ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 234

கேள்வி: சதுரகிரி மலையில் சிவபெருமான் சற்று சாய்ந்து காட்சியளிப்பதின் காரணம் என்ன?

மனிதர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சிவபெருமான் எப்பொழுதோ சாய்ந்து விட்டாரப்பா. முதலில் அவர் கங்கையிடம் சாய்ந்து விட்டார். பிறகு தன் பக்தர்களுக்காக விதவிதமாக சாய்ந்து விட்டார். மதுரையம்பதியில் அவர் பலமுறை சாய்ந்திருக்கிறாரப்பா. நீர் சுமந்து வரும் ஒரு பெண்ணிற்காகக் கூட ஒரு ஸ்தலத்தில் சாய்ந்து இருக்கிறார். எனவே இதன் பொருள் என்ன? நல்லவர் பக்கமும் நல்ல பக்தர்கள் பக்கமும் இறைவன் எப்பொழுதுமே சாய்ந்திருப்பார் என்பது பொருளாகும்.

கேள்வி: பொதிகை மலையில் தங்கள் தரிசனத்திற்குப் பிறகு வழக்கமாக மழை வரும் என்பார்கள். ஆனால் நாங்கள் தரிசனம் செய்து முடித்த பிறகு இடி விழுந்து மரங்கள் பற்றி எரிந்தன இது எத்தகைய வெளிப்பாடு?

பொதுவாக இறை தரிசனத்திற்குப் பிறகு மழை பெய்தால் அது இறைவனின் ஆசிர்வாதம் என்று நாங்கள் கூட கூறியிருக்கிறோம். அப்படி நிகழவில்லை என்பதற்காக எதிரான பொருளைக் கொள்ளக் கூடாது. எனவே பல்வேறு தருணங்களிலே இறைவன் தன் கருத்தை உணர்த்துவதற்கு பல்வேறு விதமான முறைகளைக் கையாளுகிறார். எனவே இந்த ஒரு நிகழ்ச்சி இனி எதிர்காலத்தில் நடந்தாலும் அல்லது எதுவுமே நடவாமல் போனாலும் கூட அதற்காக இறைவனின் கருணையோ மகான்களின் அருளாசியோ இல்லை என்று எண்ணத் தேவையில்லை. தற்கால மனிதர்களுக்குக் கூறுகிறோம். அத்தனை தூரம் ஒருவன் கடந்து செல்கிறான் என்றாலே இறைவனின் கருணை இருப்பதால்தான் அப்படி ஒரு உணர்வு வருகிறது. அங்கு செல்ல வேண்டும் என்கிற ஒரு நிலை ஏற்படுகிறது. எனவே இதுவும் ஆசிர்வாதம்தான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 233

கேள்வி: ஆலயத் திருப்பணி கோரிக்கை:

இறைவனின் கருணையைக் கொண்டு யாங்கள் (சித்தர்கள்) பலருக்கு பலமுறைக் கூறியதுதான். இந்த இன்னவனுக்கும் கூறுகிறோம். ஒரு ஆலயம் சிறப்புற வளர வேண்டுமென்றாலும் அந்த ஆலயம் நல்லவிதமாக கலச விழா காண வேண்டுமென்றாலும் அதற்கும் சில சூட்சும காரணங்கள் இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க அந்த ஆலயம் தொடர்பான மனிதர்களும் அந்த ஆலயத்தை சுற்றி வசிக்கின்ற மனிதர்களும் ஒன்றுபட்ட உள்ளத்தோடு இறைவனை வேண்டி முயற்சியில் இறங்கினால் கட்டாயம் பலன் உண்டு. இதுபோல் முன்னர் ஒருவனுக்குக் கூறிய வாக்கையே இன்னவனுக்கும் கூறுகிறோம். மூத்தோனை அதாவது விநாயகப் பெருமானை தமிழகத்தில் உள்ள சிறப்பான ஸ்தலங்கள் (பிள்ளையார்பட்டி திருச்சி உச்சி பிள்ளையார் கோவில் போன்ற ஸ்தலங்கள்) சென்று வணங்கினால் தடையகன்று நல்ல முறையிலே அந்த திருப்பணி நடை பெறும். இந்த நிலையிலே தொடர்ந்து முயற்சிகள் சோர்வின்றி செய்ய நலம் உண்டு. ஆசிகள்.

