ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 85

கேள்வி: ஒரு ஆராய்ச்சியாளர் சர்க்கரை வியாதி மற்றும் சிறுநீரக பிரச்சனை போன்றவற்றை நாமே எளிய வழியில் குணப்படுத்திக் கொள்ள முடியும். அதற்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை தேவையே இல்லை என்று கூறுகிறார். இது குறித்து விளக்கம் தர வேண்டும்.

இறைவன் அருளால் முன்பே நாங்கள் கூறியிருக்கிறோம். மனிதன் தன் தேகத்தை பார்க்கின்ற விதம் வேறு. நாங்கள் பார்க்கின்ற விதம் வேறு. ஒரு கருவி போல் தன் தேகத்தைப் பார்த்து அதில் பழுது ஏற்பட்டுவிட்டால் இதற்கு இதுதான் காரணம் என்று கண்டுபிடிப்பது மனித விஞ்ஞானம். அதை அடுத்தடுத்து வருகின்ற மனிதன் மாற்றிக் கொள்ளக்கூடும். ஆனால் அவன் கூறுகின்ற காரணம் எதனால் வருகிறது? என்று பார்த்தால் மீண்டும் அங்கே கர்மவினையைதான் குறிக்கிறது. இன்னும் புரியாத வியாதிகள் எதிர்காலத்தில் வரப்போகிறது. இவையனைத்தும் மனித உடலை பங்கப்படுத்தி அவனை துன்பத்தில் ஆழ்த்துவதற்காக மட்டும் என்று எண்ணிவிடக்கூடாது. எதற்காக இந்த துன்பம் நமக்கு வந்திருக்கிறது? என்று அவன் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இது ஏன் நம் உடலை வாட்டுகிறது? இதிலிருந்து தப்பித்துக் கொள்ளக்கூடிய உபாயம் என்ன? இதற்கு என்ன வகையான மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்? என்று பார்ப்பது ஒரு வகை இன்னொன்று நாம் எப்படி வாழ்கிறோம்? என்னென்ன தவறுகள் செய்கிறோம்? எந்தத் தவறும் செய்யாமல் வாழ முயற்சி செய்தால் இந்தப் பிணி நம்மை விட்டு போகுமா? என்று பார்க்க வேண்டும். எனவே ஒரு மனிதனுக்கு துன்ப அனுபவம் எந்த வகையில் வந்தாலும் சிந்தித்துப் பார்க்க இறைவன் அவனுக்கு கட்டளையிடுகிறார் என்பதுதான் பொருள். இதுபோன்ற வியாதிகள் இருப்பது உண்மை. வியாதிகளே இல்லை என்ற கூற்றை நாங்கள் ஒத்துக்கொள்ளவில்லை. அதற்கு முறையான சிகிச்சையும் இறை வழிபாடும் ஏழை நோயாளிக்கு தக்க மருத்துவ உதவியும் பிற உதவியும் செய்வதால் இது போன்ற வியாதிகள் தரும் கர்ம பாவங்களிலிருந்து தப்பிக்கலாம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 84

