ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 634

கேள்வி: ஐயனே இயலாமையை என்னும் போது கோபமும் வருத்தமும் வருகிறது. இதிலிருந்து தப்பிக்க என்ன வழி?

எண்ணங்களின் தொகுப்பான மனம் பலவீனமாக இருக்கின்றது என்பதின் பொருள் இது. அதீத சினம். அதீத சோர்வு. அதீத வருத்தம். அதீதமான எந்த ஒரு உணர்வு நிலையும் மனதின் பலவீனத்தை காட்டுகிறது. உடல் பலவீனமானால் நோய் வருவது போல எண்ணங்கள் எண்ணங்களின் தொகுப்பான மனம் பலவீனமானால் இவ்வாறு உணர்வுகளின் விளிம்பில் மனிதன் நின்று விடுகிறான். ஆனால் இவற்றால் ஆகப்போவது ஒன்றும் இல்லை. அதீத உணர்வு நிலையால் மனிதனின் தேக நலம் பாதிக்கப்படும். அவரின் செயல் திறன் குன்றும். எனவே அதீத சோகமோ துன்பமோ அல்லது சோர்வோ இவைகள் ஒரு மனிதரிடம் இருக்கிறது என்றால் என்ன பொருள். இதுபோல் மனம் மிக மிக பலவீனமாக இருக்கிறது என்பது பொருள்.

மனிதனின் எண்ணத்திலே இவ்வாறெல்லாம் நடக்க வேண்டும். இவ்வாரெல்லாம் நான் செயலை துவங்குகிறேன். அது இவ்வாறெல்லாம் சென்று முடிய வேண்டும் என்று ஒரு எதிர்பார்ப்பை வைத்திருக்கிறான். ஆனால் நடைமுறையில் அந்த எதிர்பார்ப்பு நடக்காமல் தடை மேல் தடை வந்துவிட்டால் போதும் அப்படியே அமர்ந்து விடுகிறான். எனவே மனிதன் தன் மனதை உறுதியாக பலமாக வைத்திருக்க வேண்டும். பலமான மனம்தான் மனிதனுக்கு நல்லதொரு ஆரோக்கியத்தை தரும். தேகம் உற்சாகமாக இருக்க வேண்டும். உள்ளமும் உற்சாகமாக இருக்க வேண்டும். எனவே இதற்கு எளிய வழி எளிய முறையில் முதலில் பிரார்த்தனைகளை செய்து விட்டு மனதை சுய ஆய்வு செய்து எப்படி இல்லத்திலே வேண்டாத பொருள்கள் இருந்தால் இல்லம் தேவையற்ற பொருட்களால் நிரம்பி இருந்தால் அந்த இல்லம் எப்படி இருக்குமோ விரும்பத்தகாது இல்லமாக இருப்பது போல உள்ளத்தில் தேவையற்ற எண்ணங்கள் இருந்தால் அது விரும்பத்தகாத உள்ளமாகத்தான் இருக்கும் பலவீனமாகி.

எனவே எந்தெந்த பொருட்கள் தேவையில்லை என்று மனிதன் இல்லத்தை சுத்தம் செய்யும் போது முடிவெடுக்கலாம். அதேபோல உள்ளத்தையும் அன்றாடம் ஆய்வு செய்து எந்தெந்த எண்ணங்கள் தேவையில்லையோ அந்த எண்ணங்களை எண்ணுவதை நிறுத்தி தொடர்ந்து நல்ல எண்ணங்களை மட்டும் வளர்த்துக் கொண்டே வந்தால் மனம் உறுதி அடையும். மனம் உறுதி அடைந்து விட்டால் எந்த விதமான நிகழ்வு நடந்தாலும் மனதிற்கு அது குறித்து அச்சமும் குழப்பமோ கவலையோ இருக்காது. அந்த நிலையிலே தொடர்ந்து ஒரு மனிதன் இருந்தால் தொடர்ந்து தேகத்திற்கும் பயிற்சிகளை செய்து கொண்டே வந்தால் கட்டாயம் அதீத மிகு உணர்வு நிலைக்கு ஆளாகாமல் இருக்கலாம். அப்படி அதீத உணர்வு நிலை வரவில்லை என்றால் மனம் சோர்ந்து போகாது. மனம் சோரவில்லே என்றால் உடலும் நன்றாக இருக்கும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 633

