இப்பொழுது அடுத்ததாக எதிர்காலத்தைக் கூறு என்று பலரும் ஆசைப்பட்டு நாங்களும் ஆவேசம் கொண்டது போல இப்படிதான் கேட்கிறானே? கூறி விட்டுப் போவோம் என்று கூறினால் அடுத்ததாக மனக்கிலேசமும் சோகமும்தான் கொள்கிறார்கள். எனவே ஒரு மனிதன் வருகிறான். என் பெண்ணிற்குத் திருமணம் நடக்கவில்லை என்று கேட்கிறான். நாங்கள் பார்க்கிறோம் திருமணம் நடந்தாலும் சிறப்பான வாழ்க்கை இல்லை எனும்போது என்ன கூறுவோம்? சில மாதங்கள் கழித்து வா என்றோ சில பரிகாரங்களை செய்து விட்டு வா என்றோ கூறுவோம். ஏன்? அப்படியாவது அந்தப் பாவங்கள் குறையட்டுமே? என்றுதான். ஆனால் அவன் என்ன எண்ணுகிறான் அறியாமையால்? எங்கெங்கோ சென்று ஜாதகத்தை ஆய்ந்தோம். திருமண காலம் வந்துவிட்டது. திருமணத்தை முடிக்கலாம் என்று கூறுகிறார்கள். அகவையும் அதிகமாகி விட்டது. இங்கு என்னடா என்றால் சில மாதங்கள் ஏன்? சில வருடங்கள் ஆகட்டும் என்று கூறுகிறார்கள். இவற்றையெல்லாம் ஏற்றுக் கொள்ள இயலாது என்று சென்று விடுகிறான். பிறகு திருமணம் செய்கிறான். திருமணம் வழக்கம்போல் தோல்வியில் முடிகிறது. மீண்டும் வந்து எம்முன்னே அமர்கிறான். இவற்றையெல்லாம் வெளிப்படையாகக் கூறினால் என்ன நடக்கும்? வெறும் எதிர் மறையான எண்ணங்களையும் கருத்துக்களையும் நாங்கள் கூறுவதால் என்ன பலன்? அப்படிக் கூறி கூறி அந்த விதியை ஏன்? எமது வாக்கால் உறுதிப்படுத்த வேண்டும்? என்றுதான் பரிகாரங்களைக் கூறிக் கொண்டு இருக்கிறோம். எனவே இங்கு வருகின்ற 100 க்கு 99 விழுக்காடு மனிதர்களுக்கு அத்தனை சாதகமான விதி அம்சம் இல்லை என்பதைப் புரிந்து கொண்டு இறைவன் அருளால் நாங்கள் கூறுகின்ற பரிகாரங்களை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டு சென்றால் எதிர்காலம் அனைவருக்குமே சுபீக்ஷமாக இருக்கும். எனவே வாக்கு இல்லை எனும் பொழுதே இந்த இதழ் ஓதும் மூடனுக்கு ஏற்கனவே சில கட்டளைகளை இட்டு இருக்கிறோம். எடுத்த எடுப்பிலேயே வாக்கை உரைக்கலாம் என்றால் போதும். உடனடியாக அலைபேசியில் பேசுகின்ற அனைவரையும் அழைத்து வரலாம் வரலாம் என்று அனைவரையுமே வரவேற்று விடுவான். அப்படி வருகின்ற மனிதர்கள் பலருக்கு ஆர்வம் இருக்கும் அளவிற்கு பக்குவம் இராது. பக்குவமின்மையால் வந்து விதவிதமான மனக்கிலேசமான வார்த்தைகளைக் கூறும்பொழுது தேவையில்லாத மன அழுத்தம் இங்கு அனைவருக்கும் ஏற்படும். எனவேதான் கூறி இருக்கிறோம் வருகின்ற மனிதனின் விதியை அனுசரித்து இறைவனின் கட்டளையையும் அனுசரித்துதான் நாங்கள் வாக்கைக் கூறுவோம் என்று. இது போன்ற இந்த ஓலையில் கூறப்படுகின்ற விஷயங்கள் ஏற்புடையதாக இல்லை. நம்பக்கூடியதாக இல்லை என்பது கூட ஒரு மனிதனின் முழு சுதந்திரம். அவற்றில் குறுக்கிட இங்கு உள்ளவர்களுக்கோ இந்த சுவடியை நம்புபவர்களுக்கோ ஏன்? இந்த இதழை ஒதுபவனுக்கோ கூட உரிமையில்லை.
நம்புவது எப்படி ஒருவனின் உரிமையோ நம்பாததும் அவனின் உரிமை. இரண்டிலும் நாம் சந்தோஷமும் கொள்ளத் தேவையில்லை. துக்கமும் கொள்ளத் தேவையில்லை. இது போல் நிலையிலே மீண்டும் மீண்டும் கூறுவது என்னவென்றால் அறம் சத்யம் பரிபூரண சரணாகதி தத்துவம் இவற்றைக் கடைபிடித்தால் கடுமையான விதி மெல்ல மெல்ல மாறத் துவங்கும். எடுத்த எடுப்பிலேயே மாற்றத்தை எதிர்பார்த்தால் மாற்றம் வராது. ஏமாற்றம்தான் வரும் என்பதை புரிந்து கொண்டு ஒவ்வொரு மனிதனும் இறை வழியில் அற வழியில் சத்திய வழியில் நடக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் என்று கூறி நல்லாசி கூறுகிறோம் ஆசிகள்.
ஐயனே தச மகா வித்யா யாகம் என்ன காரணத்திற்காக செய்யப்படுகிறது?
