கேள்வி: காக புஜண்டருக்கு கோவில்கள் எங்கெங்கே இருக்கிறது?
உண்மையான பக்தர்களின் உள்ளம் அனைத்திலும் காக புஜண்டருக்கு கோவில்கள் இருக்கிறது.

கேள்வி: காக புஜண்டருக்கு கோவில்கள் எங்கெங்கே இருக்கிறது?
உண்மையான பக்தர்களின் உள்ளம் அனைத்திலும் காக புஜண்டருக்கு கோவில்கள் இருக்கிறது.
கேள்வி: துறவு பற்றி
துறவு என்றால் என்ன என்று நீ எண்ணுகிறாய்? முற்றிலும் துறப்பதல்ல. முற்றிலும் உணர்வது தான் துறவின் இலக்கணம். உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற்குரு யாருக்கும் எந்த தீங்கும் செய்யாமல் தன் கடமையை நேர்மையாக ஆற்றுவதுதான் உண்மையான துறவு. இல்லறத்தில் இருந்து கொண்டு நேர்மையாக சத்தியமாக தர்மத்தோடு பக்தியோடு வாழ்ந்தால் அதுவும் துறவுக்கு சமானம்தான்.
கேள்வி: கோயில் என்றாலே புண்ணியமான இடம் தானே. இராசி இல்லாத கோயில்கள் என்ற ஒன்று இருக்கிறதா?
இறைவன் அருளால் மனிதன் தனக்கு ஏற்படக்கூடிய துன்பங்களுக்கு எப்பொழுதுமே பிறவற்றை அல்லது பிறரை குற்றம் சாட்டுவது என்பது இயல்பாகி விட்டது. ஆயிரக்கணக்கான ஆடு மாடுகளை கொன்று குவிக்கும் பொழுது வராத பாவம் ஆயிரக்கணக்கான மனிதர்களை போர் என்ற பெயரில் கொன்று குவிக்கும் போது வராத பாவம் ஒரு ஆலயம் சென்று தரிசித்தால் வந்துவிடுமா என்ன? ஆலயத்தில் இறைவனால் எந்த அனாச்சாரமும் நடப்பதில்லை. அவனவன் விதியின் படி நடக்க வேண்டியது நடந்து கொண்டே இருக்கிறது. அதற்கும் ஒரு ஆலயத்திற்கும் தொடர்பு இல்லை. இன்னொன்று காலத்தில் ஆலய கட்டுமான பணிகள் செய்யும்போது பல்வேறு மனிதர்கள் அந்த கட்டுமானத்தின் காரணமாக அந்த வேலையின் காரணமாக உயிரை துறந்திருக்கிறார்கள். அதற்கெல்லாம் பூஜை நடந்திருக்கிறது. இன்னும் எமக்கு பிடிக்காத பலவும் நடந்திருக்கிறது. ஆலய வேலை பழுதுபடாமல் இருக்க உயிர் பலியெல்லாம் கூட தந்திருக்கிறார்கள். இவையெல்லாம் எக்காலத்திலும் மூடர்கள் செய்யக்கூடிய விஷயம்தான். அக்காலத்தில் அரசனும் சில மூட பழக்க வழக்கங்களுக்கு ஆளாகி இப்படியெல்லாம் செய்ததுண்டு. ஆனால் அதற்கும் இன்னவள் கூறிய வினாவிற்கும் தொடர்பில்லை. அங்கு திரையை போட்டு மறைத்து விட்டால் மட்டும் ஒருவனின் கர்மாவையும் மறைத்து விட முடியுமா என்ன?
