருக்கிறார் என்று புராணங்கள் கூறுகின்றது. இவை அனைத்தும் உண்மையா? விளக்க வேண்டுகிறேன்:

இறைவன் அருளாலே இன்னவன் (இந்த கேள்வி கேட்டவர்) நல்ல தர்மங்களை செய்து வருகிறான். தர்மத்தில் நாட்டம் கொண்டிருக்கிறான். ஆனாலும் விதி வசத்தால் நல்ல ஞானக்கருத்துக்களை புரிந்து கொள்ள முடியாத ஒரு நிலையில் இருக்கிறான். நாங்கள் எங்கிருந்து துவங்கினாலும் இவனுடைய விதி இப்பொழுது அதனை ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை. இருந்தாலும் சுருக்கமாகக் கூறுகிறோம். இவனை என்றால் இவன் மட்டும் குறிப்பதல்ல. இவனொத்து பலருக்கும் இதுதான் நிலை. இதை குற்றமாக குறையாக நாங்கள் கூறவில்லை. அவனவன் ஆன்ம நிலை என்பது அவ்வாறு இருக்கிறது. ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஒப்புமை உவமை உருவகப்படுத்துதல் என்றெல்லாம் வார்த்தை இருக்கிறது. மனிதன் தன்னைப் போலவே இறைவனைப் பார்க்க பழகுகின்ற விதம்தான் இறைவனுக்கும் குடும்பம் இருப்பதாக கூறப்படுகின்ற ஒரு விஷயம். இதை தத்துவார்த்த ரீதியாகத்தான் பார்க்க வேண்டுமே தவிர மனிதன் தன்னைப் போல பார்க்கக்கூடாது.

அடுத்ததாக மனித தேகத்திற்கு காமம் இருக்கிறது. எனவே அதற்கு துணை வேண்டும் என்றெல்லாம் கூறுகிறான். நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். தேகத்தில் காமம் இருப்பதால் மட்டுமே ஒரு மனிதன் தறிகெட்டுப் போவதில்லை. அதையும் தாண்டி அவனுக்கு அரைகுறையாக சிந்திக்கின்ற அறிவை இறைவன் தந்ததால்தான் இவ்வாறு இருக்கிறது. நன்றாக கவனிக்க வேண்டும். எங்காவது விலங்குகள் போராட்டத்தோடு காமத்தை தீர்த்துக் கொள்கிறதா? மனிதன் ஒருவன்தான் அவ்வாறு செய்கிறான். எனவே இங்கு உணர்வல்ல. அந்த உணர்வை சரியாக பிரயோகப்படுத்த நல்ல அறிவு வேண்டும். அந்த அறிவை பயன்படுத்த மனிதன் தவறுகிறான். அந்த அறிவைதான் உபதேசமாக ஞானியர்களும் புராணங்களும் எடுத்துக் கூறுகின்றன. எனவே தத்துவார்த்தமாகக் கூறப்பட்ட புராணத்தில் உள்ள மூலக் கருத்துக்களையெல்லாம் இவன் புரிந்து கொள்ள வேண்டும். அல்லது இதனை சரியாக புரிந்து கொள்ள முடியாத நிலையில் சில மனிதர்களை அணுகி முதலில் இவன் சில விஷயங்களை புரிந்து கொண்டால் போதும். பிறகு நாங்கள் கூறுகின்ற விளக்கம் இவனுக்கு புரியும். எனவே இப்பொழுது இவன் தர்மத்தை தொடர்ந்து செய்து வரட்டும். அந்த தர்மமே இவன் பாவத்தைக் குறைத்து இவனிடம் இருக்கின்ற அஞ்ஞானத்தை மெல்ல மெல்ல நீக்கும். என்றாலும் இவனும் என் சேயவனே (மகனே). இவன் நன்றாக வாழ நல்லாசி கூறுகிறோம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 200