இறைவனின் கருணையை கொண்டு ஒரு மனிதன் பல ஜென்மங்கள் பல பிறவிகளில் பிறந்து பிறந்து பாவ புண்ணியங்களை செய்தே வாழ்கிறான். இதில் பெரும்பாலும் அதிக விழுக்காடு பாவங்களை பெறுகிறான் செய்கிறான். அதன் மூலம் சாபங்களை பெறுகிறான். புண்ணியங்களை சிறிய அளவில் தான் செய்கிறான். இந்தப்பாவங்களின் விளைவுகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். பிறவிகள் தோறும் பாவங்களின் விளைவுகளும் புண்ணியங்களின் விளைவுகளும் வரும். ஆனால் மனிதனுக்கு புண்ணியங்களின் விளைவாக கிடைக்கக் கூடிய நன்மைகள் அத்தனை எளிதாக மனதிலே திருப்தியை தராது. உதாரணமாக பிறக்கும் போதே உடல் உறுப்புகள் எந்த பழுதும் இன்றி பிறந்தால் அந்த குழந்தை அதை ஆச்சரியமாக பார்க்காது. அதே குழந்தை வளர்ந்த பிறகு இளைஞனான பிறகு சில மாதங்கள் உடலில் உள்ள ஏதோ ஒரு கையோ காலோ இயங்காமல் இருந்து பிறகு இயங்கினால் அவன் சந்தோசப்படுவான். இதைப் போல இயல்பாகவே ஒரு மனிதனுக்கு தாய் தந்தையர் இருக்கிறார்கள். ஓரளவு மூன்று வேளை அன்னம் கிடைக்கிறது. மானத்தை காக்க ஆடை கிடைக்கிறது. கல்வி வசதி கிடைக்கிறது. மழைக்கும் வெயிலுக்கும் ஒரு இல்லம் இருக்கிறது என்றால் இவைகள் எல்லாம் பெரிதாக தெரியாது. இவைகளே இல்லாத மனிதர்களை பார்க்கும் போது அடடா கடவுள் இறைவன் நம்மை நன்றாக வைத்திருக்கிறார் என கடவுளுக்கும் இறைவனுக்கும் நன்றி கூற வேண்டும். ஆனால் அப்படி மனிதர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை?
ஒரு மனிதனுக்கு எது கொடுக்கப்பட்டிருக்கிறதோ அது அவனுக்கு நிறைவை திருப்தியை சந்தோசத்தை தருவதில்லை. எது கொடுக்கப் படவில்லையோ அல்லது எது அவன் எதிர்கால லட்சியமாக அவன் கொண்டிருக்கிறானோ அது அடையும் வரை அவன் மனம் நிம்மதி அடையாமல் சஞ்சலத்தோடு வாழ்கிறது. அல்லது இயல்பாகவே இருக்கக் கூடிய ஒன்று அவனுக்கு இல்லாமல் போய் விடுமோ என்கிற அச்சம் வரும் பொழுதும் அவன் நிம்மதியை இழக்கிறான். ஒன்றே ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் இறைவன் அருளை தக்க வைத்துக் கொள்வது ஒன்று தான் நிரந்தர செல்வம் நிரந்தர பதவி அது ஒன்று தான் நிரந்தரம் ஏனைய உறவுகளோ நட்புகளோ பதவிகளோ வேறு எந்த விஷயமும் சிறப்பல்ல. இந்த ஞானம் கைவர வேண்டுமென்றால் இது புரிந்துக் கொள்வது மட்டுமல்ல புரிந்து கொண்டு அறிந்துகொண்டு தெரிந்து கொண்டு தன் மனைதிலே அது குறித்து சிந்தித்து சிந்தித்து பற்றற்ற நிலை ஆசையற்ற நிலை சினமற்ற நிலை எந்த தீய குணங்களும் இல்லாத நிலையிலே மனதை அமைதியாக வைத்து எத்தனை கொடுமையான சம்பவங்கள் வாழ்க்கையில் நடந்தாலும் இறைவா சிறு வயது முதல் உன்னை வணங்கி வருகிறேனே நான் கடினப்பட்டு ஈட்டிய தனத்தை எல்லாம் ஏழை எளியோர்களுக்கு வாரி வாரி வழங்கினேனே. எனக்கு இப்படி ஒரு துன்பத்தை தரலாமா? என்னை கைவிட்டாயே என்று ஒருவன் ஏக்கத்துடன் கூறினாலும் கூட அவன் செய்த புண்ணியத்தின் பலன் குறைந்து விடுகிறது.
இறைவா ஏதோ சில நற்காரியங்களை செய்ய என்னை கருவியாக தேர்ந்தெடுத்திருக்கிறாய் தொடர்ந்து செய்வதற்கு வாய்ப்பை கொடு. ஆனால் அந்த நல்ல காரியம் செய்கிறேன் என்பதற்காக எனக்கு ஒரு துன்பம் கூட வரக்கூடாது என்று நான் எதிர்பார்க்கவில்லை. அது வேறு நிலை. நீ துன்பம் தருகிறாய் என்றாலே என்னை சுத்தி படுத்துகிறாய் என்பது பொருள். தீயவனுக்கு வருகின்ற துன்பம் அவன் திருந்த வேண்டுமென்றும் மனித மொழியிலே கூறுவதென்றால் தண்டனை என்று வைத்துக் கொள்ளலாம் நல்லவனுக்கு வருகின்ற துன்பம் ஒரு ஆடையிலே போகாத கரையை அழுக்கை கடினப்பட்டு ஒரு மனிதன் நீக்குவது போல அந்த நல்லவர்களிடம் இருக்கக் கூடிய கொஞ்ச நஞ்ச பாவங்களையும் சாபங்களையும் நீக்கிக் கொள்ள இறைவன் தருவது. எனவே அந்த வகையில் சிந்தித்து நான் உன்னுடைய அருளானையால் சில நல்ல காரியங்களை செய்வதற்கு எனக்கு வாய்ப்புகள் எப்பொழுதும் தந்து கொண்டே இருக்கிறாய். தொடர்ந்து தந்து கொண்டே இரு. ஆனால் அதற்காக துன்பங்களே வரக்கூடாது என்று நான் வேண்டவில்லை. துன்பங்கள் வரட்டும். ஆனால் நான் மனம் தளர்ந்து மனம் சோர்ந்து உன்னை விட்டு விலகி விடக்கூடாது. நற்காரியங்களை நிறுத்தி விடக்கூடாது. அந்த திடமானதை கொடு என வேண்டி கொள்ள வேண்டும். அந்த பக்குவம் அத்தனை எளிதாக வந்து விடாது. இது பல பிறவிகளின் பாவங்களும் சாபங்களும் குறைந்தால் தான் வரும். இவற்றை தர்மத்தின் மூலம் குறைக்கலாம். ஏமாற்றங்களின் மூலம் சில பாவங்கள் குறையும். நம்பிக்கை துரோகத்தால் சில பாவங்கள் குறையும். உடல் நோயால் பல பாவங்கள் குறையும். வழக்கு போன்ற விஷயங்களால் பல பாவங்களும் சாபங்களும் குறையும். உடலிலே எல்லாம் சரியாக இருந்தும் என்ன நோய் என்று பிடிபடாமல் மனம் வேதனை அடைந்து அடைந்து அதனால் பாவங்கள் குறையும். எந்தத் தவறும் செய்யாமல் பலர் முன்னால் அவமானப்படுவதும் ஏளனப் படுவதுமாக இருந்து அதன் மூலம் பாவங்கள் குறையும். இப்படி பல்வேறு இந்த உலகில் நடக்கின்ற செயலால் பாவங்கள் குறையும்.
