ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 400

கேள்வி: இராமர் இராமேஸ்வரத்தில் வழிபட்டதினால் அங்கு திலயாகம் போன்றவற்றை செய்ய சொல்கிறீர்கள். இராமர் வேறு புண்ணிய நதிக்கரைகளிலும் வழிபாடு செய்திருக்கிறார். அப்படிப்பட்ட இடங்களிலும் நாங்கள் திலயாகம் போன்றவற்றை செய்யலாமா?

தெய்வ சமுத்திர கோட்டம் எனப்படும் இராமேஸ்வரத்தில் மட்டும்தான் இதுபோல் திலயாகமோ தர்ப்பணமோ முன்னோர்களுக்கு உண்டான சாந்தி பூஜையோ செய்ய வேண்டும் என்பதல்ல. ஒன்றை நன்றாக கவனிக்க வேண்டும். மனிதர்கள் அறிந்ததுதான். மனித நாகரீகம் வளர்ந்ததே நதிக்கரையோரங்கள் கடலோரங்களில்தான். மனிதனுக்கு நீர் அவசியம். அந்த நீரை எங்கிருந்தாலும் கொண்டு வந்து சேர்க்கின்ற ஒரு சூழல் இன்று இருக்கிறது. ஆனால் அன்று இல்லை. நீரை ஒட்டிதான் நகரங்களும் நாடுகளும் வளர்ந்து வந்தன. இதுபோல் நிலையிலே மெல்ல மெல்ல பரிணாம மாற்றம் அடைந்த மனிதன் வேறுவிதமான வசதிகளையெல்லாம் பெற்ற பிறகு வேறுவிதமான வாழ்க்கை முறைக்கு சென்று விட்டான். எனவே எம்மைப் பொருத்தவரை ஆத்மார்த்தமாக மலைகளில் அமர்ந்து தில தர்ப்பணம் செய்தாலும் இறைவன் ஏற்றுக் கொள்வார். இல்லத்தில் அமர்ந்து செய்தாலும் ஏற்றுக் கொள்வார் அதல்ல பிரச்சினை. அடுத்ததாக இராமபிரான் வந்து அமர்ந்து பூஜை செய்ததால் சிறப்புதான் என்றாலும் அதற்காக மட்டும் யாங்கள் கூறவில்லை.

இதைத் தாண்டி ஒரு மனிதன் இல்லத்தில் அமர்ந்து பூஜை செய்து முன்வினை பாவங்களை போக்கிக் கொள்ளக் கூடிய அளவிற்கு மனோதிடமோ புண்ணிய பலமோ இல்லாத நிலையிலே தூர தூர இடங்களுக்கு தன் தனத்தை செலவழித்து சென்று அங்குள்ள மனிதர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து இதுபோல் ஒரு பொருளாதார சுழற்சியை ஏற்படுத்தும் பொழுது அதனால் அவனுடைய பாவங்கள் குறையட்டும் என்றுதான் யாங்கள் கூறுகிறோம். ஒன்று தீர்த்தம் புனிதமானது. அடுத்து ஆழி புனிதமானது. அதுபோல் அங்குள்ள இராமேஸ்வர தெய்வம் புனிதமானது தெய்வ சாந்நித்யமானது. அங்கு இருக்கின்ற மனிதர்கள் பல தவறுகள் செய்யலாம். ஆனால் தெய்வ சாந்நித்யம் என்பது உயர்ந்தது. அதனாலும் அங்கு செய்ய அருளாணை இடுகிறோம். திருவெண்காட்டிலும் செய்யலாம். கோடியக்கரையிலும் செய்யலாம். பூம்புகாரிலும் செய்யலாம் தவறொன்றுமில்லை. காசிதான் உயர்ந்தது இராமேஸ்வரம்தான் உயர்ந்தது என்று நாங்கள் கூற வரவில்லை. வாய்ப்பும் வசதியும் இருப்பவர்கள் அங்கு செய்யலாம். மற்றவர்கள் எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் புனித நதியை புனித நதியாக மதிக்கின்ற மனிதர்கள் அந்த புனித நதியை நன்றாக பராமரித்து அந்த நதிக்கரையிலேயே நல்லவிதமாக பூஜைகளை செய்தால் கட்டாயம் நற்பலன் ஏற்படும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.