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

மைதானத்தில் வாயு உருளை (பந்து) வைத்து விளையாடுகின்ற மனிதர்கள் இரண்டு அணிகளாகப் பிரித்து கொண்டு வெற்றிப் புள்ளிகளைக் குவிக்கப் போராடுவார்கள். ஒருவன் அந்த வாயு உருளையை (பந்து) உதைத்துக் கொண்டே வெற்றிப் புள்ளிக்காக போராடுவான். மாற்று அணியினர் அதைத் தடுப்பார்கள். அப்பொழுது அந்ந வெற்றிப் புள்ளியைக் குவிக்க வேண்டிய மனிதன் இப்படியெல்லாம் தடுத்தால் என்னால் எப்படி வெற்றிப் புள்ளியை குவிக்க முடியும்? இவர்கள் எல்லோரும் விலகிச் சென்றால் நான் எளிதாக வெற்றி பெறுவேன் என்று கூறினால் அந்த ஆட்டத்தின் விதிமுறைகளை வகுத்துக் கொடுத்தவர்கள் ஒப்புக் கொள்வார்களா? அதைப் போலத்தான் ஞானம் பெற வேண்டும் தவம் செய்ய வேண்டும். இறை வழியில் செல்ல வேண்டும் நேர்மையாக வாழ வேண்டும் பக்தி வழியில் செல்ல வேண்டும். ஆனால் பல்வேறு தடைகள் வருகிறது. மனதிலே தேவையில்லாத எண்ணங்கள் வருகிறது என்று பல மனிதர்கள் வருத்தப்படுகிறார்கள். இவையெல்லாம் இல்லையென்றால் நன்றாக வெற்றி பெறலாம் என்றால் இவைகளைத் தாண்டி செல்வதற்குண்டான வைராக்யத்தை ஒரு மனிதன் பெற வேண்டும். உலகியல் ரீதியான வெற்றியைப் பெற வேண்டுமென்றால் எத்தனை தடையென்றாலும் அதனைத் தாண்டி செல்கிறான். தனக்கு பிரியமான காதலியை ஒரு இடத்தில் சந்திக்க வேண்டுமென்றால் எப்படியெல்லாம் சிந்தித்து அந்த சந்திப்புக்கு எத்தனை தடை வந்தாலும் அதனைத் தாண்டி அங்கே செல்கிறான் அல்லவா? என்ன காரணம்? அந்த நோக்கத்தில் அவனுக்கு உறுதி இருக்கிறது. அதைப் போல இறைவனை உணர வேண்டும். மெய்ஞானத்தை கண்டிப்பாக இந்த பிறவியில் உணர்ந்து விட வேண்டும். இறையருளை பரிபூரணமாகப் பெற்றுவிட வேண்டும் என்கிற உறுதி அணுவளவும் தளராமல் மனித மனதிலே வந்துவிட்டால் மற்ற விஷயங்கள் குறித்து அவனுக்கு எந்தவிதமான குழப்பமும் தேவையில்லை. எதை செய்தாலும் எப்படி செய்தாலும் நோக்கம் இறைவனிடம் இருந்தால் ஒரு மனிதன் எது குறித்தும் அஞ்சத் தேவையில்லை.

