ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 75

கேள்வி: சிறுநீரகங்களை இழக்காமல் அவற்றை செயல்பட செய்ய சித்த மருத்துவத்தில் வழி உள்ளதா?

அப்படியொரு மாற்று சிகிச்சை பெறவேண்டும் என்ற விதி இருக்கும் பொழுது அவன் எத்தனை பிராத்தனை செய்தாலும் அந்த சிகிச்சையிலிருந்து தப்பிப்பது கடினம். இருந்தாலும் கூட ஆதி நிலையிலே இருப்பவர்கள் முறையான தெய்வ வழிபாட்டையும் தர்மத்தையும் செய்வதோடு சந்திரனுக்கு உகந்த ஸ்தலங்களுக்கு சென்று முடிந்த வழிபாடுகள் செய்வது கூடுமானவரை மாற்று சிகிச்சையிலிருந்து தப்பிப்பதற்கு ஒரு வாய்ப்பாக அமையும். இது போன்ற குறைகள் வருவதற்கு எத்தனையோ பாவங்கள் காரணமாக இருந்தாலும் முறையற்ற இடத்தையெல்லாம் மனிதன் ஆக்கிரமிப்பு செய்து அசுத்தப்படுத்துவதால்தான் இது போன்ற நோய்கள் மனிதனைப் பற்றுகிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஒரு இடத்தை அதற்கென்று ஒதுக்கிவிட்டால் அந்த இடத்தை அதற்கென்றுதான் பயன்படுத்த வேண்டும். ஆனால் அப்படி செய்யாமலும் மிக அநாகரீகமாக நடந்து கொள்வதும் குறிப்பாக புனித தீர்த்தம் ஆலயம் புண்ணிய நதிகளையெல்லாம் அசுத்தப்படுத்துகிறான். எல்லா வகையான தொழிற்சாலை கழிவுகளையும் புண்ணிய நதியில் கலக்கிறான். இப்படி பூமியை அசுத்தப்படுத்த அசுத்தப்படுத்த மனிதர்களின் உடலில் அசுத்தங்களை சுத்தப்படுத்தும் உறுப்புகள் செயலிழக்கத் துவங்கும். இதையும் சரி செய்து கொண்டால் மனிதனுக்கு இதுபோன்ற பிணிகள் வராமல் இருக்கும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 74

கேள்வி: தலைமுடி காணிக்கை குறித்து விளக்குங்கள்?

இறைவன் அருளால் பலமுறை இது குறித்து கூறியிருக்கிறோம். மேலும் கூறுகிறோமப்பா. ஒரு மனிதன் இறைவனை நோக்கி பக்தி செலுத்தும் பொழுது எடுத்த எடுப்பிலேயே பூர்வ புண்ணியம் இருந்தால் பக்தியை செலுத்தலாம். இல்லையென்றால் ஒரு குழந்தைத் தனமான ஒரு பக்திதான் இறைவனிடம் தோன்றும். இறைவா என்னுடைய பிரச்சனையைத் தீர்த்துவிடு. என் முடியைக் காணிக்கையாகத் தருகிறேன். இறைவா என் குழந்தைக்கு உன் சந்நிதியில் வந்து காதினை நகையலங்காரம் செய்து பார்க்கிறேன். இறைவா உன்னுடைய சந்நிதிக்கு இதை செய்கிறேன் என்பதெல்லாம் மிக மிக ஆதி நிலை பக்தியாகும். அதற்காக இதனை ஏளனம் செய்யத் தேவையில்லை.

தன்னுடைய தலை சிகையை முடி காணிக்கையாக தந்தால்தான் இறைவன் அருள்வார் என்ற மனப்பான்மை இருக்கும்வரை அந்த பக்தி நிலை சரி. ஆனால் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்தால் இறைவன் அருள்வார் மகிழ்வார். நாம் நேர்மையாக வாழ்ந்தாலே இறைவன் அருள்வார். நம் மீது கருணை செய்வார் என்ற சிந்தனை வளர்ந்த பிறகு மீண்டும் இந்த பக்தி நிலைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் வேண்டிக் கொள்ளும் பொழுது எந்த மனநிலையில் இருந்து வேண்டிக் கொள்கிறானோ அந்த வேண்டுதலை கூடுமானவரை அவன் மனநிலைக்கு ஏற்ப சரியாக கடமையாற்றுவது மிக சரியான செயலாகும். எனவே பக்தியில் எல்லா நிலைகளும் உயர்வுதான். ஒரு நிலை உயர்வு ஒரு நிலை தாழ்வு என்று நாங்கள் கூறவில்லை. ஆனால் உயரே செல்ல செல்ல தாழ்ந்த நிலையில் இருக்கின்றவனை பார்த்து உயர்ந்த நிலையில் இருப்பவன் ஏளனம் செய்ய வேண்டாம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 73

