ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 145

கேள்வி: ருத்ராட்ச மாலையை கையாளும் முறை பற்றி:

இந்தக் கேள்வி கேட்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் மாலையில் சில மணித்துளிகள் கூட்டு ஜப பிராத்தனை நடந்து இருந்தது.

புற பூஜைகளில் நாங்கள் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை. வாய் வழியாக பஞ்சாட்சரத்தை உச்சரித்த போது எத்தனை பேர் மனதிலே அந்த முக்கண்ணனின் (ஈசன்) உருவம் பதிந்து இருந்தது? என்று பார்த்தால் மிகவும் குறைவுதான். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பல்வேறு சிந்தனைகள். இருக்கலாமா? போகலாமா? இருந்தால் என்ன நடக்கும்? எவ்வளவு நாழிகை ஆகும்? பிறகு நடுநிசி (நடுஇரவு) ஆகிவிட்டால் என்ன செய்வது? பிறகு சென்றால் ஏதாவது குற்றமாகிவிடுமா? அல்லது இங்கு இருந்து வாக்கினை(சத்சங்கத்தில் ஜீவநாடி பொதுவாக்கு) கேட்டுவிட்டு செல்லலாமா? என்ன செய்வது? என்ற குழப்பமான மனநிலையில்தான் பலர் உள்ளார்கள். பல்வேறு சிந்தனைகள் பலருக்கும். இவற்றை நாங்கள் குறையாகக் கூறவில்லை. பூஜை செய்வதை நாங்கள் குறையாக சொல்லவில்லை. ஆயினும் முறையாக பூஜை செய்த எத்தனை பேர் இறைவனை அடைந்து இருக்கிறார்கள்? (மிக மிகக்குறைவுதான்). ஏன் என்றால் அங்கு வெறும் முறை மட்டும்தான் இருந்து இருக்கும். மீதி எல்லாம் குறையாக இருக்கும். முறையற்று பூஜை என்றால் என்ன என்றே தெரியாத பாமரத்தனமான பூஜைதான் இறையை கவர்ந்து இருக்கிறது. எனவே இது போன்ற (ருத்ராட்ச மாலையை மேலிருந்து கீழாக உருட்டுவதா? அல்லது கீழிருந்து மேலாக உருட்டுவதா?) விஷயங்களில் அர்த்தமே இல்லை என்று எண்ண வேண்டாம். இதன் மூலம் இரத்த ஓட்டமும் நரம்பு ஓட்டமும் மாறும்.

கேள்வி: ஸ்தல விருட்சம் (மரம்) பற்றி:

விருட்சங்களுக்கு என்று சில வகையான பூஜை முறைகள் உண்டு. விருட்சங்களுக்கு திருமண பந்தம் கூட செய்து வைப்பார்கள். நட்சத்திரங்களுக்கு உரிய மரங்களை மட்டும்தான் வளர்க்க வேண்டும் பூஜிக்க வேண்டும் என்றில்லை. எல்லாவற்றையும் வளர்க்க வேண்டும். ஏனென்றால் மரங்கள் தூரத்தில் உள்ள மரங்களோடு பேசும். அது மட்டுமல்லாது ஒரு மரமானது எத்தனையோ உயிர்களுக்கு நிழலை காயை கனியை உறைவிடத்தை தருகிறது. பலவற்றை மரம் தருவதால் அதற்கு தரு என்ற ஒரு பெயர் உண்டு. கற்பக விருட்சம் என்று ஒவ்வொரு மரத்தையுமே கூறலாம். அது மட்டுமல்லாது ஒவ்வொ மரமும் மனிதனை விட பல மடங்கு மேம்பட்டது. அவை பாவம் செய்வது கிடையாது. எனவே மரங்கள் அனைத்துமே போற்றப்பட வேண்டியவை என்பதால்தான் வேதங்களில் இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது. ஸ்தல விருட்சம் என்று வைத்து ஒவ்வொரு ஆலயத்திலும் பராமரிக்கப்படுகிறது. அந்த விருட்சம் அந்த மண்ணிற்கு ஏற்றது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 144

கேள்வி: லலிதா சகஸ்ரநாமம் லலிதா நவரத்ன மாலை பற்றி:

நீ எந்த லலிதா சஹஸ்ரநாமத்தை பற்றி சொல்லுகிறாய்?

பதில்: நீங்கள் (அகத்திய மாமுனிவர்) ஹயக்ரீவரிடமிருந்து உபதேசமாக பெற்ற லலிதா சஹஸ்ரநாமத்தை பற்றி.

