ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 214

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இந்த மனித சிந்தனைகளும் மனித எண்ணங்களும் காலகாலம் பெரும்பாலும் மனிதன் பட்ட அனுபவத்தைப் பொறுத்தும் உடல் வலிமை அவனின் சமகால பதவியின் நிலைமை கையிலுள்ள செல்வத்தின் அளவு இவற்றை பொறுத்தே மனித ரீதியாக மனிதனுக்கு மனிதன் அந்த எண்ணங்களும் உரு பெறுகிறது. மாற்றம் பெறுகிறது. ஒரு ஞானியின் பார்வையில் கூறுவதென்றால் மனிதன் எண்ணுகிறான் மதியால் (அறிவால்) சிந்தித்து மதியை (அறிவை) கூர்மையாக்கி விசாலமாக்கி ஆழமாக்கி நன்றாக பயன்படுத்தினால் மனிதன் நன்றாக வாழலாம் என்று. இதை நாங்கள் ஒரு பொழுதும் மறுப்பதில்லை. ஆனால் இறைவன் தந்த மதியை அறிவை பரிபூரணமாக பயன்படுத்துவதற்கு உண்டான சூழலை அவனுக்கு விதிதான் தரவேண்டும். இல்லையென்றால் கடுமையான போராட்டத்தோடு வாழவேண்டிய நிலைமையும் அறியாமையில் சிக்கி வாழ வேண்டிய சூழலும் ஏற்படும். அங்கனமாயின் எத்தனையோ குணக்கேடானவர்கள் பண்பாடற்றவர்கள் புத்தி கூர்மையில் சிறந்து விளங்குகிறார்களே?அவர்களுக்கு விதி சாதகமாக இருக்கிறதா? நல்ல குணம் கொண்ட ஒரு மனிதனுக்கு அறியாமை மதியில் அமர்ந்து விட அதனால் அவன் எடுக்கும் முடிவுகளெல்லாம் தவறாக முடிந்து அவன் துயரில் ஆழ்வதற்கு வழிவகுக்கிறதே? இதுதான் விதியின் வேலையா? என்றெல்லாம் மனிதனுக்கு ஐயம் (சந்தேகம்) எழலாம். இதை மனிதர்கள் மறுத்தாலும் ஏற்றுக் கொண்டாலும் உண்மைதான். எல்லாம் விதிதான் என்றால் மதியின் தன்மைதான் என்ன? எதற்காக மனிதனுக்கு மதி (அறிவு) தரப்பட்டிருக்கிறது. ஒரு மனிதன் முயன்றால் தன்னுடைய மதியின் ஆற்றலைக் கொண்டு கடுமையான சிந்தனையை வளர்த்துக் கொண்டு தன் வாழ்க்கையில் எதிர்படும் துன்பங்களையெல்லாம் விலக்கிக் கொள்ள இயலாதா? என்றால் தாராளமாக. அதை யாரும் செய்ய வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை. இதை வேறு வகையில் கூறப் போனால் இப்பொழுது மனிதர்களுக்கு எந்தளவு மதி இருக்கிறதோ அதே அளவு மதிதானே சில ஆண்டுகளுக்கு முன்பும் பல ஆண்டுகளுக்கு முன்பும் இருந்திருக்க வேண்டும்? இப்பொழுது மனிதன் விஞ்ஞான பூர்வமாக உணர்ந்த விஷயங்கள் ஏற்கனவே இந்த நில உலகில் (பூமியில்) உள்ளதுதான்.

இறைவன் அருளால் செப்பு சுருளுக்குள் காந்த சக்தியை பாய்ச்சினால் மின்சாரம் வரும் என்றால் இந்த விதி 1000 ஆண்டுகளுக்கும் முன்பும் பொருந்தும் அதற்கு முன்பும் பொருந்தும். ஆனால் அப்பொழுதுள்ள மனித மூளைக்கு இந்த கருத்து ஏன் எட்டவில்லை? எனவே ஏற்கனவே உள்ள விதிமுறைகள் எல்லாம் இன்னின்ன காலத்தில் இன்னின்ன மனித மூளையின் மூலமாக உலகிற்கு வரவேண்டும் என்று இதன் மூலம் தெரிய வருகிறது. அப்படியானால் நடப்பது நடந்து விட்டுப் போகட்டும். நான் ஏன் சிந்திக்க வேண்டும்? உழைக்க வேண்டும்? என்றெல்லாம் இருக்கலாமா? என்றால் அது குதர்க்க வாதத்தைக் குறிக்கும். அப்படியொருவன் எண்ணினாலும் கூட விதி அவனை இருக்க விடாது என்பது வேறு விஷயம். ஆன்மீகம் என்றால் எப்பொழுதுமே ஒரு மனிதன் அந்த ஆன்மீகத்தை தன் வாழ்க்கையோடு பொருத்திப் பார்த்து அது பொருந்தாத நிலையாக இருக்கும் பட்சத்தில் ஆன்மீகத்தை ஏற்க மறுக்கிறான். அதைப் போல மெய் ஞானத்தையும் அவன் ஓரளவு கற்ற விஞ்ஞானத்தையும் பொருத்திப் பார்த்து அவனுடைய அறிவிற்கு எட்டாத நிலையில் அவனால் எதையும் ஏற்க முடியவில்லை. நாங்கள் கூறுகின்ற கருத்தாக இருந்தாலும் இன்னும் மகான்களின் ஞானக்கருத்தாக இருந்தாலும் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றோ ஏற்றுத்தான் ஆகவேண்டும் என்றோ நாங்கள் கூறவில்லை.

ஓரளவு பாவங்கள் அற்ற நிலையில் எம்மை (அகத்திய மாமுனிவர்) நோக்கி வருகின்ற ஆன்மாக்களுக்கு வழிகாட்டி மெய் எது? மெய்யிலும் மெய் எது? என்பதை உணர்த்துவதற்காகத்தான் இறைவனின் கட்டளை எம் போன்ற (அகத்திய மாமுனிவர்) மகான்களை இந்தக் கலியில் (கலியுகத்தில்) இது போன்ற நிலையில் வாக்கினை கூற அருளாணையிடுகிறது. ஆயினும் கூட நாங்கள் என்ன கூற வருகிறோம்? எதற்கு அதனைக் கூறுகிறோம்? ஒரு வாக்கு எதற்காக உரைக்கிறோம்? ஒரு வாக்கை எதற்காக மறுக்கிறோம்? ஏன் மெளனம் காக்கிறோம்? ஏன் பின்னர் உரைக்கிறோம் என்று கூறுகிறோம்? என்பதை சற்றே கடுகளகாவது இறைவனை எண்ணி சிந்தித்துப் பார்த்தால் இறைவனே அவன் சிந்தனைக்குள் சிலவற்றை உணர்த்துவார். ஆனாலும் கூட அறியாமையின் உச்சத்தில் வாழ்கின்ற மனிதன் இதையெல்லாம் நினைத்து பார்ப்பதேயில்லை.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 213

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

யாங்கள் (சித்தர்கள்) அடிக்கடி கூறுவது போல் இறைவன் அருளால் கூறுகிறோம். தொடர்ந்த எண்ணங்களின் ஓட்டமே சிந்தனை. தொடர்ந்த சிந்தனை என்பது மனமாகும். விழிகளை மூடிக் கொண்டு ஒவ்வொரு மனிதனும் தன் மனதை உற்று நோக்கினால் அதில் எத்தனையோ ஆசா பாசங்கள் இருக்கலாம். அவற்றிலே ஏற்றத் தாழ்வுகள் இருக்கலாம். அதை விட்டுவிட்டு மேலும் பார்த்தால் என்ன தெரியும்? லோகாயம் மட்டுமே அதில் நிரப்பப்பட்டு இருக்கும். ஒன்று இல்லக் கடமை அல்லது தசக்கடமை (தொழில்) அல்லது அப்பொழுது அவன் சந்திக்கின்ற கடுமையான பிரச்சினை குறித்த சிந்தனை அல்லது எதிர்காலத்தில் வேறு ஏதாவது புதிதாக ஒரு பிரச்சனை இதனை சார்ந்து வந்துவிடுமோ? என்ற அச்சம். இது எதுவுமே இல்லாத மனிதனாக இருந்தால் பொழுதை ஆக்குவதற்கு பதிலாக போக்குகிறேன் என்று அந்தப் பொழுதை வீண் செய்வதும் அதற்காக தனத்தை வியம் (விரயம்) செய்வதுமாக ஒரு அசுரத் தனமான செயல்களில் ஈடுபடுவது. இப்படி மனதிற்கு அந்த மாபெரும் சக்திக்கு சரியான பணியை தராமல் அதன் ஆற்றலை முறைப்படுத்தி பயிர்களுக்கு அந்த மனோசக்தி எனப்படும் நீரை பாய்ச்சாமல் தேவையற்ற வெள்ளமாக வடிய விடுவதுதான் மனிதனுக்கு என்றென்றும் இயல்பாக இருந்து வருகிறது. எல்லோருக்குமே இது பெரும்பாலும் பொருந்துகிறது.