கேள்வி: பாவங்கள் ஒரு மனிதனை ஆன்மீக வழியில் செல்லவிடாது எனும் பொழுது அது எப்படி மனித குற்றமாகும்?

இறைவன் அருளால் பாவத்தை குறைத்துக் கொள்ள மனிதன் என்றாவது ஒரு சிறு முயற்சி எடுத்திருக்கிறானா? என்றுதான் நாங்கள் பார்க்கிறோம். கட்டாயம் பாவங்கள் இருக்கும் வரை இறை சிந்தனையோ பெருந்தன்மையோ தர்ம சிந்தனையோ வராது என்பது உண்மை. அதனால்தான் முதலில் ஏதாவது ஒரு ஆலயம் செல்லப் பழக வேண்டும். பிறகு அன்றாடம் சில நாழிகையாவது இறை நாமத்தை மனம் சோர்ந்தாலும் தளர்ந்தாலும் பாதகமில்லை என்று உருவேற்ற வேண்டும். எல்லாம் கடினம் என்று எண்ணினால் தனம் இருப்பவர்கள் முதலில் இந்த தனம் நமக்கு உரியதல்ல என்றோ நாம் செய்த (நல்) வினைகளுக்காக இறைவன் தந்திருக்கிறார். நமக்கும் நம் குடும்பத்திற்கும் போக எஞ்சியுள்ள தனம் அனைத்தையும் பிறருக்காக தந்துவிட்டால் நல்லது என்ற சிந்தனையை அசைபோட வேண்டும். அதனால்தான் மனம் என்பது பாவத்தை நோக்கி செல்லாமல் இருக்கும். பாவங்கள் இருக்கிறது. எவ்வாறு தர்மம் செய்வது? அந்த பாவங்கள்தானே மனிதனை மேல் நோக்கி செல்லவிடாமல் தடை போடுகிறது என்ற சிந்தனை வரும் பொழுதே அந்த பாவங்களை நீக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஒரு எண்ணம் வந்துவிட வேண்டும். உடல் ஊனம் நான் எப்படி வாழ்வேன்? என்பதை விட இந்த உடல் ஊனத்தோடு என்ன முடியுமோ அதை செய்வேன் என்பதுதான் மனஉறுதி. எனவே யாம் மீண்டும் மீண்டும் கூறுவது என்னவென்றால் வறுமை தண்டனையல்ல. வித்தை கற்காமை தண்டனையல்ல. பிணி தண்டனையல்ல. அறியாமை ஒன்று தான் தண்டனை.
விதி மனிதனிடம் விளையாடுவது அறியாமையை வைத்துத்தான்.

அறியாமை என்றால் என்ன?

ஆசை பற்று தனக்கு வேண்டும் தன் குடும்பத்திற்கு வேண்டும் தன் வாரிசுக்கு வேண்டும் தனக்குப் பின்னால் தன் பிள்ளைகள் சந்தோஷமாக இருக்க வேண்டும் எனவே எப்படியாவது முடிந்தவரை தனத்தை சேர்க்க வேண்டும் என்று எண்ணுகிறானே? இதை முதலில் மனதை விட்டு அகற்றினாலே பாவங்கள் அகன்றுவிடும். எனவே தான் மீண்டும் மீண்டும் இந்த ஜீவ அருள் ஓலையிலே பரம்பொருள் கூறுகின்ற தர்ம விளக்கத்தைக் கூறிக்கொண்டே இருக்கிறோம். சோதித்துக்கூட பார்க்கலாம். பாவம் இருக்கிறது என்னால் ஆலயம் செல்ல முடியவில்லை பிராத்தனை செய்ய முடியவில்லை. குடும்பத்தில் கஷ்டம் இருக்கிறது. அடுத்தடுத்து நஷ்டம் வருகிறது. போராட்டமாக இருக்கிறது. போர்க்களமாக இருக்கிறது. ஒன்று போனால் ஒன்று கஷ்டம் வருகிறது. இதில் எப்படி நான் தர்மத்தை செய்ய முடியும்?