கேள்வி: எந்தக் கோவில் மூத்தோனை (விநாயகப்பெருமானை) வணங்கினால் சிறப்பு? வேகமாகப் பணி நடக்கும்?

இறைவனின் கருணையாலே யாம் (அகத்திய மாமுனிவர்) ஒரு ஆலயத்தைக் குறிப்பிட்டால் அப்படியானால் வேறு ஆலயம் சிறப்பில்லையா? என்று ஒரு மனிதன் வினவுவான். ஆலயம் எப்பொழுதுமே சிறப்புதானப்பா. அந்த ஆலயத்திற்கு எந்த மனோபாவத்தில் மனிதன் செல்கிறான் என்பதைப் பொறுத்துதான் அவனுக்கு இறைவன் அருள் கிட்டுகிறதா? இல்லையா? என்பது புரியும். நாங்கள்(சித்தர்கள்) குறிப்பிட்டதை நன்றாக கவனி. விநாயகப்பெருமானுக்கு என்று பிரசித்தி பெற்ற ஆலயங்கள் அங்கு சில உண்டு. பிரசித்தி பெற்ற என்றால் மனிதர்கள் அறிந்த என்று பொருள். மனிதர்கள் அறியாத ஆலயங்களும் உண்டு. அது குறித்து பின்னர் உரைப்போம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 232

கேள்வி: கோவில்களில் சிலர் பிரசாதம் வாங்க மறுக்கிறார்கள். ஏனென்றால் கொடுப்பவர்களின் கர்மாக்கள் தங்களைத் தாக்கி விடும் என்று கூறுகிறார்கள் இதனால் பல இடங்களில் மனஸ்தாபம் ஏற்படுகிறது. இதை இப்படி சரி செய்வது?

அடுத்த முறை அனைவருக்கும் கனகத்தை (தங்கத்தை) தானமாக பிரசாதமாக கொடுத்துப்பார். யாருமே மறுக்க மாட்டார்கள். பிரசாதத்தைப் பெறுவதால் பெறுகின்றவனுக்கு எந்தவிதமான பாவமும் தோஷமும் வராதப்பா. இது எல்லாம் அறியாமை மனிதர்களால் ஏற்கப்படுவது. இந்த நிலையிலே பிரசாதத்தைப் பெறுவது என்பது ஒரு உயர்ந்த நிலைதான். உண்மையில் இறைவனுக்கு நிவேதனம் செய்யப்பட்ட பொருள் அது (நிவேதனம்) செய்யப்படுவதற்கு முன்னால் சாதம். அது நிவேதனம் ஆன பிறகு பிரசாதம் ஆகிவிடுகிறது. எனவே இதைப் பெறுவதால் எந்தவிதமான கடினமோ கஷ்டமோ பெறுபவனுக்கு வருவதில்லை. எனவே தாராளமாகப் பெற்றுக் கொள்ளலாம். பெறவில்லை என்றாலும் கூட அது குறித்து ஒரு தவறான எண்ணமும் இல்லாமலிருந்தால் அதுவே போதும்.

கேள்வி: அத்வைதத்தை எப்படி நடைமுறைக்குக் கொண்டு வருவது?

எல்லாவற்றையும் சுருக்கமாக குறுக்கு வழியில் கூறுவதற்கு உண்மையில் வாய்ப்பு இல்லையப்பா. ஒரு வகையில் எல்லாம் எளிமை போல் தோன்றினாலும் இன்னொரு வகையில் மனிதனுக்கு எல்லாம் கடினமாகத்தான் இருக்கும். ஏன் என்றால் மனிதனின் மனம் முழுக்க தேகம் சார்ந்த விஷயமாகவே இருக்கிறது. கண் முன்னால் வைத்துக் கொண்டு இதனை விடு என்றால் மனிதனால் முடியாது. மெல்ல மெல்ல முயற்சி செய்துதான் மேலேற வேண்டும். இதற்கு வேறு வழியில்லை. இதற்கு ஒரே வழி தொடர்ந்து பக்தி மார்க்கம் ஒன்றுதான் இக்காலத்தில்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 231

கேள்வி: முருகனிடம் எனக்கு அன்பு அதிகம். ஏற்கனவே அவர் என்னைப் பார்த்துக் கொண்டே இருக்கிறார். தற்பொழுது 6 மாதமாக அகத்தியம் பெருமானை வணங்கிக் கொண்டு இருக்கிறேன். அவரும் கேட்ட உடனேயே சில விஷயங்களை எனக்கு செய்து தந்திருக்கிறார். இந்த இருவரின் அன்பும் எப்பொழுதுமே குறையாமல் நான் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். இதுதான் என் ஆசை.