அதை தொடர்ந்து ஓத வேண்டும். படிக்கக் கூடாது. ஓதும் போது இரு கண்களில் இருந்தும் நீர் வர வேண்டும். ஓத ஓதத்தான் இது போன்ற பாடல்கள் தேவார திருவாசகங்களில் உள்ள அற்புதமான விஷயங்கள் தெரியவரும். அவற்றை ஒரு வரியிலோ ஒரு வார்த்தையிலோ கூற இயலாது. ஏனென்றால் அதில் உள்ள பல விஷயங்கள் முரண்பாடாக மனிதனுக்குத் தோன்றும். இறைவன் அருளால் சொல்வது என்னவென்றால் இதனை 1 அல்லது 3 அல்லது 5 மண்டலம் பிராத்தனையாகவோ யாகமாகவோ ஆலயத்திலோ இல்லத்திலோ அதிகாலை துவங்கி பூர்த்தி செய்வது பல்வேறு பிறவிகளில் செய்த பிரம்மஹத்தி தோஷத்தை அகற்றும் அப்பா. இது பக்தி வழி.

யோக மார்க்கம் என்று எடுத்துக் கொண்டால் குண்டலினி சக்தியை மேலே எழுப்புவதற்கு சரியான உச்சரிப்பைக் கற்றுக் கொண்டு மனதை ஒரு நிலைப்படுத்தி அதிகாலைப் பொழுதில் வடகிழக்கு திசை நோக்கி அமர்ந்து நித்தமும் உச்சரித்து வந்தால் மூலாதாரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சர்ப்பமானது (பாம்பு) எழுவதை உணரலாம். எனவே எல்லா வகை மந்திரங்களும் மனித உடலின் 72000 நாடி நரம்புகளின் ரத்த ஓட்டத்தை சரி செய்வதும் அவனின் உள்முக சக்தியையும் தட்டி எழுப்பும் அப்பா.

கேள்வி: பெருமாள் கோவில் (திருநெல்வேலி) தைலக்கிணறு பற்றி:

மருத்துவ குணம் வாய்ந்தது. பல ஆலயங்களிலே மூல விக்ரகங்கள் சந்திரக் காந்தக்கல் சூரிய காந்தக்கல் கந்தகம் இன்னும் பல அபூர்வ வகை கற்களால் செய்யப்பட்டிருப்பதால் அதன் அபிஷேக தீர்த்தம் பால் தேன் ஆகியவற்றை பருகினால் தேகம் ஆரோக்கியம் ஆகும். ஆனால் மூல ஸ்தானத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளாமல் அபிஷேகம் செல்லும் தாரையையும் சுத்தமாக வைத்துக் கொள்ளாமல் அசுத்தமாக வைத்து விட்டு அவற்றால் பலன் இல்லை என்றால் அது யார் பொறுப்பு?. இவற்றை எல்லாம் சித்தனா வந்து சுத்தம் செய்ய முடியும்?. எனவே சுத்தமாக வைத்துக் கொண்டு பாரம்பரியமாக செய்யப்படும் வழிமுறைகளை பின்பற்றினால் கட்டாயம் நல்ல பலன் உண்டு.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 143

கேள்வி: பாவம் – தோஷம் பற்றி:

பாவம் என்றால் என்ன? தோஷம் என்றால் என்ன?

அதைப் போலத்தான் இதுவும். ஒன்றைச் செய்யும் போது (எண்ணத்தால் வாக்கால் செயலால்) பிறருக்குத் தீங்கும் கடும் துயரமும் ஏற்படுகின்ற நிகழ்வு எதுவோ அது பாவம். செய்த பிறகு அந்த பாவத்தால் ஏற்படுவது தோஷம். விழிப்புணர்வோடு வாழப் பழகிக் கொண்டால் ஒரு மனிதன் பாவம் செய்ய வேண்டியிருக்காது. ஒரு மனிதனை பாவம் செய்யத்தூண்டுவது எது? ஆசை பேராசை அறியாமை. இது போன்ற குணங்கள்தான். ஒரு மனிதன் தெரியாமல் செய்யும் பாவங்களுக்கு மன்னிப்பு உண்டு. ஆனால் ஒரு மனிதன் தெரிந்தே செய்யும் பாவங்களே அதிகம். எதையாவது ஒரு சமாதானத்தை தனக்குத்தானே கூறிக் கொள்கிறான். இந்த காரியத்தை இதற்காக செய்தேன் அதற்காக செய்தேன் என்றெல்லாம் கூறிக்கொண்டு அவன் செய்யும் தவறுகள்தான் பாவங்களாக மாறுகின்றன. எனவே பலகீனமான மனிதர்களே பாவங்களை செய்கிறார்கள். மனதை உறுதியாக வைத்து எந்த நிலையிலும் பாவம் செய்ய மாட்டேன் தவறு செய்ய மாட்டேன் என்ற உறுதியோடு இருந்தால் ஒரு மனிதனுக்கு பாவம் செய்யக்கூடிய எண்ணமும் சூழலும் அமையாது. எனவே அப்படி ஒரு சூழலை ஏற்படுத்திக் கொண்டால் அவனுக்கு தோஷமும் வராது.