இது போன்ற ஜனகனின் காதையை (கதையை) நினைவூட்டினால் போதும். ஜனகன் மன்னனாகி அரசாண்டாலும் கூட அவனுடைய சிந்தனையானது இறைவனின் திருவடிகளில் இருந்தது. மன்னன் என்பது ஒரு வேடம் ஒரு நாடகம் என்பதை அவன் அறிந்திருந்தான். அதற்குள் அவன் லயித்துப் போய் விடவில்லை. அதைப் போல ஒரு மனிதன் இந்த உலகிலே எதை செய்தாலும் எந்த சூழலில் இருந்தாலும் இவையனைத்தும் ஒரு நாடகம் ஒரு சொப்பனம் என்று எடுத்துக் கொண்டு மெய் என்பது இறைவனின் திருவடியே என்பதை புரிந்து கொண்டு எதைப் பேசினாலும் எதை செய்தாலும் ஆழ்மனதிலே ஒரு தீவிர வைராக்யம் இறைவனின் திருவடியை நோக்கி இருந்து கொண்டேயிருந்தால் அர்ஜூனனின் குறி போல இது தவறாது இருந்தால் எந்த சூழலையும் தாண்டி சென்று வெற்றி காண இயலும். ஆனால் தடைகளும் குழப்பங்களும் மன சஞ்சலங்களும் இல்லாத நிலையில் ஒருவன் தவம் செய்யலாம் என்றாலும் அது யாருக்கும் இந்த உலகில் மட்டுமல்ல எந்த உலகிலும் சாத்தியமில்லை. ஒன்று இறை சிந்தனைக்கு மாற்றாக வந்து ஒருவனின் கவனத்தை திசை திருப்புகிறது என்றால் என்ன பொருள்? இறைவனின் சிந்தனையை விட அதிலே அவன் மனம் ஒரு ஈடுபாட்டை ஒரு சுகத்தை உணர விரும்புகிறது என்றுதான் பொருள். எனவே அதனையும் தாண்டி இறைவனின் திருவடிகளில் ஒரு சுவையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதுதான் நாங்கள் (சித்தர்கள்) எப்பொழுதுமே கூறவருவது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 199

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 199

கேள்வி: தஞ்சையில் கரந்தைப் பகுதியில் உள்ள கோவிலில் தங்களால் அசுரர்களைக் கொண்டு வெட்டப்பட்ட குளம் ஒன்று இருப்பதாகவும் அதில் ஒன்பது கிணறுகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அத்தலத்தில் உரோமரிஷி அடக்கமாகி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது அது குறித்து:

இறைவன் கருணையால் முற்காலத்திலெல்லாம் நீர் ஆதாரங்கள் கெட்டுவிடாமல் இருப்பதற்காகத்தான் ஆங்காங்கே குளங்களும் ஏரிகளும் வெட்டப்பட்டன. அவற்றை நேரடியாக செய்தால் மனிதன் ஏற்றுக் கொள்ளமாட்டான் என்றுதான் அது தீர்த்தம் என்றும் புனித தடாகம் என்றும் ஆலயத்தோடு பின்னிப் பிணைக்கப்பட்டது. அதனால்தான் இந்தளவுக்கு நீர் பஞ்சம் இல்லாமல் முற்காலத்தில் மனிதர்கள் வாழ்ந்தார்கள். அப்பொழுதும் பஞ்சம் வந்தது. ஆனால் உடனடியாக அதற்கு அறிவுபூர்வமான தீர்வு ஏற்படுத்தப்பட்டது. இப்பொழுதும் கவனிக்கலாம். மழை குறைவான இதுபோல தென்பகுதியை நோக்கி செல்ல செல்ல நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க முற்கால மனிதர்கள் என்ன வகையான நடவடிக்கைகளை எடுத்திருப்பார்கள்? என்பதற்கு இன்னும் அழியாத சில சாட்சிகள் இருக்கின்றன. மிகப்பெரிய நீர்பரப்பு குளங்களெல்லாம் வெட்டப்பட்டு பாறைகளால் பாதுகாக்கப்பட்ட நிலை இருந்தது. எனவே இந்த அடிப்படையில்தான் தீர்த்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதற்காக எல்லா தீர்த்தங்களும் அப்படியல்ல. சில இன்னவன் வினவியது போல் முனிவர்களால் ஏற்படுத்தப்பட்டவை. சில தேவதை வர்க்கங்களால் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. ஆனால் மனிதனின் பாவம். இது போன்ற புனித விஷயங்களை அவன் அறிவிற்கு எட்டாமலேயே செய்து விடுகிறது. எனவே மனிதர்கள் இதை உணர்ந்து கொண்டு மீண்டும் தீர்த்தங்களை பாதுகாக்கின்ற நிலைக்கு தன்னை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். இன்னவன் வினவிய அந்த தீர்த்தம் எம் போன்ற மகான்கள் அங்கு வந்து தவம் செய்திருந்தாலும் கூட விண்ணுலக தேவன் ஒருவனால் ஏற்படுத்தப்பட்ட தீர்த்தமாகும். ஆனால் அந்த இடத்தை விட்டு சற்றே இந்த நீர் தடாகம் விலகியிருக்கிறது.

