ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 184

கேள்வி: நீதிக் கதைகளை (பக்தி கதைகளை) எங்களுக்கு சொல்ல வேண்டும்:

இறைவன் அருளால் நலம் எண்ணி நலம் உரைத்து நலம் செய்ய நலமே நடக்கும். சதாசர்வகாலமும் நடப்பதெல்லாம் இறைவன் செயல் என்று எண்ணினால் இறைவன் அனைத்துக்கும் பொறுப்பாகி விடுகிறார். எனவே இதை எத்தனை வாய் மொழியாக கூறினாலும் மனிதனால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.

ஆங்கோர் தேசத்தில் (நாட்டில்) பலகாலம் முன்பு நடந்தது அப்பா. இதை எல்லாம் வெறும் கதை என்றும் மூட நம்பிக்கை என்றும் பலர் எண்ணுகிறார்கள். ஆங்கே மிகப்பெரிய ஏழை ஒருவன். சிறு தொழில் செய்து வாழ்ந்து வந்தான். சதாசர்வகாலம் பரம்பொருளை சிவ வடிவிலே உணர்ந்து நமசிவாயம் நமசிவாயம் என்று கூறிக் கொண்டு இருந்தான். யாராவது எதாவது வந்து கேட்டால் நமசிவாயம் அருள் இருந்தால் தருகிறேன் என்பான். அப்பா இந்த வேலையை செய்து தருகிறாயா? என்றால் நமசிவாயம் செய்யச் சொன்னால் செய்கிறேன் என்பான். அப்பா எனக்கு இது வேண்டும். தருகிறாயா? என்றால் நமசிவாயம் தரச் சொன்னால் தருகிறேன் என்பான். இப்படி சதாசர்வ காலமும் பார்ப்பதெல்லாம் அவனுக்கு நமசிவாயமாகவே பட்டது. மிகப் பெரிய வித்தை கற்காமலோ ஞான உபதேசம் இல்லாமலோ வெறும் பிறவியில் இருந்து அன்னவனுக்கு சிவன் மீது மிகப்பெரிய பற்றுதல் வந்துவிட்டது. சிறு தொழில் மூலம் கிடைத்த சிறிய வருமானத்தில் அவனும் அவன் குடும்பமும் திருப்தியாக வாழ்ந்து வந்தது. அப்பொழுது அனல் காலம் என்பதால் அவன் ஒரு நாள் காற்றை நாடி இல்லத்தின் வாயிலிலே கண் அயர்ந்து கொண்டிருந்தான்.

நமசிவாயம் அருள் இருந்தால் எனக்கு உறக்கம் வரட்டும். நமசிவாயம் எண்ணினால் இன்று தென்றல் வீசட்டும். நமச்சிவாயம் எண்ணினால் நான் நன்றாகத் தூங்குவேன் என்று எண்ணிக் கொண்டிருந்த சமயத்தில் கள்வர்கள் (திருடர்கள்) சிலர் அரண்மனையில் இருந்து சில பொருள்களை திருடிக் கொண்டு ஓட காவலர்கள் துரத்த இங்கே இவன் இருப்பதை அறியாமல் இவன் மீது விழுந்தடித்துக் கொண்டு இவன் இல்லத்திற்குள் ஓடி ஔிந்து கொள்ள அப்பொழுது அந்த காவலர்கள் பின் தொடர்ந்து வந்து அந்த கள்வர்களை எல்லாம் பிடித்துக் கொண்டு இவனையும் பிடித்துக் கொண்டு சென்றார்கள். அனைவரையும் அரசன் முன் நிறுத்தி இந்த கள்வர்கள் இப்படி எல்லாம் செய்து இருக்கிறார்கள். இதோ இந்த மனிதன் வீட்டில்தான் ஔிந்து இருந்தார்கள். இவன்தான் அனைத்திற்கும் பொறுப்பு என்று கூற அரசன் அவனை ஏறிட்டுப் பார்த்தான்.

அரசன்: நீ என்னப்பா கூறுகிறாய்?

நமசிவாயம் அருளாலே நான் இரவு உணவை முடித்து விட்டு நமசிவாயம் அருளாலே காற்றில்லை என்பதால் நான் நமசிவாயம் அருளாலே இல்லத்தின் வெளியே அமர்ந்து இருந்தேன். நமசிவாயம் அருளாலே நான் கட்டிலிலே அமர்ந்து இருந்தேன். நமசிவாயம் அருள் இருந்தால் தென்றல் வரட்டும் என்று இருந்தேன். நமசிவாயம் அருள் இருந்தால் உறக்கம் வரட்டும் என்று படுத்து இருந்தேன். ஆனால் நமசிவாயம் என்னவோ கள்வர்களை (திருடர்களை) அனுப்பி வைத்து இருக்கிறது. நமசிவாயமே கள்வர்களை அனுப்பி இருக்கிறார். நமசிவாயம் அருளால் தான் கள்வர்கள் உங்கள் அரண்மனையில் இருந்து பொருள்களை எடுத்து இருக்கிறார்கள். நமசிவாயம் அருள்தான் கள்வர்களை என் இல்லத்திற்குள் புக வைத்தது. அந்த நமசிவாயம் அருள்தான் உங்கள் கள்வர்களையும் என் இல்லத்திற்கு வரவழைத்தது. அதே நமசிவாயத்தின் அருள்தான் காவலர்களிடம் கள்வர்கள் பிடிபட்டார்கள். அதே நமசிவாயத்தின் அருளால்தான் நானும் பிடிபட்டிருக்கிறேன். நமசிவாயம் அருளால் அரசே நீங்கள் என்னை விசாரித்துக் கொண்டிருக்கிறீர்கள். நமசிவாயத்தின் அருளால்தான் நான் கூறிக் கொண்டு இருக்கிறேன். எனவே நமசிவாயத்தின் அருளால்தான் எல்லாம் நடந்து கொண்டு இருக்கிறது என்று இன்னவன் கூற

செய்வதை எல்லாம் செய்துவிட்டு இறைவன் மீது நீ பழி போடுகிறாயே? என்று எல்லோரும் சொல்ல நமசிவாயம் அருளால்தான் எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. இப்பொழுது நமசிவாயம் எண்ணம். நீங்கள் எல்லாம் என்னை கடுமையாக வசை பாட வேண்டும் என்று இருக்கிறது. நமசிவாயத்தின் எண்ணம் அப்படி இருந்தால் அப்படியே நடந்து விட்டுப் போகட்டுமே என்று இன்னவன் கூற நமசிவாயம் அருள் என்று கூறுகிறாயே இப்பொழுது நமசிவாயம் உன்னை தூக்கில் போட எனக்கு உத்தரவு இட்டிருக்கிறார். உன்னை தூக்கில் போடப் போகிறேன். உன் உயிரை எடுக்கப் போகிறேன் என்று அரசன் கூற ஆஹா நமசிவாயத்தின் கருணையே கருணை. நமசிவாயத்தின் அருளால்தான் இந்த சிந்தனையே உங்களுக்கு வந்திருக்கிறது. இந்ந உடல் பாரமானது. இந்த உடலுக்குள் இந்த ஆத்மா தவித்துக் கொண்டிருக்கிறது. இந்த ஆத்மாவை விடுதலை செய்ய என் அப்பன் முடிவு செய்து விட்டார் போலும். நமசிவாயம் உங்கள் உடலில் புகுந்து கொண்டு அரசே இப்படியொரு அருமையான கட்டளையைப் போட்டிருக்கிறார். எனவே நமசிவாயம் எண்ணப்படி எல்லாம் நடந்து விட்டுப் போகட்டும். நமசிவாயம் எண்ணப்படி நான் சித்தமாக இருக்கிறேன். நமசிவாயத்தின் எண்ணம் எதுவாக இருந்தாலும் அதற்கு அடிபணிய நான் காத்திருக்கிறேன். எனவே நமசிவாயமே அனைத்துக்கும் பொறுப்பு என்று இவன் கூற அரசன் அவனின் உண்மையான பக்தியைப் புரிந்து கொண்டு ஏராளமான பொன்னும் பொருளும் கொடுத்து மற்ற கள்வர்களை (திருடர்களை) சிறைக்கு அனுப்பிவிட்டு இவனை அனுப்பி வைத்துவிட்டார்.