முதலில் நான் பட்ட கடனையெல்லாம் அடைக்க வேண்டும். நான் படும் கஷ்டங்களிலிருந்து வெளியே வரவேண்டும். நான் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருந்தால் தானே எதனையும் செய்ய முடியும் என்ற எண்ணத்தை விட்டுவிட்டு அந்த நிம்மதியும் சந்தோஷமும் கிடைப்பதற்காக முதலில் எப்படி அன்றாடம் உலகியல் கடமைகளை மனிதன் ஆற்றுகிறானோ அதைப்போல அவனவனால் முடிந்த உதவியை அன்னத்தை ஆடையை தனத்தை மருத்துவ உதவியை தேடி தேடி தேடி தேடி தேடி தேடி தேடிச் சென்று தர தர பாவங்கள் குறைந்து கொண்டே வரும். பாவங்கள் குறைந்தாலே மனம் அறியாமையிலிருந்து விடுபட்டுவிடும். எனவேதான் கடுமையான பூஜைகளையும் தவங்களையும் நாங்கள் கூறாமல் இந்த எளிய வழிமுறைகளைக் கூறுகிறோம். வாய்ப்புள்ளவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 72

கேள்வி: சக்தியும் சிவனும் வெவ்வேறா? அல்லது ஒன்றா?

தங்கமும் நகையும் வெவ்வேறா? (பதில் – இல்லை ஒன்றுதான்). அதைப்போல் தானப்பா.

கேள்வி: அவ்வாறிருக்க சக்திக்கும் சிவனுக்கும் ஏன் தனித்தனி வழிபாடுகள்?

முன்புதான் கூறினோமேயப்பா. மனிதனுக்கு அனைத்தும் விதவிதமாக இருக்க வேண்டும். உண்ணுகின்ற உணவாக இருந்தாலும் உடுத்துகின்ற உடையாக இருந்தாலும் செல்லுகின்ற மார்க்கமாக இருந்தாலும் ஒரே விதமாக இருந்தால் அவன் ஏற்றுக்கொள்ள மாட்டான். அவனிடம் இருக்கின்ற தன்முனைப்புதான் இத்தனை விதமாக இறைவனை பிரித்து வைத்திருக்க உதவியிருக்கிறது அல்லது அதுதான் சரி என்று அவனுக்கு பட்டிருக்கிறது. எதுவுமே இல்லை ஒரு விலங்கைப் பார்த்து இதுதான் இறைவன் என்றால் அதையும் மனிதன் ஏற்றுக் கொள்வான். அதன் பின்னாலும் சிலர் செல்வார்கள். எனவே நீ சக்திக்குள்ளேயே சிவத்தைக் காணலாம். சிவத்திற்குள்ளேயே சக்தியைக் காணலாம். அதையெல்லாம் உணர்ந்து தானே அந்த அர்த்தநாரி வடிவத்தையே அன்று இறைவன் எடுத்திருக்கிறார். யாருக்கு எந்த வடிவில் இறைவனை வணங்க பிடிக்கிறதோ அந்த வடிவில் வணங்கிவிட்டுப் போகட்டும் என்றுதான் இறைவனும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

கேள்வி: பூனை வழிபட்ட புனுகீஸ்வரர் பற்றி

சர்ம பிணிகளை நீக்கிக் கொள்ள முடியாமல் கர்மவினையால் பாதிக்கப்பட்டவர்கள் சென்று வழிபட வேண்டிய ஸ்தலங்களில் இதுவும் ஒன்று.

கேள்வி: நண்டு வழிபட்ட ஈஸ்வரர் பற்றி:

இந்த நண்டு வடிவில் மட்டுமல்ல பல்வேறு மகான்களும் ஞானிகளும் இன்றளவும் வழிபடக்கூடிய ஸ்தலங்களில் அதுவும் ஒன்று. பிரம்மஹத்தி தோஷங்களில் நீக்கக்கூடிய ஸ்தலங்களில் அதுவும் ஒன்று.