கேள்வி: அமாவாசையன்று நானே சில சமயங்களில் எள்ளும் தண்ணீரும் என் தந்தையின் பெயரைக் கூறி விட்டிருக்கிறேன். இந்த முறை அதாவது சுயமாக செய்வது சரியா? தவறா? அல்லது தகுந்த மனிதரை வைத்து தான் செய்ய வேண்டுமா?

பக்தியை நேர்மையாக அவனவன் அறிந்த வழியில் செலுத்தினால் இறையருள் கிட்டும். எல்லாவகையான தோஷமும் குறையும் என்பதை நாங்கள் (சித்தர்கள்) மறுக்கவில்லை. ஆனால் அதே சமயம் உலகியல் ரீதியாக ஒரு பணி செய்ய வேண்டும் என்றால் அதற்குரிய தொழில் வல்லுனரை மனிதன் நாடுகிறானே? ஒரு வாதுமன்றம் (நீதிமன்றம்) என்றால் தானே சென்று ஒருவரும் வாதாடுவதில்லை. ஒரு வழக்கறிஞரை நாடுகிறான். கடுமையான பிணி ஏற்பட்டால் மருத்துவரை நாடுகிறான். ஒரு இல்லத்தை உருவாக்க வேண்டும் என்றால் அதற்குரிய தொழிலாளியை பார்க்கிறான். ஆனால் ஆன்மீகம் என்று வரும் பொழுது மட்டும் ஏன் அதற்குரிய ஒரு நல்ல மனிதனை போராடி தேர்ந்தெடுத்து அவனுக்குரிய உதவிகளை செய்து அந்த பணிகளை பூர்த்தி செய்து கொண்டால் என்ன? என்பது தான் எமது(அகத்திய மாமுனிவர்) வினா. அதற்காக சுயமாக செய்யக்கூடாது என்று நாங்கள் கூறவில்லை. தாராளமாக அவரவர்களால் இயன்றதை செய்யலாம். அதற்கும் பலனுண்டு.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 198

