அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:
முக்தி குறித்தும் முக்தி போன்ற ஒரு உயர்நிலை குறித்தும் அதோடு மட்டுமல்லாமல் பல்வேறு யோக நிலை குறித்தெல்லாம் மனிதர்கள் எம்போன்ற ஞானிகளை பார்த்து அறிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணுவது இயல்பு என்றாலும் கூட யாங்கள் (சித்தர்கள்) எதையெல்லாம் முதலில் கூறுகிறோமோ அதையெல்லாம் பூர்த்தி செய்யாத நிலையில் மனம் மேல் ஏறாத நிலையில் மனம் பக்குவம் பரிபக்குவம் பரிபரிபக்குவம் அடையாத நிலையில் எத்தனை யோக வித்தைகளை யாங்கள் எடுத்துக் கூறினாலும் அது வெறும் செவியாறலாக இருக்குமே தவிர அதை உள்வாங்கி ஒருவன் நடை முறைப்படுத்த இயலாது. எனவே சுருக்கமாக இங்குள்ள ஒவ்வொரு சேய்களுக்கும் (பிள்ளைகளுக்கும்) நாங்கள் கூறுவது என்னவென்றால் பிரச்சனை எது வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். கர்ம தாக்கம் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். சினத்தை விட்டு தன்முனைப்பை விட்டு சாத்வீக எண்ணத்தை வளர்த்துக் கொண்டு தன்னை அமைதியாக்கி இயன்ற வழிபாடு இயன்ற தர்மம் இயன்ற தொண்டு என்று தொடர வாழ்க்கை நன்றாகவே ஒவ்வொரு சேய்களுக்கும் இருக்கும். இதுபோல இன்னும் எதிர்காலத்தில் விதி அமைப்பு உள்ள சேய்களுக்கு யாம் சோழ தேசத்திலே இறைவன் அருளால் வாக்கினை இயம்புவோம். அது காலம் இன்னும் பல்வேறு நுணுக்கங்களை அறிந்து கொள்ளலாம். தொடர்ந்து இதுபோல வாக்குகளை கேட்பது மட்டும் அல்லாது தொடர்ந்து அதனை நடைமுறைப்படுத்த முயல்வதே சிறப்பாகும். ஆகுமப்பா இதுபோல வாக்கினை கேட்டு நடப்பதெல்லாம் விதியென்றால் எதற்கு சித்தர்களை நாட வேண்டும்? நடப்பது விதியாகவே இருந்து விட்டுப் போகட்டுமே? என்று எண்ணலாம்.
விதி கடுமையாக இருக்குங்கால் விதி வாயிலாக வருகின்ற துன்பம் தாங்க முடியாத நிலையில் இருக்கின்ற மனிதர்களுக்கு அதனை எவ்வாறு தாங்கிக் கொள்வது? அதனை எப்படி தகர்த்து எறிவது? என்றுதான் யாங்கள் (சித்தர்கள்) பொது வாக்கிலும் அல்லது தனிப்பட்ட வாக்கிலும் வழிகாட்டுகிறோம். சற்றே சிந்தித்தால் அந்த வழிமுறை ஒவ்வொரு சேயின் மனதிலும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் புரியும். ஆனாலும் குழப்பமும் வேதனையும் சினமும் இவற்றோடு போராடும் மனிதனுக்கு யாங்கள் (சித்தர்கள்) கூறுகின்ற நல் உபதேசம் சட்டென்று புரியாமல் போய் விடுகிறது. இதனை நன்றாக மனதிலே பதிய வைத்தால் வாழ்வு சுபமாக செல்லும். காலம் அரவு காலம் என்பதால் இதுபோல யாங்கள் இறைவனருளால் வாக்கினை பூர்த்தி செய்கிறோம். வாய்ப்பு உள்ள சேய்கள் தொடரட்டும் பிரம்ம நாழிகை வாக்கிற்கு. வாய்ப்பு இல்லாதவர்களுக்கு எமது வாக்கு வேறு வகையில் கருவி மூலம் வந்து சேரும் என்பதால் அனைவரும் மூத்தோனை (விநாகயரை) வணங்கி அவரவர் கடமையாற்றலாம் ஆசிகள் சுபம்.