கேள்வி: பிறவிகளைப் பற்றி

ஒரு ஆத்மா மீண்டும் இந்த பூமியிலே பிறக்க வேண்டிய ஒரு சூழல் வரும் போது இதுவரை எடுத்த மொத்த ஜென்மங்கள் எத்தனை? அதில் கழித்த பாவங்கள் எத்தனை? இந்த விகிதாசாரத்தின் அடிப்படையிலே ஓரளவு புண்ணியம் இருந்தால்தான் மனிதனாகவே பிறக்க முடியும். அதற்கே அவன் சேர்த்து வைத்த புண்ணியம் செலவாகிவிடும். மிகுதி புண்ணியம் இந்த பூமியிலே மேல்திசை நாடுகளிலே பிறக்காமல் இந்த பாரத கண்டத்திலே கர்ம பூமியிலே பிறப்பதற்கே சில புண்ணியம் வேண்டும். அதனினும் இறை மறுப்புக் குடும்பத்தில் இல்லாமல் இறையை நம்பக்கூடிய குடும்பத்தில் பிறப்பதற்கே சில புண்ணியங்கள் வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் மகான்களின் தொடர்பு கிடைப்பதற்கும் ஸ்தல யாத்திரை செல்வதற்கும் தர்மங்களில் நாட்டம் வருவதற்கும் புண்ணியம் தேவைப்படும். பிறகு ஆணாக பெண்ணாக ஆரோக்கியமான உடல் கிடைக்க புண்ணியங்கள் வேண்டும். பெண்ணாக பிறப்பதற்கு புண்ணியம் வேண்டும். பெண் என்றால் பெண் தோற்றத்தில் மட்டுமல்ல அந்த பெண் உணர்வை நன்றாக உணரக் கூடிய பெண்மைக்குரிய குணங்கள் மேலோங்கி நிற்கக்கூடிய சாத்வீகமான பெண்ணாக பிறப்பதற்க்கென்றே சில புண்ணியம் தேவைப்படும். அதன் பிறகுதான் ஏனைய விஷயங்கள் கல்வி பணி பொருளாதாரம் என்று புண்ணியத்தைப் பகுத்துக் கொண்டே வந்தால் ஒரு நிலையில் புண்ணியம் தீர்ந்துவிடும். எதோடு புண்ணியம் தீர்ந்துவிடுகிறதோ அதன் பிறகு அந்த ஆத்மாவிற்கு போராட்டமாகத்தான் இருக்கும். அதைத்தான் (புண்ணியத்தை) அவன் அந்த ஊரிலே பிராத்தனை செய்து தர்மங்களை செய்து சத்தியத்தைக் கடைபிடித்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 83

கேள்வி: இளந்தளிரை மொட்டைப் பறித்தால் பல இளம் சிசுக்களைக் கொல்வதற்கு சமம் என்று ஒரு முறை கூறியிருந்தீர்கள். பூஜைக்கு பூக்கள் தேவைப்படுகிறது. அப்படி பூஜைக்கு பறிப்பதென்றால் மலர்கள் மலர்ந்த பிறகுதான் பறிக்க வேண்டுமா?

இறைவன் அருளைக் கொண்டு ஒரு மனிதனின் நோக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு மருத்துவன் கத்தியால் ஒரு நோயாளியின் வயிற்றை காயப்படுத்தி மருத்துவம் செய்கிறான். ஒரு கள்வனின் கையில் இருக்கும் கத்தியும் அதையே செய்கிறது. இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மருத்துவனின் கத்தி பிணியை நீக்குவதற்காக அந்த செயலை செய்கிறது. அதனால் துன்பம் ஏற்பட்டாலும் பிணியாளி பொறுத்துக் கொள்கிறான். ஏன் என்றால் நோய் என்னும் கடுமையான துன்பத்திலிருந்து நிவாரணம் அடைவதற்கு இந்த சிறிய துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் கள்வனின் கையில் உள்ள கத்தி பொருளைப் பறித்து பிற மனிதர்களுக்கு இடையூறு செய்வதற்காகவே இருக்கிறது. எனவே பூக்களைப் பறித்தாலும் தளிரைப் பறித்தாலும் இறைவனுக்கு ஏற்ற நோக்கத்திலே மெய்யாக மெய்யாக மெய்யாக அந்த நோக்கம் சற்றும் மாறாமல் பொது நலத்திற்கு என்று செய்யப்படும் பொழுது அது பாவமாக மாறாது. அது மட்டுமல்ல. அந்தப் பூக்களையெல்லாம் பறித்து இறைவனின் திருவடியிலும் இறைவனின் திருமேனியிலும் சமர்ப்பணம் செய்வதால் அந்த பூக்கள் எல்லாம் மோட்சம் அடைவதால் அவைகளின் ஆசிர்வாதமும் மனிதனுக்குக் கிட்டுகிறது. ஆனால் இறந்த மனிதனின் மீது மலர்களைப் போடுவது கடுமையான தோஷத்தையும் பூக்களின் சாபத்தையும் விருக்ஷங்களின் (மரங்கள் )சாபத்தையும் மனிதன் பெறுவதற்கு வழி வகுக்கும். அதை ஒருபொழுதும் செய்யக்கூடாது. ஆனாலும் மனிதர்கள் தவறாக அதனை செய்து கொண்டே இருக்கிறார்கள். சாலை முழுவதும் பூக்களை வாரி இறைப்பது மகா பெரிய பாவமும் தோஷமும் ஆகும். ஆனால் எத்தனையோ பாவங்களை நியாயப்படுத்திக் கொண்ட மனிதன் இதைப் பாவம் என்று ஒருபொழுதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. ஒரு மகான் உண்மயைாக ஒரு புனிதனாக வாழ்ந்திருக்கிறான் நல்ல சேவைகளை செய்திருக்கிறான் பிறருக்கு நல்ல புத்திமதிகளைக் கூறியிருக்கிறான் என்றால் அப்பொழுதும் துளசி போன்ற இலைகளைதான் ஆரமாக கட்டிப்போட வேண்டுமே தவிர மகானாக இருந்தாலும் மலர்களைப் போடுவது எமக்கு (அகத்திய மாமுனிவர்) உடன்பாடு இல்லை.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 82