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

இறைவனின் அருளாணையின்படி ஒரு மனிதனின் அறியாமை நீங்க வேண்டுமென்றால் அவன் இதுவரை எடுத்த கோடானு கோடி பிறவிகளின் பாவம் நீங்க வேண்டும். பாவங்கள் நீங்க வேண்டுமென்றால் அவனுடைய மனம் ஒவ்வொரு நிகழ்வாலும் வேதனைப்பட வேண்டும். ஒவ்வொரு நிகழ்வாலும் வெட்கப்பட வேண்டும். ஒவ்வொரு நிகழ்வாலும் அவன் அனலில் (வெப்பத்தில்) இட்ட புழு போல் துடிக்க வேண்டும். அந்த எண்ணங்கள்தான் அப்படியொரு மனப்பாங்குதான் அவனுடைய பாவத்தை நீக்கும். எப்படி கயப்பு (கசப்பு) மருந்து நோயை நீக்குகிறதோ அதைப் போல கடினமான அனுபவங்கள் ஒரு மனிதன் சேர்த்த பாவங்களை நீக்குகிறது. ஆனால் எல்லோராலும் எல்லா நிலையிலும் எல்லா காலத்திலும் துன்பங்களை நுகர இயலாது. நேரடியாக உனக்கு இவையெல்லாம் நடக்கும். தாங்கிக் கொள் என்றால் எத்தனை மனிதர்களால் தாங்கிக் கொள்ள இயலும்? எனவே தான் இறைவன் கருணை கொண்டு மனிதனுக்கு பல்வேறு விதமான பிறவிகளைத் தந்து அந்த அனுபவங்களின் வாயிலாக அந்த ஆத்மாவின் பாவங்களைக் குறைக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் மறைமுகமாக அவன் பாடுபட்டு தேடிய தனத்தையெல்லாம் வியமாக்கி (விரயமாக்கி) அதன் மூலம் பாவத்தைக் குறைக்க வைக்கிறார். பிறரை மனம் நோக செய்து பிறர் மனதையெல்லாம் வதைத்து பிறவியெடுத்த பிறவிகளுக்கு மீண்டும் பிறரால் மனம் வேதனை அடையும் வண்ணம் ஒரு சூழலை ஏற்படுத்தி அதன் மூலம் பாவத்தைக் குறைக்கிறார். ஒட்டு மொத்தமாக இப்படி வியாதியாக வழக்காக தொழிலில் ஏற்படும் மன உளைச்சலாக உறவு சிக்கலாக நட்பு சிக்கலாக நம்பிக்கை துரோகமாக இப்படி ஒவ்வொரு நாளும் நிகழும் நிகழ்வில் மனித பாவங்கள் குறைகின்றன. இதைப் புரிந்து கொள்வது கடினம். இதை புரிந்து கொள்வதற்கே ஒரு மனிதன் கோடானு கோடி பிறவி எடுத்திருக்க வேண்டும்.

இந்த நிலையில்தான் இறைவனின் அருளாணைக்கேற்ப எமை நாடும் மாந்தர்களுக்கு நீ குடம் குடமாக பாலை கொட்ட வேண்டுமப்பா. நீ பாடுபட்டு நேர்மையாக ஈட்டும் தனத்தையெல்லாம் உனக்கும் உன் குடும்பத் தேவைக்கும் போக அள்ளி அள்ளி வழங்கு. யாருக்கெல்லாம் தேவைப்படுகிறதோ வழங்கு. கள்வன் உன்னிடமிருந்து மறைமுகமாக கவர்ந்து கொள்வதற்கு முன்பாக நீயாகவே கொடுத்து விடு. கொடு கொடு கொடு கொடு கொடு கொடு கொடுத்துக் கொண்டேயிரு என்று நாங்கள் (சித்தர்கள்) கூறுகிறோம். ஆனால் இதையெல்லாம் கேட்கின்ற மனிதனுக்கு வேடிக்கையாக இருக்கிறது. ஏளனமாக இருக்கிறது. இது குறித்து பலவிதமான விமர்சனங்களெல்லாம் தமக்குத்தாமே தன்னை சேர்ந்த மனிதர்களோடு அவன் உரையாடிக் கொண்டு இவையெல்லாம் சாத்தியமா? இப்படியெல்லாம் செய்ய இயலுமா? இவையெல்லாம் முட்டாள்தனம் என்று அவன் பேசவில்லை. அவன் விதி பேசவைக்கிறது. பிறகு நாங்கள் எப்படியப்பா அல்லும் பகலும் 60 நாழிகையும் (ஒரு நாள் என்பது 60 நாழிகை) எமை (அகத்திய மாமுனிவர்) நாடும் மனிதர்களுக்கு வழிகாட்ட இயலும்?. எனவே இது போல ஜீவ அருள் ஓலையை நாட வேண்டுமென்றால் பின்பற்ற வேண்டுமென்றால் இது போல ஜீவ அருள் ஓலையை (ஜீவநாடி) நம்பி இந்த ஜீவ அருள் ஓலையை வாசிக்கும் இதழ் வாசிக்கும் மூடனையும் நம்பி இதன் மூலம் வாக்கை உரைப்பது மகான்கள்தான் என்று நம்பி வருகின்ற ஆத்மாக்களுக்கு அப்படி நம்பும் வண்ணம் எவனுக்கு கிரகநிலை அமைகிறதோ அல்லது அப்படி அமைக்க வேண்டும் என்று இறைவன் திருவுள்ளம் கொள்கிறாரோ அது போல ஆத்மாக்களுக்கு நாங்கள்(சித்தர்கள்) இறைவனருளால் வழிகாட்டிக் கொண்டே இருப்போம். எனவே யாரும் விசனம் (துக்கம்) கொண்டிட வேண்டாம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 197