அகத்தியரின் பொது வாக்கு:
இறைவன் அருளாலே இறைவன் என்ற மகாசக்தியிலிருந்து பிரிந்த துகள் தான் அனைவரும் என்று தத்துவார்த்தமாக கூறினாலும் கூட இறைவன் விளையாட்டாக இந்த உலகை படைத்ததாக சொல்லுவோம். அப்படி படைக்கும் பொழுது இப்படி வாழ வேண்டும். இப்படி வாழ கூடாது. இது தக்கது. இது தகாதது. இது நன்மையை தரக்கூடியது. இது தீமையை தரக்கூடியது என்றெல்லாம் நல்ல ஞானிகளையும் உடன் அனுப்பி போதனைகளையும் செய்திருக்கிறார். ஆனாலும் கூட இங்கு வந்த பிறகு ஆத்மாக்கள் வெறும் லோகாய இச்சைக்குள் சிக்கி தவறுகளையும் பாவங்களையும் செய்து கொண்டேதான் போகிறது. இது எங்ஙனம்? என்றால் ஒரு மகா பெரிய ஞானி யோகி இருப்பதாக கொள்வோம். அந்த ஞானியின் போதனைகளை கேட்டு பலரும் மனம் திருந்தி நல்ல வழியில் வருவதாக கொள்வோம். ஆனால் அந்த ஞானியின் பிள்ளை அவ்வாறு இருக்க வேண்டும் இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லையே? ஞானியின் பிள்ளை அசட்டுத்தனமாக மூடத்தனமாக தவறுகளை செய்யக்கூடிய பிள்ளையாக பலருக்கும் இருப்பது போலத்தான். இறைவன் படைப்பாக இருந்தாலும் இறைவனைப் போல உயர்ந்த எண்ணங்கள் இல்லாமல் வாழும் சூழலை மாயையால் மனிதன் உண்டாக்கி கொள்கிறான். ஆனால் இறைவன் தான் இந்த உயிர்கள் எல்லாம் படைத்தார் என்பதற்கு குழந்தைகளை பார்த்தால் புரிந்து கொள்ளலாம். குழந்தைகளிடம் வஞ்சகம் இல்லை. சூழ்ச்சி இல்லை. சூது இல்லை. வாது இல்லை. அது இறைவனின் நகலாக இருக்கிறது. அது பிறகு வளர வளர ஏற்கனவே வளர்ந்த குழந்தை அனைத்தையும் அந்த குழந்தைக்கு சொல்லி தந்து விடுகிறது.
நல்லதை தொடர்ந்து செய் என்று எண்ணிதான் இறைவனை இறைவன் உயிர்களை படைத்திருக்கிறார். ஆனால் அப்படி ஒருபோதும் செய்ய மாட்டேன் அப்படி செய்தால் உடனடியாக நன்மைகள் ஏற்பட போவதில்லை. லோகாய நஷ்டம் ஏற்படுகிறது. எனவே நான் சுயநலவாதியாகத்தான் வாழ்வேன் என்பது மனித சமுதாயத்தின் ஒட்டுமொத்த தீர்மானமாக இருக்கிறது. அப்படி பார்க்கும் பொழுது இறைவன் நல்ல எண்ணத்தில் தான் அனைத்தையும் செய்து இருக்கிறார். இறைவன் மனிதனை இப்படி ஒரு மாயையில் தவிக்க விட்டதாக தத்துவார்த்த ரீதியில் புலம்பலாமே தவிர இந்த குற்றத்திற்கு முழுக்க முழுக்க மனிதர்களை காரணம். ஏனென்றால் சிந்திக்கும் ஆற்றலை தந்து தான் உயிர்களை இறைவன் உலாவை விட்டிருக்கிறார். வெளியூருக்கு செல்லும் மைந்தனுக்கு போக வர செலவுக்கும் உணவு அங்காடிக்கு உண்டான செலவுக்கும் சத்திரத்தில் தங்குவதற்கு உண்டான செலவுக்கும் தனம் தந்து அந்த தனம் எதிர்பாராத விதமாக தொலைந்து விட்டால் வேறுவிதமான ஏற்பாடுகளையும் செய்து தான் தந்தை அனுப்புகிறார். ஆனால் பிள்ளையோ அதனை கேட்காமல் தவறான வழியில் சென்றால் அனுப்பிய தந்தையின் குற்றமா? தவறான வழியில் சென்ற பிள்ளையின் குற்றமா?