இறைவனின் கருணையாலே இன்னவன் யாது கூறினான்? முருகப் பெருமானிடம் அன்பு அதிகம் என்று. இதற்காகக் கவலைப்பட வேண்டியது அன்னையர்கள்தான். நாங்கள் அல்ல. வள்ளியும் தெய்வானையும்தான் இதைக் குறித்து கவலைப்பட வேண்டுமே தவிர நாங்கள் அல்ல. ஆயினும் இவன் பக்தி தொடர தொடர்ந்து இளையவனை (முருகப்பெருமான்) வணங்கி வர இவன் நலம் பெற தொடர்ந்து இறை வழியில் வர நல்லாசிகள் கூறுகிறோம்.

கேள்வி: பரிணாமத் தொடர்தான் பிறவித் தொடரா சந்ததி தொடரா? அல்லது இறந்த மனிதன் மீண்டும் பிறவி எடுக்கிறானா?

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் ரவியை (சூரியன்) வணங்கு. பிறவியின் ரகசியம் புரியுமப்பா. இது போல் இயம்புங்கால் பலரும் பலவிதமாகக் கூறலாம். யாங்கள் (சித்தர்கள்) இத்தருணம் கூறுவதை புரிந்து கொள்ள முயற்சி செய். இந்த தேகத்தோடு இருப்பது ஒரு பிறவி. இந்த தேகம் பூர்த்தியடைந்து இந்த தேகத்தை விட்டுவிட்ட ஆத்மா அதன் கர்ம பாவங்களின் அடிப்படையிலும் இறைவன் இடும் அருளாணையின்படியும் இன்னொரு தேகத்திற்குள் அதாவது இன்னொரு அன்னை வயிற்றுக்குள் புகுந்து பிறவி எடுப்பதையே பிறவி என்று நாங்கள் (சித்தர்கள்) கூறுகிறோம். ஏனைய கருத்துக்களைக் குறித்து எமக்கு எந்தவிதமான உடன்பாடும் இல்லை. அது அவனவன் மனோபாவத்தைப் பொறுத்தது. எனவே இதை நன்றாகப் புரிந்து கொள்ள முயற்சி செய்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 230

கேள்வி: மெய்யான மெய்யை எவ்வாறு தேடுவது?

தேடுவது என்பது ஒரு வார்த்தைக்காகக் கூறுவது. உண்மையில் தேடுவதும் ஒன்றுதான். தேடப்படுவதும் ஒன்றுதான். இவை இரண்டும் ஒன்று என்கிற உணர்வு வரும்வரை ஒன்று ஒன்றை தேடிக் கொண்டே தான் இருக்கும். அந்தத் தேடல் எப்பொழுது பூர்த்தி அடைகிறது? என்பது தேடுகின்ற அதற்கே தெரியாத ஒரு நிலையாகும். எனவே அதுவரை தேடிக் கொண்டு இருப்பதுதான் தேடுகின்ற பொருளின் பணியாகும். தேடத் தேடத்தான் தேடுதல் என்ன? என்பதே தேடுகின்ற பொருளுக்கே தெரியுமப்பா. தேட வேண்டும் தேட வேண்டும் என்ற அந்த வேட்கை (விருப்பம்) இருக்கும் வரை தேடுகின்றது எதைத் தேட வேண்டுமோ அதைத் தேடிக் கொண்டே இருக்கும். ஒரு வேளை தேட வேண்டியதைத் தேடாமல் வேறு எதையாவது தேடினாலும் அது தேட வேண்டியது இல்லை என்று தேடுகின்ற அதற்குத் தெரிந்த பிறகு எதைத் தேட வேண்டுமோ அதைத் தேடிக் கொண்டே செல்லும். எப்பொழுது அந்தத் தேடுதல் நிற்கிறதோ அப்பொழுதும் தேடுவதும் தேடப்படுகின்ற பொருளும் ஒன்று என்பது ஒரு நிலையான காட்சியாக மாறும். அது வரை தேடு தேடு தேடு தேடிக் கொண்டே இரு என்பதுதான் எமது வாக்கு.