உடல் வேறு உடலில் குடிகொண்டு இருக்கும் ஆத்மா வேறு. ஆத்மா எத்தனையோ உடலுக்குள் இருந்து கொண்டு புகுந்து கொண்டு பிறவி என்ற பெயரில் வாழ்ந்து மடிந்து வாழ்ந்து மடிந்து சேர்த்த வினைகளின் தொகுப்புதான் அந்த வினைகளின் அடிப்படையில்தான் அடுத்த உடம்பு கிடைத்திருக்கிறது. அந்த உடம்போடு அந்த ஆன்மா மயக்கமுற்ற நிலையிலே தன்னை அறியாமல் வாழ்கிறது. அப்படி வாழ்கின்ற அந்த பிறவியிலும் அது பல்வேறு வினைகளை செய்கிறது. அதில் பாவமும் புண்ணியமும் அடங்குகிறது. இதிலே பாவங்களைக் குறைத்து எல்லா வகையிலும் புண்ணியங்களை அதிகரிக்க வேண்டும் என்பதுதான் மகான்களின் உபதேசமாக இருக்கிறது. இந்த புண்ணியத்தை கனவிலும் நனவிலும் ஒவ்வொரு அணுவிலும் எப்பொழுதும் சிந்தித்துக் கொண்டே கடமைகளை பற்றற்ற நிலையில் ஆற்றிக் கொண்டே உள்ளத்தில் சதா சர்வகாலம் இறை சிந்தனை மட்டும் வைத்துக் கொண்டு எதனையும் இறைவன் பார்த்தால் எப்படி பார்ப்பாரோ அந்த பார்வையில் பார்க்கப் பழகினால் மனம் நிம்மதியான நிலையிலிருக்கும். நிம்மதியான மன நிலையில்தான் மனிதனுக்கு பெரிய ஞானம் சார்ந்த விஷயங்கள் மெல்ல மெல்ல புரியத் துவங்கும். பிரச்சனைகளே இல்லாத வாழ்க்கை என்பது எக்காலத்திலும் எந்த மனிதனுக்கும் கிடையாதப்பா. பிர்ச்சனைகளை எப்படி எதிர் கொள்கிறான்? என்பதில்தான் வாழ்க்கை நிலை அடங்கியிருக்கிறது. அசைக்க முடியாத இறை பக்தி கொண்ட மனிதனுக்கும் வேறுபாடே அதிகளவு துன்பத்தை பார்க்கும் பொழுது அதனை எப்படி எதிர் கொள்கிறான்? என்பதை பொறுத்துதான். ஒரு வேளை இறைபக்தி இல்லாவிட்டாலும் தன்னுடைய அனுபவ அறிவைக் கொண்டும் தான் கற்ற கல்வியைக் கொண்டும் துன்பங்களை எதிர் கொண்டு வாழ்கின்ற மனிதன் எத்தனையோ மடங்கு மேலப்பா. இறை பக்தி இருந்தும் சோர்ந்து போகின்ற மனிதனை விட. எனவே மன சோர்வு மிகப்பெரிய பிணி. அதற்கு இங்கு வருகின்ற யாரும் இடம் தராமல் இருப்பதே சிறப்பு.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 212

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இது போல நலம் நலம் நலமே எல்லா நிலையிலும் எல்லா சூழலிலும் தொடர்ந்து கிட்டிட இறைவன் அருளால் நல்லாசிகள் இத்தருணம் இயம்புகின்றோம். இறைவன் அருளாலே மனிதர்களின் வாழ்விலே பின்னிப் படர்ந்து கிடக்கின்ற கர்ம வினைகள் பெரும்பாலும் பாவங்களே இருப்பதால்தான் அறியாமை அதிகமாக மதியிலே (அறிவிலே) படர்ந்து கிடக்கிறது. அறியாமையை விட மிகப்பெரிய துன்பம் மனிதனுக்கு வேறு எதுவுமில்லை. எல்லாம் அறிந்திருக்கிறோம் என்று அறியாத நிலையிலும் அறிந்தது போல் மனிதன் இருப்பதுதான் அறியாமையின் உச்ச நிலையாகும். அதாவது லோகாய அறிவு என்பது ஒரு நிலை. லோகாய அறிவை நன்றாகக் கைவரப் பெற்ற மனிதன் கூட பல்வேறு தருணங்களில் அந்த அறிவால் பெரிய பலனேதுமில்லாமல் துன்பத்தில் வாழ்வது உண்டு. அதே சமயம் அறிவை செயல்பட விடாமல் முடக்குவதில் ஆசைக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. அந்த ஆசைக்கு துணையாக கடுமையான பாசத்திற்கும் மிகப்பெரிய பங்களிப்பு உண்டு. ஆசையும் பாசமும் மட்டுமா அறியாமைக்கு துணை செய்கிறது?. அதோடு உணர்ச்சி நிலை மிகு உணர்ச்சி நிலை. இவை அனைத்தையுமே கொண்டுள்ள மனிதன் அதிலிருந்து தப்ப இயலாமல் தொடர்ந்து போராடிக் கொண்டே வாழ வேண்டிய நிலையில்தான் இருக்கிறான் அன்றும் இன்றும் என்றும். எனவே தான் ஒரு மனிதன் எப்பொழுதுமே இறை பக்தியோடு சத்தியத்தை விடாது மனசாட்சியோடு தொடர்ந்து தர்ம சிந்தனையோடு வாழ மேற்கூறிய அறியாமை மெல்ல மெல்ல விலகும்.

அறியாமை விலக விலகவே மனிதனுக்கு நிம்மதி பிறக்கும். அது போல் நிலையிலே மனிதன் தன்னையும் தன்னை சேர்ந்த குடும்பத்தாரையும் பாச வலைக்குள் வைத்து பார்க்கும் பொழுதுதான் என் பிள்ளை இப்படி துன்பப்படுகிறானே என் தாய் இப்படியெல்லாம் கடினப்படுகிறாளே என்றெல்லாம் எண்ணி எண்ணி ஒரு மயக்கத்தில் ஆழ நேரிடும். ஆயினும் கூட அந்த பாசம்தான் பெருமளவு குடும்பக் கடமைகளை செய்ய மனிதனுக்கு ஒருவிதத்தில் உதவுகிறது. இருந்தாலும் அதுவே அதிகமாகும் தருணத்தில் அவனை அறியாமையில் வழுக்கி விழ வைக்கிறது. அதை அப்படியே மூன்றாவது மனிதன் மீது பார்க்கும் பொழுது இரத்த சம்பந்தமில்லாத நட்போ உறவோ இல்லாத மனிதரிடம் பார்க்கும் பொழுது அப்படியெல்லாம் ஏற்படாததால் அப்படி ஏற்பட்டு ஒரு மயக்கம் கிட்டாததால் மனிதன் அதனை சாதாரணமாகப் பார்க்கிறான். அவர்களின் துன்பம் மனிதனுக்கு துன்பமாகத் தெரிவதில்லை. அதை அப்படியே இரத்த சம்பந்தம் உடைய உறவுகளோடு பொருத்திப் பார்க்க பழகிவிட்டால் அதுதான் ஞானத்தை நோக்கி செல்கின்ற பாதையாகும். அது எப்படி? சொந்த உறவுகளுக்கும் சொந்த நட்புகளுக்கும் பழகிய உறவுகளுக்கும் துன்பம் என்றால் பார்த்துக் கொண்டு இருப்பதா? என்றால் யாங்கள் அந்த பொருளில் கூறவில்லை. யாராக இருந்தாலும் துன்பம் வந்துவிட்டால் அதனை துடைக்கும் வழியை மேற் கொண்டிட வேண்டும். ஆனால் உள்ளத்தில் பாசமும் ஆசையும் அறியாமையும் வைத்துக் கொண்டு அதனை செய்யாமல் நடுநிலையோடு செய்யப் பழகினால் மனதிலே சோர்வில்லாமல் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கலாம். இந்தக் கருத்தை மனதிலே வைத்துக் கொண்டால் வாழ்வு நலமாகும் சுகமாகும் சாந்தியாகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 211