அதைப் போல நற்காரியங்கள் செய்வதன் மூலம் பாவங்களும் குறையும் புதிதாக புண்ணியங்களும் சேரும். அந்த நற்காரியங்களில் தனம் இருப்பவர்கள் பொருள் இருப்பவர்கள் நியாயமான உதவிகளை அள்ளி அள்ளி தருவது கணக்கு பார்க்காமல் தருவது. இவ்வளவு செய்திருக்கிறோம் என்ற உணர்வு இல்லாமல் தொடர்ந்து செய்வது. என்னைப் போல் யார் தர்மம் செய்வார் என்று பலர் முன்னால் தம்பட்டம் அடித்துக் கொள்ளாமல் அமைதியாக செய்வது. இவைகள் எல்லாம் புண்ணியங்களை சேர்க்கின்ற வழிகளாகும். அதைப் போல் பூஜைகள் அபிஷேகங்கள் யாகங்கள் அனைத்துமே பாவங்களை குறைப்பதோடு புண்ணியங்களையும் சேர்க்கும். இந்த வகையிலே பலர் முன்னால் படுகின்ற அவமானங்கள் தொழிலில் ஏற்படும் நஷ்டங்கள் இவைகளேல்லாம் பாவங்களை குறைக்கின்ற வழியாக இருக்கும். பாவங்களை குறைக்கின்ற வழி என்பது வாழ்க்கையில் இயல்பாக நடக்கின்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நோய் மூலம் படுகின்ற வேதனை தன விரயம் இது பாவங்களின் காரணமாக வரக் கூடியது. அதை போல் உடனிருந்து நம்பிக்கை துரோகம் செய்கின்ற மனிதர்களால் வருகின்ற துன்பம் பாவங்களை குறைக்கவும் சாபங்களை குறைக்கவும் வருகிறது. இது போன்ற உலகியல் சம்பவங்கள் அனைத்துமே பாவங்களை சாபங்களை குறைக்கும். எப்போது குறைக்கும் அதுபோன்ற சம்பவம் நடக்கும் பொழுது பாதிக்கப்பட்ட மனிதன் சினம் கொண்டு எழுந்து பழிக்குப் பழி வாங்காமல் அவனை ஏதும் சொல்லாமல் இறைவா என்றோ செய்த பாவம் நான் பெற்ற சாபம் இவன் மூலம் நேராகிறது போலும். சரி நான் பொறுமையாக இருக்க அருள்புரி என்று வேண்டிக் கொண்டு அவனும் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டுகின்ற பக்குவம் வரும் பொழுது கட்டாயம் பாவங்கள் குறையும். இல்லையென்றால் நான் மிகச் சரியாக நடந்து கொண்டும் நீ ஏனப்பா தவறாக நடந்து கொள்கிறாய் என்று சரிக்குச்சரி அவனோடு சண்டையிட்டால் பாவங்கள் குறைவதற்கு பதிலாக பாவங்கள் சேர்ந்து விடும். இது போன்ற பல்வேறு பாவங்கள் குறைய வேண்டும். அதே நேரம் மனம் உறுதியடைந்து புண்ணியங்களை தொடர்ந்து செய்ய வேண்டும் என்கிற எண்ணம் வலுப்பெறுவதற்கு எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன.
அதில் ஒன்றுதான் இந்த யாகங்கள். பெரும் பொருட் செலவில் அக்னி வார்த்து நிறைய பொருட்களை அதில் இட்டால்தான் இறைவன் அருள் புரிவாரா என்றால் கட்டாயமில்லை. அத்தனை பொருட் செலவு செய்தும் அக்னி வார்த்து பொருட்களை இட்டும் மனம் தூய்மை இல்லாமல் அதில் ஒருவன் ஆணவத்தோடு கலந்து கொண்டால் அவனுக்கு எந்த பலனும் வராது. அதைப் போல செய்து வைக்கக் கூடிய மனிதனும் பெருந்தன்மையோடும் சாத்வீக குணத்தோடும் தகாத வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்தாமல் சாத்வீக வார்த்தைகளையும் அன்பு பொழியும் வார்த்தைகளையும் பயன்படுத்தி அமைதியாக எந்த விதமான சினமும் கொள்ளாமல் அவனும் எரிச்சலடையாமல் அடுத்தவர்களுக்கு எரிச்சலை ஊட்டாமல் நடந்து கொள்ளும் போது அவனுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கிறது. ஒன்று பூஜை செய்து அதன் மூலம் ஒரு புண்ணியம் அவனுக்கு கிடைக்கிறது. இவன் யாருக்கு பூஜை செய்து வைக்கிறானோ அவனுக்கு பாவம் குறைவதால் ஒருவனுக்கு பாவம் குறைவதற்கு உண்டான வழியை காட்டியதற்கு உண்டான புண்ணியம் அவனுக்கு வருகிறது. மூன்றாவது உலகியல் ரீதியாக சிறு ஊதியமும் கிடைக்கிறது. எனவேதான் இது அனைத்தும் இறைவன் கருவியாக வைத்து நம்மையெல்லாம் இயக்குகிறார் என்ற எண்ணத்தோடு தன்முனைப்பு இல்லாமல் செய்யும்போது பல ஜென்மத்து சாபங்களும் பாவங்களும் குறையும். இந்த சாபங்கள் தான் உதாரணமாக ஒரு மனிதன் ஏதோ ஒரு பிறவியில் யாருக்கோ கொடுமையான தீங்கு செய்து அந்த தீங்கால் அவன் பாதிக்கப்படுகிறான் என்று வைத்துக் கொள்வோம். பாதிக்கப்படும் பொழுது அவனால் அப்பொழுது எதிர்த்து ஏதும் செய்ய முடியாத ஒரு வலிமையற்ற நிலையில் இருக்கிறான். ஆனால் மனதிற்குள் பொங்குகிறான். வேதனைப்படுகிறான். இந்த வலிய மனிதனின் பதவி செல்வம் அதிகாரம் இவற்றுக்கு முன்னால் அடிபணிந்து இவன் செய்வதையெல்லாம் கேட்டுக் கொண்டு இருக்க வேண்டியிருக்கிறதே இறைவா. நீ அவனை கேட்க மாட்டாயா? நான் என்ன பாவம் செய்தேன்? என்று மனதிற்குள் மருகி மருகி மருகி மருகி மிகவும் வேதனைப்பட்டு அந்த ஜென்மம் முழுவதும் அப்படியே வாழ்ந்து இறந்து விடுகிறான் அல்லவா. ஏதோ ஒரு பாவம்தான் அவ்வாறு அவனுக்கு ஒரு நிகழ்ச்சி நடத்த காரணமாக இருந்தாலும் அதை செய்த மனிதனுக்கு இவன் வேதனைப்பட வேதனைப்பட அது சாபமாக மாறி விடுகிறது. புனித ஆத்மாக்கள் புண்ணிய ஆத்மாக்கள் தவசீலர்கள் சபித்தால் உடனே பலிதமாகும். இதுப் போன்ற சராசரி ஆத்மாக்கள் மனதிற்குள் வேதனைப்பட வேதனைப்பட அது ஒரு ஜென்மமோ இரண்டு ஜென்மமோ தாண்டி பலவிதமான துன்பங்களாக வரும். இந்த சாபங்களை எல்லாம் பலவிதமான தர்மங்களின் மூலமும் தியாக வாழ்க்கையின் மூலமாகவும் பொறுமையின் மூலமாகவும் சகிப்புத் தன்மையின் மூலமாகவும் எரித்து விடலாம். அதில் ஒன்றுதான் இந்த யாகங்கள்.