கேள்வி: ஆன்மா இருதய குகையில் இருப்பதாக பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது அது குறித்து:

காற்று எப்படி ஒரு இடத்தில்தான் இருக்கிறது என்று கூற முடியாதோ பரந்த வான்வெளி இந்த இடத்தில்தான் இருக்கிறது. இந்த இடத்தில் இல்லை என்று எப்படிக் கூற முடியாதோ அப்படித்தான் ஆன்மா என்பதும் இறைவனைப் போல தேகமெங்கும் நீக்கமற பரவியிருக்கிறது. சில குறிப்பிட்ட இடங்களில் இருப்பதாகக் கூறப்படுகிறது புரிய வைப்பதற்கான ஒரு குறியீடான முயற்சி. அங்கும் இருக்கிறது. எங்கும் இருக்கிறது என்பதே உண்மையாகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 229

கேள்வி: நான் பொதிகை மலை சென்றிருந்த பொழுது ஒரு அன்பர் என்னிடம் நீ வந்தது சந்தோஷம். அகத்தியருக்கு திருப்தி என்று வாக்கு சொல்வது போல் கூறினார். அப்படி நீங்கள்தான் பேசினீர்களா? அல்லது அந்த அன்பரின் கற்பனையா?

இறைவனருளால் ஒன்றைத் தெரிந்து கொள். இந்த ஜீவ அருள் ஓலையை (ஜீவநாடியை) கற்பனை என்றுதான் பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். நிலைமை இவ்வாறு இருக்க இப்பொழுதெல்லாம் கலிகாலத்திலே எம்மையே நாம் நிரூபித்துக் கொள்ள வேண்டிய நிலையில்தான் யாமும் இருக்கிறோம். எனவே உண்மை என்று எடுத்துக் கொள். அதனால் என்ன நட்டம்? பொய் என்றாலும் என்ன பெரிதாக நட்டம் வந்துவிடப் போகிறது? நாங்கள் குறிப்பாகக் கூறுவது என்னவென்றால் இது போன்ற வினாக்களை விடுக்கும் பொழுது யாங்கள்(சித்தர்கள்) மெளனத்தைதான் கடை பிடிக்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால் ஏதாவது நாங்கள்(சித்தர்கள்) உண்மையைக் கூறினால் மனிதர்களுக்குள்ளே தேவையில்லாத பிரச்சனைகளும் பிணக்குகளும் ஏற்படும். எனவே இது போன்று அடுத்த ஒரு சூழலில் நீ இருந்தால் செவியாடலாகக் கேட்டுக் கொள் அமைதியாக இரு. ஆய்வு எதுவும் செய்யாதே.

கேள்வி: ரசாயன உணவு இயற்கை உணவு எது சிறப்பு?

எல்லா சூழலிலும் இயற்கை உணவு என்பதை நாங்கள் (சித்தர்கள்) மறுக்கவில்லை என்றாலும் தற்காலத்தில் அது சாத்தியமில்லை என்பதும் எமக்குத் தெரியும். எதை ஏற்றாலும் அதற்கு ஏற்றாற் போல் உடலை மாற்றிக் கொள்ளக் கூடிய சக்தி சில விலங்குகளுக்கு இருக்கிறது. கடுமையான ரசாயனத்திலிருந்து கூட தன்னை தற்காத்துக் கொள்ளுகின்ற பூச்சியினங்கள் இன்னும் இந்த உலகிலே வாழ்ந்து கொண்டு இருக்கின்றன. அந்த நிலையிலே மனிதன் கூடுமானவரை ரசாயன கலப்பில்லாத பொருள்களை ஏற்பதே சரி என்றுதான் நாங்கள் கூறுகிறோம். ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லாத பட்சத்திலே முடிந்தவரை அதனை பின்பற்றிவிட்டு அதன் தீய பக்க விளைவுகளில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ள கசப்பான மூலிகைகளை அதிகம் ஏற்றால் அதனால் தீய பின் விளைவுகள் இல்லாமல் இருக்கும். இது ஒன்றுதான் இக்கலியில் (இக்கலிகாலத்தில்) ஏற்ற வழியாகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 228