கேள்வி: ஸ்ரீராமஜெயம் எழுதி வந்தால் கனவிலே இறை ரூபங்கள் தோன்றுகிறது இது குறித்து:
இறைவனின் அருளால் கனவிலே எந்த இறை ரூபத்தை பார்த்தாலும் அதை சுப சகுனமாக எடுத்துக் கொள்ள வேண்டும் ஸ்ரீ ராம ஜெயம் எழுதினால்தான் இப்படி தோன்றும் என்பதில்லை. எந்த இறை நாமத்தை உள்ளார்ந்த அன்போடு ஜெபித்துக் கொண்டிருந்தாலும் நல்ல சகுனங்கள் தோன்றும். சொப்பனத்தில் இறைவனை காட்சியை ஆலயத்தை இன்னும் இது போன்ற விஷயங்களை காண்பது பாவ கர்மாக்கள் குறைவதற்குண்டான சூழல்கள் ஏற்படப் போகிறது என்பதை பொருளாகும்.
கேள்வி: கச்சியப்பர் இயற்றிய ஐங்கரன் பாடலுக்கு விளக்கம் தர வேண்டும்:
திகட சக்கர செம்முகன் ஐந்துளான்
சகட சக்கர தாமரை நாயகன்
அகட சக்கர விண்மணி யாவுறை
விகட சக்கரன் மெய்பும் போற்றுவான்
முதல் அடி: திகட சக்கர செம்முகன் ஐந்துளான்
திகட சக்கரம் என்கிற வார்த்தை திகழ் சக்கரம் என்று இருக்கக் கூடியது. அந்த வெண்பாவின் இலக்கணத்திற்காக திகட சக்கரம் என்று திரிந்திருக்கிறது. தொல்காப்பியத்தில் இந்த குறிப்பு இல்லை என்பதால் இதனை ஏற்க இயலாது என்று புலவர்கள் வாதிட இதுபோல் அந்த சொல்லை யான் பிரயோகப்படுத்தவில்லை என்றார் கச்சியப்ப சிவாச்சாரியார்.
இங்கே ஒன்றை நினைவு கூற வேண்டும். கச்சியப்ப சிவாச்சாரியார் இறைவன் அருளால் கந்த புராணத்தை இயற்றும் சமயம் ஒவ்வொரு தினமும் ஓலையிலே எழுதி எழுதி அதனை இறைவன் திருவடியில் வைத்து விட்டு சென்று விடுவார். இறைவன் அந்த இரவு முழுவதும் தம் அருட்பார்வையால் அதனை திருத்தி திருத்தி மறுதினம் அதனை கச்சியப்பரிடம் ஒப்படைப்பார். எனவே இறைவனே ஒப்பு நோக்கிய நூல் கந்தபுராணம் என்பதால் மேல் சொன்ன அந்த சொல் நான் சொல்லவில்லை எனக்கு இறைவனே உணர்த்தியது என்று கச்சியப்ப சிவாச்சாரியார் கூற அதனை யாரும் ஏற்றுக் கொள்ளாத நிலையிலே முருகனே தமிழ் புலவன் வடிவிலே வந்து திகட சக்கரம் என்கின்ற பதம் திகழ் சக்கரம் தசம் எனப்படும் பத்து அதாவது பத்து கரமாக திகழக்கூடிய ஐங்கரனை வணங்கி துவங்குகிறேன் என்பது போன்ற பொருளும் இந்த திகட சக்கரம் செம்முகம் ஐந்துளான் ஐந்து கரத்தனை ஆனைமுகத்தனை என்று வணங்கக்கூடிய விநாயகரை குறிக்கக்கூடிய சொல்தான். இதற்கு ஆதாரம் வீரசோழியம் என்ற இலக்கண நூலில் இருக்கிறது என்று உதாரணத்தையும் கூறி முருகப்பெருமான் திருவாய் மலர்ந்தருளினார்.