குறிப்பு: பூனை மற்றும் நண்டு வழிபட்ட கோவில்களை பற்றி அறிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 71

கேள்வி: ஸ்ரீராமருக்கு எவ்வாறு மூன்று விதமான தோஷங்கள் ஏற்பட்டது?

அயனம் என்றால் பாதை என்பதை புரிந்துகொள். ராமாயணம் எனும் பொழுது ராமரின் வாழ்வின் பாதை. வாழ்வு நிலை என்று எடுத்துக் கொண்டு பார்க்க வேண்டும். இதை எப்படி புரிந்து கொள்ள வேண்டும்? மேலிடத்து நாடகத்தை மனிதர்கள்தாம் தாம் அறிந்த வழியில் சிந்தித்தால் குழப்பம்தான் மிஞ்சும். எனவே இந்த நிலையில் புரிந்துகொள்ள வேண்டியது ஒன்றுதான்.

நல்ல நோக்கத்திலே கூட பிறரை வதம் செய்தால் தோஷம் வரும் என்றால் சுயநல நோக்கத்திலே பிறரை வதம் செய்தால் அந்த தோஷமும் பாவமும் எத்தனை பிறவி தொடரும். எனவே நல்ல நோக்கத்திற்காகவே பிற உயிரை எடுக்கக்கூடாது எனும் பொழுது சுயநல நோக்கிலே பிற உயிரை எடுத்தால் அதனால் வரக்கூடிய பாவங்களும் அதன் விளைவுகளும் எத்தனை கடுமையாக இருக்கும்? என்பதை புரிந்து கொண்டு சாத்வீகமாக வாழ வேண்டும் என்பதுதான் இதன் அடிப்படை பொருளாகும்.

கேள்வி: தாய்க்கும் குருவிற்கும் என்ன வித்தியாசம்?

தாய் பலருக்கு குருவாக இருக்கலாம். ஏனென்றால் மராட்டிய மண்ணிலே பிறந்து வீரம் செறிய போரிட்டானே அதை வீரம் என்று மனிதர்கள் கூறலாம். அதற்குள் நாங்கள் போக விரும்பவில்லை. அந்த மன்னனுக்கு தாய்தான் குரு போல இருந்து போதித்திருக்கிறாள். இன்னும் பலருக்கு தாய் குருவாக இருந்திருக்கிறாள். ஆனால் குருவோ எல்லோருக்கும் தாயாக எப்பொழுதுமே இருந்து கொண்டிருக்கிறார்.

கேள்வி: நாக தோஷத்திற்கு என்ன மந்திரங்கள் சொல்வது?

நவக்கிரக வழிபாட்டையும் செய்யலாம். அதோடு ஒவ்வொரு நவக்கிரத்திற்கு உண்டான அதிதெய்வ வழிபாட்டையும் சேர்த்து செய்வது சிறப்பு.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 70

கேள்வி: போக மகரிஷியின் தொடர்பு கிடைக்க என்ன செய்ய வேண்டும்? அதற்கு ஆசி கூறுங்கள்.

இறைவனின் அருளைக் கொண்டு இன்னவனின் முன் இரு வினாக்களுக்கு பின்னொரு தருணம் இன்னவன் எம்முன்னே அமரும் தருணம் யாங்கள் வாக்குகளை பரவலாகக் கூறுகின்ற தருணம் இயம்பிடுவோம். அதே தருணம் போகன் என்று இல்லை. எந்த மகானுடன் மனிதன் தொடர்பு கொள்ள வேண்டும். எந்த சித்தர்களுடன் மனிதன் தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் முதலில் மனிதன் தன்னிடம் உள்ள அனைத்து தீய பழக்க வழக்கங்களையும் குணங்களையும் விட்டுவிட்டு இன்னும் கூறப்போனால் பல மனிதர்களிடம் தன்னிடம் இன்ன இன்ன வேண்டாத குணங்கள் இருக்கின்றன என்று கூட புரிந்துகொள்ள முடியாமல் வாழ்கிறார்கள். அவற்றையெல்லாம் சுய ஆய்வு செய்து மெல்ல மெல்ல விட்டுக்கொண்டே இன்னொருபுறம் எந்த சித்தனோடு தொடர்பு கொள்ள வேண்டும் என்று மனிதன் எண்ணுகிறானோ அந்த சித்தனின் நாமத்தை (பெயரை) அடிக்கடி ஆழ்மனதிலே சொல்லிக் கொண்டு இருப்பதும் குறிப்பாக முன் பிரம்ம முகூர்த்தத்திலே எழுந்து வடகிழக்கு திசை நோக்கி பத்மாசனமிட்டு அமர்ந்து ஓர் முக சிந்தனையோடு அந்த சித்தனின் நாமாவளியை (பெயரை) மனதிற்குள் உருவேற்ற உருவேற்ற சித்தர்களின் தொடர்பு என்பது மிக எளிதாகும்.