பொதுவாக தவறுகள் பல செய்து வாழ்ந்த ஆத்மாக்கள் கடைசி காலத்தில் பிதற்றுவதும் மனம் வருந்துவதும் ஒருபுறமிருக்க பாவம் செய்த ஆன்மாக்களுக்கு அந்திமக்காலம் (கடைசிகாலம்) என்பது கடுமையாகத் தான் இருக்கும். அதே சமயம் நல்ல ஆன்மாக்களுக்கும் இருக்கின்ற கொஞ்ச நஞ்ச பாவங்களையும் எடுத்துவிட இறைவன் விரும்பினால் அவர்களின் அந்திமக்காலமும் (கடைசி காலமும்) வேதனை தரக் கூடியதாகத்தான் இருக்கும். இந்த இரண்டில் எது? என்பதை இறைவன் தான் தேர்ந்து எடுக்கிறார். எனவே சுகமான மரணம் நிகழ்ந்துவிட்டால் அவன் புண்ணிய ஆத்மா என்றும் மிகக்கொடூரமான மரணம் நடந்தால் அவன் பாவ ஆத்மா என்றும் மனிதன் ஒரு முடிவுக்கு வந்துவிடக்கூடாது. எத்தனையோ சூட்சுமக் கணக்குகள் இறைவனால் வகுக்கப்பட்டு தொகுக்கப்பட்டு பகுக்கப்பட்டு பெருக்கப்பட்டு பிறகுதான் கழிக்கப்படுகிறது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 142

கேள்வி: நீதி பற்றி?

நீதி என்ற ஒன்று இருக்கிறதப்பா. விதுரநீதி ஜனகநீதி மதுரநீதி என்றெல்லாம் இருக்கிறது. இந்த நீதிகள் எல்லாம் உயர்ந்த தத்துவங்களையும் தர்மத்தையும் போதிக்கக் கூடியதாக இருக்கிறது. இதிலே சித்த நீதி என்ற ஒன்றும் இருக்கிறது. அதாவது நீதியை எப்படி பார்க்க வேண்டும்? பொதுநீதி தனிநீதி சிறப்புநீதி நுணுக்கநீதி என்றெல்லாம் பார்க்க வேண்டும். அது எப்படி? நீதி என்றாலே எல்லாமே ஒன்றுதானே? என்று நீ கேட்கலாம். ஆருரையாண்ட (திருவாரூர்) அந்த மன்னன் தன்னுடைய பிள்ளையவன் தேர் ஓட்டும் போது ஒரு பசுவின் கன்று தேர்காலிலே விழுந்து உயிரை விட்டதற்காக தன் பிள்ளையையும் அதே போல் தேர்க்காலிலே இட்டு அந்தத் தாய் பசு உயிர் வாடுவது போல் தானும் வாடினால்தான் என் மனம் சமாதானம் அடையும். அதுதான் நீதி என்று ஒரு புதிய சரித்தரத்தையே எழுதினான். ஆனால் அவன் அப்படி செய்திருக்க வேண்டும் என்று எந்த சாஸ்திரமும் கூறவில்லை.

சாஸ்திரப்படி ஆயிரக்கணக்கான பசுக்களையும் கன்றுகளையும் அவன் தானம் செய்திருந்தால் லட்சக்கணக்கான ஏழைகளுக்கு போஜனத்தை(உணவை) தானம் செய்திருந்தால் பல ஏழை பெண்களுக்கு திருமணத்தை நடத்தி இருந்தால் சிவ ஆலயங்களையும் வேறு ஆலயங்களையும் புதுப்பித்து கலச விழா நடத்தியிருந்தால் எல்லாவற்றையும் விட சாஸ்திரத்திலேயே என்ன கூறியிருக்கிறது? என்றால் ஒரு பசுவை அறிந்தோ அறியாமலோ கொன்றுவிட்டால் அப்படி கொன்றவன் 12 ஆண்டு காலம் பசு தொழுவத்திலேயே படுத்து உறங்க வேண்டும். பசுமாடு உறங்கும் போது இவன் உறங்க வேண்டும். பசுமாடு உண்டால் இவன் உண்ண வேண்டும். இல்லையென்றால் இவனும் விரதம் இருக்க வேண்டும். பசுக்களை நல்ல முறையில் குளிப்பாட்டி பராமரித்து அந்த இடத்தை சுத்தமாக வைத்திருந்து பசுக்களோடு பசுக்களாக வாழ்ந்தால் அந்த தோஷம் போகும் என்ற ஒரு கணக்கு இருக்கிறது சாஸ்த்திரத்தில்.