இந்த யாகங்கள் மூலம் சாபங்களை குறைத்து விடலாம் எரித்து விடலாம். அது மட்டுமல்ல இப்படி அவன் ஏங்கி ஏங்கி அந்தப் பிறவியை விட்டு விடுகிறான் அல்லவா. மீண்டும் ஏதாவது ஒரு பிறவியிலேயே இவனை பழிவாங்க வேண்டும் என்று அவன் பிறக்கிறான். அல்லது அவனால் பிறவி எடுக்க முடியாத நிலையில் அவனுடைய வம்சா வழியினருக்கு ஏதாவது வகையிலே உள்ளுணர்வாக அதனை அந்த சிந்தனையை தூண்டி விட்டு அவனை இந்து ஜென்மாவில் அந்த ஜென்மத்தில் அவனுக்கு பாதிப்பு ஏற்படுத்தியவனை பார்த்து ஏதாவது இவனுக்கு தீங்கு செய் என்பது போல் அவன் செய்ய அதனால் தான் முன்பின் தெரியாத சிலர் நம்மை எதிரியாகவே கருதுகிறார்கள். இதுப் போன்ற ஒரு வார்த்தை படுத்த முடியாத வேதனைகளை பாவ வினைகளை குறைப்பதற்கு யாகங்களின் பங்கு அதிகமாக இருக்கிறது. குறிப்பாக சராசரி மனிதர்களின் பொறாமை பார்வை அது குறையவும் இந்த யாகங்கள் பெரும் பங்களிப்பை நல்குவதாகும். அதைதாண்டி முன்பே கூறியது போல ஒரு பொருளாதார சுழற்சிக்காகவும் யாங்கள் கூறுகின்றோம்.
கேள்வி: முதல் தவறு முதல் கர்மா எப்படி ஆரம்பமாகிறது?
ஒரு மனிதன் பூமியில் சகல சௌபாக்யங்களோடு பிறவியெடுக்க காரணம் அவன் அதற்கு முன்பு மனிதனாக இல்லாமல் சற்று மனிதனைவிட மேம்பட்ட யட்ச கந்தர்வ கூட்டத்தில் இருந்து அல்லது கடும் தவம் செய்த அசுரனாகவோ இருந்து ஏதோ ஒரு சிறு பிழை செய்து பிடி சாபம் நிலவுலகத்திற்கு செல் மனிதனாக என்று சாபம் வாங்கியிருப்பான். நன்றாக கவனிக்க வேண்டும். அதாவது மனிதனை விட பல நிலைகள் மேம்பட்ட தேவ வர்க்கமோ தேவதை வர்க்கமோ செய்கின்ற ஒரு சிறு குற்றம். மனித கண்ணோட்டத்தில் பார்த்தால் அது குற்றமே அல்ல. சுந்தரரின் கதை தெரியுமா? அது குற்றமா? அதுபோன்ற குற்றங்களுக்கு தண்டனை கொடுப்பதாக இருந்தால் ஒவ்வொரு மனிதனுக்கும் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
அம்பிகையின் தோழிகளை பார்த்து அழகு மிக்க யுவதிகளாக இருக்கிறார்களே? என்று ஒரு கணம்தான் சிந்தித்தார். சிவன் அழைத்தார். இது காமனை எரித்த இடம். எனவே இங்கு இந்த எண்ணம் எல்லாம் வரக்கூடாது வந்து விட்டது. செல் பூலோகம் என்றார். சுந்தரர் அஞ்சி நடுங்கி விட்டார். தெரியாமல் செய்து விட்டேன் என்னை தண்டிக்காதீர்கள் என்று. ஆனாலும் சிவபெருமான் விடவில்லை. சாபத்தை கொடுத்தார். மனிதர்கள் அறிந்தும் அறியாமலும் குழப்பத்தில் இருப்பதால் அவர்கள் செய்யும் தவறுகளை எல்லாம் இறைவன் எளிதில் மன்னித்து விடுகிறார். ஆனால் மனிதர்களைத் தாண்டி ஒரு உயர்வான நிலைக்கு சென்ற பிறகு சிறிய தவறு கூட வரக்கூடாது. வந்தால் அவர்கள் எந்தவிதமான சாபத்திற்கும் ஆளாகலாம். அப்படி ஒருவனுக்கு மனிதப் பிறவி சாபமாக கிடைக்கிறது என்று வைத்துக் கொள். அவன் பல்லாண்டு காலம் தேவனாக உச்சத்தில் வாழ்ந்திருப்பான். அவனை பொறுத்தவரை அவன் செய்தது தவறாக இருந்தாலும் கூட அவன் ஒரு புண்ணிய ஆத்மாதானே? அதனால் மிக உயர்ந்த செல்வ செழிப்பிலே புகழின் உச்சியிலே தேக ஆரோக்கியத்திலே தோற்றப் பொலிவிலே சகலத்திலும் நன்றாக இறைவன் தந்துதான் பிறவி கொடுப்பார். ஆனால் (இவையெல்லாம்) கொடுத்த பிறகு அவன் என்ன செய்வான்? ஊழ்வினையாலும் மாயையாலும் பழைய விஷயங்கள் எல்லாம் மறந்து போய் சராசரியாக தனக்கு கிடைத்த பட்டம் பதவி அந்தஸ்து தோற்றம் தனம் இவற்றை வைத்து பாவங்களை செய்யத் துவங்குகிறான். பிறகு மீண்டும் மீண்டும் இந்த சுழலிலே மாட்டிக் கொண்டு தவிக்கிறான். எனவே எந்த நிலையிலும் ஒரு மனிதன் விழிப்புணர்வோடு இருந்து பாவங்களை செய்யாமல் இருந்தால் மீண்டும் மீண்டும் இந்த சுழற்சியில் மாட்டிக் கொண்டு அவதிப்பட நேரிடாது.