எனவே மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் இது ஏதோ ஒரு கதை போல் தோன்றினாலும் அப்படியொரு தீர்க்கமான அழுத்தந்திருத்தமான பக்தி இறை மீது இருந்தால் என்றும் அனைத்தையும் அனைவரும் சாதிக்கலாம் என்பதை இந்தக் கதை நினைவூட்டுகிறது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 183

தருமத்தைப் பற்றி குருநாதரின் தத்துவ விளக்கம்:

அகத்திய மாமுனிவர் பொது வாக்கு:

தருமமோ தர்மம் – தர்மத்தில் தருமம்.
தருமமோ தர்மம் – அதர்மமில்லா தருமம்.
தருமமோ தர்மம் – தர்மமே தருமம்.
தருமமோ தர்மம் – தருவதே தருமம்.
தருமமோ யார் தருகிறார் யார் பெறுகிறார் என்பதே உயிரப்பா.
தருமமோ தர்மம் – தன்னிலை உணர்ந்து தானாய் தருவதே தருமம்.
தருமமோ தர்மம் – பிறர் நிலை உணர்ந்து தானாய் தருவதே தருமம்.
தருமமோ தர்மம் – தர்மம் செய்கின்றோம் என்ற எண்ணம் இல்லாது செய்வதே தருமம்.
தருமமோ தர்மம் – தர்மத்தால் வரும் பயன் எண்ணா செய்வதே தருமம்.
தருமமோ தர்மம் – பேதங்கள் நோக்காது செய்வதே தருமம்.
தருமமோ தர்மம் – உறவு நட்பு பகை பாராது செய்வதே தருமம்.
தருமமோ தர்மம் – அப்பனே தர்மம் அன்னையே தருமம்.
தருமமோ தர்மம் – அப்பனுக்கு அப்பனே தருமம் அன்னைக்கு அன்னையே தருமம்.
தருமமோ தர்மம் – அவர்தம் பாதம் பணிந்து கடமை ஆற்றுதலே தருமம்.
தருமமோ தர்மம் – அகத்தில் சாந்தம் பொங்க வதனத்தில் சாந்தம் தவழ செய்வதே தருமம்.
தருமமோ தர்மம் – அதனை உணர்ந்து உணர்ந்து உள்ளம் பூரித்து செய்வதே தருமம்.
தருமமோ தர்மம் – பிறர் தர்மத்தை தடுக்காதிருப்பதே தருமம்.
தருமமோ தர்மம் – பற்றில்லா செய்வதே தருமம். அறப்பண்போடு செய்வதே தருமம்.
தருமமோ தர்மம் – தன் நலம் விட்டும் பிறர் நலம் பேணும் உயர் தன்மையே தருமம்.
தருமமோ தர்மம் – தன் இனமில்லா பிற உயிர்களுக்கும் செய்வதே தருமம்.
தருமமோ தர்மம் – தன்னையறிந்து தனக்குள்ள இறையை அறிந்து வாழ முயல்வதே தருமம்.
தருமமோ தர்மம் – கர்மம் குறைப்பதே தருமம். சட்டம் உரைப்பதே தருமம்.
தருமமோ தர்மம் – நட்டம் (நஷ்டம்) தவிர்ப்பதே தருமம். இட்டம் (இஷ்டம்) பலிப்பதே தருமம்.
தருமமோ தர்மம் – இட்டம் (இஷ்டம்) அடைவதே தருமம். இறை சட்டம் மதிப்பதே தருமம்.
தருமமோ தர்மம் – நல்திட்டம் காண்பதே தருமம். மிகு உணர்வினை கட்டுப்படுத்துவதே தருமம்.
தருமமோ தர்மம் – இலகுவாக வாழ்வை மாற்றித் தருவதே தருமம்.
தருமமோ தர்மம் – தன் நிலை தாண்டி மேல் உயர வைப்பதே தருமம்.
தருமமோ தர்மம் – தன் நிலைக்கு மேல் உயர்த்துவதே தருமம். தன்னையறிய உதவும் தருமம்.
தருமமோ தர்மம் – தன்னலமில்லா போது நலத்தை வளர்ப்பதே தருமம்.
தருமமோ தர்மம் – தன்னை தன்னிலிருந்து வேறாகப் பிரித்துக் காட்டும் தருமம்.
தருமமோ தர்மம் – உறவு தாண்டி செய்வதே தருமம். உயிர் காக்க உதவுவது தருமம்.
தருமமோ தர்மம் – உள்ளன்போடு செய்வதே தர்மம். உளைச்சலின்றி செய்வதே தருமம்.
தருமமோ தர்மம் – தன்னை உனக்குள்ளே ஒரு கட்டுப்பாட்டில் வைப்பதே தருமம்.
தருமமோ தர்மம் – இது போல் தொடர்ந்து இவ்வழியில் வந்து செய்யும் தருமத்தால் குறையும் கருமம் (கர்மம்).
தருமமோ தர்மம் – இதனை உணர்ந்தாலும் உணராவிட்டாலும் இவ்வாறு செய்வதே தருமம்.
தருமமோ தர்மம் – தினம் நாளும் செய்வதை வகுத்து வகுத்து பிரித்துப் பார்த்து அதில் உள்ள தன்மையை நுட்பத்தை அறிந்து ஏற்க முயல்வதே தருமம்.
தருமமோ தர்மம் – தர்மத்தின் தருமம்.
தருமமோ தர்மம் – தர்மத்தின் தருமம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 182

அகத்திய மாமுனிவர் பொது வாக்கு:

இஃதொப்ப அறம் வருகை அதைத் தொடர்ந்து இறை வருகை.
இயம்புங்கால் சத்தியம் வருகை பின்னாலே பரம்பொருள் வருகை.
இயம்பிடுவோம் நல் உறவு வருகை அவற்றால் நல் உரிமை வருகை.
நன்றில்லா சூழல் வருகை. என்றால் அதோடு தீ கர்மா வருகை.
நலமான பிராத்தனை வருகை. தொடர நன்றில்லா சூழல் வருகையாகா.
திருப்தி வருகை. பெருங்கால் அமைதி வருகை.
அழகு வருகை. பெருங்கால் உடன் அவதி வருகை.
யுவதி (பெண்) வருகை. பெருங்கால் உடன் சலனம் வருகை.
பக்தி வருகை. அவற்றாலே புண்ணியம் வருகை.
பொன் வருகை. நல்கிடும் தேவையற்ற பொறாமை வருகை.
நன் வருகை. உள்ளத்தில் எழ பரப்பிடும் நல்மதிப்பு வருகை.
உயர் சொல் வருகை. வரத்தான் பல் வருகை வருமே.
அதிக நெல் வருகை. கிருடி தசத்தோனுக்குத் தருமே மகிழ்வு வருகை.
எவ்வருகை ஆனாலும் எதிர்பார்ப்பு வருகை இல்லாதிருக்க என்றும் தொடரும் சாந்தி வருகை.
பிழை வருகை தொடர அழும் வருகை தொடரும்.
பீடு வருகை. வேண்டுமென்றால் வாயை மூடும் வருகை வேண்டும்.
உள்ளுக்குள் இறைவனைத் தேடும் வருகை. அவற்றை நாளும் தேடு வருகை.
நாடி நாடி அயர்ந்து போகாமல் புத்துணர்வில் சிலிர்க்கும் வருகை.
மயக்க வருகையால் வரும் தயக்க வருகை. உள்ளம் சோர்வு வருகை.
தொடரும் எண்ண வருகை. நல் எண்ண வருகை சோரா வருகையாகும்.
பொன் வருகை விட்டு புகழ் வருகை விட்டு பற்றற்ற வருகை.
நிதி வருகை விட்டு நீதி வருகை. அதுவே புண்ணிய நதி வருகையாகும்.
காலம் காலமாக நல் இசை வருகை. மனதிற்கு நல் சுவை வருகை.
கடந்த கால அசை வருகை. சோகம் தரா சுகம் தர எதிர்கால நிலை வருகை.
எதுவானாலும் இறை வருகை இருக்கும் வண்ணம் சுகம் வருகை.
தொடரும் நேரம் வருகை. தொடரா தேகத்தில் பிணி வருகை கர்மத்தின் தனி வருகையாகும்.
இனி வருகை இதம் வருகையாக உள்ள உலைச்சல் வருகை விட்டுவிடும் வருகையாக
நித்தம் நித்தம் சித்தம் வருகையாக மனம் கொண்டாடு வருகையாக
தேகத்தில் அசதி வருகை வரா. ஆக்கையில் தளர் வருகை வரா.
என்றென்றும் அன்பு வருகை வர தேவையில்லா விமர்சன வருகை விட.
உள்ள ஆசனத்தில் இறை வருகை தன்னை அமர வைக்க.
இரை வருகை வாழ்வில்லை.
இறை வருகை வாழ்விருக்கும்.
இனி வருகை இனிய வருகை வாழ மற்றவரிடம் இருந்து தனி வருகை வாழ.
வாழ்க்கையில் நீடித்த இன்பக்கனி வருகை வாழ
பல முனி வருகை நல்லாசி தர முகத்தில் ஜோதி வருகை மிளிர
அசதி வருகை நீங்கி அயர்வு வருகை ஒழிந்து என்றென்றும் மகிழ்வு வருகை தொடர
இறை வருகை எண்ணி இனி இறையருளே செல்லும் வண்ணம் வாழ்வை அமைத்துக் கொள்ள அதுவே நல் வருகையாகும். ஆசிகள்.