2 ஆம் அடி: சகட சக்கர தாமரை நாயகன்
தாமரை நாயகன் என்றால் அனைவருக்கும் தெரிந்திருக்கும் யார் என்று. மகாவிஷ்ணுவை குறிக்கிறது. இதுபோல் இந்த மகாவிஷ்ணுவின் கையிலே இருக்கக் கூடிய சகடை சுதர்சனத்தை இது குறிக்கிறது. இந்த சுதர்சனம் ஒருமுறை மகாவிஷ்ணுவின் கையில் இருந்து விநாயகரின் திருவருளால் திருக்குறிப்பால் உள்ளே ஈர்க்கப்பட்டு விட்டது. அப்பொழுது அந்த சுதர்சனத்தை மீண்டும் பெறுவதற்காக விநாயகரின் முன்னால் அவரை மகிழ்விக்கும் வண்ணம் மகாவிஷ்ணு த்விப்பி கரணம் (இதனை தோப்புக்கணம் என்று கூறக்கூடாதப்பா) த்விப்பி கரணம் என்பதுதான் சரியான வார்த்தை பிரயோகம். திவி என்றால் இரண்டு என்று பொருள். இரண்டு காரணம் அதாவது இரண்டு காதுகளை மாறி வைத்து அந்த முட்டிகளை முழுமையாக செய்வது. (இப்போதெல்லாம் ஆலயத்தில் அரைகுறையாக செய்கிறார்கள்) அற்புதமான ஒரு யோகாசனம். காதுகளின் மடல்களில் உள்ள ரத்த நாளங்களெல்லாம் நன்றாக தூண்டி விடப்பட்டு காது மடல்களில் தான் நினைவாற்றலும் நன்றாக கல்வி கற்க உதவுகிற உந்து சக்தியும் இருக்கிறது. அதனால் தான் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே காதிலே சரியான இடம் பார்த்து துளையிடும் பழக்கம் ஏற்பட்டது. அதுபோல் பழக்கத்தினால் பின்னால் நல்ல அறிவு வரட்டுமே என்று அவ்வாறு செய்யப்பட்டது. ஆனால் காலம் செல்ல செல்ல சரியான இடம் மாறி தவறான இடத்திலே துளையிடுவதால்தான் இது முறையாக யாருக்கும் சித்தியாகவில்லை. எனவே இரண்டு காதுகளையும் மாறி மாறி இடது கைகளால் வலது காதையும் வலது கையால் இடது காதையும் பற்றி இழுக்கும் பொழுது கட்டாயம் ஒருவகையான யோகாசன பயிற்சி அவனையும் அறியாமல் மனிதனுக்கு கிட்டுகிறது. இது மருத்துவம் யோகாசனம் உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயம். இது ஒருபுறம் இருக்கட்டும். இப்படி விநாயகரை மகிழ்விக்கும் பொருட்டு மகாவிஷ்ணு செய்ய அந்த ஒரு செயலைதான் இந்த சொற்றொடர் குறிக்கிறது.
3 வது அடி: அகட சக்கர விண்மணி யாவுறை
இப்பொழுது வினாவலாம் வார்த்தைக்காக பரம்பொருள் ஒன்று என்றாலும் மகாவிஷ்ணு பெரிய நிலையில் இருக்க விநாயகரைப் பார்த்து அவர் ஏன் கூத்தாட வேண்டும்? என்று இப்பொழுதெல்லாம் வீட்டிலே பெரியவர்கள் குழந்தைகளை மகிழ்விக்கும் வண்ணம் தானும் குழந்தையாக மாறி விளையாடுவது போல என்று புரிந்து கொள்ள வேண்டும். அப்படி அந்த திகழ் சக்கரம் கொண்ட விநாயகப் பெருமான் மகாவிஷ்ணுவின் சுதர்சன சக்கரத்தை எடுத்து வைத்துக் கொண்ட விநாயகப் பெருமானை மகிழ்விக்கும் வண்ணம் மகாவிஷ்ணு கூத்தாடி அகடங்களையெல்லாம் செய்து விநாயகர் பெருமானை மகிழ்வித்து மீண்டும் சுதர்சன சக்கரத்தை பெற்று அந்த ஒரு பெருமை கொண்ட விநாயகப் பெருமானை அந்த மூல முதல்வனை வணங்கி யாம் இந்த புராணத்தை துவங்குகிறேன் என்பதுதான் இதன் அடிப்படையான கருத்தாகும்.