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 211

கேள்வி: தியானம் செய்யும் பொழுது மனம் அலை பாய்கிறது:

இது இயல்புதான். உன்னுடைய எண்ண ஓட்டத்தைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டேயிரு. எண்ணங்களை அடக்க முயன்றால் அது திமிறிக் கொண்டு எழும். எண்ணங்களை கவனிக்கப் பழகு. தானாகவே அனைத்தும் உன்னை விட்டு மெல்ல மெல்ல சென்று விடும். அதற்குத் தான் யாங்கள் (சித்தர்கள்) எடுத்த எடுப்பிலேயே தியானம் குறித்து உபதேசம் செய்யாமல் ஸ்தல யாத்திரை தர்மம் தொண்டு என்று கூறி அதன் மூலம் பாவங்களைக் குறைத்து பாவங்கள் குறைந்த நிலையில் ஒருவன் தியானத்தை செய்ய அமர்ந்தால் அந்த தியானம் சற்று சற்று எளிதாக வசப்படும். பொதுவாக மனிதர்கள் அறிந்திட வேண்டும். நாங்கள் இப்படி கூறுவதால் மனித விஞ்ஞானம் இதனை ஏற்றுக் கொள்ளாது என்றாலும் கூட ஓரளவு புற விஞ்ஞான அறிவும் அக மெய்ஞான அறிவும் ஓரளவு புரிந்த மனிதன் புரிந்து கொள்வான். ஏனைய மனிதர்கள் புரிந்து கொள்ள முயற்சி செய்வது ஏற்புடையது. அதாவது எத்தனையோ விஷய ஞானங்களை ஆய்வு செய்து இறைவன் அருளால் புறத்தே தன்னை வளர்த்துக் கொண்ட மனித குலம் இந்த பிரபஞ்சம் அனைத்துமே சில விதிகளுக்கு உட்பட்டு இயங்குகிறது என்பதை அடிக்கடி மறந்து விடுகிறது. பிரபஞ்சம் மட்டுமல்லாது இந்த அண்ட சராசரங்களும் பல்வேறு விதிகளுக்கு உட்பட்டே இயங்குகிறது.

இந்த விதிகளை மீறி மனிதன் எதையாவது செய்ய வேண்டுமென்றால் அதற்கும் அந்த விதிமுறைகளுக்கும் ஒரு தொடர்பும் ஒரு எதிர்சக்தியும் இருக்க வேண்டும். அந்த வகையிலே ஒரு வாகனம் சீராக ஓட வேண்டும் என்றால் அந்த வாகனம் எல்லா வகையிலும் நல்ல நிலையில் இருக்க வேண்டும். வாயு உருளைகள் வடிவம் மிகவும் சிறப்பான முறையிலும் நல்ல முறையிலும் இருக்க வேண்டும். வேகமாக செல்வதற்கென்று வாகனம் வடிவமைக்கப்பட்டால் அதற்குரிய வாயு உருளை அகமில்லாமல் இருக்க வேண்டும். உதாரணமாக அதிக வேகம் என்றால் வாகனத்தின் எடை குறைவாக இருக்க வேண்டும். அதே சமயம் அந்த வாகனம் எந்தளவிற்கு விரைவாக செல்கிறதோ அந்தளவிற்கு செல்லுகின்ற பாதையிலே வாயு உருளையால் உராய்வுத் தன்மை ஏற்படும். இந்த உராய்வு எதிர்விசையை ஏற்படுத்தி வேகத்தை மட்டுப்படுத்தும். அந்த உராய்வு தன்மையை குறைப்பதற்கென்று அந்த வாயு உருளைகள் வடிவமைக்கப் பட்டிருந்தால் அது எதிர் விளைவை குறைவாகத் தரும். அப்படி குறைக்கப்பட வேண்டுமென்றால் அதன் ஒட்டு மொத்த பாகத்திலே ஓடுகின்ற தளத்திலே மிக மிக மிக குறைவான பகுதியே அந்த வாயு உருளை படவேண்டும். அந்த அளவிற்கு அது குறைவாக படும் பொழுதுதான் குறைவான எதிர் விளைவுகள் ஏற்படும். வேகம் மட்டுப்படாது. இதையெல்லாம் தாண்டி ஓடுகின்ற ஓடுதளம் என்பது சமச்சீராக இருந்தால் நன்றாக இருக்கும் என்பது பொது விதி. அதே சமயம் வேகம் எந்தளவிற்கு முக்கியமோ அந்த வாகனத்தை சட்டென்று நிறுத்த வேண்டுமென்ற நிலை வந்தால் அந்த சமச்சீரான தளம் அதற்கு பாதகத்தை தந்துவிடும். அதற்காக சற்றே சீரற்ற ஓடுதளத்தை உருவாக்கினால் அது ஓரளவு பாதுகாப்பைத் தந்தாலும் வேகத்தை மட்டுப்படுத்தும்.

இப்படி எல்லாவகையிலும் பார்த்து அதிவிரைவாக ஓடுவதற்கென்று ஒருவகையான ஓடுதளமும் அதற்கேற்ற வாகனமும் அதில் செல்ல வேண்டும். மற்றபடி சராசரி மாந்தர்கள் (மனிதர்கள்) பயணம் செல்கின்ற அந்த பயண ஓடுதளமானது அதிக விரைவை ஏற்க வல்லாத நிலையில்தான் இருக்க வேண்டும். ஒரு வாகனம் அதன் உச்சகட்டத்தில் செல்கிறதென்றால் என்ன பொருள்? வாகனம் மட்டும் செல்லவில்லை. வாகனத்தில் செல்கின்ற மனிதர்களும் அதே வேகத்தில்தான் செல்கிறார்கள் என்று பொருள். சட்டென்று வாகனத்தை ஏதாவது ஒரு காரணத்திற்காக நிறுத்தவேண்டிய ஒரு தருணம் வந்துவிட்டால் வாகனத்தின் உள்ளே இருக்கின்ற தடையமைப்பு உள்ளேயிருக்கின்ற மனிதர்களை தடை செய்வதில்லை என்பதால்தான் சிறு விபத்துகளும் பெருவிபத்துகளும் ஏற்படுகின்றன. எப்படிப் பார்த்தாலும் தெளிவற்ற மனிதர்கள் குழப்பமான மனிதர்கள் மூடத்தனமான மனிதர்கள் இருக்கின்ற இந்த பரந்த பகுதியிலே அதிக வேகம் என்பது ஏற்புடையதல்ல. எதிர் நோக்கின்ற வேகத்தை விடவே 60 கல் வேகம் என்பதே அதிகம்தான். இப்படி குறைவாக செல்வதால் என்ன லாபம் வந்துவிடும்? என்றெல்லாம் பாராமல் பாதுகாப்பை மட்டும் கருதி வாகனத்தை இயக்குவதே எம்வழி (அகத்திய மாமுனிவர்) வரும் சேய்களுக்கு (பிள்ளைகளுக்கு) ஏற்புடையதாகும். ஏனென்றால் வாகனத்தின் பாகங்கள் பல்வேறு விதமான முறையிலே ஆய்வு செய்யப்பட்டு வருவதாக மனிதர்கள் எண்ணிக் கொண்டாலும் கூட அதிக அனலும் அதிக உராய்வும் கண்பார்வைக்குத் தெரியாத வெடிப்புகளையெல்லாம் ஏற்படுத்தி திடீர் அழுத்தத்தால் அவைகள் விலகவும் சுயகட்டுப்பாட்டை இழக்கவும் ஏற்புடையதான ஒரு சூழலில்தான் இருக்கிறது. இறைவன் கருணையும் ஒருவனின் ஜாதகப்பலனும் நன்றாக இருக்கும் வரையில் நலமே நடக்கும். எப்பொழுது ஒருவனுக்கு பாவ வினை குறுக்கே வரும்? என்பதை மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாது. எனவே இறைவனை வணங்கி அமைதியான முறையில் சாந்தமான முறையில் குறைந்த வேகத்தில் வாகனத்தை இயக்குதலே பொதுவாக அனைவருக்கும் ஏற்புடையதாகும். ஆனால் மனித மனம் இதை எந்தளவு ஏற்கும் எந்தளவு ஏற்காது என்பது எமக்குத் தெரியும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 210

கேள்வி: திமிரி (வேலூர் மாவட்டம்) ஆலயத்தில் த்வஜஸ்தம்பம் (கொடிமரம்) எவ்வித இடையூறுமின்றி ஸ்தாபிதம் செய்யப்படவும் தீர்த்தத்தின் மகிமை பற்றியும் அந்த குளத்தில் நீராடினால் என்ன பயன்? என்றும் அந்த குளத்திற்கு கரை கட்டும் வேலை விரைவில் நடைபெற தங்கள் ஆசியும் மேலும் இந்த ஆலயத்தின் சிறப்பை இந்த இறைவனின் சிறப்பைப் பற்றியும் சொல்லி அருள வேண்டும்?