வருகை என்ற தமிழ் வார்த்தை வைத்து அகத்தியர் தமிழில் விளையாடி இருக்கிறார். இதன் விளக்கம் பலருக்கு புரியாது என்கின்ற காரணத்தால் இதன் விளக்கத்தை கீழே கொடுத்திருக்கிறோம்.

இது போலவே அறம் தர்மத்தை யார் கடைபிடித்து வந்தாலும் அதைத் தொடர்ந்து இறைவனும் வருவான். சொல்லப் போனால் சத்தியத்தை யார் கடைபிடித்து வந்தாலும் அவர்களின் பின்னாலேயே பரம்பொருள் வருவான். சொல்லுவோம் நன்மையான உறவுகளை எவர் வளர்த்துக் கொள்கிறாரோ அவற்றால் அவருக்கு நல்ல உரிமைகளும் கிடைக்கும். நன்மை இல்லாத சுற்றுப் புறத்தை யார் வளர்த்துக் கொள்கிறாரோ அவருக்கு அந்த சுற்றுப் புறத்தோடு தீய கொடுமையான கர்மங்களும் வரும். நல்ல விதத்தில் அன்போடு செய்யப்படும் பிராத்தனை யார் செய்கிறார்களோ அவரைத் தொடர்ந்து நன்மை இல்லாத சுற்றுச் சூழல் எப்போதும் வராது. தம்மிடம் இருப்பதில் எவர் திருப்தியாக இருக்கின்றாரோ உண்மையான திருப்தி கிடைத்த பொழுதே மன அமைதியும் கிடைக்கும். வெறும் உடல் அழகை வளர்த்து வந்தால் அழகு கிடைத்த பொழுதே அதனுடன் சேர்ந்து துன்பமும் நோய்களும் வரும். இளம் பெண்ணை அடைய வேண்டும் என்று நினைத்தால் அப்பெண் கிடைத்த பொழுதே அவளுடன் சேர்ந்து மனதில் காம சலனங்களும் வரும். உண்மையான பக்தி ஒருவருக்கு வந்தால் அந்த பக்தியினாலே புண்ணியம் வரும். ஒருவருக்கு அதிகமாக செல்வம் வந்தால் அது கொடுக்கும் தேவை இல்லாத / வீணான பொறாமையும் வரும். நன்மைகள் உள்ளத்தில் வந்தால் அவருடைய உள்ளத்தில் நல்ல எண்ணங்கள் எழுந்து அவரைச் சுற்றி நல்ல அதிர்வலைகளாக பரவி அதனால் பிறருக்கு அவர் மேல் நல்ல மரியாதை வரும்.

உயர்வான / கனிவான / இனிமையான வார்த்தைகள் ஒருவரிடமிருந்து வந்தால் அது வர வரவே அனைத்து பல்லும் தெரியும் படி ஆத்மார்த்தமான சிரிப்பும் பிறரிடமிருந்து வந்து கொண்டே இருக்குமே. அதிகமாக நெல் தானியங்கள் விளைந்து வந்தால் கஷ்டப்பட்டு விவசாயத்தில் இருக்கும் பத்து விதமான செயல்களையும் செய்து அறுவடை செய்தவனுக்கு அதுவே தரும் மகிழ்ச்சியான வாழ்க்கையை கொடுக்கும். எந்த விதமான நன்மை தீமைகள் வருவதாக இருந்தாலும் அதை எதிர்பார்த்து வருகின்ற உள்ளம் இல்லாமல் எவர் இருக்கிறாரோ அவருக்கு எப்போதும் தொடர்ச்சியாக அமைதி வரும். தவறானவை வரும் பொழுது அதைத் தொடர்ந்து துன்பத்தினால் அழுகை வருவதும் தொடரும். கெடுதல் வரும் பொழுது அதை அனைவருக்கும் சென்று சொல்லிக் கொண்டு இருக்காமல் வரும் கெடுதல்களைத் தாங்கிக் கொண்டு இருக்கும் மன பலம் வர வேண்டும். உள்ளுக்குள் இறைவனை உண்மையான தேடுதல் வந்து விட்டால் அவற்றை தினமும் அவரைத் தேடி இறை ஞானமும் தன்னாலேயே வரும். இறைவனைத் தேடி தேடி சோர்ந்து போகாமல் புத்துணர்ச்சி பெற்று நடக்கும் அதிசயங்களால் சிலிர்த்து விடும் அளவிற்கு நன்மைகள் வரும். மாயையில் மயங்கி இருக்கின்றவர்கள் இறைவனுக்காக எதைச் செய்தாலும் அதில் ஒரு இனம் புரியாத தயக்கமே வந்தால் அவர்களின் உள்ளம் சோர்ந்து போகும். ஒருவருக்குத் தொடர்ச்சியாக நல்ல எண்ணங்கள் வந்து கொண்டே இருந்தால் அந்த நல்ல எண்ணங்களால் வரும் நல்ல அதிர்வலைகளால் எப்போதும் சோர்வு என்பதே வராமல் இருக்கும்.

செல்வம் வந்தால் அதை விட்டுவிட தர்மத்தை வளர்க்க வேண்டும். புகழ்ச்சி வந்தால் அதை விட்டுவிட பெருந்தன்மை வளர்க்க வேண்டும் அப்போது ஒருவருக்கு எதன் மேலும் பற்று இல்லாத நிலை வரும். செல்வம் வந்தால் அதை விட்டுவிட்டு தர்மத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதுவே புண்ணியங்களை ஆறு போல அழைத்து வரும். காலம் காலமாக நன்றாக அமைக்கப்பட்ட இசை வந்தால் அதை கேட்கின்ற மனதிற்கு நன்மையான இனிமை வரும். கடந்த கால விஷயங்களை மீண்டும் மீண்டும் நினைவு படுத்தி அதில் நாம் செய்த தவறுகளை பார்த்து திருத்திக் கொண்டு இருந்தால் சோகம் இல்லாத சுகத்தை அது தருகின்ற அளவிற்கு எதிர் காலத்தில் நல்ல நிலை கிடைக்கும். எதுவானாலும் இறைவனை நமது எண்ணத்தில் வைத்து இருக்கும்படி செய்து கொண்டே இருந்தால் நல்ல இன்பத்தை கொடுக்கின்ற விஷயங்களும் நடக்கும். நன்மையைத் தொடர்ந்து செய்கின்ற காலங்களில் நன்மை வந்து கொண்டே இருக்கும். நன்மையை தொடர்ந்து செய்யாத உடலில் விதவிதமான நோய்கள் வருவது மட்டுமின்றி தீய கர்மங்களும் தனியாக வந்து சேரும். இனிமேல் எதிர்காலத்தில் வருகின்ற அனைத்தும் இதமான அனுபவத்தைக் கொடுக்கும் காலங்களாகவும் உள்ளத்தில் அமைதி இன்மை வந்து சேர்வதை விட்டு விடுகின்ற காலங்களாகவும் அமைய வேண்டும் என்றால் தினம் தினமும் எண்ணத்தில் இறைவனை வைத்து மனதில் இறைவனையே போற்றி வணங்கி வர வேண்டும் அப்படி செய்பவர்களின் உடலில் சோர்வு என்பதே வராது. அவர் உடலுக்கும் முதிர்ச்சியால் வரும் தளர்வும் வராது.