கேள்வி: ஐயனே தாங்கள் தீட்டு என்பது மனதை பொறுத்தவிஷயம் என்று கூறியிருக்கிறீர்கள். இருந்தாலும் தீட்டை எந்த கால கட்டத்தில் பார்க்க வேண்டும். அப்படி எதாவது இருக்கிறதா? உதாரணமாக மாதவிலக்கு மரண வீட்டுத் தீட்டு?

உள்ளம் சுத்தமாக இருப்பதை நாங்கள் பார்க்கிறாறோம். அதற்காக உடல் அசுத்தமாக இருக்க வேண்டும் என்று பொருளல்ல. உடலும் உள்ளமும் சுத்தமாக இருக்க வேண்டும். இப்பொழுது நீ கூறிய பெண்களுக்கு உண்டான மாதாந்திர விலக்கு என்பது ஒருவகையான உடல் சார்ந்த நிகழ்வு. இது போன்ற தருணங்களிலே உடல் சோர்ந்து இருக்கும். எனவே அவர்கள் அயர்வாக ஓய்வாக இருப்பது அவசியம். அதைக் கருதிதான் அவர்கள் விலக்கி வைக்கப்படுகிறார்கள். எனவே தோஷம் காரணமாக விலக்கி வைக்கப்படுகிறார்கள் என்று கருதத் தேவையில்லை. என் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கிறது என்றால் தாராளமாக இயங்கட்டும். ஆனால் சித்தர்களைப் பொறுத்தவரை இது போன்ற தருணங்களில் பெண்கள் முழுக்க முழுக்க ஓய்வாக இருப்பது அவர்களின் பிற்கால உடல் நிலைக்கு ஏற்புடையதாக இருக்கும். அனைத்து இல்லக்கடமைகளில் இருந்தும் ஒதுங்கி இருப்பதே ஏற்புடையது. ஆனால் நடைமுறையில் இது சாத்தியமில்லையே என்று மனிதன் எண்ணலாம். மனிதன் ஏதாவது ஒன்றை இழந்து தான் ஆக வேண்டும். இது போன்ற தருணங்களில் ஒன்றல்ல இரண்டல்ல குறைந்தபட்சம் ஏழு நாட்கள் இல்லையென்றால் ஐந்து நாட்கள் அமைதியாக இருப்பதும் உடலை அதிகமாக வருத்தக்கூடிய எந்த செயலையும் செய்யாமல் இருப்பதும் பெண்களுக்கு ஏற்புடையது.