இறைவன் பெயர்: அருள்மிகு ஸ்ரீ சோம நாத பாஷாண லிங்கேஸ்வரர்.

திருக்கோவில் உள்ள இடம்: திமிரி வேலூர் மாவட்டம்.

இறைவனின் கருணையைக் கொண்டு முன்பே அன்னவனுக்கு சிலவற்றை இயம்பியிருக்கின்றோம். இறைவன் விருப்பத்திற்கேற்பவே அனைத்தும் நடந்து கொண்டேயிருக்கிறது. எனவே தக்க காலத்தில் த்வஜஸ்தம்பம் (கொடிமரம்) சிறப்பாய் அமையும். ஏன் இத்தனை தடைகள் வருகின்றன. ஏன் ஏக த்வஜஸ்தம்பம் ஆயத்தம் செய்தும் அது பலனளிக்காமல் போனது? என்பதற்கெல்லாம் எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. ஆயினும் கூட அன்னவனே அறிவான். ஐயன் (சிவபெருமான்) லிங்க ரூபமாய் வெளிப்பட்டு பல ஆண்டுகள் பூர்த்தியான பிறகே ஏகாந்த ஆலயமும் கலச விழாவும் காண நேர்ந்தது. அதுவும் இறை விருப்பமே. எனவே த்வஜஸ்தம்பமும் தீர்த்த நிலையும் விரைவில் இறைவன் அருளால் நன்றாக தம்மை அமைத்துக் கொள்ளும். இது போல நிலையிலே பொதுவாய் மனிதன் இயற்கை சார்ந்த எந்த விஷயங்களை பயன் படுத்தினாலும் அதனை ஊறு (இடையூறு) செய்யாமல் பயன்படுத்தினால் அது என்றென்றும் அவனுக்கு தொடர்ந்து நலத்தை நல்கும். ஆனால் ஒரு மனிதன் இயற்கை சார்ந்த எந்த விஷயங்களையும் குறிப்பாய் நீர் நிலைகளை பயன்படுத்தும் பொழுது அதனை முறையாக பயன்படுத்தாமல் முறை தவறி பயன் படுத்துவதால் நீர் தோஷத்திற்கு ஆளாகி நீரால் அதிக பாதிப்பு ஒன்று நீர் குறைந்து பாதிப்பு அல்லது நீர் அதிகமாகி பாதிப்பு வருகிறது.

திமிரி ஆலயம் என்று இல்லை. எந்த ஆலயத்திலும் தீர்த்தம் என்பது மிக மிக புனிதமானது உயர்வானது. அதனைப் போற்றிப் பாதுகாக்க வேண்டியது மனிதனின் கடமை. பல ஆலயங்களில் தீர்த்தம் இருந்த இடமே இல்லாமல் போயிருக்கிறது. இன்னொன்று தீர்த்தம் இருந்தாலும் அதனை பயன்படுத்த முடியாத நிலையில் அதனை மனிதன் வைத்திருக்கிறான். எனவே அந்த தீர்த்த தடம் நன்றாய் சுத்தி செய்யப்பட்டு பூரணத்துவம் பெற்றாலும் சிறிதளவு நீரையெடுத்து தெய்வ காரியங்களுக்கு அபிஷேகங்களுக்கு பயன்படுத்துவதே இத்தருணம் ஏற்புடையது. மனிதர்கள் அதிலே நீராடுவதோ வேறு செயல்கள் செய்வதோ ஏற்புடையது அல்ல. அப்படியானால் அடுத்ததொரு ஐயம் வரும். ஒரு மனிதன் இந்த தீர்த்தத்தில் இறங்கி நீராடினால் அதனால் அந்த தீர்த்தம் மாசுபட்டால் அது எப்படி புனித தீர்த்தமாகும் என்று. உண்மையில் தெய்வீகம் சார்ந்த எதனையும் மனிதனால் மாசுபடுத்த முடியாது. ஆனால் மனிதனுக்கு தரவேண்டிய நல்விஷயங்களையெல்லாம் இறைவன் சமயத்தில் மறை பொருளாக வைத்திருக்கிறார். அந்த சூட்சுமத்தை புரிந்து கொள்ளாமல் மனிதன் அதனை தவறாக கையாளும் பொழுது கிடைக்க வேண்டிய நற்பலன் கிட்டாமல் வேறு வேறு பலன்கள் அவனுக்கு வந்துவிடுகிறது. எனவே தீர்த்தம் பாதிக்கப்படும் என்று நாங்கள் அந்த நோக்கில் கூறவில்லை. அவ்வாறு நீராடாமல் இருப்பது தற்சமயம் அங்கு வரும் பக்தர்களுக்கு நன்மையைத் தரும். வேண்டுமானால் தூய சிந்தனையுடன் தூய தேகத்துடன் அந்த தீர்த்தத்தை எடுத்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யும் நோக்கிலே பயன்படுத்தலாமே தவிர மனிதர்களுக்கு அதனை தற்சமயம் பயன்படுத்துவது ஏற்புடையது அல்ல. அந்த தீர்த்தம் நன்றாய் பொலிவு பெற்ற பிறகு அந்த தீர்த்தத்தையும் அதுபோல் திமிரி ஐயன் இருக்கும் அந்த தீர்த்த நிலைக்கு அந்த தீர்த்தத்தையே வைத்துக் கொள்ளலாம்.

அருள்மிகு ஸ்ரீ சோம நாத பாஷாண லிங்கேஸ்வரர் கோவிலைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 209

அகத்தியர் மாமுனிவரின் பொதுவாக்கு

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் யாம் அடிக்கடி எமை (அகத்திய மாமுனிவர்) நாடுகின்ற மாந்தர்களுக்கு கர்ம வினைகளின் தாக்கம் குறித்து எடுத்து இயம்பிக் கொண்டே இருக்கிறோம். இந்த பாவவினைகள் ஒரு மனிதனை சுற்றி பின்னிப் படர்ந்து கொண்டே இருக்கும் அந்த நிலையிலே ஒன்று நல்லதை செய்ய மனம் விரும்பாது. அடுத்தாக மேலும் தவறு மேல் தவறு செய்து பாவங்களை சேர்த்துக் கொள்ளவே தூண்டும். ஆனால் அந்த பல்வேறு பாவங்களிலும் ஏதாவது ஒரு புண்ணியம் (அவன்) இறை வழியில் வர வேண்டும் என்று இருக்கும் பட்சத்திலே அந்த ஆத்மாக்கள் மட்டுமே பிறக்கும் தருணம் ஓரளவு மனசாட்சிக்கு கட்டுப்பட்டு இறை ஆலயங்களை தரிசித்து இயன்ற தர்மங்களை செய்து புண்ணியத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். வெறும் தனத்தை சேர்த்துக் கொண்டு அதனால் ஆவது என்ன? என்ற ஒரு முடிவுக்கு வரும். ஆனால் அந்த நிலையில் வந்தாலும் மனம் தடுமாறும். பிறரை ஒப்பிட்டுப் பார்த்து அவர்களெல்லாம் இது போல் எதுவும் செய்யாமல் நன்றாக வாழ்கிறார்களே? நேற்றை விட இன்றைக்கும் இன்றை விட நாளைக்கும் பொருளாதாரத்தில் உயர்ந்து காணப்படுகிறார்களே? நாம் அவ்வாறில்லாமல் கடவுள் பிறவி தர்மம் என்று ஒருவேளை தவறாக புரிந்து கொண்டு செல்கிறோமோ என்றெல்லாம் குழப்பம் வரும்.