அகத்திய மாமுனிவர் பொதுவாக்கு:

ஐப்பசி மாதமான இம்மாதத்தில் அனைவரும் நதிகளான காவிரியிலும் தாமிரபரணியிலும் நீராடுதலை கட்டாயமாக செய்ய வேண்டும். இதை யான் அறிவியல் பூர்வமாகவே எடுத்துரைக்கின்றேன். இந்த ஐப்பசி மாதத்தில் துருவ எனப்படும் நட்சத்திரம் அதைக் கோள் என்று கூட வைத்துக் கொள்ளலாம். அந்த நட்சத்திரமானது இவ் பூமியை நெருங்கி இம்மாதத்தில் (ஐப்பசி) பிரகாசிக்கும். சூரியனும் சந்திரனும் கீழ்நோக்கி பயணிக்கும். மேலிருந்து கிடைக்கும் நல் சக்திகளை இக்கோளானது தடுத்துவிடும். மேலிருந்து கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் மூலம் கிடைக்கின்ற நன்மை தரக்கூடிய ஒளியை இக்கோளானது உள்வாங்கி தீயதை பிரதிபலிக்கும். இந்த தீய ஒளியானது மனிதர்கள் உடம்பில் படும் பொழுது நோய் நொடிகள் வந்து இறை பலன்கள் கிட்டாமல் போவது போன்ற பலன்கள் ஏற்படும். இவற்றில் இருந்து மனிதர்களை காக்கவே யாம் காவேரி நதியை உருவாக்கினோம். தாமிரபரணி நதியையும் உருவாக்கினோம். இதை யாம் அறிவியல் ரீதியாகவே உருவாக்கியுள்ளோம். இவ்வுலகமானது அழிவை நோக்கியே செல்கின்றது. அநியாயங்களும் அக்கிரமங்களும் பெருகும். மனித குலம் எண்ணிலடங்கா துன்பத்திற்கு ஆளாவார்கள்.

நல்லோர்களையாவது யாம் காப்பாற்ற வேண்டியே வாக்குகளாக செப்புகின்றோம். அத்தீய ஒளியில் இருந்து உங்களை காப்பாற்றிக் கொள்ள கட்டாயமாக காவிரியிலும் தாமிரபரணியும் நீராட வேண்டும். நவகிரகங்களின் ஒளியும் இம்மாதத்தில் கதிர்வீச்சாக அதிகமாக இருக்கும். அதை மனிதர்களுக்கு நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளவே யான் நவ கைலாயங்களையும் நவ திருப்பதிகளையும் யாமே உருவாக்கினோம். மனிதர்கள் அந்த தீய ஒளியில் இருந்து தப்பித்துக் கொள்ள நவகிரகங்களின் நன்மைகளைப் பெற நதிகளில் நீராடிவிட்டு நவகைலாயங்களையும் நவதிருப்பதிகளையும் நல்முறையாக பக்தியோடு தரிசனம் செய்தால் நன்மைகள் பெருகும். நதிகள் ஆன காவிரியிலும் தாமிரபரணியிலும் இம்மாதத்தில் (ஐப்பசி) ஈசனும் பெருமாளும் இவையன்றி கூற பிரம்மாவும் நல்முறையாக வந்து நீராடிச்செல்வார்கள். இம் மாதத்தை (ஐப்பசி) இதை சனியவனும் சரியாகப் பயன்படுத்திக் கொள்வான். இம்மாதத்தில் (ஐப்பசி) சனியவன் ஆதிக்கமும் சற்று அதிகமாக இருக்கும். அவந்தனுடைய சக்திகள் மிகுந்து காணப்படும். சனியவன் என்பவன் நேர்மையுடனும் உண்மையான பக்தியுடன் நல் ஒழுக்கத்தோடு இருப்பவர்களுக்கு வாரி தருவான். தீய செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இம் மாதத்தில் அவந்தன் தக்க தண்டனையும் வழங்குவான். வரும் காலங்கள் அழிவு காலங்கள்.