இது போன்ற தருணங்களில் ஆலயம் சென்றால் தோஷம் இறைவன் சினந்து (கோபித்து) விடுவார் என்று நாங்கள் (சித்தர்கள்) கூறவில்லை. இது போன்ற தருணங்களில் எங்கும் செல்லாமல் இருப்பது ஒரு பாதுகாப்பான நிலையைத் தரும். அது மட்டுமல்ல இது போன்ற தருணங்களிலே நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவதால் நோய்கள் தாக்கக்கூடிய நிலைமை ஏற்படும். சில எதிர்மறை ஆற்றல்கள் எதிர்மறை சக்திகள் பெண்களை பீடிக்க வாய்ப்பு இருப்பதால் அமைதியாக இல்லத்தில் ஒரு பகுதியில் அமர்ந்து மனதிற்குள் இறை நாமத்தை ஜெபித்துக் கொண்டு இருக்கலாம். இந்த அளவில் இதை எடுத்துக் கொள்ளலாமே தவிர மனிதர்கள் எண்ணுவது போல் ஏதோ மூலையில் முடங்கிக் கிடக்க வேண்டும். கடுமையான தோஷம் ஏதோ குற்றவாளி போல் நடத்த வேண்டும் என்றெல்லாம் நாங்கள் (சித்தர்கள்) கூறவில்லை. அதைப்போல் இறப்பு குறித்து நாங்கள் முன்னர் கூறியதுதான். மன உலைச்சலை ஏற்படுத்தாத எந்த இறப்பும் பெரிய தோஷத்தை ஏற்படுத்தாது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 81

கேள்வி: உயிர்க்கொலை செய்வது பாவம் எனப்படுகிறது. படிப்பு நிமித்தமாக உயிர்க்கொலை செய்ய வேண்டியிருக்கிறது. அதற்கு என்ன பரிகாரம் செய்வது?

எந்த நோக்கத்தில் செய்தாலும் பாவம்தான். மருத்துவ வித்தையை (கல்வியை) கற்றுக்கொள்வதற்காக மருத்துவ அறிவு வேண்டும் என்பதற்காக உயிர்களை பகுத்துப் பார்ப்பதை நாங்கள் ஏற்கவில்லை. போகன் போஓன்ற சித்தர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா? எதையும் சோதிப்பதற்கு முன்னால் தன் உடலுக்கு அந்த மருந்தை செலுத்திப் பார்த்துதான் சோதனை செய்வான். ஒன்று ஞானத்தில் அறிந்துகொள்ள முயல வேண்டும் இது தக்கது இது தகாதது என்று. ஆனால் மனிதன் எப்பொழுதுமே லோகாயரீதியாக (உலக ரீதியாக) சிந்தித்தே பழகிவிட்டான். வேறு வகையில் கூறுகிறோம். ஒரு குழந்தையின் மீது ஒரு நாகம் ஏறிவிட்டது. சற்றே கவனக்குறைவாக இருந்தாலும் அந்தக் குழந்தையை நாகம் கொன்றுவிடும். இப்பொழுது அந்த நாகத்தை அப்புறப்படுத்துவதா? அல்லது கொல்வதா? நாகத்தைக் கொன்றால் பாவம் வந்துவிடுமே? என்றால் கட்டாயம் குழந்தையைக் காப்பாற்ற வேண்டும். ஆனாலும் நாகத்தை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும். அந்த நிலையில் நாகத்தைக் கொன்றால் கட்டாயம் பாவம்தான் வரும். ஆனால் அங்கே நோக்கம் எவ்வாறு இருக்கிறது? என்று இறைவனால் பார்க்கப்பட்டு அதற்கு ஏற்றாற்போல் பாவத்தின் தன்மை அவனுக்கு அளிக்கப்படுகிறது. எனவே வெறும் சுயநல நோக்கத்திற்காக செய்யப்படுகின்ற எல்லா உயிர்க் கொலைகளும் பாவம்தான். இதை எப்படிப் பார்த்தாலும் இந்தப் பாவம் ஒரு மனிதனை பற்றத்தான் செய்யும். கூடுமானவரை இதை தவிர்ப்பது நன்மையைத் தரக்கூடிய நிலையாகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 80