என்றென்றும் அனைவரிடத்திலும் அன்பு வர வேண்டும் மற்றவர்களிடம் தேவை இல்லாத வீண் விமர்சனங்கள் வருவதை விட்டுவிட வேண்டும். நம்மிடம் உள்ள இருக்கையில் / அமர்ந்து இருக்கின்ற விதத்தில் இறைவனை வரவழைத்து தம்மேடு அவனையும் அமர்ந்து இருக்கும் படி வைக்க வேண்டும் / தியானம் செய்து இறைவனை நமது மனதிற்குள் வீற்றிருக்கும் படி செய்ய வேண்டும். உணவு எப்போது கிடைக்கும் என்று அதற்காக அலைவது வாழ்க்கையின் குறிக்கோள் இல்லை. இறைவன் எப்போது கிடைப்பான் என்று அதற்காக முயற்சி செய்வதே வாழ்க்கையின் குறிக்கோள் ஆகும். இனி எதிர்காலத்தில் வரும் அனைத்தும் இனியவையாகவே வர வேண்டும் என்று வாழ்வதற்கு மற்றவரிடம் இருந்து தனித்து இருக்கும் தியான வாழ்க்கையை வாழுங்கள். வாழ்க்கையில் நீடித்த இன்பங்கள் நல்ல பழங்களைப் போல சுவையுடன் வரும் வாழ்க்கையை முறைப்படி வாழ்பவர்களுக்கு. பல விதமான சித்தர்களும் முனிவர்களும் ஞானிகளும் இந்த உலகத்தில் வருவது நல்லாசி தர முகத்தில் ஜோதி வந்து பிரகாசிக்கவே சோர்வு வருவதை நீக்கி சோர்வு வருவதை ஒழித்து எப்போதும் மகிழ்வு வருவது தொடர்ந்து இருக்க இறைவனை உள்ளத்தில் வர வைத்து அவனையே எப்போதும் எண்ணிக் கொண்டு இனி இறையருளே நோக்கி செல்லும் விதத்தில் நமது வாழ்க்கையையும் அமைத்துக் கொண்டால் அதுவே நன்மையான பல இறை அருளைக் கொண்டு வரும் ஆசிகள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 181

சொல்லில் உள்ள சொல் தன்மை புரியும் வண்ணம் அகத்திய மாமுனிவர் பொதுவாக்கு:

சொல்லின் அச்சொல்லின் தன்மை புரிபடா போயின் சொன்ன சொல்லில் சொல்லின் வாக்கு வீண் போல் தோன்றினாலும் சொல்லில் உள்ள சொல்லின் தன்மை சொன்ன தன்மையும் எவனுக்கு சொல்லப்பட்டதோ அவன் மனதின் தன்மைக்கு ஏற்ப சொல்வது புரிந்து விட்டால் சொல்லில் உள்ள சொல்லின் தன்மை புரிந்ததால் சொல் சொன்னதின் பங்கு பூரணமாகும்.

சொல்லில் சொல்லின் தன்மை சொன்ன தன்மை சொல்லில் முழுவதும் புரிபடாமல் போகுங்கால் சொன்னதின் பயன்பாடு சொல்லில் சொன்ன சொல்லில் வெளிவராது போகுமப்பா.

சொல்லில் உள்ள சொல்லின் தன்மை சொன்ன பின் அச்சொல்லை ஆய்ந்து ஆய்ந்து சொல்லின் அச்சொல்லை சொல்லாகக் கொண்டு சொன்னதின் சொல்தன்மை புரிபட சொன்ன சொல்லின் அர்த்தமும் சொல்லில் உள்ள சொல்லின் அர்த்தமும் புரிபட சொன்ன சொல்லில் உள்ள தன்மை சொல்லின் தன்மை இரண்டு நோக்கமும் நிறைவேறும் ஆசிகள்.

சொல் என்ற தமிழ் வார்த்தை வைத்து அகத்தியர் தமிழில் விளையாடி இருக்கிறார். இதன் விளக்கம் பலருக்கு புரியாது என்கின்ற காரணத்தால் இதன் விளக்கத்தை கீழே கொடுத்திருக்கிறோம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 181

சொல்லில் உள்ள சொல் தன்மை புரியும் வண்ணம் அகத்திய மாமுனிவர் பொதுவாக்கு:

வாக்கு கொடுக்கும் போது அந்த வாக்கில் வழங்கப்படும் சில வார்த்தைகளின் உண்மை விளக்கம் புரியாமல் போய் விட்டால் கொடுத்த வாக்கில் இருக்கும் வார்த்தைகளில் சில வார்த்தைகள் மொத்த வாக்கில் தேவையில்லாமல் சேர்க்கப்பட்டது போல் தோன்றினாலும் கொடுத்த மொத்த வாக்கில் அந்த சில வார்த்தைகளின் உண்மை விளக்கமும் கொடுக்கப்பட்ட விதங்களும் எவனுக்கு சொல்லப்பட்டதோ அவன் மனதின் புரிதல் தன்மைக்கு ஏற்ற மாதிரியே கொடுக்கப்பட்டது அப்படியே அது புரிந்து விட்டால் கொடுக்கப்பட்ட வாக்கில் அனைத்து வார்த்தைகளின் உண்மை விளக்கம் புரிந்து விட்டால் வாக்கு கொடுத்ததின் அருளானது முழுமை அடையும்.

கொடுத்த வாக்கில் உள்ள வார்த்தைகளின் உண்மை விளக்கமும் கொடுக்கப்பட்ட விதமும் வாக்கில் முழுவதும் புரியாமல் போய் விடும் காலத்தில் வாக்கு கொடுத்ததின் அருளானது வாக்கில் கொடுக்கப்பட்ட வார்த்தைகளில் தெளிவாக பயன் கிடைக்காமல் போகுமப்பா.

கொடுக்கப்பட்ட வாக்கில் உள்ள வார்த்தைகளின் உண்மை விளக்கத்தை வாக்கு கொடுக்கப்பட்ட பிறகோ அல்லது அங்கிருந்து வீட்டிற்குச் சென்ற பிறகோ கொடுக்கப்பட்ட வாக்கில் உள்ள அனைத்து வார்த்தைகளையும் தினமும் ஆராய்ந்து ஆராய்ந்து பார்த்து தன்னால் முடிந்த அளவு புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும் கொடுத்த வாக்கில் உள்ள சில புரியாத வார்த்தைகளையே தமக்கு மிகவும் முக்கியமாகக் கொடுக்கப்பட்ட வார்த்தைகள் என்று எண்ணிக் கொண்டு வாக்கு கொடுக்கப்பட்டதின் வார்த்தை விளக்கங்களும் கொடுக்கப் பட்ட விதங்களும் நன்றாக புரிந்து கொள்ளும் படி கொடுத்த வாக்கில் உள்ள அனைத்து வார்த்தைகளின் உண்மையான விளக்கங்களும் வாக்கில் சில புரியாத வார்த்தைகளின் உண்மையான விளக்கங்களும் தாமாகவே புரிந்து கொள்ள ஆரம்பிக்கும் அப்போது கொடுக்கப்பட்ட வாக்கில் முழு விளக்கங்களும் கொடுக்கப்பட்ட வாக்கின் விதங்களும் ஆகிய இரண்டையும் அருளிய காரணங்களும் நிறைவு பெறும் ஆசிகள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 180

அகத்திய மாமுனிவர் பொதுவாக்கு:

துதியாமை செய்வாய் ஆயினும் மதியாமை செய்யாய் இறையை உள்ளத்தில் வாழ்ந்தாய் நல் கதியாமை தொடராது. உணர்வாய். சதியாமை செய்யும் மாந்தன் பிறன் நலன் கருதாமை செய்து வாழுங்கால் கர்மாவை சேர்த்து சேர்த்து தர்மத்தை மறக்கிறான். அறத்தை சத்தியத்தை புரியாமை வாழ்ந்து இவற்றை எல்லாம் விளங்காமை கொண்டு கல்லாமையில் நல்லவற்றை கருதாமையால் பொல்லாமை கொண்டு புகழாமை தேடி பிறரை புகழாமை வாழும் மாந்தன் நற்பண்பு அவனிடம் புகலாமையால் மெய் புகழாமை அவனுக்கு வராது. எத்தனை அறியாமை தலை கனத்தால் பிறரை மதியாமை பொல்லாமை பொறாமை என்று உணராமை காரணம். சித்தன் வாக்கு நடவாமை ஆனால் மட்டும் எம்மீது சின ஆமை கொண்டு வெறுப்பாமை தொடர கர்மாவை மறக்கிறான் மாந்தன். உண்மையை சொல்லாமை அறத்தை செய்யாமை சினத்தை விடாமை கடமையை தொடராமை காலத்தை பயன்படுத்தாமை என்று பல ஆமை மனிதன் கொள்ள இவற்றால் உயராமை கொள்கிறான். பொறாமை விட்டு போதாமையிலும் பொல்லாமை கொள்ளாது உள்ள ஆமையை நில் ஆமை என்று கட்டளையிட்டு இவ்வுலகில் எல்லாம் நிலைமை என உணர்ந்து பதவி கிடைக்காமல் போனால் அவற்றால் பலனாமை இல்லை. பதவி நிலையாமை தனம் நிலையாமை அழகு நிலையாமை அறமே நிலைத்த ஆமை என்று உணர்ந்து துயிலாமை கொண்டு துடிக்கின்ற காலத்தை பயிலாமை உள் அடங்கி மனதை சாந்தி ஆக்கி தள்ளாமையிலும் தாளாமை கொள்ளாது தேகத்தை (உடலை) வலுவாமை ஆக்க தேவையற்றதை ஏற்காமை உண்மையாக நல்லனவற்றை ஏற்காமை இருக்காமை என்றும் எதிலும் எவர் மீதும் சினவாமை தேவை. தேவையில்லா பொறாமை ஆற்றாமை அடிக்கடி உள்ளத்தை மாற்றாமை நல்ல செயலை தொடர்ந்து செய்யாமை இருக்காமையாக இருக்க இறை தோழமை உண்மையாக தொடரும் என்பதை மெய்ம்மை மனத்தோடு உணர்ந்து தேகம் நிலையாமை என்பதை உணர்ந்து ஆத்மா உணராமை வாழாமை தொட்டதற்கு எல்லாம் வருத்தாமை வாழும் வழி தொடர புரியாமை நடக்கின்ற செயல் எல்லாம் பரந்தாமன் திருவடி பற்ற புரியாமை பரியாமை. தொடர்ந்து நரியாமை நகர்ந்து தெரியாமை தொலைந்து உன் உள்ளத்தில் எரியாமை அணைந்து பரியாமை வளர்ந்து தெரியாமை எது குறித்தும் வாழாமை வாழும் மெய் கொண்டு வாழ அனைத்தும் நலமாம் ஆசிகள்.

ஆமை என்ற தமிழ் வார்த்தை வைத்து அகத்தியர் தமிழில் விளையாடி இருக்கிறார். இதன் விளக்கம் பலருக்கு புரியாது என்கின்ற காரணத்தால் இதன் விளக்கத்தை கீழே கொடுத்திருக்கிறோம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 180

அகத்திய மாமுனிவர் பொதுவாக்கு:

போற்றி வணங்காமல் இருந்தீர்கள் என்றாலும் பரவாயில்லை மதிக்காது இருக்க வேண்டாம். இறையை உள்ளத்தில் வைத்து வணங்க வில்லை என்றால் முக்திக்கான வழிகள் தொடர்ந்து வராது. இதனை உணர்வாய். ஒருவருக்கொருவர் சதி வேலைகளை செய்யும் மனிதர்கள் பிறன் நலன் கருதாமல் இருப்பதை செய்து வாழ்ந்து வந்தால் கர்மாவை சேர்த்து சேர்த்து தர்மத்தை மறக்கிறான். அறத்தை சத்தியத்தை புரிந்து கொள்ளாமல் வாழ்ந்து இவற்றை எல்லாம் தெளிவாக விளங்கிக் கொள்ளாமல் இதனை சரியான முறையில் கற்றுக் கொள்ளாமல் நல்லவற்றை கருத்தில் வைக்காததால் கோபம் வீண் புகழ்ச்சியை தேடி செல்லாத பிறரை நல்ல முறையில் புகழ்ந்து பேசாமல் வாழும் மனிதனின் நற்பண்பு அவனிடம் புகுந்து இருக்காததால் உண்மையானவற்றை புகழ்ந்து பேசுவது அவனுக்கு வராது. எத்தனை அறிந்து கொள்ளாமல் தலை கனத்தால் பிறரை மதித்து நடக்காமல் கோபமும் பொறாமை என்று உணர்வுகளுக்கு அடிமையாவதை உணர்ந்து கொள்ளாமல் இருப்பதே காரணம். சித்தன் வாக்கு நடக்காமல் போய் விடும் ஆனால் மட்டும் எம்மீது கோபம் என்கிற உணர்வை கொண்டு வெறுப்பு என்கிற உணர்வை தொடர கர்மாவை மறக்கிறான் மனிதன். உண்மையை சொல்லாமல் இருந்து அறத்தை செய்யாமல் இருந்து சினத்தை விட்டு விடாமல் இருந்து கடமையை தொடர்ந்து செய்யாமல் இருந்து காலத்தை சரியாக பயன் படுத்தாமல் இருந்து என்று பல விதமான உணர்வுகளால் கெட்ட குணங்களை மனிதன் கொள்ள இவற்றால் உயர்வை அடையாமல் இருந்து விடுகின்றான். பொறாமையை விட்டு விட்டு பெருந்தன்மையை வளர்க்காமல் போனாலும் கோபம் கொள்ளாது உள்ளத்தில் அன்பு உணர்வோடு நிற்க வேண்டும்.

மனமே என்று கட்டளையிட்டு இவ்வுலகில் எல்லாம் நிலைத்து நிற்காது என உணர்ந்து பதவி கிடைக்காமல் போனால் அவற்றால் பலன்கள் எதுவும் இல்லை. பதவி நிலைத்து நிற்காத காரணத்தினாலும் செல்வம் நிலைத்து நிற்காத காரணத்தினாலும் அழகு நிலைத்து நிற்காத காரணத்தினாலும் அறமே எப்போதும் நிலைத்து நிற்கின்ற தர்மம் என்று உணர்ந்து வெறும் தூக்கத்தில் / மாயையில் மயங்கிக் கொண்டு துடிக்கின்ற காலத்தை சரியாகப் பயன்படுத்தி வேண்டியவற்றை கற்றுக் கொண்டு உள்ளத்திற்குள் உணர்ச்சிகளை அடக்கி மனதை அமைதியாக ஆக்கி வயது முதிர்ந்து தள்ளாடுகின்ற நிலையிலும் இனி எதுவும் செய்ய முடியாது என்று சோர்ந்து போய் உட்காருவதை செய்யாமல் உடலை மனதாலும் தியானத்தாலும் வலிமை பெற்றதாக ஆக்க தேவையற்றதை ஏற்றுக் கொள்ளாமல் உண்மையாக நல்லனவற்றை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதை தவிர்த்து என்றும் எதிலும் எவர் மீதும் கோபம் கொள்ளாமல் இருப்பது தேவை. தேவையில்லா பொறாமை அங்கலாய்ப்பும் வெறுப்பும் அடிக்கடி உள்ளத்தை மாற்றி விடாத படிக்கு நல்ல செயலை தொடர்ந்து செய்யாமல் இருக்க வேண்டாம். இவ்வாறு இருக்க இறை தோழமை உண்மையாக தொடரும் என்பதை உண்மையான மனத்தோடு உணர்ந்து தேகம் நிலைத்து நிற்காது என்பதை உணர்ந்து ஆத்மா உணர்ந்து கொள்ளாமல் வெறும் உலக வாழ்க்கையை வாழ்வதை தவிர்த்து தொட்டதற்கு எல்லாம் வருத்தம் கொள்ளாமல் வாழும் வழி தொடர நமக்கு புரியாமல் நடக்கின்ற இறை செயல்கள் எல்லாம் பரந்தாமன் திருவடி பற்ற புரியாத விஷயங்கள் அனைத்தும் இனிமேல் நன்றாகப் புரிந்து நம்மோடு தொடர்ந்து வருவதை காணலாம். தொடர்ந்து கெட்ட குணங்களோடு பிறருக்கு தீமைகளை செய்வதை விட்டுவிட்டு எதையும் முழுவதுமாகத் தெரிந்து கொள்ளாமல் வாழ்க்கையை வீணடித்தால் உன் உள்ளத்தில் எரியாமல் அணைந்து போய் இருக்கின்ற இறைவனின் ஜோதியை நமக்கு தெரியாது. எது குறித்தும் வாழ்ந்து வீணடிக்காமல் வாழும் உண்மையை தெரிந்து கொண்டு வாழ அனைத்தும் நலமாம் ஆசிகள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 179