என்னுடைய ஒவ்வொரு வாக்கிற்கும் அறிவியல் பூர்வமாகவே யாம் நிரூபித்து உருவாக்கியுள்ள பெருமாளின் நவதிருப்பதிகள் ஈசனின் நவகைலாயங்கள் நல்முறையாக நீராடி விட்டு நீராடி விட்டு சென்று சென்று கொண்டே இருந்தால் தப்பித்துக் கொள்ளலாம். இன்னும் என்னுடைய வாக்கு ஒவ்வொன்றும் அறிவியலோடு சம்பந்தப்படுத்தி அறிவியலும் இறைவனும் எப்படி என்பதை நான் ஒவ்வொரு வாக்குகளாக எடுத்துரைப்போம். பக்தர்கள் இதனை பயன்படுத்தி நன்றாக வாழுங்கள். இவ்வுலகம் அழிவு நிலையை நோக்கி செல்கின்றது. சித்தர்கள் யாங்கள் நல் மனிதர்களையாவது காப்பாற்ற வேண்டியே வாக்குகள் உரைத்து கொண்டிருக்கின்றோம். இவ்வுலகத்திற்கு மனிதனாலே மனிதர்களுக்கு அழிவு ஏற்படும் அக்காலம் வந்துவிட்டது. சித்தர்கள் நாங்கள் ஒவ்வொரு ரூபத்திலும் சென்று ஒவ்வொரு மனிதர்களின் மனதை மாற்றி அந்த அழிவுகளை தடுத்துக் கொண்டே இருக்கின்றோம். இன்னும் சூட்சுமமாகவே யாம் என்னென்ன அறிந்திருக்கிறேனோ அவற்றையெல்லாம் இவ்வுலகத்திற்கு அறிவியல் பூர்வமாகவே தெரிவிக்கும் சமயங்கள் வந்துவிட்டது. நல்லோர்கள் வாழட்டும். ஆசிகள் ஆசிகள் நலமாக நலமாக.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 632

கேள்வி: மங்கல சின்னமாக குங்குமத்தை தவிர வேறு எதனை வைத்துக் கொள்ளலாம்?

குங்குமத்தை விட நேரடியாக தூய்மையான சந்தனத்தை மங்கலச் சின்னமாக வைத்துக் கொள்ளலாம். ஆனால் உடலுக்கு தீங்கை தரும் ரசாயனங்களையெல்லாம் வைத்துக் கொள்வதை நாங்கள் ஏற்றுக் கொள்வதில்லை. நல்ல முறையில் தயாரிக்கப்பட்ட திருநீற்றை வைத்துக் கொள்ளலாம். பெண்கள் அப்படி செந்நிற வண்ணத்தை இட்டுக் கொள்ளாமல் மங்கலமான கஸ்தூரி மஞ்சள் பொடியை பொடித்து வைத்துக் கொள்ளலாம். இதுதான் சித்தர்களின் முறையாகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 631

எத்தனை தான் ஆரோக்கியமாக சூழலில் வாழ்ந்தாலும் ஒருவனுக்கு பிணி வர வேண்டும் என்ற விதி நிலை வந்து விட்டால் பிணி வந்தே தீருமப்பா. இறைவனை தொடு. உனக்கு சிகிச்சையே தேவையில்லையப்பா. எத்தனையோ வகையான சிகிச்சை முறைகள் காலகாலம் சித்தர்களால் மனிதர்களுக்கு தெரிவிக்கப்பட்டு வந்திருக்கிறது. மூலிகைகளை ஏற்பது. எந்த உணவையும் ஏற்காமல் விரதத்தோடு இருந்து பிணைகளை நீக்குவது. வெறும் நீரை மட்டும் பருகி சில பிணிகளை நீக்குவது. உடலிலே சில இடங்களில் சில குறிப்பிட்ட அழுத்தங்களை தந்து நோய்களை நீக்குவது. எந்த வகையான அழுத்தங்களையும் தராமல் குறிப்பிட்ட இடத்தை உற்று நோக்கி திருஷ்டி சிகிச்சை என்ற ஒன்று இருக்கிறது. இப்படி எல்லாம் பல்வேறு சிகிச்சை முறைகள் இருப்பது உண்மை. ஆனால் தெள்ளத் தெளிவாக கற்று உணர்ந்த மனிதர்கள் இன்று குறைவு. எப்பொழுதுமே அரைகுறை அறிவு ஆபத்தை தரும் என்பதை புரிந்து கொண்டு ஒரு துறையில் தெளிவான அறிவு இல்லாத மனிதர்கள் இதுபோன்ற எந்த முயற்சியும் செய்தல் கூடாது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 630

கேள்வி: இறைவனை அடைய சாஸ்திரங்களை கடைபிடிக்க வேண்டுமா?