4 ஆம் அடி: விகட சக்கரன் மெய்பும் போற்றுவான்
இதுபோல் இந்த விநாயகன் முன்னாள் விகடகவி போல ஒரு விதூஷகனைப் போல சக்கரத்தை கையில் கொண்ட மகாவிஷ்ணு கூத்தாடிய நிலையே அப்படி கூத்தாடி பெற்ற அந்த விநாயகரின் பெருமையை என்னவென்று கூறுவது? அப்பேற்ப்பட்ட விநாயகரை வணங்கி இதுபோல் கந்தபுராணத்தை துவங்குகிறேன் என்பதே பொருளாகும்.
ஆனாலும் கூட இதுபோல் புராண நுணுக்கத்தில் எத்தனையோ விஷயங்கள் அடங்கியிருக்கிறது. இதுபோல் கந்தபுராணத்தை எழுத முனைந்த கச்சியப்ப சிவாச்சாரியார் பாலாரை முன்வைத்துக் கூட துவங்கியிருப்பார். பொதுவாக பாலாறு என்பது சதா சர்வ காலமும் காவிரி போல் நீர் பெருக்கி ஓடக்கூடியது அல்ல. வருடத்தில் சில நாட்கள் மட்டும்தான் நீர் இருக்கக் கூடிய ஒரு நதி. இப்படி எத்தனையோ நதிகள் இருக்கின்றன. எப்பொழுதுமே வெள்ளம் பெருகக்கூடிய கங்கையை காவிரியை நர்மதையை பாடாமல் பாலாறை முன்வைத்து பாடியதில் கூட நுணுக்கம் இருக்கிறது. தாய்மாருக்கு குழந்தை பெற்ற பிறகு குழந்தை பேறுக்கு பிறகு குழந்தைக்கு வேண்டிய அமுதம் சுரக்கும். தேவையான பொழுது அமுதம் சுரப்பது போல தேவையான பொழுது மக்களுக்கு நீரை வழங்குவதால்தான் அந்த நதிக்கு பாலாறு என்று நாமமே இருக்கிறது. பால் எப்பொழுதுமே சுரக்காது. தேவையான பொழுது சுரக்கும். ஆனால் இன்றைய நிலை வேறு. கர்ம வசத்தால் பாலாறு பாழாறு என்கிற நிலைக்கு ஆட்பட்டு இருக்கிறது.
