கேள்வி: தியானத்தின் போது இந்த உடல் நானல்ல மனம் நானல்ல என்று உணர்ந்த பின்பு எண்ணங்கள் எழா உணர்வில் வெற்றிடம் கிடைக்கிறது. ஆனால் சிலர் அந்த வெற்றிடம் என்பது வெறும் மனோலயம் மட்டுமே. அதுவே முடிவல்ல. அதற்கு மேற்கொண்டு சாக்ஷி என்ற ஒன்று உள்ளது என்று சொல்லப்படுவது பற்றி:
எண்ணங்களற்ற நிலையை நோக்கி செல்வதே ஒரு தனி மனிதனுக்கு மிகப்பெரிய சாதனைதான். அந்த நிலைக்கு சென்ற பிறகு அடுத்த நிலை என்ன? என்பதை இறைவனே உணர்த்துவார். எனவே எண்ணங்களற்ற நிலை என்பது மிக மிக உயர்ந்த உன்னத நிலையாகும். அதுதான் மனிதனுக்கு அமைதியைத் தருகின்ற மெய்யான சுகத்தைத் தருகின்ற ஒரு நிலையாகும். மனதை உள் நோக்கி ஒவ்வொரு மனிதனும் சிந்தித்துப் பார்த்தால் அந்த மனதிலே என்ன இருக்கிறது? முழுக்க முழுக்க லோகாயம் மட்டும்தான் இருக்கும். அந்த லோகாயத்தை அவன் விட்டுவிட்டால் மனதிலே பெரும்பாலும் வெற்றிடம் இருக்கும். எனவே அதை மேலெழுந்தவாரியாக விடாமல் அழுத்தந்திருத்தமாக விடுவதற்குண்டான முயற்சியிலே மனிதன் இறங்கினால் கட்டாயம் அவன் ஒரு நல்ல மேல் நிலையை நோக்கி செல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே அந்த நிலை தாண்டி இறை இருந்தாலும் இந்த எண்ணங்களற்ற நிலையை நோக்கி முதலில் செல்லத்தான் வேண்டும்.
கேள்வி: அத்வைதத்தை எப்படி நடைமுறைக்குக் கொண்டு வருவது?
எல்லாவற்றையும் சுருக்கமாக குறுக்கு வழியில் கூறுவதற்கு உண்மையில் வாய்ப்பு இல்லையப்பா. ஒரு வகையில் எல்லாம் எளிமை போல் தோன்றினாலும் இன்னொரு வகையில் மனிதனுக்கு எல்லாம் கடினமாகத்தான் இருக்கும். ஏன் என்றால் மனிதனின் மனம் முழுக்க தேகம் சார்ந்த விஷயமாகவே இருக்கிறது. கண் முன்னால் வைத்துக் கொண்டு இதனை விடு என்றால் மனிதனால் முடியாது. மெல்ல மெல்ல முயற்சி செய்துதான் மேலேற வேண்டும். இதற்கு வேறு வழியில்லை. இதற்கு ஒரே வழி தொடர்ந்து பக்தி மார்க்கம் ஒன்றுதான் இக்காலத்தில்.
![](https://i0.wp.com/tsaravanan.com/wp-content/uploads/2022/05/270.jpeg?resize=650%2C805&ssl=1)