கேள்வி: தங்கள் வாக்கின்படி சிவன் கோயிலுக்கு என்னால் முடிந்த அறப்பணிகளை செய்து கொண்டிருக்கிறேன். என்றாலும் சில தடங்கல்கள் வருகின்றன. அந்தக் கோவில் திருப்பணிகள் எப்போது பூர்த்தியாகும்?

இறைவன் கருணையால் விரைவில் கலச விழா (கும்பாபிஷேகம்) காண யாமும் இறையிடம் பிராத்தித்து நல்லாசிகளை இத்தருணம் கூறுகிறோம். இத்தருணம் யாம் இயம்புவது யாதென்றால் கூடுமானவரை இது போன்ற பொது செயல்களில் ஈடுபடுகின்ற மனிதர்கள் கூடுமானவரை நேர்மையாக செயல்படுவது மிக மிக முக்கியம். என்றாலும் கூட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் பெருவாரியான இடங்களில் அது இயலாமல் போய் விடுகிறது. யாங்கள் (சித்தர்கள்) ஒருவனைப் பார்த்து ஆங்காங்கே நடக்கும் ஆலயத் திருப்பணிகளுக்கு உன்னால் முடிந்ததை செய் என்றால் அதைப் போல் நிறைய காப்பகங்களுக்கு முடிந்த உதவிகளை செய் என்றால் அவன் சென்று பார்த்துவிட்டு என்ன கேட்பான்? அங்கு நடப்பதெல்லாம் திருப்தியாக இல்லை. ஏமாற்றுகிறார்கள். எப்படி நான் செய்வது? என்று கேட்பான். இல்லை (என்றால்) தனத்தைக் கொடுத்து விட்டு தனத்தைக் கொடுத்தேன். என்னைப் போல் பலரும் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இன்னமும் அங்கு பணி பூர்த்தியடையவில்லை. ஏதோ தவறு நடக்கிறது. ஏன் இப்படிப்பட்ட இடத்திற்கு நாங்கள் உதவி செய்யும் ஒரு நிலை ஏற்பட்டது? நீங்கள் தானே கூறினீர்கள். அதனால் தானே அறப்பணிகளுக்கு உதவினேன். இப்படி வீணாகிவிட்டதே? என்றெல்லாம் எம்மிடம் (அகத்திய மாமுனிவர்) அடுக்கடுக்காக வினாவை வைப்பான். இதற்கெல்லாம் ஒட்டு மொத்தமான பதில் 100 க்கு 100 நேர்மையான மனிதர்களை இந்த உலகம் இன்னும் காணவில்லை என்பதுதான்.

எனவே அவரவர்களால் சக்திக்கு இயன்ற உதவிகளைத் தொடர்ந்து அது ஆலயத் திருப்பணியாக இருந்தாலும் வேறு தர்ம காரியங்களாக இருந்தாலும் செய்து கொண்டே செல்ல வேண்டியதுதான். விளைவுகளைக் குறித்து சிந்திக்கக் கூடாது. ஒரு முறையோ இரு முறையோ செய்து பார்த்து விட்டு திருப்தியில்லை என்றால் ஒதுங்கிக் கொள்ளலாமே தவிர செய்யும் முன்னரே இது நேர்மையான அமைப்பா? இங்கு தனம் தந்தால் முறையாக செயல்படுவார்களா? என்றெல்லாம் ஆய்ந்து (ஆராய்ந்து) பார்த்தால் எமது (அகத்திய மாமுனிவர்) நோக்கில் ஒன்று கூட இந்த உலகிலே ஏற்றம் பெறாது. இந்த நிலையிலே அந்தந்த மனிதனும் அவனவன் மன சான்றாக ஒரு ஆலயத்தை நோக்கி சென்று தன்னால் முடிந்ததை செய்து விட்டு அனைத்தும் இறைவனுக்கு சொந்தம் இறைவனுக்கே அர்ப்பணம் செய்து விட்டோம். எனவே விளைவுகளுக்கும் இறைவனே பொறுப்பு என்று வந்து விடுவதுதான் ஏற்புடையது. இது குறித்தெல்லாம் ஆய்வு செய்தால் ஒருவன் கூட ஒரு அறப்பணி கூட செய்ய இயலாது. இல்லை திருப்தியாக இருந்தால் எவ்வளவு வேண்டுமானாலும் தருகிறேன். என் மனதிற்கு திருப்தியில்லையென்றால் நான் தர மாட்டேன் என்றால் அது அவனவன் விருப்பம். யாங்கள் எதுவும் தடை கூறவில்லை. எனவே உன்னால் முடிந்த உதவியை எந்த ஆலயத்திற்கும் நீ எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். தடை நீங்க வேண்டுமென்றால் ஒவ்வொரு முறையும் விநாயகப் பெருமானை அருகிலுள்ள ஆலயம் சென்று வணங்கி பிறகு முயற்சியில் இறங்கு. தடை நீங்கி நலம் நடக்கும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 227