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

இறைவனின் கருணையைக் கொண்டு வாழ்த்துக்களும் வாக்குகளும் மகான்களின் மூலம் வரும் பொழுது அது அப்படியே 100 க்கு 100 பலிதமாக வேண்டுமென்றே மனிதர்கள் எதிர்பார்க்கிறார்கள். மெய்தான். அப்படியே நடந்தால் எமக்கும் (அகத்திய மாமுனிவர்) மனமகிழ்வே. ஆயினும் பாவகர்மங்கள் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பல்வேறுவிதமான குழப்பங்களையும் எதிர்விளைவுகளையும் ஏற்படுத்தி விதவிதமான சிந்தனைகளைத் தந்து அவனவன் நிம்மதியை கெடுப்பதோடு அவனை சார்ந்தோரின் நிம்மதியையும் சார்ந்தோரின் பாவ கர்மாவை பொறுத்து கெடுத்து விடுகிறது. எனவே சுற்றி சுற்றி சுற்றி எங்கு வந்தாலும் பாவங்கள் மனிதனை நிம்மதியாக வாழ விடுவதில்லை. பாவங்கள் விதியின் வாயிலாக பிறவியெடுத்து பிறவியெடுத்து அந்தப் பிறவிகளில் ஏற்படும் அனுபவங்களை மனிதன் நுகர்ந்தே ஆக வேண்டும் என்பது விதியாகவே இருக்கிறது. ஆயினும் தன்னலமற்ற தியாகங்களும் கடுகளவு துவேஷம் இல்லாத மனமும் அகங்காரமில்லாத மனமும் சிந்தனையில் சாத்வீகமும் அந்த சாத்வீகத்தில் உறுதியும் செயலிலும் வாக்கிலும் எண்ணத்திலும் நேர்மையும் பிறர் செய்கின்ற அபவாதங்களையும் துன்பங்களையும் பொறுத்துக் கொண்டு அப்படி துன்பங்கள் எப்பொழுதெல்லாம் யார் கொடுக்கிறார்களோ அவர்களை நிந்திக்காமல் அவர்களை தரக்குறைவாக பேசாமல் இந்த மனிதன் துன்பத்தைத் தருவது போல் தோன்றினாலும் நாம் செய்த பாவங்கள்தான் இவன் மூலம் துன்பங்களாக வருகிறது என்று எடுத்துக் கொண்டு சமாதானம் அடைவதும் ஒரு காலத்தில் தன்னை மதிக்காமலும் ஏளனமாகவும் அவமானப்படுத்தியும் பல்வேறு கெடுதல்களையும் செய்த மனிதன் ஒரு சந்தர்ப்பத்தில் உதவிக்காக வரும் பொழுது முன்னர் நடந்ததையெல்லாம் எண்ணி பழிவாங்கும் உணர்வோடு செயல்படாமல் அவனை மன்னித்து பெருந்தன்மையாக நடத்துவதே சித்தர்கள் வழி சித்தர்கள் வழி என்றெல்லாம் பலர் கூறுகிறார்களே? அந்த வழியில் பிரதான வழியாகும்.