இது போன்ற தருணங்களில் எம் (அகத்திய மாமுனிவர்) வழியில் வருகின்ற மனிதர்கள் பொறுமையோடும் திட சிந்தனையோடும் இருக்க கற்றுக் கொள்ள வேண்டும். இந்த நிலையிலே ஒரு மனிதனின் வினைப் பயனை ஒட்டியேதான் வாழ்வு முழுவதும் நடக்கும் என்றாலும் யாம்(அகத்திய மாமுனிவர்) அந்த வினையில் வேறு வகையான மாற்றங்கள் செய்கிறோமோ இல்லையோ தொர்ந்து இறை வழியில் வருவதற்குண்டான வலுவை தரத்தான் நாங்கள் (சித்தர்கள்) எமை நாடுகின்ற மாந்தர்களுக்கு உதவுகிறோம். ஆனால் நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது. எமை நாடுகின்ற மனிதர்கள் மனோரீதியாக வல்லவனாகவும் இருக்க வேண்டும். அது எங்ஙனம் என்றால் தன்னை சுற்றியுள்ள மனிதர்களை கூர்ந்து கவனிக்க வேண்டும். வெறும் தவறுகளையே செய்து கொண்டு சுயநலமாய் வாழ்ந்து கொண்டு தனம் தான் பிரதானம் என்று வாழ்கின்ற மனிதர்களுக்கே அத்தனை தன்னம்பிக்கையும் தைரியமும் இருக்கும் பொழுது நிரந்தரமில்லாத ஒரு வாழ்வை நோக்கி செல்கின்ற அந்த மனிதனே திடமாக இருக்கும் பொழுது இறைவனை நோக்கி செல்கின்ற ஒரு மனிதன் திடமாக இருக்க வேண்டாமா? சிறிய கஷ்டம் வந்து விட்டாலும் கூட சித்தர்களை நம்பினோம். சித்தர்கள் இப்படி செய்து விட்டார்களே என்று அங்கலாய்ப்பது என்பது எம்(அகத்திய மாமுனிவர்) வழியில் வருகின்ற மனிதர்களுக்கு இயல்பாகிக் கொண்டே இருக்கிறது. அல்லது இவையெல்லாம் நடக்கப் போகிறது என்று சித்தர்களுக்குத் தெரியாதா? ஏன் எச்சரிக்கைவில்லை? என்றும் கேட்கிறார்கள்.

எதைக் கூற வேண்டும், எதைக் கூறக் கூடாது என்று நாங்கள் மட்டும் முடிவெடுப்பதில்லை. இந்த இந்த ஆத்மாக்களுக்கு இதை இதை உணர்த்து என்று இறை கட்டளையிடுகிறது. அந்த கட்டளைக்கு ஏற்பவும் எமை நாடுகின்ற மனிதனின் மனோ திடத்திற்கும் பக்குவத்திற்கும் ஏற்பவும்தான் நாங்கள்(சித்தர்கள்) வாக்கை பகிர்ந்து கொண்டே இருக்கிறோம். ஆக கடுமையான ஊழ்வினை தோஷம் ஒரு மனிதனை பாடாய் படுத்துகிறது. எந்த தொழில் செய்தாலும் நஷ்டம் வருகிறது. அந்த நிலை இன்னும் அவனுக்கு 20 ஆண்டுகள் இருக்கும் என்று வைத்துக் கொள்வோம். அந்த நிலை உள்ள ஒரு மனிதன் எமை நாடுகிறான். இன்னும் 20 ஆண்டுகள் உனக்கு கஷ்டம் தான் நீடிக்கும் என்று எமது வாக்கால் கூற இயலுமா? அவனுக்கு இருக்கின்ற கர்ம வினைகளை எப்படி குறைக்க வேண்டும்? எந்த வினையை எப்படி மாற்ற வேண்டும் என்றெல்லாம் நாங்கள் அனுமானம் செய்து இறையிடமும் உத்தரவைக் கேட்டு அதற்கு ஏற்றாற் போல் நாங்கள் செய்து கொண்டே இருக்கிறோம்.

அந்த நிலையிலே அது போல மனிதன் வரும் பொழுதெல்லாம் இதை செய் அதை செய் என்றும் சில சமயங்களில் 3 மாதங்கள் ஆகட்டும் 6 மாதங்கள் ஆகட்டும் முன்பு உரைத்த வழிபாட்டை செய் என்றும் கூறி அவனுடைய கர்ம வினையை குறைக்க முயற்சி செய்கிறோம். ஆனால் எமது வாக்கையோ வாக்கின் நுட்பத்தையோ சரிவர புரிந்து கொள்ள முடியாத நிலையிலே மனிதன் குழம்புகிறான். இங்கு வந்து விட்டாலோ சித்தர்களின் வாக்கை கேட்டு விட்டாலோ மறுதினமே எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து விடும் என்று எண்ணுகிறான். தீரலாம் தீருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அந்த அளவிற்கு ஒரு ஆன்மா தன்னை தயார் செய்து தகுதி படைத்திருக்கிறதா? என்று பார்க்கவேண்டும். பொறுமை இருக்க வேண்டும். எனக்கு இப்படியெல்லாம் சோதனை வருகிறது. நான் நம்புகிறேன். என் தாய் தந்தை இதை (ஜீவநாடி) நம்பவில்லை. என் மனைவி நம்ப மறுக்கிறாள். என் குழந்தைகள் நம்பவில்லை. அவர்களையும் உங்கள் வழியில் மாற்றுங்கள் என்று கோரிக்கை வைப்பதும் நகைப்புக்குரியது (சிரிப்புக்குரியது). யாருக்கு இதில் எப்பொழுது ஆர்வம் வரவேண்டும்? யாருக்கு இந்த வழி ஏற்புடையது என்றெல்லாம் பிறக்கும் பொழுதே விதி தீர்மானித்து விடுகிறது. அதைத் தாண்டி எம் (அகத்திய மாமுனிவர்) வழியில் வரக்கூடாத மனிதனை வேறு வழியில்லாமல் இங்கு வருகின்ற மனிதன் அழைத்து வந்தாலும் திசை மாறிதான் செல்வான்.

யாரையாவது அழைத்து வந்து இவன் எனக்கு வேண்டிய மனிதன். நல்ல அறப்பணிகள் செய்கிறான். இவனுக்கு வாக்கைக் கூறுங்கள் குருதேவா என்றால் அந்த மனிதனின் அந்த பிறவியை மட்டும் ஒரு சில கால பழக்கம் மட்டுமே இங்கு வருகின்ற மனிதனுக்குத் தெரியும். ஆனால் அவனின் ஆதியோடு அந்தரங்கம் அனைத்தும் எமக்குத்(அகத்திய மாமுனிவர்) தெரியும். அவனுக்கு வாக்கு உரைப்பதால் எவ்விதமான பலனும் இல்லை என்பது எமக்குத் தெரியும். அது மட்டுமல்லாது பல்வேறு மனிதர்கள் மூடர்களாகவே பிறந்து மூடர்களாகவே வாழ்ந்து மூடர்களாகவே இறக்கிறார்கள். அது அவனின் கர்மவினை. அதாவது அவர்களை பொறுத்தவரை புறத் தோற்றம் என்பது மிக முக்கியம். ஒரு ஆன்மீக அமைப்புக்கு செல்ல வேண்டும் என்றால் அந்த ஆன்மீக அமைப்பு உலகியல் ரீதியாக பலரும் அறிந்த ஒன்றாக இருக்க வேண்டும். இவன் உலகியல் ரீதியாக யாரையெல்லாம் மதிக்கிறானோ அவர்கள் எல்லாம் அங்கு வந்து போக வேண்டும். அந்த புறத் தோற்றம் ஜொலிக்க வேண்டும். அங்கு அவன் யாரை சந்திக்கிறானோ எந்த சந்தியாசியை சந்திக்கிறானோ அந்த போதகன் மிக உயர்ந்த இடத்திலே அமர்ந்து கொண்டு மிகவும் ஆணவத்தோடு நடந்து கொண்டாலும் அவனை சுற்றி பல்வேறு மனிதர்களும் இருக்க வேண்டும். அப்பேற்பட்ட மனிதனைதான் ஞானி என்றும் இறையருள் பெற்றவன் என்றும் பல்வேறு மனிதர்கள் நம்புகிறார்கள். தனம் இல்லாமலும் ஒரு கிழிந்த குடிசையில் அமர்ந்து கொண்டும் ஒரு அழுக்கு துணியை சுற்றிக் கொண்டும் யாராவது ஒருவன் போதனை செய்தால் யாராலும் அந்த ஞானியை அடையாளம் காட்ட முடியாது. ஞானிகளும் தன்னை நாடி வருகின்ற மனிதர்கள் ஆயிரக்கணக்கில் வர வேண்டும் என்று எண்ணுவதில்லை. ஒரு சிலர் வந்தாலும் உண்மையைப் புரிந்து கொண்டவர்கள் வந்தால் போதும் என்று என்றுதான் எண்ணுகிறார்கள்.