கேள்வி: கோவில் திருப்பணி சிறப்பாக நடக்க ஆசிகள்:

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இந்த ஆன்மா லயிக்கின்ற இடம் ஆலயமாகும். ஒவ்வொரு மனிதனும் தம் தம் மனதிற்குள் ஆலயத்தை எழுப்புவதும் மனமாகிய கருவறையிலே தூய இறையை அமர்த்தி அன்றாடம் அன்பால் பூஜை செய்வதுமே இறைவன் விரும்புவது. இருப்பினும் எடுத்த எடுப்பிலேயே இது போன்ற தத்துவார்த்த விஷயங்களைக் கூறினால் அது பலனைத் தராது என்பதால்தான் புற வழிபாடுகளும் புற பூஜைகளும் முன்னோர்களாலும் மகான்களாலும் வகுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையிலே பல்வேறு ஆலயங்கள் பல்வேறு கால கட்டங்களில் கட்டப்பட்டு அது காலம் கடந்தும் நிற்கிறது. சில சிதிலமடைந்து விடுகிறது. இவை அனைத்திற்குமே பல்வேறு விதமான சூட்சும காரணங்கள் இருக்கின்றன. இந்த இன்னவன் எழுப்பிய வினாவின் அடிப்படையிலே இந்த ஆலயம் சிறப்புற வளர யாம் இறைவன் அருளால் நல்லாசிகள் கூறுகிறோம். எந்தவொரு ஆலயமும் மெய்யாக மெய்யாக வளர மெய்யன்பர்கள் ஒன்று பட்டால் போதும். அங்கே அருள் இணைப்பு இருந்தால் போதும் பொருள் இணைப்பு மிகப்பெரிய விஷயம் அல்ல. இறைவன் கருணையால் இனிதே நடக்கும். இந்தத் தமிழ் மண்ணில் உள்ள மூத்தோனுக்கு தலை சிறந்த ஆலயங்கள் அங்கெல்லாம் தொடர்புடைய மனிதர்கள் சென்று இயன்ற வழிபாடுகள் செய்து பணியை துவக்க நலம் நடக்கும். நல்லாசிகள்.

கேள்வி: சூளகிரி வரதராஜப் பெருமாள் பற்றி:

வரதராஜப் பெருமாள் திருக்கோவில். இடம் சூளகிரி. மாவட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம்.

இறைவன் கருணையாலே அனைத்து புராண சம்பவங்களும் நடந்தது உண்மை. தக்க காலத்தில் இன்னமும் வலிவும் பொலிவும் அந்த சூழலும் உருவாகும். ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். ஒரு ஆலயம் வளர்ச்சி பெறுவது என்பது மனித நோக்கிலே இருப்பது அல்ல. பெருவாரியான மனிதர்கள் ஒரு ஆலயத்தை நோக்கிப் படையெடுத்தால் என்னவாகும்? அங்கு வெறும் வியாபாரம்தான் இருக்கும். இறையம்சம் இருக்குமா? எனவே ஒரு ஆலயம் அத்தனை எளிதாக பலரின் பார்வைக்கு வரவில்லை. பலரும் அதனை எண்ணிக்கூட பார்க்கவில்லை என்றால் சிலர் மட்டும் செல்கிறார்கள் என்றால் அதனால் ஆலயத்திற்குக் குறையொன்றும் அல்ல. தொடர்ந்து அந்தந்த காலத்தில் எந்தெந்த ஆத்மாக்கள் அந்த ஆலயத்தோடு தொடர்புடையவர்களோ அவர்கள் வந்து தொண்டினைத் தொடர்வார்கள். சிறப்பாய் அனைத்தும் நடக்கும். நல்லாசிகள்.