கேள்வி: நாரதர் கலகம்தான் செய்வார் என்பது பற்றி

இறைவன் அருளால் தவறான கருத்து அப்பா. இந்த நாரதர் மிகப்பெரிய மகான் ஞானி. ஞானத்தையெல்லாம் வேடிக்கையாகப் பல பேருக்கு உபதேசம் செய்து பல ஆத்மாக்களை கரையேற்றியிருக்கிறார். இன்று வால்மீகி மனிதர்களுக்கு கிடைத்திருக்கிறார் என்றால் அதற்கு பின்னால் நாரதரின் பங்குதான் அதிகமாக இருக்கிறது. முன் ஜென்ம பாவத்தால் தவறான தொழிலை செய்ய வேண்டி நிலைமை ஏற்பட அதே வால்மீகியின் முன் ஜென்ம புண்ணியத்தால் ஒரு மகான் மூலம் ராம நாமத்தை ஜபிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தால் அவன் புனிதனாவான் மாமேதையாவான் மாமனிதனாவான் மகானாவான் என்கிற விதி இருக்க அந்த விதிக்குள் ஒரு விதி இருந்தது. ராம நாமத்தை அவன் நேரடியாக உபதேசம் பெறக்கூடாது. பெற்றால் பலிக்காது என்று இதையெல்லாம் மனதிலே கொண்டுதான் நாரத மகரிஷி வால்மீகியை கள்வனாக இருக்கும் பொழுதே கண்டு நீ மரா மரம் மரா மரம் என்று ஓதிக் கொண்டே இரு. உனக்கு வேண்டியதெல்லாம் கிட்டும் என்று கூற அவனும் ஏதும் புரியாமல் மரா மரா மரா மரா என்று ஓத அதுவே பின்னால் ராம ராம ராம ராம என்று ஆகி மனித குலத்துக்கு ஒரு வால்மீகி கிட்டினான்.

வால்மீகி மிகப்பெரிய ஞானி. வால்மீகம் என்றால் புற்று என்று பொருள். விண்ணளவு புற்று வளரும்வரை தவம் செய்தவனடா. எனவே இதுபோன்ற பல ஞானியர்களை உருவாக்கிய பெருமை நாரதருக்கு உண்டு. முன்பே கூறியிருக்கிறோம். நாரதர் வழிபாடுகளெல்லாம் இங்கு வழக்கொழிந்து இருக்கிறது. ஹரிச்சந்திரனை மயானத்தோடு நிறுத்தி விட்டார்கள். உண்மை அங்குதான் இருக்கிறது என்பதை மனிதன் சொல்லாமல் சொல்கிறான். ஊருக்குள் உண்மை வரவேண்டாம் என்று மனிதன் என்றோ முடிவெடுத்து விட்டான். அதைப்போல் நாரதரையும் இப்படியே கூறி ஒதுக்க விட்டார்கள். அவ்வாறெல்லாம் எண்ணாமல் தாராளமாக நாரதரை மிகப்பெரிய மகானாக ஞானியாக சித்தனாக முனிவனாக வணங்கலாம். நல் உபதேசங்களும் ஞான கருத்துகளும் ஞான வழியில் வருகின்ற மனிதனுக்கு நல்ல வழிகாட்டுதலும் இன்றளவும் நாரதர் செய்து கொண்டிருக்கிறார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 79

கேள்வி: இறைவன் ஒருவரே அவர் சிவபெருமான் தான். அப்படியென்றால் படைக்கும் கடவுள் யார்? காக்கும் கடவுள் யார்? அழிக்கும் கடவுள் யார்? இவர்கள் இருக்கிறார்களா அல்லது இல்லையா?

இறைவன் ஒருவரே சரியாக கூறினாய். சிவபெருமான்தான் என்று ஏன் கூறுகிறாய்? மகாவிஷ்ணுவை வணங்கக் கூடியவன் என்ன எண்ணுவான்? மகாவிஷ்ணுதான் என்று கூறுவான். பிரம்மனை வணங்கக் கூடியவன் பிரம்மன் என்று கூறுவான். பிறை மார்க்கத்தில் (இஸ்லாம்) பிறந்தவன் என்ன எண்ணுவான்? அவன் அல்லா என்று தான் கூறுவான். அன்பு சித்தன் (இயேசு) வழியில் பிறந்தவன் வழியில் வந்தவன் பரமபிதா என்றுதான் கூறுவான். நன்றாக புரிந்துகொள். ஒருவன் இல்லத்திலே மனைவிக்கு கணவன். தந்தைக்கு பிள்ளை தாத்தாவிற்கு பேரன் பேரனுக்கு தாத்தா சகோதரனுக்கு சகோதரன் சகோதரிக்கு சகோதரன். அலுவலகம் சென்றால் அதிகாரி இப்படி இருக்கின்ற ஒருவனே பல வடிவங்கள் எடுக்கிறான். இறை ஏனப்பா பல வடிவங்கள் எடுக்கக்கூடாது?