அது போல்தான் இந்த ஜீவ அருள் ஓலையும். இது எல்லோருக்கும் ஏற்றது அல்ல. இதைப் புரிந்து கொள்வதற்கும் ஒரு மனிதனின் ஜாதகத்தில் சில ஜாதக பலன்கள் இருக்க வேண்டும். குறைந்த பட்சம் லக்னத்தை சுபகிரகங்கள் பார்க்கவேண்டும். அதிலும் குரு பார்க்க வேண்டும். (இவ்வாறு) இல்லாத மனிதர்களை எத்தனை முறைதான் அழைத்து வந்தாலும் போராடி எடுத்து கூறினாலும் இங்கு அமர்ந்து நல்ல பிள்ளை போல் கேட்டு விட்டு பிறகு வெளியே சென்று இவையெல்லாம் ஏற்புடையதல்ல. இதையெல்லாம் நம்பமாட்டேன் என்று கூறிவிட்டு எங்கு சென்றால் ஏமாறுவானோ அங்கு சென்று தான் ஏமாறுவான். இவையெல்லாம் அவனவன் கர்மவினை என்று எடுத்துக் கொண்டு இங்கு வருகின்றவர்கள் அமைதியை கடைபிடித்து எமது வழியில் வர நல்லாசிகள் கூறுகிறோம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 208

கேள்வி: தண்டபாணி என்று சொல்லப்படுவதன் பொருள்:

இறைவன் அருளால் தண்டமும் அங்கே ஒரு ஆயுதமாக பயன்படுகிறது. அன்பை போதிக்கின்ற மகான்களும் ஞானிகளும் ஆயுதம் வைத்திருப்பார்களா? அப்படியிருக்க அன்பே வடிவான கருணையே வடிவான இறைவன் கையில் ஆயுதம் இருக்குமா? அப்படியல்ல. இறைவன் கையில் ஆயுதத்தை வைத்ததின் மர்மமும் சூட்சுமமும் என்ன? மனிதனுக்கு ஒரு பாதுகாப்பு. ஒரு காவலன் கையில் இருக்கின்ற ஆயுதம் மனிதனுக்கு அச்சத்தை தராது ஏன்? அது சமூகத்தைக் காப்பதற்காக அவனுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பு அதிகாரம். நாட்டை பாதுகாக்க ரணகளத்தில் பணியாற்றுகின்ற மனிதரிடம் ஆயுதம் இருக்கிறது. அந்த ஆயுதத்தை யாரும் அச்சத்தோடு பார்ப்பதில்லை. ஆனால் ஒரு கள்வன் கையில் ஆயுதம் இருந்தால் அச்சத்தோடு பார்க்கிறார்கள். எனவே ஆயுதம் என்பது பொதுவாக பார்த்தால் அது அஃறிணை. ஆனால் யாரிடம் இருக்கிறது? என்பதை பொறுத்துதான் அதன் பலனும் பலாபலனும். ஆனாலும்கூட இறைவன் கையில் ஆயுதம் இருப்பது அறியாமையில் இருக்கின்ற மனிதனுக்கு உன்னை இறைவன் பாதுகாப்பார். இறைவன் பராக்ரமசாலி பலசாலி. உலகிலுள்ள சக்திகளுக்கெல்லாம் சக்தி என்பதை புரிந்து கொள்ளவே இறைவனுக்கு பலவிதமான கரங்களும் (கைகளும்) சிரங்களும் (தலைகளும்) கொடுக்கப்பட்டன. ஆனால் அப்படிதான் இறைவன் இருக்கிறாரா? இல்லை. நினைத்தவர் தம் மனதிலே எப்படி நினைக்கிறார்களோ அப்படி காட்சி தரக்கூடிய நிலையில்தான் பரம் பொருள் இருக்கிறது.

எனவே பழனி முருகனிடம் தண்டம் ஆயுதமாக இருப்பதன் மர்மமே பொதுவாக முருகனுக்கு எது ஆயுதம்? வேல் ஆயுதம். அந்த வேல் மனிதன் கையில் இருக்கின்ற வேல் அல்ல. இந்த வேல் ஆழமாக இருக்கும். அகலமாக இருக்கும். நீளமாக இருக்கும். குளுமையாக இருக்கும். இது ஞானவேல். அன்னை சக்தி தந்ததினால் சக்திவேல் என்றாலும் அது முழுக்க முழுக்க ஞானத்தை தரக்கூடிய வேலாகும். இரத்தின வேல் என்று கூட வேலிலே ஒருவகை இருக்கிறது. வைர வேலும் இருக்கிறது. சில வகை தோஷங்களை வைரம் போக்கும். சில வகை தோஷங்களை வைரம் தரும். வைர வேல் தரிசனத்தைப் பார்த்தாலே மனிதர்களுக்கு சில வகை தோஷங்கள் நீங்கும். சில முருக ஆலயங்களிலே வைர வேல் தரிசனம் என்பது இருக்கிறது. ஆக இந்த வேலானது ஞானத்தைக் குறிக்கிறது. இப்பொழுது இவள் கேட்டாளே பாசத்திலிருந்து பந்தத்திலிருந்து உலக மாயையிலிருந்து எவ்வாறு விடுபடுவது? என்று இவற்றையெல்லாம் அறுக்கின்ற ஆயுதம்தான் தண்டாயுதம்.

ஆக மனிதனுக்கு யார் எதிரி? என்றால் புறத்தே இருக்கின்ற மனிதன் எதிரி அல்ல. அவன் மனதிலே விளையக் கூடிய களைகள் பதர்கள் தேவையற்ற எண்ணங்கள் சபலங்கள் கீழான எண்ணங்கள் இவற்றையெல்லாம் விட்டுவிட முடியாமல் மனிதன் தவிக்கிறான். தடுமாறுகிறான். இவற்றையெல்லாம் அடித்து நொறுக்கக்கூடிய ஆயுதமே தண்டாயுதம் வேலாயுதம். இது போன்ற இறையுடன் இருக்கக்கூடிய ஆயுதம் அசுரர்களை அழிப்பதாக புராணங்கள் கூறுவதைக் கொண்டு அசுரர்கள் என்றால் எங்கோ புறத்தே இருக்கிறார்கள். கோரப் பற்களோடும் மிகப்பெரிய பயமுறுத்தும் கண்களோடும் இருக்கிறார்கள். கருகரு என்று வருவார்கள். மனிதர்களை மிரட்டுவார்கள் என்று எண்ணுகிறார்கள். அந்த அசுரர்களைக்கூட மனிதர்கள் சமாளித்துவிடலாம். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கின்றானே பொறாமை எனும் அசுரன் காமம் எனும் அசுரன் சபலம் எனும் அசுரன் வேதனை எனும் அசுரன் விரக்தி எனும் அசுரன் கோபம் எனும் அசுரன் இவற்றைதான் மனிதனால் விரட்ட முடியாது. இவற்றை விரட்டக்கூடிய ஆயுதம் தண்டாயுதம். அந்த தண்டு முதுகிலே மையப் பகுதியில் இருக்கும். அது முதுகுத்தண்டு. இது தாமரையின் மையத்திலே இருக்கிறது. அது தாமரைத்தண்டு. தண்டு என்றாலே பொதுவாக அதன் பொருள் மையம். அங்கே தண்டம் என்பது மனிதரிடம் இருக்கக் கூடிய எல்லா வகையான எதிரான குணங்களையும் நீக்கக்கூடிய ஒரு மையம். மனிதனுக்கு மையம் எது? புருவ மத்தி. அந்த புருவ மத்தியை நோக்கி ஒரு மனிதன் சிந்தனை செய்தால் சர்வகாலமும் புருவ மத்தியை கவனித்துக் கொண்டே வந்தால் அவனுடைய சிந்தனை ஒழுங்குபடும். நேர்படும் நிரல்படும் உறுதிபடும். எனவே மனிதனுக்கு மையம் புருவ மத்தி. அங்கே தண்டு மையம். அந்த மையத்தை நோக்கி இவன் சென்றால் இவன் மையம் சரியாகும் என்பதன் பொருள்தான் தண்டாயுதமாகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 207

கேள்வி: கெளபன தீர்த்தத்தைப் பற்றியும் கெளபனத்தைப் பற்றியும் சொல்லி அருளுங்கள்:

நிர்வாண தீட்சை வேண்டும். இதுபோல பரிபூரண ஞான நிலை பல நூறு பல ஆயிரம் பல கோடி பிறவிகளுக்கு பிறகுதான் அந்த பாக்கியம் இருக்கும் என்கிற ஆத்மாக்கள் ஏதாவது ஒரு சிறு துளி புண்ணியத்தின் பலனாக ஏதாவது ஒரு குருவை நாடி தீட்டை பெற்றாலோ அல்லது ஜீவ அருள் ஓலை (ஜீவநாடி) மூலமாகவோ வேறு ஏதாவது வழியிலே இதுபோல் மகான்களை சந்தித்து ஆசி பெறுவதும் அது போன்ற வழியில் செல்வதற்குண்டான அந்த ஆசியை தருவதும்தான் நீ கூறிய அந்த கெளபீனத்தின் மகிமையாகும். யாருக்கு அது கிடைத்தாலும் அதன் மகிமையை புரிந்து உள்ளன்போடு எவன் போற்றுகிறானோ அவனுக்கு ஞான வழியின் கதவுகள் மிக எளிதாக திறக்கும்.