ஆனால் சிக்கல் எங்கே உருவாகிறது? என்றால் சித்தர்களோடு எனக்கு தொடர்பு இருக்கிறது. சித்தர்கள் என்னோடு பேசுகிறார்கள் அல்லது நான் சித்தர்களை தரிசனம் செய்திருக்கிறேன் என்பது ஒரு மனிதனை பொறுத்தவரை அந்தரங்கமாக இருக்கும் வரையில் பிரச்சனை இல்லை. அதனை பலரும் நம்ப வேண்டும் என்று அவன் முயற்சி செய்யும் பொழுதுதான் சிக்கல் உருவாகிறது. எனவே இதனை அவன் தனித்தன்மையோடு வைத்துக்கொண்டு இந்தவிதமான முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டு இதோடு பெருவாரியான தொண்டுகளையும் தேகவழி (உடல்வழி) தொண்டுகளையும் பொருள் வழி தொண்டுகளையும் செய்து கொண்டே இருந்தால் கட்டாயம் சித்தர்களின் தொடர்பு எல்லா மனிதர்களுக்குமே எளிதாகக் கிட்டும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 69

கேள்வி: தமிழ் மொழியை நீங்கள்தான் உருவாக்கினீர்களா? உலகத்தில் தோன்றிய முதல் மொழி எது? வேதத்தை இறைவன்தான் உருவாக்கினாரா?

உலகில் தோன்றிய முதல் மொழி குழந்தையின் அழுகுரல்தானப்பா. இந்த நிலையிலே தமிழ் ஒத்து பல்வேறு மொழிகளை இறைவன்தான் உருவாக்கினாரப்பா. ஆனால் அப்படி தோன்றிய மொழிகளுக்கு தோண்டாற்றக்கூடிய வாய்ப்பையும் பணியையும் இறைவன் எமக்கு தன் அளப்பெறும் கருணையால் தந்தாரப்பா.

கேள்வி: நெருங்கிய உறவில் திருமணம் செய்யலாமா? மருத்துவர்களோ நெருங்கிய உறவில் திருமணம் செய்தால் பிறக்கும் குழந்தை அங்கஹீனமாக பிறக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இதைப் பற்றி?

இறைவனின் கருணையால் நெருங்கிய உறவில் திருமணம் செய்வது இருக்கட்டும். திருமணம் செய்த பிறகுதான் உறவே நெருங்கவேண்டும். இந்த நிலையிலே இவையெல்லாம் மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட பழக்கம். ஒரு மார்க்கத்தை பின்பற்றக்கூடியவன் கூடாது என்கிற விஷயத்தை வேண்டுமென்றே இன்னொருவன் பின்பற்றுகிறான். நீ கூறிய மாற்று மார்க்கம் மட்டுமல்ல. இந்த இந்து மார்க்கத்திலேயே தென்பகுதியிலே ஒரு சமூகம் இருக்கிறது. அவர்கள் நீ கூறிய அதாவது தங்கை முறை என்று மற்ற பிரிவுகளால் ஏற்கப்பட்ட ஒரு முறையை தாரமாக இன்றும் ஏற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இவையெல்லாம் மனிதர்கள் வகுத்துக் கொண்ட ஒரு நிலை. நாங்கள் வேறு விதமாகக் கேட்கிறோம். ஒரே குடும்பத்தில் அண்ணன் தங்கையாக பிறந்து ஒன்றாக வளர்கிறார்கள். எனவே தங்கை அண்ணன் என்று தெரிகிறது. விதிவசத்தால் பால்ய வயதில் இருவரும் பிரிந்து விடுகிறார்கள். பல ஆண்டுகள் கழித்து எங்கோ சந்திக்கிறார்கள். இருவரும் திருமணம் செய்து கொண்டால் அப்பொழுது தங்கை என்ற உணர்வு அங்கு தலைதூக்குமா? சிந்தித்து பார்க்க வேண்டும். இதற்காக இதை நாங்கள் ஆதரிக்கவில்லை. மனித மனம் வக்கிரமாகி விடக்கூடாது என்பதற்காகத்தான் நாகரீகமாக வாழவேண்டும் என்பதற்காகத்தான் உறவுமுறை ஏற்படுத்தப்பட்டது. எம்மைப் பொருத்தவரை தனக்குள் பிரிவினையை வளர்த்துக் கொண்டு நான் இந்த பிரிவை சேர்ந்தவன். எனவே இதற்குள்தான் உறவு வைத்துக் கொள்வேன் என்பது மூடத்தனம். அந்த வகையில் பார்க்கும் பொழுது தொடர்பில்லாத இடத்திலிருந்து ஒருவன் பெண்ணை தேர்ந்தெடுப்பதும் பெண் ஆணை தேர்ந்தெடுப்பதும் மிகவும் சிறப்பு. உடல் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. நல்லதொரு ஆரோக்கியமான சந்ததிகள் பிறப்பதற்கும் ஏற்புடையதாகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 68