கேள்வி: தர்மர் மட்டும்தான் வைகுண்ட பிராப்தி அடைந்தார். கர்ணன் உட்பட மற்றவர்கள் அவர்களின் கர்மாவின்படியான நிலையை அடைந்தார்கள் என்று மூல நூலில் படித்தேன் அது குறித்து.

சூரியனிடமிருந்து பிரிந்த ஒரு சிறு சக்திதான் கர்ணன் என்ற ஒரு பாத்திரமாக பரிணமித்தது. அது தன்னுடைய கடமையை இறையாணையின்படி செய்துவிட்டு பிறகு இறையோடு ஒன்றாகக் கலந்து சூரிய பகவானோடு இணைக்கப்பட்டது என்பதே உண்மையான தேவ செய்தியாகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 78

கேள்வி: வாடகை வீட்டில் குடியிருப்பவர்களின் துன்பங்களை தாங்கள் அறிவீர்கள். சொந்த வீடு அமைய எளிய வழியைக் காட்டுங்கள்

இறைவன் அருளைக் கொண்டு ஆத்மா குடியிருக்கும் தேக வீட்டை (உடல் வீட்டை) நன்றாக ஒரு மனிதன் பராமரிக்க வேண்டும். ஒரு பிறவியிலே பெற்ற புண்ணியத்தால் பல்வேறு இல்லங்களை பெறக்கூடிய வாய்ப்பு பல்வேறு மனிதர்களுக்கு ஏற்படுகிறது. அப்பொழுது அந்த ஆணவத்தால் பலரை இடர்படுத்திய பாவம்தான் அடுத்தடுத்த பிறவிகளில் நல்லதொரு சுகமான இல்லம் அமையாமல் ஒரு மனிதன் வேதனைப்பட நேரிடுகிறது. எனவே இது போன்ற கடுமையான மனைதோஷம் அடையப்பெற்ற ஜாதகர்கள் அவர்கள் விருப்பம்போல் இறை வழிபாட்டை செய்வதோடு குறிப்பாக செவ்வாய்க்கிழமை தோறும் முருகப்பெருமானை வணங்கி நவகிரகங்களில் உள்ள செவ்வாய்க்கும் (பூமிக்காரகன்) முடிந்த பிராத்தனைகளை செய்து கொண்டே இருப்பதும் கூடுமானவரை மனைதோஷங்கள் குறைவதற்கு முடிந்தவரை தர்மங்களை குறிப்பாக சிறிய அளவு மனையையாவது ஒரு ஏழைக்கு தானமாக அளித்தால் கட்டாயம் இந்த தோஷம் விலகுமப்பா.

கேள்வி: அனைத்தையும் இறைவனுக்கு சமர்ப்பணம் செய்துவிட்டால் இறைவன் முக்தி அருள்வார் என்ற கருத்து சரியா?

இறைவனுக்கு தர மனிதன் யாரப்பா? இறைவனுக்கு தருகிறேன் என்ற எண்ணம் இருக்கும் வரையில் எப்படியப்பா முக்தி கிட்டும்? அப்படியானால் இறைவன் வேறு தான் வேறு என்ற எண்ணம் இன்னும் அங்கு இருக்கிறது என்று பொருள். அது இருக்கும் வரையில் அங்கு முக்தி கிட்டாது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 77

கேள்வி: கிரிவலம் செல்லும் போது செருப்பை அணிந்து கிரிவலம் செல்லலாமா? அன்றாடம் வீட்டில் காலையில் பூஜை செய்யும் போது வாயை மட்டும் கொப்பளித்து விட்டுத்தான் பூஜையில் அமரவேண்டுமா?