கேள்வி: அன்னசேவையையும் அபிஷேகத்தையும் முருகப்பெருமான் ஏற்றுக் கொண்டாரா ஐயனே?

இறைவன் அருளால் முருகப்பெருமான் அருளாசி தந்துதான் போகன் (போகர் சித்தர்) வந்தான் என்று நாங்கள் மீண்டும் கூறுகிறோம். தொடர்ந்து இது போன்ற பல்வேறு பூஜைகளை செய்வதோடு தமக்குள் இருக்கின்ற அபிப்ராய பேதங்களையெல்லாம் மறந்து கருத்து வேறுபாடுகளையெல்லாம் மறந்து தகாத மனிதர்கள் தகாத வார்த்தைகளைக் கூறும் பொழுது அதைக் கேட்கின்ற மனிதன் சினம் கொண்டு எதனையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்றெல்லாம் செய்து விடாமல் இன்னும் இன்னும் பல்வேறு உள்ளங்கள் ஒன்று சேர்ந்து ஒற்றுமையோடு ஒருவர் கருத்தை ஒருவர் தெளிவாக புரிந்து கொண்டு பணியாற்ற வேண்டும். இங்கே இறை ஆணையும் சித்தர்களின் வழி காட்டுதலும் முக்கியம். அந்த செயல் நல்லவிதமாக நடக்க வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தோடு தொடர்ந்து அனைவரும் ஒன்றுபட்டு செய்ய நல்லாசி கூறி மீண்டும் தொடர்ந்து பல்வேறு பூஜைகளும் புண்ணியகாரியங்களும் அனைவருமே செய்ய மீண்டும் நல்லாசிகள் ஆசிகள் என்று கூறி சுபம் என்று பூர்த்தி செய்கிறோம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 206

அகத்தியர் மாமுனிவர் பொது வாக்கு:

இன்று மதியம் தான் அன்னவனுக்கு ஒரு காதையை (கதை) நினைவூட்டினோம். அன்னவனுக்கு கூறிய கதையை இன்னவன் பொருட்டு அனைவருக்கும் நினைவூட்டுகிறோம். அது அனைவரும் அறிந்த கதைதான் என்றாலும் மீண்டும் நினைவூட்டுகிறோம்.

ஒருமுறை அசுர சக்திகள் (தீயவர்கள்) எல்லாம் சேர்ந்து மாநாடு போட்டன. அந்த காலத்திலே தீடீரென்று அதர்மங்கள் குறைந்து தர்மம் தலை தூக்கி விட்டது. இதை அசுர சக்திகளால் தாங்க முடியவில்லை. அசுர சக்திகளுக்கு எப்பொழுதும் கொண்டாட்டம் என்றால் இப்பொழுது பூமி இருப்பது போல் இருந்தால்தான் அசுர சக்திகளுக்கு (தீயவர்களுக்கு) கொண்டாட்டம். அங்ஙனம் இல்லாமல் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் திடுமென்று புவியெங்கும் தர்மம் தழைத் தோங்குகிறது. மனிதர்கள் அனைவரும் சாத்வீகமாக மாறிவிட்டார்கள். எல்லோரும் தானுண்டு தன் வேலையுண்டு என்று அவரவர் கடமையை செய்வதும் இல்லாதவர்களுக்கு இருப்பவர்கள் வலிய சென்று உதவிகள் செய்வதும் ஒரு வேளை உதவி செய்தாலும் அதை பெறுகின்ற நிலையில் யாரும் இல்லாத நிலைமையும் உருவாக அசுர சக்திகளுக்கெல்லாம் (தீயவர்கள்) வருத்தம் வந்துவிட்டது. நம் போன்ற அசுர சக்திகளுக்கு புவியில் வேலை இல்லாமல் போய் விடுகிறது என்று எண்ணி கூட்டம் போட்டு என்ன செய்யலாம் என்று எண்ணும் பொழுது ஒரு அசுர சக்தி எழுந்து நான் சென்று மனிதர்களை குழப்புகிறேன் திசை மாற்றுகிறேன் அவர்களை தவறான வழிக்கு திருப்புகிறேன் என்று பேசியது. உன்னால் முடியுமா என்று கேட்டது தலைமை அசுர சக்தி என்னால் முடியும் என்றது சிறிய அசுர சக்தி.

அந்தப் பகுதியிலே அது எந்த நாட்டை சேர்ந்திருக்கிறதோ அதில் மிகுந்த நல்லவன் என்று கருதப்பட்ட ஒருவனை சென்று பார்த்தது. அந்த மனிதன் அன்றாடம் எழுவதும் இறைவனை வணங்குவதும் தன் கடமைகளை நேர்மையாக ஆற்றுவதும் பிறருக்கு உதவி செய்வதும் இன்னுரையாக பேசுவதுமாக வழக்கம் கொண்டவன். இந்த சிறிய அசுர சக்தி சாதுர்யமாக நுழைந்து அவனுக்குள் மனசாட்சியாக கலந்து அவனைக் கேட்க ஆரம்பித்தது. ஏ மூடனே இத்தனை ஆண்டு காலம் இறைவனை வணங்குகிறாயே? உனக்கு ஏதாவது கிடைத்ததா? எத்தனையோ தர்மங்கள் செய்தாயே? உனக்கு என்ன பலன் கிடைத்தது? இதையெல்லாம் சேர்த்து வைத்திருந்தால் நீ இன்றைக்கு மிகப் பெரிய செல்வந்தனாகி இருக்கலாமே? ஏன் இப்படி காலத்தை வீணாக்கிவிட்டாய் என்றெல்லாம் வினா எழுப்ப அவனும் குழப்பத்தில் நான் என்ன செய்வது என்று கேட்க இன்றிலிருந்து தர்மத்தை நிறுத்து. ஆலயம் செல்லாதே. இறைவனை வணங்காதே. அப்பொழுதுதான் நீ முன்னேறலாம் என்று அந்த அசுர சக்தி துர்போதனை செய்ய அவனும் குழப்பத்தில் ஆழ்ந்து விட்டான்.