கேள்வி: ஆன்மா என்றால் என்ன?

என்ன? என்று எம்மை வினவுவதைவிட என்ன? என்பதை அறியுங்கால் அவனவன் மனதை வினவினால் ஆன்மா என்பது என்ன? என்பது புரியவரும். புலன்களுக்குப் புலப்படாமல் இருக்கின்ற ஒரு உயிர் தத்துவம் தான் ஆன்மா. அந்த ஆன்மாவை புரிந்து கொள்ள சுய ஆய்வும் பாவங்களற்ற தன்மையும் மிக அவசியம். அன்றாடம் வடகிழக்கு திசை நோக்கி அமர்ந்து விடுகின்ற மூச்சுக் காற்றை சற்றே நிதானித்து உற்று கவனித்து வந்தால் ஆன்மா என்பது என்ன? தான் என்பது என்ன? தேகம் என்பது என்ன? இறை என்பது என்ன? இந்த உலக வாழ்வு என்பது என்ன? என்பது மெல்ல மெல்ல புரியவரும். நாங்கள் எத்தனை வார்த்தை பயன்படுத்திக் கூறினாலும்கூட ஐயம் மேல் ஐயம் வந்து கொண்டுதான் இருக்கும்.

கேள்வி: அழியாத புண்ணியம் எது?

புண்ணியம் எப்பொழுதுமே அழியாதப்பா. புண்ணியத்தால் ஒரு மனிதன் பெறக்கூடிய விஷயத்தைப் பொறுத்துதான் அது அழியக்கூடியதா? அழியாததா? என்பதை தீர்மானிக்க முடியும். புண்ணியம் யாவற்றையும் இறைவனுக்கே அர்ப்பணித்து அருட்புண்ணியமாக மாற்றிக் கொண்டால் அதனால் வரக்கூடிய பலன்கள் என்றும் அழியாது. ஆனால் புண்ணியம் யாவும் லோகாய (உலக) ஆதாயத்திற்காக ஒரு புண்ணியமாக மாற்றிவிட்டால் அதனால் வரக்கூடிய விஷயங்கள் யாவும் அழிந்துவிடும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 67

கேள்வி: மார்கழி (2012-2013) மாதத்தில் மகா பிரளயம் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. அது உண்மையா?

இறைவன் அருளால் பிரளயம் என்றால் என்ன? என்று நீ எண்ணுகிறாய்? (சுனாமி போன்ற அழிவு)