சித்தர்களை வணங்குவேன் ஸ்தல யாத்திரைகளும் செய்வேன் மந்திரங்களை உருவேற்றுவேன். ஆனால் பெருந்தன்மையோ பொறுமையோ இல்லாது நடந்து கொள்வேன் என்றால் பலனேதுமில்லை. எனவே தளராத பக்தி தடைபடாத தர்மம் உறுதியான சத்தியம் பெருந்தன்மை இது போன்ற குணங்களை வளர்த்துக் கொண்டால் பெரும்பாலும் பாவங்கள் மனிதனை அதிகளவு தாக்காமலும் தாக்கினாலும் அதனைத் தாங்கிக் கொள்ளக்கூடிய ஒரு மனோபாவமும் ஏற்படும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 196

கேள்வி: அன்பர்கள் மனதில் எண்ணியவை நடக்க தங்கள் ஆசிகள் வேண்டும்:

கட்டாயம் நன்மைகள் நடக்கும். நன்மைகள் நடப்பதற்குதான் எப்பொழுதுமே சித்தர்கள் காலகாலம் மனிதர்களுக்காக பாடுபடுகிறார்கள். ஆனால் மனிதர்கள் அதனைப் புரிந்து கொள்வதில்லை என்பதுதான் மெய்யிலும் மெய்யாகும்.

கேள்வி: இந்த சுப நாளிலே ஆலயங்கள் சென்று வந்தோம். அதற்கு ஆசிகள் வேண்டும்:

இறைவன் அருளால் ஆன்மா லயிக்கின்ற இடம் ஆலயம் என்பார்கள். ஆன்மா என்றால் தன்னுடைய உடலுக்குள் உள்ளே உணர முடியாமல் இருக்கின்ற உயிர் என்றும் இயக்கம் என்றும் மனிதனால் கருதப்படுகின்ற ஒன்று என்று வைத்துக் கொள்ளலாம். தொடர்ந்த எண்ணங்களா? தொடர்ந்த சிந்தனை வாதமா? அல்லது குருதியும் (இரத்தமும்) சதையும் எலும்பும் கொண்ட கூட்டமா? இதில் எது ஆன்மா? என்பதை ஒரு மனிதன் என்று உணர்கிறானோ அப்பொழுது அவன் சரியான நேர்பாதைக்கு செல்வதற்கு வாய்ப்பு வரும். பிறர் மீது வெறுப்பு வராது. ஏனென்றால் எல்லா கூட்டிற்குள்ளும் இருப்பது ஆத்மாதான். இதிலே உயர்வு தாழ்வு இல்லை. வினைகள்தான் குறுக்கே மறைத்துக் கொண்டிருக்கிறது. அந்த வினைகளை நிஷ்காம்யமாக செயல்களை செய்து போக்கிக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு வரும். அந்த உணர்வு அனைவருக்கும் வர இறைவனருளால் நல்லாசிகளைக் கூறுகிறோம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 195