அகத்திய மாமுனிவர் பொது வாக்கு:

யாவும் கனவு யாவும் கனவு இறையே நினைவு இறையே நினைவு யாக்கை வாழ்வு குறைகளுக்கு நாளும் வருந்தி வாழ்வு வாழும் முறையும் வேண்டாமப்பா. உயர்ந்த வாழ்வு வாழ வேண்டி முனிவர் போல் மோட்ச லோகம் அடைய வேண்டி வருத்தம் கொள். இறை நினைத்து நாளும் அழு. வழங்கு வழங்கு வழங்கு உள்ளதெல்லாம் வழங்கு. (தானம் செய்) வறியவர் எளியவர் இயன்றோர் இயலாதோர் என வாதிடாமல் எவர் என்ன கூறிட்டாலும் சிந்தை கலங்காமல் வழங்கு வழங்கு வழங்கு. உள்ளதை வழங்கு வழங்க வழங்க இறை உனக்கு வழங்கும். வார்க்க வார்க்க இறை உனக்கு வார்க்கும் வழங்குவதால் வருங்காலம் குறை காணுமோ என அஞ்சிடாதே. வழங்குவதால் வருங்காலம் வெறுமை கண்டிடுமோ என அஞ்சிடாதே வழங்குவதால் நீ ஏதும் இழப்பதில்லை. பெறுகிறாய் பெறுகிறாய் என்ற நோக்கமும் மாறி எக்குறிக்கோளும் இ்ன்றி பக்குவமடைந்து யாவும் இறை சித்தம் என்றுணர்ந்து பரிபக்குவ மனோ நிலையில் இறையே யாவுமாய் அதில் நீயுமாய் சூட்சுமம் உணர்ந்து வழங்கு. பாழ் மாந்தர் (கெட்ட மனிதர்கள்) மாய மாந்தர் (மாயையில் இருக்கும் மனிதர்கள்) உரை (சொல்லும் ஆலோசனைகளை) விட்டுத்தள்ளு. பக்குவமாய் தினம் நாளும் ராமநாமம் ஜபித்து வா. பதறாதே கதறாதே குறையேதும் அண்டிடாது அய்யனையும் அடியேனையும் நாம தடத்திலும் லிங்க தடத்திலும் தரிசிப்பாய். ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம். லகரம் (லட்சம்) ககரம்(கோடி) உருவேற்று. ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் யாவும் நல்கும். ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 178

கேள்வி: சங்கரனுக்கு சரவணகுகன் முருகப்பெருமான் ஓதிய கிரி (மலை):

சங்கடப்பட்ட பல்மாந்தர்கள் (பல மனிதர்கள்) தலைவிதி மாறிய கிரி. சபலங்கள் சலனங்கள் ஓட்டிடும் கிரி. சிறப்பில்லா முன்வினை ஊழ் பயன் சிறப்பாக மாற்றித் தரும் கிரி. சிந்தனையில் அணுவளவும் கட்டமில்லா தன்மையை நல்கிடும் கிரி. சிறப்போ சிறப்பில்லையோ பேதம் பார்க்கா வாழ்கையை ஏற்க வைக்கும் கிரி. சப்த கன்னியர்கள் அன்னையோடு அன்னை அருளால் அருளும் கிரி செப்புங்கால் பஞ்சமும் அடங்க பஞ்சவதனத்தோன் அருளும் கிரி. சிறப்பாக எத்தனை குன்றுகள் இளையவன் (முருகப் பெருமான்) அருளால் இருந்திட்டாலும் குன்றுக்கெல்லாம் உயர் குன்றாய் இன்றும் சான்றாய் அருளும் கிரி. அன்னையோடு ஐயன் அமர்ந்து அன்றும் இன்றும் என்றும் அருளும் கிரி. நீறு (திருநீறு) வேறு நாமம் வேறு என்று அறியாமையால் எண்ணும் மாந்தனுக்கு (மனிதனுக்கு) நீறு (திருநீறு) பூத்த அக்னிபோல் நீரோடு நாமமும் கலந்து வேங்கடகிரியாய் அருளும் கிரி. கட்டிய கணவன் காதில் ரகசியமாய் மனையாள் ஓதினாலும் கட்டிய மனைவி ஓதுகிறாளே என்று தாய் ஓதினாலும் உபயத்தையும் தாண்டி பிள்ளைகளுக்கு எதை ஓதினாலும் மாந்த குரு (மனித குரு) சிஷ்யனுக்கு ஓதினாலும் அனைத்திலும் பேதமுண்டு சுயநல நோக்கமுண்டு. பேதமில்லா தாண்டிய நிலையில் வேதமெல்லாம் ஓர் உருவாக ஓம்கார நாத வெள்ளம் ரூபமாக நேத்திரத்தில் (கண்ணில்) கருணை வெள்ளம் பிரவாகமெடுக்க அறுவதனமும் (ஆறு தலைகள்) ஐவதனமாகி (ஐந்து தலைகளாகி) (வழக்கமாக ஆறு தலைகளுடன் இருக்கும் முருகர் இக்கோவிலில் ஜந்து தலைகளுடன் மட்டுமே இருப்பார்) எழு பிறப்பும் எட்டென விரட்டி உபய வினையும் இல்லாது ஒழித்து சூல நேத்திரத்தோன் திரு மைந்தன் சதுரத்தை நவரசமாய் பிழிந்தெடுத்து அதனையும் தாண்டி பல்வேறு நுட்பத்தை பேதமில்லா ஓதி ஒருமுகமாய் திருமுகமாய் ஒரு நினைவாய் மாந்தன் (மனிதன்) வாழ அருளும் கிரி. ஞானத்தை நல்கும் கிரி. அஞ்ஞானத்தை அடியோடு அழிக்கும் கிரி. பேதத்தை நீக்கும் கிரி. வேதத்தை உணர்த்தும் கிரி. சீரற்ற குணங்களை சீராக்கும் கிரி. நிலைத்த செல்வத்தை நல்கும் கிரி. வாழ்வின் தடைகளை நீக்கும் கிரி. எதிர்பார்த்த விடைகளை நல்கும் கிரி. கர்ம நிலைகளை மாற்றும் கிரி. அக உளைச்சல் ஒழிக்கும் கிரி. பேதம் காட்டா வேதகிரி. ஓம் எனும் பிரணவம் ஒலிக்கும் நாத கிரி. இளையவன் (முருகப்பெருமான்) திருவடி பாதம் படிந்த கிரி. அன்னை நிரந்தரமாய் அருளும் கிரி. ஐயனோடு இன்று அனைவரும் இருக்கும் கிரி ஓதும் கிரி அது ஓதிய கிரி. பேதம் தவிர்த்து பிரணவநாதம் கலந்து ஒலிக்கும் கிரி.

ஓதிமலை முருகனைப் பற்றி தெரிந்து கொள்ளவும் கோவில் மற்றும் மலை புகைப்படங்களை பார்க்கவும் கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 177

இறை அணியப்பா என்ற தலைப்பில் அகத்திய மாமுனிவரின் பாடல்:

அகத்திய மாமுனிவர் வாக்கு:

அந்த இறையை நீ உள்ளத்தில் அணியப்பா.
இறையணி அணியத்தான் நிறையணியாகும் வாழ்வப்பா.
இயம்புங்கால் எமை நாடும் மாந்தர்கள் அனைவரும் ஓரணியில் இருக்க வேண்டும் என்பதற்காக யாமும் வாக்கை சீராக்கி
உயர்வணி ஆக்கி
நல்வித சொல் அணி ஆக்கி
அவையணி ஆக்கி
உயர் தமிழ் அணி ஆக்கி
நல்விதமாய் அணி அணியாய் வாக்கை அவ்வப்போது பகரணியாக்கி உரையணியாக்கி
சொல்லணியில் சொல்லுங்கால்
அவ்வணியை எல்லாம் செவியணியில் ஏற்று
சிந்தனை அணியில் வைத்து
சொல்லணியில் மீண்டும் செயல்படுத்தி செயலணி ஆக்கிவிட்டால்
யாம் உரைத்த வாக்கணிக்கு உயர்வான மதிப்பணி ஆகுமப்பா
அப்பனே செய்யாது ஒரு செவியணியில் ஏற்று அதை மறு செவியணியில் விட்டுவிட்டால் எமது வாக்கு மதிப்பணி எப்படி ஆகுமப்பா? இவையெல்லாம் வாக்கணியா?
சித்தர்களின் போக்கணியா?
இவையெல்லாம் நான் நம்பமாட்டேன். இதனை என் மதியணி ஏற்காது.
எல்லாம் விதியணி என்றால் எதற்கு இவர்கள் முன் அமர்ந்து அணியணியாக கூறுகின்ற வாக்கைஎல்லாம் கேட்க வேண்டும்?
அங்கே தீப அணி ஏற்றச் சொல்கிறார்கள். பிறகு தர்ம அணி செய்யச் சொல்கிறார்கள்.
இவற்றை எல்லாம் செய்வதற்கு தன அணி வேண்டாமா? என்று கேட்டால்
அதற்கும் கர்ம அணி என்றுதான் கூறுகிறார்கள்.
கர்ம அணியை நீக்க தர்ம அணிதான் தேவை என்றால் தன அணி எப்போது வரும்? என்று எம்முன்னே வினவி
அந்த தன அணி தராவிட்டால் தர்ம அணி செய்ய முடியாது என்று வாது செய்கிறார்கள் என்றாலும்
பொல்லா அணி எல்லாம் மனிதனை விட்டு நீங்கி
நல்ல அணி எல்லாம் மனதில் வைத்துவிட்டு
இம்சை அணியும் வேதனை அணியும் விட்டுவிட்டு
அவன் தாய் அணி போல் எம்மை அணுகும் போது
அவன் கர்ம அணியைக் கழிப்பதோடு
அவனுக்கு தர்ம அணியின் வழியையும் காட்டி அவன் உயர் கர்ம அணியை தொடர்ந்து செய்து
இறை அணியிலே அவனும் ஒரு அணியாக இருப்பதற்கு வழியைக் காட்டி
எம்முன்னே இன்னும் பேத அணி கொள்ளாமல்
அனைவரும் ஓரணியாக நின்றால்தான்
நாங்களும் இறையணியைக் காட்டித் தருவோம்.
எனவே இந்த நல் அணியை செவி அணியிலே ஏற்றி
சிந்தை அணியில் வைத்து இறைவன் திருவடியை சிந்திக்க பல்வேறு வாக்கனிகள்
வாக் கனிகளாய் இனி மலருமப்பா.

அணி என்ற வார்த்தையை வைத்து தமிழில் அகத்தியர் விளையாடி பொது வாக்கு அருளியிருக்கிறார். இதற்கான பொருளை பலரால் புரிந்து கொள்ள இயலாது என்ற காரணத்தால் இந்த அகத்தியரின் வாக்கின் விளக்கத்தை கீழே கொடுத்திருக்கிறோம்.

இறையை நீ உள்ளத்தில் வீற்றிருக்க வையுங்கள். இறைவனின் திருவடிகளை உள்ளத்திற்குள் வைத்தால் தான் முழுமை பெற்றதாகும் வாழ்வப்பா. எடுத்து சொல்லும் போது எமை தேடி வரும் மனிதர்கள் அனைவரும் ஓரே கூட்டமாக இறைவனைத் தேடும் ஒரே இனமாக இருக்க வேண்டும் என்பதற்காக யாமும் வாக்கை சீராக்கி உயர்வான தத்துவங்கள் ஆக்கி நல்லவிதமாக சொற்களை சொல்லுகின்ற தத்துவமாக அவற்றை ஒழுங்கு படுத்திக் கொடுத்து உயர்வான தமிழ் மொழிக்கு அணிகலன்களாக அழகு படுத்துவதாக நல்விதமான வரிசை வரிசையாய் வாக்கை அவ்வப்போது சொல்லப்படுகின்ற சொல் தொடர்களாக்கி அதை அப்படியே வரிசைப்படி இங்கே உங்களுக்கு உரைக்கின்றோம். அதை அழகான சொற்களாக்கி சொல்லும் பொழுது அந்த அழகான சொற்களை எல்லாம் ஆபரணங்களை சூடியிருக்கும் காதுகளில் கேட்டுக் கொண்டு அவற்றை உங்களின் சிந்தை என்கிற பெட்டகத்தில் வைத்துக் கொண்டு நீங்கள் சொல்லுகின்ற வார்த்தைகளிலும் மீண்டும் மீண்டும் எடுத்துச் சொல்லி அதை அப்படியே செயல் படுத்துகின்ற காரியங்களின் ஒழுங்காக ஆக்கிவிட்டால் யாம் உரைத்த வாக்குகளின் அமைப்புக்கு மிகவும் உயர்வான மதிப்பைக் கொடுத்து அழகுபடுத்தியது போல் ஆகுமப்பா.

அப்பனே யாம் சொல்வதை ஆபரணங்களை சூடியிருக்கும் காதுகளில் கேட்டுக் கொண்டு அதை இன்னொரு காது வழியாக விட்டுவிட்டால் எமது வாக்கை நீங்கள் மதிப்பைக் கொடுத்து அழகுபடுத்தியது போல் என்று எப்படி ஆகுமப்பா? இவையெல்லாம் வாக்குக்கு அழகா? சித்தர்களின் போக்குக்கு அழகா? இவையெல்லாம் நான் நம்பமாட்டேன். இதனை என் சிந்தனை அழகாக ஏற்காது. எல்லாம் விதியின் வழியே என்றால் எதற்கு இவர்கள் முன் அமர்ந்து வரிசை வரிசையாக கூறுகின்ற வாக்கை எல்லாம் ஏன் கேட்க வேண்டும்? அங்கே தீபத்தை அழகாக ஏற்றச் சொல்கிறார்கள். பிறகு தர்மங்களை வரிசையாக செய்யச் சொல்கிறார்கள். இவற்றை எல்லாம் செய்வதற்கு செல்வங்களும் வரிசையாக இருக்க வேண்டாமா? என்று கேட்டால் அதற்கும் கர்மங்களே வரிசையாக இருக்கின்றது என்று தான் கூறுகிறார்கள். கர்மங்களின் வரிசையை நீக்க தர்மங்களை வரிசையாக செய்வது தான் தேவை என்றால் செல்வங்களின் வரிசை எப்போது வரும்? என்று எம் முன்னே கேட்டு அந்த செல்வ வரிசையை தரா விட்டால் தர்மங்களை வரிசையாக செய்ய முடியாது என்று வாதம் செய்கிறார்கள் என்றாலும் தீமையான செயல்கள் எல்லாம் மனிதனை விட்டு நீங்கி நல்ல செயல்கள் எல்லாம் மனதில் வைத்துவிட்டு வருத்துகின்ற செயல்களையும் துன்பம் கொடுக்கின்ற செயல்களையும் விட்டுவிட்டு அவன் அம்மாவை தேடி குழந்தை போவது போல் எம்மை அணுகும் போது அவன் கர்மங்களின் வரிசையைக் நீக்கி விடுவதோடு மட்டும் இல்லாமல் அவனுக்கு தர்மங்களை முறைப்படி செய்கின்ற வழியையும் காட்டி அவன் உயர்வான நல்ல கர்மங்களை வரிசையாக தொடர்ந்து செய்து இறைவனின் திருவடிகளிலே அவனும் ஒரு ஆபரணமாக இருப்பதற்கு வழியைக் காட்டி எம் முன்னே ஒருவரோடு ஒருவர் வித்தியாசமாக பார்க்கும் எந்த விதமான குணங்களையும் பார்க்காமல் அனைவரும் ஓரே கூட்டமாக இறைவனைத் தேடும் ஒரு இனமாக நின்றால் தான் நாங்களும் இறைவனது திருவடிகளைக் காட்டித் தருவோம். எனவே இந்த நல் வாக்குகளை எல்லாம் உங்களின் காதுகளில் கவனமாக கேட்டுக் கொண்டு எண்ணங்களில் ஞாபகமாக முறைப்படி வைத்து இறைவன் திருவடியை சிந்திக்க பல்வேறு வாக்கு வரிசைகளை இனிக்கின்ற பழங்களாக இனி மலருமப்பா.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 176

கேள்வி: மோட்ச தீபம் ஏற்றும் வழி:

தேவையானவை:

  1. வாழை இலை
  2. பச்சை கற்பூரம்
  3. சீரகம்
  4. பருத்தி கொட்டை
  5. கல் உப்பு
  6. மிளகு
  7. நவ தானியம்
  8. கோதுமை
  9. நெல் (அவிக்காதது)
  10. முழு துவரை
  11. முழு பச்சை பயறு
  12. கொண்டை கடலை
  13. மஞ்சள் (ஹைபிரிட் இல்லாதது)
  14. முழு வெள்ளை மொச்சை
  15. கருப்பு எள்
  16. முழு கொள்ளு
  17. முழு கருப்பு உளுந்து
  18. விளக்கு (200 மில்லி கொள்ளளவு) – 42 விளக்குகள்
  19. தூய பருத்தி துணி (கை குட்டை அளவு) – 21
  20. சுத்தமான நெய்

விளக்கு ஏற்றும் முறை:

எல்லா பொருள்களையும் சுத்தமான நீரில் கழுவி (உப்பு உட்பட பூ தவிர) நல்ல வெயிலில் காய வைக்க வேண்டும். துணியினையும் சுத்தமாக துவைத்து மஞ்சளில் நினைத்து காய வைக்க வேண்டும். தீபம் ஏற்ற உகந்த நேரம் மாலை ஆறு மணி. எல்லா விளக்குகளையும் நன்றாக கழுவி நல்ல வெயிலில் காய வைக்க வேண்டும். மஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும். எந்த ஆலயத்தில் தீபம் ஏற்றுகிறோமோ அந்த ஆலயத்தில் முன்பாகவே முறைப்படி அனுமதி பெற வேண்டும். எந்த ஆலயத்தில் வேண்டுமானாலும் ஏற்றலாம். முடிந்த வரை ஈசானிய மூலையில் (வடகிழக்கு) நன்கு உயர்ந்த இடத்தில் ஏற்றுவது சிறப்பு. முதலில் திரி தயாரிக்க வேண்டும். நல்ல சுத்தமான பருத்தி துணியில் பச்சை கற்பூரம் கருப்பு எள் சீரகம் பருத்தி கொட்டை கல் உப்பு மிளகு ஆகியவற்றை முடிச்சு போட்டு கொள்ள வேண்டும். இந்த முடிச்சின் மறுமுனைதான் நமக்கு திரியாக பயன்பட போகிறது. ஆலயத்தில் இதற்கு என்று தேர்வு செய்யப்பட்ட இடத்தில் தலை வாழை இலையினை வைக்க வேண்டும். அதன் மேல் நவ தானியங்களை பரப்ப வேண்டும். பிறகு 21 விளக்குகளையும் தனித்தனியாக வைத்து அதனுள் எள் நிரப்ப வேண்டும். அதன் மேல் ஒவ்வொரு விளக்குக்கும் ஒரு விளக்காக மீதம் உள்ள விளக்குகளையும் வைக்க வேண்டும். நெய் நன்றாக நிரப்பப்பட வேண்டும். பின்னர் முன் செய்த திரியினை இதனுள் நன்றாக நனைக்க வேண்டும். சரியாக நடுவில் வைத்து தீபம் ஏற்ற வேண்டும்.

தீபம் மேல் நோக்கி மட்டுமே எரிய வேண்டும் (எந்த திசை பார்த்தும் இருக்க கூடாது). பார்ப்பதற்கு லிங்கம் போல் காட்சி கிடைக்கும். பிறகு பஞ்சாட்சர மந்திரத்தை (நமசிவய) குறைந்தது நூற்றி எட்டு முறை ஜபிக்க வேண்டும். (விஷ்ணு ஆலயமாக இருந்தால் அஷ்டாட்சர மந்திரம்). இறுதியாக இறைவனிடம் இப்பூவுலகில் பிறந்து இறந்த அனைத்து ஆன்மாக்களுக்கும் இந்த பூஜா பலனை சமர்ப்பிக்கிறோம். இந்த பலனால் அந்த ஆன்மாக்கள் நற்கதி சற்கதி அடைய பிராத்தனை செய்கிறோம். மேலும் இந்த பூஜையை செய்வதும் செய்ய வைப்பதும் இறைவனும் சித்தர்களுமே. நாங்கள் வெறும் கருவிகளே என்று பிராத்தனை செய்ய வேண்டும். இவ்வாறு பூஜை செய்வதோடு நிறைவு பெறுவது இல்லை. மறுநாள் நாம் பூஜை செய்த விளக்குகள் (இலை நவ தானியம் உட்பட) ஒரு துளி கூட சிந்தாமல் அனைத்து பொருட்களையும் நதியில் சேர்த்து விட வேண்டும் இது கட்டாயம். ஏனென்றால் ஒவ்வொரு பொருளும் ஏன் ஒவ்வொரு எள்ளும் கூட ஒரு ஆத்மா. ஆதலால் நதியில் சேர்த்து விட வேண்டும். கண்டிப்பாக முறையாக அனுமதி பெற்று தான் தீபம் ஏற்ற பட வேண்டும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 175

கேள்வி: பசு பாவம் செய்வதில்லையே அதற்கு மோட்சமா? அல்லது மறுபிறவியா?

தேவர்களோ மாந்தன் (மனிதன்) நிலையை விட மேம்பட்ட ஆன்மாக்களோ தாமே விரும்பி பூமியில் பிறவி எடுப்பது உண்டு. சாபத்தினாலோ பாவத்தினாலோ இவ்வாறு பிறவி எடுப்பதும் உண்டு. பாவம் காரணமாக பிறவி எடுத்த ஆன்மாக்கள் எத்தனை பிறவிகள் எவ்வகையான விலங்குகள் எந்த வனங்கள் எத்தனை மனிதரிடம் சித்ரவதை பட வேண்டும்? எத்தனை நாள் இங்குமில்லாமல் அங்குமில்லாமல் அலைய வேண்டும்? என்று எல்லாம் கூட கணக்கு இருக்கிறது. ஒரே வகை விலங்கா? அல்லது வேறு வகை விலங்கா? என்று கூட கணக்கு இருக்கிறது. ஒரு ஆத்மாவிற்கு விலங்கு பிறவி வந்து விட்டால் மீண்டும் மனித பிறவி எடுக்க எத்தனையோ கல்ப கோடி ஆண்டுகளாகும். ஆனாலும் கூட இறுதியாக மனிதனாக அல்லது தேவனாக இருந்து செய்த புண்யம் தவறுகள் இரண்டின் அளவுகளையும் இறைவன் கணித்து மீண்டும் மேம்பட்ட பிறவியை அடைய அருள் செய்வார். எனவே ஒரு முறை விலங்காக பிறந்து விட்டால் அதற்கு பாவம் இல்லை என்பது உண்மை. ஆனால் அது பாவத்தை கழிக்கத்தான் அவ்வாறு பிறந்திருக்கிறது. இப்படி அது சேர்த்த வைத்த பாவ தொகுப்பு கழியும் வரை அது பிறவி எடுத்து மீண்டும் அது மேன்மையான சிந்திக்கக்கூடிய பிறவியாக பிறக்கும். அதனால்தான் மனித பிறவி மேம்பட்டது. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று நாங்கள் (சித்தர்கள்) கூறுகிறோம். ஏன் என்றால் மனிதன் தானம் தர்மம் பிறருக்கு உதவி செய்து பாவத்தை ஒரு பிறவிலேயே போக்கி கொள்ளலாம். விலங்குகளுக்கு அந்த வாய்ப்பு இல்லாததால் மீண்டும் மீண்டும் விலங்கு தேகத்தையே (உடலையே) பெற வேண்டி இருக்கிறது. சரி விலங்கின் பாவம் எங்கு போகும்? அது விலங்காக இருந்தாலே கழியுமா? கழியாது. அதை ஒரு மனிதன் பிடித்து அடைத்து சித்ரவதை செய்வதன் மூலம் அந்த விலங்கின் பாவத்தை இவன் எடுத்து கொள்கிறான். இவனிடமிருந்து அந்த புண்யம் அந்த விலங்குக்கு போகிறது. இப்படி சில விலங்குகள் வேண்டும் என்றே தனது தவ வலிமையால் சித்ரவதை பட்டு வெகு விரைவிலேயே பிறவியை முடித்து கொள்கிறது. அதற்கும் முந்தைய புண்ய பாவம் இடம் தர வேண்டும்.