ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 319

அகத்தியர் மாமுனிவரின் பொது வாக்கு:

விதி கர்மா பாவம் புண்ணியம் இறை நவகிரகம் நாள் நட்சத்திரம் வாக்கு இவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு பார்க்குங்கால் இறை நம்பிக்கை இல்லாத எத்தனையோ மனிதர்கள் தாங்கள் மேற்கொண்ட தொழிலில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இறை வழிபாடும் இல்லாமல் நல்ல எண்ணங்களும் இல்லாத சில மனிதர்கள் தொழிலில் வெற்றி அடைந்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் என்ன? ஈடுபாடு. ஒரு தொழிலை எப்படி செய்ய வேண்டும்? என்று மனிதனுக்கு மனிதன் வித்தியாசமான கருத்துக்கள் உண்டு. இவைகளில் எத்தனையோ ஏற்றத் தாழ்வுகளும் உண்டு. இது ஒரு புறமிருக்க ஒரு மனிதன் சுய தொழில் செய்வதாகக் கொள்வோம். அவன் அந்தத் தொழில் குறித்த ஞானத்தை குறைந்த பட்சமாவது தெரிந்து கொள்ள வேண்டும். அன்றாடம் தொழில் பற்றிய மாறுதல்களை அவன் அறிந்து கொள்ள வேண்டும். நல்லவனாக இருந்தாலும் திறமை இல்லாது போனால் அந்தத் தொழில் அவனை கைவிட்டு விடும். தொழில் திறமையோடு தசத்திலே (தொழிலேயே) ஈடுபாட்டையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். தசம் பற்றிய நுணுக்கங்களையும் நாளுக்கு நாள் வளர்த்துக் கொள்ள வேண்டும். எந்த தசத்திலே (தொழிலிலே) நாம் அமர்ந்திருக்கிறோமோ அந்த தசத்தை (தொழிலை) நாடி வரும் மாந்தன் (மனிதன்) திருப்தி அடையா விட்டால் அதிலே வெற்றி பெற முடியாது. இதோடு தசத்தின் (தொழிலின்) தேவை வரும் சமயம் அந்த மனிதன் விரும்பும் வண்ணம் தசத்தின் (தொழிலின்) தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.

வருகின்ற மாந்தன் (மனிதன்) அரைகுறை அறிவோடுதான் வருவான். எரிச்சல் மூட்டுவதாகத்தான் வினவுவான். நீ பொறுமை காக்க வேண்டும். எனவே ஈடுபடும் தொழில் பிடிக்கவில்லை என்றால் உடனடியாக தொழிலை மாற்றிக் கொள்ள வேண்டும். தொழிலை மாற்ற மாட்டேன். கவனத்தையும் சிதற விடுவேன் என்றால் அதனால் யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்? என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஈடுபாடு இல்லாமல் செய்யக் கூடிய எந்த செயலும் சிறப்பை பெறாது. குறையில்லாத மனிதனைக் காண்பது என்பது மிக மிகக் கடினம். எனவே நம்மிடம் கூடுமானவரை குறையில்லாமல் பார்த்துக் கொண்டு எதிராளிகளைக் கவர்ந்திழுக்கும் கலையைக் கற்றுக் கொண்டு தொழில் செய்ய முற்பட்டால் வெற்றி உண்டாகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.