கேள்வி: ஆன்மா இருதய குகையில் இருப்பதாக பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது அது குறித்து:
காற்று எப்படி ஒரு இடத்தில்தான் இருக்கிறது என்று கூற முடியாதோ பரந்த வான்வெளி இந்த இடத்தில்தான் இருக்கிறது. இந்த இடத்தில் இல்லை என்று எப்படிக் கூற முடியாதோ அப்படித்தான் ஆன்மா என்பதும் இறைவனைப் போல தேகமெங்கும் நீக்கமற பரவியிருக்கிறது. சில குறிப்பிட்ட இடங்களில் இருப்பதாகக் கூறப்படுகிறது புரிய வைப்பதற்கான ஒரு குறியீடான முயற்சி. அங்கும் இருக்கிறது. எங்கும் இருக்கிறது என்பதே உண்மையாகும்.
இறைவன் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இதுபோல் கால காலம் எமை நாடும் மாந்தர்களுக்கு யாம் வாழ்வியல் நிலை குறித்துக் கூறுங்கால் வினைப் பயன் தொடர்பான விழிப்புணர்வு பெற வேண்டும் என்றே கூறிக் கொண்டிருக்கிறோம். ஒரு செயல் அந்த செயலை செய்யும் போது கிடைக்கக் கூடிய ஆதாயம் செய்து முடித்த பிறகு கிடைக்கக் கூடிய ஆதாயம் சில காலம் கழித்து கிடைக்கக் கூடிய ஆதாயம் இந்த செயலை செய்வதால் கிடைக்கின்ற ஆதாயம் எத்தனை விழுக்காடு? ஆதாயத்திற்கு எதிரான பாதகம் எத்தனை விழுக்காடு? செயலை செய்பவனுக்கு ஆதாயம். மற்றவர்களுக்கு பாதகம். இது போன்ற நிலைகளை சீர் தூக்கிப் பார்த்து பலருக்கும் பாதகத்தைத் தரும் ஆனால் செய்கின்ற ஒருவனுக்கு மட்டும்தான் ஆதாயத்தை தரும் என்றால் அந்த செயலை செய்யாமல் மனக் கட்டுப்பாட்டோடு இருப்பதே அவசியம். இன்னொன்று என் வரையில் எல்லாம் நன்மையோ தீமையோ நான் தான் நுகரப் போகிறேன். பிறரை இது எங்ஙனம் பாதிக்கக் கூடும்? என்று எண்ணி சிலர் சில செய்கைகளை செய்கிறார்கள் உண்மைதான்.
ஒருவன் மதி மயக்கும் பானம் பருகுவதோ வேறு அசுர பண்டங்களை ஏற்பதோ அவன் உள்ளத்தை உடலை அவன் நிலையை அவன் வாழ்வை பாதிக்கலாம். ஆனால் அவனையும் அறியாமல் பல பலகீனமான மனிதர்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கிறான். அதாவது ஏதாவது ஒரு பூர்வ புண்ணியத்தால் ஒரு மனிதன் ஏதாவது ஒரு உயர்ந்த பதவியில் பொருளாதார நிலையில் உயர்ந்து விடுகிறான். ஆனால் தகாத பழக்கங்கள் அனைத்தும் அவனிடம் இருக்கிறது. அதை பார்க்கின்ற மிக மிக மிக மிக சாதாரணமான எளிமையான மனிதன் என்ன எண்ணுகிறான்? அவனின் பூர்வ புண்ணியம் அவனுக்குத் தெரிவதில்லை. அது தொடர்பான உழைப்பு தெரிவதில்லை. ஆனால் வெற்றி பெற்று இருக்கிறான். புகழ் இருக்கிறது. தனம் இருக்கிறது. பலரும் அவனை நாடுகிறார்கள். ஆனால் அவனிடம் மதி மயக்கும் பானம் போன்ற தீய பழக்க வழக்கங்கள் இருக்கிறது. எனவே இத்தனை விவரம் அறிந்தவன் உலகியல் ரீதியாக உயர் பதவியில் இருப்பவன் பெரும் புகழும் கொண்டவன் பொருளாதார நிலையில் மிக மிக உயர்ந்தவன் அவனே தவறு செய்யும் பொழுது நான் செய்தால் என்ன? என்ற ஒரு தவறான ஒப்பீடு சராசரி மனிதனுக்கு வந்து விட பிறரோடு தவறான நிலையில் ஒப்பிட்டு ஒப்பிட்டு மனிதன் தன்னுடைய வாழ்நாளை வீண் நாள் ஆக்குகிறான். எனவே நாங்கள் அடிக்கடி கூறுவது என்னவென்றால் இறைவனே தவறு செய்யத் தாண்டினாலும் விதியே தவறான வழிக்கு அழைத்துச் சென்றாலும் போராடி போராடி ஒரு மனிதன் இறை வழியில் வந்து தன்னுடைய மனதை வலுவாக்கி உள்ளத்தை உறுதியாக்கி எண்ணங்களை சீராக்கி மனப்பாங்கினை வைரம் போல் உறுதியாக்கி தவறான பழக்கங்களுக்கு எதிராகவே தன்னை மாற்றிக் கொள்ள முயல வேண்டும்.
