ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 117

கேள்வி: வலிப்பு நோய் எதனால் வருகிறது? அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? எந்தெந்த கோவில்களுக்கு செல்ல வேண்டும்?

இறைவன் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் பலமுறை கூறியதை மீண்டும் நினைவூட்டுகிறோம். ஒரு குறிப்பிட்ட பிரச்சனைக்கு அல்லது ஒரு குறிப்பிட்ட துன்பத்திற்கு ஒரு குறிப்பிட்ட பாவம் மட்டுமே காரணம் என்று கூற இயலாது. ஒட்டுமொத்த பாவங்களின் விளைவுகள் எல்லா வகையான துன்பங்களின் நிலையாகும். இந்த நிலையிலே இருந்தாலும் சில குறிப்பிட்ட பாவங்களுக்கு குறிப்பிட்ட நோயோ அல்லது குறிப்பிட்ட விதமான துன்பமோ வருவது இயல்பாகும். அதை தனித்தனியான மனித ஆத்மாவின் கர்ம கணிதத்தை வைத்துத்தான் யாங்கள் தீர்மானிப்போம். இருந்தாலும் பொதுவாக வாயில்லா ஜீவன்கள் எனப்படும் விலங்குகளை இடர்படுத்துவது. குறிப்பாக வேடிக்கையாகவோ அல்லது விலங்குகளை துன்புறுத்தி அதனால் இன்பம் காண்கின்ற பழக்கம் பொதுவாக மனித குலத்திற்கு உண்டு. தன்னைப் போல் உள்ள மனிதனையே இடர்படுத்தி இன்பம் காண்கின்ற மனிதன் விலங்குகளை மட்டும் விட்டு வைப்பானா என்ன? அப்படி விலங்குகளுக்கு தாங்கமுடியாத துன்பத்தைத் தந்து அதன் மூலம் தான் இன்பம் அடைகின்ற மனிதனுக்கு இன்னவன் கூறிய நோய் (வலிப்பு நோய்) கட்டாயம் பிறவி தோறும் தொடரும். எனவே விலங்குகளை பாதுகாக்கும் அமைப்புகளுக்கு உதவி செய்வதும் குறிப்பாக பசுக்கள் தானம் பசுக்களை பராமரிக்கும் அமைப்புகளுக்கு உதவி செய்வதும் (பசுக்களுக்கு உதவி செய் என்றால் அதற்காக வேறு விலங்குகளுக்கு உதவி செய்யாதே என்று பொருளல்ல. இதனை ஒரு குறியீடாக எடுத்துக் கொள்ள வேண்டும்) பிற உயிர்களை நேசிக்கும் மனோபாவத்தை வளர்த்துக் கொண்டு தன் ஊன் வளர்க்க பிற உயிரை கொல்லாதிருக்கின்ற எண்ணத்திற்கு மனிதன் வந்துவிட்டாலே கடுமையான பிணிகள் அவனை அணுகாது அவனைவிட்டு விலகுமப்பா. இந்ந தர்மகாரியங்களில் ஈடுபடுவதோடு பாழ்பட்ட ஆலயங்கள் சென்று உழவாரப் பணிகள் செய்வதும் அதற்கு முடிந்த பூஜைகளை தொடர்வதும் இதற்கு தக்க பிராயச்சித்தமாகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.