நீதி எதற்காக இப்படி நுணுக்கமாக குறிக்கப்பட்டிருக்கிறது? என்றால் ஒவ்வொரு மனிதனின் மனப்பக்குவத்திற்கு ஏற்ப சில நீதிகளை பின்பற்றலாம். ஒருவனின் தோஷத்தை நீக்க லகரம் (லட்சம்) ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கு என்றால் வசதியில்லாதவன் முடியாதவன் என்ன செய்வது? லகரம் (லட்சம்) எறும்புகளுக்கோ அல்லது மீன்களுக்கோ தான் அவனால் தர முடியும். ஆனால் வசதியுடையவன் லகரம் (லட்சம்) ஏழைகளுக்கு அன்னதானம் வழங்காமல் லகரம் (லட்சம்) எறும்புகளுக்கோ மீன்களுக்கோ உணவிட்டு விட்டு இதுவும் சாஸ்திரத்தில் கூறப்பட்டு இருக்கிறதே என்றால் அவனுக்கு அந்த புண்ணியம் கிட்டாது. ஆனால் லகரம் (லட்சம்) மீன்களுக்கு மட்டும் உணவிடக்கூடிய தகுதி இருப்பவன் லகரம் மீன்களுக்கு உணவிட்டால் அவனுக்கு அந்த புண்ணியம் வந்துவிடும். எனவே நீதியையும் தர்மத்தையும் புரிந்து கொள்வது சற்றே கடினம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 141

கேள்வி: சப்தமாதர்களைப் பற்றி கூறுங்கள்

இறைவன் அருளால் சப்தமாதர்கள் குறித்து சப்தமாகக் கூறுங்கள் என்று மற்றவர்கள் கூறுகிறார்கள். சப்தமாதர்கள் யார்? சக்தியின் அம்சங்கள்தான். இப்படியே பிரிந்து பிரிந்து பார்த்துக் கொண்டே வந்தால்’எனக்கு அம்பாளை பிடிக்கிறது எனக்கு முருகனைப் பிடிக்கிறது எனக்கு விநாயகரைப் பிடிக்கிறது என்று மீண்டும் மீண்டும் வடிவங்களில் மனிதன் சிக்கிவிடுகிறான். தவறொன்றுமில்லை. ஏதாவது ஒரு வடிவத்திற்குள் தன் மனதை ஒடுக்கப் பழகிக் கொண்டால்கூட போதும். இந்த சப்தமாதர்கள் என்பது சித்தர்கள் முனிவர்கள் இவர்களுக்கே சக்தியை அருளக்கூடிய நிலையில் உள்ள அம்பாளின் உபசக்திகள்தான் (துணைசக்திகள்). எனவே சப்தமாதர்களை வணங்கினாலும் சாட்சாத் அன்னை பராசக்தியை வணங்கினாலும் எல்லாம் ஒன்றுதான். அதற்காக விநாயகப்பெருமானை வணங்கினால் அல்லது முக்கண்ணனாகிய சிவபெருமானை வணங்கினால் அவையேதும் பலனைத் தராதா? என்று கேட்க வேண்டாம். இவள் கேட்ட (சத்சங்கத்தில்) கேள்வியின் அடிப்படையில் எமது பதில் அமைவதால் அந்தக் கேள்வி அதற்குரிய அளவில் இந்த பதிலை எடுத்துக் கொள்ள வேண்டும். நாங்கள் அடிக்கடி எமை நாடுகின்ற சேய்களுக்கு (குழந்தைகளுக்கு) கூறுவது சப்தகன்னியர்கள் அல்லது சப்தமாதர்கள் இரண்டும் ஒன்றுதான்.

சப்தம் என்ற சொல்லின் பொருளைப் பார்த்தால் ஏழு என்ற எண்ணைக் குறிக்கும். சப்தம் என்ற சொல்லுக்கு ஏழு என்ற பொருள் எப்படி வந்தது தெரியுமா? ஏழு வகையான விலங்குகள் ஒரே சமயத்தில் ஒரேவிதமான ஒலியளவை (சப்த அலை) எழுப்பினால் அப்பொழுது ஒருவிதமான இனிமையான இசை வடிவம் பிறக்கும். அந்த இசை வடிவத்தை வரிவடிவமாக மாற்றினால் என்ன கிடைக்கும் தெரியுமா? ச ரி க ம ப த நி ச என்ற ஒலி வரிவடிவமாக அப்பொழுது கிடைக்கும். இந்த சப்தம் என்ற சொல்லுக்குப் பின்னால் எத்தனையோ பொருள் இருக்கிறது. இருட்டிலே வழிகாட்டியாக இந்த சப்தமாகிய ஒலி இருக்கிறது. எந்தவிதமான ஔி அதாவது வெளிச்சம் இல்லாத நிலையிலே ஒலிதான் மனிதனுக்கு கண்ணாக இருக்கிறது. எனவே ஏழு வகையான சக்திகள் என்பதை குறிக்கத்தான் சப்தம் சப்தமாதர்கள் சப்தரிஷிகள் என்றெல்லாம் ஒருவகையான பொருளில் கூறப்படுகிறது. இன்னும் பல்வேறுவிதமான பொருள் இருக்கிறது. அது குறித்தெல்லாம் தக்க காலத்தில் விளக்கம் தருவோம்.