இந்த பரந்த பாரத மண்ணிலே ஏராளமான ஞானிகள் தோன்றியும் இன்னமும் தோன்றவும் இருக்கிறார்கள். என்றாலும் எம்போன்ற ஞானிகளுக்கு என்ன வருத்தம் தெரியுமா? இதுபோல ஞான கருத்துக்களை கேட்க அதிகம் வாய்ப்புகளைப் பெறாத அல்லது பெற முடியாத மேலை தேச மனிதர்கள் கூட அடிப்படை தர்மத்தை மறக்காமல் ஓரளவு வாழுகிறார்கள். தான் வாழும் நாட்டையும் வீட்டையும் நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் சகல தர்மங்களும் நியாயங்களும் போதிக்கப்பட்ட இந்த தேசத்தில்தான் சுத்தம் என்றால் என்ன? என்றே தெரியாத நிலைக்கு மனிதன் ஆட்பட்டு விட்டான். எதை எங்கே செய்யக் கூடாதோ அதை அங்கே செய்வதும் எதை எங்கே செய்ய வேண்டுமோ அதை செய்யாமல் இருக்கும் ஒரு சராசரி நிலையில் கல்வி கற்றவன் கல்வி கல்லாதவன் என்று அனைத்து தரப்பினரும் இருக்கிறார்கள். நதியை பாழ்படுத்துதல் விருட்சங்களை வெட்டி சாய்த்தல் தான் வாழ வேண்டும் என்றால் இந்த பூமி எந்த சூழலுக்கு ஆட்பட்டாலும் பாதகமில்லை. இன்றைய தினம் நானும் என் சமுதாயமும் வாழ்ந்தால் போதும் என்று விருட்சங்கள் மீது கருணையே இல்லாமல் அடியோடு வேரோடு வெட்டி சாய்த்தல் நீரை மாசுபடுத்துதல் என்று பஞ்ச பூதங்களையும் எந்த அளவுக்கு பாழ்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு பாழ்படுத்திக் கொண்டு இருக்கிறான் இங்குள்ள மனிதன்.
இந்த அளவு இல்லாவிட்டாலும் ஓரளவு புரிதலோடு ஒன்று தவறு என்று தெரிந்து விட்டால் அதை உற்பத்தி செய்யாமல் நாட்டிற்கும் தன் சமுதாயத்திற்கும் பின்னால் வரும் சந்ததிக்கும் நன்மையே செய்ய வேண்டும் என்ற சிந்தனை இங்குள்ள மனிதர்களை விட கடல் தாண்டிய தேசத்தில் வாழும் மனிதர்களிடம் இருக்கிறது. எல்லா விதத்திலும் தன்னை பிறரோடு ஒப்பிட்டுப் பார்க்கும் மனிதன் அவனை பார்த்து அடிப்படை தர்மத்தை ஒழுங்கை கற்றுக் கொண்டால் இந்த தேசமும் நன்றாக இருக்கும். இதையெல்லாம் ஒரு சித்தன் சொல்லி செய்ய வேண்டிய அவசியமேயில்லை. இவையெல்லாம் மிக மிக அடிப்படை விஷயமாகும். எனவே இந்தக் கருத்தையும் இங்குள்ள அனைவரும் மனதிலே வைத்து தம்மை நாடும் நட்புக்கும் உறவுக்கும் இது போன்ற கருத்துக்களை எடுத்துக் கூறினால் சஹஸ்ரம் எனப்படும் ஆயிரம் மனிதரிடம் உயர்ந்த கருத்துக்களை எடுத்துக் கூறினால் அதில் கட்டாயம் ஒரு மனிதன் பின்பற்றுவான் என்ற அளவிலே அனைத்தும் நலம் நலம் என்று நலமாய் மாறும் அப்பா.
நன்றாக உதவி செய்யக் கூடிய எண்ணம் ஒருவனுக்கு வலுத்து விட்டது. இனி யார் கேட்டாலும் என்ன கேட்டாலும் தருகின்ற மன நிலைக்கு வந்து விட்டான். அவனை பொருத்தவரை தயக்கமின்றி தன் ஆஸ்தி முழுவதையும் அள்ளித் தர சித்தமாகி விட்டான் என்ற நிலையிலே அடுத்த நிலையில் நாங்கள் என்ன கூறுவோம்? அள்ளிக் கொடுத்துக் கொண்டே போ. இவன் நல்லவனா? கெட்டவனா? என்று ஆய்ந்து பார்க்காதே. ஒரு அமைப்பு நல்ல அமைப்பா? தீமையான அமைப்பா? என்றெல்லாம் ஆய்ந்து பார்க்காதே என்று ஆதியில் கூறுவோம் ஏன்? எடுத்த எடுப்பிலேயே சிந்தித்து பார்த்து நீ இவனுக்கு உதவி செய்கிறாயே இவன் நல்லவனா? தீயவனா? நீ தருகின்ற தனத்தை வைத்துக்கொண்டு தவறான வழியில் செலவழித்தால் என்ன செய்வாய்? எனவே ஆய்ந்து (ஆராய்ந்து) பார்த்து செய் என்றால் ஏற்கனவே தர்ம சிந்தனையே இல்லாத மனிதன் சித்தர்கள் வாயிலாக இந்த வார்த்தையும் கேட்டு விட்டால் அவ்வளவுதான். சித்தர்களே பார்த்து செய் யோசித்து செய் என்று கூறி விட்டார்கள் என்று அவன் அணுவளவும் யோசிக்க மாட்டான் நிறுத்தி விடுவான். எனவே முதலில் செய்கின்ற மனநிலைக்கு சிந்தனைக்கு ஒருவன் வந்து விட வேண்டும். அப்படி வந்த பிறகு அடுத்த நிலையாக கட்டாயம் அள்ளி அள்ளி ஒருவன் தருகிறான் என்றாலே ஏமாற்றுகின்ற கூட்டம் வஞ்சகமான எண்ணம் கொண்ட கூட்டமும் அவனை சுற்றி வரத்தான் செய்யும். அது போன்ற நிலையிலே சற்றே நிதானித்து உண்மையில் உதவி தேவைப்பட்டு கேட்கிறானா? அல்லது நாம் தருகிறோம் என்பதற்காக கேட்கிறானா? என்று ஆய்ந்து பார்த்து ஒருவன் தரலாம்.