ஒன்று தெரியுமா? ஒவ்வொரு இல்லத்திலும் இது அடித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஏற்கனவே இது போன்ற பேரழிவு குறித்து கூறியிருக்கிறோம். இப்போதைக்கு உலகம் என்பது சிறைச்சாலை ஆன்மாக்கள் செய்கின்ற பாவ புண்ணியத்திற்கு எத்தனையோ சிறைச்சாலைகள் உண்டு. அதில் ஒன்றுதான் இந்த புவி உலகம். ஒட்டு மொத்தமாக இந்த சிறைச்சாலையை அழிக்கின்ற எண்ணம் இறைவனுக்கு இல்லை. பகுதி பகுதியாக அவ்வப் பொழுது சிறிய அழிவுகள் ஏற்படும். மற்றபடி இந்த சிறைச்சாலை அழிக்கப்பட வேண்டும் என்றால் இங்குள்ள அனைவருமே புனிதர்களாக மாற வேண்டும். புண்ணிய ஆத்மாக்கள் அத்தனை பேரும் புனிதர்களாக மாறிவிட்டால் வேண்டுமானால் இந்த சிறைச்சாலை தேவையில்லை என்று இறைவன் அழித்துவிடலாம். அப்படியெல்லாம் நடக்கக்கூடாது என்று மனிதன் கங்கணம் கட்டிக் கொண்டு புனிதம் ஏன் செய்ய வேண்டும்? புண்ணியத்தை செய்து எதற்காக இந்த உலகத்தை இழக்க வேண்டும்? என்று அவன் தவறு மேல் தவறு செய்து கொண்டிருப்பதால் நீ கூறுவது போல் இந்த மார்கழி அல்ல எந்த மார்கழி வந்தாலும் எந்த ஆண்டு வந்தாலும் ஒட்டு மொத்தமாக இந்த உலகம் அழியப் போவதில்லை. ஆங்காங்கே சிறு சிறு அழிவுகள் ஏற்படுவது என்பது இயல்பு.

கேள்வி: எல்லோரின் சார்பாக கேட்கிறேன். தங்களை ஸ்தூல தேகமாக (உடல்) தரிசிக்க நாங்கள் என்ன செய்ய வேண்டும்?

முதலில் இறைவனை தரிசிக்க யாது செய்ய வேண்டும்? என்று எண்ணி யாங்கள் கூறிய வழிமுறைகளையெல்லாம் பின்பற்றிக் கொண்டே வந்தால் இறை தரிசனமே மிகப்பெரிய தரிசனம் என்பதை புரிந்து கொள்ளலாம். அதை நோக்கி சென்றாலே போதுமப்பா. அதற்கிடையே மகான்கள் தரிசனம் என்பது இயல்பாகவே நடக்கும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 66

கேள்வி: குடும்ப ஒற்றுமை பற்றி:

இறைவன் அருளால் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்பட வேண்டும். குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் குடும்பத்தில் கணவன் மனைவி குழந்தைகள் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றால் மனிதரீதியாக பார்த்தால் நிறைய செல்வம் வேண்டும் தனம் வேண்டும். மனைவி எண்ணுவதையெல்லாம் கணவன் உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும். கணவன் எண்ணுவதையெல்லாம் மனைவி உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும். கணவனும் மனைவியும் விரும்புவதை குழந்தைகள் நிறைவேற்றித் தர வேண்டும். இப்படித்தான் ஒவ்வொருவரும் எதிர்பார்க்கிறார்கள். இந்த எதிர்பார்ப்புதான் ஏமாற்றம் அடையும் பொழுது கோபமாக வெடிக்கிறது. பிரச்சனையாக உருவெடுக்கிறது. எனவே பிறரிடம் எதிர்பார்ப்பதை குறைத்துக் கொண்டாலே கூடுமானவரை பிரச்சனைகள் குறைந்து விடும். இது ஒருபுறம் இருந்தாலும் கூட பக்திரீதியாக பார்க்கும் பொழுது துர்க்கை வழிபாட்டை தொடர்ந்து செய்து கொண்டு வந்தால் கட்டாயம் குடும்பத்தில் அமைதியும் ஒற்றுமையும் ஏற்படும்.

அகத்திய மாமுனிவரின் மனைவியைப் பற்றி அகத்திய மாமுனிவர் வாக்கு:

இறைவன் அருளைக் கொண்டு யாமே எம் தாரத்தைக் (மனைவி) குறித்து கூறுவது என்பது அத்தனை சிறப்பாக இராது என்றாலும் கூட நல்விதமாக அன்னையின் (பராசக்தி) அருளைப் பெற்று இறைவனின் கருணையாலே எம்மில் ஒரு பாதியாக இருந்து அந்த பாவத்தில் கூறுவதென்றால் இப்படி சுருக்கமாகக் கூறிவிடுகிறோம். அவள் பெண்பால் அகத்தியர். நான் ஆண்பால் லோபாமுத்திரை அவ்வளவே.