சப்தமாதர்களை வணங்கினால் என்ன பலன்? என்று பார்த்தால் பொதுவாக எல்லாவகையான தோஷத்திற்கும் எத்தனையோ வகையான பரிகாரங்கள் இருக்கின்றன. அத்தனை பரிகாரங்களையும் ஒரு மனிதனால் செய்ய இயலாது எமக்கும் தெரியும் இறைவனுக்கும் தெரியும். அப்படியிருக்கும் பட்சத்தில் மிக எளிமையாக சப்தமாதர்களை அவனவன் அறிந்த மொழியில் வணங்கி வந்தால் அது நல்ல தோஷ பரிகாரமாக இருக்கும். அடுத்ததாக குறிப்பாக பெண்களுக்கு நாங்கள் கூறவருவது இக்காலத்திலே வெளியில் செல்லவேண்டிய நிலை பெண்களுக்கு ஏற்படுகிறது. வெளியில் செல்லும் பொழுதே புரிந்து கொள்ள வேண்டும் ஆபத்தும் உடன் வருகிறது என்று.

அப்படி வரக்கூடிய ஆபத்துகளிலிருந்து பெண்கள் தங்களைக் காத்துக்கொள்ள இந்த சப்தமாதர்கள் வழிபாட்டை அனுதினமும் இல்லத்தில் அமர்ந்து அமைதியாக செய்து வந்தால் நல்ல பலன் உண்டு. இன்னும் கூறப்போனால் மனமொன்றி சப்தமாதர்கள் வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டே வந்தால் எல்லோரும் கேட்கிறார்களே குண்டலினி என்றால் என்ன? அந்த குண்டலினி சக்தியை எழுப்பினால் என்ன நடக்கும்? என்று. இந்த அன்னையர்களின் கருணையாலே எந்தவிதமான தியான மார்க்கமில்லாமல் சப்தமாதர்களை பிராத்தனை செய்வதன் மூலமே ஒரு மனிதன் அடையலாம். ஆனால் இது அத்தனை எளிதான காரியமல்ல. பல்வேறு சோதனைகள் வரும். அவற்றையெல்லாம் தாங்கிக் கொண்டு ஒருமைப்பட்ட மனதோடு சப்தமாதர்களை வணங்கி வந்தால் ஒரு மனிதனுக்கு வேண்டிய எல்லா நலன்களும் அகத்திலும் பரத்திலும் கிட்டும். இன்னும் பல்வேறு விளக்கங்களை பிற்காலத்தில் உரைப்போம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 140

கேள்வி: பேரளம் (திருவாரூர் மாவட்டம்) அருகே உள்ள பவானி அம்மன் கோவிலின் ஆற்றல் குறித்து:

நீ செல்லும் பொழுது மணி ஒலித்தது இறையின் அருளாசியைக் காட்டுகிறது. ஒரு மனிதனின் பூர்வீக பிரம்மஹத்தி கர்மாக்கள் போகக்கூடிய உன்னதமான ஸ்தலங்களில் இதுவும் ஒன்று. அது மட்டுமல்லாது பார்வதி சுயவர யாகம் நடத்த ஏற்புடைய ஸ்தலம். பெண்களின் மாங்கல்ய தோஷம் நீங்குகின்ற ஸ்தலம். புத்திரப் பேறை அருளுகின்ற ஸ்தலம். உலகியல் ரீதியான பதிலப்பா இது. தத்துவார்த்தமான பதில் என்பது வேறு. ஏனென்றால் இங்கு சென்றால்தான் அதெல்லாம் கிட்டுமா? வேறு ஸ்தலங்களுக்கு சென்றால் கிட்டாதா? என்ற வேறோரு வினா எழும். இருந்தாலும் நீ கேட்டதால் இப்படி கூறினோம்.

இந்த நிலையிலே உலகியல் ரீதியான பிரச்சனைகள் குறித்து முன்னர் கூறினோம். அது போக இங்கு (பேரளம் பவானி அம்மன் ஆலயம்) ஸ்ரீ சக்ரம் வைத்து பூஜை செய்வதாலும் ஸ்ரீ சக்ர உபாசனையை இங்கு வைத்து கற்றுக்கொண்டு முறையாக துவங்கினாலும் அந்த அன்னையின் அருளால் மூலாதாரத்திலிருந்து முளைத்தெழுகின்ற ஜோதியை உணர்ந்து மேலேறி மேலேறி செல்லலாம். மெய்ஞான வாழ்விற்கு யோக மார்க்கத்திற்கு ஏற்படைய ஸ்தலம் இது.