இறைவன் அருளால் மலை வலமாக இருக்கட்டும் ஆலயத்தின் ராஜகோபுரம் அல்லது ஆலயத்தின் எல்லையாக இருக்கட்டும் கூறப்போனால் இன்னும் பல இடங்களில் ஆலய கோபுரத்தை சுற்றியும் பாதரட்சைகளை (செருப்பு) மனிதர்கள் விடுகிறார்கள். இது மகாபெரிய தோஷத்தை ஏற்படுத்துவதாகும். இன்னும் கூறப்போனால் ஆலயம் செல்வதற்கு முன்பாகவே உடல் தூய்மை செய்துவிட்டு நீராடிவிட்டு மாற்று உடை அணிந்து செல்வதே மிகவும் சிறப்பு. ஆண்கள் மேலாடை இல்லாமல் ஆலயம் சென்று வழிபடுவது சிறப்பு. கட்டாயம் கிரிவலம் போன்ற இறைவழிபாட்டிலே பாதரட்சை (செருப்பு) அணியாமல் செல்வதே சிறப்பாகும்.
பாதரட்சை அணியாமல் செல்ல முடியவில்லை அதனால் சில துன்பங்கள் ஏற்படுகிறது என்றால் ஒன்று அதை சகித்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் செல்லாமல் இருப்பதே சிறப்பு. அடுத்ததாக உடல் சுத்தி என்பது மனிதனுக்கு ஒரு புத்துணர்ச்சியை தருவதற்காக ஏற்படுத்தப்பட்டது. உடலையும் உள்ளத்தையும் சுத்தமாக வைத்துக் கொண்டு இறைவனை வணங்கினால் நன்மை உண்டு. தவிர்க்க முடியாத சூழலிலே இன்னவள் கூறியது போல் மேலெழுந்தவாரியாக சுத்தம் செய்து கொண்டு தாராளமாக இறைவனை வணங்கலாம். ஆனால் இதையே ஒரு காரணமாக வைத்துக் கொண்டு ஸ்நானம் செய்யாமல் இறை வழிபாடு செய்வதை நாங்கள் ஒரு பொழுதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.

கேள்வி: ஜாதகத்தில் ராகு கேது போல் மாந்தி என்ற ஒன்று உள்ளதா?

மாந்தி இருக்கிறது. இன்னும் சில காலம் கழித்து இன்னும் பல கிரகங்கள் சேர்க்கப் போகிறார்கள். ஆனால் எத்தனை சேர்த்தாலும் அது ஒன்பதின் பிரதிபலிப்பாகத்தான் இருக்கும். சனியின் பலன்கள் அத்தனையும் மாந்திக்கும் பொருந்தும் என்பதால் மாந்தியை சேர்த்து பார்த்தாலும் தவறில்லை. அதை சேர்க்காவிட்டாலும் தவறில்லை.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 76

கேள்வி: புலனடக்கம் குறித்து விளக்குகள் ஐயனே தாம்பதிய உறவை விட்டதால்தான் ஞானமார்க்கம் சித்திக்குமா?

அப்படியெல்லாம் நாங்கள் கூறவில்லை. இறைவன் அருளாலே ஒன்றை நன்றாக புரிந்து கொள். எது குற்றமாகிறது? எது தவறாகிறது? எது பாவமாகிறது? என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பிறர் மீது ஆதிக்கமும் பிறர் மனதையும் பிறர் உடலையும் பிறர் உடைமைகளையும் பாதிக்கும் வண்ணம் ஒரு மனிதன் நடந்து கொள்ளும் போது பாவத்திற்குண்டான ஒரு சூழலுக்கு தன்னை ஆட்படுத்திக் கொள்கிறான். நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். இல்லறம் நடத்துவது என்பது நேர்மையான முறையிலே ஒருவன் நடத்துகிற இல்லறம் கட்டாயம் இறைவனுக்கு எதிரானது அல்ல. ஆனால் தாரமாக இருந்தாலும் கூட உடலும் உள்ளமும் சோர்ந்திருக்கும் நிலையிலே அவளைக் கட்டாயப்படுத்தி நீ கூறிய அந்த நிலைக்கு ஆட்படுத்துவது ஒருவிதமான பாவத்திற்கு கணவனை ஆட்படுத்தும் என்பதை மறந்துவிடக் கூடாது. எங்கு கட்டாயம் இல்லாத நிலை இருக்கிறதோ எங்கு இயல்பாக அனைவரும் ஒத்துப் போகிறார்களோ அந்த உணர்வுகள் எதுவும் இறைவனுக்கு எதிரானது அல்ல.