ஒரு வேளை தந்து கொண்டே வரும் சமயம் ஏதாவது ஒரு அமைப்பைக் குறித்து பிற்காலத்திலே அந்த அமைப்புக்கு அள்ளி அள்ளி தந்தோமே? அங்கு எதுவும் முறையாக பயன்பட்ட மாதிரி தெரியவில்லையே? ஏமாற்றிவிட்டார்களே என்று வருந்த வேண்டாம். அதுபோல் செய்திகள் வந்தாலும் கொடுத்தது கொடுத்ததுதான். கொடுக்க வைத்தது இறைவன். எப்படி சேர்க்க வேண்டுமோ எங்கு சேர்க்க வேண்டுமோ சேர்த்து விடுவார் என்று எண்ணி பயமில்லாமல் குழப்பம் இல்லாமல் தொடர்ந்து ஒரு மனிதன் அற வழியில் சென்று கொண்டே இருக்க வேண்டும். இந்த கருத்தைத்தான் எம்முன் அமரும் ஒவ்வொரு மனிதனுக்கும் கால காலம் கூறிக்கொண்டே இருக்கிறோம். இதுபோல் நிலையிலே செய்த பாவத்தை குறைத்துக் கொள்ளவும் இனி பாவங்கள் சேராமல் விழிப்புணர்வோடு வாழவும்தான் இந்த உடல் கொடுக்கப்பட்டு இருக்கிறது. வெறும் லௌகீக சுகங்களை நுகர மட்டும் அல்ல. லௌகீக சுகங்களை நுகர்வதோடு நாங்கள் கூறுகின்ற இந்த கருத்துகளையும் மனதிலே பதிய வைத்துக் கொண்டால் கட்டாயம் நல்ல பலன் ஏற்படும். இதுபோல் நிலையிலே மிகப்பெரிய ஞானிகளும் மகான்களும் தோன்றி இறைவனின் கட்டளைப்படி மனிதன் எங்ஙனம் வாழ வேண்டும்? எங்ஙனம் வாழக்கூடாது? என்றெல்லாம் வழிகாட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.
பொருளாதாரம் சார்ந்து மட்டும்தான் தர்மம் என்பதல்ல. ஓரளவு இறைவன் அருளால் நல்ல பொருளாதார நிலையில் உள்ள மனிதர்கள் அடுத்தடுத்து ருணம் (கடன்) பெற்றாவது தன் வாழ்க்கை வசதியை பெருக்கிக் கொள்ள எண்ணுகிறான். அவனுடைய விதியானது குறுக்கே நின்று கொண்டு அவன் பட்ட பாட்டுக்கெல்லாம் சரியான பலன் இல்லாமல் போய் விடுகிறது. ருணம் (கடன்) பெற்று போராடினாலும் அந்த கல்வியானது அவனுக்கு வெற்றியைத் தர வேண்டும் என்ற விதி இருந்தால்தான் விளைவுகள் சுபமாக இருக்கும். இல்லை என்றால் என்னவாகும்? அந்தக் காலமும் பட்ட பாடும் பெற்ற ருணமும் (கடனும்) வீணாகும். எனவே ஒவ்வொரு மனிதனின் பின்னால் எத்தனையோ பாவ வினைகள் மறைந்து செயலாற்றுகின்றன. இந்த வினையை எல்லாம் ஒட்டு மொத்தமாக கட்டிப் போட வேண்டும் என்றால் பகவானின் திருவடியை சதாசர்வ காலமும் எண்ணுவதோடு எந்தவிதமான குழப்பமும் இல்லாமலும் சந்தேகமும் இல்லாமலும் அள்ளி அள்ளி தந்து கொண்டே போகின்ற தர்மம் ஒன்றுதான் எளிய மார்க்கமாகும். எனவே நாங்கள் (சித்தர்கள்) அடிக்கடி கூறுவது போல தர்மம் செய் தர்மம் செய் தர்மம் செய் என்று ஒரு மனிதனின் மனதிலே மீண்டும் மீண்டும் போதிக்க போதிக்க இயல்பாகவே தர்ம குணம் நிரம்பிய மனிதன் மேலும் தர்மவானாக மாறுகிறான். ஓரளவு தர்ம சிந்தனையுள்ள மனிதன் பல மடங்கு தர்மம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்திற்கு வருகிறான். தர்மம் செய்யும் நினைவேயில்லாத மனிதன் ஓரளவு செய்யலாம் என்ற நிலைக்கு வருகிறான். இந்த நிலை உயர உயர ஒரு மனிதனின் உச்ச நிலையிலே இனி என்னுடையது என்று ஏதுமில்லை. எல்லாம் இறைவன் தந்தது. எனவே என் கண்ணில் படுகின்ற மனிதர்களுக்கு என்ன தேவையோ பிற உயிர்களுக்கு என்ன உதவி செய்ய என்னால் முடியுமோ என்னால் முடிந்த உதவியை செய்கிறேன். உதட்டால் முடிந்த உதவியை செய்கிறேன். உள்ளத்தால் முடிந்த பிரார்த்தனையை செய்கிறேன். யான் பெற்ற பொருளால் முடிந்த உதவியை செய்கிறேன் என்று உடல் பொருள் ஆவி என்று அனைத்தையும் பிறருக்காக அர்ப்பணம் செய்கின்ற குணம் வந்து விட்டால் இறைவன் அருள் அவனிடம் பரிபூரணமாக பரிமளிக்கத் துவங்கும். இதுபோல் நிலையிலே பிறருடைய பிரச்சினைகளை நீக்க ஒரு மனிதன் முயற்சி செய்தாலே அவனுடைய பிரச்சினைகளை தீர்க்க இறைவன் முன்வந்து விடுவான். எனவேதான் நாங்கள் (சித்தர்கள்) இதனை அடிக்கடி வலியுறுத்திக் கூறுகிறோம்.