மனித ஆத்மாக்கள் கடைத் தேறுவதற்காக சாஸ்திரங்கள் எழுதப்பட்டுள்ளது என்பது உண்மைதான். இதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் பரிபூரண சரணாகதி தத்துவத்தில் ஆழ்ந்து விட்ட பிறகு சாஸ்திரங்களை அதிகம் கவனிக்க வேண்டாம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 629

கேள்வி: மௌனம் பற்றி:

மௌனத்தை குறித்து பேசினாலே மௌனம் பங்கமாகிவிடுமப்பா. இதுபோல் நிலையிலேயே குரு தட்சிணாமூர்த்தியை குருவாரம் சென்று முடிந்த வரையில் வழிபாடுகளை செய்து வந்தாலும் தட்சிணாமூர்த்தி வழிபாட்டை அன்றாடம் செய்து வந்தாலும் மௌனத்தவம் ஒருவனுக்கு சித்திக்கும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 628

கேள்வி: இறைவனை வணங்க சிறப்பான காலம் நேரம் ஏதும் உண்டா?

இறைவனை வணங்க காலம் நாழிகை ஏதும் இல்லைப்பா. மனிதன் விருப்பத்திற்கேற்ப எப்பொழுது வேண்டுமானாலும் இறைவனை வணங்கலாம். அது வணங்குகின்ற மனிதனின் மன நிலையைப் பொறுத்தது. மனதிலே எழுகின்ற பக்தி நிலையைப் பொறுத்தது. இதற்கு எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லை.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 627

கேள்வி: சிவனேனு இரு என்பதன் பொருள் என்ன?

சிவனேன்னு இரு என்பதை எதையும் செய்யாமல் இரு என மனிதன் எடுத்துக் கொள்கிறான். அப்படியல்ல ஒரு மனிதன் புறத்தோற்றத்திலேயே செயல்படாதது போல் தோன்றினாலும் அவன் ஆத்மா நன்றாக பலம் பெற்று வினைகளை எல்லாம் முற்றிலுமாக எரித்து பிறகு சதா பத்மாசனத்திலேயே அமர்ந்து எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அந்த இறையோடு தன்னை ஐக்கியப் படுத்திக் கொண்டு சதா சர்வ காலமும் அந்த இறையோடு தொடர்பில் இருக்கும் பொழுது அந்த தவத்தின் பலன் ஒலி ஆற்றல் அலைகள் எல்லாம் அவன் சார்ந்திருக்கும் இடத்தை சுற்றி பல நன்மைகளை செய்யும். அப்படி இருப்பதற்குப் பெயர் சிவனேனு இரு என்பதன் பொருள் ஆகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 626

கேள்வி: மகான்களுக்கும் மனிதர்களுக்கும் உள்ள வேறுமாடு என்ன?

மகான்களுக்கும் மனிதர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் ஒரு கஷ்டம் வரப்போவது தெரியாமல் வந்தபின் ஒரு மனிதன் அதில் சிக்கிக் கொள்கிறான். நடக்கப்போவது தெரிந்தும் அது இறைவன் செயல் என்று நாங்கள் அதில் சிக்கிக் கொள்வோம் இதுதான் மகானுக்கும் மனிதனுக்கும் உள்ள வேறுபாடு.