இக்கோவிலைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 226

கேள்வி: பிறவாத வரம் வேண்டும் என்று கேட்க வேண்டுமா? அல்லது பிறவி தொடர்ந்து வர வேண்டும் என்று கேட்க வேண்டுமா?

இறைவன் கருணையைக் கொண்டு இன்னவனுக்கு இன்னவன் வினாவிற்கு இத்தருணம் யாங்கள் இயம்புவது ஒன்று மந்திரி ஒருவன் இருக்கிறான். மிகவும் உயர்ந்த பதவி என்று வைத்துக் கொள்வோம். அவனை எனக்குத் தெரியும். என் தோழன். என்னோடு தங்கி பயின்றவன் என்று கூறுவது உயர்வா? அல்லது அந்த மந்திரி இன்னாரை எனக்குத் தெரியும். என்னுடன் கல்வி பயின்றவன். உள்ளே அழைத்து வாருங்கள் என்று கூறுவது சிறப்பா?. இறைவனைத் தெரியும் என்று மனிதன் கூறுவதை விட இத்தனை கோடி மனிதர்களில் இவனை எனக்குத் தெரியும். அதோ வருகிறாள் யார்? எம் தாய் என்று காரைக்கால் அம்மையாரைப் பார்த்து முக்கண்ணன் (சிவபெருமான்) கூறினாரே? அதோ வருகிறார் யார்? நம் தோழன் என்று சுந்தரரைப் பார்த்துக் கூறினாரே? (கூறியது சிவபெருமான்) அதைப் போல இறைவனைத் தேடி யாரும் செல்ல வேண்டாம். ஒவ்வொரு மனிதனையும் தேடி இறை வரும் வண்ணம் ஒவ்வொரு மனிதனும் பக்குவம் அடைந்தால் போதும்.

எப்படி பக்குவம் அடைவது? என்பதற்குத்தான் பல்வேறு நீதி நூல்கள் இருக்கின்றன. யாமும் சில காலமாக இறைவன் அருளால் வாக்கினை ஓதிக்கொண்டு இருக்கிறோம். எனவே என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது?. இது வேண்டுமா? வேண்டாமா? பிறவி தொடர்வதா? தொடராமல் இருப்பதா? இது போன்ற அனைத்தையும் விட்டுவிட்டு எந்தவிதமான எண்ணங்களும் இல்லாத வெற்றுப் பாத்திரமாக மனதை வைத்து இறையிடம் பரிபூரண சரணாகதி என்பதை எண்ணங்களால் வைத்து மெளனத்தையே மொழியாக்கி ஒவ்வொரு மனிதனும் வாழ்ந்தால் அவன் யார்? அவன் எதற்கு? அவன் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது? என்பதை இறையே உணர்த்தும். எனவே இன்னவனுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் இது பொருந்தும். எல்லோரும் இறையின் நகல்கள்தான். ஆனால் கனகம்(தங்கம்) இருக்கிறது. அது கனகம் (தங்கம்) என்று தெரியாத நிலையில் சேற்றிலே அமிழ்ந்து கிடந்தால் யாரும் மதிக்க மாட்டார்கள். தூய்மைப்படுத்தினால் கனகம் என்பது தெரியும். அதைப் போல பற்று மாயை அறியாமை ஆசை சுயநலம் தன்முனைப்பு போன்ற அழுக்குகள் மனித ஆன்மாவை மூடியிருக்கின்றன. இவற்றை விட்டுவிட்டால் எல்லோரும் இறை நிலைக்கு உயர வாய்ப்பு உண்டு. ஆசிகள்.