கேள்வி: காட்டில் தனியாக செல்லும் பொழுது கொடிய மிருகங்களை வசியப்படுத்தும் மந்திரங்களை தங்களை போன்ற சித்தர்கள் சொல்லியிருக்கிறார்கள். இந்த மந்திரங்களை உபயோகப்படுத்தலாமா?

இறைவனின் கருணையால் இயம்புகிறோம் மிருகங்களை ஏனப்பா நீ வசியம் செய்யப்போகிறாய்? முற்காலத்தில் வேறு சூழல் இல்லை என்பதால் வனத்திற்கு (காட்டிற்கு) சென்று பல்வேறு மனிதர்கள் தவம் செய்ய நேரிட்டது. இப்பொழுதுதான் நல்ல வசதியான இல்லங்களை கட்டிக் கொள்ளக்கூடிய நிலை வந்துவிட்டதே? எனவே தாராளமாக இல்லத்தில் அமைதியாக நல்ல நிலையில் இருந்தே தவம் செய்யலாம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 139

கேள்வி: மெய் தீர்த்தம் பற்றிய விளக்கம்

இடைவிடாத பிராத்தனைகள் சாத்வீக எண்ணங்கள் சதாசர்வ காலம் தர்ம சிந்தனை இந்த வாழ்வை நடத்த கர்மாக்கள் குறையுமப்பா. இந்த சினம் விரக்தி தளர்வு பிறரை பிறரோடு ஒப்பிட்டுக் கூறுதல் ஒரு மனிதன் இல்லாத போது அவரைப் பற்றி விமர்சனம் செய்தல் காழ்ப்பு உணர்ச்சி இன்னும் இத்யாதி இத்யாதிகளை எல்லாம் தள்ளத்தான் மனிதன் மா மனிதன் ஆகிறான். இந்த ஒரு பயணம் செய்யும் பொழுது இறை நாமமும் பிராத்தனையும் செய்து கொண்டு செல்வது நலம். வீண் விவாதங்களும் பிரச்சனைக்குரிய செயல்களும் வாக்குகளும் வேண்டாம். இந்த ஒவ்வொரு துளியும் புவி சுழுன்று சுழன்று காலத்தை மனிதனுக்கு அறிவுறுத்துவது இறை நோக்கி செல் இறை நோக்கி செல் இறை நோக்கி செல் என்பதுதான். ஒரு பிறவியில் விட்டுவிட்டால் எப்பிறவியில்? என்பதை மனிதனால் நிர்ணயிக்க முடியாது. விலங்குகளுக்கு கிடைக்காத பாக்கியம் மனிதனுக்கு இறை தந்திருப்பது இறையின் கருணை. விங்குகளும் உண்ணுகின்றன. மனிதனும் உண்ணுகிறான். விலங்குகளும் தன் இனத்தை விருத்தி செய்கின்றன. மனிதனும் செய்கிறான். பின் எதில்தான் வேறுபாட்டைக் காட்டுவது? என்றால் விலங்குகள் குகைக்குள் வாழ்கின்றன. மனிதன் தனக்குக் கொடுத்த அறிவைக் கொண்டு குகையை வடிவமைக்கக் கற்றுக் கொண்டு விட்டான். எனவே மனதை தூய கருவறையாக்கி உடலை ஆலயமாக்கி மனதுக்குள் சதா இறைவனை அமர்த்த போட்டியிட வேண்டும். எங்கு சென்று அமர்வது? என்று தெரியாமல் இறை திணற வேண்டும். அந்த அளவுக்கு மனம் புத்தி செயல் எண்ணம் வாக்கு புனிதமாக இருக்க வேண்டும். எனவே சண்டையில் சச்சரவில் மனதை செல்ல விடாமல் அவரவர் தொண்டையில் சுரக்கும் தீர்த்தத்தை உணர்ந்தால் அதுவே சுய தீர்த்தம் மெய் தீர்த்தம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 138

கேள்வி: நல்லதையே செய்ய வேண்டும் வழிகாட்டுங்கள்:

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் நலம் எண்ணி நலம் உரைத்து நலமே செய்ய நலமே நடக்குமப்பா. இப்படி கால காலம் மாந்தர்கள் வாழ்கின்ற வாழ்வு நிலை என்பது பிற மனிதர்கள் தன்னை மதிக்கும் வேண்டும் தன்னை துதிக்க வேண்டும் தன் செயலை பாராட்ட வேண்டும் தன்னுடைய மனநிலையை அறிந்து அதற்கு ஏற்றாற் போல் பிறர் நடக்க வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்ப்பது பொதுவாக மனித இயல்பு. ஆனால் இவையெல்லாம் யாருக்கும் எந்த காலத்திலும் நூற்றுக்கு நூறு விழுக்காடு நடப்பதில்லை. ஒன்று ஒரு மனிதனின் பதவி செல்வம் செல்வாக்கு இதற்காகவோ அல்லது ஒரு மனிதனை அண்டிப் பிழைத்தால்தான் வாழ்க்கையை ஓட்ட முடியும் என்ற நிலை இருக்கும் நிலையிலும் ஒரு வேளை ஒரு மனிதனை எதிர்த்துக் கொண்டால் அந்த மனிதனால் உயிருக்கோ உடைமைக்கோ ஆபத்து நேரும் என்பது போன்ற வெளிப்படையான துன்பங்களை அனுபவிக்க நேரிடும் என்ற நிர்பந்தம் இல்லாத நிலையில் எந்த மனிதனும் யாரையும் மதிக்கப் போவதில்லை. இதுதான் மனித இயல்பு. ஆனால் பரிபூரண அன்பு எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாத அன்பு தூய அன்பு இந்த அன்பு மட்டும் மனிதனிடம் மலர்ந்து விட்டால் அதன் பிறகு இவன் வேண்டியவன் இவன் உறவுக்காரன் இவன் நண்பன் இவன் எதிரி இவன் ஆண் இவள் பெண் என்கிற பேதங்கள் எல்லாம் அடிப்பட்டு போகும். அங்கே வெறும் ஆத்ம தரிசனம் மட்டுமே தெரியும். இறைவன் படைப்பில் நாம் எப்படி வந்திருக்கிறோமோ அதைப் போல அந்த ஆத்மாவும் வந்திருக்கிறது.

இந்த உலகம் நமக்கு மட்டுமல்ல இது இறைவன் படைத்தது. இங்குள்ள நீர் காற்று ஆகாயம் பூமி விருட்சங்கள் (மரங்கள்) பொதுவானது. நாம் எப்படி இந்த உலகிலே வாழ்வதற்கு வந்திருக்கிறோமோ அதைப் போலத்தான் பிற உயிர்களும் வந்திருக்கிறது என்ற எண்ணம் வந்துவிட்டாலே யார் மீதும் சினம் ஆத்திரம் பொறாமை எழாது. அனைவரும் நம்மைப் போன்ற உணர்வுள்ள மனிதர்கள் என்று எண்ணிவிட்டாலே அங்கே நன்மைகள் நடந்து கொண்டே இருக்கும். எனவே இந்த உண்மையை புரிந்து கொண்டால் மனித நேயம் வளரும் பலப்படும். அங்கே நற்செயல்கள் அதிகமாகும். நற்செயல்கள் அதிகமாக அதிகமாக அங்கே நல்லதொரு சமூக மனித இணைப்பும் பிணைப்பும் உருவாகும். அப்படிபட்ட ஒரு உயர்ந்த உச்சகட்ட சமூக நலத்திலே பிறக்கின்ற குழந்தைகளும் உயர்வாகவே இருக்கும். ஆனால் சதா சர்வகாலமும் கோபமும் எரிச்சலும் மன உலைச்சலும் பிறர் மீது பொறாமையும் குற்றச் சாட்டுகளும் கொண்டு யார் வாழ்ந்தாலும் இந்த எண்ணப்பதிவு வாரிசுக்காக வாரிசு தோறும் வாரிசின் வழியாக வம்சாவழியாக கடத்தப்பட்டு தீய பதிவுகள் எங்கெங்கும் ஆட்கொண்டு அந்த தீய பதிவுகள் எல்லா மனத்திலும் நுழைந்து தவறான செய்கைகளை ஊக்குவித்துக் கொண்டே இருக்கும். எனவேதான் நல்லதை எண்ணி நல்லதை உரைத்து நல்லதையே செய்ய வேண்டும் என்று யாம் எம்மை நாடுகின்ற மாந்தர்களுக்கு என்றென்றும் கூறிக்கொண்டே இருக்கிறோமப்பா.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 137

கேள்வி: மாயூரநாதர் (மயிலாடுதுறை) ஆலயத்தில் உள்ள குதம்பை சித்தரைப் பற்றி:

நங்கையர்கள் (பெண்கள்) செவியில் அணியக்கூடிய ஒருவகையான ஆபரணம்தான் குதம்பை என்பது. இந்தக் குதம்பையை முன்னிறுத்தி பெண்களுக்குக் கூறுவது போல் ஏதுமறியாத மாயையில் சிக்கியிருக்கின்ற ஆன்மாக்களுக்கு தான் உணர்ந்ததைப் பாடல்களாகப் பாடி இறை ஞானத்தை மனிதன் மனிதப் பிறவி இருக்கும் பொழுதே உணர்ந்து கொள்ள வேண்டும். இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ என்பது போல மனிதன் மனிதனாக பிறந்த உடனேயே கூடுமானவரை பக்தி மார்க்கத்தில் ஈடுபடக்கூடிய வாய்ப்பு கிட்டிய உடனேயே உடனடியாக ஞான மார்க்கத்திற்கு வந்துவிட வேண்டும் என்பதற்காக தான் கற்றதை பெற்றதை உணர்ந்தை உள்ளொளியாக புரிந்து கொண்டதை பிற மனிதர்களுக்கும் கூறிவைத்தார்.