அன்றிலிருந்து இறைவனை வணங்கவும் தவம் செய்யவும் ஜபங்கள் செய்யவும் பிராத்தனை செய்யவும் வேண்டாம் என்று முடிவெடுத்து தர்மம் செய்வதையும் நிறுத்திவிட்டான். இரண்டு தினங்கள் அவனை கவனித்து விட்டு அந்த சிறிய அசுர சக்தி உற்சாகத்தோடு மேலே சென்றது. சென்று தன் மற்ற இனங்களை பார்த்து நான் எப்படி ஒருவனை குழப்பி விட்டேன் தெரியுமா? இதே போல் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனிதனை குழப்பினால் போதும். புவியில் மீண்டும் தீய சக்திகள் தலையெடுக்கும் என்று கூற அப்பொழுது தலைமை அசுர சக்தி பலமாக சிரித்து. நீ ஏதோ அவனை கெடுத்து விட்டதாக எண்ணியிருக்கிறாய். ஆனால் நீ செய்தது அவனுக்கு மிகுந்த நன்மையைத் தந்துவிட்டது. என்ன நடக்கிறது என்று கவனி என்று சொல்ல இந்த அசுர சக்திக்கு ஒன்றும் புரியவில்லை. அவன்தான் ஆலயம் செல்லவில்லையே? வேறென்ன வேண்டும் என்று கேட்க அவன் மனதை கவனி அதற்கு இறைவன் தந்த அருளாசியை கவனி என்று சொல்ல தன் அசுர பலத்தால் அவனை கவனிக்கும் பொழுதுதான் அனைவருக்கும் புரிய வருகிறது. அவன் ஆலயம் செல்லவில்லை. இறைவனை வணங்கவில்லை. பிராத்தனை செய்யவில்லை. தர்மம் செய்யவில்லை. ஆனால் அவன் எண்ண எண்ணுகிறான். ஐயகோ ஆலயம் செல்ல முடியவில்லையே? அடடா இன்று தர்மம் செய்யவில்லையே? அடடா இன்று மந்திரம் சொல்லவில்லையே? அடடா இன்று பூஜை செய்யவில்லையே? செய்திருக்கலாமே செய்திருக்கலாமே என்று. அவன் ஆலயம் சென்றிருந்தால் அவன் ஆலயத்தில் இருக்கும் அந்த பொழுதில் மட்டும்தான் இறைவனை எண்ணியிருப்பான். பூஜை செய்திருந்தால் அந்த நாழிகையில் மட்டும்தான் இறைவனை எண்ணியிருப்பான். ஆனால் அன்று முழுவதும் வேறு எந்த வேலை செய்தாலும் பூஜை செய்யவில்லையே பூஜை செய்யவில்லையே என்று சதா சர்வகாலம் 60 நாழிகையும் (ஒரு நாள்) இறைவனை எண்ணத் தொடங்கிவிட்டான். நீ ஏதோ அந்த மனிதனை தவறான வழியில் திசை திருப்புவதாக எண்ணி ஏதோ ஒரு சில நாழிகை பூஜை செய்த மனிதனை 60 நாழிகையும் (ஒரு நாள்) இறைவனை எண்ண வைத்து விட்டாயே என்று தலைமை அசுர சக்தி சிறிய அசுர சக்தியை பார்த்து கூறியது.

இந்த கதையை எதற்காக உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டுமென்றால் நான் சிறப்பாக செய்யவில்லை. இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம் என்று எண்ணும் பொழுதே அந்த பூஜை பூர்த்தியடைந்து விடுகிறது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 205

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

மூத்தோனை வணங்கு. (மூத்தோன் என்பவர் வினாயகர்) வணங்கி பின் பயணம் துவங்கு. மூத்தோனை வணங்கு. வணங்கி வணங்கி உன் தடைகளை அகற்று. மூத்தோனை வணங்கு. வணங்கி வணங்கி உன் பாவ கர்மாவை அகற்று. மூத்தோனை வணங்கு. வணங்கி வணங்கி உன் செயல் யாவும் ஜெயமாகும் என்ற நினைப்புக்கு ஆளாகு. மூத்தோனை வணங்கு. வணங்கி வணங்கி உன் குறையெல்லாம் அகற்றிக் கொள். மூத்தோனை வணங்கு மூத்தோனை வணங்கு என்று நாங்கள் (சித்தர்கள்) எம் முன் அமர்பவன் இளையானோக இருந்தாலும் மூத்தோனை இருந்தாலும் கூறுகிறோமே ஏன்? மூத்தோனை வணங்கு. மூத்தோனை வணங்கு என்றால் அங்கு மூப்பை குறிப்பதல்ல. அது மூப்புக்கெல்லாம் மூப்பான அந்த மூத்தோனை இறையின் அந்த வடிவம் விக்கினங்களைக் களையக் கூடியது. தடைகளை களையக் கூடியது. எண்ணிய காரியத்தை ஜெயமாக்கக் கூடியது. எனவேதான் நாங்கள் எதையெடுத்தாலும் மூத்தோனை வணங்கு மூத்தோனை வணங்கு மூத்தோனை வணங்கு என்று கூறுகிறோம்.

இந்த நிலையில் ஒருவன் வினவலாம் (கேட்கலாம்). நீக்கமற நிறைந்துள்ள பரம் பொருள் ஒன்றுதான். வடிவம்தான் வேறு. வேறு என்று கூறுகின்ற சித்தர்கள் ஏன் மூத்தோனை வணங்கு இளையோனை (முருகரை) வணங்கு அன்னை திரு வை (மகாலட்சிமி) வணங்கு என்று கூறவேண்டும்? பரம் பொருளை வணங்கு என்று கூறலாமே? கூறலாம்தான். ஆனால் இதுபோல் பலமுறை நாங்கள் (சித்தர்கள்) உதாரணம் கூறியிருக்கிறோம். சுவையான இனிப்பு பண்டங்கள் விற்கின்ற அங்காடியிலே (கடை) முன்பெல்லாம் ஒரு வகையான இனிப்பு பண்டங்கள் அதிலும் குறிப்பாக ஆலய திருவிழாக்களில் விற்பார்கள். அனைத்தும் சுவையான இனிப்பிலே விதவிதமான வண்ணங்களிலே செய்யப்பட்டிருக்கும். ஒன்று மிளகாய் பழம் போல் இருக்கும். இன்னொன்று பாகற்காய் போல் இருக்கும். ஒன்று சிங்கம் போல் இருக்கும். இன்னொன்று கிளி போல் இருக்கும். கடித்து சுவைத்தால் அனைத்தும் ஒரே சுவைதான். ஆனால் இதை அறியாத குழந்தை என்ன சொல்லும்? எனக்கு மிளகாய் பழம் மிட்டாய் வேண்டாம். அந்த சுவை நன்றாய் இராது. நாவிலே காரம் தாங்காது. கனி வடிவத்தில் இருக்கின்ற சுவையை வாங்கிக் கொடு என்று கூறும். வடிவம் தான் வேறு. ஆனால் சுவை ஒன்று என்பது குழந்தைக்கு தெரியாதது போல் அனைத்து விதமான தெய்வ வடிவங்களும் விதவிதமாக இருந்தாலும் இருக்கின்ற பரம் பொருள் ஒன்று. பிறகு ஏன் மூத்தோனை வணங்கு என்று கூறுகிறோம்? ஒரு மனிதன் அலுவலகத்தில் அதிகாரியாக அரசாட்சி செய்கிறான். இல்லத்தில் தாரத்திற்கு கணவனாக செயலாற்றுகிறான். பிள்ளைக்கோ தகப்பன் என்ற நிலையில் செயலாற்றுகிறான். நன்றாக கவனிக்க. அவன் அலுவலகத்தில் ஒரு கை சான்று (கையெழுத்து) இடவேண்டுமென்றால் அதற்கான விதிமுறை வேறு. அதே தருணம் பிள்ளையவன் வித்தை கூடத்திலிருந்து(பள்ளிக் கூடம்) ஒரு கைசான்று கேட்கிறார்கள் என்றால் அலுவலகத்தில் கடைப்பிடிக்கும் அதே விதிமுறையை பின்பற்ற இயலுமா? இயலாதல்லவா.

இப்படி ஒரே மனிதன் இல்லத்தில் ஒருவிதமாகவும் அலுவலகத்தில் ஒருவிதமாகவும் பொது இடத்தில் ஒருவிதமாகவும் ஆலயத்தில் ஒருவிதமாகவும் நடந்து கொள்ள வேண்டிய கட்டாயம் இருப்பது போல் பரம் பொருளும் தடைகளை நீக்கும் பொழுது விநாயகர் வடிவத்திலும் அதுபோல் செவ்வாய் தோஷம் போன்ற தோஷங்களை நீக்கும் பொழுது முருகப்பெருமான் என்ற வடிவத்திலும் மனிதனுக்கு அன்பை போதிக்கும் பொழுது அன்னை (பராசக்தி) வடிவத்திலும் மனிதனுக்கு பொருளாதார நெருக்கடியை தீர்க்கும் பொழுது மகாலட்சுமி வடிவத்திலும் இறை மனிதனுக்காக தன் உருவத்தை மாற்றிக் கொள்கிறார். இதில் பேதங்கள் ஏதும் இல்லை. அதற்காக உருவத்தை மாற்றி வணங்கினால் கேட்டது கிடைக்காது என்ற தவறான பொருளை கொள்ள வேண்டாம். இல்லை எனக்கு பிடித்த ஒரே உருவத்தை நான் எப்பொழுதுமே வணங்கிக் கொள்கிறேன் என்றாலும் பாதகமில்லை. இருந்தாலும் நாங்கள் (சித்தர்கள்) கூறுகிறோம் என்றால் அதில் இறைவனின் சூட்சும காரணங்கள் இருக்கும் என்பதால் மூத்தோனை வணங்கு மூத்தோனை வணங்கு மூத்தோனை வணங்கு பின் பயணம் துவங்கு ஆசிகள்.