கேள்வி: மூத்தோனை வணங்கு என்று சொன்னீர்கள். மூத்தோன் என்றால்? தமிழ் மூத்தோனாகிய முருகரா? அல்லது ஈஸ்வரனா? தாங்கள் குறிப்பாக சொன்னால் உதவியாக இருக்கும்:

யாம் (அகத்திய மாமுனிவர்) விநாயகப் பெருமானைக் குறிப்பிட்டோம். ஆனால் விதி உன் மதியில் அமர்ந்து மூவரையுமே கூற வைத்து விட்டது. எனவே மூவரையுமே நீ வணங்கு.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 225

கேள்வி: அகத்தியர் வழிபட்ட ஸ்தலங்கள் கையாலயத்திலிருந்து கன்னியாகுமரி வரை:

இறைவன் அருளைக் கொண்டு யாம் கூறுவது யாதென்றால் இந்த அகிலாண்ட லோகம் அண்ட சராசரங்கள் அனைத்தையுமே யாம் ஸ்தலமாகத்தான் (பரமாகத்தான்) பார்க்கிறோம். இங்கு எதைப் பார்த்தாலும் எமக்கு இறையாகத்தான் தெரிகிறது. மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குதான் ஆலயம் என்ற ஒரு இடம். எம்மைப் போன்ற நிலையை எய்து விட்டவர்களுக்கு பார்க்குமிடமெங்கும் நீக்கமற தெரிவது இறையொன்றுதான். எனவே அந்த இறை இந்த ஆலயத்தில் மட்டும்தான் இருக்கிறது. நான் சென்று வணங்கியது இங்குதான். எனவே நீங்களும் சென்று வணங்குங்கள். உங்களுக்கும் நல்லது நடக்கும் என்பது போன்ற போதனைகளை ஒரு பொழுதும் யாம் (அகத்திய மாமுனிவர்) கூறவிரும்பவில்லை. அப்படிக் கூறியிருந்தால் அப்படியாவது ஆலயம் செல்ல வேண்டுமே என்கிற நோக்கில்தான். அந்த வகையில் பார்க்கப் போனால் எல்லா ஸ்தலங்களுக்கும் மனிதர்கள் பார்வையில் கூறப்போனால் இந்த மண்ணுலகிலே அனைத்து இடங்களுக்கும் ஏன்? ஆழி (கடல்) தாண்டியும் கூட யாங்கள் சென்று யாங்கள் என்றால் எம் போன்ற அனைத்து சித்தர்களும் சப்த ரிஷிகளும் சென்று வழிபட்டிருக்கிறோம். வழிபட்டுக் கொண்டிருக்கிறோம். இனியும் வழிபட இருக்கிறோம். எனவே இந்த ஆலயம் ஒன்றுதான் நாங்கள் சென்ற ஆலயம் அல்லது அந்த ஆலயம் ஒன்றுதான் நாங்கள் சென்ற ஆலயம் என்று யாரும் எடுத்துச் சொல்லத் தேவையில்லை. ஏதோ அறிந்தோ அறியாமலோ ஒருவன் ஒரு லிங்கத்தையோ அல்லது பரம் பொருளின் வேறு வடிவத்தையோ வைத்து சிறு பூஜை செய்தாலும் அந்த பூஜை ஆத்மார்த்தமாக இருந்தால் அங்கும் நாங்கள் சென்று வழிபாடு செய்ய சித்தமாக இருக்கிறோம். எனவே எல்லா ஆலயங்களும் யாம் சென்ற ஆலயங்கள்தாம். இதில் எந்தவிதமான பேதமும் இல்லையப்பா.

கேள்வி: அகத்தியர் சிலா ரூபம் பிரதிஷ்டை செய்ய ஆசிகள்:

மனிதரிலே ஓரளவு பக்குவம் அடைந்த மனிதனைப் பார்த்து உனக்காக சிலை வைக்கிறோம். நீ அனுமதி கொடு. நாங்கள் எல்லாம் வணங்குகிறோம் என்றால் அவனே வெட்கப்படுவானப்பா. எம்மிடமே இது குறித்து கேட்டால் நாங்கள் என்ன பதில் கூறவது?