அகத்திய மாமுனிவர் பொது வாக்கு
இறைவன் அருளைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இது போல் நலம் எண்ணி நலம் உறைத்து நலம் செய்ய நலமே நிகழும். ஒவ்வொரு மாந்தரின் வாழ்விலும் என்பதை யாம் எமை நாடும் மாந்தர்களுக்கு எப்பொழுதுமே கூறிக் கொண்டிருக்கிறோம். ஆனாலும் கூட பல்வேறு மாந்தர்கள் அறியாமையாலும் புரிதல் இன்மையாலும் என்ன எண்ணுகிறார்கள்? என்றால் எமக்கு தத்துவார்த்தம் வேண்டாம். எமக்கு போதனைகள் வேண்டாம். நாங்கள் வந்து அமர்ந்த உடனேயே இதுபோல் வாழ்வியல் பிரச்சனைகள் இருக்கிறது அது இத்தனை நாட்களுக்குள் தீர்ந்துவிடும் என்று சித்தர்கள் கூற வேண்டும். அதேபோல் பிரச்சினைகள் தீர வேண்டும். அப்படி தீர்ந்தால் ஓலையை நம்புவோம். சித்தர்களை நம்புவோம் என்று. ஆனாலும் கூட விதியானது அத்தனை எளிதாக மாறிவிடாது. ஒருவேளை மனிதர்கள் ஆசைப்படுவது போல நாங்கள் இறையிடம் மன்றாடி சட்டென்று ஒருவரின் கடுமையான விதியை மாற்றினால் ஏற்கனவே பழக்கப்பட்ட துன்பம் சென்று விதி புதியதாக ஒரு துன்பத்தை தரும். அப்போது அந்த மனிதன் எண்ணுவான் இந்த துன்பத்திற்கு அந்த துன்பமே பாதகம் இல்லை என்று. எனவே தான் படிப்படியாக மனிதன் துன்பத்திலிருந்து விடுதலை பெற்று இன்பமும் மகிழ்ச்சியும் சாந்தியும் நிலவக்கூடிய ஒரு வாழ்வை பெற வேண்டும். அதற்கு மனிதர்கள் என்ன செய்ய வேண்டும்? என்பதைத்தான் இந்த ஜீவ அருள் ஓலையில் நாம் அடிக்கடி இயம்பிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் ஞான நிலையில் இருந்து கூற சிஷ்யர்கள் எழுதிய ஓலையின் தன்மை வேறு. யாமே இறைவனருளால் நேரடியாக ஓதுகின்ற இந்த ஓலையின் தன்மை வேறு என்பதை மனிதர்கள் புரிந்து கொண்டு விட்டால் குழப்பங்களும் விரக்தியும் தளர்வும் ஏற்படாது. எனவே மீண்டும் மீண்டும் கூறுகிறோம். மனதை தளரவிடாமல் தினமும் செய்கின்ற வழிபாடு. சோர்ந்து போகாமல் வாழ்கின்ற தன்மை. திடமான மனம் தர்மங்கள் சத்தியம் இவற்றை கடை பிடித்தால் கட்டாயம் நன்மைகள் ஒவ்வொரு மனிதனையும் தொடரும்.
கேள்வி: மனிதன் செய்யும் சிறு தவறுக்கு கூட பெரிய அளவில் தண்டனை கிடைக்கும் எனும் பொழுது ஒருவன் செய்யும் சிறு புண்ணியமும் பன்மடங்காக பெருகுமா?
இறைவன் அருளால் தெரியாமல் பாவம் செய்தாலும் தெரிந்து பாவம் செய்தாலும் விளைவு ஒன்றுதான். சிறு பாவமும் பெரிய விளைவை ஏற்படுத்தும். அதற்காக சிறு புண்ணியம் பெரிய அளவில் நன்மையை தரும் என்று நாங்கள் கூறுவதற்கில்லை. ஒருவேளை அப்படி கூறுவதாக கொண்டால் மனிதன் என்ன செய்வான்? எப்பொழுதுமே சிறிய புண்ணியங்களை தான் செய்ய துவங்குவான். இன்னொன்று புண்ணியம் என்பது செய்கின்ற மனிதனின் மனதை பொறுத்துதான். அளவை பொருத்ததில்லை. ஒரு கோடி தனத்தை ஒருவனிடம் தந்து விட்டு உள்ளத்திலே வேறு வழியில்லாமல் கொடுக்க வேண்டியிருக்கிறது. இவனுக்கு எல்லாம் செய்ய வேண்டிய ஒரு நிர்பந்தம் வந்துவிட்டதே? இவனுக்கெல்லாம் ஏன் செய்ய வேண்டும்? இவன் என் கண்ணில் படாமல் இருந்திருக்கக் கூடாதா? இவன் இல்லாமல் ஒழிந்து போகக்கூடாதா? இந்த தனத்தை எதற்காக தரவேண்டும்? என்று உள்ளத்தில் எண்ணிக்கொண்டு ஒரு கோடி தனம் தந்தாலும் பலனில்லை. ஆனால் உளமாற ஒரு சிறு தனத்தை தந்தாலும் அது மலை போன்ற புண்ணியமாக பெருகும். அடுத்தது செய்கின்ற அந்த நாழிகை. தக்க காலத்தில் தக்க சூழலில் தக்க நேரத்தில் செய்யப்படுகின்ற உதவியை மிகப்பெரிய உதவியாகும். இதைத்தான் வள்ளுவன் காலத்தினால் செய்த உதவி என்று கூறி இருக்கிறான். இதுபோல் உதவி அல்லது புண்ணியம் என்பது செய்கின்ற அளவைவிட செய்கின்ற உள்ளத்தை பொறுத்தது. பெறக்கூடிய மனிதனின் தேவையையும் மனதையும் வாழ்வியல் சூழலையும் பொறுத்ததாகும்.