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

இறைவன் அருளாலே நல்ல கருத்துக்களையும் நல்ல ஞானத்தையும் மனிதன் அன்றாடம் சிந்தித்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருக்க இருக்கத்தான் அதிலிருந்து அவன் விலகாமல் இருப்பதற்குண்டான மனோதிடம் உருவாகும். எனவே ஒரு மனிதன் மெளனமாக இருப்பதும் மெளனத்தைக் கலைத்துப் பேச முற்பட்டால் எப்பொழுதுமே நல்ல சாத்வீகமான நல்லதொரு சத் விஷயமாகப் பேசுவதும் இறை சார்ந்த விஷயமாகப் பேசுவதும் இருப்பதே ஏற்புடையதாக இருக்கும். முழுக்க முழுக்க ஆன்மீகத்தை வாழ்க்கையாகக் கொண்டு அதை நோக்கியே செல்வேன் என்று உறுதி எடுத்துக் கொண்ட மனிதர்களெல்லாம் மிக மிக மிக கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் எல்லா பணிகளையும் பார்த்துக் கொண்டு பகுதி பகுதியாக கால அவகாசம் ஒதுக்கி வித்தை (கல்வி) கற்கிறேன் என்கின்ற மாணவன் சற்றே குறைவாக மதிப்பெண் எடுத்தால் பாதகமில்லை. ஆனால் முழுநேரமும் வித்தை (கல்வி) கற்கத்தான் ஒதுக்கியிருக்கிறேன் என்று அப்படி ஒதுக்கி வித்தை கற்கின்ற மாணவர்கள் அதிக அளவு மதிப்பெண்ணை எடுக்கவேண்டும் அல்லவா?அதைதான் முழுநேர ஆன்மீகத்தை நோக்கி செல்கின்ற மனிதர்கள் கருத்தில் கொண்டிட வேண்டும். இல்லையென்றால் வெறும் உலகியல் பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ள ஒரு சாதனமாக்கத்தான் ஆன்மீகம் இருக்குமே தவிர உண்மையாகவே எந்த நோக்கத்திற்காக ஆன்மீகத்தை நோக்கி ஒரு மனிதன் செல்கிறானோ அந்த நோக்கம் கைவராமல் பல்வேறு பிறவிகளைத் தாண்டி செல்ல வேண்டியிருக்கும். அடுத்தடுத்த பிறவிகளில் இந்தப் பிறவியில் உழைத்த உழைப்பு கை கொடுக்கும் என்றாலும் மாயையில் சிக்கிவிட வாய்ப்பும் இருக்கிறது. இறைவனின் கருணையை சரியான பாத்திரமாக இருந்து மனிதன் பயன்படுத்திக் கொண்டிட வேண்டும்.

இறைவன் அருளாலே நாங்கள் (சித்தர்கள்) அடிக்கடி கூறுவது போல நலம் எண்ணி நலம் உரைத்து நலம் செய்ய நலமே நடக்கும். இது உலகியலாக இருந்தாலும் ஆன்மீகமாக இருந்தாலும் பலிதமாகும். இறைவன் அருளாலே உள்ளத்தைப் பண்படுத்தி பண்படுத்தி உள்ளத்தை உறுதியாக்கி எண்ணத்திலே மேம்பாடு இன்னும் இன்னும் அதிகரித்து வாழுங்கால் எதுவும் நன்மையே நலம் தரும் செய்கையே. மன அழுத்தம் என்பது அதனைத் தாண்டி இந்த உலகில் பிற உயிர்களால் ஏற்படக்கூடிய அழுத்தம் தாக்கம் என்பது மிக இயல்பாக கடந்து போவதற்கு மனதை சரியான பக்குவநிலையில் வைத்திருந்தால் போதும். என்றுமே உலகையோ உலக இயல்பையோ மாற்றுவதும் திருத்துவதும் என்றும் கடினம். அங்கனம் இருக்கும் பட்சத்திலே ஒரு மனிதன் தன்னுடைய மனதைதான் பக்குவப்படுத்தி உறுதிபடுத்தி அனுசரித்து சாத்வீகமாக பார்க்க எதிர்கொள்ள பழக வேண்டும். நாங்கள் (சித்தர்கள்) அடிக்கடி கூறுவது போல கருவை கருப்பை சுமக்கட்டும். கருவிலே சுமக்க வேண்டிய குழவியை (குழந்தையை) இடுப்பில் சுமக்க முடியாது. தோளிலே சுமக்க முடியாது. அது போலதான் எதிர்காலமும். கடந்த காலம் சவம் போன்றது. சவத்தை தோளிலே சுமந்து கொண்டு திரிவது மனிதனுக்கு வேண்டுமானால் சுகமாக இருக்கலாம். மகான்கள் பார்வையில் அது தேவையற்றது. இக்கணம் இக்கணம் இக்கணம் நிகழ் நிகழ் நிகழ் அந்த நிகழ் நிகழ்காலம். அவற்றை சரியாகப் பயன்படுத்த வேண்டும். கடந்த கால கரையான்கள் செல்லட்டும். எதிர்கால நாகங்களும் வேண்டாம்.