ஜீவ அருள் ஓலையை (ஜீவநாடி) ஒரு மனிதன் எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும் ஆய்ந்தாலும் நாங்கள் தர்மத்திலேயே நிற்பது பிறருக்கு மனத் தளர்வையும் விரக்தியையும் ஏற்படுத்தலாம். நாங்களே ஏராளமான குழப்பங்களோடும் பல்வேறு விதமான வேதனையோடும் இங்கு வந்தால் தர்மம் செய் தர்மம் செய் என்றால் அதற்குரிய சூழல் வேண்டாமா? ஏற்கனவே கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்ற எங்களால் எங்கனம் தர்மம் செய்ய இயலும்? என்று கூட விமர்சனம் செய்கிறார்கள். சரியான கோணத்திலே நாங்கள் கூறுவதை புரிந்து கொண்டால் இந்தக் குழப்பத்திற்கு அவசியமே ஏற்படாது. ஒரு மனிதன் நேர்மையாக உழைத்து அவன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டியது அடிப்படை கடமை. அதை நாங்கள் தவறு என்று கூறவில்லை. ஆனால் அதே தருணம் ஒவ்வொரு மனிதனும் தன் சக்திக்கு ஏற்ப தன்னுடைய வருமானத்திலே ஒரு பகுதியை தாராளமாக ஏழை எளியவர்களுக்கும் ஆலயங்களுக்கும் உதவும் வகையில் செலவிட்டால் அவனின் பூர்வீக பூர்வீக பூர்வீக பாவங்களும் சந்ததி வழியாக கடத்தப்படும் பாவங்களும் தோஷங்களும் குறையும்.
எதிர்காலத்தில் விதி வழியாக வர இருக்கின்ற கடுமையான சூழல்களும் மெல்ல மெல்ல மாறும். ஒரு வேளை அதிக பொருளாதாரம் ஒரு மனிதனிடம் இல்லை என்று வைத்துக் கொள்வோம். வருகின்ற வருமானம் வயிற்றுக் கூட போதவில்லை என்றால் உடலால் பிறருக்கு உழைத்து நன்மையை செய்யலாம். உழவாரப் பணிகள் செய்து நல்லவிதமான புண்ணியத்தை சேர்த்துக் கொள்ளலாம். வார்த்தைகளால் இதம் பேசி பிறருக்கு நிம்மதியை ஏற்படுத்தலாம். எதுவும் இயலாவிட்டால் நன்மை செய்யா விட்டாலும் பாதகமில்லை. பிறரை வேதனைக்கு உள்ளாக்காமலும் தீமையான எண்ணங்களை எண்ணாமலும் வாழலாம்.
நல்விதமாய் மென்மேலும் இறை வழி அற வழி தொண்டுகள் ஒற்றுமையோடு செய்ய நல்லாசிகள். ஒவ்வொரு மனிதனின் விதியானது மிக மிக நுட்பமானது. அதையெல்லாம் சராசரி மனிதப் பார்வையால் பார்ப்பதும் புரிந்து கொள்வதும் மிக மிக கடினமப்பா. இதுபோல் மனிதன் எண்ணிடலாம் கையிலே தனம் (பணம்) இருந்து உடலிலே வலு இருந்தால் நினைத்ததை சாதிக்கலாம் என்று. அதுபோல் ஸ்தல யாத்திரை கூட ஒவ்வொரு மனிதனின் கர்ம பாவத்தை பொறுத்துதான் நிகழும். திட்டமிடுவதோ முயற்சி செய்வதோ தவறல்ல. ஆனால் அதனையும் தாண்டி இறைவனின் கருணையும் கடாட்சமும் ஒவ்வொரு மனிதனின் ஜாதகத்தில் உள்ள ஒன்பதாம் இடத்திற்கு உரிய கிரகம் அதிபதி அதை சார்ந்த பாவங்கள் இவையெல்லாம் ஒத்துழைக்கும் தருணத்தில்தான் ஒருவனுக்கு புண்ணிய ஸ்தல யாத்திரைகள் நிகழும். இல்லையென்றால் என்ன ஆகும் தெரியுமா? குறிப்பிட்ட ஸ்தலத்திற்கோ வேறு ஸ்தலத்திற்கோ வேறு பணியின் காரணமாகக் கூட ஒரு மனிதன் செல்லலாம். அங்குள்ள ஆலயத்தின் வாசலில் கூட அவன் நிற்க வேண்டியிருக்கும். ஆனால் உள்ளே செல்வதற்கு உண்டான மன நிலையோ சூழலோ அத்தருணம் அவனுக்கு நிகழாது. ஆனால் அந்த ஆலயத்தையே எண்ணாமல் வேறு ஏதோ ஒரு சிந்தனையில் வேறு எங்கோ செல்லும் போது திசை மாறி அந்த ஆலயத்திற்கு செல்லக் கூடிய வாய்ப்பும் ஒரு மனிதனின் விதிப்படி நிகழும். ஏதோ ஆலய தரிசனம் என்றாலோ ஸ்தல தரிசனம் என்றாலோ மிக எளிமையான ஒரு விஷயம் சரியாக திட்டமிட்டாலே போதும் என்று ஒரு மனிதன் எண்ணி விடக்கூடாது. சரியான முறையில் திட்டமிடவும் வேண்டும். இறைவனின் அனுக்ரகமும் வேண்டும்.
இறைவன் அருளாலே இதுபோல் ஜீவ அருள் ஓலையிலே பல்வேறு கருத்துக்களைக் கூறும் பொழுது அந்தக் கருத்தின் ஓட்டத்திலே அதன் முன் கூறிய கருத்தும் அதனோடு இழைந்தோடி வருகின்ற கருத்தும் அந்தக் கருத்தை ஒட்டி பின்னால் நாங்கள் கூறுகின்ற கருத்தும் மனிதனுக்கு புரியா விட்டால் மத்தியில் கூறிய விஷயத்தை மட்டும் புரிந்து கொண்டு தவறான முடிவுக்கு வரவேண்டிய ஒரு நிலைமை வரும். அதனால்தான் இந்த சுவடியை ஓதுகின்ற ஆதிகாலத்தில் இருந்தே யாங்கள் (சித்தர்கள்) தெள்ளத் தெளிவாக பல விஷயங்களைக் கூறுகிறோம். குறிப்பாக பரிபூரண சரணாகதி தத்துவம் இறைவன் மீது எந்த விதமான ஐயமும் குழப்பமும் இல்லாமல் இறை திருவடியை சதாசர்வ காலமும் எண்ணி தம் கடமையை ஆற்றுதல் அதோடு மனித நேயத்தை மறந்து விட்டு பக்தி செலுத்துகின்ற முறையை நாங்கள் ஒருபொழுதும் ஏற்றுக் கொள்வதில்லை. எனவே மனித நேயத்தோடு அறப்பணிகளோடு அற சிந்தனையோடு கடமையை நேர்மையோடு செய்து கொண்டே செய்கின்ற இறை வழிபாட்டிலே பூரணத்துவம் கட்டாயம் கிட்டும். இறைவன் அருளும் கிட்டும்.