கேள்வி: விரைய ஸ்தானம் வலுவாக இருக்கும் ஜாதகர் இறைவனிடம் தன்னுடைய பூர்வ ஜென்ம பாவங்களை விரயம் செய்துவிடு என்று பிரார்த்தனை வைக்கலாமா?
இறைவனை நோக்கி இதுவரை சேர்த்த பாவங்களை எல்லாம் தீர்ப்பதற்கு ஒரு வரத்தை கொடு என்று கேட்டால் கட்டாயம் தருவார். ஆனால் அந்த வரத்தை தாங்குகின்ற மனோபலத்தை மனிதன் தான் வளர்த்துக் கொள்ள வேண்டும். பாவம் சும்மா எளிமையாக ஒரு மனிதனை விட்டுச் சென்று விடாது. பல துன்ப அனுபவங்களை தந்துதான் பாவம் அவனை விட்டுச் செல்லும். என்னை விட்டு பாவம் போக வேண்டும் என்று ஒருவன் இறைவன் நோக்கி வேண்டினால் நிறைய துன்பங்களை எதிர்கொள்ள அவன் ஆயத்தமாக இருக்க வேண்டும். அப்படி நீ ஆயத்தமாக இருந்தால் தாராளமாக உன் பிரார்த்தனையை இறைவனை நோக்கி வைக்கலாம்.
கேள்வி: சத்தி முற்றத்தில் அமைந்திருக்கும் த்வார விநாயகர் முருகன் பைரவர் மற்றும் சிவலிங்கம் ஆகியவற்றின் சிறப்புகள் பற்றி:
இறைவன் அருளால் முன்னார் கூறியது போல் திருமண தோஷ நிவர்த்தி ஸ்தலம் மட்டுமல்லாமல் ராகு திசை நடப்பவர்கள் ஜாதகத்தில் ராகு கெடு பலனை தருவதாக நம்ப கூடியவர்கள் திருமணமாகி பிரிந்திருப்பவர்கள் சென்று வணங்க வேண்டிய தலங்களுள் இன்னவன் கூறிய தெய்வ சன்னதியையும் ஒன்று அங்கே அன்றாடம் முடிந்த நெய் தீபம் ஏற்றி நறுமணமிக்க மலர் மாலைகளை சாற்றி வழிபாடு செய்து வந்தால் வழக்கு மன்றம் வரை சென்றவர்கள் எல்லாம் மீண்டும் சேரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் பட்டீஸ்வரம் சென்று துர்கையை வணங்கக்கூடிய மனிதர்களுக்கு வினைப் பயன் காரணமாக இந்த தலம் இருப்பது தெரியாமல் போய்விடுகிறது. எனவே பட்டீஸ்வரம் சென்று வணங்க கூடியவர்கள் திருச்சத்தி முற்றமும் சென்று வணங்குவது சிறப்பு அப்பா.
இத்தத்தலத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.