கேள்வி: சிற்றம்பலநாடி சுவாமிகளைப் பற்றி:

60 க்கும் மேற்பட்ட சித்தர்களுடன் ஒரே கணத்தில் இறையுடன் இரண்டறக் கலந்த ஒரு புனிதன் ஒரு முனிவன் ஒரு சித்தன். ஏறக்குறைய 600 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வைபவம் நிகழ்ந்தது. பற்றற்ற ஒரு ஞானியாகி பவித்ரமாகி முக்கண்ணனாகிய இறைவனை ஸ்தூல உடலிலே தரிசித்து ஔி ரூபமாக அனைவருக்கும் அதனைக் காட்டி பேரின்பப் பேற்றை எப்படி அடைவது? என்பதற்காக வழிகாட்டி தன்னுடன் பலரையும் அழைத்துக் கொண்டு சென்றவர்.

குதம்பை சித்தரின் வரலாற்றை மேலும் தெரிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்

சிற்றம்பலநாடி சுவாமிகளின் வரலாற்றைப் பற்றி தெரிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 136

கேள்வி: ஆப்பூர் மலையின் (காஞ்சிபுரம் மாவட்டம்) சிறப்பு பற்றி

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் அந்த ஆப்பூர் கிரி (மலை) என்று யாம் பலரையும் அங்கு செல்ல அருளாணை கூறியிருக்கிறோம். அங்கே எம்பெருமான் பெருமாள் வடிவிலே அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். முன்பு ஒருவன் ஓங்கி உரத்த குரலில் புலம்பினானே (பெண்களுக்கு) திருமணம் ஆகவில்லை என்று அந்த ஆப்பூர் கிரிக்கு (மலைக்கு) சென்று நல்ல முறையிலே குறிப்பாக சுக்ர வாரம் எத்தனை முறை இயலுமோ அத்தனை முறை அங்கு சென்று மானசீகமாக பிராத்தனை செய்து அங்குள்ள வானரங்களுக்கு (குரங்குகளுக்கு) நிறைய உணவுகளைத் தந்து வேண்டிக்கொண்டு வந்தாலே திருமண தோஷம் நீங்கும். அடுத்தபடியாக நாங்கள் சுக்ர வாரம் சென்றோம். ஆலயம் திருக்காப்பிட்டு இருக்கிறது. என்ன செய்வது? என்று எம்மை நோக்கி வினவினால் அதற்கு நாங்கள் என்ன செய்ய இயலும்? பலரும் வந்து தட்சிணை நிறைய தந்தால்தான் ஆலயத்தைத் திறக்க இயலும் என்பது மனிதர்களின் நிலை. ஆனால் ஆலயம் திறந்திருந்தாலும் சாத்தியிருந்தாலும் பக்தன் ஒருவன் பரிபூரண சரணாகதியோடு சென்றால் இறைவன் அருள் உண்டு என்பது எமது வாக்கு. எனவே வெள்ளிக்கிழமை செல்ல இயலவில்லை ஐயா எனக்கு அனலிவாரம் (விடுமுறைநாள்) தான் விடுப்பு இருக்கிறது என்றால் தாராளமாக அன்றும் செல்லலாம். உலகியல் ரீதியான எத்தனையோ சிறப்புகளில் திருமண தோஷம் நீங்குவதற்கும் திருமணத்திற்கு பிறகு கருத்து வேறுபாட்டால் பிரிந்திருக்கும் தம்பதிகள் ஒன்று சேர்வதற்கும் குழந்தை பாக்கியம் தருவதற்கும் லோகாயத்தில் (உலக வாழ்வில்) சுக்ரனின் அனுக்ரஹம் வேண்டும் என்று எண்ணக்கூடியவர்கள் செல்ல வேண்டிய ஸ்தலங்களில் அதுவும் ஒன்று. அதையும் தாண்டி இன்றும் 64 சித்தர்கள் அரூபமாக அங்கு தவம் செய்து கொண்டிருக்கிறார்கள். முழுமதி தினமான பெளர்ணமி அன்று அங்கு சென்று மானசீகமாக வேண்டினால் வாய்ப்புள்ள பக்தர்களுக்கு ஆத்மாக்களுக்கு ஔி வடிவில் சித்தர்கள் தரிசனம் தருவார்கள். எனவே அது ஒரு சித்த பூமி ஜீவ பூமி அது ஒரு மூலிகை வனம். அங்குள்ள மூலிகைகளில் பட்டு வருகின்ற சுவாசக்காற்று மனிதர்களின் பிணிகளை போக்க வல்லது.

ஆப்பூர் மலை பற்றிய மேலும் அறிந்து கொள்ள கீழ்உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்