ஆடுகளத்திலே விளையாடுவது மனிதர்கள்தான். நாங்கள் நடுவர்கள் தீர்ப்பு சொல்ல வேண்டியதுதான் எங்கள் கடமையை தவிர இப்படி ஆடு அப்படி ஆடு என்று ஆட்டம் தொடங்கும் வேண்டுமானால் சொல்லலாம். ஆட்டம் நடந்து கொண்டிருக்கும் பொழுது நாங்கள் யார் பக்கமும் பேசக் கூடாது. எனவே வழிகாட்ட நாங்கள் என்றும் இருக்கிறோம். ஆனால் அந்த வழியில் செல்ல மனிதர்கள்தான் தயாராக இல்லை. உலகியல் பிரச்சனைகளை ஆன்மீகப் பிரச்சினைகளோடு இணைத்து குழப்புவதே மனிதனுக்கு இயல்பாகி விட்டது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 625

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

மனிதர்களின் குற்றங்களை எல்லாம் பொறுத்துக் கொண்டு நாங்கள் வாக்குரைக்கிறோம் என்பதாலயே அந்த மனிதர்களை ஏற்றுக் கொண்டு விட்டோம் என்று அர்த்தம் அல்ல. நாங்கள் வாக்கு உரைப்பதால் ஒரு மனிதன் பாக்கியவான் என்று வெளிப்படையாக கூறினாலும் கூட அதற்காக அவன் செய்கின்ற செயல்கள் அனைத்தும் நீதி நியாயம் என்றெல்லாம் நாங்கள் கூறவில்லை. அதே சமயம் சதா சர்வ காலமும் ஒரு மனிதனைப் பார்த்து நீ தவறு செய்கிறாய் திருந்துவிடு திருந்துவிடு என்று கூறிக் கொண்டே இருந்தால் அவன் செய்கின்ற சிறு நல்காரியங்களை கூட செய்யாது விட்டுவிடுவான் என்பதால்தான் சிலவற்றை கண்டும் காணாமல் நாங்கள் மௌனமாக இருந்து விடுகிறோம். நாங்கள் அவ்வாறு இருப்பதினாலே வருகின்றவர்கள் எல்லோரும் உயர்ந்த ஆத்மாக்கள் என்றோ அவன் செய்கின்ற செயல்கள் எல்லாம் எம்மால் அங்கீகரிக்கப்படுகின்றது என்று மற்றவர்கள் புரிந்து கொள்ளக் கூடாது.

நாடிவரும் ஒருவனின் மனதை ஆற்றுப்படுத்தி ஆறுதல்படுத்தி பரிகாரங்களை கூறி விதியை எப்படியாவது மாற்றுவதற்குத்தான் நாங்கள் முயற்சி செய்வோம். ஆனால் அதற்காக எங்கள் சக்தியை பயன்படுத்தி வருகின்ற அனைவருக்கும் எல்லா துன்பங்களையும் மாற்றி விட மாட்டோம். ஆனாலும் நாங்கள் கூறியவற்றை கடுமையாக பின்பற்றி வருகின்ற மனிதனுக்கு கடுமையான விதிகளை கூடுமானவரை கடைவரையில் (இறுதிவரையில்) குறைக்க முயற்சி செய்வோம். இன்னும் அப்படியே தந்து கொண்டும் இருக்கிறோம். அது மட்டுமல்ல வந்த துன்பம் மனிதனுக்கு பெரிதாக தெரிகிறது. ஆனால் வரவேண்டிய துன்பம் அதைவிட அதிகம். அதை நாங்கள் தடுத்தது அவனுக்கு (துன்பம் வராததால்) தெரியவில்லை. எனவே மிக உன்னதமான பக்குவத்தை வளர்த்துக் கொண்டு ஒருவன் எம் முன் அமர்ந்தால் ஏதாவது ஒரு சில வார்த்தைகளை கூற முயற்சி செய்கிறோம். பக்குவம் இல்லாத மனிதர்களையும் என்னதான் உரைத்தாலும் இன்னமும் எமது வாக்கை பின்பற்ற முடியாத மனிதர்களையும் இங்கு அழைத்து வந்துவிட்டு ஏதாவது கூறுங்கள் என்றால் நாங்கள் எதை கூறுவது? எது நடந்தாலும் சித்தர்களை விட்டு விடப் போவதில்லை என்று விடாப்படியாக உறுதியோடு எது நடப்பினும் அது இறை சித்தம் சித்தர்கள் சித்தம் என்று எண்ணி எம் பின்னே வருபவர்களுக்கு நாங்கள் இரவு பகல் மட்டுமல்ல எக்காலத்திலும் எல்லா பிறவிலும் உற்ற துணையாக என்றுமே இருந்து கொண்டுதான் இருப்போம்.